திங்கள், மே 09, 2022

எம்.ஜி.ஆர். பெயரில் வெளிநாட்டில் ஓர் இரயில்!

எம்.ஜி.ஆர். பெயரில் வெளிநாட்டில் ஓர் இரயில்!

(இன்று கிழமை ஞாயிறு -4)

அமெரிக்காவில்  27 ஆவது நாள்

சென்னை சென்டிரல் இரயில் நிலையத்திற்கு எம் ஜி ஆர் பெயர் சூட்டப்படுவதற்கு முன்னரே, ஓர் வெளிநாட்டில்  1905-ஆம் ஆண்டில் முதன்முதலாக ஓர் இரயில் பாதையை அமைத்தார்கள். அந்தப் பாதையின் பெயர் எம்.ஜி.ஆர். இரயில் பாதை. அந்தப் பாதையில் ஓடிய இரயிலின் பெயரும் எம்.ஜி.ஆர். தான். பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். பிறப்பதற்கு முன்னதாகவே அவருடைய பெயரில் இரயில் ஓடி இருக்கிறது. அந்த நாடு எது, சிறீலங்காவா?  இல்லை!

ஆச்சரியமான  இந்தத் தகவலைத் தந்திருப்பவர் , மலேசியாவைச் சேர்ந்த வலைப்பதிவர் திரு கே. எஸ். முத்துகிருஷ்ணன் அவர்கள். (https://ksmuthukrishnan.blogspot.com)

மலாயாவின் முதல் இரயில் பாதை 1885 இல்  தைப்பிங் - போர்ட் வெல்ட் இரயில் பாதை ஆகும்  (Taiping – Port Weld railway). அதன் பின்னர் ஏழு ஆண்டுகள் கழித்து, 1903-ஆம் ஆண்டில், தம்பின், புலாவ் செபாங் நகரத்தில் இருந்து மலாக்காவுக்கு 32 கி.மீ. தொலைவிற்கு ஓர் இரயில் பாதை போடப் பட்டது. கட்டுமானச் செலவு 13.50 லட்சம் மலேயா டாலர்கள்.

1900-ஆம் ஆண்டில், அப்போதைய மலாக்கா அரசாங்கத்திற்கு அந்த இரயில் பாதை அமைப்பதற்கான குத்தகை கிடைத்தது. அதற்கு மலாக்கா அரசாங்க இரயில் பாதை (Malacca Government Railway) என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த மலாக்கா அரசாங்க இரயில் பாதையின் சுருக்கம் M.G.R. 

அதற்கு மலாக்கா அரசாங்கம், எம்.ஜி.ஆர். இரயில் பாதை என்று முதலில் பெயர் வைத்தது. அந்தப் பாதையில் முதன்முதலில் ஓடிய இரயிலின் பெயரும் எம்.ஜி.ஆர். தான். இரயிலின் செல்லப் பெயர் ”லேடி கிளார்க்” (Lady Clarke).


மலாக்கா எம்.ஜி.ஆர். இரயில் 2 .  Steam engine used by M.G.R. 
The Malacca Government Railway had 4 steam locomotives.  
(நன்றி: மலாயா இரயில்வே)

பழைய சரக்கு வண்டி, மாட்டு வண்டி, குதிரை வண்டிப் பாதைகளுக்குப் பதிலாக தம்பின் - மலாக்கா இரயில் பாதை அமைக்கப் பட்டது. மலாக்கா எம்.ஜி.ஆர். இரயில் பாதையில் இருந்த இரயில் நிலையங்கள்: 

தம்பின்
, தஞ்சோங் ரிமாவ், காடேக், அலோர் காஜா, மலாக்கா பீண்டா, பெலிம்பிங், பெலிம்பிங் டாலாம், டுரியான் துங்கல், பத்து பெரண்டாம், மற்றும் மலாக்கா.

1905 டிசம்பர் 4-ஆம் தேதி திறப்புவிழா நடந்தது.  பின்னர் அந்த எம்.ஜி.ஆர். இரயில் பாதை, (Federated Malay States Railway - FMSR) எனும் மலாயா கூட்டரசு இரயில் சேவையுடன் இணைக்கப் பட்டது.

இந்தப் பாதை அமைப்பதற்கு முன்னர் மலாக்காவில் இருந்து பினாங்கிற்கு நீராவிக் கப்பல்கள் மூலமாகச் சென்றார்கள். மூன்று நாட்கள் பிடித்தன. 

இந்த இரயில் பாதை அமைத்த பின்னர் முதல் நாள் பிற்பகல் 1 மணிக்கு மலாக்காவில் இரயில் ஏறினால் மறுநாள் காலை 6.20-க்கு பினாங்கைப் பிடித்து விடலாம். 17 மணி நேர இரயில் பயணம். இப்போது மலாக்கா பத்து பிரண்டாம் விமான நிலையத்தில் விமானம் ஏறினால் 50 நிமிடங்களில் பினாங்கில் இறங்கி விடலாம்.

அப்போது மலாக்காவிற்கும் பினாங்கிற்கும்
நான்கு  இரயில்கள், அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு ஓடி இருக்கின்றன. ஜப்பான்காரர்கள் வந்தார்கள். மலாக்கா எம்.ஜி.ஆர். இரயில் சேவைக்கு ஒரு வழியும் பண்ணி விட்டார்கள்என்கிறார்  முத்துகிருஷ்ணன்.

அப்போது இருந்த இரயில் வண்டிகள் நீராவி இயந்திரங்கள் மூலமாக இயங்கின. நிலக்கரி அல்லது கட்டைகளைப் போட்டு எரிய வைத்து நீராவியை உண்டாக்கி இரயிலை ஓட வைத்தார்கள். அந்த நீராவி இயந்திரங்களைத் தமிழர்கள் தான் பராமரித்தார்கள்.

இரயிலுக்கான நீராவிப் பெட்டிகள் இரயிலின் முன்பகுதியில் இருக்கும். அதில் வேலை செய்த தமிழர்கள் சிலர் கட்டைகளால் நசுக்கப்பட்டு இறந்து இருக்கிறார்கள். அப்போதே தமிழர்கள் இந்த நாட்டிற்காக உயிரைப் பணயம் வைத்து விட்டார்கள். 

மலாயாவின் முதல் இரயில் பாதையை உருவாக்கிக் கொடுத்தவர்கள் மலாயாவின் மூத்த தமிழர்கள். உதிர்ந்து போன மூத்த முன்னோர்கள்.

1942-ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் வந்தது. ஜப்பானியர்கள் மலாயாவுக்கு வந்தார்கள். மலாக்கா இரயில் பாதைகளில் இருந்த இரயில் தண்டவாளங்களை எல்லாம் பெயர்த்து எடுத்தார்கள். அப்படியே மூட்டைக் கட்டி சயாம் மரண இரயில் பாதை கட்டுவதற்கு ’பார்சல்’ பண்ணி விட்டார்கள். 

ஒரு சில தண்டவாளங்களே நினைவுச் சின்னங்களாக இன்னும் இருக்கின்றன. சிதைந்து போன தண்டவாளங்கள்
இன்றும் பல இடங்களில் இன்றும் உள்ளன. 

மலாக்கா இரயில் நிலையம் இப்போது இல்லை. காலத்தின் கோலத்தில் கரைந்து விட்டது. அந்த நிலையம் பழைய போனா விஸ்டா (Bona Vista Road) சாலையில் இருந்தது. இந்தச் சாலை இப்போது ஜாலான் அங் துவா (Jalan Hang Tuah) என்று அழைக்கப் படுகிறது. இனிமேல் எம் ஜி ஆர்  ரயில் வரவே வராது!

****

 மேற்படி வலைத்தளத்தை அற்புதமாக நடத்திவரும் முத்துகிருஷ்ணன் சிறந்த எழுத்தாளர். அவரது வலைத்தளத்திற்கு அடிக்கடி வருகை புரிந்து பயன்பெறுமாறு வாசகர்களை வேண்டுகிறேன். குறிப்பாக, "நாகப் பாம்புகளிடம் மாணிக்கக் கல் இருக்கிறதா?" என்ற கட்டுரையை மறவாமல் படியுங்கள். தமிழ்நாட்டுக்கு வெளியில் இருந்து தமிழ் வளர்க்கும் நண்பர்களை வாசித்து ஊக்கப்படுத்த வேண்டிய கடமை தமிழ்நாட்டிலுள்ள நமக்கு உண்டுதானே! 

அவருக்குப் பிடித்த ஒரு எஸ்எம்எஸ் ஜோக் இது:

காதலன்: ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாமா?

காதலி: செருப்பு பிஞ்சிடும்!

காதலன்: பரவாயில்லை. கையில எடுத்துக்கிட்டு ஓடலாம் கண்ணே!

 - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து. 

8 கருத்துகள்:

  1. சுவாரஸ்யம் ப்ளஸ் வியப்பான செய்தி.

    பதிலளிநீக்கு
  2. இரயிலின் செல்லப் பெயர் ”லேடி கிளார்க்” (Lady Clarke).//

    நேற்று லேடி கிழவர்!!! இன்று லேடி கிளார்க்!!!

    சுவாரசியமான தகவல்கள்.

    ஜோக் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. தெரியாத செய்தி.
    இப்போது இல்லாதது வருத்தமாக இருக்கிறது.
    தமிழர்கள் மரணித்தது மேலும் வருத்தம் தருகிறது.

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு வலைப்பூவை அறிமுகம் செய்தமைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  5. "மேற்படி வலைத்தளத்தை அற்புதமாக நடத்திவரும் முத்துகிருஷ்ணன் சிறந்த எழுத்தாளர்.

    தமிழ்நாட்டுக்கு வெளியில் இருந்து தமிழ் வளர்க்கும் நண்பர்களை வாசித்து ஊக்கப்படுத்த வேண்டிய கடமை தமிழ்நாட்டிலுள்ள நமக்கு உண்டுதானே! "

    எழுத்தாளர்களுக்குள்ளே எப்போதும் பொறாமை உண்டு. கவிஞர்கள் இடையே போட்டி கர்வம் எல்லாம் உண்டு.

    இதை எல்லாம் மறந்து தாங்கள் மற்ற எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி அவர்களுடைய படைப்புக்களை படிக்கச் சொல்வது தங்கள் உயர் குணத்தைக் காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  6. இந்த விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரியுமா?

    பதிலளிநீக்கு
  7. நல்ல தகவல்கள். வலைத்தளம் அருமையான வலைத்தளம் நிறைய தகவல்கள் அங்கும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான தகவல்கள். நல்லதொரு வலைப்பூவை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. நானும் அவரது தளத்தினை இனி தொடர்வேன்.

    பதிலளிநீக்கு