வியாழன், செப்டம்பர் 25, 2014

( பதிவு 109) சிவாஜி கணேசனும் அசோகமித்திரனும் (அபுசி-தொபசி 46)

(பதிவு 109) (அபுசி –தொபசி -46) (25-9-2014)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக ஒவ்வொரு திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும். இடையில் திடீரென்று நின்றுபோனாலும், மீண்டும் வந்துவிடும்!)


for அரசியல்/அறிவிப்பு/அனுபவம்:

அந்தக் காலத்தில் பன்னிரண்டாம் வகுப்பிற்குப் ‘புகுமுக வகுப்பு’ என்று பெயர். அதைப் பள்ளியில் படிக்க முடியாது. கல்லூரியில் சேர்ந்துதான்  படிக்கவேண்டும். கல்லூரிகள் அப்போது அதிகமாக இல்லாததால், பெரும்பாலானவர்களின் படிப்பு, பதினொன்றாவதுடன் முடிந்துவிட்டிருக்கும். என்னுடைய நல்வினைப்பயனாக மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரி அப்போதுதான் தொடங்கப்பட்டிருந்தது. அதில் புகுமுகவகுப்பில் சேர்ந்தேன். கணக்கு, பௌதிகம், இரசாயனம் கொண்ட முதல் பிரிவு.

என் தந்தையின் நண்பர் ஒருவர் திமிரியில் இருந்தார். இராணிப்பேட்டையிலிருந்து 12 கிமி தொலைவில் இருந்த சிறு நகரம். அந்தக் காலத்து பி.ஏ. (கணிதம்), பி.ட்டி. முடித்து, அரசுப் பள்ளியொன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.(பெயர் மறந்துவிட்டது. சங்கரன் என்று வைத்துக்கொள்வோமே!)  அவர் என்னிடம் அன்போடு சொன்னார்: ‘குழந்தே! எங்கள் வீட்டில் தடுக்கி விழுந்தால் மேத்ஸ் புக்ஸ்தான். நானும் மேத்ஸ், எங்க அப்பாவும் மேத்ஸ், எங்க சித்தப்பாவும் மேத்ஸ். அதனால், நீ வந்தால் உனக்கு வேண்டிய எல்லாப் புத்தகங்களயும் எடுத்துக்கொண்டு போகலாம். காசு கொடுத்து வாங்கி அப்பாவுக்குச் செலவு வைத்துவிடாதே. நாளைக்கே வா’ என்றார்.

என்னென்ன புத்தகங்கள் வாங்கவேண்டும் என்பது இன்னும் ஒரு வாரம் கழித்துதான் அறிவிக்கப்படும் என்றேன். சிரித்தார். ‘உனக்கு என்ன வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியாதா? நீ வாடா கண்ணா’ என்றார்.
***
எதிர்க்காற்றில் பன்னிரண்டு கிமி சைக்கிள் மிதித்துக்கொண்டு அவர் வீட்டை அடைந்தபோது காலை பத்துமணி.  ஞாயிற்றுக்கிழமை. ஓட்டடை அடித்துக்கொண்டிருந்தார்கள். ஆறுமாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் ஒட்டடை அடிக்கவேண்டும் என்பது சங்கரனின் தந்தையார் கட்டளையாம். சிலந்திவலைகள் சற்றே அதிகம்போல் தோன்றியது. அதைப் பொருட்படுத்தாமல் தென்னங்கூரை வேய்ந்த மொட்டைமாடியில் டியுஷன் நடந்துகொண்டிருந்தது. “ஏ க்யூப் மைனஸ் பி க்யூப் ஈக்வல்ஸ்.....” என்று சொல்லிக்கொண்டிருந்த சங்கரன், என்னைப் பார்த்ததும்  இறங்கி வந்தார்.

‘உட்காரப்பா...அம்மா, நம்ப சாஸ்திரிகளோட பிள்ளை. மேத்ஸ் புக்ஸ் கொடுக்கிறதா சொல்லியிருந்தேன்..’ என்று தாயாரிடம் அறிமுகப்படுத்தினார். சிறு ஊஞ்சலில் அமர்ந்து ஒட்டடை அடிப்பவர்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த வயதான பெண்மணி, மெல்ல எழுந்து ‘வாப்பா’ என்று சொல்லிவிட்டு அமர்ந்துகொண்டார்.  

சிறிதுநேரத்தில் அவரைவிட அதிக வயதான ஒரு பெண்மணி ‘காப்பி சாப்பிடப்பா’ என்று டபரா-டம்ப்ளரில் நுரை பொங்கும் காப்பியைக் கொடுத்தார். தமிழர் உபசரிப்பின் அடையாளமே காப்பிதானே!

அரைமணிநேரம் ஆயிற்று. உட்காரலாம் என்றால் இன்னும் தரையில் விழுந்திருந்த ஒட்டடைகள் நீக்கப்படவில்லை. நின்றுகொண்டே இருந்தேன். சங்கரனின் அப்பா வந்தார். வயது எண்பத்தைந்தாம். ஆரோக்கியமாகத்தான் இருந்தார். ‘வாடா கண்ணா..’  என்று வாய் நிறையக் கூப்பிட்டார். ‘மேத்ஸ் படிக்கிறியா?  வெரி குட். உனக்கு என்னென்ன புக்ஸ் வேண்டும்? எல்லாம் பரணில் மூட்டைகட்டி வைத்திருக்கிறேன். சொன்னால் எடுத்துத் தருகிறேன்’ என்று என்னுடைய முகத்தையே பார்த்தார்.

நான் ‘பேந்தப் பேந்த’ விழித்தேன். இன்னும் கல்லூரி திறக்காத நிலையில் நான் என்னவென்று சொல்வது? அதற்குள் சங்கரன் வந்துவிட்டார். ‘அப்பா, அவனுக்கு ஒண்ணும் தெரியாது. பி.யு.சி.-மேத்சுக்கு என்ன வேண்டும்னு ஒனக்குத் தெரியாதா?’ என்றார்.

‘என்ன, பி.யு.சி.யா?    நான் பி.எஸ்.சி.ன்னு இல்ல இருந்தேன்’ என்று என்னை அலட்சியமாகப் பார்த்தார் சங்கரனின் அப்பா. ‘எங்கிட்ட பி.யு.சி.க்கு எந்தப் புத்தகமும் கிடையாதே! வேணுமானால் ‘அனலிட்டிகல் ஜியாமெட்ரி’ இருக்கு, அதைக் கொடுக்கட்டுமா? ஆனால் அது எம்.ஏ. புத்தகமாச்சே, உனக்குப் பயன்படுமா?’ என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 12 கிமி வந்தாயிற்று. இன்னொரு 12 கிமி திரும்பிப் போகவேண்டும். இப்போதே பதினோருமணி வெய்யில் சுள்ளென்றிருந்தது. சீக்கிரம் இடத்தைக் காலிசெய்தாக வேண்டும். ‘பரவாயில்லை கொடுங்கள், நான் எம்.எஸ்.சி படிக்கும்போது பயன்படுமே’ என்றேன்.

அவர் அந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது. சங்கரன் ‘இதோ வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு எங்கோ போனார். ‘சரி, இங்கேயே இரு, கொண்டுவருகிறேன்’ என்று மாடிக்குப் போனார் சங்கரனின் அப்பா.

வரும்போது அவர் கையில் இருந்தது 1924ஆம் வருடத்தில் வெளியிடப்பட்ட ‘அனலிட்டிக்கல் ஜியாமெட்ரி’ என்ற சுமார் இருநூற்றைம்பது பக்கமுள்ள, பைண்டு செய்யப்பட்டு, ஓரங்கள் கரையான் அரித்த, பழுப்பேறிய புத்தகம். பெருமாள் பிரசாதம் மாதிரி அதை அவர் கொடுக்க, நான் பக்தியோடு வாங்கிக்கொண்டேன். வயதானவர்கள் எது கொடுத்தாலும் அது ஆசீர்வாதமல்லவா? ‘வேண்டாம்’ என்று சொல்லி அவர் மனதைப் புண்படுத்துவானேன்?

‘மெதுவாத் தெறக்கணும். இல்லேன்னா பக்கங்கள் பிஸ்கட் மாதிரி ஓடிஞ்சு வந்துடும்.    ஆகி வந்த புத்தகம். எங்க அப்பா படிச்சது, அப்புறம் நான் படிச்சேன். என் தம்பி படிச்சான். இதை யாருக்கும் தரமாட்டேன். எங்க வாத்தியார் கேட்டாலே தரமாட்டேன்னா பாத்துக்கோயேன். என்னமோ தெரியலே, ஒன்னப் பாத்தா ஒடனே தரணும்னு தோணித்து. அதுவே ஒரு நல்ல சகுனம் பாரேன். நீ சொன்ன மாதிரியே  எம்.ஏ. படிக்கத்தான் போறே பாத்துண்டே இரு, என் வாக்குப் பலிக்கறதா இல்லையான்னு!’ என்றார் பெரியவர்.   
      
அவரை நமஸ்கரித்துவிட்டு சைக்கிளை எடுத்தேன்.
****
வீட்டிற்கு வந்ததும் அந்தப் புத்தகத்தை அப்படியே ஒரு காகிதக் கவரில் வைத்து குறுக்கிலும் நெடுக்கிலும் நூலால் கட்டி அலமாரியின் உச்சிப் பலகையில் வைத்தேன். சிதிலமாகிப்போய்க் கொண்டிருக்கும் இந்தப் புத்தகத்தால் எனக்கு எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. அப்புறம் மறந்தே போனேன்.

திடீரென்று ஒருநாள், வேறு எதையோ எடுக்கும்போது இந்தப் புத்தகம் தரையில் விழுந்தது. குனிந்து எடுத்தேன் அலமாரி இருந்த இடம்  எப்போதுமே சற்று இருட்டாக இருக்கும். கையில் முள் குத்துவதுபோல் உணர்ந்தேன். விரைந்து வெளியில் வந்தேன். கையிலிருந்த புத்தகத்தின் உள்ளிருந்து ஏதோ ஒரு கூரான முள் நீட்டிக்கொண்டிருந்தது. அதற்குள் எனக்கு வியர்க்க ஆரம்பித்தது. முழங்கைவரை மரத்துப் போவதுபோல் இருந்தது. ‘அம்மா’ என்று வலியால் அலறினேன். புத்தகம் தானாக நழுவிக் கீழே விழுந்தது. அதிலிருந்து ஓடியது, சிறிய தேள் ஒன்று! சிறிய அம்மிக் குழவியால் அதை ஒரே அடியில் கூழாக்கினார் அம்மா.

நல்ல வேளை அப்பா வீட்டில் இருந்தார். தேள்கடிக்கு மந்திரிக்கும் பழக்கம் அப்பாவுக்கு உண்டு. ஏராளமானவர்கள் வந்து குணம் பெற்றதை அறிவேன். அன்றுதான் எனக்கு அதை நேரில் அறியும் வாய்ப்புக் கிட்டியது. தேள் கொட்டிய கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மந்திரங்கள் சொன்னார். பிறகு தோள்பட்டையிலிருந்து மெதுவாக மாசாஜ் செய்வதுபோல் விரல்களால் மணிக்கட்டுவரை தடவினார். பிறகு அந்த விரல்களைத் தரையில் செங்குத்தாக நிற்கவைத்து, டொக், டொக் கென்று ஓசை வரும்படி தட்டினார். அப்படி மூன்றுமுறை செய்தார். ஒருமணி நேரத்திற்குப் பிறகு வலி குறைந்தது. மரத்துப் போன கை பழையபடி ஆயிற்று.

அடுத்த வாரம், அப்பா சங்கரனைப் பார்த்தாராம். எனக்குக் கொடுத்த புத்தகத்தில் முக்கியமான பொருள் ஏதேனும் இருந்ததா- பை சான்ஸ்- என்று கேட்டாராம். இருந்தால் கொண்டுவந்து கொடுக்கும்படி சொன்னாராம். செத்துப்போன தேளை எப்படி நான் திருப்பிக் கொடுப்பது?

அந்தப் புத்தகத்தில் இன்னும் கிழியாமல் இருந்த சில பகுதிகள், எனது பி.எஸ்சி வகுப்பில் பயன்பட்டன. பெரியவர் வாக்குப்படியே நான் எம்.எஸ்.சி படிக்க முடிந்தது. ஆனால் அங்கு இந்தப் புத்தகத்திற்குத் தேவை இருக்கவில்லை. அதற்குள் அது பொடிப்பொடியாகிவிடும் நிலைக்கு வந்துவிட்டதால், சேலம் ராஜகணபதி கோயில் முன்பிருந்த குப்பைக்கூடையில் போட்டேன். பிள்ளையார் உண்டியலில் ஒரு ரூபாய் போட்டு, விபூதியைத் தரித்துக்கொண்டு கிளம்பினேன். இப்போது நினைத்தாலும் தேளின் உருவம் கண்முன்னால் நிற்கிறது.

இப்போதெல்லாம் ஓட்டு வீடுகளே இல்லாததால், தேள்கள் காணக் கிடைப்பதில்லை. கடைசியாக நான் தேளைப் பார்த்து சுமார் இருபத்தைந்து வருடங்களாவது ஆகியிருக்கும்.

பு for புத்தகம் :  (அடுத்த இதழில் காண்க.)

சி for சினிமா & தொ for தொலைக்காட்சி

நீயா நானா கோபிநாத்தின் நள்ளிரவுக்கு முந்தைய நிகழ்ச்சியை –அதாவது – நீயா நானா நிகழ்ச்சியை- எப்போதாவது பார்ப்பதுண்டு. கடந்த ஞாயிற்றுக்கிழமை பார்த்தபோது – என்ன ஆச்சரியம்- எனக்கு மிகவும் பிடித்த தலைப்பில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ஆத்மார்த்த ரசிகர்கள் – எழுத்தாளர் ஆத்மார்த்தியும் இருந்தார்- சிவாஜி மீது தங்களுக்கு எப்படிப் பிரியம் எழுந்தது, ஏன் எழுந்தது, எவ்வளவு அடர்த்தியான பிரியம் அது- என்பதை உணர்ச்சி பொங்கக் கூறிக் கொண்டிருந்தார்கள். பார்ப்பவர்களை அப்படியே ஐம்பதாண்டுகளுக்குப் பின்னே கொண்டு போய்விட்டது அந்த நிகழ்ச்சி.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தனக்கே உரிய வெண்கலக் குரலில் சிவாஜி கணேசன் மீதுள்ள தன் ஆழ்ந்த பற்றை வெளிப்படுத்தினார். சிவாஜி என்ற ஒரு நடிகர் வந்திராவிட்டால் கலைஞர் கருணாநிதியின் வசனங்களுக்கு யார் உயிர் கொடுத்திருக்க முடியும் என்று கேட்டார்.

சில ரசிகைகள் – இளம் வயதில் அவர்களும் மிக அழகாக இருந்திருக்கக்கூடும் – சிவாஜி கணேசனைத் தங்கள் அன்பிற்குரியவராக இதயத்திற்குள் ரகசியமாகப் பொத்தி வைத்திருந்ததை மெல்ல வெளிப்படுத்தினார்கள். பேரன் பேத்தி எடுத்துவிட்ட பிறகும்,  சிவாஜி மீதான தங்களது இளம்பருவத்து ஒருதலைக் காதலை வெளிப்படுத்துவதில், நாணம் கலந்த தயக்கம் அவர்களிடம் இருந்ததை ரசிக்கமுடிந்தது.

ஒரு ரசிகர் சிவாஜி கணேசன் பேசிய மிக நீண்ட வசனம் ஒன்றைக் கடகடவென்று ஒப்பித்துக் கைதட்டல் வாங்கினார். ஆனால் அவரது உணர்ச்சிப்பெருக்கின் வேகத்தோடு ஒத்துழைப்பதில் அவருக்குக் குரலுக்குச் சற்றே தயக்கம் இருந்தது.

வழக்கம் போல, சிறப்பு அழைப்பாளர்கள் ‘தேமேன்னு’ அமர்ந்திருந்தார்கள்.

சிவாஜி கணேசனின் நடிப்பும் வசனமும் எனக்கு மிகவும் பிடித்தவை. ‘பழனி’யில் வரும் ‘அண்ணன் என்னடா, தம்பி என்னடா’ என்ற பாடலில் அவரது நடிப்பு உச்சக்கட்டத்தைத் தொடும். ‘மனித சாதியில் துன்பம் யாவுமே- மனதினால் வந்த நோயடா..’ என்ற வரிகளுக்கு அவர் நடிக்கும்போது நம் கண்ணிலிருந்து நீரை வரவழைப்பது சிவாஜியா, கண்ணதாசனா, டி.எம்.எஸ்.ஸா, அல்லது இந்த மூன்றுமாகி நிற்கும் கதாபாத்திரமா என்று தெரியாது. 

வீரபாண்டிய கட்டபொம்மனில் அவர் தூக்கிலிடப்படும் காட்சி வந்ததும் நான் அழுதே விட்டேன். யாரும் என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை. அவர்களும் அழுதுகொண்டிருந்தார்களே! ஆற்காடு ஜோதி தியேட்டரில் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, பாலாற்றுப் பாலத்தின் மீது இராணிப்பேட்டைக்கு நடந்து சென்று கொண்டிருந்த என் மனதில் ஒரே ஒரு சிந்தனைதான் இருந்தது. சிவாஜியைத் தூக்கில் போட்டுவிட்டார்களே, இனி அவர் நடித்துப் புதிய படங்கள் வராமல் போய்விடுமே என்ற கவலை. அவர் இறந்தது சினிமாவில்தான், நிஜத்தில் அல்ல என்ற பிரமை தீருவதற்குச் சில மாதங்கள் ஆயின.

பீம்சிங்கின் இயக்கத்தில் வந்த எல்லாப் ‘ப’ வரிசைப் படங்களும் எனக்கு மிகவும் பிடித்தவை. ‘பலே பாண்டியா’வில் வரும் ‘வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்?’ என்ற பாடலும், ‘பச்சை விளக்கி’ன் ‘ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது’ என்ற பாடலும் வறுமையால் இருண்டிருந்த என் இளம் நெஞ்சில் நம்பிக்கை விளக்கை ஏற்றிய பாடல்கள்.  ‘பாலும் பழமும்’ பாடலான ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ மற்றும் ‘ஆலயமணி’யின் ‘பொன்னை விரும்பும் பூமியிலே’ பாடலும் என் வளர்நெஞ்சில் காதலைத் தூவிய பாடல்கள். ‘நெஞ்சிருக்கும் வரை’யின் ‘முத்துக்களோ கண்கள்..’ பாடல் விரக்தி மனநிலைக்கு ஆறுதல் கொடுத்ததாகும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். நிறுத்திவிடுகிறேன். இல்லையென்றால்,  அந்த ரசிகைகள் மாதிரி நானும் (அந்தக் காலத்தில்) சில நடிகைகளை என் மனதிற்குள் பூட்டி வைத்திருந்தேன் என்ற உண்மை வெளிவந்துவிடலாம். மீதமிருக்கும் நிம்மதியை ஏன் இழக்கவேண்டும்?

for பத்திரிகை

‘காலச் சுவடு’ –செப்டம்பர் 2014 இதழில் அசோகமித்திரனின் பேட்டியைப் படித்தேன். இதுவும் ஒரு ஐம்பது வருட அனுபவத்தை நினைத்துப்பார்க்கச் சொல்வதாகும். யார் கேட்டாலும் இல்லையென்னாமல் எழுதிக் கொடுத்துவிடுவேன் என்று அசோகமித்திரன் சொல்கிறார். ‘சாவி’ கதை கேட்பாராம். முதலில் தலைப்பு சொல்லி விடவேண்டுமாம். தலைப்பில் தயக்கம் காட்டினால் அவ்வளவுதான், சான்ஸ் போய்விடுமாம். ‘மானசரோவர்’ என்ற தலைப்பு அப்படித் திடீரென்று பீறிட்டுக்கொண்டு வந்த தலைப்பு தானாம்.
மனைவியுடன் அசோகமித்திரன (படம்: நன்றி: காலச்சுவடு)
பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்குச் சன்மானம் கொடுக்கவேண்டும் என்ற பொருளாதார நீதியைப் பற்றி அசோகமித்திரனுக்குக் கவலையில்லை. அவர்பாட்டுக்கு எழுதிக் கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார். வசதியான ஜெயகாந்தன் போன்றவர்கள் எப்போதோ எழுதுவதை நிறுத்திவிட்டபோதும், இன்றுவரை விடாமல் எழுதிக்கொண்டிருப்பவர் அசோகமித்திரன். நீங்கள் நிச்சயமாகப் படிக்கவேண்டிய பேட்டி. சில சுவாரஸ்யமான கேள்விகளும் அவரின் பதில்களும்:

உங்கள் கதைகளில் ஆண் பாத்திரங்களைவிடப் பெண் பாத்திரங்கள் துலக்கமாக இருக்கின்றன. அவர்களுடைய உணர்வுகளை மிகவும் உண்மையாகச் சொல்கிறீர்கள். இது பற்றிச் சொல்லுங்கள்.

அப்படியும் சொல்லலாம். ஆனால் ஆண், பெண் என்றெல்லாம் இல்லை. ஒருவகையில் அது எழுதுவதற்கு நிறைய வாய்ப்புகளை அளிக்கிறது. ஆண் பாத்திரங்களில் அது குறைவு.

அறுபது வருடங்களாக தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். எப்போதாவது எழுத்துத்திணறல்’ (writer’s block) ஏற்பட்டது உண்டா?

இல்லை. ஆனால் சோர்வு ஏற்பட்டதுண்டு. சோர்வாக இருக்கிற சமயம் யாராவது கதை வேண்டும் என்று கேட்பார்கள். எழுத ஆரம்பிப்பேன். ஒருவர் கதை கேட்டு எழுதிக்கொடுக்க முடியவில்லை என்றால் எனக்கு ரொம்ப குற்றஉணர்ச்சி ஏற்பட்டுவிடும்.

கல்கியைப் பற்றி....

கல்கியை எல்லோரும் மேம்போக்காக எழுதி இருக்கிறார். அதில் சரித்திரம் இல்லை என்று சொல்கிறார்கள். அதில் எனக்கு முழு உடன்பாடில்லை. அவர் இந்தப் பொன்னியின் செல்வனைவேண்டுமென்றேதான் நீட்டிக்கொண்டு போகிறார். அது உண்மை. ஆனால் தென்னிந்திய வரலாறு கிடைப்பதற்கு எனக்கு முழுக்க இந்தப் புத்தகம் உதவி செய்தது. அந்தப் புத்தகத்தை சி.பி. ராமசாமி அய்யர் மகன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஐந்து தொகுதிகள். எதற்கு இந்த வேலையற்ற வேலை என்று கேட்டேன். அந்த மொழிபெயர்ப்பின் முதல் தொகுதியை அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி வெளியிட்டார். அப்போது பேசிய கருணாநிதி தான் பார்த்த காஞ்சி, மாமல்லபுரம் எல்லாம் கல்கியின் நாவலைப் படித்த பிறகு புதிதாகத் தெரிவதாக அண்ணா சொன்னார் என்று ஒரு தகவலைச் சொன்னார். இப்படியொரு பாதிப்பை ஏற்படுத்த முடியுமென்றால் அவரை நாம் எழுத்தாளர் இல்லை என்று சொல்ல முடியுமா? சுந்தர ராமசாமி மாதிரி கல்கியைக் கிண்டல் செய்தவர்கள் வேறு யாருமில்லை. ஜே.ஜே. சில குறிப்புகளை ஆரம்பிக்கிறபோதே சிவகாமியம்மாள் தன் சபதத்தை முடித்துவிட்டாரா என்று ஜே.ஜே. கேட்பதாகத்தான் ஆரம்பிப்பார்....
(இந்த அருமையான பேட்டியை எடுத்த சுகுமாரனுக்கும், தேவிபாரதிக்கும், வெளியிட்ட காலச்சுவடுக்கும் நன்றி.)
இணையத்தில் படிக்க: http://www.kalachuvadu.com/issue-177/page40.asp
சி for சிரிப்பு/சிந்தனை

ஞாயிற்றுக்கிழமையன்று ஏதோ ஒரு சேனலில் பிரசன்னா நடித்த பழைய படம் ஓடிக்கொண்டிருந்தது. நண்பர்கள் சீரியசாக இருந்ததைக் கண்டு அவர்களை நல்ல மூடுக்குக் கொண்டுவருவதற்காகப் பிரசன்னா சொன்ன நகைச்சுவை துணுக்கு இது:

வாசகர் (நூலகரிடம் ஒரு தடிமனான புத்தகத்தைக் கொடுத்து): என்ன புத்தகமய்யா இது! ஏராளமான கேரக்டர்கள் இருக்கிறார்கள், கதையே இல்லையே!

நூலகர் (நிம்மதிப் பெருமூச்சுடன்): நீங்கள் தானா அது? டெலிபோன் டைரக்டரியைக் காணோமே என்று தேடிக் கொண்டிருந்தேன். திருப்பிக் கொடுத்ததற்கு மிக்க நன்றி!
*****
(குறிப்பு: வழக்கமான பதிவுகள்: அடுத்த இதழில் காண்க.)
© Y Chellappa  (email: chellappay@yahoo.com).-

திங்கள், செப்டம்பர் 15, 2014

(பதிவு 106) ஷீரடி சாயிபாபாவை வணங்குவது தவறா? (அபுசி –தொபசி -44)

ஷீரடி சாயிபாபாவை வணங்குவது தவறா? (அபுசி –தொபசி -44) (15-9-2014)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக ஒவ்வொரு திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும். இடையில் திடீரென்று நின்றுபோனாலும், மீண்டும் வந்துவிடும்!)

அரசியல்

இந்திய அரசியலில் அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் உள்ள இரும்புப் பிணைப்பு எளிதில் உடைக்கமுடியாதது. அதிகார வர்க்கத்தின் துணையும் ஆலோசனையும் வழிகாட்டுதலும் இன்றி   எந்த அமைச்சராலும் நெறிதவறி நடந்துவிட முடியாது. ஆனால் அமைச்சரின் நெறி தவறலைக் கண்டுபிடித்துவிட்டாலோ, அவரை மட்டுமே குற்றவாளியாக்கிவிட்டுத் தாங்கள் தப்பித்துவிடுவதே அதிகார வர்க்கத்தின் வழக்கம். (அதிகார வர்க்கம் என்னும்போது ஐ.ஏ.எஸ். முதலிய முதல் வகுப்புப் பதவிகளும் அதற்கு மேலும் உள்ளவர்களையே குறிப்பிடுகிறோம்.)

அந்த வகையில் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் தமக்கு அமைச்சர்களாக இருந்தவர்களைப் பற்றி அவதூறு கிளப்பும் வகையில் மஞ்சள் பத்திரிகைகளின் அளவுக்குக் கீழிறங்கிவந்து வாதம் செய்யும் கால கட்டம் இந்தியாவில் இப்போது ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசின் கணக்குத் தணிக்கையாளராகப் பணி ஒய்வு பெற்றிருக்கும் ஒரு மலையாள அதிகாரி, முன்னாள் அமைச்சர் மாறனைப் பற்றியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றியும் அவதூறு கிளப்பிக்கொண்டிருக்கிறார் என்று அவர்மீது வழக்குத் தொடுக்கப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

முன்னாள் நீதிபதிகளும் இந்த அவதூறு பரப்புதலில் தீவிரப் பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்னால்  யாரோ யாருக்கோ சிபாரிசு செய்து பதவி பெற்றுக்கொடுத்ததாக, இப்போது சொல்ல முன்வந்திருக்கும் இவர்கள், தங்கள் பதவிக் காலத்தில் இதைச் சொல்லியிருந்தால் இன்னும் வலுவாக மக்களிடம் போய்ச் சேர்ந்திருக்குமே!         

இந்தியா ஜனநாயக நாடு என்பதால், எவரும் எதையும் செய்யலாம்தான். ஆனால், பதவியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு தங்களை எதுவும் செய்துவிடமுடியாது என்ற தைரியத்தில் ‘உண்மைகளை’  பேச முன்வருபவர்களின் நோக்கத்தை நாம் நிச்சயமாக ஐயுற வேண்டியிருக்கிறது. எதையோ எதிர்பார்த்து, அது கிடைக்கவில்லை என்ற நிலை உறுதியான பிறகுதான் இப்படிப் பேச ஆரம்பிக்கிறார்கள். இதை எப்படி நேர்மையாகக் கருத முடியும்? தங்கள்மீது நம்பிக்கை வைத்துப் பதவியில் இருத்திக்கொண்டவர்களை முதுகில் குத்தும்விதமாகச் செயல்படும் இவர்களை மரியாதைக்குரியவர்களாக நாம் கருத வேண்டிய அவசியம் உண்டா?

ஐ.ஏ.எஸ். வர்க்கம், தங்களில் ஒருவருக்கொருவரைக் காட்டிக் கொடுப்பதில்லை என்பதை அறிவோம். நீதித்துறையும் அப்படியே. (ஏற்கெனவே மருத்துவர்களும் அப்படியே என்பதை அறிவோம்.) இப்படிச் சமுதாயத்தின் ஒவ்வொரு துறையும் சுயநலம் காப்பதில் ஈடுபட்டால், அரசியல்வாதிகள்தானே பழி சுமக்க வேண்டும்? இப்படியிருந்தால் அரசியலில் நல்லவர்கள் எப்படிப் பதவிக்கு வர ஆசைப்படுவார்கள்? அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் என்றுதானே அது ஆகிவிடும்?

நமக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் சுமார் நூறிலிருந்து இருநூறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்கலாம். ஆனால் ஒரேயொரு சகாயம் தானே தார்மீகப் பண்பாட்டின் நெறியாளராக நமக்கு முன் தெரிகிறார்! மற்றவர்கள் என்ன ஆனார்கள்? சகாயம் மாதிரி இல்லாவிடினும், சகாயத்தில் பாதி உயரமாவது இவர்கள் வளர முடியாதா? ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் பலர்  கதை, கட்டுரை, கவிதை எழுதுகிறார்கள். திரைப்படம் எடுக்கிறார்கள். ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெறுகிறார்கள்.  ஆனால் சகாயம் மாதிரியோ, ட்டி.என்.சேஷன் மாதிரியோ தங்கள் கடமைகளில் உறுதியான செயல்பாட்டைக் காட்டி இவர்கள் நமக்கு முன்னால் உயர மறுக்கிறார்களே ஏன்?

தமிழ்நாட்டிலிருந்து துடிப்பும் சிறந்த கல்வித்தகுதியும் உடைய இளைஞர்கள், கடந்த சில ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்.-தேர்வுகளில் ஆர்வமாகப் பங்குகொண்டு வெற்றியும் பெற்று வருகிறார்கள். சைதை துரைசாமி போன்றவர்களின் அமைப்புகள் இதற்கு முக்கியக் காரணமாக இருந்து வருகின்றன. தேசிய அளவில் டாப்-10 அளவில் வருகின்றனர். அவர்களுக்கு ‘ரோல் மாட’லாக இருப்பதற்கு ஒரேயொரு சகாயம் போதுமா என்று கேட்காமல் இருக்க முடியவில்லையே!

புத்தகம்


தன் சொத்து முழுதையும் மருத்துவ மனைகளுக்கு வழங்குமாறு உயில் எழுதிவைத்துவிட்டு வாரிசின்றி இறந்துபோன மூத்த எழுத்தாளர் ஆர். சூடாமணி யின் ‘இரவுச் சுடர்’ என்ற (சிறு) நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். எளிமையான நடை, எளிமையான சொற்களில் கனமான வருணனைகளை எளிதாகக் கொண்டுவந்துவிடும் நயமான எழுத்து கைவரப்பெற்ற சில மூத்த எழுத்தாளர்களில்  சூடாமணியும் ஒருவர். ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெண் ணானதாலும், ஆரோக்கியமின்மை காரணமாகவும்  வீட்டை விட்டு வெளியே சென்று சாதாரண மக்களோடு பழகும் வாய்ப்பு அதிகம் இல்லாதவராக இருந்தவர் சூடாமணி. எனவே அவரது பாத்திரங்கள் யதார்த்தங்களிலிருந்து சற்று விலகியே இருக்கிறார்கள் என்று படுகிறது.   

கதாநாயகி யாமினியைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் செய்விக்கிறார்கள்  பெற்றோர்கள். அவளுக்குக் குழந்தையும் பிறக்கிறது. அப்போது அவளுக்கு மனச் சிதைவு ஏற்பட்டுவிடுகிறது. இதற்குத் தாம்தான் காரணமோ என்ற குற்ற உணர்வுக்கு ஆளாகிறார், யாமினியின் தந்தை சாரநாதன். குழந்தையைத் தான் செய்த பாவத்தின் குறியீடாகவே பார்க்கிறாள், யாமினி. அதனால் அவள் வெறி அதிகரித்து, தற்கொலை செய்துகொள்ள முயன்று, தடுக்கப்பட்டு விடுகிறாள். உடலில் இருந்து விடுதலை வேண்டுகிறாள் அவள். சாரனாதனும் அவளைப் புரிந்துகொண்டதற்கு அடையாளமாக, யாருக்கும் தெரியாமல், அவள் தற்கொலை செய்ய உதவுகிறார். அவளுக்கும் தனக்கும் இதனால் நிம்மதி ஏற்படுவதாக உணரும்போது, இந்த நிம்மதியே அவருக்கு இன்னொருவகையான குற்ற உணர்வையும் ஏற்படுத்தி அவரை மனச் சலனத்துக்குள்ளாக்குகிறது.

யாமினியின் பெண் கீதாவும் அவளைப்போலவே கன்னியாக இருந்துவிட விரும்புகிறாளோ என்ற ஐயப்பாட்டுடன் கதை தொடங்குகிறது.

கொஞ்சம் ஆழ்ந்து படிக்கவேண்டிய கதை. இரண்டு முறையாவது படித்தால்தான் எழுதியவரின் உள்ளம் ஓரளவாவது வெளிப்படும் வாய்ப்பிருக்கிறது. ‘இது, இன்னும் அதிகம் பேசப்படவேண்டிய  நாவல்’ என்கிறார், முன்னுரை வழங்கியுள்ள இந்திரா பார்த்தசாரதி.

‘இரவுச் சுடர்’ – ஆர். சூடாமணி- காலச் சுவடு வெளியீடு. (2010) விலை ரூ.75.  (C) பாரதி.

சினிமா, தொலைக்காட்சி : அடுத்த இதழில் காண்க.

பத்திரிகை

ஷீரடி சாயிபாபாவை இந்துக்கள் தொழவேண்டாம் என்று குஜராத்தில் உள்ள துவாரகா பீட சங்கராச்சாரியார் கூறியது பற்றி பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அவுட்லூக் வார இதழ் தனது 15-9-2014 இதழில் இதுபற்றிய கவர்ஸ்டோரியை எழுதியுள்ளது.


ஷீரடி சாயிபாபாவின் பிறப்பு பற்றிச் சரியான தகவல் இல்லை. மகராஷ்டிராவில் பர்பானி மாவட்டத்தில் (ப்)பத்ரி என்ற ஊரில் பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர் ஒரு முஸ்லீமால் வளர்க்கப்பட்டவர் என்றுமட்டும்  தெரிகிறது. இந்துவாகவே இருந்தாலும் இன்னொரு மதத்தவரால் இளம்பருவத்திலிருந்தே வளர்க்கப்பட்டால் அந்த மதத்துக்குரிய குறியீடுகளும் வாசகங்களும்தானே வெளிப்படும்! ஆகவே, ‘அல்லா மாலிக்’ என்று சாய்பாபா அடிக்கடி கூறுவார். ஆனால் அவர் சொன்ன அல்லா, இஸ்லாமிய  மதத்தவரான அல்லா அல்ல. எல்லா மதத்துக்கும் பொதுவான இறைவனையே அவர் அல்லாவாய் அடையாளம் காட்டினார். 

அவரைப் பற்றிய கதைகளும் அமானுஷ்ய செய்திகளும் அதிகம் பேசப்பட்டுள்ளன.     பூனா அருகிலுள்ள ஷீரடியில் உள்ள சாயிபாபா ஆலயம், திருப்பதி வேங்கடவனுக்கு அடுத்தபடியாக செல்வம் மிகுந்த ஆலயம். நினைத்தவர்களுக்கு நினைத்ததை நிறைவேற்றிக் கொடுக்கிறார் சாயிபாபா என்று பலர் என்னிடம்  கூறியது உண்டு. சினிமாப் படங்களும் சின்னத்திரைத் தொடர்களும் அவரைப் பற்றி ஏராளமாக வந்துள்ளன. 


பெங்களூரில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது எனது உடன்பணிபுரியும் இன்னொரு அதிகாரியான நரசிம்மராவ், வியாழக்கிழமைகளில் மாலையில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது  கோரமங்களாவில் இருந்த சிறிய சாயிபாபா ஆலயத்திற்குச் செல்வதுண்டு. இருவரின் வீடும் கோரமங்களாவில் இருந்ததால் ஒரே காரில் செல்வதுண்டு. அப்படி ஒரு வியாழன் மாலை நானும் அவருடன் சாயிபாபா ஆலயத்திற்குச் சென்றேன். 

அதற்குமுன் அங்கும் சரி, வேறு எந்த ஊரிலும் சரி, சாயிபாபா ஆலயத்திற்கு நான் சென்றதில்லை. அரவிந்த அன்னையின் தத்துவங்களால் ஆட்கொள்ளப்பட்டிருந்த எனக்கு வேறு ஆன்மிக ஞானிகளின் துணையைத் தேடவேண்டிய அவசியம் இருக்கவில்லை. என்றாலும் எவரையும் நான் மறுதலித்ததில்லை. ரமணாசிரமத்திற்குச் சென்றிருக்கிறேன். திருக்கோவிலூர் சென்றிருக்கிறேன். விசிறி சாமியாரைத் தரிசித்திருக்கிறேன். பாலமுருகனடிமையையும், பங்காரு அடிகளாரையும், அண்மையில்  சிவசங்கர் பாபாவையும் கூட,  பார்த்துப் பேசியிருக்கிறேன். (புட்டபர்த்தி சாயிபாபாவை மட்டும் நான் பார்க்க முடிந்ததில்லை.) ஏதோ ஒரு ஆன்மிக சக்தி இல்லாமல் எந்த ஒருவரையும்  பல்லாயிரம் மக்கள் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டிருக்க முடியாது. அந்தச் சக்தியை முன்னிட்டு அவர்களை நான் மரியாதையோடு வணங்குவது வழக்கம். அப்படித்தான் கோரமங்களா சாயிபாபா ஆலயத்திற்கும் சென்றேன்.

பார்த்ததுமே, சாயிபாபாவின் திருஉருவம் என்னிடம் ஏதோ பேசுவதுபோல் உணர்ந்தேன். வலம் வந்தேன். ‘பூரண சரணாகதி’ யோ, ‘பாபாவே கதி’ என்ற உணர்வோ ஏற்படவில்லை என்றாலும், சாயிபாபா என்பது பொய்யில்லை, மிக உயர்ந்த ஆன்மிக வடிவம் என்பது எனக்குத் தெளிவாக உணர்த்தப்பட்டது.

இனிப்பு வழங்கினார்கள். அதை வாயிலிட்டுச் சுவைத்துக்கொண்டே காருக்குத் திரும்பினோம். ‘சாயிபாபாவை வணங்கினீர்கள் அல்லவா, உங்களுக்கு ஏதோ ஒரு நல்லது நடக்கப் போகிறது. பார்த்துக்கொண்டே இருங்கள்’ என்றார் நரசிம்ம ராவ்.

‘அது எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறீர்கள்?’ என்றேன்.

‘அது அப்படித்தான். முதல்முறை வரும் பக்தர்களிடம் தன் மகிமையை உணர்த்திக்காட்டுவது பாபாவின் வழக்கம்’ என்றார் அவர்.

‘நல்லது’ என்று புன்சிரிப்புடன் கூறிவிட்டு இறங்கினேன். யார்தான் நல்லது நடந்தால் வேண்டாம் என்று சொல்வார்கள்? என் வீடு வந்துவிட்டது.

அடுத்த வாரம் சென்னை சென்றிருந்தேன். ஒரு துணிக்கடையில் துணி எடுத்துக்கொண்டிருந்தோம் நானும் (என்!) மனைவியும். அப்போது என் அலைபேசி ஒலித்தது. எப்போதும் என்னுடன் அலைபேசியில் பேசியிராத, எங்கள் வங்கியின் மனிதவளத் துறையின் பொதுமேலாளர் மோகன் ராவ் அவர்கள் என்னிடம் பேசினார். ‘உங்களை இரண்டுநாள் பயிற்சிக்காக பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவுக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறோம். அநேகமாக இன்னும் ஒரு வாரத்தில் போகவேண்டி இருக்கலாம். குறைந்த அவகாசமே இருப்பதால் முன்கூட்டியே தெரிவிக்கிறேன். உரிய ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுங்கள்” என்று அலைபேச்சை முடித்தார்.

உடனே நரசிம்மராவுக்குத் தகவல் சொன்னேன். அவர் சிரித்தார். ‘நான் தான் சொன்னேனே - சாயிபாபா ஏதாவது ஒரு புதுமையைச் செய்து தன்னை உங்களுக்கு விளக்குவார் என்று!’     

சில மாதங்களுக்குப் பிறகு என்னுடைய துறையின் பொதுமேலாளரிடமிருந்து  தெரிந்துகொண்ட செய்தி இது: அதிகாரிகளுக்கு  வெளிநாட்டுப் பயணங்களை அளிக்கும் முன்பு, உரிய துறையின் பொதுமேலாளருடன் ஆலோசித்தபிறகே வங்கியின் தலைவர் முடிவு செய்வாராம். ஆனால் இந்த விஷயத்தில் எனது பொதுமேலாளருக்கே அறிவிக்கவில்லையாம். தனக்கு வந்த ஒரு கடிதத்தின் மீது, என் பெயரை எழுதி, ‘இவரை அனுப்புங்கள்’ என்று உத்தரவிட்டிருந்தாராம் தலைவர். வேறு யார் விஷயத்திலும் அம்மாதிரி நடந்ததில்லையாம்!

சிரிப்பு / சிந்தனை

“பத்ரிநாத்திற்குப் போகும் வழியில் ஒருநாள் நான் கூடத் தக்காளிப் பச்சடி பண்ணினேன் அம்மா” (என்றாள் கீதா).

...”எத்தனை பேர் பந்தியிலிருந்து உயிரோடு எழுந்தா(ர்கள்)?” என்றான் ராமேசன்.

“நிஜந்தான். எப்படியம்மா இத்தனை மோசமாய்ச் சமைச்சே-அப்படின்னுதான் எல்லாரும் என்னை கேட்டா”.

“இருக்கணுமே!”

“என் அப்பா டியுஷன்னு நான் பதில் சொன்னேன்”.

“கள்ளி!”

 தயிர் ஊற்றுவதற்குமுன் அன்னம் பரிமாறப்பட்டது. தன் வட்டிலில் விழுந்த கவளத்தில் படிந்திருந்த ஒரு ரோம இழையை கீதா முதலிரண்டு விரல்களால் எடுத்துத் தூக்கிப் பிடித்தாள். ‘இதை எந்த விட்டமினுக்காகச் சேக்கறது அம்மா?’ என்றாள் பெருந்தேவியைப் பார்த்து.

“சரிதாண்டி. தூக்கி எறிஞ்சுட்டு இலையைப் பாத்துச் சாப்பிடு” என்ற செல்லக் கண்டிப்பு வந்தது.

“என்ன கீது அது?” என்று கேட்ட ராமேசன் கண்ணைச் சிமிட்டிக்கொண்டே, தொடர்ந்து “கேசவாச்சாரியா, சவுரி ராஜனா?” என்றான்.

“ரெண்டுபேருமில்லை. ரோமாபுரி வீரன்” என்று கீதா பதில் சொன்னாள். ராமேசன் சிரித்தான்.

-(ஆர்.சூடாமணியின் ‘இரவுச் சுடர்’ நாவல்: பக்கம்: 32-33) காலச்சுவடு.

© Y Chellappa  (email: chellappay@yahoo.com) 

வியாழன், செப்டம்பர் 11, 2014

( பதிவு 105) 1921 சுதேசமித்திரனில் வந்த பாரதியாரின் மரணச் செய்தி (அபுசிதொபசி - 43)

அபுசி –தொபசி -43 (11-9-2014)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக ஒவ்வொரு திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும். இடையில் திடீரென்று நின்றுபோனாலும், மீண்டும் வந்துவிடும்!)

அரசியல்

இன்று (செப்டம்பர் 11ஆம் தேதி) மகாகவி பாரதியின் நினைவுநாள். உண்மையில் அவரது மரணம் செப்டம்பர் 11ஆம் தேதி இரவு 1 மணிக்கு நேர்ந்தது. எனவே சரியான நினைவு நாள் செப்டம்பர் 12 தான்.

1921 செப்டம்பர் 12 திங்கட்கிழமை (துன்மதி வருடம், ஆவணி மாதம் 28 ஆம் தேதிய சுதேசமித்திரனில் 6ஆம் பக்கம், ‘நகரச் செய்திகள்’ பத்தியில், கடைசிச் செய்தியாக இது வெளிவந்துள்ளது:

“தென்னாட்டுக் கவிசிரேஷ்டர் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி மரணம்

ஒரு வாரமாக ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி தேகநோய் கொண்டு திருவல்லிக்கேணியில் அசௌக்கியமாயிருந்து, திடீரென்று நேற்று இரவு 1 மணிக்கு இம்மண்ணுலகைவிட்டு விண்ணுலகமடைந்தார். அவர் இறந்த செய்தி தெரிந்தவுடன் ஸ்ரீமான்களான புதுச்சேரி ஸ்ரீநிவாசாச்சாரியார், திருமலாச்சாரியார், ஹரிஹர சர்மா, கிருஷ்ணசாமி சர்மா, சின்னஸ்வாமி, நெல்லையப்பர், நீலகண்டன் முதலான பலர் வந்தனர். செய்ய வேண்டிய காரியங்களுக்கு ஆரம்பஞ்செய்து தகனக் கிரியையும் நடந்தது. ஹரிஹர சர்மா, கிருஷ்ணசாமி சர்மா முதலானவர்கள் பிரேதத்தைத் தாங்கிக் கொண்டு சுடுகாடு சென்று, ஆங்கு, தகனத்திற்குச் சற்று முன்னர் ஸ்ரீமான் சக்கரைச் செட்டியார், கிருஷ்ணசாமி சர்மா, இராமச்சந்திர அய்யர் இவர்கள் தமிழில் பேசிய பிறகு, சுரேந்திர நாத ஆர்யா தெலுங்கில் பேசினார். பாரதியார் இயற்றிய கீதங்கள் பாடின பிறகு தீ மூட்டப்பட்டது. பாரதியார் ஆவி நற்கதியடையும்படி எல்லோராலும் பிரார்த்திக்கப்பட்டது”.
 
 நன்றி: ரா.அ.பத்மநாபனின் சித்திர பாரதி
அதே நாள் ‘சுதேசமித்திரன்’ தனது இரண்டாம் தலையங்கத்தில் எழுதியதிலிருந்து சில வரிகள்:

“மக்கள் வாழ்வு நீர்மேல் குமிழிபோலும்! தமிழ்நாடு போற்றும் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் இவ்வுலக வாழ்வை நேற்றிரவு துறந்து விண்ணவருக்கு விருந்தாகி விட்டார் என்ற செய்தியை அறிவிக்க நமது மனம் பதறுகிறது. சில தினங்களாக  நோயினால் வருந்திக் கொண்டிருந்த அவரை மறுபடியும் ஸ்தூல சரீரத்தில் பார்க்கப் போகிறதில்லை என்று நாம் நினைக்கவில்லை. திங்கட்கிழமையன்று ‘மித்திரன்’ வேலைக்கு வந்து விடுவதாகச் சில தினங்களுக்கு முன் சொல்லி யனுப்பிய அவர் திங்கட்கிழமையன்று சாம்பலாகி விட்டது என்ன கொடுமை!  39 வயதுக்குள் தமது கவித்திறமையாலும் தேசபக்தியாலும் தமிழ் நாட்டை வசப்படுத்தி விட்ட இச் சிறு பிள்ளையின் பிரிவை தமிழ் நாடு எப்படி சகிக்குமோ அறியோம். அன்பே உருவெடுத்தாற்போன்று விளங்கிய அவரைப் பிரிந்து அவரது மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் எப்படிப் பொறுத்திருப்பாரோ கொடிய எமனுக்குத்தான் தெரியும். ............அவருடைய ஞாபகத்தைப் பாராட்டி பகல் இரண்டு மணியுடன் வேலை நிறுத்தப்படுகிறதால் ஏற்பட்ட சமாச்சாரங்கள் இன்று மித்திரனில் பிரசுரமாகமாட்டா.”
 
மகாகவியின் நினைவாக நான் எப்போதோ எழுதிய கவிதையின் ஒரு பகுதி:

வறுமைத் தீயிலும்
வண்ணம் குலையாத
பாரதியாரின் இறப்புச் சான்றிதழ்
நன்றி: சித்திர பாரதி
சொக்கத் தங்கம் பாரதி..!

யாரைப் பிடிக்கவும்
எருமையில் வருபவன்,
இவனைப் பிடிக்க
யானையை அனுப்பினான்!

ஆனால்,
மரணம் வந்ததும்
செத்துப் போய்விட

பாரதி என்ன
வேடிக்கை மனிதனா?

ஆயிரம் யுகங்கள்
சாதிக் கிறதை
ஆண்டுகள் சிலதில்
புரிந்த வன் அவன்!

ஒரு தேவ ரகசியம்
மானிட பூமியில்
விரியலானதே அவன்                                     
வாழ்க்கைச் சுருக்கம்!
   (‘எட்டயபுரத்து மீசைக்காரன்’ ப.42)

புத்தகம்

பாலகுமாரனை அறியாதவர் உண்டோ? இன்பச்சுவை ததும்பும் கதை எழுதுவதில் எவ்வளவு வல்லவரோ அதே வல்லமையை ஆன்மிக எழுத்திலும் கொண்டுவரும் திறம் படைத்தவர் பாலகுமாரன். அவருடைய ‘காலடித் தாமரை’ என்ற நூலை இன்று மீண்டும் படித்தேன். காலடியில் அவதரித்த ஆதி சங்கரரின் வரலாறு. இன்னும் படிக்காதவர்களுக்காக இதோ ஒரு சிறு பகுதி: (ப.80)

துறவறம் பூண விரும்பிய சிறுவன் சங்கரனிடம் தாயார் ஆர்யாம்பாள் சொல்கிறார்:

“எனக்கு நீ ஒரே பிள்ளை. உனக்கு நான் ஒரே உறவு. இதையும் உதறிவிட்டு நீ போனால் நல்லதா, எனக்கு ஒரு வழி சொல்லி விட்டுப் போ. யார் எனக்கு நீத்தார் கடன் செய்வார்கள் என்று ஏற்பாடு செய்துவிட்டுப் போ. இதை யார் செய்ய முடியும் சங்கரா. உன்னைத் தவிர வேறு யார் செய்ய முடியும்?...”


பிள்ளை கண் மூடினான். மனம் குவித்தான். மெல்ல பேசத் துவங்கினான். “உலகத்தில் ஒரு மனிதனுக்கு மிகப் பலமான பந்தம் தாய்தான். பத்து மாதம் தன் கருவுக்குள் ஒருவனைச் சுமந்து அவனை நன்றிக்கடன்பட ஒரு தாய் வைத்திருக்கிறாள். தன் ரத்தத்தை பாலாக்கி அவனுக்கு ஊட்டி அவனை வளர்க்கிறாள். இந்த இரண்டு காரணங்களுக்காகவும் ஒவ்வொரு மனிதனும் தாய்க்கு நன்றிக்கடன் படுகிறான். அவள் எத்தகையவளாக இருந்தாலும் அவளுக்குப் பதிலுக்கு நன்மை செய்ய வேண்டிய அவசியம் உள்ளவனாக இருக்கிறான். எனவே நான் சந்நியாசியாக ஆனாலும், துறவு மேற்கொண்டு எங்கு அலைந்தாலும், என்ன செய்துகொண்டிருந்தாலும், உன் அந்திம வேளையில் கண்மூடி என்னை நீ நினைத்துக் கொண்டிருக்கிறபொழுது நான் இங்கே ஓடி வருவேன். உன் அருகே இருப்பேன். உனக்கு அருகே இருந்து உன்னுடைய பிராணன் போகிறபோது உன் காதிலே நான் நாராயண மந்திரம் சொல்வேன். நெஞ்சில் கை வைத்து, சிரசில் கை வைத்து நான் உன்னை உனக்குள் செலுத்துவேன். பிறவியில்லாமல் உன்னை இந்தப் பூமியிலிருந்து முற்றிலுமாய் அகற்றுவேன்.  உன் பூத உடலுக்கு அந்திமக் கிரியைகள் செய்வேன். நன்கு தகனம் செய்வேன். நீத்தார் கடன்கள் செய்வேன். உனக்கு வானுலகம் போக வழி காட்டுவேன்.

“மரணம் பற்றிய எந்தக் கவலையும் உனக்கு வரவேண்டாம். இந்தக் கணத்திலிருந்து அதைத் தூக்கிப் போட்டுவிடு.- உன் மரணம் எப்பொழுது என்று நான் அறிவுறுத்துவேன். மரணம் பற்றிய பயத்திலிருந்து உன்னை விலக்குவேன். இதை சத்தியமாக உனக்கு சொல்கிறேன்” என்று கைதூக்கி சங்கரன் நிற்க, ஆர்யாம்பாள் புதுப்பொலிவு பெற்றாள். உள்ளுக்குள் திடம் பெற்றாள்.

எல்லோரும் சாகப் பயந்துதான் சாகிறார்கள். ஆர்யாம்பாளுக்கு மரணம் பற்றிய பயம் அப்பொழுதே அகன்று விட்டது.

“சரி போய் வா”. ஆர்யாம்பாள் கை கூப்பினாள்.

“என்ன, போய் வா என்று சொல்கிறாயே” சங்கரன் விழிகள் உயர்த்தினான்.

“ஆமாம், என் மரணத்தின்போது  இங்கு வருகிறேன் என்று சத்தியம் செய்தாய் அல்லவா, எங்கு போனாலும் இங்கு வருவாய் அல்லவா. அதனால் தான் நீ துறவியாகப் போகிறேன் என்று சொன்னாலும், போ என்று சொல்லாமல் போய் வா என்று சொல்கிறேன். மறுபடியும் இந்த கிராமத்திற்கு நீ வந்துதானே ஆக வேண்டும். போய் வா”.

அவள் விடை கொடுத்தாள். சங்கரர் தாயை வலம் வந்து நமஸ்கரித்தார்... (அவரது பயணம் ஆரம்பமாகிறது.)

காலடித் தாமரை – பாலகுமாரன். கிரி டிரேடிங் ஏஜென்சி வெளியீடு. (2002). 224 பக்கம் ரூபாய் 50.

(புத்தகம் வாங்கும்போது சில கைக்குட்டைகளையும் வாங்கிவிடுங்கள். வழியும் கண்ணீரைத் துடைக்காமல் பாலகுமாரனைப் படிக்க முடியுமா!)

சினிமா
சக பதிவரான கேபிள் சங்கரின் இயக்கத்தில் ‘தொட்டால் தொடரும்’ என்ற படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. நீண்ட நாளைக்குப் பிறகு தியேட்டருக்குப் போய் நான் பார்க்கவிருக்கும் படம் அதுவாகத்தான் இருக்கும். இதற்கிடையில் ‘பாஸு, பாஸு‘ பாடல் மிகவும் பிரபலமடைந்துவிட்டதாமே!

இதற்கிடையில் இன்னொரு சக பதிவரான குடந்தை ஆர் வி சரவணன் தனது குறும்படத்தை எடுத்து முடித்திருக்கிறார். அவருடன் கோவை ஆவியும் ‘தில்லைஅகத்து’ துளசிதரனும் நடித்திருக்கும் இப்படத்தின் பிற வேலைகள் முடிய ஒரு மாதம் ஆகலாம் என்கிறார்கள். அதையும் பார்க்கவேண்டும்.

தொலைக்காட்சி
இரண்டு மாதங்களாக ‘டைம்ஸ் நௌ’ டிவி பார்ப்பதை நிறுத்திவிட்டேன். அர்னாப் கோஸ்வாமியின் திமிர்க்கூச்சல்களை இனியும் கேட்க எனக்குப் பொறுமை இல்லை. காது உடைந்துபோகும் அளவுக்குக் கத்த வேண்டிய அவசியம் என்ன என்று புரியவில்லை. மனிதன் எப்போதுதான் திருந்துவாரோ! இவரைக் கிண்டல் செய்யும் விதமாக என்.டி.டிவி-யில் “You need not shout to be heard” என்று போடுகிறார்கள். இத்துடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் ‘புதிய தலைமுறை’க்கும்  ‘தந்தி டிவி’க்கும் கோவில் கட்டிக் கும்பிடலாம்.

பத்திரிகை

‘மஞ்சரி’யில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் எழுதும் கேள்வி-பதில் பகுதி சுவையானது. இந்த மாதம் (செப்டம்பர் 2014) இடம் பெற்றுள்ள ஒரு கேள்வி:

வெட்டிவேலை, வேலைவெட்டி –இச் சொற்றொடர்களின் வேறுபாடுகள் எவை?

பதில்: என்னுடைய நண்பர் கோவை தமிழாசிரியர், ‘தையல்காரர்கள்’ குறித்து ஓர் அழகான கவிதை சொன்னார்:

தையல்காரர்கள்
வேலைவெட்டி இல்லாமல்
வெட்டி வேலை செய்பவர்கள்

இந்தக் கவிதையின் வார்த்தை விளையாட்டு மிக அழகாக அமைந்துள்ளது. பொதுவாக பலசரக்குக் கடைகளில், உணவகங்களில் யாரும் பொருள் வாங்க, சாப்பிட வரவில்லைஎன்றால் அந்தக் கடைகளில் இருப்பவர்கள் வேலையில்லாமல் வெட்டியாக (சும்மா) உட்கார்ந்திருப்பார்கள்.


ஆனால் தையல்காரர்கள் மட்டும் எப்போதும் தைத்துக்கொண்டோ, வெட்டிக்கொண்டோ இயங்கிக்கொண்டே இருப்பார்கள். அதனால்  ‘வேலைவெட்டி’ என்கின்ற சொல், ‘வெட்டிவேலை’ என்று சொல்லப்படுகிறபோது உயிர்பெறுவதைப் பார்க்கிறோம்.

இதுதவிர தமிழ் பேச்சுவழக்கில் இதுபோன்ற பல சொற்கள் உண்டு. வீடுவாசல், நிலம்நீச்சு, கடன்கப்பு போன்ற சொற்களையும் ஆராய்ச்சி செய்யலாம்.

சிரிப்பு / சிந்தனை

தூங்கும்போது பார்ப்பது கனவல்ல, உங்களைத் தூங்கவிடாமல் அடிப்பதே கனவு. – டாக்டர் அப்துல் கலாம்.

© Y Chellappa  (email: chellappay@yahoo.com).