தொண்ணூறுகளில் நான் புதுடில்லி கரோல்பாகில் பணியாற்றியபோது தில்லித் தமிழ்ச்சங்கத்தில் மிகுந்த தொடர்புடையவனாக இருந்தேன். அப்போது அறிமுகமானவர் நாக. வேணுகோபாலன்.
எங்கள் இரண்டாம் தலைமுறைகள் அமெரிக்கா வந்துவிட்ட நிலையில், நியூஜெர்சியில் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.
தமிழ்ப் புத்தாண்டு தினமான 2013 - ஏப்ரல் 14ம் தேதி விருந்துக்கு வந்தார், மனைவி, மகன், மருமகள், பேத்தியுடன். இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. (முன்னதாக ஒரு நாள் நாங்களும் அவருடைய மகன் இல்லத்தில் அதே இரண்டுமணி நேரம் செலவிட்டோம்).
நாக. வேணுகோபாலன் சென்னை லயோலாக் கல்லூரியில் படித்தவர். (பச்சையப்பா என்று முன்பொருமுறை நான் எழுதியது சரியில்லை). ‘லயோலா மண்ணில் தமிழ் விளையாது’ என்று எல்லாரும் சொல்லிக்கொண்டிருந்த வசைமொழி இவரால் பொய்த்தது. சட்டக் கல்லூரியில் நடந்த அனைத்துக் கல்லூரி பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வென்று அதனால், கல்லூரிகளுக்கான சுழற்கோப்பையை லயோலாவுக்குப் பெற்றுத் தந்தார், வேணு. (அதே ஆண்டு கட்டுரைப்போட்டியில் இதே சாதனையை இவரது அறை நண்பர் பெரி.சாத்தப்பன் நிகழ்த்தினாராம்).