நல்ல நூல்கள் அறிமுகம்-(ஆங்கிலம்) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நல்ல நூல்கள் அறிமுகம்-(ஆங்கிலம்) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜனவரி 18, 2017

பணமா சாபமா ?


பதிவு 04/2017 

பணமா சாபமா?

காகிதப் பணத்தைச் செலாவணியில் இருந்து அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதா?

சிறிய தேவைகளுக்குப் பயன்படும் பொருட்டு, சில குறைந்த மதிப்புள்ள நோட்டுக்களை மட்டும் இருத்திக்கொண்டால் போதும், அவற்றையும் நாணயங்களாக வெளியிடுவதே நல்லது  என்ற நிலைமைக்கு நமது பொருளாதாரம் தயாராகி விட்டதா?

“ஆம்” என்றுதான் சொல்லவேண்டும், என்கிறார் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர், கென்னத் ரகாஃப், சில மாதங்களுக்கு முன் வெளியான  தனது CURSE OF CASH என்ற புத்தகத்தில்.

இந்தியாவில் உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழக்கம் செய்யப்படுவதற்குச் சில மாதங்கள் முன்புதான் இந்தப் புத்தகம் வெளியாகியது என்பதால், தில்லியின் செயலுக்கு இப்புத்தகத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் உந்துதலாக இருந்திருக்கலாம் என்றால் மிகையில்லை.

அதற்கு இன்னொரு காரணமும் உண்டு: கென்னத் ரகாஃப், இதற்கு முன்பாக ஐ.எம்.எப். (இன்டர்நேஷனல் மானிட்டரி பண்ட்) - இன்  தலைமை பொருளாதார அறிஞராக (சீஃப் எக்கனாமிஸ்ட்) இருந்தவர். உயர்மதிப்புள்ள பணத்தாள்களைச் செலாவணியில் இருந்து அகற்றவேண்டும் என்பதை நீண்ட நாட்களாகவே எடுத்துச் சொல்லிவந்தவர்.

பொருளாதார மாணவர்கள் மட்டுமின்றி அனைவருமே விவாதிக்கவேண்டிய புத்தகம் இது என்பது என் கருத்து.

பணத்தாள் மதிப்பிழக்கத்தால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய ஆரம்பகாலச் சிரமங்களைப் பார்க்கிலும், நாட்டிற்கு ஏற்படக்கூடிய நன்மைகள் ஏராளம் என்கிறார். 

கண்ணுக்குத் தெரியாத வழிகளில், பெயர் தெரியாத மனிதர்களால் மிகப் பெரிய தொகைகள், நாட்டிற்கு உள்ளேயும் நாடுகளுக்கு இடையேயும் பரிவர்த்தனை ஆகிக்கொண்டுதான் இருக்கின்றன. எத்தகைய முன்னேற்பாட்டினாலும் இப்பரிவர்த்தனைகளைத் தடுக்க முடியவில்லை. இவற்றால் சம்பந்தப்பட்ட நாடுகளின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் நெருக்கடிகள் ஏராளம். இப்பரிவர்த்தனைகள் பெரும்பாலும் உயர்மதிப்பு பணத்தாள்கள் மூலமே நடைபெறுகின்றன. இதற்கென்றே சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு வெளியே சதிக்குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. போலியான பணத்தாள்களை அசல்போலவே அச்சிடும் உயர் தொழில்நுட்பம் இவர்களிடம் உண்டு. ஆகவே,   பணத்தாள் மதிப்பிழக்கத்தை அமல்படுத்துவதன் மூலம் இச்சதிக் குழுக்களின் இரத்த ஓட்டத்தை நிச்சயம் கட்டுப்படுத்தமுடியும்.

எதிர்பார்க்கும் வெற்றியில் பாதி கிடைத்தாலும் அதனால் நாட்டின் பொருளாதாரம் பெறக்கூடிய நீண்டகாலப் பயன்கள் அதிகம் என்கிறார் ஆசிரியர்.

உயர்மதிப்புள்ள பணத்தாள்கள்,  பொதுமக்களிடம் தொடர்ந்து செலாவணியில் இருப்பதில்லை. வெளிவந்த உடனேயே, பெருமளவில் கறுப்புச் சந்தைக்குச் சென்றுவிடுகிறது. 

அதில் ஒரு பகுதி, தங்கம், வைரம், பிளாட்டினம் போன்ற உலோகங்களிலும், இன்னொரு பகுதி நிலங்கள், கட்டிடங்கள் போன்ற அசையாச் சொத்துக்களிலும் வேறொரு பகுதி, வரி செலுத்தாமல் புழங்கும் சந்தைப் பொருட்களிலும் (அல்லது, போதை மருந்துகளிலும் தீவிரவாதிகளுக்கான ஆயுதங்களிலும்) முதலீடு செய்யப்படுகிறது. 

எஞ்சியுள்ள பணம், ரொக்கமாகவே கட்டில்களுக்கு அடியிலும், குளியலறைச் சுவர்களிலும் பதுக்கப்பட்டு அதன் ஒரு பகுதி கரையான்களுக்கு உணவாகவும் பயன்படுகிறது. 

எனவே, உயர்மதிப்புள்ள பணத்தாள்களால் அரசுக்குக் கிடைக்கவேண்டிய வரியானது மிகப்பெரும் அளவில் ஏய்க்கப்படுவது தெளிவு. அப்படி இழந்த வரியில் பத்து அல்லது பதினைந்து சதவிகிதம் திரும்பிவருமானாலும் போதும், பணத்தாள் மதிப்பிழப்பு நடவடிக்கையை அது நியாயப்படுத்தியதாகும்.

ஐரோப்பாவில் 5௦௦ யூரோ மதிப்புள்ள நோட்டுக்களை வெளியிட ஆரம்பித்தவுடன், அமெரிக்காவில் பெரிய கேள்வி எழுந்தது. அதுவரையில் 1௦௦ டாலர் நோட்டு தான் அமெரிக்காவில் இருந்த உயர்மதிப்பு நோட்டாகும். உடனே  5௦௦ டாலர் நோட்டு வெளியிடாவிட்டால், அமெரிக்காவிலுள்ள பணக்காரர்கள் தங்கள் பணத்தை 5௦௦ யூரோக்களாக மாற்றிக்கொள்ளும் அபாயம் நேரும் என்று எச்சரிக்கப்பட்டது.  ஏனோ அந்த எச்சரிக்கை ஏற்கப்படவில்லை.

ஆனால், அரசாங்கங்கள் எதற்காக இன்னமும் உயர்மதிப்பு நோட்டுக்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுவதான தொழிலில் அரசுகளுக்கு  நிகர லாபம் கிடைப்பதே  என்று ஆசிரியர் கூறுகிறார். இந்த லாபத்தை (SEIGNIORAGE) மொத்த உள்நாட்டு உற்பத்தி   (GDP) யின் விகிதமாகக் கூறுவார்கள். 2006-2015 காலகட்டத்தில் அமெரிக்காவில் இந்த லாபம், 0.44% of GDP, ஆஸ்திரேலியாவில் ௦.25%, சிங்கப்பூரில் 0.62%, ரஷியாவில் 1.37% (உலகிலேயே அதிகம்). ஸ்வீடனில் இது நெகடிவ் ஆக இருந்தது. -0.06%.

(இந்தியாவில் நோட்டுக்களை அச்சடிக்க ஆகும் செலவு பற்றி ரிசர்வ் வங்கி வழங்கிய விவரம் இது: 

    ரூ.1- (ரூ.0.785),   ரூ.10 –(ரூ. 1.220)
ரூ.20 – (ரூ.1.216),   ரூ.50 – (ரூ.0.864)
ரூ.100 – (ரூ.1.544)  ரூ.1000 – (ரூ.3.732)   

ஆதாரம்: Security Printing and Minting Corporation of India Limited, New Delhi vide: CHO(HR /RTI / 10-8/2016/ Vol.III /4655 dated 06.10.2016.

ஆனால், ரூபாய் நோட்டு அச்சடிப்பால் வரும் லாபம் என்ற இனம் ரிசர்வ் வங்கியால் தனியாகக் கணிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை.)

அமெரிக்காவில் இதே அச்சடிப்பு செலவு எவ்வளவு தெரியுமா? 1 டாலர் நோட்டுக்கு  0.049 டாலரும்,  100 டாலர் நோட்டுக்கு  0.123 டாலரும் தான். 1௦௦ டாலர் தான் அங்குள்ள மிகப்பரிய நோட்டு. (அதே சமயம் பொதுமக்களிடமிருந்து 1௦௦ டாலர் நோட்டைக் கடைக்காரர்கள் வாங்கத் தயங்குகிறார்கள்: கள்ள நோட்டுக்கள் அதிகமாகப் புழக்கத்தில் உள்ளதால்!)

ஆசிரியர் என்ன கூறுகிறார் என்றால், நோட்டுக்களை அச்சடிப்பதால் வரும் நிகர வருமானம் குறைந்துகொண்டே வருகிறது; அதே சமயம், உயர்மதிப்புள்ள பணத்தாள்கள் பதுக்கப்படுவதால் அரசுக்கு வரவேண்டிய வரி மிக அதிக அளவில் ஏமாற்றப்படுகிறது; அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படுகின்றன. தீவிரவாதிகளும் சமூக விரோதிகளும் செழிக்கிறார்கள். ஏழைகள் மென்மேலும் ஏழைகளாகவே நீடிக்கவேண்டி இருக்கிறது. அவர்களுக்குரிய சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கான வருவாய் கிடைக்காமல் அரசு தடுமாறுகிறது.

எனவே, குறைந்த மதிப்புள்ள பணத்தாள்களை மட்டும் விட்டுவிட்டு அதிக மதிப்புள்ளவற்றை ஒழித்தாகவேண்டும். ஆனால் அதைச் செய்வதற்கு முன், அரசாங்கம் செய்யவேண்டிய கடமைகள் உண்டு என்கிறார். அவையாவன:
  1. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக டெபிட் கார்டுகளும், கிரெடிட் கார்டுகளும் குறைந்த செலவில் வழங்க ஆவன செய்யவேண்டும். 
  2.  ரொக்கமில்லாப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கு மானியவிலையில் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படவேண்டும். 
  3.  மின்னணுப் பரிமாற்றத்திற்கென்று  வங்கிகளுக்குச் செலுத்தவேண்டிய கட்டணங்களை வெகுவாகக் குறைக்க வேண்டும். 
  4. சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் வங்கிக் கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்படவேண்டும். (financial inclusion.) 
  5. அரசாங்கம், மக்களுக்குத் தருகின்ற அனைத்து மானியங்களும், ஓய்வூதியம், சம்பளங்களும் பிறவும் வங்கிக்கணக்கு மூலமே வழங்கப்படவேண்டும்.

 ஆக, நமது நாட்டில் அமல்படுத்தியுள்ள உயர்மதிப்புள்ள பணத்தாள்கள் மதிப்பிழப்பு நடவடிக்கை, உலகளவில் பொருளாதார நிபுணர்களால் ஆலோசிக்கப்பட்ட வழிமுறைகளின்படியே நடந்தேறியுள்ளதை உணர முடிகிறது.
                 ********************** 

 பொதுமக்களை அதிகம் பாதிக்காமல் உயர்மதிப்புள்ள பணத்தாள்களை ஒழிக்கும் வழிமுறைகளைப் பற்றி ஆலோசிப்பதற்காக நடந்த கூட்டம் ஒன்றில் (2௦௦9) ஒரு ஆராய்ச்சி மாணவர் சொன்ன கருத்து இது: உதாரணமாக, 1௦௦ டாலர் நோட்டை ஒழிக்கவேண்டும் என்பது நோக்கமாக இருந்தால்:
  •          அதுவரை வெளியிடப்பட்ட அந்த நோட்டுக்களின் தொடர்வரிசை எண்களை அடிப்படையாக வைத்து மாதாந்திர லாட்டரி நடத்தப்படவேண்டும். வெற்றிபெறும் எண்ணை வைத்திருப்பவருக்கு பத்தாயிரம் டாலர் பரிசு வழங்கலாம். தெளிவாகச் சொல்வதென்றால், ‘A’ என்ற எழுத்தை முதலாவதாகக் கொண்ட எண்களின் மீது ஜனவரிமாதம் லாட்டரி நடத்துவது. ஒருவருக்கு மட்டும் பத்தாயிரம் பரிசு; ‘A’ வரிசையின் மற்ற எண்களைக் கொண்ட நோட்டுக்கள் அனைத்தும் உடனடியாக மதிப்பிழந்துவிடும். (வங்கிகளில் சென்று அடுத்த ஒரு மாதத்திற்குள் மாற்றிக்கொள்ளலாம்.)
  •           பிப்ரவரி மாதம், ‘B’ எழுத்தை முதலாவதாகக் கொண்ட எண்களின் மீது லாட்டரி நடத்துவது; ஒரு நோட்டுக்கு மட்டும்  பத்தாயிரம் டாலர்; மற்ற நோட்டுகளுக்கு நாமம். (ஆனால் வங்கிகளில் சென்று அடுத்த ஒரு மாதத்திற்குள் மாற்றிக்கொள்ளலாம்.)
  •          இப்படியே, ஒரு வருடத்திற்குள் அனைத்து நோட்டுக்களும் ஒழிக்கப்படும்.

·         மேற்படி ஒரு வருடத்திற்குள் வங்கிகளுக்குள் வந்துசேராத நோட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்படும். அதாவது, ஒரு வருடத்திற்குப்பின் வந்தால், ஒவ்வொரு நூறு டாலருக்கும் ஐந்து டாலர் அபராதம் (என்பது போல்) வைக்கலாம்.

மேற்படி ஆலோசனையை வெளியிட்டவுடன் அந்த மாணவரின் ஆசிரியருக்குக் கிடைத்த “பாராட்டு”க்கள் கொஞ்ச நஞ்சமா? அவரைப் பதவியிலிருந்து தூக்குங்கள் என்று ஹார்வர்டு பல்கலைக்கு அழுத்தம் தரப்பட்டதாம்...
*******

கென்னத் ரகாஃப் -இன் CURSE OF CASH நூலில் மேலும் பல அரிய தகவல்கள் அடங்கியுள்ளன. MBA, MA -Economics, Public Finance, MCom பயிலும் மாணவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய நூல் இது.

உதாரணமாக, ஆண்டுக்கு இரண்டுமுறை, ரிசர்வ் வங்கியானது தனது வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கிறது. இதற்கான அடிப்படைக் கோட்பாடு என்னவென்று தெரியுமா?

        i = x + (0.5)(pi-2) + (0.5) y  (original Taylor’s formulation)

இதில் ‘i’ என்பது ரிசர்வ வங்கி அறிவிக்கப்போகும் வட்டிவிகிதம்.
‘x’ என்பது, நடப்பிலுள்ள வட்டிவிகிதம்.

‘pi’ என்பது (அடுத்த அரையாண்டில்) எதிர்பார்க்கப்படும் பணவீக்க விகிதம்.

‘y’ என்பது, நாட்டின் மொத்த உற்பத்தியில், ‘முழு வேலை’ (total employment) இன்மையால் குறைந்துபோன உற்பத்தி யளவு.
ஜேனட் எல்லன்

தற்போது IMF தலைவியாக இருக்கும் ஜேனட் எல்லன் (Janet Yellen) இதில் சிறிய மாற்றம் செய்கிறார்:

        i = x + (0.5)(pi-2) +  y   (Yellen’s preferred  formulation)

(இதெல்லாம் நமக்கு அதிகப்படி என்று தோன்றுகிறதல்லவா? நிறுத்தி விடுகிறேன்.)

 -    இராய செல்லப்பா , நியூ ஜெர்சி.


Curse of Cash - Kenneth S. Rogoff  (Princeton  Press, 2016$ 29.95

வியாழன், ஆகஸ்ட் 08, 2013

அமெரிக்காவுக்கு விடிவு காலம் உண்டா? (“வீழ்ச்சியின் விதிகள் ஐந்து”)


“ரொம்பக் கவலையாக இருக்கிறது” என்கிறார்கள் விவரம் அறிந்த இரு மேலாண்மை அறிஞர்கள்.

அமெரிக்கா இன்று வேகமாகத் திவால் ஆகிக் கொண்டிருக்கிறது. ட்ரில்லியன் கணக்கில் வாங்கியிருக்கும் கடனுக்குச் செலுத்த வேண்டிய வட்டி தான், அமெரிக்க பட்ஜெட்டில் மிகப் பெரிய செலவினமாக உள்ளது. சமூகநலம் என்ற பெயரால் நாடு ஏழ்மையானதொரு தலைமுறையை உருவாக்கி விட்டிருக்கிறது. சுயமரியாதை என்பதே பெரும்பாலும் தொலைந்துபோய் விட்டது. நாட்டின் கடன்மதிப்பீடு கீழிறக்கப்பட்டு விட்டது. உலகில் யார் எங்கு சண்டையிட்டாலும் ஓடிப்போய்க் காவலுக்கு நிற்கிற போலீஸ்காரனின் நிலைமை தான் இன்று அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் தாங்கள் ஏதோ ஒரு மாற்றத்தைக் கொணர்ந்துவிட்டதாக அமெரிக்கர்கள் எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் ஆள் மாறினாலும் ஆட்சி மாறினாலும் நாடென்னவோ தவறான திசையில் மட்டுமே பயணித்துக்கொண்டிருக்கிறது.

புதன், ஜூலை 31, 2013

தாகூரின் கையெழுத்தில் ‘கீதாஞ்சலி’ – ஓர் அபூர்வ வெளியீடு


 வங்காள மொழியில் ரவீந்திரநாத தாகூர் எழுதி, நோபல் பரிசு பெற்ற கவிதை நூல் “கீதாஞ்சலி”. இதை, அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1912 நவம்பர் மாதம் லண்டனில் வெளியானது. அங்குள்ள “இந்தியா சொசைட்டி” இதனை வெளியிட்டது. முதல் பதிப்பில் 750 பிரதிகள் அச்சிட்டதாகவும், அதில் 250 பிரதிகள் மட்டுமே விற்பனைக்கு விடப்பட்டிருப்பதாகவும் அதில் குறிக்கப்பட்டிருந்தது. 

செவ்வாய், மே 14, 2013

சந்தையில் விற்கும் தார்மிகம்
WHAT MONEY CAN’T BUY
by Michael J Sandel

ஓர் அறிமுகம்


சீனாவில் மா-சே-துங் ஆட்சிக்காலத்தில் இருந்து (1979 முதல்) அமுலில் உள்ள ஒரு சட்டம், நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் இரண்டாவது குழந்தை பெற அனுமதி மறுக்கிறது. கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு மட்டும், முதல் குழந்தை பெண்ணாக இருந்தால்,  இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளத் தடையில்லை. இதன் விளைவு என்ன? இரண்டாவது முறையாக கருவுற்ற நகரத்துப் பெண்டிர், கிராமங்களுக்குச் செல்லலாயினர். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் கிராமத்தில் பிழைப்பதற்கு வழி வேண்டுமே! மேலும், பிள்ளை பெறும் பொருட்டே இவர்கள் இடம் மாறினார்கள் என்பது நிரூபிக்கப்பட்டால் தண்டனையும் கிடைக்கலாம்.

எந்த விதிக்கும் ஒரு விலக்கு உண்டல்லவா? அது தான் அபராதம். நகரத்துப் பெண்டிர் இரண்டாவது முறையாகக் கரு தரிக்க நேரிட்டால், அபராதமாக இரண்டு லட்சம் யுவான் செலுத்த வேண்டும். அதாவது 31,000 டாலர்கள்.

பணம் படைத்தவர்களுக்கு இது சாதகமாக அமைந்து விட்டது. இரண்டாவது முறை கரு தரித்தல் பற்றி சிறு சந்தேகம் இருந்தாலும் இவர்கள் முன்கூட்டியே இந்த அபராதத்தைச் செலுத்திவிடுவார்களாம். (குழந்தை பிறக்கவில்லையென்றால் திரும்பக் கிடைக்குமா என்பது பற்றி தகவல் இல்லை).   

வியாழன், மே 09, 2013

அமெரிக்காவின் புதிய மதம்:
“ஸயண்ட்டாலஜி சர்ச்”
SCIENTOLOGY CHURCH


“பூமியில் எப்பொழுதெல்லாம் தர்மம் குலைந்து நல்லவர்கள் துன்பமடைகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்களைக் காக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் நான் அவதாரம் எடுக்கிறேன்” என்று கீதையில் கண்ணன் அர்ச்சுனனுக்குக் கூறுகிறான்.

அதன்படி, கலியுகத்தில் ‘கல்கி’  அவதாரம் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த மக்களிடம், “நானே கல்கி” என்று பெருத்த விளம்பரத்துடனும் அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவுடனும் ஒரு பெரியவர் தம்பதி சமேதராய் அழகான ஆங்கிலத்தில் பேசி, ஞாயிறுதோறும் தொலைக்காட்சிகளில் அதிக  டி.ஆர்.பி. ரேட்டிங் பெற்றதை மறந்திருக்க மாட்டீர்கள்.

கிறித்தவ மதத்திலும் இந்த நம்பிக்கை உண்டு. ‘ஏசு வருகிறார்’ என்று பல சுவர்களில் எழுதியிருப்பதைச் சென்னை மின்சார ரயிலில் பயணிப்பவர்கள் அடிக்கடி பார்க்கமுடியும்.

வெள்ளி, மே 03, 2013

தலாய் லாமா - புதிய நூல்கள் 2

இன்று ஜான்ஸன் நூலகத்திற்கு (ஹேக்கன்ஸாக், நியுஜெர்சி) சென்ற பொழுது திபெத்தின் முன்னாள் அதிபரும், புத்தமதத் தலைவருமான மதிப்பிற்குரிய தலாய் லாமா அவர்களைப் பற்றிய இரண்டு புதிய நூல்கள் படிக்கக் கிடைத்தன.

முதலாவது நூல் - “கருணையென்னும் ஞானம்”
The Wisdom of Compassionby  Victor Chan - 2012 River Head Books
இந்த நூல், தலாய் லாமாவின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவதாகும். அறிஞர்களுடனும், மாணவர்களுடனும் அமெரிக்க, இந்தியா, கனடா, அயர்லாந்து முதலிய நாடுகளில் அவர் பங்குபெற்ற உரையாடல்களின் சிறப்பு அம்சங்கள் தரப்பட்டுள்ளன.

மதம் என்ற ஒன்றை அவர் தனது உரைகளில் எங்குமே தொடவில்லை. ஞானத்தின் குறிக்கோள், கருணையே என்கிறார். எவனொருவன் தன்னிலும் கீழானவனுக்கு இரக்கம் காட்டுகிறானோ அவனே மனிதன். அவனே இறைமையைப் புரிந்துகொண்டவன் என்கிறார். இதயத்தைத் திறந்து வைத்தால் இன்பமும் திருப்தியும் கொண்ட வாழ்க்கையைப் பெறுவது அனைவருக்கும் இயலும் என்கிறார்.

வியாழன், ஏப்ரல் 04, 2013

என்றும் அழகான ஏழ்மைப்புரங்கள் - காத்தரீன் பூ(Boo)

இன்று அறிமுகத்திற்கு எடுத்துக்கொண்டுள்ள ஆங்கில நூல், 2012ல் எழுதப்பட்டு, வெளியாகி, ‘நியூயார்க் டைம்ஸ்’ பட்டியலின்படி 2013ல் தொடர்ந்து 12 வாரங்களாக முதல் இருபது இடங்களுக்குள் இருக்கும் ஒரு நூல். “Behind The Beautiful Forevers : life, death and hope in a Mumbai undercity”.  “என்றும் அழகான ஏழ்மைப்புரங்கள்” என்று மொழிபெயர்க்கலாம். (சேரி என்னும் பொருள்படும்  Slums  என்பதைக் குறிக்க ‘ஏழ்மைப்புரங்கள்’ என்ற புதிய சொல்லை நான் உருவாக்கியிருக்கிறேன். பரவாயில்லையா?)
 
காத்தரீன் பூ (Katherine Boo) 48 வயது அமெரிக்கப் பெண்மணி. ‘நியூயார்க்கர்’ இதழில் 20 ஆண்டு பணிபுரிந்தவர். பத்தாண்டுக்கும் மேலாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழோடு நிருபர் மற்றும் வேறு பல பொறுப்புகளில் இருந்தவர். குறிப்பாக ஏழை மக்களைப் பற்றி எழுதுவதில் கவனம் செலுத்துபவர். ஏழ்மையைப் பறைசாற்றுவதோடு அவர்கள் எப்படி முன்னேறுகிறார்கள் என்பதையும் பதிவு செய்பவர்.