சாகித்ய அகாதெமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாகித்ய அகாதெமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜனவரி 05, 2015

பதிவு 2/2015 நூறு கவிஞர்கள் – ஆயிரம் ஹைக்கூக்கள்

பதிவு 2/2015

நூறு கவிஞர்கள் – ஆயிரம் ஹைக்கூக்கள்

நாரத்தங்காயை நறுக்கி உப்பிட்டு நிழலில் உலர்த்தி எடுத்துவைப்பார்கள். கன்னங்கரேலென்று ஆகிவிடும்.  இரண்டுவருடம் ஆனாலும் கெடாது. தயிர்ச்சோற்றுடன்  சாப்பிட்டால் விண்ணோர் அமுதமும் அதற்கு ஈடாகாது.

சாகித்ய அகாதெமிக்காக முனைவர் இரா.மோகன் தொகுத்தளித்த ‘தமிழ் ஹைக்கூ ஆயிரம்’ என்ற நூலைச் சென்ற வருடம் (2014) சென்னை புத்தகக் காண்காட்சியில் வாங்கினேன். இன்றுதான் படிக்க நேரம் கிடைத்தது. பழைய நாரத்தங்காய் ஊறுகாயை விடவும் சுவையான தொகுப்பு.

தமிழில் வெளியான  ஹைக்கூ கவிதை நூல்களில் நூறைத் தேர்ந்தெடுத்து, அவை ஒவ்வொன்றிலிருந்தும் பத்துக் கவிதைகளைப் பொறுக்கியெடுத்து ஆயிரம் ஹைக்கூ கொண்ட இந்நூலைத் தொகுத்திருக்கிறார், மோகன். (144 பக்கம்  விலை ரூ.90.)   வெளியீடு: சாகித்ய அகாதெமி. (சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்).

நூறு கவிஞர்களை நேருக்கு நேர் சந்திப்பதுபோன்ற அனுபவத்தைத் தருகிறது இந்நூல். ஆயிரம் கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் (நன்றியில்லாத) திருப்பணியை விடவும், மோகன் வழங்கியிருக்கும் அற்புதமான முன்னுரை மதிப்பு மிக்கது. ஹைக்கூ வின் தமிழ்நாட்டு நுழைவின் சரித்திரத்தை அவர் இப்படித் தருகிறார்:   

“1916இல் ‘ஹொக்கு’ என்ற பெயரால் தமிழுக்கு முதன்முதலில் அறிமுகம் செய்தவர் கவியரசர் பாரதியார். 1968ஆம் ஆண்டில் ‘நடை’ முதல் இதழில் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை முதன்முதலில் மொழிபெயர்த்துத் தந்தவர் கவிஞர் சி.மணி. 1970ஆம் வாக்கில் தமிழ் மரபுப்படி இக்கவிதைக்கு ‘சிந்தர்’ எனப் பெயர் சூட்டி, தமிழில் சோதனை முயற்சியாகச் சில ஹைக்கூ கவிதைகளையும் முதன்முதலில் எழுதி வெளியிட்டவர் –‘வாமனக் கவிதைகள்’, ‘மின்மினிக் கவிதைகள்’ என்ற பெயர்களையும் சூட்டி மகிழ்ந்தவர் – கவிக்கோ அப்துல் ரகுமான்; ‘ஜப்பானிய ஹைக்கூ’ (1987), ‘இதுதான் ஹைக்கூ’ (1990) என்ற இரு நூல்களை வெளியிட்டு ஹைக்கூ கவிதையின் வளர்ச்சிக்கு அயராது பணியாற்றியவர் முனைவர் தி.லீலாவதி; 1984-ஆம் ஆண்டில் ‘புள்ளிப் பூக்கள்’ என்ற முதல் தமிழ் ஹைக்கூ கவிதைத் தொகுதியை வெளியிட்டவர் ஓவியக் கவிஞர் அமுதபாரதி; தொடர்ந்து 1985-ஆம் ஆண்டில்  ‘ஜப்பானிய ஹைய்கு வடிவக் கவிதைகள்’ என்ற அறிமுகக் குறிப்போடும், ‘வாசல் ஓர வாசகம்’ என்ற பதினான்கு பக்க ஆய்வு முன்னுரையோடும் ‘சூரியப் பிறைகள்’ என்னும் தொகுப்பினை வெளியிட்டவர் முன்னணிக் கவிஞர் தமிழன்பன்; 1988-ஆம் ஆண்டில் இலங்கையில் ‘கூடைக்குள் தேசம்’ என்ற தலைப்பில் முதன்முதலாகத் தமிழில் ஹைக்கூ வடிவக் கவிதைத் தொகுதியை வெளியிட்டவர் சு.முரளிதரன். இன்று தமிழில் இருநூற்றுக்கு மேற்பட்ட ஹைக்கூ கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன....”   

“ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளில் இயற்கையின் தரிசனமும், தத்துவப் பார்வையும், படிமப் பாங்கும் சிறப்பிடம் பெற்றுள்ள நிலையில், தமிழ் ஹைக்கூ கவிதைகளில் இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகளும், அன்றாட நடைமுறை வாழ்க்கை அனுபவங்களும் முதலிடம் பெற்றுள்ளன...சுருங்கக் கூறின், அங்கதம், முரண், நகை ஆகிய மூன்று சுவைகளும் ஒன்று சேர்ந்த ‘திரிவேணி சங்கமம்’ ஆகத் தமிழ் ஹைக்கூ கவிதைகள் காட்சியளிக்கின்றன....”

தமிழ் தெரிந்த அனைவர் கையிலும் இருக்கவேண்டிய முக்கியமான நூல் இது. ஆசிரியர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் மேற்கோள் காட்டுவதற்கு இனிமையான ஹைகூக்கள் ஆயிரம் ஒரே இடத்தில் வேறெங்கே கிடைக்கும்? இந்த அருமையான தொகுப்பை நமக்கு வழங்கிய முனைவர் இரா மோகனுக்கு நமது வாழ்த்துக்கள்!

இனி, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், ஆயிரத்திலிருந்து சில ஹைகூக்கள் இதோ உங்கள் பார்வைக்கு:   


ஒரு கன்னத்தில் அறைந்தான்
மறு கன்னத்தைக் காட்டினேன்
அங்கும் அறைந்தான்.
-கழனியூரன் (‘நட்சத்திர விழிகள்’ – 1990)

படித்துப் படித்துப்
பட்டம் வாங்கினோம்
எரியாத ஈரவிறகு.
-துறவி (‘சிறகுகளின் சுவடுகள்’-1993)

கருத்த பெண்
புகுந்தகம் வந்தாள்...
கலர் டிவியோடு!
-மு.முருகேஷ் (‘விரல் நுனியில் வானம்’-1993)

தென்றல் வீசுகிறது
அனுபவிக்க இயலவில்லை
நாளை இண்டர்வியூ.
-ஆர்.வி.பதி (‘ஹைக்கூ கவிதைகள்’-1994)

கல்லாகவே இருந்துவிடுகிறேன்
மிதித்து விடாதே
சுற்றிலும் இந்திரன்கள்
-ராஜ முருகு பாண்டியன் (‘ஹைகூப் பறவைகள்’ – 1994)

திண்ணையிலிருந்து
நிலவை ரசிப்போம்
தொலைந்தது வீட்டுச் சாவி.
-ராஜ முருகு பாண்டியன் (‘ஹைகூப் பறவைகள்’ – 1994)

பெண் பிறக்கட்டும்
குடும்பத்தோடு பிரார்த்தனை-
பிரசவ வலியில் பசு!
-நவதிலக் (‘பூக்கள் பறிப்பதற்கில்லை’ – 1994)

கார்காலம் வந்தது
பனிக்காலம் வந்தது
நல்ல காலம்?
-மாடப்பள்ளி ஜெயசீலன் (‘சுண்டு விரல்’ – 1998)

எதிலும் சந்தேகம்
போலியோ சொட்டு மருந்து
போலியோ?
-மாடப்பள்ளி ஜெயசீலன் (‘சுண்டு விரல்’ – 1998)

இறுக்கிக் கட்டுங்கள்
இடுப்பு வேட்டியை
போகுமிடம் சட்டசபை!
-கவிமுகில் (‘சூரியத் துளிகள்’ -1998)

பெண்பார்க்கும் படலம்
வீடு கடத்தப்பட்டாள்
அழகான தங்கை!
-பாரதி மணியன் (‘ஹைக்கூ 50’ – 1999)

ஓய்வெடுத்தன
பறவைகள்
உழைப்பாளர் சிலைமேல்
-ந.முத்து (‘எடை குறைவாய்...’ -1999)

பஷீர் வீட்டு
முருங்கைக் கீரை...
மாரியாத்தா கூழுக்கு!
-கா.ந.கல்யாணசுந்தரம் (‘மனித நேயத் துளிகள்’ – 1999)

திதி செய்ய மனமில்லை
இன்னும் வாழ்கிறாள்
மனதில் அம்மா!
-பால பாரதி (‘இதயத்தில் இன்னும்’ -2000)


தொலைந்த மோதிரத்தை
தேடினாள் சகுந்தலை
அடகு வைக்க.
-வண்ணை சிவா (‘ஒற்றைக் கல் சிற்பம்’ -2002)

பெண் உரிமை பற்றி
முழக்கமிட்டாள்
கணவன் அனுமதியுடன்.
-சோலை இசைக்குயில் (‘சூரியனுக்கு வெட்கமில்லை’ -2002)

இரவெல்லாம் குளித்தும்
கறை போகவில்லை
குளத்தில் நிலா.
-இளந்தென்றல் (‘ஊசித்துளை வழியே ஓர் ஊர்வலம்’ – 2003)

நிறையப் பேச நினைத்து
அமைதியாய் விழுந்தேன்
விழி ஈர்ப்பு விசை.
-ஆலா (‘உயிர் வேலி’ – 2003)

நெடுநேரமாய்ப் பேசும் நண்பன்
போகையில் கேட்பானோ...
கடன்!
-இரா.அ.தென்றல் நிலவன் (‘முதல் ரோஜா’ – 2003)

இரவுப் பேருந்துப் பயணம்
தூங்கவேயில்லை
சில்லறை பாக்கி.
-சு. சேகர் (‘முள்ளின் முகவரி’ – 2003)

சக்கையாய்ப் பிழிகிறான்
சாறு விற்பவன்
பாவம், கரும்பு.
-சி.கே.சந்திர மோகன் (‘அல்வாத் துண்டுகளும் சில அணுகுண்டுகளும்’-2004)

கோயிலில்
பக்தர்கள் கூட்டம்
நெரிசலில் கோரிக்கைகள்.
-ராஜசேகர் (‘நதியில் சிறகுகள்’ – 2004)

வீடு நிறையப் பொருள்
பெட்டி நிறையப் பணம்
அயல்நாட்டில் கணவன்.
-மரியா தெரசா (‘துளிப்பா தோப்பு’ – 2004)

இறந்த அப்பா
இன்னும் வழிகாட்டுகிறார்
அலமாரியில் புத்தகங்கள்.
-கம்பம் மாயவன் (‘மின்மினியின் வெளிச்சத்தில்’ -2005)

மகனின் கடிதத்தில்
என்றென்றும் அன்புடன்
காப்பகத்தில் தாய்.
-கன்னிக்கோவில் இராஜா (‘தொப்புள் கொடி’ – 2005)

கோட்டு சூட்டுடன்
திருஷ்டிப் பொம்மை
கோவணத்தில் தொழிலாளி.
-வெ.கலிவரதன் (‘ஒத்திகை’ – 2006)

நாற்காலியைத்
தூக்கியெறிந்து சண்டை
நாற்காலிக்காக.
-சி.விநாயக மூர்த்தி (‘புன்னகை மின்னல்’ -2007)

பேராசிரியர் இரா மோகன், 1972இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக அடியெடுத்துவைத்து, படிப்படியாக முன்னேறி பேராசிரியர் ஆனார். ஆட்சிக் குழு உறுப்பினராகவும் ஆனார். அண்மையில் ஓய்வு பெற்றவர். இதுவரை 88 நூல்களை வெளியிட்டிருக்கிறார். சாகித்ய அகாதெமியின் பொதுக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

(மேற்கோள் கவிதைகளை எழுதிய கவிஞர்களுக்குச் சிறப்பான வாழ்த்துக்கள்!)

-இராய செல்லப்பா, சென்னை.
(c)  Y Chellappa               
email: chellappay@yahoo.com

சனி, ஆகஸ்ட் 24, 2013

கதிர்பாரதிக்கு சாகித்ய அகாதெமியின் இளைஞர் இலக்கியப் பரிசு

கதிர்பாரதிக்கு சாகித்ய அகாதெமியின்  இளைஞர் இலக்கியப் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை 'யுவ புரஸ்கார்' என்று கூறுவர்.

கதிர்பாரதியின் 'மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்' என்ற கவிதை நூலுக்காக இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள ஓர் இளைஞருக்கு இப்பரிசு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

கதிர்பாரதி இப்போது கல்கியில் பணியாற்றி வருகிறார்.

'மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்' பற்றி நான் ஏற்கெனவே அவருடைய தளத்தில் கருத்து தெரிவித்திருக்கிறேன். அந்த நூலில் சில சிறந்த கவிதைகள் இடம் பெற்றுள்ளன என்பதில் ஐயமில்லை.

முக்கியமாக கிராமப்புறத்தில் தமிழ் மீடியத்தில் பயிலும் மாணவர்களுக்குப் புரியக்கூடிய மொழி நடையில் அதிகமான  கவிதைகள்  இடம் பெற்றிருக்கலாம் என்பது என் கருத்து. ஏனெனில் இவர்கள் தாம் இன்று கவிதையின் புரவலர்களாக இருக்கிறார்கள்.

என்ன எழுதுகிறோம் என்பதை விட யாருக்காக எழுதுகிறோம் என்பதே இளைஞர்கள் கருத்தில் கொள்ளவேண்டிய செய்தியாகும். 'மெசியா'வில் இந்தச் சிக்கலைக் காண முடிகிறது.

'யூமா வாசுகி' யின் செல்வாக்கு தன்னிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதாகச்  சொல்கிறார், கதிர். தமிழில் வேறு நல்ல கவிஞர்களும் உண்டு என்பதை அவருக்கு நாம் நினைவூட்டுவோமாக.

பத்திரிகையில் உயர் பொறுப்பில் இருப்பவர் என்பதால் அவருக்குத் தகுதிக்கு மீறிய பாராட்டுக்களை அள்ளித் தெளிக்க அதற்கென்றே உள்ள ஒரு கூட்டம் முண்டியடித்துக்கொண்டு முன்வரலாம். அப்பாராட்டுக்களை உண்மையென்று நம்பிவிடக் கூடிய சூழலையும்  அவர்கள் ஏற்படுத்திவிடலாம்.

கதிர்பாரதி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இளைஞரான அவர், தம்முடைய  சிறந்த மற்றும் மிகச்சிறந்த  கவிதைகள் இனிமேல் தான் எழுதப்படவேண்டும் என்பதை  அடிக்கடி நினைவில் கொள்ளவேண்டும்.

அத்துடன் யூமா வாசுகி போலவோ அல்லது லா.ச.ரா. போலவோ எழுத முற்படவேண்டாம் என்றும் வேண்டிக் கொள்கிறேன். சராசரித் தமிழனுக்குப் புரியக்கூடிய நடையிலும் மொழி அமைப்பிலும் கவிதை எழுதப்பட வேண்டியதே இன்றைய தேவையாக இருக்கிறது.

'கவிராஜன் கதை'  முன்னுரையில் வைரமுத்து சொன்னது போல் 'தன்னையே கிள்ளிக் கொண்டு அழும்' கவிஞர்கள் நமக்குத் தேவையில்லை. காதலியை வர்ணிக்கும், காதல் தோல்வியை மட்டுமே சித்திரிக்கும் கவிதைகளை  மற்றவர்கள் எழுதட்டும். கதிர்பாரதிக்கு அந்த  வேலை வேண்டாமே!


மு. மேத்தாவுக்குப் பிறகு புதுக்கவிதையை சராசரி மக்களின் தளத்திற்குக் கொண்டு செல்லும் கவிஞன் இன்னும் தோன்றவில்லை. வைரமுத்துவுக்கு அந்த வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர் சினிமாவில் பணம் பண்ணப் போய்விட்டார். உரைநடையை உடைத்துப்போட்டு பக்கநிரப்பியாகக் கவிதையைப் பயன்படுத்தும் பத்திரிகையாளர்களின் போக்குக்கு உடன்படாமல் நல்ல கவிதை எழுதுபவர்கள் மனுஷ்யபுத்திரன் மாதிரி ஒரு சிலரே. கதிர் பாரதியின் வரவினால் அந்த எண்ணிக்கை  மேலும் ஒன்றாக  உயர வேண்டும் என்பதே என் விருப்பம்.

கதிர்பாரதிக்கு மீண்டும் வாழ்த்துக்கள். அதே சமயம் எனக்குக் கவலையும் வருகிறது. பத்திரிகையின் தலைமை உதவி ஆசிரியர் பொறுப்பு என்பது சாமான்யமானதல்ல. தன்னை மறந்து உழைக்கச் சொல்லும். தன் உழைப்பின் பலனைப் பிறருக்குத் தரச் சொல்லும். இதற்கு மத்தியில் தன படைப்பாற்றலைத் துருப்பிடிக்காமல் வைத்துக் கொள்ள அவர் மிகவும் சிரமப்பட நேரலாம். பரிசுக்களிப்பிலிருந்து  மீண்டவுடன்  அவரது அடுத்த கவிதைத் தொகுப்பை எதிர்நோக்கலாம். அப்போது அவரை மறு மதிப்பீடு செய்வது சாத்தியமாகலாம்.

எழுபது வயதுக்கு மேல் பரிசு தந்து மருத்துவச் செலவுகளுக்காகவே சாகித்ய அகாதெமி என்றிருந்த நிலைமை மாறி, வளரும் பயிருக்கு நீராகவும் உரமாகவும் பயன்படும் 'யுவ புரஸ்கார்' விருதுகளைத்  தகுதியுள்ள இளைஞர்களுக்கு  வழங்கிடும் அகாதெமிக்கும் வாழ்த்துக்கள்.

-கவிஞர் இராய.செல்லப்பா (சென்னையிலிருந்து)
தொலைபேசி: 9600141229. (chellappay@yahoo.com)

வெள்ளி, மார்ச் 29, 2013

சாகித்ய அகாதெமி: (6) போன 15

தமிழிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு சாகித்ய அகாதெமியின் பரிசு பெற்ற நூல்கள் மொத்தம் 15.

7 நாவல்களும், 7 கவிதைகளும் ஒரே ஒரு தன்வரலாறும் இவற்றில் அடங்கும். மொத்தம் 7 மொழிகளுக்கு இவை சென்றுள்ளன:

புதன், மார்ச் 27, 2013

சாகித்ய அகாதெமி: (5) வந்தது 23 போனது 15


மெல்லத் தமிழ் இனி சாகாதிருக்க இரண்டு வழிகளை எடுத்துரைக்கிறான் பாரதி:

(1) பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
(2) திறமான புலமை எனில் பிறநாட்டார் அதை வணக்கம் செய்தல்
வேண்டும்

'பிறநாட்டார்' என்ற இடத்தில 'பிறமொழியினர்' என்று கொள்வதில் தவறில்லை. அதாவது மொழிகளுக்கிடையில் இருவழிப் போக்குவரத்து ஏற்படவேண்டும் என்பதே கருத்து.

சனி, மார்ச் 23, 2013

சாகித்ய அகாதெமி(4): தமிழுக்கு விருதுகள்

தமிழில் சாகித்ய அகாதெமி விருதுகள் பெற்றவர்கள் பற்றி இன்று அலசுவோம்.

1955ல் முதல் முதலாக அகாதெமி விருதுகள் ஆரம்பிக்கப் பட்டன. அது வரையில் அகில இந்திய அளவில் மொழி அறிஞர்களைக் கௌரவிக்கும் விருதுகள் ஏதுமில்லை. அதே சமயம் சுதந்திரப் போராட்டத்திலும் மொழித் தொண்டிலும் பெரும் பங்காற்றிய சான்றோர்கள் ஒவ்வொரு மொழியிலும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தனர். இவர்களை முதலில் அங்கீகரிக்க வேண்டிய தேசிய அவசியம் அன்று இருந்தது.

புதன், மார்ச் 20, 2013

சாகித்ய அகாதெமி(3): விருதுகள் - அலசல்கள்

அலசல் (1)

கடந்த 58 வருடங்களில் சாகித்ய அகாதெமி விருதுகள் வழங்கப்பட்ட வகைப்பாடுகள் கொண்ட அட்டவணையைப் பார்த்திருப்பீர்கள். விருதுகள் துவக்கப்பட்ட முதல் வருடமான 1955ல் 12 மொழிகள் மட்டுமே விருது பெற்றன.2005 முதல் அந்த எண்ணிக்கை 24 ஆகிறது. அந்த ஆண்டில் போடோ (Bodo), ஸாந்தலி(Santhali) என்ற இரு மொழிகளும் சேர்க்கப் பெற்றன.

செவ்வாய், மார்ச் 19, 2013

சாகித்ய அகாதெமி(2)- மொழிவாரி விருதுகள் அட்டவணை

சாகித்ய அகாதெமிக்கு இது மணிவிழா ஆண்டு. (1954 மார்ச் 12ஆம் நாள் அகாதெமி நிறுவப்பட்டது). 2012 ஆம் ஆண்டுக்கான விருதுகளுடன் இதுவரை 58 முறை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருதின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம்.

(2013க்கான விருதுகள், 2014 பிப்ரவரியில் தான் வழங்கப்படும்).

திங்கள், மார்ச் 18, 2013

சாகித்ய அகாதெமி(1)-ஒரு கண்ணோட்டம்

புதுடில்லியிலிருந்து சென்னை வந்தார். சென்னையிலிருந்து நியுஜெர்சி வந்திருக்கிறார்.இனிமேல் தான் சந்திக்க வேண்டும். நண்பர் நாக. வேணுகோபாலன் அவர்களை.

நண்பர் என்பதால் வேணு என்றே அழைக்கலாமே! வேணு, ஒரு கவிஞர். பசையப்பனில் படித்தவர். ஒருமுறை, 'பச்சையப்பன் கல்லூரியின் படிக்கட்டும் கவி பாடும்' என்று பெருமையாய் சொன்னார். 'காரணம் என்ன தெரியுமா? பச்சையப்பனில் பாதி  மாணவர்கள் எப்போதும் படிக்கட்டில் தான் இருப்பார்கள்' என்று பதில் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. இரண்டுமே உண்மை தானே! அரசியலும் மொழிப்பற்றும் பச்சையப்பன் மாணவர்களின் அடையாளங்களாக இருந்த காலம். அதே காரணத்தால் அடிக்கடி அவர்களின் வேலை நிறுத்தங்கள் நடந்து கொண்டிருக்கும்.