ஞாயிறு, ஜூலை 31, 2022

மணிகர்ணிகா (8) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)

மணிகர்ணிகா (8) இன்று   வர மாட்டாள் (தொடர்கதை)

(அமெரிக்காவில்  105  வது நாள்:  25-7-2022)

 

இதன் முதல் பகுதி   -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (7) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


ஜான் நாயுடுவுக்கு விஜயவாடா போஸ்டிங் வரப் போவது ரீஜினல் ஆபீசில் அனேகமாக எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. சில நாட்களில்  அதிகாரபூர்வமான உத்தரவும் வந்துவிட்டது. 'ஆக்டிங் டிஜிஎம்' என்ற பதவிப் பெயரும் கிடைத்துவிட்டது. ஆனால் சேர்மன் தலையிட்டு நாயுடுவிடம் "இப்போது போக வேண்டாம்; வாரங்கல் கிளையில் பெரிய 'என் பி ஏ' அக்கவுண்ட் ஒன்று செட்டில் மெண்ட்டுக்கு வருகிறது. அந்த ஆர்எம் தான் பாடுபட்டு அதை ஒரு வழிக்குக் கொண்டு வந்திருக்கிறார். அந்தக் கிரெடிட் அவருக்குத் தான் போக வேண்டும். நீங்கள் இரண்டு மாதம் கழித்து ரிலீவ் ஆனால் போதும்"  என்று கூறிவிட்டார்.  அதில் நாயுடுக்கும் திருப்தி தான். 


இதனால் சண்முகம் ரீஜினல் மேனேஜர் ஆவது கொஞ்சம் தள்ளிப் போனது.   ஆகவே அவர் தன்னுடைய கிளையின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்த முனைந்தார். முதல் காரியமாகச் சிலநாள் டெபுடேஷனில் வந்த மீனா குல்கர்னியை மேலும் இரண்டு மாதங்களுக்கு

  நீடித்துக்கொள்ள உத்தரவு பெற்றுக்கொண்டார். அவளுடைய செல்வாக்கினால் மேலும் டெபாசிட்கள் பெற முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.  


சென்னை மியூசிக் அகாடமியில் சுதா ரகுநாதன் 


மீனாவுக்கும் அது மகிழ்ச்சி தருவதாக இருந்தது. 'யூத் ஹாஸ்டல்' அரங்கத்தில் அடிக்கடி நடைபெறும்  கலை நிகழ்ச்சிகளை  ஒன்று விடாமல் பார்க்கும்  நல்வாய்ப்பு இனிமேல்  கிடைக்கும் என்று அவள் குதூகலித்தாள். அந்தக் கலைஞர்கள் தன்னை மேலும் அறிந்து கொள்ளவும் அவர்களுடன்  இணைந்து புதிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யவும் வசதி ஏற்படும் என்று நம்பினாள்.  


முதல் காரியமாகத் துணை ஜனாதிபதி வரும் நாளன்று தான் ஆடப்போகும் நடனத்திற்கு எஸ்எம்கே அனுமதியுடன் அரங்கத்திலேயே பலமுறை ஒத்திகை பார்த்து தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டாள். 


குல்கர்னி அடிக்கடி அவளுக்கு போன் செய்து உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார். நிகழ்ச்சி நாளன்று தான் வர முயற்சிப்பதாகவும் கூறினார்.

***

அது ஓர் இரண்டாம் சனிக்கிழமை. வங்கி விடுமுறை. அன்று மாலை தான் யூத் ஹாஸ்டலில் ஆண்டுவிழா நிகழ்ச்சி.


நகரின் முக்கியப் பிரமுகர்களும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றவர்களும்   அழைக்கப்பட்டிருந்தார்கள். ஜான் நாயுடுவும் சண்முகமும் காலையில் இருந்தே வங்கியில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். தனக்குப் பிறகு ரீஜனல் மேனேஜராகப் பதவி ஏற்கப் போகிறவர் என்பதால் சண்முகத்துக்கு மிக முக்கிய ஆலோசனைகளை ஜான் சொல்லிக் கொண்டிருந்தார். 


பிரச்சினைக்குரிய ஊழியர்கள் பற்றியும் பேச்சு வந்தது. மணிகர்ணிகா விரைவில் ரிசைன் செய்து விடுவாள் என்றும் அவள் துபாய் செல்ல இருப்பது ஒரு முக்கியமான விஷயத்திற்காகவே என்றும் சண்முகம் கூறினார்.


நாலு மணி சுமாருக்கு இருவரும் அரங்கத்தில் நுழைந்து தங்களுக்குரிய ஆசனங்களில் அமர்ந்து கொண்டார்கள். ஐந்து


மணிக்கு துணை ஜனாதிபதி வருவார். வரவேற்பு மற்றும் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஒரு மணி நேரம் நடைபெறும். அதன் பிறகு சுதா ரகுநாதன் கச்சேரி. அதை அடுத்து மீனா குல்கர்னியின் நடனம்.


பட்டுத்துணியாலான பதாகையில் ஸ்பான்சர்கள் என்ற வகையில் வங்கியின் பெயரும் இருந்ததை ஜானிடம் காட்டினார் சண்முகம். இருவரும் அதன் பின்னணியில் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்,  வங்கி வெளியிடும் ஊழியர்களுக்கான  மாத இதழில்  இடம் பெறுவதற்காக. அருகில் நடன உடையில் மீனா குல்கர்னியின் ஆளுயர 'ப்ளோ-அப்' பளபளப்புடன் மிளிர்ந்தது. அதையும் படம் பிடித்துக் கொண்டனர்.

*** 

அப்போது ராஜா வந்து சண்முகத்தை அவசரமாக வெளியில் வருமாறு அழைத்தான்.


"என்னப்பா, என்ன விஷயம்?" என்று அதிர்ச்சியோடு கேட்டார் சண்முகம்.


"சார், மீனா மேடத்தை போலீஸ் அழைத்துக் கொண்டு போயிருக்கிறது. அடையார் ஸ்டேஷனில் இருக்கிறார்.  நீங்கள் உடனே வாருங்கள்!" என்றான் ராஜா.


சண்முகத்துக்கு ஒன்றும் புரியவில்லை. நல்லவேளையாக மீனாவின் நிகழ்ச்சிக்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் இருக்கிறது. பிரச்சினை எதுவானாலும் அதற்குள் பேசித் தீர்த்துவிட்டு அவளை அரங்கத்திற்கு அழைத்து வந்துவிடலாம் என்று போலீஸ் ஸ்டேஷனை அடைந்தார் சண்முகம். அங்கு........


தான் பல நாள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிகழ்ச்சியை முன்னிட்டு காலை முதல் அளவற்ற உற்சாகத்தோடு இருந்த மீனா, முகமெல்லாம் வியர்த்துப் போய் அமர்ந்திருந்தாள். அவள் அருகில் வங்கியின் வாடிக்கையாளர் கோபால்சாமியும் இருந்தார்.  அச்சத்தால் அவர் உடம்பு வியர்த்திருந்தது. ஒரு மூலையில் வினோதா மேடம் என்னும் 80 வயது பெண்மணி, சிலப்பதிகாரக் கண்ணகி போன்ற ஆவேசமான முகபாவத்துடன் அமர்ந்திருந்தாள்.  


நகரின் முக்கியமான பகுதி என்பதால் அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு ஏசிபி தலைவராக இருந்தார். பெயர் கருணாமூர்த்தி. பார்ப்பதற்கு அவ்வளவு கருணையுள்ளவராகத்   

தெரியவில்லை. சண்முகத்துக்கு முன்பே அறிமுகமானவர். 


"மிஸ்டர் கோபால்சாமி, இந்த விஷயத்தில் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என்றார் கருணா.


சண்முகத்தைப் பார்த்ததும் கொஞ்சம் தைரியம் அடைந்தார் கோபால்சாமி. "இந்த வினோதா மேடம் அவருடைய கனரா பேங்க் பாஸ்புத்தகம், செக் புத்தகம் இரண்டையும் என்னிடம்தான் கொடுத்துவைப்பார். அவசரத்துக்கு இருக்கட்டுமே என்று ஒரு 'பிளாங்க்' செக்கில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருந்தார். அதை என்னுடைய மஞ்சப்பையில் வைத்திருந்தேன். ஒருநாள் சண்முகம் சார் பேங்கில் நான் இருந்தபோது பை கிழிந்து அதிலிருந்ததெல்லாம் தரையில் விழுந்துவிட்டது. இந்த மீனா மேடம்தான் அதை எடுத்துப் பையில் மீண்டும் போட்டுக்கொடுத்தார். அந்த செக்கில் யாரோ இருபதாயிரம் என்று எழுதிப் பணம் எடுத்திருப்பதாக நேற்று மாலை வினோதா மேடத்தின் மொபைலுக்கு  எஸ்எம்எஸ் வந்திருக்கிறது. அவர் என்னைத் துளைத்தெடுத்துவிட்டார். எனக்கு வேறு ஒன்றும் தெரியாது" என்று முடித்தார்.


"வினோதா மேடம், இந்த ஒரு செக் தவிர வேறு ஏதாவது செக் மூலம் உங்கள் அக்கௌண்ட்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருக்கிறதா?" என்று கேட்டார் கருணா.


"நோ இன்ஸ்பெக்டர்! இந்த இருபதாயிரம் ரூபாய் மட்டும் தான் காணாமல் போயிருக்கிறது. இதை நீங்கள் கண்டுபிடித்தாகவேண்டும். எனக்கு வயது 80. நான் சூப்பர் சீனியர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று ஆங்கிலத்தில் விளாசினார் வினோதா. 


"உங்களுக்கு யார் மீதாவது டவுட் இருக்கிறதா?" 


"எனக்குத் தெரியாது."


"இங்க பாருங்க மேடம்! இந்த கோபால்சாமியே அந்தப் பணத்தை எடுத்திருந்தால்? ..."


"அய்யய்யோ" என்று அலறினார் கோபால்சாமி. நாலைந்து வருஷமாக இந்தம்மாவின் செக்புக், பாஸ்புக் என்னிடம்தான் இருக்கிறது. எப்போதாவது தவறு நடந்திருக்கிறதா என்று கேளுங்கள். அத்துடன் இவர் எனக்குத் தூரத்து உறவுக்காரியும் கூட" என்று வினோதாவின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தார் கோபால்சாமி. "மேலும், எனக்குப் பணத் தேவை ஏதுமில்லை. எப்பொழுதும் என் அக்கௌண்ட்டில் ஒரு லட்சம் இருக்கும். நீங்களே பாருங்கள்" என்று தன் பாஸ்புத்தகத்தைக் காட்டினார்.


"அப்படி என்றால்  இந்த மீனா மேடம் மீது சந்தேகப்படுகிறீர்களா?" என்று கேட்டபடி மீனாவின் முகத்தை உற்றுப் பார்த்தார் கருணா.

நடன நிகழ்ச்சிக்கான பாதி மேக்-அப்பில் இருந்த மீனா அதிர்ச்சியடைந்தவளாக  எழுந்தாள். 


"இந்த வயதானவர் அன்று மேனேஜர் கேபினில் படுத்துத் தன்னையறியாமல்  தூங்கிவிட்டார். அவசரமாக விழித்து எழுந்தபோது அவருடைய பை தவறி அதில் இருந்ததெல்லாம் கீழே சிதறிவிட்டன. ஒன்றுவிடாமல் எடுத்து அதே பையில் போட்டுக் கொடுத்தேன். எனக்குத் தெரிந்து பிளாங்க் செக் லீஃப் எதுவும் கீழே விழவில்லை. உறுதியாகச் சொல்கிறேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்" என்று விளக்கினாள் மீனா. 


"வினோதா மேடம், கோபால்சாமியிடமிருந்த பாஸ்புக்கும் மற்ற செக் புத்தகமும்  இன்னும் அவரிடம்தான் இருக்கிறதா?" என்றார் கருணா.


சண்முகத்தின் வங்கியிலிருந்து இரண்டு பெண்கள் தன் வீட்டுக்கு வந்து அவற்றைத் திருப்பிக் கொடுத்த விவரம் சொன்னார் வினோதா. 


"அப்படியானால், வங்கியை விட்டு வந்த பிறகு வெளியில் எங்கோ அவற்றை கோபால்சாமி தொலைத்திருக்கிறார் என்றுதானே அர்த்தம்? என்ன சொல்கிறீர்கள் கோபால்சாமி?" என்று அதட்டினார் கருணா.


கோபால்சாமிக்கு இந்த மிரட்டல் புதிது. அவர் வாழ்நாளில் அதுவரை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனதில்லை. அதற்கான அவசியம் ஏற்பட்டதில்லை. இப்போது இந்தக் கிழவியால் ஏற்பட்டிருக்கிறது. "அப்படித்தான் இருக்கவேண்டும் சார்! ஆனால் நான் வங்கியிலிருந்து ஆட்டோவில் ஏறி நேராக என் வீட்டிற்குத்தான் போனேன். வேறு எங்கும் போகவில்லையே!" என்றார் குழப்பத்துடன். 


"சரி வினோதா மேடம், நீங்கள் எழுத்து மூலம் புகார் கொடுங்கள். மேற்கொண்டு விசாரிக்கிறேன். நிச்சயம் வங்கி ஊழியர்கள்தான் சம்பந்தப்பட்டிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. . ஆனால் என்னைப் பொறுத்தவரை முக்கியமான சந்தேகம் கோபால்சாமி மீதுதான் விழுகிறது.  இப்போது நீங்கள் போகலாம்..." என்று அனைவரையும் அப்புறப்படுத்தினார் கருணாமூர்த்தி. 


"துணை ஜனாதிபதி வருவதற்கு இன்னும் சிறிது நேரம்தான் இருக்கிறது" என்று தன் ஜீப்பில் கிளம்பினார்.  சண்முகமும் மீனாவும் அப்பாடா என்று எழுந்தார்கள். "மீனா, வங்கி ஊழியர் வாழ்வில் இப்படித்தான் ஒன்றுமில்லாததற்கு போலீஸ் ஸ்டேஷன் போகும் அவசியம் ஏற்படும். நீங்கள் கவலைப்படவேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எனக்குத் தெரிவிக்காமல் இங்கு வந்தது தவறு. எதற்கும் உங்கள் கணவரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள். நீங்கள் யாரென்பதை இங்குள்ள போலீஸ் தெரிந்துகொள்ளட்டும்" என்று அறிவுரை சொன்னார் சண்முகம்.


அரங்கில் ஆண்டுவிழா களைகட்டியது. துணை ஜனாதிபதியின் அன்றைய அடுத்த நிகழ்ச்சி கான்சல் ஆகிவிட்டதால் அவர் அரங்கத்திலேயே இருந்து மீனாவின் நடனத்தை முழுமையாகக் கண்டு ரசித்தார். அவளுடைய நடனம் அன்று மிகவும் சிறப்பாக இருந்தது என்று இசைவிமர்சகர் சுப்பையன் மறுநாள் ஹிந்துவில் எழுதினார். 


"சூப்பரா ஆடினியாமே! கங்கிராட்ஸ்" என்று மணிகர்ணிகாவிடமிருந்து வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது. சண்முகமும் ஜான் நாயுடுவும் அவள் வீடு திரும்பும்வரை இருந்து பாராட்டினார்கள். 


அவள் வீட்டை அடைந்தபோது அவளுடைய வங்கி நண்பர்களின்  வாட்ஸ்அப் குழுவிலிருந்து செய்தி ஒன்று வந்தது. "மயூரியும் திலகாவும் ஒரு மோட்டார்பைக் விபத்தில் சிக்கியிருக்கிறார்கள். ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு உடனே வரவும். இரத்தம் தேவைப்படலாம்."

(தொடரும்)


          -இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து. 


இதன் அடுத்த பகுதி   -" மணிகர்ணிகா (9) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


வெள்ளி, ஜூலை 29, 2022

பிரின்ஸ்டனில் ஒரு சிட்டுக்குருவி (சிறுகதை)

பிரின்ஸ்டனில் ஒரு சிட்டுக்குருவி  (சிறுகதை)

- இராய  செல்லப்பா

நியூஜெர்சியில்,  பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருந்த ஸ்டார்பக்ஸ் காஃபி ஷாப்பின் கிளைமேலாளர்  ரிஷி. வாடிக்கையாளரைக்  கவர்ந்திழுக்கும் புன்சிரிப்பும் சுறுசுறுப்பும் கொண்ட இந்திய வம்சாவளி இளைஞன்.

காலை ஐந்துமணிக்கே வந்துவிடுவான். அடுத்த சில நிமிடங்களில் கம்பெனியின் சப்ளை வேன் வந்துவிடும். ஆர்டர் செய்தவை எல்லாம் வந்தாயிற்றா என்று முதல் பார்வை பார்த்துவிட்டு, அவற்றை இறக்கி உரிய அலமாரிகளில் கொண்டுபோய் வைப்பான். சற்று நேரத்தில் அவனுடைய உதவியாள் வந்துவிடுவார். அவர் ஒரு வியட்நாம் போரில் காயம்பட்ட படைவீரர். வயது அறுபது இருக்கும். இருவருமாகக் கடையை உட்புறமாகப் பூட்டிவிட்டு, முதலில் கழிப்பறையையும் பிறகு கடை முழுவதையும்  பெருக்கிச் சுத்தம் செய்வார்கள். அதற்குக் கம்பெனி அனுமதித்த நேரம் பதினைந்து நிமிடம்தான். ஆனால் ரிஷிக்கு அதுவே அதிகம். பத்தே நிமிடத்தில் கதவைத் திறந்து முதல் வாடிக்கையாளரை வரவேற்கத் தயாராகி விடுவான்.

அனேகமாக அந்த முதல் வாடிக்கையாளர் மிருதுளாவாகத்தான்  இருக்கும். பள்ளி இறுதியாண்டு மாணவி. வாய்நிறையப் புன்னகையுடன் ஃப்ரெஷ்லி ப்ரூவ்டு காஃபி ஆர்டர் செய்துவிட்டுமடிக்கணினியைத் திறந்து பரபரப்பாக இயங்க ஆரம்பித்து விட்டால் காஃபி குடிப்பதையும் சிலநேரம் மறந்துவிடுவாள். ஆனால் அன்றோ ஒரே மூச்சில் குடித்து முடித்துவிட்டாள்.

சாலையின் எதிர்ப்பக்கம் தெரிந்த பழமையான மரம் ஒன்றைத் திடீரென்று வெறித்துப் பார்த்த மிருதுளா, மடிக்கணினியை அங்கேயே விட்டுவிட்டு வேகமாக வெளியேறினாள்.

ரிஷிக்கு அவளுடைய நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களில் தெளிவாகத் தெரிந்திருந்தன. பறவைகளைப் பற்றிய படிப்பில்தான் தனக்கு ஆர்வம் என்று அவள் கூறுவதுண்டு. நியூஜெர்சி மாநிலம் அபூர்வமான பறவைகளுக்குத் தாய்வீடாக இருந்தது. அதிலும் பிரின்ஸ்டன் நகரம் பல்வகை மரங்களையும் கொண்டிருந்ததால், விதவிதமான பறவைகளை அவள் ஆராய முடிந்தது. 

நீண்ட நாட்களாக அவள் தேடிக்கொண்டிருந்த பறவை ஒன்று  அவள் கண்ணில் பட்டிருக்கவேண்டும். ஆகவேதான் இப்படி எழுந்து ஓடியிருக்கிறாள்.

மிருதுளாவின் மடிக்கணினியையும் மற்ற பொருட்களையும் எடுத்து உயரத்தில் இருந்த அலமாரி யொன்றில் பத்திரப்படுத்தினான் ரிஷி.     

பிரின்ஸ்டன் வளாகத்தின் உள்ளிருந்த  பட்டுப்போன மரமொன்றின்  அருகே வந்ததும் மிருதுளா நின்றாள். அண்ணாந்து பார்த்தாள். சுமார் ஆறடி உயரத்தில் இருந்த பொந்தில் தலைகாட்டிக் கொண்டிருந்தது,   சிட்டுக்குருவி போன்ற ஒரு பறவை.

கறுத்த தலையும், கழுத்தில் ஒரு கரும்பட்டையும், சாம்பல்  நிறச் சிறகுகளும், வெண்ணிறக் கன்னங்களும், கூர்மையான மூக்கும் கொண்ட கொழுகொழுப்பான அப்பறவையைப் பலகோணங்களில்  படமெடுத்துக்கொண்டாள்.   குறிப்புப் புத்தகத்தில் ஏதோ எழுதிக் கொண்டாள். அதற்குள் அப்பறவை விர்ரென்று பறக்கத் தொடங்கியது. மிருதுளாவும் அதைத் துரத்திக்கொண்டு  வேகமாக நடந்தாள். 

ரிஷியின் மாலை நேர வாடிக்கையாளர்கள்  லூலியும் மீராவும்.

லூலிக்கு பிரின்ஸ்டனில் இது மூன்றாவது செமெஸ்டர். சீனாவில் தையல் தொழிலில் இருந்த, தகப்பனாரில்லாத, ஏழைக் குடும்பத்திலிருந்து மிகுந்த சிரமங்களுக்கு நடுவே பட்டப்படிப்பை முடித்து அமெரிக்காவின் ஐவிலீக் பல்கலைக்கழகமான  பிரின்ஸ்டனில் மின்னணுத்துறையில் எம்.எஸ். படிக்க வந்தவள். மிகவும் பயந்த சுபாவம் கொண்டவள். ஏழ்மையில் உழன்றதால் வந்த தாழ்வு மனப்பான்மையும், சரளமாக அமெரிக்க ஆங்கிலம் பேசவராத தயக்கமும் அவளை அதிகம் பேருடன் பழகமுடியாமல் செய்துவிட்டன. எனவே தன்னுடைய அறையைப் பகிர்ந்துகொள்ளத் தகுதியான தோழியை அவளால் உடனே கண்டுபிடிக்க முடியாமல் இருந்தாள்.

மீராவும் அதே எம்.எஸ். வகுப்பு தான். ஆனால் முதல் செமஸ்டர். சென்னைவாசி. ஸ்காலர்ஷிப்பில் வந்தவள். கிட்டத்தட்ட லூலியின்  உயரமே  என்றாலும் அசாத்திய தைரியசாலி. ஆகவே அவளைப் பார்த்தவுடனே லூலிக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டதுடன்,  தனது சுய முன்னேற்றத்திற்கும் அவள் துணையாக இருப்பாள் என்ற ம்பிக்கையும் ஏற்பட்து. ஆகவே மீராவைத் தன்னுடைய அறைத் தோழியாகத் தங்க அவளுக்கு இடம்கொடுத்தாள். 

நியூஜெர்சி தீயணைப்புத்துறையில் அதிகாரியாக இருந்து 9/11 இல் பணியின்போது  மரணமடைந்த தந்தையின் ஒரே பெண் மிருதுளா. அமெரிக்கக் குடியுரிமை பெற்ற வசதியான குடும்பம்.  சென்னைதான்  பூர்விகம்.  பங்களாவைச் சுற்றி இருந்த  மரங்களில் ஏராளமான சிட்டுக்குருவிகள் சிறகடித்துப் பிறந்ததால் சிறுவயது முதலே மிருதுளாவுக்குச் சிட்டுக்குருவிகள்மீது அதீதக் காதல் ஏற்பட்டுவிட்டது.

பிரின்ஸ்டனில் அன்று அவள் பார்த்த கறுப்புக்குருவியின் பெயர் ‘சிக்கடீ’.   வழக்கமான சிட்டுக்குருவியை விடவும் சிறியது. உரித்த வேர்க்கடலையும், சூரியகாந்தி விதைகளும் முக்கிய உணவுகள். விசில் அடிப்பதுபோல் பாடும் இயல்புடையது. மனித நடமாட்டம் உள்ள இடங்களில்தான் வருமாம். தன்  பள்ளியிறுதி வகுப்பின் ப்ராஜெக்ட்டாக அதையே தேர்ந்தெடுத்தாள் மிருதுளா.

அதனால் பிரின்ஸ்டன் வளாகத்திற்கு அடிக்கடி வர நேர்ந்தது.  சிக்கடீயின் குரலைத் தானே கேட்டுப் பதிவும் செய்தாள். அதற்கு மிகவும் உதவியவன்  ரிஷி.

ரு சனிக்கிழமை மாலை. மளிகைப் பொருட்களைத்  தள்ளுவண்டியில் வைத்துக்கொண்டு செக்-அவுட்  கவுண்ட்டரின் நீண்ட வரிசையில் லூலியும் மீராவும் காத்திருந்தனர்.

மிகவும் பார்த்துப் பார்த்து தான் செலழிப்பாள் லூலி. மீராவும் அப்படித்தான் என்றாலும் வாய்ருசிக்குச் செல்வழிக்கத் தயங்க மாட்டாள். அன்றும் அப்படித்தான். இருவருக்குமாக. நிறைய வாங்கியிருந்தாள். வேண்டிய பணம் அவளது கடன் அட்டையில் இருந்தது. சிலநேரம் கடன் அட்டைகள் படுத்தும் என்பதால் இருநூறு டாலர் ரொக்கமாகவும் வைத்திருப்பாள்.   

அப்போது திடீரென்று மீராவின் கைப்பேசி ஒலித்தது. சென்னையில் இருந்து குரல். பொதுவாக அந்த நேரத்தில் வீட்டிலிருந்து அவளை அழைக்க மாட்டார்கள். என்ன அவசரமோ? பதிலளிப்பதற்காக வெளியில் ஓடினாள் மீரா.

அப்போதுதானா  அந்த விபரீதம் நிகழவேண்டும்?

தள்ளுவண்டியில் இருந்த எல்லாப் பொருட்களையும் ஸ்கேன் செய்து பில்லிங் முடித்த கவுண்ட்டர் பெண்மணி, வண்டியின் கீழ்த்தளத்தில் இன்னும் ஏதோ ஒரு பொருள் இருப்பதைக் கண்டாள். கையில் எடுத்தவள், தன் விரல்கள் பிசுபிசுப்பதைக் கண்டு அருவருப்பானாள்.  அடிப்பகுதி  நொறுங்கி ஒழுகிக்கொண்டிருந்த,  விலை உயர்ந்த பெர்ஃப்யூம் பாட்டிலை எடுத்துக்காட்டி, முகத்தில் கடுகடுப்புடன், "ஏன் உடைத்தீர்கள்? இதன் விலை 150 டாலர். இதை உங்கள் பில்லில் தான் சேர்க்க வேண்டும்!" என்றாள். பின்னர் அடுத்த கவுண்ட்டர் பெண்மணியிடம்இவர்கள் ஏன் இங்கு வந்து உயிரை வாங்குகிறார்கள்?” என்று குசுகுசுத்தாள்.  கொரோனா ஆரம்பித்தது முதலே சீனர்கள் மீது ஏற்பட்டிருந்த உலகளாவிய வெறுப்பின் வெளிப்பாடு.

லூலிக்கு உடலே வியர்த்து விட்டது. எல்லோரும் தன்னையே விசித்திரமாகப் பார்ப்பது போலிருந்தது. 

அந்த பெர்ஃப்யூமை நான்  எடுக்கவுமில்லை, உடைக்கவுமில்லைஎன்று அவள் பயத்துடன் முனகியது யாருக்கும் கேட்கவுமில்லை.    யாரோ எடுத்து, கைதவறி உடைத்துவிட்டு, நைசாக இவளுடைய வண்டியின் கீழ்த்தளத்தில் வைத்திருக்கவேண்டும்.

ஆங்கிலத்தில் பேசு” என்று ஆடட்டும் விதமாகக் குரலை உயர்த்தினாள் கவுண்ட்டர் பெண்மணி.

அச்சத்தில் பேச்சு வரவில்லை லூலிக்கு. தேம்பியபடியே, “சாரி, சாரி...” என்றாள். “ஐ ஆம் நாட் ரெஸ்பான்சிபிள் ஃபார் திஸ்” என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சொல்லி முடித்தாள். 

இப்போது என்ன செய்வது? அவளுடைய கடன்அட்டையில் அவ்வளவு பணமும் கிடையாது. கையிலும் ரொக்கம் கிடையாது. மீராவை நம்பித்தான் வந்தாள். அவள் எங்குதான் போனாளோ? அவசரத்தில் தன் கைப்பேசியையும் அறையிலேயே விட்டுவிட்டாள் லூலி. 

கவுண்ட்டர் பெண்மணி மீண்டும் இவளைக் கடுமையாகப் பார்த்தாள். அதற்குள், கியூவில் இருந்தவர்கள் சத்தம் போடவே, உடைந்த பெர்ஃப்யூமுக்கும் சேர்த்து பில் போட்டுத் தான் கடமையை முடித்தாள். பிறகு இவளுடைய கடன் அட்டையைப் பலவந்தமாகப் பிடுங்கித் தேய்த்தாள். லூலி பயந்தபடியே அட்டை திரும்பிவிட்டது.

கடையின் கண்காணிப்பாளர் விரைந்து வந்தார். கியூவில் இருந்தவர்களை மற்றொரு கவுண்ட்டருக்கு மாற்றிவிட்டார்.

லூலியின் அடையாள அட்டையைப் பார்த்தார். கல்லூரி மாணவர், அதிலும் வெளிநாட்டவர்  என்பதால் கடை மூடும் வரையில் அவளுக்குப் பணத்தைச் செலுத்த வாய்ப்பளிப்பதாகவும், வேறு யாராக இருந்தாலும் ஷாப் லிஃப்டிங் குற்றத்துக்காக  இதற்குள்ளேயே காவல்துறையிடம்  ஒப்படைக்கப்பட்டிருப்பார்கள் என்றும் சொன்னார்.  அவளைத் தனியறையில் உட்கார வைத்தார். 

நியூஜெர்சி முழுவதும் தன்னையே பார்த்துச் சிரிப்பதாகத் தோன்றியது லூலிக்கு. மீரா வந்துவிட மாட்டாளா என்று சுழல்கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள். கைபேசி இருந்தாலாவது வேறு யாராவது நண்பர்களை உதவி கேட்கலாம். யாருடைய நம்பரும் மனப்பாடமாக இல்லையே!

பத்துமணிக்குக் கடை மூடப்பட்டது. மீரா வருவதாகத் தெரியவில்லை. கண்காணிப்பாளருக்கு அவள்மேல் இரக்கமாகத்தான் இருந்தது. குறைந்த பட்சம், அவள் உடைத்ததாகக் கூறப்பட்ட பெர்ப்யூமின் விலையையாவது அவள் செலுத்திவிட்டால் போதும். ஆனால் அந்த 150 டாலர் அவளிடம் இல்லை. வேறு வழியின்றி அழுது சிவந்த முகத்தோடு லூலி காவல்நிலையத்திற்கு அனுப்பப்பட்டாள். மீராவால் கைவிடப்பட்ட ஏமாற்றம் அவளைக் கொதிக்கும் எரிமலையாக்கி விட்டிருந்தது. நியூஜெர்சியின் குளிரிலும் அவளுக்கு உடல்முழுதும் வியர்த்துவிட்டது.

டையைப் பூட்டிவிட்டு  ரிஷி  காரை எடுக்கும்போது ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. “ஹை, ரிஷி ஹியர். ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?” என்றான்.  

மன்னிக்கவேண்டும் ரிஷி! நான் தான் மீரா! எனக்கொரு உதவி செய்வீர்களா? என் தோழி லூலியைக் காணோம்….” என்றாள் மீரா  பதற்றத்துடன். அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது. எப்போதும் மாலை நேரத்தில் வரும் வாடிக்கையாளர்கள்.

நாங்கள் இருவரும்தான் சூப்பர்மார்க்கெட் போனோம். ஆனால் பில்லிங்  முடிவதற்குள் வெளியே வந்துவிட்டேன். திரும்பிவந்து பார்த்தால் கடை  மூடியிருந்ததது.  அறையிலும்  அவள்  இல்லை. அவளுடைய கைப்பேசியும்  இங்குதான் இருக்கிறது. ப்ளீஸ், எனக்குப் பயமாயிருக்கிறது. கைண்ட்லி  ஹெல்ப் மீ!” என்றாள்.    

அவள் குரலில் இருந்த அதிர்ச்சியும் பயமும் ரிஷிக்குப் புரிந்தது. “மீரா! சம்பந்தப்பட்ட இடத்தில் எல்லாம் விசாரித்துவிட்டுப்  பிறகு பேசுகிறேன். அதுவரை பொறுப்பீர்களா?” என்றான்.

ப்ளீஸ், சீக்கிரம் செய்யுங்கள். உங்கள் போனுக்காகக் காத்திருப்பேன்” என்று கூறியவள், உடை மாற்றாமலே அயர்வுடன் படுக்கையில் சாய்ந்தாள். உடனே தூங்கிவிட்டாள். யாரோ கடத்திச் சென்று லூலியைக் கொல்வதுபோலவும், தன்னைச் சிறையில் அடைப்பதுபோலவும், தூக்கு தண்டனை கிடைப்பது போலவும்  விட்டுவிட்டுக் கனவுகள் வந்துகொண்டே இருந்தன. 

விடியற்காலையில் அறைக்கதவு தட்டப்படவும் ஓடிப்போய்த் திறந்தாள் மீரா. இன்னும் வெளிச்சம் வரவில்லை. மரநிழல்களுக்கு நடுவில் ஆங்காங்கே ஒன்றிரண்டு தெரு விளக்குகள் மினுமினுத்துக் கொண்டிருந்தன.

அவமானத்தால் குறுகிப்போன முகத்தோடு லூலியும், அவளை ஆதரவாக அணைத்தபடி ரிஷியும் உள்ளே நுழைந்தனர்.

லூலிக்கு என்னதான் ஆகியிருக்கும் என்று மீராவால் அனுமானிக்க முடியவில்லை. நிச்சயம் பெரியதொரு இக்கட்டில் அவள் இருந்திருக்கவேண்டும் என்று மட்டும் புரிந்தது. “ஹேப்பி டு ஸீ யூ பேக்” என்று அவளை நோக்கிக் கைநீட்டினாள்.

ஆனால் மீராவைப் பார்த்த நிமிடமே உலகிலுள்ள ஆத்திரம் முழுவதையும் தன் குரலில் சேர்த்துக்கொண்டு கத்தினாள் லூலி: "டோன்ட் டச் மீ! நீ எல்லாம் ஒரு தோழியா! இனிமேல் உனக்கு இங்கு இடம் இல்லை. போ வெளியே!" என்றபடி பரபரப்புடன் மீராவின் உடைகள், புத்தகங்கள், மடிக்கணினி, அழகுசாதனப் பொருட்கள் எல்லாவற்றையும் தூக்கி வெளியில் எறிந்தாள்.

"லூலி! லெட் மீ எக்ஸ்ப்ளெய்ன்…" என்று தன்னை நெருங்கிய மீராவைப் பேசவிடாமல் முதுகில் கைவைத்து  வெளியே தள்ளினாள் லூலி. அதிர்ச்சியில் கண்கலங்கி நின்றாள் மீரா.

நிலைமையைப் புரிந்து கொண்ட ரிஷி, லூலியைச் சமாதானப்படுத்த முயன்றான். அவளோ எதையும் பொருட்படுத்தாமல், சம்பிரதாயமாகக் கூட அவனுக்கு நன்றி கூறாமல் அறைக்கதவை ஓங்கிச் சாத்தினாள். அதற்குள் பக்கத்து அறையில் இருந்தவர்கள் அவசரமாகக் கதவைத் திறந்து எட்டிப்பார்த்தனர். விஷயம் தெரியாமல் அவர்கள் 911க்குப் பொன் செய்துவிடவும் கூடும் என்று அதிர்ச்சி அடைந்தான் ரிஷி.

எனவே, மீராவை ஒரு கையால் பற்றிக்கொண்டு அவளுடைய பொருட்களை இன்னொரு கையிலும் மார்பிலுமாக அணைத்துக்கொண்டு, காரை நோக்கி நடந்தான். கலவரத்தோடு அவனைத் தொடர்ந்தாள் மீரா.

"ரிஷி, ஐ யாம் வெரி ஸாரி…" என்றவளின் தோள்களை அன்போடு அழுத்தினான் ரிஷி. நீங்கள் அவளிடம் சொல்லிக்கொள்ளாமல் கடையிலிருந்து வெளியேறிவிட்டீர்களாம். அவள் ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டாள். சரியான  நேரத்தில் நான் அங்கு போனதால் அவள் சிறைக்குப் போகாமல் தப்பினாள். எல்லாம் வெறும் 150 டாலர் விஷயம் என்று நினைத்தால் வெறுப்பாக இருக்கிறது” என்றான் ரிஷி.

சூப்பர்மார்க்கெட்டில் லூலிக்கு  ஏற்பட்ட அவமானத்தை அவன் விவரித்தபோது, லூலியின் கோபம் நியாயமானதே என்று தோன்றியது மீராவுக்கு.  தான் மட்டும் அன்று வெளியே போகாமல் இருந்திருந்தால் அப்படி  நடந்திருக்குமா

"மாற்று ஏற்பாடு செய்யும்வரையில் நீங்கள் என் வீட்டில் தங்கிக்கொள்ளலாம். அதுவரையில் நான் நண்பர் ஒருவரின் அறைக்குப் போகிறேன்" என்று மென்மையாக அவன் கூறியபோது நெகிழ்ந்துவிட்டாள் மீரா.

நேற்று சூப்பர்மார்க்கெட்டில் இருந்தபோது, தன் ஒரே தம்பி கார் விபத்தில் சிக்கியதாகக்  கைப்பேசியில் குறுஞ்செய்தி வந்ததைப் பார்த்து மீரா அந்தக் கடை வாசலிலேயே மயங்கி விழுந்துவிட்டதையும், அவளை 911 ஜீப் வந்து அவசர சிகிச்சைக்கு அழைத்துச் சென்றதையும், தான் எங்கிருக்கிறேன் என்பதே தெரியாத நிலையில் சிலமணி நேரம் கழிந்துவிட்டதையும், அதற்குள் இரவு பதினொரு மணிக்குமேல் ஆகிவிட்டதால் நேரடியாக அறைக்கு வந்துவிட்டதாகவும் அவள் ரிஷியிடம் சொன்னதை லூலிக்கு யார்  சொல்லப்போகிறார்கள்?

றுநாள் காலை மிருதுளா அழைத்தாள். “ஒரு குட் நியூஸ் மீரா! நீங்கள் ரிஷியின் அறையிலேயே தொடர்ந்து தங்கலாம். ஏனென்றால், அவருக்கு  பி.எச்டி.க்கு ஸ்காலர்ஷிப் கிடைத்துவிட்டது.  விரைவில்   பெய்ஜிங் செல்லப்போகிறார். அதுவரை என் வீட்டிலேயே பேயிங் கெஸ்ட் ஆக இருப்பார்!” என்றாள்.ரிஷி என் நீண்டநாள் நண்பர்!” என்று புன்னகைத்தாள்.

மீராவின் கண்களில் ரிஷியின் மலர்ந்த புன்னகை பளிச்சென்று மின்னலடித்தது. அவன் ஆராய்ச்சி மாணவனா? வெறும் காஃபிக் கடை ஊழியன் என்று நினைத்தது எவ்வளவு அறியாமை!

இன்னொன்றும் சொல்லவா? உங்கள் தோழி லூலி மருத்துவ விடுமுறை பெற்றுக்கொண்டு எங்கோ போய்விட்டாளாம். எனவே அந்த அறையை உங்கள் பெயருக்கே மாற்றிவிட்டார்களாம். இனி வேறொரு அறைத்தோழியை நீங்கள் தேட வேண்டியதுதான்!” என்று கலகலவென்று சிரித்தாள் மிருதுளா.

ரிஷியை வழியனுப்ப மீராவும் மிருதுளாவும் விமான நிலையம் போனார்கள்.

உங்கள் உயர்கல்வி வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்றாள் மீரா.உங்களைப் பற்றி ஒன்றுமே கூறாமல் இருந்துவிட்டீர்களே! எப்போதாவது உங்களை நான் மதிப்புக் குறைவாகப் பேசியிருந்தால் மன்னித்துவிடுங்கள்” என்றாள்.

வாய் நிறையச் சிரித்தான் ரிஷி. “என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது? சென்னையிலிருந்து வந்திருக்கும் ஒரு ஏழை மாணவன். அவ்வளவுதான்!” என்றான். பிறகு, இதற்கெல்லாம் காரணம், மிருதுளாவும் அவள் தாயாரும் கொடுத்த ஊக்கமே. அவர்களுக்கு என் நன்றி!” என்றான் ரிஷி.

அதை அங்கீகரிப்பவள்போல் அவனை அன்போடு இறுக  அணைத்து வாயில் நீண்ட முத்தமிட்டாள் மிருதுளா.

அதை வியப்போடும் திகைப்போடும் பார்த்தாள் மீரா. ‘அப்படியானால் இவள் ரிஷியைக் காதலிக்கிறாளா?’

விமானம் கிளம்பியது.

வீடு திரும்பும்போது “உங்களிடம் ஓர் இரகசியம் சொல்லட்டுமா?” என்றாள் மிருதுளா.

தெரியும், ரிஷியும் நீங்களும் காதலர்கள். அதானே?”

அது மட்டுமில்லை...” என்று மிருதுளா சொல்வதற்குள் பிரின்ஸ்டன் வளாகம் வந்துவிட்டது. இருவரும் நடந்துபோய்  ஐன்ஸ்ட்டின் ஒருகாலத்தில் அமர்ந்ததாகச் சொல்லப்படும் பெஞ்ச்சில் அமர்ந்தார்கள். மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. அப்போது மரத்தின் மேலிருந்து ஒரு விசில் ஓசை கேட்டது. மிருதுளா அண்ணாந்து பார்த்தாள். ஒரு  சிக்கடீ தான் பொந்திலிருந்து பாடுகிறது! 

என்னுடைய சிக்கடீதான் அது!” என்றாள் பரவசத்துடன்.

“எங்கள் காதலுக்கான ஒரே சாட்சி! இதே பெஞ்ச்சில்தான் ரிஷியும் நானும்... “ என்ற மிருதுளா, தன்னை மறந்தவளாய், மீராவை இறுகக் கட்டிக்கொண்டாள். “யூ நோ, ஐ ஆம் ப்ரெக்னண்ட் வித் ரிஷி’ஸ் சன்!” என்றாள் குதூகாலத்துடன்..

நம்பமுடியாத திகைப்பில் உறைந்துபோனாள் மீரா. பள்ளிப்படிப்பு முடியாத நிலையில் கர்ப்பமா? திருமணத்திற்கு முன்பாகவே? அதையும் குதூகலத்துடன் சொல்கிறாளே? காதுகள்  கூசின. 

அதைப் புரிந்துகொண்டவள் போல, என்ன ஆயிற்று மீரா? கல்ச்சர் ஷாக்கா? கர்ப்பம் என்பது குற்றமா? அதெல்லாம் இந்த நாட்டில் இல்லை. குழந்தை பெறுவதற்குக் கல்யாணம் போன்ற முன்நிபந்தனைகள் கட்டாயமில்லைஎன்றாள்  மிருதுளா மிகச் சாதாரணமாக.

அதில்லை மிருதுளா! நீ சிறுமி. ஒருவேளை எதிர்காலத்தில் ரிஷி உன்னை மணக்க விரும்பாமல் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டால்...?”

கலகலவென்று சிரித்தாள் மிருதுளா. “அப்போதும் இது என் குழந்தைதானே! நானே விரும்பி ஏற்றுக்கொண்ட பொறுப்புதானே!  அம்மா எனக்கு ஆதரவாக இருப்பார். ரிஷி ஈஸ் அ கிரேட் மேன்! ஒருவேளை அவர் என்னை மணந்துகொள்ளாமல் போனாலும் கலங்கமாட்டேன். எங்கள் காதலின் சாட்சியாக இந்தச் சிக்கடீ இங்குதான் பறந்துகொண்டிருக்கும். என் குழந்தைக்கும் அது பாட்டுப் பாடும்” என்றாள்.

உணர்ச்சிவசப்பட்டவளாய், "உன் உறுதியைப் பாராட்டுகிறேன் மிருதுளா! ஐ சப்போர்ட் யூ!” என்று அவளைக் கட்டி அணைத்துக்கொண்டாள் மீரா.

மிருதுளாவின் கண்கள் கசிந்தன. அது நிம்மதியின் கண்ணீர். அன்று மட்டும் அந்தச் சிக்கடீ நெடுநேரம் அங்கேயே கூவிக்கொண்டிருந்ததாகத் தோன்றியது அவளுக்கு.

(இக்கதைக்குத் தூண்டுகோல், கபிலரின் குறுந்தொகைப்பாடல்:

“யாரும் இல்லைத் தானே கள்வன்,

தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?

தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால

ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்

குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே.”) 

 ****** 

('சிறகு' அச்சிதழின் “சிறுகதைக் கொத்து” ஏப்ரல் 2022 இதழில் வெளியான சிறுகதை)

வியாழன், ஜூலை 28, 2022

மணிகர்ணிகா (7) இன்று வர மாட்டாள் - தொடர்கதை

மணிகர்ணிகா இன்று   வர மாட்டாள் (7) தொடர்கதை

(அமெரிக்காவில்  104 வது நாள்:  24-7-2022)



இதன் முதல் பகுதி   -" மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் (1)" படிக்க இங்கே சொடுக்கவும்.

இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (6) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.



மறுநாள் ஆபீஸ் வந்தவுடன் செக் புத்தகத்தையும் பாஸ் புத்தகத்தையும் மயூரியிடம் கொடுத்தாள் திலகா.  "அவர் கொடுத்தாரடி.  உனக்குத் தெரியும் என்று சொன்னார்" என்றாள்.


"ஆமாம், யாருடையதோ பாவம், சாலையில் கிடந்ததாம்.  ஒரு பெண் கொண்டுவந்து கொடுத்தாள்" என்றபடியே மயூரி அது எந்த பேங்கின் பாஸ்புக் என்று பார்த்தாள். கனரா பேங்க், மந்தைவெளி! பக்கங்களைப் புரட்டியதில் அந்த அக்கவுண்டில் ஒரு லட்சத்து  60 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரிந்தது.


துபாய் விமான நிலையம் 

செக் புக்கின் முதல் பக்கம்  வாடிக்கையாளரின் பெயரும் முகவரியும் இருந்தது: "வினோதா, 45/2, காமதேனு வீதி, திருவான்மியூர்". போன் நம்பர் இல்லை.


"அதனால் என்ன, லஞ்ச் டைமில் நேரில் போய்ப் பார்த்துக் கொடுத்து விடலாம். திருவான்மியூர் இங்கிருந்து பக்கம் தானே" என்றாள் மயூரி. "அத்துடன் என்னுடைய என்ஃபீல்ட் வண்டிக்காக இன்சூரன்ஸ் கம்பெனிக்குப் போக வேண்டும். அதுவும் அந்தப் பக்கம் தான்."


"வினோதா என்ற பெயர் ரொம்ப மாடர்னாக இல்லை?" என்றாள் திலகா. 


"ஆமாம் காலேஜ் கர்ளாக இருக்கலாம்" என்றாள் மயூரி. "அல்லது நம்மைப் போல பேங்க் அல்லது ஐ டி எம்ப்ளாயியாகவும் இருக்கலாம்."


இருவரும் தங்கள் உணவு டப்பாக்களைக் காலி செய்து விட்டு மயூரியின் என்ஃபீல்டு பைக்கில் தங்களுக்குத் தெரியாத வினோதாவைத் தேடிக்கொண்டு கிளம்பினார்கள்.


45/1 என்ற எண்ணில் ஒரு தனி வீடு இருந்தது. ஆனால் 45/2 என்று எதுவும் இல்லை. வலதுபுறம் 44ம் இடதுபுறம் 46ம் தான் இருந்தன. அப்படியானால் 45/2 எங்கே?


காம்பவுண்டு கேட் திறந்திருந்தது. பைக்கை நிறுத்திவிட்டு மயூரியும் திலகாவும் உள்ளே நுழைந்தார்கள். தரைத்தளத்தில் இருந்து சுமார் 70 வயது மதிக்கத்தக்க பாட்டி வெளியே வந்தார். 


"இந்தாம்மா யார் நீங்க? எனக்கு கிரெடிட் கார்டு வேண்டாம், ஹெல்த் பாலிசி வேண்டாம், நகை சேமிப்பு திட்டம் வேண்டாம். போங்க வெளியே" என்று மிரட்டினார்.


மயூரி  சிரித்து விட்டாள். "பாட்டி! நாங்க வந்தது 45/2 ஆம் நம்பர் வீட்டைக் தேடி!" என்றாள். 


"இருக்கா போங்க, மாடில, கல்லாட்டம் குந்திக்கிட்டு இருப்பா! கோவில்பட்டி கோமளா! கொழுப்பெடுத்த குஞ்சலா!" என்று நெருப்பை உமிழ்ந்துவிட்டு  உள்ளே போய்விட்டார் பாட்டி. என்ன விரோதமோ!


மாடி போர்ஷன் மீது 45/2 என்ற எண் இருந்தது. இங்குதான் வினோதா இருக்கவேண்டும். கோமளா,  குஞ்சலா என்பது வினோதாவின் பாட்டியாக இருக்கலாம். 


கிரில் கதவின் வழியாக ஒரு பாட்டி உள்ளே இருப்பது தெரிந்தது. வேறு யாரும் இல்லை.


"பாட்டி! வணக்கம்!" என்றாள் திலகா.


எப்படியும் எண்பது வயதிருக்கும். பாட்டி சிங்கம் போல் சீறிக்கொண்டு எழுந்தார். 


"யாருடி என்னை பாட்டின்னு சொன்னது?" 


கதவைத் திறந்த வேகம் இருவரையும் திகைக்க வைத்தது. திலகா மௌனமானாள். மயூரி நிலைமையைப் சமாளிப்பதாக எண்ணிக்கொண்டு "மன்னிக்க வேண்டும் மாமி! நாங்கள் யாரென்றால்…" என்றபோது பாட்டி இடைமறித்தார்.


"யாருக்குடி நான் மாமி? மேனர்ஸே கிடையாதா உங்களுக்கு? நான் யார் தெரியுமா?" 


"தெரியாது… மேடம்" என்று சரணடைந்தாள் மயூரி, முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு.


"மொதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. கீழ்வீட்டுக்காரி உங்க கிட்ட ஏதாவது பேசினாளா?"


"ஒண்ணும் பேசலையே…" என்று திலகாவின் முகத்தைப் பார்த்தாள் மயூரி. இருவரும் திருதிருவென்று விழித்தார்கள்.


"உண்மையைப் பேசினா ஒங்கள விட்டுடுவேன். இல்லைன்னா …" என்ற பாட்டி, "வாடகை பாக்கியைக் கொடுக்காம ஏமாத்தறா! சென்ட்ரல் கவர்மெண்ட் பென்ஷன் கைநெறைய வாங்கறா! என்னைப் பார்க்க யார் வந்தாலும் கோமளா குஞ்சலானு ஏளனம் பண்றா! அதான் கேட்கிறேன், என்னைப் பத்தி என்னதான் சொன்னா?..."


உணவு இடைவேளை அரைமணி நேரம்தான். இன்சூரன்ஸ் கம்பெனிக்கு வேறு போகவேண்டும். இவர்களுடைய சண்டையில் நாம் அகப்பட்டுக்கொள்ள முடியாது. மௌனமாக இருப்பதே உத்தமம்.


"இப்படி இவ என் பேரைக் கெடுக்கிறான்னு தான் மாடர்னா இருக்கணும்னு என் பேர 'வினோதா'ன்னு மாத்திக்கிட்டேன். கெஜட்டுலயே  வந்தாச்சு! ஆதார் கார்டு, வோட்டர் கார்டு எல்லாத்துலயும் அப்டேட் பண்ணிட்டேன். இனிமே எப்ப வந்தாலும் என்ன மேடம் வினோதான்னு தான் கூப்பிடணும், தெரிஞ்சுதா?"


"எஸ் மேடம்" என்று ஒரே குரலில் கூறினார்கள். மயூரியும் திலகாவும். தாங்கள் வந்த விஷயத்தைச் சொல்லி, செக் புத்தகம் பாஸ் புத்தகம் இரண்டையும் அவரிடம் கொடுத்தார்கள்.


"நீங்க எந்த பேங்க்?" என்று கேட்டார் வினோதா. சொன்னார்கள்.


"ஓ, இப்போது புரிந்தது. கோபால்சாமி உங்க கஸ்டமர் தானே! அவரிடம் தான் இதெல்லாம் கொடுத்து வைத்திருந்தேன். தூரத்து சொந்தம்.  பாவம் வயசானவர். தொலைத்து விட்டிருக்கிறார். நல்ல வேளை,  நீங்கள் கொண்டு வந்தீர்கள். ரொம்ப நன்றிம்மா!" என்றார். 


65 வயது கோபால்சாமியை 80 வயது மேடம் 'வயசானவர்' என்கிறார்! என்ன 'வினோதம்'! 


'இந்த மேடத்திடம் ஏராளமாகப் பணம் இருக்கும் போல் தெரிகிறது. இன்னொரு நாள் வந்து நம் பேங்கிற்கு டெபாசிட் கேட்கவேண்டும்' என்று இருவரும் எண்ணிக்கொண்டு இறங்கினார்கள். 

***

மயூரியின் கணவன் பெரும்பாலும் காரைத் தான் பயன்படுத்துவான். எனவே தன் ராயல் என்ஃபீல்டு பைக்கை அவ்வளவாக கவனம் செலுத்திப்  பராமரிக்க மாட்டான். சின்னச் சின்னக் கோளாறுகள் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் வண்டியின் ஓட்டம் நிற்காது. வரும் சனிக்கிழமை மெக்கானிக்கிடம் கொடுக்கவேண்டும் என்ற முடிவில் இருந்தாள் மயூரி. 


இன்சூரன்ஸ் அலுவலகம் இரண்டாம் மாடியில் இருந்தது. ஒரு சில அலுவலர்கள்தான் இருந்தார்கள். ஆனாலும் உடனே பதில் சொன்னார்கள். 


வண்டி பெங்களூரில் பதிவானது. இன்னும் முகவரி மாற்றவில்லை. மாற்றினால்தான் இன்சூரன்ஸ் ரின்யுவல் செய்யமுடியும் என்றார்கள். அல்லது பழைய இன்சூரன்ஸ் கம்பனிக்கே போய் செய்துகொள்ளுங்கள் என்றார்கள்.


கணவனிடம் போனில் தகவலைக் கூறினாள் மயூரி. “சரி நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான். 


"இன்று யார் முகத்தில் முழித்தேனோ ஒரு விஷயமும் நடக்கமாட்டேன் என்கிறது" என்று  திலகாவிடம் அலுத்துக் கொண்டே வண்டியைக் கிளப்பினாள், மயூரி வங்கியை நோக்கி.

***


தன் கணவனுக்குச் சரியான உத்தியோகம் இல்லை என்றும், தன்  ஒருத்தியின் வருமானத்தில்தான் குடும்பம் நடக்கிறது என்றும், மயூரியிடம் அன்று அவன் கூறியதெல்லாம் பொய் என்றும் திலகா மனமுடைந்து கூறியபோது அதிர்ந்துபோனாள் மயூரி. 


“கவலைப்படாதே திலகா. உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேள். நான் தருகிறேன். அவரை ஒன்றும் சொல்லாதே. தொடர்ந்து வேலை இல்லாமல், வருவாய் இல்லாமல், இருக்கும் கணவர்கள், தாழ்வு மனப்பான்மையால் தற்கொலைவரை போவதை நாம் பார்க்கிறோம் அல்லவா? எனவே அவருக்கு மனதில் உறுதியை  நீதான் ஏற்படுத்தவேண்டும். எப்படியும் அவருடைய பர்சனாலிட்டிக்கு நல்ல வேலை கிடைக்காமல் போகாது. கொஞ்சம் பொறுமையாக இரு. இப்போது உன் முழு கவனமும் உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை மீதுதான் இருக்கவேண்டும்” என்று அவளைத் தேற்றினாள். 


“அது மட்டுமல்ல, இனிமேல் தினமும் நீ பஸ்சில் பயணம் செய்யவேண்டாம். காலையில் நானே வந்து உன்னை பிக் அப் செய்து மாலையில் டிராப்பும் செய்கிறேன்” என்று வாக்குறுதியளித்தாள்  மயூரி. அதன்படியே அவர்களின் தினசரி நடவடிக்கை அமைந்தது.      


தன்  பெயரில் ஸ்டாஃப் லோன் போட்டு ஒரு லட்ச ரூபாய் வாங்கிக்கொடுத்தாள்  மயூரி. அதைக்கொண்டு நீண்டநாள் கடன்கள் சிலவற்றை அடைத்தாள் திலகா. அது கிரீஷுக்குக் கூடத்  தெரியாது.  

**** 


சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்காக வந்த  ஜான் நாயுடு,  ஏசி இரண்டாம் வகுப்புப் பெட்டியின் சன்னலைப் பிடித்துக்கொண்டு நின்றார். அவரது சென்னை வாசம் திடீர் முடிவுக்கு வரப்போகிறது. இன்னும் சில மாதங்கள் சென்னையில் இருப்பதற்கு பர்மிஷன் கேட்கலாம்தான். ஆனால் அதற்குள் மேலிடத்தில் வேறு ஏதாவது மாற்றம் செய்து மீண்டும் பஞ்சாப் அல்லது ஒடிஸ்ஸா என்று போகவேண்டிவந்தால் என்ன செய்வது? 

மனம் குழம்பிப்போயிருந்தது அவருக்கு. 


மணிகர்ணிகா எவ்வளவு நல்லவள்! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனக்கு எவ்வளவு பெரிய உதவியைச் செய்திருக்கிறாள்! அவளைப் போய் வங்கியில் சிலர் அவதூறாகப் பேசுகிறார்களே என்று எண்ணியபோது கவலையாக இருந்தது. எவ்வளவு பெரிய மூடுபனியும் சூரியன் வந்தால் விலகிவிடுவதுபோல, இவளைச் சூழ்ந்திருக்கும் அவதூறுகளும் ஒருநாள் முடிவுக்கு வந்துவிடும் என்று நம்பினார். 


‘காப்பி காப்பி’ என்று கூவிக்கொண்டே ரயில்வே ஊழியர் வந்தபோது நிறுத்தினார். ரயிலில் எப்போதும் ப்ரூ காப்பி தான் அவருக்குப் பிடிக்கும். குடித்தபின்னும் சில நிமிடங்கள் அதன் அடர்த்தி நாக்கில் படிந்திருக்கும். 


காகிதக்  கோப்பையைத் தூக்கி வாயருகில் கொண்டுபோகும்போதுதான் பார்த்தார், மணிகர்ணிகா தன்னை நோக்கி வந்துகொண்டிருப்பதை! “வாங்க, வாங்க, என்ன திடீர்ப் பயணம்? காப்பி குடிக்கிறீர்களா?” என்றார். அவள் கையில் பயணத்துக்கேற்ற பெரிய பைகளோ பெட்டிகளோ இல்லாமல் வெறும் சிறிய தோல் பை  மட்டுமே இருந்ததை அவர் கவனிக்கத் தவறவில்லை. 


“மன்னிக்கவேண்டும் சார்! சேர்மன் ஒரு முக்கிய தகவலை உங்களிடம் சொல்வதற்காக என்னை அனுப்பினார்” என்றாள். வண்டி புறப்பட இன்னும் பத்து நிமிடம் இருந்தது. என்ன தகவலாக இருக்கும்?


“உங்கள் பயணத்தை ரத்து செய்துவிடுங்கள். நாளை நீங்கள் சென்னையில் இருந்தாகவேண்டுமாம்” என்றாள் அவள். 


“உண்மையில் நானும் இன்று விஜயவாடா செல்வதாக இருந்தது. வேறு காரணத்திற்காக அதுவும் கேன்சல் ஆகிவிட்டது” என்று சிரித்தாள். 


அவசரமாகப்  பெட்டிக்குள் சென்று தன்னுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு இறங்கினார் நாயுடு. “சரி வாருங்கள்” என்று ரயில்நிலைய வாயிலுக்கு வந்தார். “நாளை ஆபீஸில் சந்திப்போம்” என்றார் ஓலாவில் ஏறிக்கொண்டே.  


“இல்லை சார், நான் நாளைக்கு வரமாட்டேன். ஒரு மாதம் மெடிக்கல் லீவ் அப்ளை செய்திருக்கிறேன். துபாய் போகிறேன்” என்றாள். 


அதைக் கேட்டதும் மனதிற்கு சற்றே இதமாக இருந்தது நாயுடுவுக்கு. காரணம் புரியவில்லை. அவரை அறியாமலேயே வாயிலிருந்து “வாழ்த்துகள்” என்ற வார்த்தை எழுந்தது. மணிகர்ணிகாவின் கன்னம் வெட்கத்தால் சிவந்தது. 

(தொடரும்)

   - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து  

இதன் அடுத்த பகுதி   -" மணிகர்ணிகா (8) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.