திங்கள், நவம்பர் 05, 2018

தேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்


பதிவு 08/2018
தேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்

அண்மையில் படிக்கக் கிடைத்த கவிதை நூல் ‘தேதி குறிக்கப்பட்ட வனம்’. புகழ் பெற்ற நாவலாசிரியர் வையவனின் புதியதொரு கவிதை தொகுப்பு.

தன் பதின்மூன்றாவது வயதிலேயே எழுதத் தொடங்கிவிட்ட எம்.எஸ்.பி.முருகேசன், வெளிச்சம் பெற்றது அவரது 19ஆம் வயதில் குமுதத்தில் வெளியான ‘வெளிச்சம் விரட்டுகிறது’ என்ற சிறுகதையின் மூலமே. அப்போதே அவருக்குள்ளிருந்து ‘வையவன்’ பிறந்துவிட்டார். மூன்று கால் நூற்றாண்டுகளைக் கடந்தும் தளர்வின்றி எழுதிக்கொண்டிருக்கும் வையவன், தற்காலக் கணினி யுகத்திற்கேற்பத் தன்னை மாற்றிக்கொண்டிருப்பவர். இப்போதெல்லாம் அவர் கணினியைத் தவிர வேறெதிலும் எழுதுவதில்லை.

சில மாதங்களுக்கு முன்பு அவருடைய ‘மணல்வெளி மான்கள்’ என்ற நாவலின் விமர்சனக் கூட்டம் சென்னை டேக் சென்ட்டரில் நடைபெற்றபோதுதான் நேரடியாக அவருடன் அறிமுகமானேன். (அதற்கு முன்னதாக அவரைக் கல்கியில் தொடர்ந்து எழுதும் நாவலாசிரியராகத்தான் தெரியும். என்னுடைய வட ஆற்காடு மாவட்டத்துக்காரர் என்பதால் அவர்மீது சிறப்பான ஈடுபாடும் உண்டு.)

அவருடைய ‘ஜங்ஷனில் ஒரு மேம்பாலம்’ , மற்றும் ‘ஜமுனா’ என்ற இரண்டு நாவல்களையும் மீண்டும் படிக்கவேண்டுமென்று துடிக்கிறேன். என்ன செய்வது, அவரிடமே அந்தப் பிரதிகள் இல்லை. நூலகங்களில் தேடிக்கொண்டிருக்கிறேன்.  (உங்களிடம் இருந்தால் எனக்குத் தெரிவிப்பீர்களா?) ஒரு பிரதி கூட வைத்துக்கொள்ளாமல் இப்படியா இருப்பீர்கள் என்று அவரைச் செல்லமாகக் கண்டித்தேன். ‘ஆசைமுகம் மறந்து போச்சே- இதை ஆரிடம் சொல்வேனடி தோழி’ என்ற பாரதியார் பாட்டைப் பாடினார் வையவன். பலமுறை வீடு மாற்றநேர்ந்ததால் புத்தகங்கள் சுமையாகக் கருதப்பட்டு, விடைகொடுக்கப்பட்டதை வலியோடு சொன்னார்.  விடுங்கள், மின்புத்தகமாக ஆக்கிவிடலாம் என்று ஆறுதல் சொன்னேன். அதற்கும் யாராவது ஒரிஜினல் பிரதியைக் கொடுத்து உதவவேண்டுமே!

(எனக்காக அவர் எடுத்துக்கொண்ட இலக்கிய  முயற்சிகள் சிலவற்றைப் பற்றிப் பின்னொருநாளில் எழுதுவேன். அவரது நெடிய இலக்கிய வாழ்வின் பல்வேறு பரிமாணங்களைக் குறித்தும் பின்னால் எழுத முயலுவேன்.)      

(சிறப்புத் தகவல்: சொந்தமாகக் கணிப்பொறியும் சுயவெளியீட்டு மென்பொருளும் அவர் வசமுள்ளதால், இப்போதெல்லாம் தன்னை அணுகும் எழுத்தாளர்களுக்குச் சில நாட்களிலேயே அச்சுப் புத்தகம் வெளியிட்டுக் கொடுக்கிறார் வையவன். மிக மிகக் குறைந்த செலவில்.)

அடையாறு காந்திநகரில் அவர் வசிப்பதால் இப்போதெல்லாம் அடிக்கடி அவரைச் சந்திக்க முடிகிறது. அப்படியொரு பொன் காலைப் பொழுதில், அவரே அண்மையில் வெளியிட்ட தனது கவிதைத்தொகுதியை எனக்குக் கொடுத்தார் வையவன். புத்தகத்தின் அட்டை பச்சை பசேல் என்று கண்ணைக் கவரும்விதமாக அமைந்திருந்தது.  

அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த ஆரம்ப நாட்களில் அவருக்கும் காங்கிரஸ் ச.ம.உ. விநாயகம் அவர்களுக்கும் நடந்த இந்த உரையாடல் மிகவும் புகழ்பெற்றதாகும்:

விநாயகம்: Your days are numbered.
அண்ணா:  My steps are measured.

முதல் பார்வையில் வையவனின் தலைப்பிலுள்ள ‘தேதி குறிக்கப்பட்ட’ என்ற சொற்கள், அவர் இயற்கையைப் பார்த்து ‘Your days are numbered’ என்று சொல்வதாக அமைந்துவிட்டதோ என்று தோன்றியது.  ஆனால் சுற்றுச்சூழல் மட்டுமே அவரின் கவிதைகளின் கருப்பொருளாக இல்லை. சமுதாயத்தின் எல்லா விளிம்புகளையும் தொடுகின்ற செய்திகளை அவர் கவிதையில் தொட்டிருக்கிறார் என்பது நூலை முற்றாகப் படித்தபிறகு புரிந்தது.

என்னைக் கவர்ந்த சில கவிதைகளை இங்கே எடுத்துக்காட்டப் போகிறேன்.

ஆயுதங்கள்

பெண்களுக்கு விழிகளே ஆயுதம் அல்லவா!  அந்த வலிமை மிக்க விழிகளை ‘நீ கொசு வலையா, மீன் வலையா’ என்று அப்துல் ரகுமான் கேட்டதை என்னால் தாள முடியவில்லை. நல்லவேளை வையவன் அவற்றின் பெருமையை இதோ மீட்டெடுக்கிறார் தன் வரிகளில்:

அவள் கண்கள் என்னை
விழுங்க முயன்ற ஒரு கணம் ஒரே கணம்
நீச்சல் மறந்த தத்தளிப்பில்
நான் தடுமாறினேன்.

படகிலிருந்து பற்றிக்கொள்ள
உயிர்க்கயிறு வீசியதுபோல்
அவள் உதட்டில் சிறு சுழிப்பு
மீண்டு விட்டேன்
பின் எனது கண்கள்
அவளை விழுங்க விரிந்தன

அவள் விழுந்து விழுந்து
சிரித்தபோது வலை
என் மேல் இறுகியது
விடுபடவே முடியாதவாறு
ஆயுதங்களும் அவற்றை
எதிர்க்க எழும் முனைப்புகளும் போல.

ஆயுதமின்றிக் காதலுமில்லை.

அடடே, இவரும் பெண்டிரின் விழிகளை வலைக்கு ஒப்பிடுகிறாரே! போகட்டும், பெண்களால் எதைத்தான் ஆயுதமாக்க முடியாது? இரண்டு சொட்டுக் கண்ணீரையே ஆயுதமாக்கி சாம்ராஜ்யங்களையே அவர்கள் கவிழ்க்கவில்லையா?

விழிகள் என்னும் குளத்தில் நீச்சல் மறந்த இவனை விழவைக்கிறாள். பிறகு தன் சிரிப்பையே உயிர்க்கயிறாக அவனுக்கு வழங்கி அவனை எழவைக்கிறாள். என்ன அருமையான உருவகம்!  (இந்த நேரத்தில்தானா அவருக்கு வயது எழுபதுக்குமேல் என்று என் மனம் நினைவுபடுத்த வேண்டும்?)     

நீ எவளாகவாவது இரு

பெண்ணியம் பற்றி மாநாடு நடத்திப் பீற்றிக்கொள்ளும் ஆண்வர்க்கத்தின் போலித்தனத்தைத் தோலுரித்துக்காட்டும் ஒரு கவிதையை  அடுத்து நாம் பார்க்கலாம்:

நீ எவளாகவாவது
இருந்துவிட்டுப் போ.

பாடு, ஆடு, நடி,
நாட்டியமாடு, கையில்
அதிகாரக்கோல் பிடித்து
எங்கெங்கே உன்னால்
ஆட்டிப் படைக்க முடியுமோ
செய், நேர்வதற்குப்
பொறுப்பேற்றுக் கொள்.

பெண்ணுரிமைக்கொடி
பிடித்துப் போராடு.
சிறைக்குப் போ.
கவலை இல்லை.

என் தீனித் தட்டில்
இரை வந்து விழவேண்டும்.

என் உடை வெளுப்பாக
மடிப்புக் கலையாமல்
இருந்துவிட வேண்டும்

எப்போது நான் அழைத்தாலும்
படுக்க வந்து சேர்.

நீயும் நானும் சேர்ந்து
பொரித்த குஞ்சுகளுக்கு
இரை முக்கியம். கவனம்.

உனக்கும் எனக்குமான
ஒப்பந்தமல்ல இது.
சமுதாய விதி..

விலங்கென்று கருதினால்
தரித்துக்கொண்டு வெளியேறு.
சந்தித்துக்கொள் விளைவை.

சுருக்கமாய் நீ பெண்.
நான் ஆண்.

போராடுகிறாயா? சரி. போ. செய்.

சர்வதேசப் பெண்கள் தினத்தில்
சிந்தக் காத்திருக்கிறது
முதலைக் கண்ணீர்.

அசப்பில்  பார்த்தால் #MeToo வில் சிக்குபவர்களின்  கொக்கரிப்பை அல்லவா எழுதியிருக்கிறார்!

கண்டு முடித்துவிடு காண விரும்பும் கனவுகளை

உலகத்தரத்தில் அமைந்த ஒரு கவிதையை இனிக் காணலாம்:

நேற்றை நோக்கிப்
பாய்ந்தோடுகிறது இந்த இன்று

நொடியையும் நிமிடத்தையும்
அடித்து முடுக்கி எச்சரித்தபடி
விக்கிரமாதித்யனை
விரட்டி விரட்டி வரும்
சாலிவாகனன் சவாரி போல்
நாளை துரத்தி வருகிறது பின்னால்.

இந்தக் கணம் இறந்து
மறுகணம் ஒன்று உதிப்பதற்குள்
கண்டு முடித்து விடு
காண விரும்பும் கனவுகளை

ஜபமாலை நகர்வதுபோல்
உருளும் காலத்தின் மறுசுற்று
திரும்பி வருமோ வராதோ

அறுபதைக் கடந்த என்னைப் போன்றவர்களுக்கு இந்தக் கவிதையில் அருமையான செய்தி இருப்பதாகவே படுகிறது. ஆம், ஐயா, நிறைவேறாத என் கனவுகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு நான் இன்னும் விரைந்து செயல்படவேண்டும் என்கிறீர்கள். புரிந்துகொண்டேன்.

கானகம் கருவுற்றிருக்கிறது

சுற்றுச் சூழல் சார்ந்த சிறப்பான கவிதை இது.

சற்று நிறுத்தி வையுங்கள்
யானை வேட்டியையும்
மரக் கடத்தல்களையும்.

காதல் தாபம் தணிக்க
பிளாஸ்டிக் பொட்டலங்களோடு
கானாற்றங்கரைகளுக்குச்
செல்லும் காதலர்களே
உங்களுக்கும் சேர்த்துதான்
இந்த அறிவிப்பு.

கானகம் கருவுற்றிருக்கிறது.

கானகத்தின் கருமூலத்தில்
குடியேறி யிருப்பவள்
வேறு யாருமல்ல

யுகங்களின் தொட்டிலில்
தவழ்ந்து தலைமுறைகள்
பல கண்ட அன்னை.

கவனமா யிருங்கள்.
அவள் பகவனைத் தேடித் திரியும் ஆதி.
காவலிருங்கள் கருவுற்றவளுக்கு.

மீறினால் தீய்ந்து விடுவீர்கள்.

தன்னுடைய பகவனைத் தேடிக்கொண்டிருக்கிறாள் வள்ளுவனின் ஆதி. அவளைப் பகைத்துக்கொள்ளாதீர்கள், அழிந்து போவீர்கள் என்று எச்சரிக்கிறார் கவிஞர் வையவன்.  

மலையின் மேலொரு பட்டணம்

ஜவ்வாது மலை, சேர்வராயன் மலை, ஏற்காடு, கொடைக்கானல், ஊட்டி என்று பல மலைகளைக் கண்டவர் வையவன். அன்று மலைகளாக இருந்தவை இன்று பட்டணங்களாக மாறிக்கொண்டிருப்பதை எண்ணி  நாம் வருந்துகிறோம். இவர் அன்றே வருந்தியிருக்கிறார். எந்த மலையைக் குறிப்பாக உணர்த்துகிறார் என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலென்ன, அவர் சொல்வது சத்தியம்தானே!

மலையின் மேலொரு பட்டணம்.
மூங்கில் வனம் அழித்து
காட்டுமரம் வெட்டி, மேடு பள்ளம் நிரவி
மேகப் போர்வை போர்த்திய
சலவைக்கல் மாளிகை எழுப்பி
வெயில் தாங்காத வெள்ளையருக்குக்
கைகட்டிச் சேவகம் செய்யவும்
துரைசானிமாருக்குப் பல்லைக் காட்டிப்
பணிவிடைகள் புரியவும்
அடிமைகள் எழுப்பிய பட்டணம்.

இன்று சுதேசிச் சீமான்கள்
கூறுபோட்டு விற்றுவிட்டு
கறுப்புப் பணமாக்கிக்
குளிர்கால வாசத்திற்கொரு
கொள்ளை மூலதனமாக்கிய பட்டணம்.

ஏழைகள் எட்டிப்பார்க்கிறார்கள்
எப்போதாவது வந்துபோகும் வெயிலை.

விட்டுவிடுங்கள் சற்று குளிர்காணட்டும்
அவர்களது வாழ்க்கை வெயில்.


தாய்ப்பால்

பச்சைக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு அலுவலகம் செல்லும் இளம் தாய், பாலால் கனத்து வலிக்கும் தன் மார்பைத் தடவியபடியே பேருந்திற்குக் காத்திருக்கிறாள். உணர்ச்சிமிக்க அந்தக் கவிதையோடு இந்தக் கட்டுரையை முடிக்கலாமா?

வேலைக்குப் போகும்
இளம்தாய்  கண்ணெதிரில்
‘தாய்ப்பால் முக்கியம்’
சுவரொட்டிக்குப் பசை
பூசிக்கொண்டிருக்கிறார்கள்.

வலி பொறுக்க முடியாது
முலைக் காம்பில்
விம்மிக் கசிந்து துளிர்க்கும்
உயிர் ஊற்றின் உபாதையை
மேலாக்கைச் சரிசெய்வது
போல் மார்பு தடவி
சமாதானம் செய்துகொண்டே

எங்கோ ஏங்கி அழும்
குழந்தையிடம் மன்னிப்புக்
கேட்கிறாள் மனசுக்குள்,

பஸ் போய்விடுமே என்று
பாதியில் உதறி வந்ததற்காக.

அரசாங்கம் கடமை யாற்றுகிறது.
மாதச் சம்பளம் மணி
பார்த்துக் கொண்டிருக்கிறது.

மரக்கிளையில்  ஏணை மாட்டித்
தொங்கவிட முடியாது
மத்தியதர வர்க்கம்.

வையவன் அவர்கள் ஆங்கில இலக்கியத்திலும் எம்.ஏ. பட்டம் பெற்றவர். தனது ஆங்கிலக் கவிதைத் தொகுப்பு ஒன்றையும் அவர் இப்போது வெளியிட்டிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.  
(c) இராய செல்லப்பா

வெள்ளி, அக்டோபர் 19, 2018

செக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல்


பதிவு 07/2018

செக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல்

ஒரு சுற்றுப் பயணத்தின்போது ஒரு காட்டுப்பகுதியை ஒட்டியிருந்த பூங்காவினுள் நாங்கள் நுழைந்தோம். நாங்கள் என்பது மூன்று பேரைக் குறிக்கும்: நான், எனது நண்பர் இளைய தாமு, மற்றும் இன்னும் சரியாக அறிமுகமாகாத ஒரு பெரியவர். என்னைவிடவும்  பத்து வயது கூடுதலானவர்.

‘இளைய தாமு’ என்ற பெயருக்கு விளக்கம்:  இவர் இளைஞர். சமையற்கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். செஃப் தாமு மாதிரியே உடல்வாகு கொண்டவர். அவரைப் போலவே புகழ்பெறவேண்டும், தொலைக்காட்சியில் தோன்றி, புதுப்புது சமையல் முறைகளைத் தெரிவித்து, சற்றே பருமனான, நடுத்தர வயதுக் குடும்பத்தலைவியர்  மத்தியில் பிரபலமாகவேண்டும் என்ற அடங்காத ஆசை கொண்டவர். ஆகவே தன் பெயரை கெஜட்டில் அறிவித்து இளைய தாமு என்று மாற்றிக்கொண்டவர்.

அந்தப் பெரியவரைப் பற்றியும் இரண்டு வார்த்தைகள்:  நாங்கள் நுழையவிருந்த பூங்காவின் வாயிலில் நுழைவுச்சீட்டு  பரிசோதகராக இருந்தவர் அவர். காக்கி பேண்ட்டும் நீல அரைக்கை  சட்டையும் அணிந்திருந்தார். வீட்டு நாய்களுக்குக் கட்டுவோமே அதுபோன்ற நீளமான பட்டி ஒன்று அவர் கழுத்தில் இருந்தது. அதில் ஆங்கில எழுத்துக்கள் நிறைய இருந்தன. படிக்கமுடியவில்லை. 

ஒருவேளை அந்தப் பூங்கா நிர்வாகத்தின் பெயராகவோ, அல்லது அவரை அங்கு நியமித்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் பெயராகவோ இருக்கலாம். அல்லது மறந்துபோய் ஐ.டி.த்துறையில் பணியாற்றும் தன் மகனின் அடையாளப்பட்டையை மாட்டிக்கொண்டு வந்தாரோ தெரியாது. எங்கள் இருவரின் நுழைவுச்சீட்டையும் பரிசோதித்தவர், ‘மன்னிக்கவேண்டும். எனக்கு இன்னும் சற்றுநேரத்தில் வேலைநேரம் முடிந்துவிடும். நானும் உங்களுடன் வரலாமா?’ என்று பணிவுடன் கேட்டார். அப்போது அவருக்குப் பின்னால் இருந்த ஒரு பெண்மணி, ‘இவரை அழைத்துப் போவது நல்லது. விஷயம் தெரிந்தவர்’ என்று சிபாரிசுசெய்யவே நாங்களும் சரியென்றோம். எங்கள் பின்னாலேயே வந்தார்.

மாலை மணி ஐந்தரை. நன்றாக இருட்டிவிட்டது. பூங்காவிற்குள் எங்களைத்தவிர யாரும் இல்லை. வந்தவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டிருந்தனர். பூங்காவின் நடுவிலிருந்த  உயரமான கம்பத்தில் ஐந்து விளக்குகள் இன்னும் ஏற்றப்படவில்லை. இ.தாமு பெரியவரை நோக்கி, ‘அந்த விளக்குக்கு சுவிட்ச் எங்கிருக்கிறது? சொன்னால் நான் போடுகிறேன்’ என்றான்.

பெரியவர் சிரித்தார். ‘இளைஞரே, அது மின்விளக்கல்ல. இயற்கை எரிவாயுவினால் இயங்குவது. கோபர் கேஸ் இணைப்புக்குழாயில் நேற்று காலை ஏற்பட்ட கசிவினால் அதன் இயக்கம் தடைபட்டுள்ளது. நாளை காலைவரை பொறியாளருக்காகக் காத்திருப்பதைத்தவிர வேறு வழியில்லை. அதை விட்டால் பூங்காவில் வேறு விளக்குகள் இல்லை’ என்றார்.

‘அப்படியானால் சீக்கிரம் வெளியேறிவிடலாம் வாருங்கள். நாம் தங்குமிடத்திற்குப் போகலாம். விரும்பினால் நீங்களும் எங்கள் கேம்ப்பில் தங்கலாம்’ என்றேன் நான். ‘இரவு ஏழுமணிவரை பூங்காவில் இருந்துவிட்டுப் பிறகு காட்டினுள் நுழைவதாக இருந்தோம். பரவாயில்லை, அந்த நேரத்தை கேம்ப்பில் செலவிடலாம். இல்லையா தாமு?’

தாமுவுக்கு விருப்பமில்லை என்பது அவன் தலையசைப்பின் தோரணையிலிருந்து தெரிந்தது. ‘நாம் சொல்லியிருந்த நேரத்தைவிட முன்னதாகவே காட்டிற்குப் போவதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எனவே வாருங்கள், பயணத்தைத் தொடங்கலாம்’ என்று நடக்க ஆரம்பித்தான்.

பெரியவர் தன் சட்டைப் பையிலிருந்து மூன்று வேர்க்கடலை உருண்டைகளை எடுத்தார். வெல்லப்பாகில் செழுமையான வேர்க்கடலைப் பருப்புகள் திடமாக ஒட்டியிருந்தன. ஆளுக்கொன்று. ‘கடித்துத் தின்றுவிடாதீர்கள். வாயிலிட்டு அசைபோட்டுக்கொண்டிருந்தால் அது முற்றிலும் கரைவதற்குள் நீங்கள் போகவேண்டிய இடத்தை அடைந்துவிடலாம்’ என்றார்.        

இனிப்பு வேர்க்கடலை உருண்டை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. வாயில் ஒருபக்கமாக அடக்கிக்கொண்டே பேசினேன். ‘தாமு, செய்யவேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் சரியாகச் செய்துவிட்டாய் அல்லவா?’

‘கவலை வேண்டாம் ஐயா! நமக்கு  மிகவும் வேண்டிய நண்பர்மூலம்தான் ஏற்பாடுகள் செய்திருக்கிறேன். எல்லாம் நல்லபடியாக நடக்கும்’ என்றான் தாமு.

நாங்கள் மறைபொருளாகப் பேசுவதாகப் பெரியவருக்கு ஐயம் ஏற்பட்டிருக்கவேண்டும்.  ஒருவேளை நாங்கள் போவது வெள்ளிநிலாக் கப்பலைப் பார்ப்பதற்குத்தான் என்பதைத் தெரிந்துகொண்டிருப்பாரோ?

ஆண்டுதோறும் பதினைந்து நாட்கள் இறந்துபோன நமது முன்னோர்கள் பூமிக்கு அருகில்வந்து காத்திருப்பார்களாம். தத்தம் வாரிசுகள் அன்போடு அவர்களுக்கு எள்ளும் தண்ணீரும் வார்க்கிறார்களா என்று வழிமேல் விழிவைத்துப் பார்த்திருப்பார்களாம். இதைத் ‘தர்ப்பணம்’ அல்லது ‘திதி கொடுத்தல்’ என்பார்கள். சிலருடைய வாரிசுகள் தினந்தோறும் திதி கொடுப்பார்கள். சிலர் பதினைந்துநாளில் இரண்டுமுறையாவது கொடுப்பார்கள்.  சிலரோ கடைசி நாளான ‘மாளய அமாவாசை’ அன்று மட்டுமாவது கொடுப்பார்கள். இவ்வாறு ஒருமுறையாவது திதி கொடுக்கப்பெற்ற முன்னோர்கள் தம் தாகம் தணிந்து, திருப்தியோடு தம் வாரிசுகளை வாழ்த்திவிட்டு மீண்டும் வானுலகம் சென்றுவிடுவார்கள்.

ஒரு சில முன்னோர்களுக்கு வாரிசுகள் இருந்தும் திதி கொடாமல் போனால் அவர்களுக்குத் தாகம் ஏற்பட்டுத் தவிப்பார்களாம். நியதிப்படி திதி கொடுக்காத வாரிசுகளை அவர்கள் சபிக்கவேண்டுமாம். ஆனால் இறந்தபிறகும் தம் வாரிசுகள்மீது கொண்ட அன்பு குறையாத அம்முன்னோர்கள், தங்கள் சாபத்தால் வாரிசுகளுக்குத் துன்பம் வரக்கூடாது என்னும் நல்லெண்ணத்தில், அவர்களுக்குக்  கடைசி வாய்ப்பு வழங்கும்முகமாக இந்த வெள்ளிநிலாக் கப்பலில் அடுத்த அமாவாசை யன்று வந்து கூடுவார்களாம். ஆனால் இந்தக் கப்பல் இருக்குமிடம் அந்தந்த  வாரிசுகளுக்கு மட்டும் சூசகமாகத் தெரியப்படுத்தப்படுமாம்.  அநேகமாக   ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள்மூலம்தான் இது நடக்குமாம்.

இளையதாமு, தனது கல்வியில் மேலும் முன்னேறவும், வெளிநாட்டுக் கப்பல் ஒன்றில் தனக்கு செஃப் வேலை கிடைப்பதற்காகவும், ஃபிரெஞ்சு நாட்டு அழகி ஒருத்தி தனக்கு மனைவியாக வரவேண்டும் என்பதற்காகவும் விழுப்புரம் அருகில்  வி-யில் ஆரம்பித்து டி-யில் முடியும் ஊரிலிருந்த ஓர்  ஆவியுலக ஆய்வாளரின் மகனைச் சந்தித்தபோது அவர்கொடுத்த ஆலோசனைதான் மேலே சொன்னது. (‘அப்பாவுக்கு வயதாகிவிட்டது. இனிமேல் நான்தான் அவருடைய அறிவுக்கும் ஞானத்திற்கும் வாரிசு. அதற்குரிய மந்திரச் சடங்குகள் எல்லாம் காசியில் சென்று செய்துவிட்டோம். அப்பாவின் சக்திகள் முழுமையாக எனக்குள் இறங்கிவிட்டன. ஆகவே நீங்கள் இனிமேல் என்னையே குருவாக ஏற்றுக்கொள்ளத் தடையில்லை.’)

இம்மாதிரி அமானுஷ்ய விஷயங்களில் எனக்கு ஆர்வம் இருப்பதை அறிந்தவுடன் என்னை வற்புறுத்தி அழைத்தான் தாமு. வெள்ளிநிலாக் கப்பல் இந்தமுறை முதுமலைக் காட்டில் இருப்பதாகவும், அங்குசென்று நிறைவேற்ற வேண்டிய பூசைகளுக்கான ஏற்பாடுகளை அந்த ஆவியுலக ஆராய்ச்சியாளரின் குடும்பமே செய்துவிட்டதாகவும் கூறினான். ‘நாம் வெறுங்கையோடு போனால் போதும்’ என்றான். முதலில் குறிப்பிட்ட பூங்காவில் நாம் நுழைந்தால் உடனே அந்த முன்னோர்களுக்குத் தகவல் சேர்ந்துவிடுமாம். குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் காட்டிற்குள் நடந்துசென்றால் நமக்கு வழிகாட்டுவதற்கு யாராவது வருவார்களாம். எல்லாம் முன்னோர்களின் விதிப்படி நடப்பதாம்.

‘பார்த்துக்கொண்டே இருங்கள்: அடுத்த வருடம் உலகின் மிகவும் சொகுசான கப்பலில் செஃப் ஆகத்தான் போகிறேன். பாரிஸ் துறைமுகத்தில் என்னுடைய காதலியைச் சந்திக்கத்தான் போகிறேன். என் முன்னோர்கள் என்னைக் கைவிடமாட்டார்கள்’ என்று குதூகலித்தான் இளைய தாமு.

இந்தப் பெரியவர் வேறு நம்மோடு சேர்ந்துகொண்டுவிட்டாரே, இவரை அந்தக் கப்பல்வரை அழைத்துப் போவது சரியா, தாமுவின் முன்னோர்கள் அனுமதிப்பார்களா என்ற ஐயம் திடீரென்று எனக்குள் எழுந்தது.      

காட்டினுள் நுழைந்துவிட்டோம். அமாவாசை இரவு என்பதால் கடும் இருட்டு.    
இருவர் கையிலும் ஸ்மார்ட்போன்கள் இருந்தும் சார்ஜ் தீர்ந்துவிட்டதால் அணைந்துபோய்விட்டன. பெரியவரிடம் அலைபேசி எதுவும் இல்லை. தட்டுதடுமாறி ஓர் ஒற்றையடிப்பாதை இருப்பதைக்  கண்டுபிடித்தோம். அதற்குப் பெரியவரின் அனுபவமே உதவியது.

‘இந்தக் காட்டில் நான் ஆறு வருடங்களாக இருக்கிறேன் ஐயா! எனக்குத் தெரியாத இடமே இல்லை. அதுமட்டுமல்ல, இப்போது நீங்கள் எங்கே போகவேண்டும் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் நீங்களாகவே விரும்பிக் கேட்டால் மட்டுமே அந்த இடத்திற்கு வழி காட்ட முடியும். இது எங்கள் குருவின் உத்தரவு. நானாக யாரையும் எங்கும் அழைத்துப்போக அனுமதியில்லை.’

நான் இளைய தாமுவின் கையைப் பிடித்துக்கொண்டேன். அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தேன். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு அவன், ‘பெரியவரே, நாங்கள் வெள்ளி நிலாக் கப்பல் பார்க்க வந்திருக்கிறோம். என் முன்னோர்களுக்குத் திதி கொடுக்க விட்டுப் போயிற்று. அதனால்தான்...’ என்றான்.

பெரியவர் பேச்சில் சற்றே மகிழ்ச்சி தென்பட்டதாக உணர்ந்தேன். ‘நல்லது! முன்னோர்களுக்குத் திதி கொடுப்பவர்களின் குடும்பம் என்றுமே தாழ்ந்துபோகாது என்று குருநாதர் சொல்லுவார். வாருங்கள், அந்த இடம் எனக்குத் தெரியும். ஆனால் தற்செயலாக மழை வந்துவிடுமானால் அந்தக் கப்பல் மறைந்துவிடும். ஆகவே விரைவாகப் போகலாம் வாருங்கள். நான் முன்னால் போகிறேன்’ என்று அவர் வேகமாக நடந்தார். நாங்களும் நடந்தோம். என்றாலும் அவர் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இடையிடையே மழைத்தூறல் எங்கள்மேல் விழுவதை உணர்ந்தோம். எனவே வேகத்தைக் கூட்டினோம். ஆனால் கும்மிருட்டில் எங்களால் ஓரளவுக்குமேல்  வேகம்கொள்ள முடியவில்லை.

ஆனால் மழை அதற்குமேல் வராது என்பதற்கு அடையாளமாகப் பெரும் காற்று வீசத் தொடங்கியது. மிகவும் எதிர்க்காற்றாக இருந்தது. நானும் தாமுவும் இறுகக் கட்டிக்கொண்டோம். அப்படியும் எதிர்த்து நிற்க முடியவில்லை. காற்றின் வேகம் அதிகரித்துக்கொண்டே வந்தது.

‘பெரியவரே’ என்று கத்தினோம். பதில் இல்லை. வெகுதூரம் முன்னால் சென்று விட்டாரோ?  ‘பெரியவரே, பெரியவரே’ என்று இன்னும் உரத்த குரலில் கத்தியபடி மெல்ல நடந்தோம். அப்போது சற்றே வெளிச்சம் தெரிந்தது. காற்று முற்றிலுமாக அடங்கிவிட்டது.

தூரத்தில் கப்பல் மாதிரியானதொரு வீடு கண்ணில்  தெரிந்தது. இரண்டு மாடிகள் கொண்ட வீடு. ஒரு நடுத்தரக் குடும்பம் அரசுடைமை வங்கியில் கடன் வாங்கிக் கட்டிய வீடு மாதிரி எளிமையாக இருந்தது.  ஆனால் பல அறைகள் இருந்தன. ஒவ்வொன்றிலும் வெளிச்சம். ஒவ்வொன்றிலும் ஆள் நடமாட்டம். பெண்களும் இருந்தார்கள்.

பெரியவர் என்ன ஆனாரோ என்ற கவலையோடு நாங்கள் இருவரும் வீட்டின் வாயிலை அடைந்தோம். மரத்தால் கட்டிய வீடு. கதவைத் தட்டினோம்.

எங்களுக்கு வியப்பூட்டும் விதமாக அந்தப் பெரியவர்தான் வந்து கதவைத் திறந்தார்! ‘வாருங்கள், தாமு! வெள்ளி நிலாக் கப்பல் இன்னும் சற்று நேரம்தான் இங்கிருக்கும் என்று தகவல் வந்தது. ஆகவேதான் வேகமாக உங்களுக்கு முன்னால் வந்துவிட்டேன். சரி, உங்கள் முன்னோர்களின் பெயர்களை இந்தத் தாளில் எழுதிக்கொடுங்கள்’ என்று ஒரு வெள்ளைத்தாளை நீட்டினார்.  ‘வெறும் விரலால் எழுதினாலே போதும், தாளில் எழுத்துக்கள் தெரியும்.’

அது தாளல்ல, ஆப்பிளின் ஏதோ ஒரு புதுமாதிரியான மொபைல் ஸ்க்ரீன் என்று புரிந்துகொண்டேன். தாமு தன்னுடைய மூன்று தலைமுறைப் பெரியவர்களின் பெயர்களை எழுதிக்கொடுத்தான்.

பெரியவர் அவனை மட்டும் உள்ளே அழைத்துப்போனார். அவர்கள் மரப்படிகளில் இரண்டாம் மாடிக்குச் செல்லும் காலடியோசை தெளிவாகக் கேட்டது. நான் வரக்கூடாதாம். ஏனெனில் என்னுடைய முன்னோர்கள் யாரும் அங்கு வரவில்லையாம். அதனால் எனக்கு உள்ளேவர அனுமதி இல்லையாம். வாசலிலேயே நின்றேன்.

சில மணி நேரத்திற்குப் பின் இளையதாமு இறங்கிவந்தான். ‘முன்னோர்களைப் பார்த்தாயா?’ என்றேன்.

‘சொல்கிறேன். சீக்கிரம் திரும்பிவிடச் சொன்னார்கள். அதிகநேரம் இங்கே இருக்கக்கூடாதாம். வா’ என்று என்னை வேகப்படுத்தினான் தாமு. பூங்காவை வந்தடைந்தபோது விடிந்துவிட்டது.

‘எல்லாரையும் பார்த்தேன்’ என்றான் தாமு. ‘இறந்துபோன என் அம்மா, என் அம்மாவின் தாய்-தந்தையர், என் அப்பாவின் அப்பா - என்று எல்லாரும் அங்கே இருந்தனர். எள்ளும் தண்ணீரும் கொடுத்தேன். திருப்தியோடு அவர்கள் மறைந்துவிட்டார்கள். என்னை நன்றாக ஆசீர்வதித்தார்கள். ஆனால். ஒரே ஒரு குறை...’

என்ன என்பதுபோல் அவனை ஏறிட்டு நோக்கினேன். ‘என்னுடைய பாட்டி – அதாவது அப்பாவின் அம்மா- அவர்கள் மட்டும் வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை’ என்றான் தாமு.

அப்போது பெரியவர் எங்களை நோக்கி வந்தார். ‘நான் மட்டும் இல்லையென்றால் நீங்கள் சிரமப்பட்டிருப்பீர்கள் இல்லையா?’ என்றார். எங்களுக்கு முன்பே அவர் திரும்பியிருக்கவேண்டும். அந்தக் காட்டை நன்றாக அறிந்தவர் அல்லவா?

தாமு சொன்னதை அவரிடம் சொன்னேன். ‘தாமு, உங்கள் பாட்டி இறந்துபோய் எத்தனை வருடம் ஆகிறது?’ என்றார்.

‘மூன்று வருடம்.’

‘அடடா’ என்ற அவரது குரலில் வருத்தம் காணப்பட்டது. ‘அதனால்தான் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. நான் இறந்துபோய் ஆறு வருடம் ஆகிவிட்டதே!’ 

அந்தப் பெரியவரை அழைத்துப் போகச்சொல்லி சிபாரிசு செய்த பெண்மணியும் அப்போது அங்கே வந்துசேர்ந்தார். 'நான் இறந்துபோய் பதினைந்து வருடம் ஆயிற்று' என்றார்.

(குறிப்பு: இது ஒரு ‘பின்-நவீனத்துவ’ச் சிறுகதை.)
(c) இராய செல்லப்பா, சென்னை