வியாழன், ஜூலை 02, 2020

தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்

தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்

-இராய செல்லப்பா

(கொஞ்சம் நீளமான பதிவு)

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமானது, செல்லப்பிராணிகளை அனுமதிப்பதா வேண்டாமா என்பது.

குறிப்பாக நாய்களை.  (அமெரிக்காவில் போல் பூனைகள், அணில்கள், பாம்புகள் போன்றவற்றைச் செல்லப்பிராணிகளாகக் கொள்பவர்கள் இன்னும் இந்தியாவில் அதிகம் இல்லை எனலாம்.)

நன்றி - இணையம்

எங்களது ‘கதவு சாத்தப்பட்ட சமூகத்தில்’ ஆயிரத்துக்கும் மேற்பட்ட  குடியிருப்புகள் உண்டு. சென்னை நகரின் மையப்பகுதியில் இருந்து இந்தப் புறநகர்ப் பகுதிக்கு நாங்கள் இடம் மாறியபோது ஒரு சில நாய்களே தெருக்களில் நடமாடிக்கொண்டிருக்கும். அவையும் முன்னாள் ‘தெரு’ நாய்களே. குடியேறிகளில் எவரிடமும் சொந்த நாய்கள் இல்லை.

குடியிருப்புகளில் மிகவும் முதலில் குடிவந்த ஒருவர், தனக்குக் குழந்தைகள் இல்லாததால், அந்தத் தெருநாய்களைத் தத்து எடுத்துக்கொண்டாரென்று சொல்வார்கள். காலையும் மாலையும் அவற்றிற்குத் தவறாமல்  பிஸ்கட் போடுவார்.  அவையும் நன்றி பிறழாமல் அவர் பின்னாலேயே போகும், வரும். ஆனால் குடியிருப்பில் இருந்த மற்றவர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. எனவே நாய் ஆர்வலர்கள் தங்கள் அன்பு மிகுதியை வெளிக்காட்டுவதற்குப் போதிய நாய்கள் இல்லாமல் அவதிப்பட்டார்கள்.

இருந்த ஒரு சில நாய்களும் அதிகம் சப்தம் செய்ததாக  எனக்குத் தெரியவில்லை.  ஆனால் அந்த நாய்-ஆதரவாளரைப் பிடிக்காத சிலர், நாய்களின் காலநேரமற்ற குரைப்பினால் தங்கள் தூக்கம் கெடுவதாக அவ்வப்பொழுது மனம் நொந்து பேசுவதுண்டு.

ஆகவே, அப்போதிருந்த குடியிருப்பின் சொந்தக்காரர்கள் கூடிப் பின்வரும்  முடிவெடுத்தார்கள்: (1) தற்போது நாய்களுக்கு பிஸ்கட் போடுபவரிடம் அன்பாகப் பேசி, நாய்கள் எழுப்பும் அகால ஓசையைக்  கட்டுப்படுத்த வழிசெய்யவேண்டும்.  (2) குடியிருப்பில் மேலும் புதிய நாய்களை அனுமதிக்கக்  கூடாது. சொந்தக்காரர்களே நாய்களுடன் குடிவருவதைத் தடுப்பதற்கில்லை என்பதால், அவர்களிடமும் அன்பாகப் பேசி, அவர்களின் நாய்களைப் பழைய இடத்திலேயே விட்டுவிட்டு வருமாறு ஊக்குவிக்கவேண்டும். (3)  வாடகைக்கு வருபவர்கள் நாய்களை வைத்திருக்க அனுமதியில்லை. (4) கட்டிடக் தொகுப்பின் நாலு பக்கமும் சுற்றுச்சுவர்களை ஒழுங்காக எழுப்பி வெளி நாய்கள் உள்ளே வந்துபோகாதபடிக்குப் பாதுகாப்பு ஏற்படுத்தவேண்டும்.

இதில் நான்காவது அம்சம் மட்டுமே ஓரளவுக்குச் செயல்படுத்த முடிந்தது. பிஸ்கட் போடும் நாய் ஆர்வலரோ, “இவ்வளவு நாள் என்னை நம்பி வளர்ந்த நாய்களைத் திடீரென்று கைவிட முடியுமா?” என்றார். “வேறு யாராவது அவற்றைப் பொறுப்பாக வளர்க்க முன்வந்தால் கொடுத்துவிடத் தயார்” என்றார். யாரும் முன்வரவில்லை என்பதால் அவருடைய பிஸ்கட் வரலாறு தொடரவேண்டியதாயிற்று.

அடுத்த சில மாதங்களிலேயே நிறைய நாய்கள் குடியிருப்பில் சேர்ந்துவிட்டன. பெரும்பாலும் சொந்த நாய்கள். சொகுசான நாய்கள். ஓரிரண்டைத் தவிர மற்றவை ஓரடி உயரம் கூட இல்லாதவை. பூனையைக் கண்டாலும் பயந்து உரிமையாளரை அண்டிக்கொள்ளும் ரகம். பிறகு என்னத்திற்கு அவற்றை  வளர்க்கிறார்களோ தெரியாது. சில நாய்களின் விலையில் ஒரு ஸ்கூட்டர் அல்லது பழைய காரே வாங்கிவிடலாமாம். தொலையட்டும். அந்த நாய்களால் யாருக்கும் தொல்லை இல்லைதான்.

ஆனால் ஒருமுறை சற்றே உயரமாயிருந்த ஒரு சொந்த நாயை அதன் உரிமையாளர் செல்லமாகக் கட்டவிழ்த்துவிட, அது எதிர்த்திசையில் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டிருந்த சில சிறுவர்களில் ஒருவனைக் கடித்துவிட, மறுபடி  விவாதம் தொடங்கியது. நாயின் உரிமையாளர் மருத்துவச் செலவைத் தானே மேற்கொண்டு விவாதத்தை முடித்துவைத்தார்.      

ஆனால் சொந்த நாய்களைக்  காலை வேளையில் வெட்டவெளிக்கு அழைத்துச் சென்று அவற்றை இயற்கையோடு ‘இயங்க’ விடுவதன்மூலம் உண்டாகும் அசுத்தத்திற்கு யார் பொறுப்பு என்ற கேள்விக்கு உரிமையாளர்கள் யாரும் பதில் சொல்ல முன்வரவில்லை. எல்லாருமே மாதம் ஐம்பதாயிரமாவது சம்பாதிக்கும் 'பெரிய' மனிதர்களே. (அமெரிக்காவில், நாயை வெளியில் அழைத்துச் செல்பவர்கள், கூடவே அவற்றின் கழிவுக்காக ஒரு பிளாஸ்டிக் பையையும் கையோடு கொண்டு போவதைப் பார்த்திருக்கிறேன்.)

சொந்த நாய்களால் வந்த இன்னொரு பிரச்சினை, நாயை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு அலுவலகத்திற்குப் போகிறவர்களைப்  பற்றியது. மாலையில் வழக்கமான நேரத்திற்குள் உரிமையாளர் வந்துசேரவில்லை என்றால் அந்த நாய்கள் போடும் சப்தம் கொஞ்சமா?  

ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை நாய்களின் ‘சினைக்காலம்’  என்கிறார்கள். அப்போது நேரம் காலம் இல்லாமல் தெருநாய்கள் காமக்  களியாட்டத்தில் ஈடுபடும். விளைவு, அடுத்த பருவக்காலத்திற்குள் குடியிருப்பின் மறைவான பகுதிகளில் எல்லாம் நாய்க்குட்டிகள் மயம்! அவற்றை விரட்டியடிக்கத் தாய் உள்ளங்கள் அனுமதிக்காது. வீட்டில் குழந்தைகள் இருந்தால் காலையில் எழுந்ததும் அந்தக் குட்டிகளைப் பார்க்கவேண்டும் என்று ஆடம் பிடிக்கும். அப்போது சிறு சிறு தட்டுக்களில் நாய்களுக்குப் பாலும் வைக்கப்படும். மிக விரைவில்  நாய்க்குட்டிகள் அந்தச் சிறுவர் சிறுமியரை அடையாளம் கண்டுகொண்டு அவர்களின் அடுக்கு வீடுகளுக்குப் பயணம் செய்ய ஆரம்பித்துவிடும். பிறகென்ன,  வழக்கமான ‘நாய் -விவாதம்’ மறு  உயிர்பெற்றுவிடும்.  

பெரிய குடியிருப்பு என்பதால் சட்ட ஆலோசனை பெறப்பட்டது. உள்ளூர்ப் பஞ்சாயத்தின் உதவியை நாடுமாறு கூறப்பட்டது. அவர்களோ, நாய் பிடிக்கும் ஊழியர்களோ, அதற்கான கூண்டு வண்டியோ தங்களிடம் இல்லை என்று கைவிரித்துவிட்டார்கள். என்றாலும் சில மாதங்களில் எப்படியோ சில நாய்களைப்  பிடித்துக்கொண்டு போனார்கள்.

ஆனால் நாய்களின் எண்ணிக்கை குறைவதாயில்லை. காலியாக இருந்த மேலும் பல வீடுகளில் மக்கள் குடியேற ஆரம்பித்தவுடன், அவர்களின் கருணையால் தெருநாய்களும் வாழ்வில் வளம் பெற ஆரம்பித்தன. அடுத்த சினைப் பருவத்தின் பிறகு ஈனப்பட்ட குட்டிகள் அதிக ஆரோக்கியத்துடன் காணப்பட்டன.

நாய்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமானால், டில்லியில் சஞ்சய் காந்தி புரிந்த சாதனையைப் பின்பற்றவேண்டும் என்று ஒரு விலங்கின ஆர்வலர் தெரிவித்த யோசனையைப் பரிசீலித்த சான்றோர்கள், நாய்களுக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்ய ஒப்புதல் அளித்தனர். அதற்கான செலவுக்காக ஆர்வலர்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டது. ஆனால் ஒரு நாய்க்கு இரண்டாயிரம் ரூபாய் தேவை என்பதால் அதிக நாய்களை வசப்படுத்த முடியவில்லை. அது மட்டுமல்ல, கு.க. செய்யப்பட்ட நாய்கள் விரைவிலேயே குடியிருப்பை விட்டு ஏனோ ஓடிவிட்டன. அவற்றின் இடத்தைப் புதிய தெரு நாய்களும், ஏற்கெனவே ஈனப்பட்ட குட்டிநாய்களும் பிடித்துக்கொண்டன.

இதற்கிடையில் ஒரு குழந்தையைக் கடிக்கப்போன நாயைப் பெரியவர் ஒருவர் அடித்துவிட, ‘பெஞ்சி’ல் இருந்த ஐ.ட்டி. ஊழியர் ஒருவர் ‘நீலச்சிலுவை’க்கு அலைபேசியில் தகவல் சொல்ல, அவர்கள் வந்து பெரியவரின் ‘அடாத செயலு’க்காக அவர்மீது வழக்குப் பதிந்துகொண்டார்கள். ஆனால், எதிர்காலத்தில் நாய்கள் அவ்வாறு கடித்தல் தொழிலில் ஈடுபடாது என்று உத்தரவாதம் அளிக்கும் கடமை தங்களுடைய சட்டத்தில் இல்லை என்று வருத்தத்தோடு தெரிவித்தார்கள்.

வேறு வழியின்றி, குடியிருப்பாளர்கள் நாய்கள் பிரச்சினையை இன்னொரு கொரோனா பிரச்சினைபோல் அலட்சியப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

****

சில பெரியவர்களைப்  பொறுத்தவரை இன்னொரு பிரச்சினையும் ஏற்பட்டது. அதுதான் இரவு நேரம் அல்லது விடியற்காலையில் நாய்கள் ஊளையிடும் சப்தம்.

சிறு வயதில் என் தாத்தா சொல்லக் கேட்டிருக்கிறேன்:  யாருக்கு அடுத்த சில நாட்களில் மரணத்தைத் தரவேண்டும் என்று சித்ரகுப்தனின் ஆவணம் சொல்கிறதோ, அந்தத் தெருவுக்கு முன்கூட்டியே யமன் தன்  எருமை வாகனத்தில் வந்து, சரியானவர் மீது அடையாளம்  இட்டுச் செல்வானாம். ஆனால் யாரும் தன்மீது பழிசுமத்திவிடக் கூடாது என்பதில் அவன் கவனமாக இருப்பானாம். அதையொட்டி  அந்தக் குறிப்பிட்ட நபர்களுக்கு வியாதி அதிகரித்து மருத்துவமனைக்குப் போக நேருமாம். அல்லது பாத்ரூமில் வழுக்கி விழுதல் அல்லது அடிதடியில் ஈடுபட்டு காயம் படுதல், அல்லது தவறான காரணங்களுக்காக போலீசின் கவனத்தைப் பெறுதல்  போன்றவை நேருமாம். 

இவர்களுக்கு மரணம் நேருமானால், மக்கள் யமதருமனைக் குறை கூற மாட்டார்கள் அல்லவா?

ஆனால் யமன் யாரைக் குறிவைத்து வருகிறான் என்பதை  நாய்களால் பார்க்கமுடியுமாம். உடனே சம்பந்தப்பட்டவர்களுக்காகத் தன் வருத்தத்தைத் தெரிவிக்கும் விதமாக ஊளையிடத்  தொடங்குமாம். மரணம் நடக்கப்போகும் நாள் வரை இந்த ஊளையிடல் தொடங்குமாம்.

இந்தக் கருத்தை நான் நம்பாவிட்டாலும்  அது உண்மையானதைப்  பலமுறை கண்டிருக்கிறேன். முக்கியமாக, வயதில் பெரியவர்களும் நீடித்த நோயாளிகளும் இதை நம்புவதாகவும் கேள்விப்படுகிறேன்.

எனவே இரவு நேரங்களில் நமக்கு மிக அருகில் கேட்கும் நாய்களின் ஊளையிடல் ஒருவிதமான பயத்தையே உண்டுபண்ணுகிறது. உடனே நமக்குத் தெரிந்து அபாய நிலையில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களின் பெயர்கள் கண்ணில் தெரிவதைத்  தவிர்க்க முடிவதில்லை.

ஒருவேளை, அடிபட்ட காயத்தாலோ, அல்லது வயிற்றுவலி, உடல்வலி காரணமாகவோ நாய்கள் இப்படி அழுமோ என்ற கேள்வியும் எனக்குள்  எழுந்தது. உடனே நினைவுக்கு வந்தவர் திருமதி கீதா ரெங்கன் அவர்கள்தான். அவருடைய புதல்வர் விலங்கியல் மருத்துவர். ஆய்வுப் படிப்பிற்காக இப்போது அமெரிக்காவில் இருப்பவர்.  

“அப்படியெல்லாம் நாய்கள் அழவே அழாது” என்று அடித்துச் சொன்னார் அவர். எப்படிப்பட்ட உடல் வலியையும் பொறுத்துக்கொள்ளும் மனவலிமை நாய்களுக்கு உண்டாம்.  

“ஆனால் ஒரே ஒரு காரணத்திற்காக மட்டும் அவை அழுவதுண்டு” என்றார். அதாவது, தன்னை வளர்த்தவர்கள் தன்னை ஒதுக்கிவைத்தாலோ, தனக்குத் தெரியாமல் விட்டுவிட்டுப் போய்விட்டாலோ  அவை விடாமல் அழுமாம். ஆனால் அது வழக்கமான ஊளையிடும் ஓசைபோல் இருக்காது என்றார்.

அவர் சொன்னது உண்மை தான் என்பதை இரண்டு அமெரிக்கப் பயணங்களில் நான் புரிந்துகொண்டேன்.

முதல் பயணத்தின்போது, டில்லியில் இருந்து நியூஜெர்சி வந்த ஒரு குடும்பத்தைச் சந்தித்தேன். என் குடும்ப நண்பரின் சம்பந்தி அவர். மிக உயரமான உயர்வகை நாய் ஒன்றை அவர் வளர்த்துவந்தது எனக்குத் தெரியும். “ஆறு மாதங்கள் இங்கே இருப்பீர்கள் அல்லவா? உங்கள் நாயை என்ன செய்தீர்கள்?” என்றேன்.

அவர்கள் சிரித்துக்கொண்டே, “எங்கள் உறவினர் வீட்டில் பத்திரமாக இருக்கிறது” என்றார். செலவுக்கு மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் என்று ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரை மீண்டும் அமெரிக்காவில் சந்தித்தேன். வழக்கமான விசாரணைகளுக்குப் பிறகு அவருடைய நாயைப் பற்றிய பேச்சு வந்தது. கணவன் மனைவி இருவர் முகத்திலும் மிகுந்த கலக்கம் உண்டாயிற்று. அவர்கள் சொன்னது இதுதான்:

சென்ற பயணத்தின்போது யார் வீட்டில் விட்டு வந்தார்களோ அவர்கள் நாயைச் சரிவர கவனிக்கவில்லையாம். ஆறே மாதத்தில் மெலிந்துவிட்டதாம்.  எனவே இம்முறை வேறு யாரிடமாவது விட்டுவிட்டு வரவேண்டும் என்று பேசிக்கொண்டார்களாம். அப்போதெல்லாம் இந்த நாய் மிகவும் கவனமாக அவர்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்குமாம். சரி, இம்முறை ‘நீலச்சிலுவை’ காப்பகத்திலேயே விடுவதென்று முடிவுசெய்து, அந்த இடம் எப்படி இருக்கும் என்று பார்த்துவருவதற்காகத் தங்கள் நாயுடன் சென்றார்களாம். இடம் தருவதாக  அவர்கள் ஒப்புக்கொண்டார்களாம். ஆனால் அங்கிருந்த ஏராளமான நாய்களைப் பார்த்தவுடன் இவர்களின் நாய் வண்டியிலிருந்து கீழிறங்கவே மறுத்துவிட்டதாம். ஆனால் அதை இவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.

அமெரிக்காவிற்குக்  கிளம்புவதற்கு ஒரு வாரம் முன்பு நீலச்சிலுவை அதிகாரி ஒருவர் இவர்கள் வீட்டிற்கு வந்து நாயின் ஆரோக்கியத்தைப் பரிசோதித்தாராம். அப்பொழுதே அது முரண்டு பிடித்ததாம்.

பயணத்திற்கான பெரிய பெட்டிகளில் சாமான்களை இவர்கள் அடுக்கிக்கொண்டிருப்பதைக்  கண்கொட்டாமல் அது பார்த்துக்கொண்டிருந்ததாம். “டோன்ட் வொரி, கண்ணா! ஆறே மாதத்தில் வந்து விடுவோம். நீலச்சிலுவையில் உன்னை நன்றாகக் கவனித்துக்கொள்வார்கள்” என்று அதனுடன் கொஞ்சிப் பேசினாலும் அதன் மறுமொழி திருப்தியாக இல்லையாம்.  வழக்கத்திற்கு மாறாக தன் விளையாட்டுத் தனத்தை எல்லாம் இழந்து சோகமாக இருப்பதாக இவர்களுக்குப் பட்டது.

அடுத்த நாள், பிரயாண ஏற்பாடுகளுக்காக அவர்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு நாயிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார்களாம். கடைகளில் வாங்குதலை முடித்துக்கொண்டு வீடு திரும்ப இரவாகிவிட்டதாம். வழக்கமாக கார் ஓசை கேட்டதும் குரைத்து ஜன்னல் வழியாகத் தன்னை வெளிப்படுத்தும் நாய் அன்று மௌனமாக இருந்ததாம். கதவைத் திறந்து உள்ளே வந்தால் நாய் இருப்பதற்கான அறிகுறியே இல்லையாம். பதறிப்போய் வீடு முழுவதும் தேடியதில், ஒரு பாத்ரூம் அருகில் கிடந்ததாம் அந்த நாயின்  உயிர் இல்லாத உடம்பு!

“காலையில் நீங்கள் போனதில் இருந்தே உங்கள் நாய் அழுதுகொண்டே இருந்தது” என்று இரண்டு வீடுகள் தள்ளியிருந்த ஒரு மாது தெரிவித்தாராம்.      

கணவன் மனைவியரின் அழுகை அடங்கச் சிறிதுநேரம் பிடித்தது.

****

இளம் வயதில் எனது எழுத்தார்வத்திற்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர் தமிழ்வாணன். ‘கல்கண்டு’ வார இதழில் அவருடைய கருத்தாழமிக்க கேள்வி பதில் பகுதியும், ‘சங்கர்லால்’ துப்பறியும் மர்மத் தொடர்கதைகளும் அவற்றில் வரும் பாத்திரங்களின் அழகிய தமிழ்ப்பெயர்களும் என்னை மிகவும் ஈர்த்தன.

நாய்களின் ஒரு முக்கிய குணாதிசயத்தைப் பற்றி சங்கர்லால் கூறுவதாகத் தமிழ்வாணன் எழுதியது ஞாபகம் வருகிறது. 

அக்காலத்தில் வீடு புகுந்து திருடுவதைத் தொழிலாகக் கொண்டவர்கள், குறிப்பிட்ட வீட்டின் அருகில் வந்தவுடன், அந்த வீட்டு நாய்க்கு ரொட்டித்துண்டோ அல்லது மாமிச உணவோ முதலில் கொடுப்பார்களாம். அதனால் அது குரைப்பதை நிறுத்திவிடுமாம். வந்த காரியம் முடிந்து அவர்கள் திரும்பிச் செல்லும்போது அந் நாயின் முகத்தில் சிறிது மிளகுத்தூளை வீசுவார்களாம். அதனால் மோப்பம் பிடிக்கும் சக்தியை அது தற்காலிகமாக இழந்துவிடுமாம்!

இதைச் செயல்முறையில் நான் கண்டதுண்டு.

ஒருமுறை என் சகோதரி வீட்டில் வாயிற்காவலனாய் இருந்த தெருநாய்  ஒன்று அனைவரையும் அச்சுறுத்தி வந்தது. நாய்வண்டியாளர்கள் அதைப் பிடித்துக்கொண்டு போனாலும் சிலநாளில் மறுபடியும் அது இவள் வீட்டிற்கே வந்துசேர்ந்தது. அப்போதுதான் நான் தமிழ்வாணனின் யோசனையைச் சொன்னேன்.

கோவளத்திலிருந்து சவாரியை இறக்கிவிட்டுப் போகும் ஒரு ஆட்டோ ஓட்டுநர், அந்த நாயைத் தன்னுடன் அனுப்புமாறும் இருநூறு ரூபாய் கொடுத்தால் அதைக் கண்காணாத தூரத்தில் விட்டுவிடுவதாகவும் முன்வந்தார். “எக்காரணத்தைக்  கொண்டும் நாயைக்  கொலை செய்யக் கூடாது” என்று உறுதிமொழி பெற்றுக்கொண்டு பணத்தையும் நாயையும் கொடுத்தோம்.

கிளம்பும் முன்பு, ‘ஒரு பொட்டலத்தில் மிளகுத்தூள் கொடுங்கள்’ என்று கேட்டுவாங்கிக்கொண்டார்.  நான் வியப்படையவில்லை. சங்கரலாலை அவர் படித்திருக்க மாட்டாரா என்ன?

அதன் பிறகு அந்த நாய் திரும்பி வரவேயில்லை! 

(எல்லாரும் கொரோனாவைப் பற்றியே எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு மாறுதலுக்காக நாய்களைப் பற்றி எழுதினேன். கோபம் இல்லையே?)

 *****

சனி, ஜூன் 20, 2020

பொன்னித் தீவு-19 (நிறைவுப்பகுதி)

பொன்னித் தீவு-19

      -இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்     

  முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(19) நெக்லஸ்.நெக்லஸ்

வாசுவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடையின் உரிமையாளரோ,   அல்லது வாடிக்கையாளர்கள் யாராவதோ பாம்பைப்  பார்த்து விட்டால் போதும், உடனே தாவிப் பிடித்து, நாலு காசு பார்த்து விடலாம். ஆனால் ஒன்றும் நடப்பதாகத் தெரியவில்லை. நேரம் விரைவாக நகர்ந்து கொண்டிருந்தது. இவ்வளவு நேரம் அந்தப் பாம்பு அசையாமல் அதே இடத்தில் இருந்ததே ஆச்சரியம்தான்.

ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக ஆப்பிள் பழங்கள் இருந்த இடத்திற்குப் போன வாசு, யாரும் கவனிக்காத விதமாக, தலையைக் கீழே குனிந்து கொண்டு “ஐயோ, பாம்பு! பாம்பு!”  என்று அலறினான். அத்துடன் ஓர் ஆப்பிள் பழத்தை எடுத்துக் கருவேப்பிலைக் குவியலின் மீது யாரும் அறியாதபடி வீசினான்.

அவ்வளவுதான், அங்கிருந்த வாடிக்கையாளர்கள் எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடலானார்கள். அதுதான் சாக்கு என்று வாசு ஓடிச்சென்று தன்னுடைய பாம்பைத் தானே கெட்டியாகப் பிடித்து வெளியே எடுத்தான். அதற்குள் கடை உரிமையாளர் ஓடி வந்தார். வாசுவின் கையில் பாம்பைப் பார்த்தவுடன் அவருக்கு நிம்மதி ஏற்பட்டது.

"யாரப்பா நீ?  உனக்கு பாம்பு பிடிக்கத் தெரியுமா? சரி சரி, உடனே வெளியே போ" என்று பின்வாசல் வழியாக அவனை முன்னே தள்ளிக்கொண்டு, தான் பின்னே போனார். பாக்கெட்டிலிருந்து 500 ரூபாய் எடுத்து அவனிடம் கொடுத்தார். அது போதாதா வாசுவுக்கு?

கடவுள்தான் காப்பாற்றினார் என்று மிகுந்த சந்தோஷத்துடன் “ரொம்ப நன்றிங்க! நல்லவேளை நான் ஆப்பிள் வாங்க வந்தேன். இந்தப் பாம்பைப்  பிடிச்சேன். இல்லாவிட்டால் எந்தக் குழந்தையை  இது கடித்திருக்குமோ, என்ன ஆகியிருக்குமோ?" என்று மிகவும் கவலை கொண்டவன் போலப் பேசிவிட்டு வேகமாக நடையைக் கட்டினான்.

ஒரு முள் புதரில் பதுக்கி வைத்திருந்த தன் பாம்புக் கூடையை எடுத்து அப்பாம்பை அதில் அடைத்தான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் தன் தாயிடம்,"அம்மா பாம்புக்கு மாஸ்க் போட மாட்டாங்களா?"  என்றான்.

***

கையில் மாம்பழங்களுடன் செம்பகமும் அகிலாவும் யமுனா வீட்டினுள் நுழைந்தார்கள். பாம்பு களேபரத்தில் தனக்கு வேண்டிய கறிவேப்பிலையை எடுக்க மறந்த ஆச்சி, தன் பங்குக்குச் சில மாதுளம் பழங்களை வாங்கி வந்திருந்தார். செல்வம் அனைவரையும் வரவேற்றான். ராஜா வாசலிலேயே நின்று கொண்டான்.

வாய் பேச முடியாத செம்பகம், தன் முக பாவத்தின் மூலமும் சைகையின்  மூலமும் யமுனா கருவுற்றிருப்பதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகத்  தெரிவித்தாள்.

அகிலா தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் விதமாக யமுனாவின் கன்னத்தில் முத்தமிட்டாள். "அக்கா, நீங்கள் அம்மா வீட்டுக்குச் செங்கல்பட்டுக்குப் போகும்வரையில் உங்களை வாரம் ஒருமுறை நான் வந்து கவனித்துக் கொள்வேன்" என்றாள்.

"ரொம்ப நன்றி அகிலா" என்றான் செல்வம்.

கொஞ்ச நேரத்தில் சந்திரனும் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டான். தன்னை எதற்காக அகிலா  வரச்சொன்னாள் என்று அவனுக்குக் குழப்பமாய் இருந்தது. ஆச்சியும் இருப்பதைப் பார்த்தவுடன் திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல் இருந்தது. அதேசமயம், நெக்லஸ் விஷயத்தில் தனக்கு எந்த இலாபமும் ஏற்படவில்லை என்பதால் பழி சுமக்கும் வேலையும் தனக்கு இருக்காது என்று நம்பினான்.

அவனை விடவும் அகிலாவின் நெஞ்சம்தான் குற்ற உணர்வால் குறுகுறுத்துக்கொண்டிருந்தது. யமுனாவின் நெக்லஸை பாரஸ்மல்லிடம் விற்றவள் அவள்தானே! இப்போது பணம் தன்னிடம் இருக்கிறது; ஆனால் அந்த நெக்லஸை பாரஸ்மல் யாருக்கோ விற்றுவிட்டாராமே!

அகிலா எழுந்து உள்ளே போனாள். அனைவருக்கும் யமுனா காபி தயாரித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தோளில் கை வைத்து, "அக்கா ஒரு விஷயம் உங்களிடம் பேச வேண்டும், வேறு யாருக்கும் தெரிய வேண்டாம்" என்று குசுகுசுத்த குரலில் கூறினாள்.

பெரிய பாத்திரத்தில் டிகாக்ஷனில் பாலைக் கலந்து சர்க்கரை போட்டு ஆற்ற ஆரம்பித்த யமுனா, அகிலாவை உற்றுப்பார்த்தாள்.

"அக்கா,  உங்கள் நெக்லஸ்  தொலைந்து விட்டதாமே, உண்மையா?" என்று கேட்டாள்.

யமுனாவின் முகத்தில் சற்றுமுன்வரை இருந்த மகிழ்ச்சி மறைந்து ஆழமானதொரு வருத்தம் படரத்தொடங்கியது. ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.

அதற்குள் அங்கு வந்த செல்வம், "இவள் போய் போலீசில் புகார் வேறு செய்திருக்கிறாள். அவர்கள் என் மீது சந்தேகம் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். நல்லவேளையாக என் மாமனார் வந்து விஷயத்தை முடித்து வைத்தார்" என்றான்.

முழு கடப்பாரையைச் சோற்றில் வைத்து விழுங்கும் திறமைசாலியான ஆச்சி, "அப்படியில்லை செல்வம்! புஷ்பா வந்தபோது நான்தான் அவளிடம் பேசி, கொடுப்பதைக் கொடுத்து விஷயத்தை முடித்தேன்" என்றார். யமுனாவும் ஆம் என்று தலையசைத்தாள்.

"அப்படியா ஆச்சியம்மா?" என்று கிண்டலாகக் கேட்டான் சந்திரன்.

ஒருவேளை,  தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவானோ என்று ஆச்சிக்குப் பயம் தொற்றிக்கொண்டது. அவனை மேற்கொண்டு பேசவிடாமல் செய்வதற்காக, "அது ஒரு பெரிய கதை! நீ படிக்கிற பையன், உனக்கு  ஏன் அதெல்லாம்?" என்று கண்டித்தார்.

யமுனா அனைவருக்கும் காப்பி கொடுத்தாள். தானும் காப்பி  டம்ளரைக் கையில் ஏந்தியபடி ஒரு நாற்காலியில் அமர்ந்தாள்.

அகிலாவும் செம்பகமும் தன்னிடம் மாம்பழங்களைக் கொடுத்து வாழ்த்து சொன்னதற்கு நன்றி தெரிவித்தாள்.

ஆனால் ராஜா, "மேடம் அதற்குள்ளாகவே நன்றி சொல்ல வேண்டாம். கொஞ்சம் பொறுங்கள்" என்றான்.

செம்பகமும் சைகையால் அதையே சொன்னாள். அவள் கையில் சிறிய துணிப்பை இருந்தது.

அகிலாவும் யமுனாவைப் பார்த்து,"ஆமாம் அக்கா, எனக்காகவும் நீங்கள் கொஞ்சம் பொறுக்க வேண்டும். ஒரு விஷயம் இருக்கிறது" என்று தன் கைப்பையைக் காட்டினாள்.

செல்வம் ஆச்சரியத்துடன் அகிலாவையும் செம்பகத்தையும் மாறிமாறிப் பார்த்தான்.

அகிலா முந்திக் கொண்டாள். "செல்வம் சார்! தொலைந்துபோன நெக்லஸைக்  கண்டுபிடித்துவிட்டேன். ஆனால் அது பணமாக மாறி விட்டது" என்று தன் கைப்பையிலிருந்து ரப்பர் பேண்ட் போட்ட ரூபாய் நோட்டுக் கற்றையை வெளியே எடுத்தாள்.

உடனே ராஜா, "அது எப்படி முடியும்? அந்த நெக்லஸ் கொஞ்சமும் அலுங்காமல் நசுங்காமல் என்னிடம் இருக்கிறதே!" என்றான்.

யமுனாவும் செல்வமும் சந்தோஷ மிகுதியால் இவர்கள் பேசுவதை ஆர்வத்தோடு கேட்க முற்பட்டார்கள். ஆனால் ஆச்சியோ, தன் தலைக்கு மேல் கத்தி தொங்குவது போல் உணர்ந்தவராக, சந்திரனைக் கூப்பிட்டு, "ஒரு பத்து நிமிடம் என் வீட்டுக்கு வந்து போயேன்! சுவர்க் கடிகாரத்திற்கு பேட்டரி மாற்ற வேண்டும்" என்று அந்த இடத்தை விட்டு அகன்றார்.

யமுனாவின் நெக்லஸ் ராஜாவிடம் இருப்பதான செய்தியைக் கேட்டதும் அகிலாவுக்குப் புல்லரித்தது. "ராஜா நீங்கள் சொல்வது உண்மையா? பாரஸ்மல் லிடமா வாங்கினீர்கள்?" என்றாள் மகிழ்ச்சியுடன்.

ராஜா விஷயத்தை விளக்கினான். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குப் புரிந்த சேவைக்காகத் தன் கம்பெனி கொடுத்த பரிசுத் தொகையில் அந்த நெக்லஸை வாங்கி, செம்பகத்தின் ஒரே நீண்டநாள் ஆசையை நிறைவேற்றியதைச் சொன்னான்.

செம்பகம் ஒரு பேப்பரை எடுத்து "ஆமாம் அகிலா! யமுனா அக்காவின் நெக்லஸைத் தான் அவர் எனக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்" என்று எழுதிக்காட்டினாள்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் இருந்தது அகிலாவுக்கு. தன் கையில் இருந்த ரூபாய் நோட்டுக் கற்றையை ராஜாவிடம் கொடுத்தாள்.

"ராஜா, தயவுசெய்து இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு நெக்லசை என்னிடம் கொடுங்கள். மேற்கொண்டு பணம் தேவை என்றாலும் நான் தந்து விடுகிறேன். இது யமுனாவுக்குச் சேரவேண்டியது" என்று பணிவோடு கூறினாள்.

ராஜாவும் செம்பகமும் சிரித்தார்கள். "நாங்களும் அதற்காகத்தான் வந்திருக்கிறோம். இதை மிஸ்டர் செல்வம் ஒரு மார்வாடி இடம் அடகு வைத்திருந்தார். பிறகு அவருக்கே விற்றுவிட்டார். அதைத்தான் நான் பணம் கொடுத்து வாங்கி வந்தேன். இது செல்வம் வீட்டு நெக்லஸ் தான்" என்றான்.

"ஆனால் இந்த நெக்லஸைத் திருப்பிக் கொடுப்பதற்காக எங்களுக்குப் பணம் எதுவும் வேண்டாம்" என்று அவன் சொன்னதும் அகிலா ஆச்சரியத்துடன் யமுனாவைப் பார்த்தாள்.

தனக்குத் தெரியாமல்  நெக்லஸை அடகு வைக்கும் அளவுக்குத் தன் கணவனுக்கு என்ன கஷ்டம் நேர்ந்திருக்க முடியும் என்று யமுனா திகைத்தாள். இது ஒன்று மட்டும்தானா அல்லது வேறு ஏதாவது நகைகளையும் அடகு வைத்து இருக்கிறானா என்று அவநம்பிக்கை எழுந்தது.

செல்வம் துடித்துப் போனான். "மிஸ்டர் ராஜா! வார்த்தையை அளந்து பேசுங்கள். நான் எதற்கு என் வீட்டு நகையையே திருடி அடமானம் வைக்க வேண்டும்? என்ன உளறல் இது?" என்று அவனை அடிக்கவே போய்விட்டான்.

உடனடியாக அவன் அருகில் வந்து சமாதானப்படுத்தினாள் அகிலா. "இதற்கெல்லாம் காரணம் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!" என்று கூறி நிறுத்தினாள்.

அப்போது சந்திரனும் ஆச்சியும் வந்து சேர்ந்தார்கள்.

நிச்சயம் தன்னுடைய பெயரைத்தான் சொல்லப் போகிறாள் என்று ஆச்சி நடுநடுங்கி விட்டார். நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பின. சந்திரனும் அச்சத்தில் ஆழ்ந்தான்.

"மனிதனும் மிருகமும் சேர்ந்த செய்த காரியம் இது" என்று சிரித்தாள் அகிலா.

"ஆமாம் யமுனா! மொட்டைமாடியில் நானும் சந்திரனும் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு குரங்குப் பட்டாளம் நிறைய வீடுகளில் இருந்து பல சாமான்களை அள்ளிக்கொண்டு வந்து போட்டது. அதில் இந்த நெக்லசும் ஒன்று. அதனால் இதை யாருடையது என்று எப்படிக் கண்டுபிடிப்பது? யார் வேண்டுமானாலும் தங்களுடையது என்று கூறலாமே! ஆகவே உண்மையைக்  கண்டுபிடிக்கும் வரை என்னிடமே இருக்கட்டும் என்று வைத்துக் கொண்டேன்" என்று அகிலா முடித்தவுடன் ஆச்சி மறுஉயிர்  பெற்றவர் போலத் தெம்புடன் நெற்றியைத் துடைத்துக் கொண்டார். சந்திரனும் அதுபோலவே உணர்ந்தான். எப்படியும் அகிலா தன்னை காட்டிக் கொடுக்க மாட்டாள் என்று அவனுக்குத் தெரியும்.

அதன் பிறகு நடந்ததை எல்லாம் வரிசையாகச் சொன்னாள் அகிலா. ஓர்  ஏழைப் பெண்ணின் பிரசவத்திற்கு ஆஸ்பத்திரி கட்டணம் செலுத்துவதற்காக நகையை வைத்து பணம் பெற்றதையும், தகப்பனாரிடம் இருந்து பணம் வந்தவுடன் அதை மீட்டு விடலாம் என்று இருந்ததையும் ஆனால் மேற்கொண்டு செலவு ஏற்பட்டபோது நகையை விற்றுவிட நேரிட்டதையும் வருத்தத்துடன் கூறினாள். ஆனால் அந்தப் பெண் தொழிலாளிக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவுகளை ராஜாவின் கம்பெனி முழுமையாகத் திருப்பிக் கொடுத்துவிட்டதால், அந்தப் பணத்தை இப்போது யமுனாவுக்குக் கொடுப்பதற்காகவே இங்கு வந்ததாகவும் அகிலா கூறினாள்.

செல்வத்துக்கு மட்டுமல்ல ராஜாவுக்கும் இந்த விஷயம் இதுவரை தெரியாத ஒன்றாக இருந்தது. ஒரு திருட்டுப் பழியைத் தன்மேல் சுமந்துகொண்டு அகிலா மனத்தாலும் தொழில் திறமையாலும் மீராபாய்க்கு  ஆண் குழந்தை நலமாகப் பிறப்பதற்குக் காரணமாக இருந்ததை எண்ணும்போது அவனுக்கும் செம்பகத்திற்கும் கண்கள் பனித்தன.

"ஆனால் இந்த நெக்லஸை உங்கள் பணத்திற்கு நாங்கள் விற்பதாயில்லை. அப்படித்தானே செம்பகம்?" என்று மனைவியைப் பார்த்துக் கண்ணடித்தான் ராஜா. அவளும் ஆமாம் என்பதுபோல் மலர்ச்சியோடு சிரித்தாள்.

தன்மேல் வரவிருந்த பழி எப்படியோ விலகிப் போனதை அறிந்த ஆச்சி, நெக்லஸ் விஷயத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிடவேண்டும் என்று துடித்தார். 

"ஏன் அப்படிச் சொல்கிறாய் செம்பகம்? உன் கணவர் எவ்வளவு ரூபாய்க்கு இந்த நெக்லஸை மார்வாடியிடம் இருந்து வாங்கினாரோ,  அந்தப் பணத்தை அகிலாவிடம் இருந்து நீ வாங்கிக் கொள்ள வேண்டும் தானே! அதில் என்ன சிக்கல்?" என்றார் ஆச்சி.

"சிக்கல் இதுதான் ஆச்சியம்மா! இந்த நெக்லஸை யமுனா அக்காவுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்குப் பரிசாக அளிக்கப்போவதாகச் செம்பகம் முடிவு செய்திருக்கிறாள்" என்று ராஜா சொன்னவுடன் அங்கிருந்த அனைவர் முகத்திலும் நம்ப முடியாத ஆச்சர்யம் தோன்றியது.

யமுனாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தன்னுடைய நெக்லஸ் தன்னிடம் வந்து சேர்ந்தால் போதும் என்று தோன்றியது. தன்  கணவன்மீது  எந்தக் குற்றமும் இல்லை என்பதே அவளுக்கு மிகவும் நிம்மதியைக் கொடுத்தது. 

ராஜா கூறினான்: "செல்வம் சார்! நாங்கள் ஏழைகளாக இருந்தாலும் எப்போதும் மற்றவர் பொருளுக்கு ஆசைப்பட்டதில்லை. என்னைப் பொறுத்தவரை தொழிலில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே குறிக்கோள். இந்தக்  கொரோனா காலத்தில் எங்கள் கம்பெனியில் பணியாற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நான் செய்த மனப்பூர்வமான சேவைக்காக கம்பெனி எனக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசு கொடுத்திருக்கிறது. அதில்தான் இந்த நெக்லசை வாங்கினேன்.

"ஆனால் இந்த நெக்லஸ் வந்த சில நாட்களிலேயே கடவுள் எங்களுக்கு இன்னொரு பரிசையும் கொடுத்துவிட்டார். ஆகவேதான் அந்த இரண்டாவது பரிசை நாங்கள் வைத்துக்கொண்டு,  முதல் பரிசை யமுனா அக்காவிற்கே கொடுத்து விடுவது என்று முடிவு செய்தோம்" என்றான்.

யமுனா, செம்பகத்தின் நல்ல மனதை அப்போதுதான் புரிந்து கொண்டவளாக, அருகில் வந்து அவளைக் கட்டிக்கொண்டாள். "செம்பகம், அந்த இரண்டாவது பரிசு என்னவென்று சொல்ல மாட்டாயா?" என்றாள்.

"போங்க அக்கா" என்று சொல்வதுபோல் செம்பகத்தின் உதடுகள் அசைந்தன. முகத்தில் நாணம் படர்ந்தது. உடனே அதைப் புரிந்துகொண்ட ஆச்சி, "அப்படியா விஷயம்? கள்ளி! நீ உண்டா யிருப்பதைச் சொல்லவே இல்லையே!" என்று அவளுடைய கன்னத்தைக் கிள்ளினார்.

செம்பகம் தன் பையிலிருந்து நெக்லஸை எடுத்து யமுனாவிடம் கொடுத்தாள். அவள் அதை செல்வத்திடம் கொடுத்தாள்.

அகிலா முடியவே முடியாது என்பது போல் தலையை ஆட்டினாள். "இந்தப் பணம் அந்த நெக்லசுக்கான விலை. இதை  ராஜா பெற்றுக் கொண்டே ஆகவேண்டும்" என்று அவன் கையில் திணித்தாள்.

"ஆமாம் ராஜா! உன்னுடைய நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியாக முடிந்து இருக்கிறது. கடவுள் உனக்கு ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டார். இந்தப் பணத்தில் புது நெக்லஸ் வாங்கிச் செம்பகத்துக்குப் போடு!" என்று முடித்து வைத்தார் ஆச்சி.

குடியிருப்பு சங்கத்தின் செயலாளரான ஹரிகோபால் செல்வத்தோடு பேசுவதற்காக வந்தவர், இதுவரை நடந்த சுவாரசியமான உரையாடலை கவனித்துக்கொண்டிருந்தார்.  "ராஜா செல்வம் நீங்கள் இரண்டு பேரும் செய்ய வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. அதுதான் நாளை வியாழக்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு போய் ஒரு வடை மாலை சாத்தி விடுங்கள். இல்லையென்றால் இந்த நெக்லஸை ஞாபகம் வைத்துக்கொண்டு மறுபடியும் அந்த ஆஞ்சநேயர் நம் குடியிருப்பில் ஏதாவது விளையாட ஆரம்பித்து விடுவார்" என்றார்.

எல்லோரும் கொல்லென்று சிரித்து விட்டனர்.

செல்வம் தன் கையாலேயே நெக்லஸை யமுனாவுக்கு அணிவித்தான். "இனிமேலாவது ஜாக்கிரதையாக இரு" என்றான்.

சந்திரன் சற்றே சத்தமாக "யாராவது உடனே ஐந்நூறு ரூபாய் கொடுங்கள்" என்றான். "நாளைக்கு வடைமாலை என்றால் இன்று போய் அட்வான்ஸ் கொடுக்க வேண்டாமா?"

செம்பகம் கருவுற்றிருப்பதை அறிந்த வக்கீல் மாமிக்கு அளவற்ற சந்தோஷம். அகிலாவைப் பார்த்து, "நீ எம்பிபிஎஸ் முடிப்பதற்குள்ளேயே கைராசியான டாக்டர் ஆகிவிடுவாய் போலிருக்கிறதே! வாரம் ஒரு முறை யமுனாவைப் பார்க்க வரும்போது செம்பகத்தையும் பார்த்துவிடவேண்டும், சரியா?" என்றார்.

அகிலாவின் முகத்தில் சம்மதப்  புன்னகை மிளிர்ந்தது.

(முற்றும்)

வெள்ளி, ஜூன் 12, 2020

பொன்னித் தீவு-18

பொன்னித் தீவு-18

    -இராய செல்லப்பா

                   இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்                                              முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(18) வாசு வாசு

தன் பெயரை வாசு என்று மாற்றிக்கொண்ட பிறகு உண்மையிலேயே அதிர்ஷ்டம் வந்துவிட்டதாகவே தோன்றியது சுள்ளானுக்கு.

இருக்காதா பின்னே? வாசு என்ற பெயரில் தன் தொழிலைத் தொடங்கிய அன்றே அவனுக்கு ஆயிரம் ரூபாய் முதல் வருமானம் கிடைத்துவிட்டதே!

அவனுடைய மூலதனம் மூங்கிலால் செய்யப்பட்ட  இரண்டு வட்ட வடிவப்  பெட்டிகள்  மற்றும் ஒரு சாக்குப்பை, கொஞ்சம் கயிறு. அவ்வளவே.  பாம்பு பிடிப்பவனுக்கு வேறென்ன வேண்டுமாம்?

பாம்பின் வாலைப் பிடித்துக்கொண்டு,  இலாவகமாக அதன் தலையை மூங்கில் பெட்டியின் மேல்மூடியினால் மெல்லத் தட்டினால் அது கொஞ்சம் எதிர்த்துவிட்டு அடுத்த கணம் பெட்டியின் அடிப்பகுதியில் வாலைச் சுருட்டிக்கொண்டு படுத்துவிடும். தானாகப் பெட்டியைவிட்டு எழாது.

இரண்டு பாம்புகளுக்குமேல் பிடிக்கவேண்டிய தேவை பெரும்பாலும் இருக்காது என்பதால் அந்த இரண்டு மூங்கில் பெட்டிகளே வாசுவுக்குப் போதுமானதாக இருந்தது.

அன்றைய வருமானத்துக்குக் காரணம் ராஜா தான்.

ராஜா, தன் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களை ஒரு கல்லூரி வளாகத்தில் இருத்தினான் அல்லவா, அங்கு பாம்புகள் உலவுவதாக ஒரு சந்தேகம் எழுந்தது.

நெடுஞ்சாலையில் இருந்து கல்லூரியின் உள்ளே ஒரு கிலோமீட்டர் தூரம் அலங்கரிக்கப்படாத இயற்கை மிளிர்ந்துகொண்டிருந்தது. மரங்களும் செடிகளும் சீராகவே நடப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே பாம்புப் புற்றுகள் சில இருந்தன. கல்லூரி விடுதியின் பின்புற எல்லையில் ஒரு நீண்ட வயல்பரப்பு இருந்தது. எலிகளைப்  பிடிக்க வரும் பாம்புகள் சிலநேரம் கல்லூரிக்குள்ளும் எட்டிப்பார்ப்பதுண்டு. மாலையில் கல்லூரி முடிந்ததில் இருந்து, காலையில் கல்லூரி திறக்கும்வரை மனித நடமாட்டம் குறைவு என்பதால் பாம்புகள் சுதந்திரமாகத் திரிந்துகொண்டிருந்தன.

உள்ளூர்ப் பாம்புகளுக்கு ஆங்கிலம் தெரியாததாலும், பொறியியல் படித்தால்  சரியான வேலை கிடைக்காது என்பதாலும்தான் பாடம் நடக்கும் நேரத்தில் பாம்புகள் வருவதில்லை என்று விடுதி  மாணவர்கள்  நம்பினார்கள்.

தன்னுடைய தொழிலாளர்களின் நலத்தில் மிகவும் அக்கறை கொண்டிருந்த ராஜா, தனக்குத் தெரிந்த ஒரு குடியிருப்பில் வழக்கமாகப் பாம்பு பிடிப்பவனான  வாசுவை அழைத்து வந்தான். 

பாம்பு பிடிக்கும் தொழிலில் வாசு மூன்றாவது தலைமுறையாளன். ஆகவே, சில மணி நேரத்திலேயே அலைந்து திரிந்து ஐந்து பாம்புகளைப் பிடித்துவிட்டான். அரைநாள் வேலைக்கு ஆயிரம் ரூபாய் கேட்டான். “கொரோனாவால எங்கேயுமே போகமுடியலீங்க. ரெண்டு மாசமா வருமானமே இல்லீங்க. பெரிய மனசு பண்ணிக் கொஞ்சம் போட்டுக்குடுங்க” என்று கெஞ்சினான்.

அத்துடன் பாம்புகள் வராமலிருக்க சில புதர்களையும் அவனே அகற்றிக்கொடுத்தான்.

ராஜா நன்றியுடன் ஆயிரம் ரூபாய் கொடுத்தனுப்பினான்.

ஐந்து பாம்புகளும் அதிக விஷமில்லாதவை. நீளமும் குறைவு. ஆகவே இரண்டே பெட்டிகளில் அடங்கிவிட்டன. அவற்றை எடுத்து சைக்கிளில் கட்டிக்கொண்டு கிளம்பினான் வாசு.

சாலையில் ஒரு தேநீர்க்கடை கூடத்  திறக்கவில்லை. நல்லவேளை சைக்கிளில் வந்த நடமாடும் தேநீர் வியாபாரி கருணை செய்தான். காகித டம்ளர் மிகவும் சிறியதாக  இருந்ததால் மூன்று டம்ளர் தேநீர் வாங்கி அருந்தினான். பெட்டியில் அடங்கியிருந்த பாம்புகள் மனித அரவத்தால் சற்று அசைவதுபோல் இருந்தது. இலேசாகப் பெட்டியைத் தட்டி அவைகளை அடக்கினான். நல்ல வருமானம்  சம்பாதித்த திருப்தியில் ஒரு பீடியைப் புகைக்க ஆரம்பித்தான்.  

அப்போது தற்செயலாக அந்தப் பக்கம் போன ஒரு காய்கறி வேனில் இருந்து “டேய் சுள்ளான்!” என்று அழைத்தபடி கீழிறங்கினான் அஜித்மாடன். அவனும் பாம்பு  பிடித்துக்கொண்டிருந்தவன்தான். மாடன் என்ற பெயரை, அஜீத் ரசிகர் மன்றத்தில் சேர்ந்தவுடன் ‘அஜீத்மாடன்’ என்று மாற்றிக்கொண்டு முன்னங்கையில் அஜீத்தின் உருவத்தைப் பச்சையும் குத்திக்கொண்டவன். 

இரண்டு பாம்புகளை வைத்துக்கொண்டே மாதம் இரண்டாயிரம், மூவாயிரம்  சம்பாதித்துக்கொண்டிருந்தான் அஜீத்மாடன்.  எப்படியென்றால், ஒரு பாம்பை கலெக்டர் ஆபீஸிலும் இன்னொன்றை அதற்குப் பக்கத்திலுள்ள தபாலாபீஸ் அல்லது பேங்க் போன்ற  இன்னொரு அரசாங்க அலுவலகத்திலும் காலை நேரத்தில் இரகசியமாக விட்டுவிடுவான். அவை தப்பியோடி விடாதபடி அந்த இடத்திலேயே பிள்ளைபெற்ற பூனை மாதிரி அலைந்துகொண்டிருப்பான். காலையில் வாசல் பெருக்கவரும் பெண்களிடம் பேச்சுக் கொடுப்பான். ‘டீல்’ போடுவான்.

அதாவது, அவர்கள் பெருக்குவதை நிறுத்திவிட்டுச் சும்மா நிற்கவேண்டும். முதலில் வரும் அதிகாரியிடம் ‘சார், ஒரு பாம்பு உள்ளே இருக்கு சார்’ என்று பயத்துடன் கூறவேண்டும். அவ்வளவே. அதற்கு இருபது ரூபாய் பரிசு கிடைக்கும். அதிகாரி உடனே தன்னுடைய மேலதிகாரிக்கு போன் போடுவான். அவர் இரண்டாயிரம் வரை ‘சேங்ஷன்’ செய்வார். அடுத்து நகரசபை துப்புரவுத் தொழிலாளர்களின் துணையோடு பாம்பு பிடிப்பவனைக் கண்டுபிடிக்கவேண்டும்.

இங்குதான் அஜீத்மாடனின் மக்கள்தொடர்பு சாமர்த்தியம் வெளிப்படும். பாம்பு விஷயமாக யார் அவனை அழைத்தாலும் பத்து சதவிகிதம் கமிஷன் என்று உறுதிப்படுத்தியிருந்தான். குறைந்தபட்சம் நூறு  ரூபாய். ஆகவே அவர்களே அவனுடைய ‘பிசினஸை’ ரேட் பேசி முடிவெடுத்து, வாங்கியும் கொடுத்துவிடுவார்கள். அதன்றியும், பாம்பைத் தேடுவதாக ஆபீஸ் முழுவதையும் மேல்கீழாக்கி விடுவான். அதை மறுபடிச் சீரமைக்கும் வேலையில் பேரம் பேசும் திறமைக்கேற்ப அவர்களுக்கு வருமானம் கிடைக்கும். ‘வாழ்-வாழ விடு’ என்ற உயரிய தத்துவம் அங்கே புலப்பட்டது.

சில சமயம், தான் விட்ட பாம்பை உயிரோடு பிடிக்க முடியாமல் போவதும் உண்டு. அப்போது தொடர்ந்து தொழில் நடத்துவதற்குப் புதிய பாம்புகளைத் தேடிப் பிடித்துக்கொடுக்க சுள்ளான் என்கிற வாசுவின் உதவியை நாடுவான். ஒரு பாம்புக்கு நூறு ரூபாய் கொடுப்பான்.            

திருமணமாகாத சுள்ளானுக்கு அதுவே பெரிய தொகை. ஆனால் மாடனின் மனைவிக்கோ அந்தத் தொழிலே பிடிக்கவில்லை. “ஒரே பாம்பை வைத்து ஊரை ஏமாற்றுகிறாயே, உனக்கு ஒட்டுமா?” என்பாள். “தொழிலை மாற்றுகிறாயா, இல்லை தாலியைக் கழற்றிக் கொடுத்துவிட்டு இன்னொருவனுடன் போகட்டுமா?” என்று திமிராகக் கேட்பாள். அவள் அப்பன் கசாப்புக்கடை வைத்திருந்தான். இந்தக் காரணங்களால் அவளை எதிர்க்கமாட்டாமல், காய்கறி வண்டி நடத்தும் வேலைக்குப் போனான் மாடன் என்கிற அஜீத்மாடன்.

“மாடா! என்னை சுள்ளான் என்று கூப்பிடாதே! இப்போது என் பேர் வாசு” என்றான் இவன்.

“அதேதான்! நீயும் என்னை இனிமேல் அஜீத்மாடன் என்றே கூப்பிடவேண்டும்” என்றான் அவன்.

சைக்கிள் தேநீர் வியாபாரி இவர்களின் நட்பான பேச்சைப் பார்த்து, தானாகவே தலா இரண்டு தேநீர் டம்ளர்களை நிரப்பிக்  கொடுத்தான்.    

வாசு தன்னுடைய முதல்நாள் பெயர்மாற்ற அதிர்ஷ்டத்தை அவனுக்கு விளக்கினான். கைவசம் ஐந்து பாம்புகள் இருப்பதாகவும் மாடன் விலைக்கு வாங்கிக்கொள்வானா என்றும் கேட்டான்.

“அந்த கசமாலம் வேலையெல்லாம் செய்யமாட்டேன். நான் இப்போ வெஜிடபிள் மர்ச்சண்ட் ! தெரியுமா?” என்றான் மாடன்.

“சரி, வேறு யாருக்காவது வேண்டுமான்னு சொல்லேன்.”

வாசுவை ஏளனமாகப் பார்த்தான் மாடன். “உன்னைப்போல முட்டாள் யாராவது இருப்பானா? இந்த ஓ எம் ஆர் ரோடில் எவ்வளவு அடுக்குமாடிக் குடியிருப்புகள் இருக்கின்றன! ஒவ்வொன்றிலும் ஒரு பாம்பை விட்டுவிடு. ஐந்தில் இரண்டு பேராவது உன்னைக் கூப்பிடுவார்கள். வாட்ச்மேனோடு டீல் பண்ணுடா!” என்றான்.

பிறகு, “கோயம்பேடு மார்க்கெட்டை இப்போது திருமழிசைக்கு மாற்றிவிட்டார்கள். ரன்னிங் டைம் அதிகம். கத்திரி வெயில் வேறு. காய்கறிகள் வாடிவிடும். நான் வரட்டுமா?” என்று கிளம்பினான். தன்னுடைய புது நம்பரைக் கொடுத்தான்.

கொரோனா காரணமாகக்  குடியிருப்புகளில் மனித நடமாட்டம் அதிகமில்லாததால் வாசுவால் பாம்பை யாருக்கும் தெரியாமல்  விடுவது சிரமமாக இருந்தது. மிகுந்த வெறுப்புடன் நாலு பாம்புகளை ஒரு சாக்கடையில் வீசினான். ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு சிந்தித்தபடியே கிளம்பினான்.

கையில் இருந்த பணம் வேறு  அவனை என்னவோ செய்தது. வழியில் திறந்திருந்த ஒரு டாஸ்மாக்கில்  இருநூறு ரூபாயைச் செலவு செய்தபிறகு   புதிய தெம்புடன் நடந்தான்.

அதோ, ஒரு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பு! அதுதான் யமுனாவின் குடியிருப்பு. ஆயிரம் வீடுகள் இருக்கும். நிறைய தோட்டங்கள், பூஞ்செடிகள், மரங்கள். நடுவில் ஒரு சூப்பர் மார்க்கெட். அந்தக்  குடியிருப்புக்காகவே இயங்கிக்கொண்டிருந்தது. வாசுவுக்கு வழி தெரிந்துவிட்டது.

அந்தக் கடையின் பின்வாசல் அருகே நின்று கவனித்தான். ஊழியர்கள் அதிகம் இல்லை. காய்கறிப் பிரிவு பெரியதாக இருந்தது. எல்லாவிதமான காய்கறிகளும் பழங்களும் குவிந்திருந்தன. கறிவேப்பிலை, கொத்தமல்லி  மற்றும் கீரைகள் ஏராளமாக இருந்தன. ஒரு சன்னலும் திறந்திருந்தது. அதுதான் சரியான இடம் என்று தோன்றியது வாசுவுக்கு. மெல்லப் பாம்பை சன்னல்வழியாக உள்ளே இறக்கிவிட்டான். அது கறிவேப்பிலைக் குவியலுக்குள் போய் ஒளிந்துகொண்டது. மனித வாசனையை நுகர்ந்தால் அது வெளியில் வராது. ஐந்தாறு பெண்கள் நடமாடிக்கொண்டிருந்தார்கள்.

வேகமாக வந்து முன்வாசலில்  நுழைந்தான் வாசு. ‘தேங்காய் இருக்கிறதா?’ என்று கேட்டுக்கொண்டே பாம்பு இருந்த பக்கம் போய் ஓரமாக நின்றுகொண்டான்.

****

கையில் பணத்தைச் சுமந்துகொண்டு அகிலாவும் அந்தக் குடியிருப்புக்கு வந்தாள். இன்று எப்படியும் யமுனாவிடமும் செம்பகத்திடமும் பேசி நெக்லஸ் பிரச்சினைக்கு ஒரு முடிவு காணவேண்டும் என்ற உறுதியோடு அவள் இருந்தாள்.         

செல்வத்திடமும் பேசினாள். இன்று முழுவதும் வீட்டில்தான் இருப்பதாகப் பதில் வந்தது. ராஜாவையும் வரும்படி கேட்டுக்கொண்டாள். சந்திரன் முக்கிய சாட்சி என்பதால்  அவனையும் வரச் சொன்னாள்.

யமுனாவுக்கு போன் செய்தபோது அவள் சூப்பர்மார்க்கெட்டில் பழம் வாங்கப் போயிருப்பதாகத் தெரிந்தது. எனவே அகிலாவும், அவளுக்குப் பின்னாலேயே சந்திரனும் அந்தப் பகுதிக்கு விரைந்தார்கள். கர்ப்பிணியாக இருக்கும் யமுனாவை வெறும்கையோடு பார்ப்பது சரியில்லை என்று பழங்கள் வாங்க முடிவு செய்தாள்  அகிலா.

செம்பகமும் அதே காரணத்திற்காகத் தானும் யமுனாவிற்குப் பழங்கள் வாங்க விரும்பினாள்.

கருவேப்பிலைக் குவியலுக்கு அருகில்தான் பழங்கள் விற்கும் பகுதி இருந்தது. விட்டுவிட்டு அந்தக் குவியலில் இருந்து ஏதோ அசைவது தெரிந்தது. ஆனால் யாரும் குறிப்பாகக் கவனிக்கவில்லை.    

வாசு காய்கறிப் பகுதிக்குள் இங்கும் அங்குமாக ஏதோ  காய்களை வாங்கவந்தவன்போல் எடுப்பதும் பொறுக்குவதுமாக  நடித்துக்கொண்டிருந்தான். கடை உரிமையாளர் அந்தப் பக்கம் வரவேண்டுமென்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். அதற்குள் பாம்பு எந்தப்பக்கம் நகருமோ என்று பதற்றத்துடன் இருந்தான். விஷமில்லாத பாம்புதான். ஆனால் மனிதர்கள் சாவது விஷத்தால் அல்லவே, பாம்பென்ற பயத்தினால்தானே!

ஆச்சிக்கு எப்படி மூக்கில் வேர்த்தது என்று தெரியவில்லை. அவரும் கையில் ஒரு பையுடன் அங்கு வந்தார். ஆனால் அவருக்கு அன்று அவசரமாகத் தேவைப்பட்டது கறிவேப்பிலைதான்….

செம்பகத்தையும் யமுனாவையும் அகிலாவையும் அந்த இடத்தில் ஒருசேர பார்த்த ஆச்சி வியப்புடன், “என்னடி கூத்து இது! மூணு பேரும்  இங்க கூட்டம் போடறீங்க!” என்றவர், “நானும் வந்துடறேன். கறிவேப்பிலை மட்டும் எடுத்தா போதும்!” என்று  கறிவேப்பிலையை நெருங்கினார்.

வாசு உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தான். கறிவேப்பிலையில் அசைவு அதிகரித்தது.

(தொடரும்) 

                     

       இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

செவ்வாய், ஜூன் 09, 2020

பொன்னித் தீவு -17

பொன்னித் தீவு-17

    -இராய செல்லப்பா

                   இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்           
                  

 (17) புஷ்பா - யமுனா

முன்னோர்களுக்குத் திதி கொடுக்க இராமேஸ்வரம் போவதென்று புஷ்பாவின் தந்தை விநாயகம் முடிவெடுத்ததுதான் அவளுடைய வாழ்க்கைப் பாதையையே புரட்டிப்போட்டுவிட்டது.

விடியற்காலை இரயிலில் இருந்து இறங்கி, அவசரம் அவசரமாக ஒரு விடுதியில் அறை எடுத்துக்கொண்டு விநாயகமும் புஷ்பாவும் தங்கினார்கள். ஆறுமணிக்கு வேனில் வந்து அவர்களை தனுஷ்கோடிக்கு அழைத்துப் போவதாக இராமநாத அய்யர் (புரோகிதர்)  சொல்லியிருந்தார். அதற்குள் அரைமணிநேரம் குட்டித்தூக்கம் போட்டுவிட்டு, அறையிலேயே குளித்துவிட்டுக் கிளம்பவேண்டும்.

இங்குதான் ஸ்ரீராமர், மணலால் சிவலிங்கம் பிடித்து, அதற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தாராம். அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மை என்ன தெரியுமா?” என்றார் அய்யர்.

அய்யர் சொன்னபடி, மணலை  எடுத்துக் கடல்நீரைவிட்டுப்  பிசைந்து ஒரு லிங்க உருவை அமைத்திருந்தார் விநாயகம். அய்யர் சொன்ன மந்திரங்களை, அர்த்தம் தெரியாமலும், வார்த்தைகள் புரியாமலும் உச்சரித்தபடி அந்த லிங்கத்திற்கு வில்வமும் பூக்களும் தூவிக்கொண்டிருந்தவர், “தெரியாது சாமி!” என்றார்.

இது கூடத்  தெரியாதா என்பதுபோல அவரைப் பார்த்த அய்யர், “ரொம்ப சிம்பிள்! இங்கு இப்படி ஒரே ஒரு முறை லிங்க பூஜை செய்தால் போதும், இராம பக்தர்களுக்கும் பிரார்த்தனை பலிக்கும், சிவ பக்தர்களுக்கும் பலிக்கும்! அதுதான் விசேஷம்!” என்று விளக்கினார்.

 பூஜை முடிந்தபிறகு தனுஷ்கோடியை விட்டுக் கிளம்பினார்கள். “இராமேஸ்வரம் கோவிலில் ஒன்பது மணிக்கு இருந்தால் போதும். அதற்குள் சமுத்திர ஸ்நானம் செய்துவிட்டு, கோவில் வாசலில் என்னுடைய பெயர்ப்பலகை இருக்கும். அங்கு வந்துவிடுங்கள். நாழிக்கிணறுகளில் ஸ்நானம் முடித்துவிட்டு, திதி கொடுத்துவிடலாம். பிறகு நம் வீட்டில் உணவு தயாராக இருக்கும்” என்றார் அய்யர்.          

விடுதியின் அறையை அடைந்தபோது சுற்றுலாத் தலங்களுக்கே உரிய ‘புரோக்கர்’ பட்டாளம் அவர்களைச் சூழ்ந்துகொண்டது. பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலுடன், அதற்கான வாகனவசதிகள் பற்றிய முழு விவரத்துடன் அவர்கள் மொய்த்துக்கொண்டிருந்தனர். அப்துல்கலாம் நினைவிடத்தை மறக்காமல் பார்க்கவேண்டும் என்று பலமுறை நினைவுபடுத்தினார்கள்.

விதி யாரை விட்டது? அவர்களில் ஒரு நபர் மட்டும் புஷ்பாவிடம் நெருங்கி “வணக்கம் தங்கச்சி! உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டதா?” என்று மெதுவாகக் கேட்டார். சுமார் முப்பது வயதிருக்கும். படித்த இளைஞர். பெயர் பூபதி என்று சொன்னார்.   

அதற்குள் விநாயகம், “பிளஸ் டூ முடிச்சிருக்கு. சர்வீஸ் கமிஷனுக்கு அப்ளை பண்ணியிருக்கு” என்றார்.

அவ்வளவுதான், பூபதியின் முகத்தில் தோன்றிய ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று தோன்றியது புஷ்பாவுக்கு.

"கவலையை விடுங்கள் சார்! உங்கள் நல்ல காலம்தான் இன்று நீங்கள் இராமேஸ்வரம் வந்ததும்  என்னைப் பார்க்க நேர்ந்ததும்! சர்வீஸ் கமிஷன் போஸ்டிங் எல்லாம் இராமேஸ்வரத்தில்தான் முடிவுசெய்வதாக  வாட்ப்பில் வைரலாகி இருக்கிறதே, பார்க்கவில்லையா?” என்றார் பூபதி.  

மேலும் தொடர்ந்தார். “நமக்கு வேண்டிய அண்ணன் ஒருவர், சென்னையில் அரசாங்க டிரைவராக இருக்கிறார். ரொம்ப செல்வாக்குள்ளவர். திமுக வானாலும் சரி, அதிமுக வானாலும் சரி, அவ்வளவு ஏன், பிஜேபி யிலும் கூட அவரால் நமக்கு வேண்டியதைச் செய்துகொடுக்க முடியும். நீங்கள் சென்னையில் இருப்பது வசதியாய்ப் போயிற்று. நீங்கள் ரூமுக்குப் போங்கள். நான் அண்ணனிடம் பேசிவிட்டு  அய்யர் வீட்டுக்கு வந்து மற்ற விஷயங்களைத்      தெரிவிக்கிறேன். ஆனால் ஒன்று, காரியம் முடிகிறவரையில் நமக்குள் இது இரகசியமாக இருக்கவேண்டும்!” என்று கூறிவிட்டு பூபதி அவசரமாகக் கிளம்பினார்.

சடங்குகள் முடிந்து பகல் உணவும் முடிந்து அய்யர் வீட்டு மாமியிடம் மொத்தச்  செலவுக்கும் ‘செட்டில்’ செய்த பிறகு, வெளியில் வந்தனர் விநாயகமும் புஷ்பாவும். பூபதி அவர்களுக்காகக் காத்திருந்தார்.

சில முக்கிய விவரங்களைச் சொன்னார். அதற்கான செலவையும் சொன்னார். விநாயகத்திடம் அவ்வளவு பணம் இல்லை. ஆனால் ஒரு ஏக்கர் புன்செய் நிலம் தரிசாக இருந்தது. “அது  போதுமே! அண்ணனிடம் இப்போதே  பேசுகிறேன்” என்று பூபதி சற்றுத் தொலைவு சென்று அலைபேசியில் பேசினார். பிறகு மகிழ்ச்சியோடு ஓடி வந்தார்.

நீங்கள் சென்னை வந்தவுடன் இந்த நம்பருக்கு போன் பண்ணச் சொன்னார் அண்ணன். அநேகமாக இரண்டே மாதத்தில் உங்களுக்கு ஆர்டர் வந்துவிடுமாம்!” என்று உத்தரவாதமளித்தார் பூபதி.

புஷ்பாவுக்குத் தெரியாமல் பூபதியின் கையில் நான்கு ஐந்நூறு ரூபாய்களை  வைத்து அழுத்தினார் விநாயகம்.

ஒரு நல்ல நாளில் போலீஸ் துறையில் உதவியாளராகச் சேர்ந்தாள் புஷ்பா.

விநாயகத்தின் நிலம், அண்ணன் சொன்ன  மகளிர் அணிச் செயலாளர் ஒருத்தியின் பெயரில் கிரயம் செய்யப்பட்டது. மிகுந்த அன்போடு விநாயகத்தின் கையிலும் பத்தாயிரம் ரூபாய் தரப்பட்டது. கைச்செலவுக்கு வேண்டுமல்லவா?

புஷ்பா வேலைக்குப் போகவேண்டும் என்று நினைத்தவளே அல்ல. அதேசமயம் கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசையும் இல்லை. தூங்குவதிலும்தோழிகளோடு பேசுவதிலும், சினிமா பார்ப்பதிலும் கொஞ்சகாலம் கழித்து விட்டு, திருமணமாகி செட்டில் ஆகிவிடவேண்டும் என்பதே அவள் கனவாக  இருந்தது.

இராமேஸ்வரம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. அதிலும் அவளுக்குப் பிடிக்காத போலீஸ் துறையில் அவளைக் கொண்டு வந்து நுழைத்து விட்டது.

***

"உனக்கு என்னடி புஷ்பா, போலீஸ் துறையில் இருக்கிறாய்! உட்கார்ந்த இடத்திலேயே  ஆயிரக்கணக்கில் வரும்! ரெண்டே வருடத்தில் சொந்த வீடு கட்டி விடுவாய்" என்று பொறாமைப்பட்டாள் தோழி மோகனா. வேலையில்லாதப் பட்டதாரி. (அவள் இதுவரை இராமேஸ்வரம் போனதில்லை.)

எரிச்சலாக வந்தது புஷ்பாவுக்கு. "சொல்லமாட்டாயா பின்னே? ஒரு கிராமத்தில் வந்து மாட்டிக் கொண்டிருக்கிறேன். இன்ஸ்பெக்டருக்கு நான் தான் டீ போட்டுக் கொடுக்க வேண்டும். சம்பளத் தேதியில் கைமாற்று வேறு வாங்கிக்கொண்டு விடுவார். திரும்பிவராது! நானாவது வீடு கட்டுவதாவது!"

மோகனாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும். மேலதிகாரிகளைப் பார்த்து நீ 'தொழில்'நுட்பத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும். அதன்பிறகு பாரேன், மாதமொரு நெக்லஸ் செய்துகொண்டு விடுவாய்" என்று நம்பிக்கை அளித்தாள் மோகனா.

நெக்லஸ் என்றவுடன் 'செல்வம்- யமுனா- ராஜா' என்ற முக்கோணம் புஷ்பாவின் மனதில் நிழலாடியது.

யமுனாவின் புகாரை விசாரிப்பதற்காக அவள் வீட்டுக்குப் போன இன்ஸ்பெக்டர் கண்ணன்திரும்பி வந்து புஷ்பாவிடம், "டைம் வேஸ்ட்! நெக்லஸ் பிரச்சினை தீர்ந்து விட்டதாக யமுனாவின் தகப்பனார் கூறிவிட்டார்" என்று சுரத்தில்லாமல் தெரிவித்திருந்தார்.

அந்தப் பின்னணியில் மோகனாவின் பேச்சைக் கேட்டவுடன் புஷ்பாவுக்கு ஒரு யோசனை தோன்றியது.

இன்ஸ்பெக்டருக்குத் தெரியாமல், தானே போய் யமுனாவிடமும் மற்றவர்களிடமும் விசாரணை செய்தால் என்ன? இன்ஸ்பெக்டரும் அப்படித்தானே, மற்ற அதிகாரிகளுக்குத் தெரியாமல், தானே சில விஷயங்களைக் கையாள்கிறார்? சில கேஸ்களில் சமரசமும் செய்து வைக்கிறார்?

சும்மாவா வந்தது இந்தப் பதவி? இரண்டு ஏக்கர் நிலம் அல்லவா அதற்கான விலை? அந்தப் பணத்தை எப்படித்தான் மீட்பது?

***

கதவைத் திறந்த யமுனாவுக்குப் புஷ்பாவைக் கண்டதும் ஆச்சரியம் மட்டுமல்ல,  அதிர்ச்சியாகவும் இருந்தது. அன்று போலீஸ் ஸ்டேஷனில் சாதாரண உடையில் இருந்தவள், இன்று போலீஸ் யூனிபாரத்தில் வந்திருந்தது யமுனாவுக்குச் சற்றே பயத்தையும் ஊட்டியது.

அந்த நேரம் பார்த்து அவளைத்தவிர யாருமே வீட்டில் இல்லை. பரமசிவமும் பார்வதியும் அதே குடியிருப்பில் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஓர் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தனர். செல்வம், அவசரமாக அழைக்கப்பட்டு அவனுடைய அலுவலகத்திற்குச் சென்றிருந்தான்.

வாங்க புஷ்பா!” என்று அவளை அமரச் செய்த யமுனா, “என்ன குடிக்கிறீர்கள்? டீயா இல்லை ப்ரூ காப்பியா?” என்றாள்.

சற்றே மேடிட்டிருந்த அவளுடைய வயிற்றைப் பார்த்து விஷயத்தை ஊகித்தவளாக, “விசேஷம் போல் இருக்கிறதே! கங்கிராஜுலேஷன்ஸ்!” என்ற புஷ்பா, “எனக்குக் காப்பிதான் பிடிக்கும்” என்றாள்.  

வெட்கம் கலந்த புன்னகையைப் பதிலாக அளித்த யமுனா இருவருக்கும் காப்பி கொண்டுவந்தாள். அருந்தியபின் புஷ்பாவிடம் “நீங்களும் போலீஸ் உமனா? நான் யாரோ என்று இருந்தேன்” என்றாள்.

அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் புன்னகை செய்தாள் புஷ்பா. “அதிருக்கட்டும், உங்கள் கணவர் இல்லையா?” என்றாள்.

ஒருமாதமாக ஒர்க் ஃப்ரம் ஹோம் தான், இன்றுதான் அவசர வேலையாக ஆபீஸ் போயிருக்கிறார்.”

நல்ல சமயம், இதை நழுவ விடாதே என்று புஷ்பாவின் உள்மனது சொன்னது. எழுந்து நின்றாள்.

சரி, விஷயத்துக்கு வரட்டுமா?  நெக்லஸ் தொலைந்துபோனது பற்றி புகார் கொடுக்க வந்தீர்களேஅப்புறம் என்ன ஆயிற்று? உங்கள் கணவர் என்ன சொல்கிறார்?”     

யமுனாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. நெக்லஸ் இன்னும் கிடைக்கவில்லை என்ற உண்மையைச் சொன்னால், தன்  கணவரை அழைத்து இவள் விசாரிக்கக்கூடும். கிடைத்துவிட்டதென்று பொய் சொல்வதற்கும் துணிச்சல் வரவில்லை.

அன்றைக்கு இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். அப்பாவிடம்தான் பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு எல்லா விஷயமும் தெரியுமே” என்று விட்டேற்றியாகப்  பதில் கூறினாள்.

இப்போது புஷ்பாவுக்கு இலேசான பயம் தொற்றிக்கொண்டது. ஒருவேளை இன்ஸ்பெக்டரே இந்த வழக்கை ‘ஒருவாறு’ முடித்துவிட்டிருந்தால், தான் வந்து போனது அவருக்குத் தெரிந்துவிட்டால் பிரச்சினையாகிவிடுமே!

ஆமாம், ஆனால் கேஸை நாங்கள் முடிக்கவேண்டும் அல்லவா? அதனால்தான் கேட்கிறேன். நெக்லஸ் ஒன்றுதான் காணாமல்போனது என்றும் அதுவும் கிடைத்துவிட்டது என்றும் நீங்கள் ஸ்டேட்மெண்ட் கொடுத்தால் எங்கள் வேலை முடிந்துவிடும். அதற்காகத்தான் இன்ஸ்பெக்டர் என்னை அனுப்பினார்” என்று சமாளித்தாள் புஷ்பா.

ஒரு நிமிடம்” என்று பால்கனிக்குப் போனாள் யமுனா. “இந்தப் பாழாய்ப்போன குடியிருப்பில், பால்கனியில்தான் டவர் கிடைக்கிறது”  என்றபடி அப்பாவுக்குப் போன் செய்தாள்.

மணியொலிப்பது கேட்கிறது, ஆனால் எடுப்பாரில்லை. மீண்டும் முயற்சித்தாள். அப்போதும் பலனில்லை.             

அப்பா வரும்வரை உட்காருங்களேன். அவரில்லாமல் நான் எதுவும் எழுதித்தர இயலாது” என்றாள் யமுனா.

தன் நிலைமையைச் சிக்கலாக்கிக்கொள்ள விரும்பாத புஷ்பா, “இல்லை யமுனா! நான் இன்னும் மூன்று கேஸ்களை விசாரிக்கவேண்டும். நேரமில்லை. சரி, நாளை வருகிறேன். உங்கள் கணவரை விசாரித்தே ஆகவேண்டும்” என்று மிடுக்கோடு கிளம்ப எத்தனித்தாள்.

அவரை ஏன் விசாரிக்கவேண்டும்? இன்ஸ்பெக்டரே கேஸ் முடிந்துவிட்டதாகக் கூறினாரே!” என்று தயக்கத்தோடு சொன்ன யமுனாஅவள் வெளியே போகாதபடி கதவருகில் நின்றுகொண்டாள்.

அந்தநேரம் பார்த்துதானா ஆச்சி வரவேண்டும்!

வாங்க போலீஸ்காரம்மா! நெக்லஸ் விஷயமா வந்தீங்களா? செல்வம் சார்கிட்டப் பேசினீங்களா?” என்று எடுத்துக்கொடுத்தார் ஆச்சி.

இவர் யார் என்பதுபோல் ஆச்சியைப் பார்த்தாள் புஷ்பா. தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஆச்சி, “ஒரு நிமிஷம் இரும்மா!” என்று சமையல் அறைக்குள் நுழைந்து யமுனாவுக்குக் கண்சாடை காட்டினார்.

பிறகு மெல்லிய குரலில், “இங்க பாரு, இந்த போலீஸ்காரங்க இப்படித்தான் அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணிக்கிட்டே  இருப்பாங்க. அன்னிக்கு இன்ஸ்பெக்டர் வந்தாரு, இன்னிக்கி  இவளை மட்டும் அனுப்பியிருக்காருன்னா காரணம் புரியல்லியா ஒனக்கு?” என்று யமுனாவைக் கேட்ட ஆச்சி, மெல்லிய குரலில், “ஒரு ஐந்நூறு இருந்தால் குடுத்து அனுப்பிடலாம். விஷயம் முடிந்துவிடும். இல்லாட்டி ஒங்க வீட்டுக்காரர் கம்பெனிக்கே போய் விசாரிக்கணும்னு நிப்பாங்க! எவ்வளவு அசிங்கம் பாரு!” என்றார்.

ஐந்நூறு கைமாறியது. “இதெல்லாம் எதுக்குங்க” என்று நாணத்தோடு கேட்பதுபோல் கேட்டாலும், கொடுத்ததை வாங்கிச் சட்டையின் உள்பையில் பத்திரமாக அழுத்திக்கொண்டாள் புஷ்பா.

ஒன்றும் இல்லாத விஷயத்துக்கே ஐந்நூறு ரூபாயா என்று அதிசயித்தாள். மனம் மோகனாவுக்கு நன்றி சொன்னது. அடுத்த விசிட் எங்கே போகலாம் என்று மனதிற்குள் தேடலானாள்.

மிகுந்த ஜாக்கிரதை உணர்வோடு ஆச்சி யமுனாவிடம் இரகசியமாகக் கூறினார்: “இதையெல்லாம் உன் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிராதே! இவரைத் தெரியும் அவரைத் தெரியும் என்று விஷயத்தைப் பெரிதாக்கிவிடுவார். அப்புறம் உன் கணவன் பேர்தான் ரிப்பேர் ஆகும்!”

பிறகு, “அயன்காரனிடம் நேற்று நாலு சேலை கொடுத்தேன். பொறுப்பில்லாதவன்!  இன்னும் கொண்டுவரவில்லை. நான் வரட்டுமா?” என்ற ஆச்சி, துக்கம் விசாரிப்பவர் போல் முகத்தை வைத்துக்கொண்டு, “யமுனா, அந்த நெக்லஸ் எங்கதாம்மா போச்சு?” என்றார்.

 பதில் தெரியாமல் பரிதாபமாக விழித்தாள் யமுனா.

 (தொடரும்) 

       இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்