புதன், ஜனவரி 31, 2024

வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 3

 வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 3 

(குறுநாவல்)

-இராய செல்லப்பா

 இதன் முந்தைய பகுதி   -"  வண்ணம் கொண்ட வெண்ணிலவு - 2  " படிக்க இங்கே சொடுக்கவும்.

(5)

அன்று மாலை வங்கியின் குவார்ட்டர்ஸைக்  காலிசெய்துவிட்டுத் தன்  வீட்டுக்கே வந்துவிட்டாள் பொன்னி. சரண்யாவும் பாலுவும் “பெரியம்மா” என்று ஆசையோடு கட்டிக்கொண்டார்கள். சாந்தி வடை பாயசத்துடன் விருந்து தயாரித்தாள்.  


“வாசுவையும் அழைக்கலாமா சாந்தி?” என்று பொன்னி கேட்டபோது, நாணத்தை  மறைத்தவளாக, “உம்” என்றாள் சாந்தி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல். 

 வாசு புதிய காரில் வந்தான். “இது உங்களுக்கான கார், பொன்னி” என்று புன்முறுவல் பூத்தான். காரைக் கண்டதும் குழந்தைகளுக்குத் தான் எவ்வளவு மகிழ்ச்சி! 

 பகலுணவு முடிந்ததும் பொன்னியும் வாசுவும் மாடிக்குச் சென்றார்கள். தான் தொடங்கப்போகும் புதிய கம்பெனிக்கான ‘ப்ராஜெக்ட் ரிப்போர்ட்’டை அவளுக்கு விரிவாகச் சொன்னான் வாசு.  ‘ரிசர்வ் பேங்க் பர்மிஷன் வாங்கிவிட்டேன்’ என்று சான்றிதழைக் காட்டினான். மற்றும் பல பேப்பர்களில்  

அவளிடம் கையெழுத்து வாங்கினான்.

எங்கெங்கு கிளைகள் திறக்கவேண்டும் என்று முடிவு செய்தார்கள். முதல் மாதம் மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, அண்ணா நகர் ஆகிய நான்கு கிளைகள்.  அதற்கு மேலாளர்களாகத் தன்னுடன் ஏற்கெனவே பணிபுரிந்து இப்போது வீஆர்எஸ் வாங்கிய நான்குபேரைத் தேர்ந்தெடுத்தாள் பொன்னி. அவர்களும் ஆர்வமாக ஒப்புக்கொண்டார்கள்.

 மயிலாப்பூர் கிளைக்குத் தமிழ்ச்செல்வி,  தி.நகருக்கு லலிதா, வேளச்சேரிக்கு  மகேஸ்வரன்,  அண்ணா நகருக்கு கோவிந்தராஜன்.

 நகை மதிப்பீடு செய்பவர்களுக்குத்தான் மிகவும் டிமாண்ட். ஒரே ஒருவர்தான் கிடைத்தார். பெயர் நவநீத கிருஷ்ணன். பொன்னியின் வங்கியில் ஐந்தாண்டு அனுபவமுள்ளவர். நேர்மையின் மறுவடிவம். “பொண்ணுக்குக்  கல்யாணம் பாத்துக்கிட்டிருக்கேன். அதனால ஃபீஸ் கொஞ்சம் சேர்த்துக் குடுங்கம்மா” என்றார் பணிவாக.

அலுவலகத்திற்கு ஏற்கெனவே அடையாறில் இடம் பார்த்திருந்தான் வாசு.

“கம்பெனியின் பெயர் - பொன் பைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிமிடெட் “ என்றான்.  “இதில் பொன் என்பது தங்கத்தைக் குறிப்பது; உங்கள் பெயரை அல்ல” என்று சிரித்தான். அவனது குறும்பை ரசித்தவாறே பொன்னியும் சேர்ந்து சிரித்தாள். கம்பெனி தொடங்குவதற்கு நல்லநாள் பார்த்து முடிவுசெய்தபின் வாசு கிளம்பினான்.

(6)

சென்னைக்கு இந்தியாவின் தங்க நகரம் என்று பெயர் உண்டு. தங்க நகைகளின் சில்லறை விற்பனை இங்குதான் அதிகம். அதிலும் ‘அட்சய திருதியை’ என்ற பண்டிகை நாளில்  குடும்பப் பெண்களை,  ஒரு கிராம் தங்கமாவது வாங்க வைத்துவிடும் சாதனையைப் பல்லாண்டுகளாக  வர்த்தகர்களும் சோதிடர்களும் பத்திரிகைகளும் இணைந்து நிகழ்த்தியிருந்தார்கள்.

 அதன் ஒரு பகுதியாக, பழைய தங்கத்தின் பேரில் கடன் வாங்கிப் புதிய தங்கம் வாங்கும் வழக்கம் தமிழ்நாட்டில் நன்கு வேரூன்றிவிட்டது. அதையே தங்கள் கம்பெனியின் விளம்பர உத்தியாகப் பயன்படுத்திக்கொண்டான் வாசு.  

 எப்படியென்றால், தங்கள் நான்கு கிளைகளையும் அட்சய திருதியைக்கு முன்பே திறந்துவிட்டான். நகரத்தின் முக்கிய நகைக்கடைகளுடன் பேசி,  அவர்களுடைய விளம்பரத்தில்  “நகைக்கடன் வேண்டுமா? பொன் ஃபைனான்ஸை அணுகுங்கள்” என்ற வாசகமுள்ள சிறு கட்டம் இடம்பெறுமாறு ஒப்பந்தம் செய்துகொண்டான். நகைக்கடன் பெறுபவர்களுக்கு, மேற்படிக் கடைகளின் ‘டோக்கன்’கள் விநியோகிக்கப்பட்டன. அந்த டோக்கனைக் காட்டினால் அட்சய திருதியை அன்று கிராமுக்கு ஐம்பது ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.

 இந்த உத்தியால் ‘பொன் ஃபைனான்ஸ்’ கம்பெனியின் நகைக்கடன் வழங்கும் வேகம் அதிகரித்தது. சென்னையிலுள்ள நகைக்கடைகளுக்கும் விற்பனை அதிகரித்தது.

அதே சமயம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் செல்வாக்குள்ள ஊடகவியலாளர்களைக் கொண்டு விளம்பரமும் செய்தான் வாசு. இந்தப் பொறுப்பைத் தானே ஏற்று நடத்தினாள் பொன்னி. குறுகிய காலத்தில் பொன் ஃபைனான்ஸ் மக்கள் மத்தியில் பிரபலமாகியது.

 மூன்று மாதம் கழித்து, கம்பெனியின் வரவு செலவு கணக்கை ஆடிட் செய்தபோது, தாங்கள் திட்டமிட்டபடியே எல்லாம் நடப்பதைக் கண்டு வாசுவும் பொன்னியும் திருப்தியடைந்தார்கள்.

 ஆனால் கம்பெனியின் அஸ்திவாரமே, சரியான தரமுள்ள தங்கம்தான் என்பதால், நகை மதிப்பீட்டாளரின் மேல் எப்போதும் ஒரு கண் வைத்திருந்தார்கள். அதற்காக ஒரு துப்பறிவாளரையும் நியமித்தார்கள்.

மேலும், ஒரு கிளையில் வழங்கப்பட்ட நகைக் கடன்களை இன்னொரு கிளையின் மேலாளரைக் கொண்டு முன்னறிவிப்பின்றி ஆடிட் செய்யும் வழக்கத்தையும் ஏற்படுத்தினாள் பொன்னி.  அடகுவைக்கப்பட்ட நகைகள் எல்லாவற்றையும் தலைமை அலுவலகத்தில்,  பலகோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ்  உள்ள விசேஷமான பெட்டகத்தில் வைத்து அதற்கென்றே ஒரு தரமான பாதுகாப்பு ஏஜென்சியின் காவலர்களை 24 மணிநேரமும் நியமித்தாள். விரைவில் ரிசர்வ் பேங்க் அதிகாரிகளும் வந்து ஆவணங்களையும் நடைமுறைகளையும் சரிபார்த்து ‘திருப்திகரம்’ என்று தங்கள் ஆடிட் ரிப்போர்ட்டை வழங்கினார்கள்.

 பொன்னிக்குத் தன் வாழ்நாளின் வசந்தகாலம் இதுதான் என்று தோன்றியது. இத்தனை ஆண்டுகள் வங்கிப் பணியில் கடிகாரத்தின் அடிமையாக இருந்தவளுக்கு இப்போதுதான் சொந்தமாக ஒரு நிறுவனம் நடத்துவதிலுள்ள அதிகாரமும் கௌரவமும் பிடிபட ஆரம்பித்தன. சமூகத்தில் அவளுக்கென்று புதிய அந்தஸ்து ஏற்பட்டது. அதில் முக்கியப் பங்கு வாசுவுடையது என்பதை அவள் மனம் மறுக்கவில்லை.  

“இரண்டு நாள் ஊட்டிக்குப் போய் ஓய்வெடுக்கலாமா என்று பார்க்கிறேன்” என்றான் வாசு. பொன்னி பொய்க் கோபத்துடன் எரிந்து விழுந்தாள்.

“மிஸ்டர் வாசு! நகைக் கடன் வழங்கும் கேரளாக் கம்பெனிகள் ஒவ்வொன்றும் தலா நூறு கிளைகளை வைத்திருக்கிறார்கள். நீங்களோ நான்கு கிளைகளுக்கே ஓய்வெடுக்கவேண்டும் என்கிறீர்களே! ரொம்பத்தான் உழைத்துவிட்டீர்கள்!”

வாசு எழுந்து அவளருகில் வந்தான். “சிஈஓ  மேடம்! நான் ஓய்வு என்றது சும்மா! உண்மையான காரணம் இதுதான்” என்று ஒரு விஷயத்தை அவளுக்கு மட்டுமே கேட்கும்படியாகக் கூறினான். “இது நமக்கு ஒரு பெரிய வாய்ப்பு அல்லவா?” 

சனிக்கிழமை காலை அவர்கள் ஊட்டியில் இருந்தார்கள்.

சாந்தியிடமிருந்து போன் வந்தது. “ஊட்டி ரொம்பக் குளிராக இருக்கிறதா?” என்று கேட்டாள் சாந்தி.  டவர் சரியாகக் கிடைக்காததால் பொன்னியின் பதில் அவளுக்குத்  தெளிவாகக் கேட்கவில்லை. “ஸ்பீக்கர் போட்டுப் பேசு” என்றாள்.

பொன்னி ஸ்பீக்கரில் பேசினாள். “குளிர் எனக்கு ஆகாதுதான், என்ன செய்வது!  தொழில் என்று வந்துவிட்டால் வாய்ப்பு வரும்போது உடனே பற்றிக்கொள்ள வேண்டுமல்லவா என்கிறார் வாசு! அடுத்த முறை ஊட்டி வரும்போது நீயும் குழந்தைகளும் கட்டாயம் வரவேண்டும்” என்றாள்.

“ஆமாம் அக்கா! நீயே பார்த்து ஏற்பாடு செய்!” என்ற சாந்தி, “அது சரி, அந்த ஆள் எந்த ஓட்டலில் தங்கி இருக்கிறார்?” என்று கேட்டாள். அவள் குரலில் பொதிந்திருந்த ஆர்வம்  பொன்னிக்குப் புரிந்தது. அது வாசுவுக்கும் கேட்டது. ‘சாந்தியின் குரல்தானே?” என்று தனக்குள் கேட்டுக்கொண்டான்.

“யார், வாசுவைக் கேட்கிறாயா சாந்தி? இதே ஓட்டலில்தான் தங்கியிருக்கிறார்” என்றாள் பொன்னி.

“அப்படியா? நீ வேறு ரூம், அவர் வேறு ரூம் தானே?”

“இல்லையே, இருவரும் ஒரே ரூமில் தான் இருக்கிறோம்” என்றான் வாசு ஸ்பீக்கரின் அருகில் வந்து.

"என்னது?" என்று அதிர்ச்சியோடு கேட்டாள் சாந்தி. அடுத்த நிமிடம் அவள் கையிலிருந்து போன் கீழே விழும் ஓசை பலமாகக் கேட்டது பொன்னிக்கு.  

(7)

பாரம்பரியமிக்க தேயிலைத் தோட்டம் அது. பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி ஒருவரின் பொறுப்பில் இருந்து, இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பல கைகள் மாறி, இப்போது பிரபல அரசியல்வாதியிடம் வந்திருக்கிறது. அவருடைய பினாமியைத்தான் சந்திக்கப் போகிறார்கள் வாசுவும் பொன்னியும்.

“வாங்க சார், வாங்கம்மா, வணக்கம்” என்று வரவேற்றார் மலர்வண்ணன். ஊட்டியின் காலைப் பொழுதின் குளுமை பொன்னி அணிந்திருந்த  ஸ்வெட்டரை ஊடுருவி அவள் மனதுவரை பாய்ந்தது. “ஓ, எவ்ளோ ஜில்லுன்னு இருக்கு” என்று குழந்தைபோல் குதூகலித்தாள். அதே சமயம், சரண்யாவும் பாலுவும் இருந்தால் எப்படி அனுபவித்து ரசிப்பார்கள் என்ற எண்ணமும் தோன்றியது. அடுத்தமுறை அவர்களோடு குடும்பமாக வரவேண்டும்.

உரிமையாளர் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த விசேஷமான காட்டேஜில் வெதுவெதுப்பு ஊட்டப்பட்ட அறையில் வசதியான இருக்கைகளில் அவர்கள்     

உட்கார்ந்துகொண்டார்கள். ஆவிபறக்கும் தேநீர் வந்தது.

“இது எங்கள் தோட்டத்தில் விளைந்த தேநீர்” என்று பெருமையாகச் சொன்னார் மலர்வண்ணன். “ஆவணப்படி நான்தான் இத்தோட்டத்தின் உரிமையாளன். ஆனால் உண்மையில் இதன் சொந்தக்காரர் இவர்தான்” என்று சுவரில் மாட்டியிருந்த ஓர் பிரபல அரசியல் தலைவரின் புகைப்படத்தைக் காட்டினார். ‘இவரா?’ என்று திகைத்தாள் பொன்னி. எம்எல்ஏ கூட ல்லாத ஒருவரிடம் இவ்வளவு சொத்தா!

அவள் எண்ண ஓட்டத்தைப் புரிந்தவராக, “இதைப்போல நாற்பது மடங்கு காபித் தோட்டமும் அவருக்கு இருக்கிறது,  கர்நாடகாவில்!” என்று சிரித்தார் மலர்வண்ணன். 

அவர்களின் அலைபேசிகளை வாங்கி இன்னொரு அறையில் பீரோவில் வைத்துப் பூட்டினார் மலர்வண்ணன். “ஒரு பாதுகாப்புக்காகத்தான்” என்று சிரித்தார். மூவரும் நெருக்கமாக அமர்ந்துகொண்டார்கள்.

“மிஸ்டர் வாசு! உங்கள் பொன் ஃபைனான்ஸ் கம்பெனி நன்றாக நடப்பதாக ஐயாவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனால் உங்களிடம் அவர் பெரிய தொகையை முதலீடு செய்ய விரும்புகிறார். அதற்கான டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் பற்றி எங்கள் ஆடிட்டர் பேசுவார். உங்களுக்குத் சரியென்று பட்டால் மேற்கொண்டு பேசலாம். விருப்பமில்லை என்றால் விட்டுவிடலாம். விஷயம் நமக்குள் இருக்கவேண்டும்” என்றார் மலர்வண்ணன்.

ஆடிட்டர் பேசினார். முதலீடு செய்வதற்கு அரசியல்வாதிகளிடம் எக்கச்சக்கமாகப் பணம் இருக்கிறது. ஆனால் எப்போது அந்தப் பணம் அவர்களுக்குத் தேவைப்படும் என்று தெரியாது. அதனால், போட்ட பணத்தை ஒரே வாரத்தில் திருப்பித்தரும் சக்தி உங்களுக்கு உண்டா என்று கேட்டார். முப்பது கோடிவரை ஏற்றுக்கொள்வதாக வாசு சொன்னான்.

 ஆடிட்டருக்கு ஏமாற்றமாக இருந்தது. நூறு கோடியாவது எடுத்துக்கொள்ள முடியாதா என்றார். கையிலுள்ள பணத்தைப் பத்திரமான இடத்திற்கு மாற்றவேண்டிய  கவலை அவருக்கு.

 “நடுத்தர மக்களுக்கு நகைக்கடன் வழங்குவதே எங்கள் நோக்கம். அதில்தான்  போட்ட பணம் திரும்பிவரும். எனவே நூறு கோடி, இருநூறு கோடி என்றெல்லாம் எங்களால் பற்றுவரவு செய்யமுடியாது. மன்னிக்கவேண்டும்” என்றான் வாசு.

“எதற்கும் ஐயாவிடம் ஒரு வார்த்தை பேசிவிட்டு முடிவெடுங்களேன். இதோ அவரை கனெக்ட் செய்கிறேன்” என்றார் ஆடிட்டர். 

 அடுத்து ஐயாவே பேசினார். “வணக்கம் தம்பி! இப்பத்தான் தொழில் ஆரம்பிச்சீங்கன்னு கேள்விப்பட்டேன். நல்லா வளரணும் தம்பி. என்னோட வாழ்த்துக்கள். சீக்கிரம் என்னோட தொகுதில ரெண்டு கிளை ஆரம்பிங்க. மலர் கிட்ட சொன்னா நம்ப ஆபீஸ் காம்ப்ளெக்சே ரெண்டு மூணு காட்டுவாரு. மேனேஜர் போஸ்ட்டுக்கும்  நம்ப பசங்க  நாலஞ்சு பேர் இருக்காங்க. எவ்ளோ இன்வெஸ்ட்மெண்ட் வேணும்னாலும் பண்ணலாம். தைரியமா நடங்க. நான் இருக்கேன். வெச்சிடட்டுமா?”  

 ஊட்டியில் இருந்த புகழ்பெற்ற ஓட்டலில் இருந்து காலைச் சிற்றுண்டி வந்தது. மலைத்தேனும் நீலகிரித் தைலமும் உள்ளூர் சாக்லேட்டும் இரண்டு கூடை நிறையப் பழங்களும் பச்சைக் காய்கறிகளுமாகக் காரில் கொண்டுவந்து வைத்தார் மலர்வண்ணன்.

 “இதே காரில் சுற்றிப் பார்த்துவிட்டு சென்னை போகலாம். நம்ப வண்டிதான்” என்று வழியனுப்பினார்.  

(தொடரும்)

இதன் அடுத்த பகுதி   -"  வண்ணம் கொண்ட வெண்ணிலவு - 4  " படிக்க இங்கே சொடுக்கவும்.

திங்கள், ஜனவரி 29, 2024

வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 2


வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 2
 

-இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதி   -"  வண்ணம் கொண்ட வெண்ணிலவு - 1  " படிக்க இங்கே சொடுக்கவும்.

 (3)

 அட்டைப்பெட்டியைப் பிரித்தாள் பொன்னி.

“மெரீனாக் கடற்கரையில் ஔவையார்  சிலையருகில் நாளை மாலை ஆறுமணிக்குச் சந்திக்கலாமா? - வாசு” என்றது அட்டைப்பெட்டியின் உள்ளிருந்த சிறிய கடிதம். 

வாசுவுக்கு இப்போது என்ன வயதிருக்கும் என்று யோசித்தாள் பொன்னி.  நாற்பத்தைந்துக்குக் குறையாது. தன்னை விடச் சின்னவன்தான். எந்த ஊரில் என்ன வேலையில் இருக்கிறானோ? குழந்தைகள் எத்தனை? மனைவி என்ன செய்கிறாள்?

 சரியாக ஆறுமணிக்கு உழைப்பாளர் சிலையருகே அவள்  ஆட்டோவிலிருந்து இறங்கியபோது வாசு அங்கே நின்றுகொண்டிருந்தான். அதே தோற்றம். பழைய வாசுவேதான். வயதினால் முகம் மட்டும் முற்றியிருந்தது. 


படத்துக்கும் கதைக்கும் தொட்ர்பில்ல்லை!

 “மிஸ்டர் வாசு, உங்களை அன்று ஒரே ஒருமுறை பார்த்ததுதான். சாந்தியாவது பலமுறை பார்த்திருக்கிறாள். எத்தனை வருடம் ஆயிற்று! காரணம்  சொல்லாமல் மாலையில் கடற்கரைக்கு வா என்று ஒரு பெண்ணை அழைப்பது முறையா?” என்று சீறினாள் பொன்னி. அவனைவிட்டுச் சற்று தூரத்திலேயே நின்றாள். கடற்காற்றில் அவள் கேசம் இழை இழையாகப் பறக்க ஆரம்பித்தது. அதை ஒருகையால் அழுத்திக்கொண்டாள்.

“ஹ் ஹ் ஹா” என்று சிரித்தான் வாசு. ஒப்பனைகள் ஏதுமில்லை. மாலையில் களைப்பாக வீடு திரும்பும் சராசரி ஊழியனைப்போலவே இருந்தான். “உண்மையைச் சொல்லட்டுமா? நீங்கள் இங்கு வருவீர்கள் என்று நான் நம்பவேயில்லை” என்றான்.

“நானே கூடத்தான் நம்பவில்லை. பிறகு என் வந்தேன் தெரியுமா?” என்று அவனை ஏறிட்டாள் பொன்னி, நிஜமான கோபத்துடன்.

 வாசு கலகலவென்று சிரித்தான். “தெரியுமே! உங்களைபோலவே நானும் இன்னும் மணமாகாதவன் என்பதால் தானே?”

 “சீ !” என்றவள், “உங்களுக்கு எப்படியோ, எனக்கு, இந்த வயதில் திருமணம் செய்யும் நோக்கம் இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் அனுப்பிய கூரியர் சாந்தியின் கையில் கிடைத்துவிட்டது. அவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்? அதனால்தான் உங்களைப் பற்றி முழுசாகத் தெரிந்துகொண்டு அவளிடம் சொல்லவேண்டும் என்று  வந்திருக்கிறேன்” என்றாள்.

 வாசுவுக்குத் தன் தவறு புரிந்தது.  “மன்னித்துவிடுங்கள் பொன்னி!” என்றான். பிறகு பேச ஆரம்பித்தான்.

(4)

 சாந்தியைப் பெண்பார்க்க வந்தபோது, வாசு ஒரு நடுத்தரக் குடும்பத்தின்  ஒரே பிள்ளை. பி காம்,  சிஏ (இண்ட்டர்) படித்து  ஒரு தனியார் வங்கியில் அதிகாரியாக இருந்தான். தற்செயலாக அவன் தந்தையின் நண்பர் கொடுத்த தகவலின்பேரில் பெண்பார்ப்பு நடந்தது.

 சாந்தியை அவனுக்குப் பிடித்திருந்தது. ஆனால் பெற்றோர்களோ மேலும்  வசதியான இடமாகப் பார்க்கலாமே என்று தாமதித்தார்கள். ஆனால் பழியை ஜாதகத்தின்மேல் போட்டார்கள். அவன் துருவித் துருவிக் கேட்டதில், பெண் வீட்டில் சம்மதிக்கவில்லை என்றாள் அம்மா.  

“பெண் என்ன சொன்னாளாம்?” என்று கேட்க அவனுக்கு நாணமாக இருந்தது. சில மாதங்களில் அவன் மும்பையில்  இன்னொரு நிதி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். என்றாலும் சாந்தியின் அப்பாவியான முகம் அவன் மனதை விட்டு நீங்கவில்லை.

இரண்டுமுறை சென்னைக்கு வந்தபோது சாந்தியைச் சந்திக்க முயற்சி செய்தான். அவள் முகம்கொடுத்துப் பேசவில்லை. மூன்றாவது முறை அவளைப் பார்த்தபோது அவள் கழுத்தில் தாலி ஏறியிருந்தது.

 முதலில் பார்க்கும் பெண்ணையே மணந்துகொள்வது  என்ற தன் இலட்சியம் நிறைவேறாததில் வாசு மனம் தளர்ந்துவிட்டான். கவனத்தைப் படிப்பில் செலுத்தி சிஏ முடித்தான். இரண்டே வருடத்தில் ஒரு தனியார் பங்குச்சந்தை முகவரின் கம்பெனியில் ஆடிட்டராகச் சேர்ந்தான்.

“சில ஆண்டுகள் மத்தியக் கிழக்கு நாடுகளிலும், பிறகு கனடாவிலும் இருந்தேன். வங்கிகள் மட்டுமின்றி, மருந்துக் கம்பெனிகள்,  பார்மா, ஐடி, விமானத்துறை என்று     வெவ்வேறு துறைகளில் அனுபவம் கிடைத்தது. கடந்த பத்தாண்டுகளாகச் சுதந்திரமான ஆலோசகராக இருக்கிறேன். இந்த இரண்டு வருடங்களாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ஆலோசனை சொல்லும் பொறுப்பு கிடைத்தது. அப்போதுதான் உங்களைப் பார்த்தேன்…” என்று நிறுத்தினான் வாசு.

 பொன்னிக்குத் தூக்கிவாரிப்போட்டது. “நான் எப்போது ரிசர்வ் பேங்குக்குப் போனேன்?” என்று தன் மூளையைக் கசக்கிக்கொண்டாள்.

வங்கிகளில் வாராக்கடன் அதிகரித்து வரும் நிலையில், முற்றிலும் ஆபத்து இல்லாததும், இந்திய மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படுவதுமான  தங்க நகைக்கடன்களை வங்கிகள் இன்னும் அதிக ஊக்கத்துடன் வழங்கவேண்டும்  என்பதற்காக, சில முக்கிய வங்கிகளை ரிசர்வ் பேங்க் பேச அழைத்தது. அவளது ஜிஎம் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சி அது. கடைசி நேரத்தில் அவர் வரமுடியாமல், பொன்னியைக் கலந்துகொள்ளச் சொன்னார்.

 “அந்த நிகழ்ச்சியில் நீங்கள் ஆணித்தரமாகச் சொன்ன சில கருத்துக்களை டெபுடி கவர்னரே மிகவும் பாராட்டினார். அதற்குப் பிறகுதான் உங்களைப் பற்றி  நன்றாக விசாரித்துத் தெரிந்துகொண்டேன்”  என்றான் வாசு.

“ஆனால் என்னுடைய மொபைல் நம்பரை மட்டும் தெரிந்துகொள்ளவில்லை. இல்லையா?” என்று கேலியாகக் கேட்டாள்  பொன்னி.

 “அதற்குக் காரணம் உண்டு. உங்கள் வங்கி இன்னொரு பெரிய வங்கியில் ‘மெர்ஜ்’ ஆவதால் நீங்கள் வீஆர்எஸ் பெறுவதாகத் தெரிந்தது. அப்போது மொபைல் நம்பரும் மாறக்கூடும் அல்லவா? நேரில் வாங்கிக் கொள்ள நினைத்தேன்”   என்றான் வாசு.

 “சரி, என்னைப் பற்றி வேறு என்னென்ன விசாரித்தீர்கள்? யார் யாரிடம்?”

 அவள் சற்றே இறங்கிவருவதுபோல் தோன்றியது. “அதை விட, ஏன் விசாரித்தீர்கள் என்று கேட்க மாட்டீர்களா?” என்று கொக்கி போட்டான் வாசு.

ஒரு சிறுவன் ‘தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்’ என்று அவர்கள் இருந்த பக்கமே நின்று குரல் கொடுத்துக்கொண்டிருந்தான். இரண்டு பொட்டலங்கள் வாங்கிக்கொண்டு அவனை விரட்டினான் வாசு. சுண்டலைக் கொறித்தபடி, “ஏனாம்?” என்றாள் பொன்னி.

 “நடந்துகொண்டே பேசலாம். இன்னும் அரைமணிக்குள் நான் வீட்டில் இருக்கவேண்டும்” என்று அவசரப்படுத்தினாள். 

 “எனக்கு நாடு நாடாகப் போய் ஆலோசனை சொல்லும் தொழில் அலுத்துவிட்டது. சொந்தமாகத் தொழில்செய்ய  முடிவுசெய்து ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன். அதில் என்னோடு பங்குதாரராகச் சேர்வதற்கு நீங்கள்தான் சரியானவர் என்று தோன்றியது. காரணம், அந்தத் தொழிலுக்கான எல்லாத்  தகுதிகளும் உங்களுக்கு உண்டு..”

“போர் அடிக்காதீர்கள் வாசு! ஆனாலும் பரவாயில்லை. ரொமான்டிக்காக ஏதும் பேசிவிடுவீர்களோ என்று பயந்தேன். சரி, அது  என்ன தொழில்  என்று சட்டென்று சொல்லுங்கள்” என்று மீதமிருந்த சுண்டலை ஒரே வாயாகப் போட்டுக்கொண்டவள், பச்சை மிளகாயைக் கடித்துவிட்டதால் “சூ..” என்று அலறினாள். “மிளகாய்..மிளகாய்” என்று குழறினாள்.

“கவலைப் படாதீர்கள். சூடாக ஒரு மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டால் சரியாகிவிடும். இங்க வாப்பா” என்று பஜ்ஜி விற்பவனை அழைத்தான் வாசு, சிரித்துக்கொண்டே.

அவனை அடிக்க வருவதுபோல் கையை ஓங்கினாள் பொன்னி.

“நீங்கள் ஒரு வங்கியில் மேலாளராக இருந்து நல்ல பெயர் வாங்கி இருக்கிறீர்கள். தங்க நகைக்கடன் கொடுப்பதில் உங்கள் வங்கி கவனமும் எச்சரிக்கையும் கொண்டதாக விளங்குகிறது. நகை மதிப்பீடு செய்யும் பயிற்சியில் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றிருக்கிறீர்கள். கஸ்டமர் சர்வீஸில் நீங்கள் சூப்பர் என்று சேர்மனிடமே பாராட்டு பெற்றிருக்கிறீர்கள்…  முக்கியமாக, உங்கள் பெயரிலேயே பொன் இருக்கிறது..” 

“போதும், போதும். நானும் சொந்தத் தொழில் செய்யத்தான் நாள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அறிவுக்கு வேலை இல்லாத நகைக்கடன் தொழிலில் நான் ஏன் இறங்கவேண்டும்? அதுவும் எனக்கு அதிகம் தெரியாத உங்களுடன்?” என்று குரலை உயர்த்தினாள் பொன்னி.

 சடக்கென்று அவளுடைய கைகளைப்  பற்றிக்கொண்டான் வாசு. “என்ன மேடம் இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? தமிழ்நாடு முழுவதும் கேரளாக் கம்பெனிகள் எவ்வளவு மும்முரமாக நகைக்கடன் கொடுக்கின்றன? பார்க்கவில்லையா? முதலுக்கு மோசமில்லாத தொழில். அதிலும்  நான் மேனேஜிங் டைரக்டர், நீங்கள் சி ஈ ஓ. உங்கள் சம்பளம் இரண்டு லட்சம். அத்துடன் நிகரலாபத்தில் 2 சதம் போனஸ். கார் உண்டு.  ஹெட் ஆபீசில் அமர்ந்துகொண்டு சூபர்வைஸ் செய்தால் போதும். பத்து கிளைகளை ஆரம்பிக்கப் போகிறோம். அதற்கான திறமையுள்ள மேலாளர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். நாணயமான நகை மதிப்பீட்டாளர் இரண்டு பேர் வேண்டும். அவர்களும் உங்கள்மூலம் தான் தேர்வாக வேண்டும். உங்களுக்கு என்ன ரிஸ்க் இதில்?”

அவனிடமிருந்து கைகளை விடுவித்துக்கொண்ட பொன்னி, தெளிவாகத் திட்டமிட்டு வைத்திருக்கிறான் என்று அவனை மனதிற்குள் பாராட்டினாள்.  “மற்றதை நாளை போனில் பேசலாம். எதற்கும் சாந்தியிடம் விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன்” என்று தன் அலைபேசி எண்ணைக்   கொடுத்தாள்.

முகம் மலர்ந்த வாசு, “காத்திருக்கிறேன் பொன்னி! உங்களுக்காக! எவ்வளவு நாள் வேண்டுமானலும்!” என்றான்.  

முகத்தில் இலேசான வெறுப்பைக் காட்டியபடி, “வாசு, ஒரு முக்கிய விஷயம்: எனக்குத் திருமணம் என்ற ஒன்று இந்தப் பிறவியில் கிடையாது. ஆகவே நீங்கள் காத்திருக்கவும் வேண்டாம். வீண் கற்பனைகளும் வேண்டாம். அத்துடன் என்னைவிட வயதில் சிறியவர் நீங்கள். புரிந்ததா?” என்று ஆட்டோவில் ஏறினாள் பொன்னி.

 (தொடரும்)

இதன் அடுத்த பகுதி   -"  வண்ணம் கொண்ட வெண்ணிலவு - 3  " படிக்க இங்கே சொடுக்கவும்.

சனி, ஜனவரி 27, 2024

வண்ணம் கொண்ட வெண்ணிலவு-1

 

வண்ணம் கொண்ட வெண்ணிலவு-1 

(குறுநாவல்)

-        இராய செல்லப்பா

(1)

 “அம்மா, என் பிரெண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்களே, அது உண்மையா?” என்று ஆவலும் திகைப்புமாகக் கேட்டபடி உள்ளே நுழைந்தாள் சரண்யா. பள்ளிக்கூடப் பையைக் கழற்றிவிட்டு, லஞ்ச்பாக்ஸை எடுத்தவள்,  மௌனமாக நின்ற சாந்தியைப் பார்த்து மறுபடியும் கேட்டாள். “நிஜமா அம்மா?”

 சாந்திக்கு நெஞ்சை அடைத்தது. ஆமாம், இந்த வீட்டைச்  சீக்கிரம்  காலிசெய்ய வேண்டும் என்று சொல்லிவிடலாம்தான். அதன்பிறகு எங்கு போவதென்று  கேட்டால் தன்னிடம் பதில் இல்லையே!  பேசாமல் போர்ன்வீட்டா கலப்பதில் முனைந்தாள்.

 ‘என் ஸ்கூலுக்கு இந்த வீடுதான் பக்கம். மாற்றவேண்டாம்’ என்று சரண்யா  அடம் பிடிக்கலாம்.  பாலு இன்னும் வரவில்லை. அக்காவைப் பார்த்து அவனும் புரண்டுபுரண்டு அழுவான். இவள் ஐந்தாவது, அவன் இரண்டாவது படிக்கிறார்கள். நன்றாகப் பழகிவிட்டது இந்த வீடு.

pic courtesy-IndiaMart ad

“என்ன சொன்னாங்க உன் பிரெண்ட்ஸ்?” என்று பொதுவாகக் கேட்டு சரண்யாவை உற்றுப்பார்த்தாள் சாந்தி.

 போர்ன்வீட்டா குடிப்பதைப் பாதியில் நிறுத்திய சரண்யாவுக்குக்  குரல் கம்மியது. “நாம்ப ஏழைகளாம். பெரியம்மா தயவுல வாழறமாம். வேலைல இருந்து ரிட்டையர் ஆகி,  பெரியம்மாவே இந்த வீட்டுக்கு வரப்போறாங்களாம். அதனால் நாம்ப காலி பண்ணிட்டு டவுனை விட்டு ரொம்ப தூரமா ஏதாச்சும் ஹவுசிங்போர்டு பிளாட்டுக்குப் போயிடுவமாம். சொரூபாவும் சந்திராவும்  சொல்றாங்க.”

வெறுமையாகச் சிரித்தாள் சாந்தி. “இது ஒனக்குத் தெரிஞ்ச விஷயம் தானே, சரணு! அப்பா திடீர்னு இறந்து போனப்ப  ஒங்க பெரியம்மா தானே நமக்கு சப்போர்ட்டா இருந்து, அவளோட வீட்டை நமக்கு வாடகையில்லாம குடுத்தா! இப்ப பேங்க்கிலிருந்து விஆர்எஸ் வாங்கிக்கப் போறாளாம்.  அப்படீன்னா அவ குவார்ட்டர்ஸைக் காலி  பண்ணியாகணும் இல்லையா?  இங்க தான வருவா?” என்றவள், “பொன்னினு எங்க அக்காவுக்குச்  சும்மா பேர் வெக்கல, அவ மனசெல்லாம் பொன்னு தான்! நிச்சயம் நம்பளைத் தவிக்க விட மாட்டா. நீ கவலைப்படாம ஹோம்வொர்க் பண்ணு. பாலு கிட்ட ஏதாச்சும் சொல்லி அவன் மூடையும் கெடுத்துறாதே” என்று சரண்யாவின் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தாள்.

அதற்குள் உள்ளே நுழைந்துவிட்ட பாலு, தன் ஸ்கூல்பையைக் கழற்றாமலே அவள் அருகில் ஓடிவந்து, “அம்மா, எனக்கு?” என்றான்.   அவனுக்கும் நெற்றியில் முத்தமிட்டாள் சாந்தி. “எனக்குப்  பால் மட்டும்தான், போர்ன்வீட்டா வேண்டாம்” என்று கூவிக்கொண்டே தன் அறைக்குப் போனான் பாலு.

 அவன் போனபிறகு அம்மாவின் அருகில் வந்த சரண்யா, “எப்பம்மா பெரியம்மா வீஆர்எஸ்-ல போறாங்க?” என்று காதுக்குள் கேட்டாள். சாந்திக்குத் தெரியவில்லை. பொன்னியிடம் கேட்கலாம். வீஆர்எஸ் பணத்தில் கடன் கேட்பதற்கு அடிபோடுவதாக அவள் நினைத்துவிட்டால்?

“இன்னும் ரெண்டு மாசம் ஆகும்னு நினைக்கறேன்.”

இரவு சுமார் எட்டுமணி. கதவில் ‘டொக், டொக்’ என்று யாரோ தட்டினார்கள். கூரியர்! ஒரு சிறிய அட்டைப்பெட்டி! முகவரியில் ‘செல்வி பொன்னி அவர்களுக்கு’ என்று இருந்தது.

 சாந்தியின் மனம் குற்ற உணர்ச்சியால் துணுக்குற்றது. பத்து வயது சிறியவளான தான், திருமதி ஆகி, இரண்டு குழந்தைகளைப் பெற்று, கைம்பெண்ணாகவும் ஆகிவிட்டேன். பொன்னியோ திருமணமே வேண்டாமென்று செல்வியாகவே இருந்துவிட்டு இப்போது பணியிலிருந்தும் ஓய்வுபெறப்போகிறாள். நாளைக்கு அவளுக்கு யார் துணை?

 அட்டைப்பெட்டியைக் கையில் வாங்கிப்பார்த்த சரண்யா, “அம்மா, அனுப்பியவர் பெயர் ‘வாசு’ன்னு போட்டிருக்கும்மா!” என்றாள்.

திகைத்துப் போன சாந்தி, அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “சரி, உள்ளே கொண்டுபோய் வை. பத்திரமாகப் பெரியம்மாவிடம் கொடுக்கவேண்டும்” என்றாள். 

 (2)

 அந்த வங்கிக்கிளை  அன்று பரபரப்பாக இருந்தது. மேலாளர் பொன்னி விருப்ப ஓய்வு பெறப்போகிறாள்.

 அந்த வங்கியை வேறொரு பெரிய வங்கியுடன் இணைப்பதாக அரசு முடிவெடுத்தவுடனேயே ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பல அதிகாரிகளும் விருப்ப ஓய்வுக்கு மனதளவில் தயாராகிவிட்டார்கள்.

 காரணம், வங்கிகள் இணைக்கப்பட்டவுடன், இவர்களுடைய  கிளைகள் சீரமைக்கப்படலாம். ‘சீரமைத்தல்’ என்றால் சிறிய வங்கியின் பாதி ஊழியர்களைப்  பெரிய வங்கியின் பிற மாநிலக் கிளைகளுக்கு மாற்றிவிடுதல். அதில் மறைந்திருந்த உத்தி என்னவோ இவர்களைத் துன்புறுத்தி விருப்ப ஒய்வு பெறச் செய்வதுதான்.   

பொன்னிக்கு அத்தகைய அச்சம் இல்லை. அவள் தன்னுடைய வங்கியில் சாதனை மேலாளராகத் திகழ்ந்தவள். ஆனால் சொந்தமாகத் தொழில் புரியவேண்டும் என்ற ஆசை அடிமனதில் இருந்துகொண்டே இருந்தது. அதே சமயம் ஆண் துணையின்றி ‘செல்வி’யாகவே ஐம்பது வயதை எட்டிவிட்டவளுக்கு என்ன தொழில்செய்வது, எங்கே, எப்போது தொடங்குவது என்ற புரிதல்  ஏற்படாமல் இருந்தது. 

 வங்கிகளின் இணைப்பினால் வீஆர்எஸ் திட்டம் அறிவிக்கப்பட்டபோது முதல் ஆளாக மனு கொடுத்தாள். வழக்கமான பென்ஷனுடன், கிராஜுவிட்டி இருபது லட்சமும், எதிர்காலச் சம்பளமாகப்  பதினைந்து  லட்சமும் கிடைக்கும் என்று தெரிந்தது. கையில் மொத்தமாகப் பணம் வரட்டும், பிறகு என்ன தொழில் என்று தீர்மானிக்கலாம் என்று முடிவெடுத்தாள்.

 இன்று அந்த வங்கியில் அவளுக்குக் கடைசி நாள். 

வங்கியில் அவளுக்கு மிகவும் நெருக்கமான தோழி என்றால் அது ஷோபனாதான். அவள் கணவர் பிரபலமான ஜெராக்ஸ் கடையை நடத்திவந்தார். நல்ல வருமானம். ஆனால் இவள் வீஆர்எஸ் எடுத்தால் வரும் பணம் மொத்தமாகக் கணவரின்  பிசினஸில் முடங்கிவிடும். பிறகு ஐந்துக்கும் பத்துக்கும் அவர் கையையே நம்பியிருக்க வேண்டும். ஆகவே வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

 “உனக்கென்னம்மா, கணவனா, பிள்ளையா  குட்டியா? உனக்கு நீயே ராணி! எல்லாருக்கும் அப்படி வாய்க்குமா?” என்றாள் ஷோபனா.

 தேவிகா மட்டும் கவலைப்பட்டாள். துபாயில் நல்ல உத்தியோகத்தில் இருப்பதாகச் சொல்லி அவளை மணந்துகொண்டவன், அங்கு ஒரு சாதாரண ஓட்டலில் சப்ளையர் என்று தெரிந்தவுடன், அடுத்த விமானத்தில் ஏறி ஊருக்கு வந்துவிட்டவள் தேவிகா.

 “பொன்னி, இத்தனைநாள் தனியாவே இருந்துட்டே. அதனால ஆம்பளைகளைப் பத்தி ஒனக்கு அதிகம் தெரியாது. கையில பணம் இருக்குன்னு தெரிஞ்சா ஒன்னையே சுத்துவானுங்க. ஜாக்கிரதையா இருக்கணும்” என்று எச்சரித்தாள் தேவிகா.  

 உடன்பணிபுரிபவர்கள் அந்த அலுவலக சம்பிரதாயப்படி ஆளுக்கு ஐநூறு ரூபாய் பங்களிப்பு செய்தார்கள். அதில் ஸ்வீட், காரம், காபி போக மீதிப்பணத்தில் பொன்னிக்கு ஒரு மொபைல் போன் அன்பளிப்பாகக் கொடுக்க முடிந்தது.

 அப்போதுதான் அங்கு வந்தாள் சாந்தி, கூரியரில் வந்த அட்டைப்பெட்டியை எடுத்துக்கொண்டு.

‘வாசு’ என்ற பெயரைப் பார்த்ததும் பொன்னியும் சாந்தியும் ஒருவரையொருவர் திகைப்புடன் பார்த்துக்கொண்டார்கள். “அவனாக  இருக்குமோ?” என்றாள் சாந்தி.

“அவனாகத்தான் இருக்கவேண்டும். வேறு எந்த வாசு தடியனும் எனக்குத் தெரியாது” என்றாள் பொன்னி.

“இத்தனை வருஷம் கழித்து இப்போது ஏன்  வருகிறான்? எனக்கென்னவோ பயமாக இருக்கிறது” என்றாள் சாந்தி.

தேவிகாவுக்குப் புரிந்துவிட்டது. “பார்த்தாயா, பொன்னி! உன் கைக்குப்  பெரிய தொகை வரப்போவதை உன் பழைய நண்பன் மோப்பம் பிடித்துவிட்டான்” என்று சிரித்தாள் பலமாக.

 “ஒரு திருத்தம். வாசு என்னுடைய நண்பன் அல்ல. சாந்தியுடைய நண்பன்!” என்றாள் பொன்னி வெறுப்புடன். “இல்லையா சாந்தி?”

 “மண்ணாங்கட்டி! ஏதோ வந்தான், பெண் பார்த்துவிட்டுப் போனான். ஜாதகம் சரியில்லை என்று கடிதம் வந்தது. அவனா எனக்கு நண்பன்? கழிசடை!” என்றாள்  சாந்தி கோபத்துடன்.

 வாசுவைப் பற்றி தேவிகாவுக்குத் தெரியும். “பாவம்டி, வாசுமேல ஒரு தப்பும் இல்லை. நீ ஏழைன்னு அவங்கப்பா தட்டிக் கழிச்சிட்டாரு. அதுக்கு அப்பறமும் அவன் எவ்ளோ தடவை உன்னோட பேசறதுக்கு முயற்சி பண்ணினான்  இல்லையா?  நீதான் பிடிகொடுக்கல..”

ஷோபனா இடைமறித்தாள். “ஒருவேளை வாசுவுக்கு இவ  சரின்னு சொல்லியிருந்தா இப்படி வெறும் கழுத்தா நிக்கவேண்டி இருக்காதோ என்னவோ!”    

சாந்திக்கு இதைப்பற்றி மேற்கொண்டு விவாதம் வேண்டாம் என்று தோன்றியது. “பொன்னி, சரண்யாவும் பாலுவும் மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறாங்க. நீ எப்ப வீட்டைக் காலி பண்ணைச் சொல்வியோன்னு பயந்துகிட்டே இருக்காங்க."  

 “எதுக்கடி நீ காலி பண்ணணும், முட்டாள்?” என்றாள் பொன்னி அவளை ஆழமாகப் பார்த்துக்கொண்டே. “மாடியில் ஒரே ஒரு ரூம் எனக்குப் போதும். மற்றதெல்லாம் உங்களுக்குத்தான். ரெண்டுபேர் படிப்பும் முடியுற வரைக்கும் என்னோடயே இருங்கள். நான் குவார்ட்டர்ஸைக் காலிபண்ணிட்டு நாளைக்கே வந்துடறேன்.”  

சாந்தியின் வயிற்றில் பாலை வார்த்ததுபோல் இருந்தது. அவளுக்கும் ஒரு ஸ்வீட் காரம் காபி நீட்டினாள் ஷோபனா. ஆனால் அதைத் தின்ன விடாமல் வாசுவைப் பற்றி அவள் சொன்ன கருத்து சாந்தியின் மனதில் ஈட்டி போல் குத்தி நின்றது. வாசுவின் வருகையால் தனக்கு என்னெவெல்லாம் நிகழுமோ என்று நினைத்தபோது குழந்தைகளின் எதிர்காலம் நல்லபடி அமையவேண்டுமே என்ற பயமும் மேலோங்கியது.

(தொடரும்) 

இதன் அடுத்த பகுதி   -"  வண்ணம் கொண்ட வெண்ணிலவு-2  " படிக்க இங்கே சொடுக்கவும்.

வியாழன், ஜனவரி 04, 2024

லட்டுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

லட்டுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்? 

இப்போதுதான் நுவார்க்கில் வந்து இறங்கியது போல் இருக்கிறது. அதற்குள் ஆறுமாதம் முடியப்போகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்தியா திரும்ப வேண்டும்.

இரண்டு வருடங்களாக உலகைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்று இன்னும் அடங்கியபாடில்லை. ஆனால் பெரும்பாலான அமெரிக்கர்களிடம் தாங்களாகவே முன்வந்து பூஸ்டர் போட்டுக் கொள்ளும் உந்துதலைக் காண முடியவில்லை. போகட்டும், மாஸ்க் அணியும் பழக்கமாவது  பரவலாக வேரூன்றியுள்ளதா என்றால் அதுவும் இல்லை. நம்மூரில் இருந்து போனவர்கள் கொஞ்சம் தேவலை. இதனால் ஒன்றரை வயதுக்  குழந்தையோடு  வெளியூர் செல்வது என்றால் அபாயகரமான விஷயமாகவே தோன்றியது.

மருமகள் புவனாவுக்கு இதில் பெரிதும் மனக்குறை. மாமனார் மாமியாரைப்  புதிய இடங்களுக்கு அழைத்துப் போக முடியவில்லையே என்று வருந்தினாள். ஃபிளஷிங் விநாயகர், பிரிட்ஜ்வாட்டர் பாலாஜி, பொமோனா லக்ஷ்மிநரசிம்மர், மார்கன்வீல் குருவாயூரப்பன், ராபின்ஸ்வீல் ஸ்வாமிநாராயணர்   என்று முக்கியக் கோவில்களைப்  பார்த்தாயிற்று. ப்ளெமிங்க்டனில் மகாபெரியவா பாதுகைக் கோவிலும் தரிசனம் ஆகிவிட்டது.  ஆகவே இதுவரை பார்க்காத டெலாவர் மகாலட்சுமி ஆலயத்திற்கு மட்டுமாவது எப்படியும் அழைத்துப் போவது என்று முடிவு செய்தாள். எடிசனில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் இருந்த டெலாவர் மாநிலத்தின் ஹாக்கஸின் என்ற ஊரில் அமைந்திருந்தது அக்கோவில்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை வெங்கட்டும் புவனாவும் தங்கள் குழந்தை கிருஷ்ணாவுடன் தயாரானார்கள். மாமனார் பரசுராமனும் மாமியார் ஞானமும் வழக்கம்போலச் சுறுசுறுப்பாக எழுந்து உடன்வந்தார்கள். வெங்கட் திறமையான டிரைவர். வண்டி போவதே தெரியாமல் அமெரிக்காவின் 40ஆம் எண் நெடுஞ்சாலையில் நழுவிக்கொண்டு ஓடியது. மணிக்கு நூறு கிலோமீட்டருக்குக் குறைந்து ஓட்டக்கூடாது என்பதால் சரியாக இரண்டுமணி நேரத்தில் டெலாவர் எல்லையைத் தொட்டார்கள்.


தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் ஜோ பைடனின் சொந்த ஊர் டெலாவர் என்றாலும் ஆடம்பரமில்லாத எளிய சூழலே வழியெங்கும் தென்பட்டது. நீண்ட பாலங்களும், இடையிடையே குறுக்கிடும் ஆறுகளும் மற்ற நீர்வழிகளும் ஆங்காங்கே தென்படும் நகர்ப்புறம் சார்ந்த பசுமைகளும் கவர்ச்சியானவையாக இல்லை. இதனுடன் ஒப்பிட்டால் நியூஜெர்சி மாநிலம் பலமடங்கு இயற்கையெழில் கொண்டதாக விளங்குகிறது. இயற்கையின் விளையாட்டு!

மாநிலத்தின் எல்லையிலேயே ஹாக்கஸின் நகர் அவர்களை வரவேற்றது. நெடுஞ்சாலைக்கு அருகில் யார்க்ளின் ரோடில் அமைந்திருந்தது மகாலக்ஷ்மி ஆலயம். அதன் வாசலில் திறந்தவெளியில் வானத்தைப் பார்த்து நின்றுகொண்டிருந்தார் 25 அடி உயரமான ஆஞ்சநேயர். சமீபத்தில் அங்கு நிலைநாட்டப்பெற்றவராம். காரிலிருந்து இறங்கியவுடனேயே குழந்தை கிருஷ்ணாவுக்கு அந்த ஆஞ்சநேயரைப் பிடித்துவிட்டது. அவரை நோக்கி ஓடினான். ஆனால் கோவிலுக்குள் நுழைந்து முக்கியத் தெய்வங்களைத் தொழுதபிறகே ஆஞ்சநேயரைத் தொழவேண்டும் என்பதால் அவனை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள் புவனா.

வழக்கமான தென்னிந்தியக் கோயில் அமைப்பில் கட்டப்பட்ட ஆலயம். தெலுங்கு பேசும் இந்தியர்களின் குழுவால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது.  முக்கியத் தெய்வமாக மகாலக்ஷ்மி இருந்தாலும் வழக்கம்போல மற்ற தெய்வங்களுக்கும் தனித்தனிச் சன்னதிகள் இருந்தன. கம்பீரமான விநாயகர் அவர்களை அன்போடு வரவேற்றார். சிவன் மற்றும் தக்ஷிணாமூர்த்தி, முருகன் (கார்த்திகேயன்), விஷ்ணு (சத்யநாராயணா), ஐயப்பன், ராதா-கிருஷ்ணா, சீதா-ராம-லக்ஷ்மணர், நரசிம்மர் ஆகியோரும் கடல்தாண்டி அமெரிக்காவில் வாசம்செய்யும் நம்மவர்களைக் காப்பதற்குத் தயாராக அங்கு  காத்திருந்தார்கள். சிவன் இருந்தால் நவக்கிரகங்களும் இருப்பார்கள் அல்லவா? இருந்தார்கள். 

அழகாகப் பராமரிக்கப்பட்ட ஆலயம். சற்றே அதிகம் நிதிவசதி இருந்தால் இன்னும் அழகூட்டமுடியும் என்று தோன்றியது. அர்ச்சகர்கள் அருமையாக மந்திரங்கள் சொல்லிப் பூஜை செய்தார்கள். கற்பூரதீபம் காட்டியவுடன் பக்தர்கள் சன்னதியில் கட்டப்பட்டிருந்த பெரிய மணியின் நாக்கைப்   பற்றிக்கொண்டு மணியடிப்பதைக் கண்ட குழந்தைக்கு, தாத்தாவின் தோளில் ஏறிக்கொண்டு, தானும் மணியடிக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. ஒரு முறை மணி அடித்தவன், அர்ச்சகர் ஏதாவது சொல்வாரோ என்ற தயக்கத்துடன்  அடுத்த மணியும் அடித்தான். அவர் ஏதும் சொல்லாததால் அதன் அருகில் இருந்த சிறிய மணியையும் அடித்துக் குதூகலித்தான்.

அமெரிக்கக் கோவில்களில் அர்ச்சனைக்கு ஆப்பிள் பழங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். (வாழைப்பழம் கிடைப்பது அரிது). அதை நிவேதனம் செய்து பக்தர்களுக்கே கொடுக்கிறார்கள். பாதாம், முந்திரி, திராட்சை அடங்கிய கலவையைப்  பொதுவாக எல்லோருக்கும் விநியோகிக்கிறார்கள். இந்த மகாலக்ஷ்மி ஆலயத்தில் ‘லட்டு அர்ச்சனை’ என்று சிறப்பு அர்ச்சனை செய்கிறார்கள். (48 டாலர் கட்டணம்). இரண்டு பெரிய லட்டுகளை நிவேதனமாகச் சமர்ப்பித்து நமக்கே திருப்பித் தருகிறார்கள்.

கற்பூர தீப ஆராதனையின் அற்புதமான வெளிச்சத்தில் பளபளக்கும் ஆபரணங்களுடன் மகாலக்ஷ்மியின் தெய்வீகத் தோற்றத்தைக் கண்ட கிருஷ்ணா, தானாகவே தன் இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டான். அர்ச்சகர் அவன் கைகளில் ஒரு லட்டை வைத்தார். இன்னொன்றைக் குங்குமப் பிரசாதத்துடன் புவனாவிடம் அளித்தார்.

கிருஷ்ணா அந்த லட்டை ஆச்சரியத்துடன் பார்த்தான். அவன் கைகளை மீறிய அளவில் பெரியதான அந்த உருண்டை வடிவம் அவனைக் கவரவில்லை. அம்மாவிடமே கொடுத்துவிட்டான்.

எல்லாச் சன்னதிகளையும் தரிசித்து முடித்தபோது, திருப்பதி மாதிரி துணி கட்டிய உண்டியலைப் பார்த்தான் கிருஷ்ணா. அவன் கையில் ஐந்து டாலர் நோட்டை வைத்தார் பரசுராமன். எல்லையற்ற மகிழ்ச்சியுடன் அந்தப் பணத்தை உண்டியலுக்குள் போட்டான் கிருஷ்ணா.

வாசலை நோக்கி அனைவரும் நடந்தார்கள். அப்போது பிரசாதம் விற்கும் இடம் வந்தது. என்ன வாங்கலாம் என்று யோசித்தபடி புவனா நின்றபோது, “ம்மா! ம்மா!” என்று கைகாட்டினான் கிருஷ்ணா. அங்கே சிறிய அளவிலான இரண்டிரண்டு லட்டுகள் தனித்தனி பிளாஸ்டிக் பொட்டலங்களாக இருப்பதை அவன் கண்டுபிடித்துவிட்டான். அவன் முகத்தில் ஆனந்தத்தின் வெளிச்சம் அரும்பியது.  அம்மாதிரி சிறு லட்டுகளை அவன் ஏற்கெனவே பார்த்திருக்கிறான். விரும்பிச் சாப்பிட்டும் இருக்கிறான்.

கிருஷ்ணாவின் முகத்தைப் பார்த்து புவனாவும் வெங்கிட்டும் சிரித்துக்கொண்டனர். ஆளுக்கு ஒன்று என்று ஐந்து பொட்டலங்களை வாங்கினார்கள். தனக்கு ஒன்று தரப்பட்டவுடன், பிடிவாதமாக அந்தப் பொட்டலத்தைப் பிரித்து, இரண்டு கைகளிலும் இரண்டு லட்டுகளை எடுத்து வைத்துக்கொண்டு சந்தோஷமாக அங்குமிங்கும் ஓடினான் கிருஷ்ணா.

“கொஞ்சம் லட்டு தின்னுடா கண்ணு” என்று பாட்டி கூறினாலும் அந்த உருண்டை வடிவ லட்டைச் சிதைக்க அவன் உடன்படவில்லை. “நோ நோ நோ நோ” என்று தலையை பலமாக ஆட்டினான். தனக்குப் பிடிக்கவில்லை என்றால் நான்கைந்துமுறை ‘நோ’ சொல்லுவது கிருஷ்ணாவின் இயற்கை. “சரி, அப்படியே வெச்சுக்கோ. ஆனா கையெல்லாம் பிசுபிசுன்னு ஆயிடும்” என்று சமாதானம் ஆனார் பாட்டி.

முறுக்கு, மிக்ஸ்சர், காராபூந்தி எல்லாம் கொஞ்சம் வாங்கினார்கள். பிரசாதம் விற்கும் கோவில் பணியாளர், “காபி, டீ யும் கிடைக்கும். வேண்டுமா?” என்றார். காபியை வேண்டாம் என்று சொல்வதற்கு எக்கச்சக்கமான மன  உறுதி வேண்டுமல்லவா? அது பரசுராமனிடம் இல்லை என்பது ஞானத்திற்குத் தெரியும். “அவருக்கு ஒரு காபி. எனக்கு ஒன்று. அவருக்கு சர்க்கரை போடலாம்” என்று அறிவித்தார். (தனக்குச் சர்க்கரை போட வேண்டாம் என்பதை அவர் தெரிவிக்கும் சாதுர்யம் அது). அப்போது தூரத்தில் சென்று கொண்டிருந்த ஒரு பக்தரின் காதுகளில் இது விழுந்ததற்கு அடையாளமாக அவரும் “ஒரு காபி” என்று ஐந்து டாலரை நீட்டினார்.

எதிர்பார்த்தபடியே கிருஷ்ணாவின் கைகளில் இருந்த லட்டுகள் பிசுபிசுக்கத் தொடங்கின. அவனுக்குச் சற்றே என்னவோ போலிருப்பதை முகம் காட்டியது. ஆனால், “என்னிடம் கொடுக்கறியா? வீட்டுல வந்ததும் குடுக்கறேன்” என்று பாட்டி சொன்னதும் முடியாது என்பதுபோல் “நோ நோ நோ நோ” என்று தலையாட்டினான்.

“சரி, அப்படீன்னா அம்மா கிட்டயாவது குடு” என்று கைநீட்டினாள் புவனா. “இல்லேன்னா கையில எறும்பு கடிச்சுடும்.” சொல்லும்போதே அவளுக்குச் சிரிப்பும் வந்துவிட்டது. ஏனென்றால் அவனுக்கு எறும்பு என்றால் என்னவென்றே தெரியாதே! அடையாளம் காட்டுவதற்குக் கூட ஒன்றிரண்டு எறும்புகள் அவர்கள் வீட்டில் காணப்பட்டதே இல்லை.  மீண்டும் “நோ நோ நோ நோ” தான் பதில். பிறகு வெங்கிட்டும் கேட்டான், “அப்பாகிட்ட ஒரு லட்டு குடு” என்று. அவனுக்கும் நான்கு “நோ” தான் பதில்.

தரைத் தளத்தில் காயத்ரி விக்ரகம் இருந்தது. நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் மட்டும் அங்கு பூஜை நடக்கும்போல் இருந்தது. அழகான விக்கிரகம். அங்கு சென்றபோது, எதிர்ப்பக்கத்தில் இருந்த ஒரு சிறுவன் கிருஷ்ணாவைப்  பார்த்துவிட்டான். அவனும் அவனது இளம் பெற்றோர்களும் ஏற்கெனவே பூஜையை முடித்து, ஒரு மேஜையில் உணவருந்திக் கொண்டிருந்தனர். இவன் கையில் இரண்டு மஞ்சள் நிறமான உருண்டைகளைப் பார்த்தவுடன் அவனுக்கும் ஆசை வந்திருக்கவேண்டும். “அம்மா, லட்டு, லட்டு!” என்று தன் தாயிடம் கூறினான். தமிழ்க் குடும்பம்.

அதற்குள் கைகழுவிக்கொண்டு வந்த சிறுவனின் தந்தை, “ராகுல், வா, உனக்கும் லட்டு வாங்கலாம்” என்று பிரசாதக் கடைக்குச் சென்றார். ஆனால் அங்கு லட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டன. தட்டில் மீதமிருந்த உதிர்ந்த லட்டுத் துண்டுகளைக் கடைக்காரர் அவன் கையில் கொடுத்தபோது, சிறுவன் ராகுல் உதறிவிட்டு,  ஏமாற்றத்தில் அழத் தொடங்கினான். “எனக்கு லட்டுதான் வேணும்” 

அவனைப் பார்த்தால் கிருஷ்ணாவை விட இரண்டு வயது பெரியவனாகத் தோன்றியது. ஆனால் குழந்தைகள் எப்போதும் குழந்தைகள்தானே! ராகுல் நிறுத்தாமல் அழ ஆரம்பித்தான். அவனுடைய தாய், வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த சாக்லேட், முறுக்கு இன்னும் பல உணவுப் பண்டங்களைக் கொடுப்பதாகச் சொன்னாலும் “எனக்கு லட்டுதான் வேணும்” என்று உரக்கக் கத்தினான் ராகுல். அவனை எப்படிச் சமாதானம் செய்வது என்று அவன் தாயாருக்குத் தெரியவில்லை.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

இரண்டு கைகளிலும் லட்டுகளுடன் கிருஷ்ணா அவன் எதிரில் ஓடிப்போய் நின்றான். கிருஷ்ணாவுக்கு இன்னும் பேச்சு வரவில்லை. ஒன்றரை வயதுதானே! அதிலும் மூன்று மொழிகளின் தாக்கம் அவனுக்கு இருந்தது. பெற்றோர்கள் பேசுவது தமிழில். ரைம்ஸ்கள் கேட்பது ஆங்கிலத்தில். அவனுடைய பேபிஸிட்டர் உரையாடுவது ஸ்பானிஷ் மொழியில். ஆகவே அவனுடைய மழலையில் மூன்று மொழிகளும் கலந்து ஒலிப்பது வழக்கம். இப்போதோ, தன்னை விடப் பெரிய பையனைப் பார்த்து அவன் ஏதோ சொல்ல வருகிறான். எந்த மொழியில் பேசுவான், என்ன பேசுவான் என்று புவனா ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டு நின்றாள்.   

ராகுலின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான் கிருஷ்ணா. “சோ..ச்..சோ..” என்றான். அதற்கு ‘அழாதே’ என்று அர்த்தம் என்பது ராகுலுக்கு எப்படிப் புரிந்ததோ தெரியவில்லை. சட்டென்று அழுகையை நிறுத்தினான்.

தன்  வலது கையை ராகுலை நோக்கி நீட்டினான் கிருஷ்ணா. விரல்களை விரித்து அதிலிருந்த லட்டை ‘எடுத்துக்கொள்’ என்பதுபோல் அவன் வாயருகில் கொண்டுசென்றான். அவன் முகத்தில் புன்சிரிப்பு தவழ்ந்தது.

ராகுலுக்கும் முகத்தில் சிரிப்பு திரும்பியது. ஆனால் அரை மனதுடன் “நோ” என்றான். தன்  அம்மா சாந்தியைப் பார்த்தான். அவளோ புவனாவைப் பார்த்தாள். புவனா, “ராகுல், ப்ளீஸ் டேக் இட்” என்றாள் முறுவலுடன்.

அதன்பிறகே கிருஷ்ணாவிடம் இருந்து லட்டைப் பெற்றுக்கொண்டான் ராகுல். ஒரு நிமிடம் முன்பு அழுத பையனா இவன் என்றால் யாராலும் நம்ப முடியாத அளவுக்கு ஆனந்தப் பரவசத்தில் குதிக்க ஆரம்பித்தான். அவ்வளவுதான் இரண்டு குழந்தைகளும் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.

சற்று நேரத்தில் மஹாலக்ஷ்மி ஆலயத்தில் இருந்து கிளம்பத் தயாராயினர் இரண்டு குடும்பங்களும்.

ஆலயத்தின் வெளிப்புறத்தில் நின்று அருள் புரியும் ஆஞ்சநேயரைப் பார்த்து வணங்கிவிட்டுப் போகலாம் என்று அனைவரும் ஆஞ்சநேயரின் பாதங்களுக்கு அருகில் வந்து நின்றனர். “‘வடைமாலை சேவை’ இருக்கிறது, செய்கிறீர்களா?”  என்றார் அங்கிருந்த ஒரு பெரியவர். கையில் ரசீது புத்தகத்துடன் அருகில் ஒரு சிறு குடிலில் அமர்ந்திருந்தார்.

அதாவது 108 வடைகளால் கோர்க்கப்பட்ட மாலை தயாராக உள்ளது, அதற்குரிய கட்டணம் செலுத்தினால்  ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்படும் என்று அர்த்தம். ராகுலின் தந்தை வேகமாகத் தன் பர்ஸிலிருந்து டாலர்களை எடுத்தார்.

பொதுவாக, ஆஞ்சநேயருக்குச் சார்த்தப்படும் மாலையிலுள்ள வடைகள், தமிழ்நாட்டில் என்றால் தட்டையான மிளகுவடைகளாக இருக்கும். சென்னையில் ஆழ்வார்ப்பேட்டையில் ‘லேண்ட் டெவெலப்மெண்ட் பேங்க்’ ஆஞ்சநேயர் கோவிலில் இந்த மிளகுவடைகள் உலகப் பிரசித்தம். பத்து நாள் வெளியில் வைத்தாலும் கெடாது. ஆனால், பெங்களூரில் இட்லியோடு சாப்பிடும் மெதுவடையைத்தான் மாலையாக்குகிறார்கள். சார்த்தப்பட்ட மாலையைப்  பிரித்து பக்தர்களுக்கு விநியோகம் செய்வதற்குள் கிழிந்த துணி போலாகிவிடும். பெரும்பாலும் இவை உண்ணப்படாமலே வீணாவதுண்டு. இந்த டெலாவர் ஆஞ்சநேயரின் பாக்கியம், அவருக்கும் அதே மெதுவடையால் ஆன மாலைதான் அன்று சார்த்தினார்கள்.    

அர்ச்சனை முடிந்து பிரசாதமாகச் சில வடைகளைக் கொடுத்தார் அர்ச்சகர். அவற்றில் இருந்து ஒரு வடையை ஆசையோடு எடுத்துக்கொண்டான் ராகுல்.

அவனே சாப்பிடுவான் என்று எதிர்பார்த்தால், ஓடி வந்து கிருஷ்ணாவிடம் அதைக் கொடுத்தான். “இந்தா, சாப்டு!” என்று அன்போடு கூறினான். வடைக்கும் கிருஷ்ணாவின் வாய்க்கும் மிகக் குறைந்த இடைவெளிதான் இருந்தது. 

ஆனால் கிருஷ்ணா அதை ஏற்கவில்லை. புன்சிரிப்புடன் “நோ நோ நோ நோ“ என்றான். ராகுல் மீண்டும் வற்புறுத்தினான். சாந்தியும், “ப்ளீஸ் டேக் இட் கிருஷ்ணா!” என்று அருகில் வந்து அவனிடம் குழைந்தாள். ஆனால் கிருஷ்ணா மசியவில்லை. “அவனுக்கு வடை அதிகம் பிடிக்காது” என்று புன்முறுவலுடன் கூறினாள் புவனா.

அது மட்டுமல்ல, ராகுல் நீட்டிய வடையைத் திடீரென்று பிடுங்கிய கிருஷ்ணா, அதை ராகுலின் வாயில் அடைப்பதுபோல் கொண்டுபோனான். “ஓப்பன், ஓப்பன்” என்று அவனை வாய் திறக்கச் சொல்லி, வடையை உள்ளே நுழைத்த பிறகே அமைதியடைந்தான். 

பார்த்துக்கொண்டிருந்த இரு குடும்பங்களே யன்றி, அர்ச்சகர்களும் இதைப்  பார்த்து வியப்போடு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்தச் சிறப்பான தருணத்தைத் தன் கேமிராவில் பிடித்துக்கொண்டான் வெங்கிட். எந்தத் தூண்டுதலும் இல்லாமல் ராகுலும் கிருஷ்ணாவும் தாங்களாகவே ஒருவரை யொருவர் அணைத்துக்கொண்டு படத்திற்கு போஸ் கொடுத்தது, நிலைமையின் இனிமையை அதிகப்படுத்தியது.

அப்போது இன்னொரு அதிசயம் நிகழ்ந்தது. புவனாவின் கார் நம்பரைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்த சாந்தி, “நீங்க அபிதா பர்த்டேக்கு வந்திருந்தீர்களா?” என்று தயங்கித் தயங்கி கேட்டாள்.

ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்த புவனா,”ஆமாம்! இப்போது நினைவுக்கு வருகிறது” என்றாள். அது மூன்று வருடங்களுக்கு முன்பு! அப்போது கிருஷ்ணா உருவாகக் கூட இல்லை. “என் நாத்தனார் வேலை செய்யும் பேங்கில் நீங்களும் வேலை செய்கிறீர்கள் அல்லவா? அவளுடைய கொலீகின் பெண்தான் அபிதா!” என்றாள்.

“உங்களுக்கு நல்ல மெமரி பவர்! இப்போது நான் அங்கு இல்லை. டெலாவரிலேயே சொந்தமாகத் தொழில் செய்கிறேன்” என்றாள் சாந்தி.

அவ்வளவே, தங்கள் குழந்தைகளைத் தொடர்ந்து தாங்களும் நெருங்கி வந்து விட்டதை உணர்ந்தார்கள் அவர்கள்.

சாந்தியின் வீடு, ஹாக்கஸின் நகரில்தான் இருந்தது. “எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டுப் போகவேண்டும்” என்று கேட்டுக்கொண்டாள் சாந்தி. “அடுத்த தெருவிலேயே ஒரு பிள்ளையார் கோவில் இருக்கிறது. பிள்ளையார்ப்பட்டியில் இருக்கும் அதே கற்பக விநாயகர் இங்கும் இருக்கிறார்! அவரையும்  பார்த்துவிட்டுப் போகலாம்!” என்றாள். ஆனால் புவனாவுக்கு அன்று இரவுக்குள் முடிக்கவேண்டிய எடிட்டிங் வேலை பாக்கி இருந்தது. முகவரியை வாங்கிக்கொண்டு “இன்னொரு ஞாயிற்றுக்கிழமையில் வருகிறோம்” என்று உறுதியளித்தாள். “உங்களுக்கும் நல்ல ஞாபக சக்திதான்! பாராட்டுக்கள்” என்றாள்.

“ஒரு நாள் முன்பு சொன்னால் போதும். நீங்கள் வரும்போது கிருஷ்ணாவுக்காக விசேஷமாக லட்டு செய்து வைக்கிறேன்” என்று சிரித்தாள் சாந்தி. “கிருஷ்ணா, உனக்கு லட்டு வேணுமா? டு யூ லைக் லட்டு?” என்று கேட்டாள்.

“யா, யா, யா, யா” என்று நான்குமுறை மகிழ்ச்சியோடு சொன்னான் கிருஷ்ணா.

“குட். உனக்கு எத்தனை லட்டு வேணும்? ஒன், டூ ஆர் த்ரீ?” என்றாள் சாந்தி.

“டூ, டூ, டூ, டூ“ என்றான் கிருஷ்ணா உற்சாகமாக. 

அவனை ஓடிவந்து அணைத்துக்கொண்டு ராகுல், “எனக்கு த்ரீ, த்ரீ, த்ரீ” என்றான். கலகலப்பாக விடைபெற்றுக்கொண்டார்கள் இரு குடும்பத்தினரும். 

லட்டுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

 - இராய செல்லப்பா

****

(இருவாட்சி- பொங்கல் சிறப்பு மலர்-2023 இல் வெளிவந்தது).

 

புதன், ஜனவரி 03, 2024

குவிகம் வெளியிடும் 'கோலாமாவு கோகிலாவின் ஏழாவது நாய்க்குட்டி'



2024 புத்தாண்டை வரவேற்கும் விதமாக, 
'குவிகம்' பதிப்பகத்தினாரால்
வெளியிடப்படும் 
எனது 
'மென்கதை'  தொகுப்பு




 

செவ்வாய், ஜனவரி 02, 2024

பட்டுப் பாவாடை (சிறுகதை)

 வாசக நேயர்களுக்கு என் நெஞ்சார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

பட்டுப் பாவாடை (சிறுகதை)

பொழுது இன்னும் விடிந்தபாடில்லை. கீதாவுக்கு முன்பே எழுந்துவிட்டன அவளுடைய ஒரு சேவலும் இரண்டு கோழிகளும் பத்து குஞ்சுகளும். குடிசையின்  சாத்திய கதவுக்கு முன் வந்து ‘க்ளக்’,  ‘க்ளக்’,  ‘க்ளக்’ என்று சப்தமிட்டன.

 ‘எழுந்திரு கண்ணு’ என்று தன் மூன்று வயது மகள் பிரியாவை எழுப்பியபடியே கதவைத் திறப்பதற்கும் சைக்கிள் மணியை அடித்தபடி பிரபு வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.

 வந்தால் சுலபத்தில் போகமாட்டான். தன்னை எப்படியாவது வசப்படுத்திவிடவேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறான். அவனைப் பார்த்தும் பார்க்காததுபோல் வாசல் பெருக்குவதற்குத் துடைப்பத்தைக் கையில் எடுத்தாள் கீதா.

“என்ன கீதா மேடம், வரவேற்பு பலமாக இருக்கிறதே!” என்று சைக்கிளிலிருந்து இறங்காமலேயே சிரித்தான் பிரபு.

“குட் மாணிங் மாமா” என்றாள் பிரியா. ப்ரீ-கேஜி யில் சொல்லிக்கொடுத்த பழக்கம்.

 கீதாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. இராத்திரி முழுதும் தனக்குப் பொங்கலுக்குப் பட்டுப் பாவாடைதான் வேண்டும் என்று அடம் பிடித்து அழுதுகொண்டிருந்த பிரியாவை சமாதானப்படுத்தவே விடியற்காலை ஆகிவிட்டது. கோழித்தூக்கம் போடுவதற்குள் சேவல் கூவிவிட்டது. இப்போது இவன் வேறு நக்கல் பண்ணுகிறான். அவனுக்கு குட்மாணிங் சொல்கிறாள்  இவள்….

 “இங்க பாரு பிரபு!”  என்றவள் பக்கத்து குடிசைக்காரிகள் யாரும் கவனிக்கிறார்களா என்று ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே,  “ஒனக்கு நூறு தடவை சொல்லிட்டேன்… இனிமே வராதேன்னு! புருஷன் இல்லாத வீட்டுக்கு இப்படி ஒரு தடியன் அடிக்கடி வந்துபோனா பாக்கிறவங்களுக்கு என்ன பதில் சொல்றது?’ என்றாள் சற்றே கோபத்துடன். 

“உண்மையைத்தான் சொல்லிவிடேன்” என்று சைக்கிளில் இருந்து இறங்கினான் பிரபு. “எட்டாவது படிக்கும்போதே இவன்  என்னை லவ் பண்ணினான், ஆனா எனக்கு வேற ஆளோட கல்யாணம் ஆயிடுச்சி. அந்த ஆளும் ஒரு பொண் கொழந்தையைக் குடுத்துட்டு ஆக்சிடெண்ட்டுல போயிட்டான். இந்த தடியன் இன்னும் கல்யாணமே பண்ணிக்காம என்னையே சுத்திட்டு வரான் - அப்படீன்னு சொல்லிடேன்! அவங்களா பாத்து நல்ல தீர்ப்பு சொல்லட்டுமே!” என்று பிரியாவைக் கையில் தூக்கிக் கொண்டான்.

 “மாமா, எனக்குப்  பட்டுப் பாவாடை வாங்கித் தரியா?” என்றாள் பிரியா.

கையிலிருந்த துடைப்பத்தை ஆவேசத்துடன் வீசி எறிந்தாள்  கீதா. “அவன் யாருடி ஒனக்கு வாங்கித் தர்றதுக்கு?” என்று அவளை பிரபுவிடமிருந்து பிடுங்கிக்கொண்டாள்.

“பிரபு! திரும்பியும் சொல்றேன், நான் மனசு மாறி ஒன்னையக் கல்யாணம் கட்டுவேன்னு நெனக்காதே. எங்க ஆளு இல்லாம போயிட்டாலும், என் மனசுல எப்பவும் அவர்தான் இருப்பார். அதுனால ஒன்னோட சபல புத்திய வுட்டுடு. ஒன்னோட ஜவுளிக் கடையிலே பதினஞ்சு இருவது பொண்ணுங்க வேல செய்யுதில்ல, அதுங்கள்ல ஒண்ணைப் புடிச்சுப் போட்டுக்கோ. மறுபடி வந்தா பொண்டாட்டியோட தான் என்னப் பாக்க வரணும். கெளம்பு நீ! எட்டு மணிக்குள்ள டாக்டரு வீட்டுல இருக்கணும்” என்று உறுதியுடன் சொன்னாள்.

வழக்கம்போல் அசடு வழிந்தபடி நகர்ந்தான் பிரபு.

***

டாக்டர் கிருபாகரன் வீட்டில் இரண்டாவது வேலைக்காரியாகச் சேர்ந்து இரண்டு வ்ருடங்கள் ஆகிறது. அவர் மனைவி லதா இவளை மிகவும் அன்போடுதான் நடத்தினாள். என்றாலும் சீனியர் வேலைக்காரியான கல்பனாவுக்கு இவளைக் கண்டால் எப்போதும் இளப்பம். அவள் பிளஸ்டூ படித்து பெயில் ஆனவள். கீதாவோ எட்டாவதைத் தாண்டவில்லையே! அதனால் முக்கிய வேலைகளைத் தன்னிடம் வைத்துக்கொண்டு, சின்னச் சின்ன எடுபிடி வேலைகளை மட்டும் கீதாவுக்குக் கொடுப்பாள். “பாருடி, எனக்கு லதாம்மா எஜமானி, ஆனா ஒனக்கு நான்தான் எஜமானி” என்று நக்கலாகச் சிரிப்பாள்.

கீதா பொறுமையாக இருந்துவிடுவாள்.

விபத்தில் இறப்பதற்கு ஒரு மாதம் முன்புதான் டாக்டரின் கிளினிக்கில் வேலைக்குச் சேர்ந்தான் கீதாவின் கணவன் முருகேசன். அவன் துரதிர்ஷ்டம், கொரோனா தொற்று வந்துவிட்டது. கிளினிக் மூடவேண்டியதாயிற்று. அரசாங்க ஆஸ்பத்திரியிலேயே கிருபாகரனுக்கு மூச்சுமுட்டும் அளவுக்கு வேலை. எனவே முருகேசனை நிறுத்திவிட்டார். அடுத்த வாரமே அவன் விபத்தில் இறந்துபோனான். அனுதாபத்தின் காரணமாக  கீதாவைத்  தன்  வீட்டில்  வேலைக்காரியாக எடுத்துக்கொண்டாள் லதா. அவ்வப்பொழுது குழந்தை பிரியாவுக்கும் வேண்டியதைக் கொடுப்பாள். இரண்டு வருடம் இப்படியே கழிந்தது. 

பொங்கல் வருவதை முன்னிட்டுப்  புதிய துணிமணிகள் வாங்கவேண்டுமென்று டாக்டரை ‘ஆனந்த் டிரஸ்ஸஸ்’ கடைக்கு அழைத்தாள் லதா. அந்த ஊரில் அதுதான் பெரிய ஜவுளிக்கடை. குறிப்பாகப் பட்டுத்துணிகளுக்குப் பேர்போனது. “அய்யய்யோ நான் மாட்டேன். ஒரு சட்டை எடுக்க மூன்றுமணி நேரம் ஆகும் உனக்கு. கீதாவை அழைத்துக்கொண்டு போய் வா” என்று அவளைக் கத்தரித்துவிட்டார் கிருபாகரன்.

கீதா முதலில் மாட்டேன் என்றாள். இரண்டு காரணங்கள். ஒன்று கல்பனா பொறாமைப்படுவாள். இன்னொன்று, அந்தக் கடையில்தான் பிரபு வேலைசெய்துகொண்டிருந்தான். ஆனால் அன்று கல்பனாவுக்கு வயிற்றுவலியாக இருந்ததால் “நான் வைஷ்ணவியைப் பார்த்துக்கொள்கிறேன். நீங்க ரெண்டு பேரும் போய்வாருங்கள்” என்று ஒதுங்கிக்கொண்டாள். வைஷ்ணவி, டாக்டர் தம்பதியின் மூன்று வயதுக் குழந்தை.

 ***

“வாங்க வாங்க, டாக்டர் சார் வரலியா?” என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்றார் நாராயணசாமி. ‘ஆனந்த் டிரஸ்ஸஸ்’ உரிமையாளர்.

புன்சிரிப்போடு   அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு, “வீட்டில் எல்லாரும் நலமா?” என்றபடி உள்ளே நுழைந்தாள் லதா. அவளை நிழல்போல் தொடர்ந்து மெல்ல நடந்துவந்தாள் கீதா.

“தம்பி, பிரபு! மேடத்துக்கு எல்லாப் புது ஐட்டங்களையும் ஒண்ணுவிடாமல் காட்டு” என்றார். ஊழியர்களை அவர் தம்பி என்றுதான் அழைப்பார்.

லதாம்மாவை விடவும் கீதாவைப் பார்த்தவுடன்தான் பிரபுவுக்கு உற்சாகம் பீறிட்டது. அது கீதாவுக்கும் தெரிந்தது. இன்னும் தன்மீது காதலுடன் இருக்கும் அந்த அப்பாவியைப் பார்த்ததும் ஒரு பக்கம் அனுதாபமும், ஒரு பக்கம் தான் இழந்துவிட்ட இல்லறத்தின் தாபமும் அவளை வாட்டியெடுத்தது. உள்ளத்து உணர்ச்சி மனதில் பிரதிபலித்துவிடாதபடி லதாவின் பின்னால் ஒதுங்கியே நின்றுகொண்டாள்.

கண்ணாடி அலமாரிகளில் அடைத்திருந்த எல்லா விதமான சேலைகளையம் எடுத்துப்போட்டான் பிரபு. ஒவ்வொன்றையும் பிரித்துக்காட்டி அதனதன் சிறப்புகளை விவரித்தான். அவற்றின் விலைகள் எல்லாம் அவனுக்கு மனப்பாடமாகி இருந்ததைக் கண்டு பிரமித்துவிட்டாள் கீதா. ‘வேலையில் கெட்டிக்காரன்தான்’ என்று மனதிற்குள் அவனுக்கு சர்டிபிகேட் கொடுத்தாள்.

இரண்டே இரண்டு சேலைகள் மட்டும் தேர்ந்தெடுத்தாள் லதா. பிறகு, “மூன்று வயதுக் குழந்தைக்குப் பட்டுப் பாவாடை காட்டுங்க” என்றாள். உடனே கீதாவின் கண்கள் மலர்ந்ததை பிரபு கவனித்தான். ‘ஓஹோ, பிரியாவுக்குத்தான் டாக்டரம்மா எடுக்கிறார் போல’ என்று எண்ணிக்கொண்டான். நாலாயிரம் ரூபாயில் இலைப்பச்சையில் மஞ்சள்  ஜரிகை போட்ட பாவாடை செட் எடுத்துக் காட்டினான்.  ‘இது பிரியாவுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்’ என்று மனதிற்குள் மகிழ்ந்தான். டாக்டருக்கும் அதே வயதில் பெண் குழந்தை இருப்பது அவனுக்குத் தெரியாது.

“இது நம்ப வைஷ்ணவிக்கு சூப்பரா இருக்கும்ல?” என்று கீதாவிடம் கேட்டாள் லதா. “ஆமாங்க” என்று மகிழ்ச்சியோடு தலையாட்டினாள் கீதா. “வேறு எதுவும் வேண்டாம். இதை ‘பேக்’ பண்ணுங்க” என்று பில்லிங் கவுண்ட்டரை நோக்கி நடந்தாள் லதா.

பிரபுவுக்குத் தூக்கிவாரிப்போட்டது. ‘தன் குழந்தைக்கு மட்டும்தான் எடுப்பார்களா, வேலைக்காரியின் குழந்தைக்கும் எடுத்தால்  குறைந்தா போய்விடும்?’ என்று மற்றவர்களுக்குக் கேட்காதபடி தன் அருகில் இருந்த பெண் ஊழியர் கனகாவிடம் கூறினான் பிரபு. 

அப்போது திடீரென்று மின்சாரம் நின்றுபோனது. உரிமையாளர் நாராயணசாமி அவசரமாக உள்ளே போனார். அதே கணம் அவனுக்கு அந்த யோசனை தோன்றியது. மின்சாரம் இல்லாவிடில் கம்ப்யூட்டர் பில்லிங் போட முடியாது.  ‘பார்கோடு’ வேலைசெய்யாது. ஆகவே…

ஒன்றுக்குப் பதில், ஒரே மாதிரியான இரண்டு பட்டுப் பாவாடைகளை ஒரே அட்டைப்பெட்டியில் வைத்து  ‘பேக்’ செய்தான். எமெர்ஜென்சி லைட்டின் ஒளியில்  கார்பன் பேப்பரை வைத்து கையால் ‘பில்’ எழுதினான். பணம் கொடுத்துவிட்டு லதாவும் கீதாவும் கிளம்பினார்கள். கீதாவின் முகத்தில் மிகுந்த ஏமாற்றம் இருப்பதைக் கண்டான் பிரபு.  இருக்கட்டுமே, தற்காலிகம் தானே என்று உள்ளூற மகிழ்ந்தான்.

 வீட்டுக்கு வந்த லதா, ஜவுளிக்கடை பெட்டிகளை அப்படியே படுக்கையறையில் கிடத்திவிட்டு, ஓடிப்போய்த் தன்  குழந்தையை அள்ளி  எடுத்துக்கொண்டாள். “குழந்தை ரொம்ப சமர்த்தும்மா! நிலா காட்டினேன். ட்விங்கிள் ட்விங்கிள் பாடச்சொன்னேன், பாடினாள். அழவேயில்லை!” என்றாள் கல்பனா.  கீதா விடைபெற்றுக்கொண்டு வீட்டை நோக்கி விரைந்தாள்.

“அம்மா எனக்குப் பட்டுப் பாவாடை வாங்கினியா?” என்று ஆவலோடு கேட்ட பிரியாவை இறுக அணைத்துக்கொண்டாள் கீதா. கண்கள் குளமாயின.

***

அன்று   இரவு சுமார் பத்துமணி இருக்கும். டாக்டர் வீட்டு அழைப்புமணி அடித்தது. “யார்?” என்றது கல்பனாவின் குரல்.

 “மேடம், நான்தான் பிரபு. ‘ஆனந்த் டிரஸ்ஸஸ்’ கடையில் இருந்து வருகிறேன்” என்று பதில் வந்தது. அதற்குள் டாக்டரே வந்து கதவைத் திறந்தார்.

 “ரொம்ப மன்னிக்கணும் சார்! ஒரு தப்பு நடந்து போச்சு. அதுதான் முதலாளி அனுப்பிவைத்தார்” என்று பிரபு வருத்தம் தோய்ந்த முகத்துடன் நின்றான்.

அதற்குள் வெளியில் வந்த லதாவும், “அடடே, நீயாப்பா? என்ன விஷயம்?” என்றாள்.

“மேடம், ஒங்க அட்டைப் பெட்டியில் ஒரு பட்டுப் பாவாடைக்கு பதில் ரெண்டு பாவாடை ‘பேக்’ ஆகியிருக்கிறதான்னு பாக்கணும். அப்போ கரண்ட்டு போயிடிச்சு இல்லியா, எங்க ஸ்டாக்குல ஒரு பாவாடை குறையுது. தப்பு என்னோடதுதான் மேடம். கொஞ்சம் பாத்து சொல்லுங்க” என்றான் வார்த்தையில் மிகுந்த குழைவுடன்.    

 வேகமாக உள்ளே போன லதா, “ஆமாம் தம்பி! ஒண்ணுக்கு பதில் ரெண்டா ‘பேக்’ பண்ணிட்டீங்க போல! நானும் ஒடனே பாக்காம இருந்துட்டேன். சாரி” என்று இரண்டில் ஒன்றை அவனிடம் திருப்பிக் கொடுத்தாள்.

 “ரொம்ப நன்றி மேடம்! ரொம்ப நன்றி!” என்று அந்தப் பாவாடையைத் தான் கொண்டுவந்திருந்த ஓர் அட்டைப் பெட்டியில் வைத்து மூடிக்கொண்டு சைக்கிளில் பறந்தான் பிரபு. எங்கே? வேறெங்கு போவான்? கீதாவின் வீட்டுக்குத் தான்!

***

 பிரபு வெளியேறிய சிறிது நேரத்தில் டாக்டர் கிருபாகரனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. இந்தப் பையன் ஒருவேளை கடையில் இருந்து இப்படித் துணிகளைத் திருடுகிறானோ?

 உடனே நாராயணசாமிக்கு போன் செய்தார். “அப்படிங்களா? பிரபு ரொம்ப நல்ல பையன். அவனை மீறி இப்படி ஒரு தப்பு நடந்திருக்கும் போல.  பொருள் என்னிடம் வந்துவிடும். கவலைப்படாதீங்க” என்று உறுதியளித்தார் அவர்.

 உறக்கம் கலைந்துவிட்ட டாக்டர் சிறிதுநேரம் டிவி பார்க்கலாமென்று டிவியை ஆன் செய்தார். அப்போதுதான் அவருக்கு அந்தக் கேள்வி எழுந்தது. ‘லதா எப்போதும் வைஷ்ணவிக்கு மட்டும் என்று துணி எடுக்கமாட்டாளே, வேலைக்காரிகளின் குழந்தைகளுக்கும் சேர்த்துத்தானே எடுப்பாள், இன்று மட்டும் ஏன் இப்படி?’

 அவருடைய கேள்விக்கு லதாவின் பதில் ஒரு புன்சிரிப்புதான். “இந்தப் பட்டுப் பாவாடை கீதாவின் குழந்தைக்குத் தான்! அவள் எதிரில் சொல்லாமல், சஸ்பென்சாகக்  கொடுக்கவேண்டும் என்றுதான் வைஷ்ணவிக்கு என்று சொல்லிவைத்தேன்! நம் குழந்தைக்குத்தான் ஏகப்பட்ட டிரஸ் இருக்கிறதே” என்றாள்.

 கீதாவின் வீடு மிகவும் அருகில்தான் இருந்தது. “லதா, ஒன்று சொன்னால் கேட்பாயா?  இப்போதே போய் இந்தப் பாவாடையை அந்தக் குழந்தையிடம் கொடுத்துவிட்டுவந்தால் என்ன? சந்தோஷமாகத் தூங்கும் அல்லவா?” என்றார் டாக்டர்.

 ***

 தூரத்தில் காரில் வரும்போதே, கீதாவின் குடிசை முன்பு பிரபு மாதிரி ஒருவன் நிற்பது லதாவுக்குத் தெரிந்தது.

 “இங்க பாரு பிரபு, நீ குடுத்தா வாங்க மாட்டேன்னு எத்தனையோ தடவை சொல்லிட்டேன். இந்த டிரெஸ்ஸ நீயே எடுத்துக்கிட்டுப் போ. ஒரு நிமிஷம் கூட இங்க நிக்காதே” என்று கோபத்துடன் விரட்டிக்கொண்டிருந்தாள் கீதா. 

 கார் வெளிச்சத்தைக் கண்டதும், அவசரமாகப் பின்வாங்கி அருகில் இருந்த மரத்தின் இருட்டில் ஒளிந்தமாதிரி நின்றுகொண்டான் பிரபு. அட்டைப்பெட்டி மட்டும் குடிசையின் முன்பிருந்த கயிற்றுக் கட்டிலின் மேல் கிடந்தது.

அந்த இரவு நேரத்தில் லதாம்மாவை எதிர்பார்க்காத கீதா அதிர்ச்சியில் உறைந்துநின்றாள். தான் ஏதாவது தவறு செய்துவிட்டோமா என்று திகைத்தாள். ‘வாங்க’ என்று அழைக்கவும் இயலாமல் விழித்தாள். குழந்தை பிரியா மட்டும் அவர்களைக் கண்டதும் தெரிந்துகொண்டு “குட் மாணிங்” என்றாள்.

“குட் மாணிங் பிரியா” என்ற லதா, “இதோ பார், பொங்கலுக்கு  ஒனக்கு ஒரு  கிப்ட்” என்று தன் கையிலிருந்த அட்டைப் பெட்டியை நீட்டினாள்.

பெட்டியின்மேல் குழந்தைகள் படம் இருப்பதை வைத்து, அதற்குள் தனக்கான ஆடைதான் இருக்கும் என்று பிரியா புரிந்துகொண்டாள். “அம்மா, டாக்டர் மேடம் குடுத்தாங்க” என்று அதை கீதாவிடம் கொடுத்தாள்.

கீதாவுக்குத் தெரியாதா, அதற்குள்  இருப்பது பட்டுப் பாவாடை எனறு! எவ்வளவு பெரிய சஸ்பென்ஸ்! எவ்வளவு பெரிய இன்ப அதிர்ச்சி! “அம்மா ஒங்களுக்கு ரொம்பப் பெரிய மனசு” என்று லதாவைக் கட்டிக்கொண்டாள்.

 இருட்டில் இருந்த பிரபுவுக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த மேடம் அவ்வளவு நல்லவரா? இது மட்டும் அப்போதே தெரிந்திருந்தால் அவன் இப்படியொரு திருட்டு வேலை செய்திருக்கவேண்டாமே! எவ்வளவு நல்ல முதலாளிக்கு நான் துரோகம் இழைத்துவிட்டேன்! அவன் கண்ணிலிருந்து நீர் ஆறாக வழிந்தது. இனி அடுத்து என்ன செய்வது? முதலாளியின் கால்களில் சென்று விழுவதுதான் ஒரே வழி.

சரி, இவர்கள் போகட்டும். அதன் பிறகு கீதாவிடமும் உண்மையைச் சொல்லிவிட்டு முதலாளியிடம் போகலாம். இத்துடன் கீதாவின் நினைவுக்கும்  ஒரு முழுக்குப் போட்டுவிடவேண்டியதுதான்.    

ஆனால் அவர்கள் கிளம்பிய அடுத்த நிமிடமே அங்கு  ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. “கீதாம்மா வீடு இதுதானே?” என்றபடி இறங்கினார், நாராயணசாமி.

திகைத்துப்போய் மீண்டும் இருட்டில் பதுங்கிக்கொண்டான் பிரபு.  

“எங்க கடைல வேலைசெய்யும் பிரபு இங்க வந்தானாம்மா?” என்றார் கீதாவிடம்.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தாள் கீதா. ‘நிச்சயம் ஏதோ  தப்பு செய்திருக்கிறான், இல்லையென்றால் முதலாளியே தேடிக்கொண்டு வருவாரா?’

 “என்னங்க விஷயம்?” என்று பயத்துடன் கேட்டாள். தன் கையில் இருந்த ‘ஆனந்த் டிரஸ்ஸஸ்’ அட்டைப் பெட்டியை அவரிடம் காட்டி மகிழ்ந்தது குழந்தை. ஒரே நிமிடத்தில் அவருக்கு எல்லாம் புரிந்துவிட்டது.

அவசரமாக உள்ளிருந்த பாவாடையைப் பிரித்தார். அதிலிருந்த விலை எழுதிய அட்டையைக் கண்ணுக்கு அருகில் வைத்துப்  பார்த்தார். அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. அவர் தேடி வந்தது அதுவல்ல.

அதே சமயம் கயிற்றுக் கட்டிலில் அதே போன்ற இன்னொரு அட்டைப்பெட்டி இருப்பதைக் கண்டார். வேகமாகப்  பிரித்தார். அதே கலர் அதே டிசைன் உள்ள பட்டுப் பாவாடை. அதே விலை. ஆனால் விலை அட்டையில் ‘பிரபுவுக்கு’ என்று எழுதியிருந்தது. அதைக் கண்டதும் அவர் முகத்தில் அளவற்ற மகிழ்சசி தாண்டவமாடியது.

“கீதா, உண்மையைச் சொல். பிரபு இங்கு வந்தனா? அவன் தானே இதைக் கொடுத்தான்?”

அவள் பதில் சொல்வதற்குள், ஓடோடி வந்து அவர் காலில் விழுந்தான் பிரபு. கண்களில் இருந்து ஆறாக நீர் ஓடியது. “என்னை மன்னித்துவிடுங்கள் முதலாளி” என்று திரும்பத் திரும்பப் பிதற்றினான்.

 “எழுந்திரு தம்பி” என்றார் நாராயணசாமி.  “நான்கைந்து நாட்களாகவே ஒரு குழந்தைக்குப் பட்டுப் பாவாடை வாங்கவேண்டும், ஆனால் பணமில்லை  என்று நீ கனகாவிடம் சொன்னதாகக் கேள்விப்பட்டேன். அதனால் உனக்குப் பரிசாகக்  கொடுக்கவேண்டும் என்று இந்தப் பாவாடையை நான் தேர்ந்தெடுத்து உன் பேரையும் அதில் எழுதிவைத்திருந்தேன். நீ அதற்குள் அவசரப்பட்டுவிட்டாய்.  ஒவ்வொரு ராத்திரியும் கடையில் மொத்த ஸ்டாக்கையும் நான் கணக்கெடுப்பேன் என்று உனக்குத் தெரியாதா? அதனால்தான் நீ ஒன்றுக்குப் பதில்  ரெண்டு ஐட்டம் வெளியே அனுப்பியிருப்பதைக் கண்டுபிடித்தேன்” என்றார் அவன் கண்களைத் தம் கையால் துடைத்தபடியே.

அந்த அட்டைப் பெட்டியை எடுத்து பிரியாவிடம் கொடுத்தார். “பாப்பா, ஒனக்கு இந்தப் பொங்கலுக்கு ஒண்ணுக்கு ரெண்டா பட்டுப் பாவாடை கெடைச்சுருக்கு. சந்தோசம் தானே?” என்றார். கீதா, குழந்தை இருவரும் ஒருசேர மகிழ்ச்சியில் திக்குமுக்காடினர்.

“மடையா, வழக்கம்போல நாளைக்கு வேலைக்கு வா. இனிமேல் இந்த மாதிரி நடக்கக்கூடாது. சரியா?” என்றார் பிரபுவைப் பார்த்து.       

 பிறகு, “இந்தப் பெண் யார்? இந்தக் குழந்தை யாருடையது?  உண்மையைச் சொல். ஏதாவது தப்பு தண்ட்டா செய்தியா?”  என்றார்.

 பிரபுவை முந்திக்கொண்டு, “இவரு எனக்கு அண்ணன் முறைங்க. பெரியம்மா புள்ளை” என்றாள் கீதா.

 “தனக்கு ஒரு தங்கச்சி இருக்கறதா இவன் சொன்னதே இல்லையே” என்று வியப்புடன் ஸ்கூட்டரைக்  கிளப்பினார் நாராயணசாமி. 

“எனக்கே இப்போதுதானே  தெரியும்?” என்று நினைத்தபடி சைக்கிளில் ஏறினான் பிரபு.

- இராய செல்லப்பா 

***    

(‘பூபாளம்’ இதழில் வெளியான கதை).