ஞாயிறு, ஜூன் 05, 2022

பாம்பே ஆனந்த பவனும் வாயில்லா ஜீவன்களும்

பாம்பே ஆனந்த பவனும் வாயில்லா ஜீவன்களும்  

(நான்கு தூண்கள் நகரம்-4)

அமெரிக்காவில் 54 ஆவது நாள் (04-6-2022)


48 வருடங்களுக்கு முன்பு இடம்பெயர்ந்து சென்னைக்கு முதன்முதலாக  வந்தபோது மாம்பலம் ரயில் நிலையத்தின் படிகளில் இருந்து ரங்கநாதன் தெருவை நோட்டம் விட்டபோது அதிர்ச்சி அடைந்தேன். என்ன மாதிரி ஒரு மக்கள் வெள்ளம்! 


அதைவிடவும் அதிசயமாக இருந்தது அந்த மக்கள் கூட்டத்தைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் மெல்ல நடந்து கொண்டிருந்த சில யானைக் குட்டிகள்!

சுல்தான் பஜார் கடைகள் -படம்-நன்றி-இணையம்

ஆம், அவற்றை யானைக் குட்டிகள் என்று தான் நினைத்தேன். அருகில் சென்று பார்த்தபோது தான் அவை காளை மாடுகள் என்று தெரிந்தது. ரங்கநாதன் தெருவில் காய்கறிக் கடைக்காரர்கள் வீசும் அழுகிய காய்கறிகளை உண்டு மலைபோல் வளர்ந்து திரிந்தன அம் மாடுகள்.


சென்னை வாழ்க்கை எப்படி இருக்குமோ என்று தயக்கத்தோடு குடிவந்த எனக்கு இது ஒரு வகையில் நம்பிக்கையை  ஊட்டியது. அழுகிய காய்கறிகளைத் தின்றே இத்தனை வளர்ச்சி காணமுடியும் என்றால், நல்ல காய்கறிகளைத் தின்று வாழும் மனிதன் நிச்சயம் சென்னையில் ஆரோக்கியமாகத் தான் இருப்பான்!


ஹைதராபாத்திலும் இதேபோன்ற யானைக்குட்டி போன்ற மாடுகளை சுல்தான் பஜார் அருகில்  பார்த்தேன். 'கோட்டி'யில் இருந்த ஆந்திரா வங்கியின் பழைய தலைமையகத்தின் முன்பு விடியற்காலை ஐந்து மணிக்கே இந்த மாடுகள் திரண்டு நிற்கும்,  எதிர்ப்புறச் சந்தில் இருந்த "பாம்பே ஆனந்த பவன்" என்ற ஓட்டல் திறக்கும் வரை.


அது உடுப்பிக்காரர்கள் நடத்திய ஓட்டல். விடியற்காலை ஐந்து மணியிலிருந்தே வெங்கடேச சுப்ரபாதமும் கிருஷ்ணர் பாடல்களும் அதன் உரிமையாளர் சற்றே உரக்கச் சொல்லும் அழகை, அதற்கு அடுத்த கட்டிடத்தில் இருந்த நான் படுத்துக் கொண்டே ரசிப்பேன். இந்த மாடுகள் அசைந்தசைந்து  வந்து ஓட்டல் கதவில் தங்கள் கொம்புகளால் தட்டி 'மா' என்று கூவும் குரல் கேட்கும். 


படம்-நன்றி-இணையம்

சிறிது நேரத்தில் ஊதுவத்தி மணமும், சாம்பிராணிப் புகையும்,  அவர் கையில் இருந்து குலுங்கிக் குலுங்கி ஒலிக்கும் மணியின் இன்னிசையும்  என் அறையை நிரப்பும். 


படுக்கையை விட்டு எழுந்து ஜன்னல் வழியாகப் பார்ப்பேன். இரண்டு பெரிய மாடுகள்,  ஓட்டல் கதவைத் திறந்து உரிமையாளர் வெளியே வருவதற்கும் இடம் தராமல் நெருக்கமாக  நின்று கொண்டிருக்கும். 


'உடுப்பி கிருஷ்ணா' என்று பிரார்த்தனை செய்தபடியே கதவைத் திறப்பார் உரிமையாளர். ஒரு தட்டில் உப்புமாவும்,  ரவா கேசரியும், சமைத்த உருளைக் கிழங்கும் ஏந்திக் கொண்டு அந்த மாடுகளுக்கு முன்னால் நீட்டுவார். அவை இடத்தை விட்டுச் சற்றும் அசையாமல் ஆசையோடு சாப்பிடும். 


ஒரு சமயம்  மாடு இந்த உருளைக்கிழங்கைச் சாப்பிட மறுத்து விட்டதை நான் பார்த்தேன். அவ்வளவுதான் உரிமையாளருக்கு வந்ததே கோபம்! உள்ளே இருந்த ஊழியரை அழைத்தார். "எத்தனை முறை சொல்வது? நேற்றைய  உருளைக்கிழங்கை கஸ்டமர்களுக்கு வைத்துக்கொள், மாடுகளுக்குப் போடாதே என்று! வாயில்லா ஜீவனின் பாவத்தை ஏன் கொட்டிக் கொள்கிறாய்?" என்று கன்னடத்தில் இரைந்தார். 


ஊழியர் பதில் சொல்லாமல் உள்ளே போய் அடுப்பிலிருந்து சுடச்சுட உருளைக்கிழங்கையும் கொஞ்சம் உப்புமாவையும்  எடுத்து வந்து அந்த மாட்டுக்கு வைத்தார். 


அப்படியானால் அந்தப்  பழைய (கொஞ்சம் ஊசிப்போன) உருளைக்கிழங்கு என்ன ஆகும்? லேசாகச் சூடுபடுத்தினால் காலையில் பூரி-கிழங்கு ஆர்டர்  செய்யும் முதல் வாடிக்கையாளர்களுக்குப் போய்ச் சேருமாம்! 


இதனால்தான் நான் காலையில் எட்டரை மணிக்குப்பிறகே  அந்த ஓட்டலுக்குச் சென்று சாப்பிடுவேன்.  


சரி, சீத்தாப்பல் மண்டியிலிருந்து இங்கு எப்படி வந்தேன் என்பதைச்  சொல்ல வேண்டுமல்லவா?


படீ சவ்டி  வங்கிக் கிளையில் நான் சேர்ந்த சில நாட்கள் கழித்து லட்சுமி நாராயணன் என்ற நண்பர் வந்து சேர்ந்தார். இளைஞர். திருமணமாகாதவர். ராஜமுந்திரி என்னும் மாம்பழ நகரைச் சேர்ந்தவர். (பிரபல தெலுங்கு நடிகை ஒருவரைப் பற்றி அவர் சொன்ன முக்கியச் செய்தி பின்னால் வரும்). 


தாத்தாக்கள் மூலம் சொத்துக்கள் பெறும் பேரன்கள் உண்டு. லட்சுமி நாராயணனுக்கோ தாத்தா மூலம் விபரீதமான பதவி கிடைத்தது! 


அவருடைய தாத்தா ராஜமுந்திரியில் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருந்தார். பல வருடங்களுக்கு முன்பு அதில் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த ஒருவர் பெயர் என்.என்.பை. (N.N.Pai).  இவர் பின்னாளில் கார்ப்பொரேஷன் வங்கியின் சேர்மன் ஆனபோதுதான் என்னை இன்டர்வியூ செய்து வேலை கொடுத்தவர். இவர் சேர்மன் ஆன விஷயம் தெரிந்து லக்ஷ்மி நாராயணனின் தாத்தா இவருக்கு ஒரு கடிதம் எழுதினார். இவரும் உடனே பேரனை அனுப்புங்கள், உங்களுக்காக அவனுக்கு ஒரு வேலை கொடுக்கிறேன் என்று அன்போடு கடிதம் எழுதினார். 


லட்சுமி நாராயணன் நேரில் வந்தார். பட்டப்படிப்பின் இறுதித் தேர்வு எழுதி ரிசல்ட் வர வேண்டிய நேரம். நல்ல புத்திசாலி. களையான முகம். ஆனால் பாவம் ஆள் மட்டும் குள்ளம். என்.என்.பை உயரமாக, ஆஜானுபாகுவாக இருப்பார். அதனால்  உயரமானவர்களிடம் அவருக்கு நல்ல மரியாதை உண்டு. "உங்கள் தாத்தாவின் பெயருக்காக உங்களை ஆபீஸர் ஆகவே எடுக்கலாம்; ஆனால் உயரம் குறைவாக இருக்கிறீர்கள். மற்றவர்களை  நிர்வாகம் செய்யும்போது சங்கடமாக இருக்கும். ஆகவே உங்களை  கிளார்க்காக நியமிக்கிறேன்" என்று கையோடு ஆர்டர் கொடுத்து அனுப்பினார். 


ஆனால் அவரால் உடனடியாக வந்து சேர முடியவில்லை. மூன்று மாதம் எக்ஸ்டென்ஷன் கேட்டுப் பிறகுதான் வந்தார்.  அந்த மூன்று மாதத்திற்குள் ஒரு விபரீதம் நிகழந்துவிட்டது. எப்படித் தெரியுமா? 


லட்சுமிநாராயணன்  ஆபீஸர் பதவிக்காகப் பல வங்கிகளுக்கு  விண்ணப்பித்திருந்தார். வங்கிகள் தேசியமயமான சூழ்நிலையில் எல்லா வங்கிகளும் போட்டி போட்டுக்கொண்டு  ஆள் எடுத்துக்கொண்டிருந்தன. கார்ப்பொரேஷன் வங்கியில்  நடைபெற்ற எழுத்துத் தேர்வில்  லட்சுமி நாராயணன் வெற்றி பெற்று இன்டர்வியூக்கு அழைக்கப்பட்டிருந்தார். தேர்வில் அவருக்கு நல்ல ரேங்க் இருந்ததால் எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டார்களாம். 


உள்ளே போனவரிடம் கேட்ட முதல் கேள்வி 'இப்போது என்ன செய்கிறீர்கள்' என்பதே. இதே வங்கியில் தனக்கு கிளார்க் போஸ்ட் கிடைத்திருப்பதை அவர் சொன்னார். உடனே அவருக்கு வாழ்த்து தெரிவித்து சீக்கிரம் சேர்ந்து கொள்ளுங்கள் என்று அனுப்பி விட்டார்களாம். தாத்தாவின் சிபாரிசு மட்டும் இல்லாமலிருந்தால் ஆபீஸராகவே சேர்ந்திருப்பார் பாவம்!


(பின்னாளில் ராஜமுந்திரி சென்று அவர் தாத்தாவை நேரில் சந்தித்திருக்கிறேன். தன் தோட்டத்தில் விளைந்த மாம்பழத்தை நறுக்கிக் கொடுத்தார். கோதாவரி நதியின் கரையோரம் நடந்தீர்களா என்று கேட்டார். பேச்சின் இடையே  அந்த நடிகையைப் பற்றிய விஷயம் உண்மைதான் என்றும் தெரிந்தது. அது பின்னால் வரும்).


பாம்பே ஆனந்த பவன் ஓட்டல் அருகில் ஒரு முதிய வக்கீலுக்குச் சொந்தமாக இருந்த மூன்று மாடிக் கட்டிடத்தின் தரைத்தளத்திலும்  முதல் தளத்திலும் சுமார் இருபது  சிறு சிறு அறைகள் கட்டி வாடகைக்கு விட்டிருப்பதை மோப்பம் பிடித்து வந்தவர் லட்சுமி நாராயணன் தான். 


அதேசமயம் என்னைப் போலவே இதே வங்கியில் அதிகாரியாக வேலை கிடைத்து ஹைதராபாத்தி லேயே வேறொரு கிளையில் சேர இருந்த கிருஷ்ணகிரி நண்பர் ஒருவரும் ரூம் தேடிக்கொண் டிருந்தார். அவரும் இதே இடத்தைக் கண்டுபிடித்து விட்டார். பிறகென்ன, மூன்று பேராக ஒரே அறையில்- அதாவது அந்த வீட்டில்- தங்கிக் கொண்டோம்! 


தரைத்தளத்தில் எங்கள் ரூம் இருந்தது. (ஒரே மாதிரி மொத்தம் எட்டு ரூம்கள் இருந்தன). அனைவருக்கும் பொதுவாக இரண்டு குளியல் அறைகளும் இரண்டு கழிப்பறைகளும் இருந்தன. எங்கள் மீது அன்பு மிகக் கொண்ட கட்டிட உரிமையாளரின் டைப்பிஸ்ட், எங்கள் அறைக்குள்ளேயே சிறியதொரு குளியலறையைக் கட்டிக் கொடுத்தார். (அந்த அன்புக்குக் காரணம் என்ன என்பது பின்னால் வரும்). 


ஹைதராபாத்தில் பணியாற்றிய மூன்றாண்டுகளும்  இதே  அறையில்தான் இருந்தேன். அதற்கு முன்பே கிருஷ்ணகிரி நண்பர் தன் திருமணத்தைக் காரணம் காட்டி மலக்பேட்  என்ற இடத்திற்குத் தனிவீடு பிடித்துச் சென்று விட்டார். லட்சுமி நாராயணனுக்குச் சொந்த ஊருக்கு அருகில் மாற்றல் கிடைத்துக் கிளம்பிவிட்டார்.


கிளம்புவதற்கு முன் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது தான் அந்த நடிகையைப் பற்றித் தெரிவித்தார். 


அவருடன் அதே பள்ளியில் அந்தப் பெண்ணும் படித்துக் கொண்டிருந்தாள். நல்ல அழகு. அநாவசியமாக யாருடனும் பேசமாட்டாள். கவர்ச்சியாக இருந்தாள். ஆனால் யாரும் துரத்தி வரும் அளவுக்குத் தன்னை அவள் அலங்கரித்துக் கொண்டதில்லை. "இனிமையான குத்துவிளக்கு போல இருந்தாள்" என்று அவர் அடிக்கடி குறிப்பிட்டார். 


தெலுங்கில் இராமாயணம் பலமுறை திரைப்படம் ஆகியுள்ளது. அவ்வாறு சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒன்றில் சீதையாக நடித்து அசத்தியிருந்தாள் அவள். ஒரே படத்தின் மூலம் தெலுங்கில் உச்சபட்ச ஊதியம் பெறும் நடிகையாகி விட்டாள் என்றால் அவளுடைய நடிப்புத் திறமைதான் காரணம். (பின்னாளில் அகில இந்திய நடிகை யாகவும் அரசியல்வாதியாகவும் ஆனார்).


"அவளோடு நெருங்கிப் பழகியதோ பேசியதோ உண்டா?"


பெருமூச்செறிந்தார் நண்பர். சிலமுறை இவர் அவளைப் பார்த்துச் சிரித்ததுண்டாம். அவள் இவரைப் பார்த்தும் புன்முறுவல் பூத்ததுண்டாம். "ஆனால்…" என்று இழுத்தார்.


"சொல்லுங்கள், சொல்லுங்கள்..மறைக்காதீர்கள்!" என்றேன்.


"ஒன்றுமில்லை. ஒரு சின்ன வருத்தம்…" என்றார்.


பள்ளியில் திடீரென்று ஒருமுறை இருவருக்கும் தனிமை கிடைத்ததாம். அப்போதுதான் அவள் இவரைக் கேட்டாளாம். இவர் மறுத்துவிட்டாராம். தாத்தா கோபக்காரர் ஆயிற்றே!


"அப்படி என்ன கேட்டார்?" என்றேன் அடங்காத ஆசையுடன். ஏதோ விஷயம் இருக்கிறது. கள்ளரை  நம்பினாலும் குள்ளரை நம்பக் கூடாது. இந்த மூன்று வருடங்களாக எப்படி இதைச் சொல்லாமல் மறைந்தார்? எவ்வளவு அழகான நடிகை! அவள் கேட்டாளாம், இவர் மறுத்தாராம்! இதை நம்பாலாமா கூடாதா?


"நினைத்தால் சோகமாக இருக்கிறது. வேண்டாமே!" என்றார். 


நான் அவரைத் தேற்றினேன். "நண்பர்களுக்குள் இரகசியம் இருக்கவே கூடாது. எதுவானாலும் சொல்லுங்கள்.. எந்த சோகமானாலும் வெளியில் சொல்லிவிட்டால் சுமை குறையும் அல்லவா?"


"எப்படி சார் சொல்வது? சிரிக்க மாட்டார்களா! ஜெயப்ரதாவே அருகில் வந்து என் சயின்ஸ் நோட்சைக் கேட்டபோது தாத்தாவுக்கு பயந்து கொடுக்க மறுத்துவிட்டேன் என்று எப்படிச் சொல்வது?" 


அதற்குப் பிராயச்சித்தமாக ஜெயப்ரதா நடித்த படங்களை எல்லாம் இரண்டிரண்டு தடவை பார்த்து விடுவதை வழக்கமாக்கிக் கொண்டாராம் நண்பர்! 


(நான் மங்களூரில் பணியாற்றிக் கொண்டிருந்த கால கட்டத்தில் அவர் சென்னைக்கு மாற்றலாகி யிருந்தார். ஒரு விடுமுறை நாளில் அவரைச் சந்திக்க முயன்றபோது சோகம் என்னைச் சூழ்ந்து கொண்டது. சில நாள் முன்புதான் அவர் இந்த மண்ணுலகத்திலிருந்தே விடுதலை பெற்றிருந்தார்! உடல்நலம் திடீரென்று பாதிக்கப்பட்டதாம்).

  • இராய  செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து

 


9 கருத்துகள்:

  1. பின்னால் சொல்வதாகச் சொன்ன இன்னொரு விஷயம் பாக்கி இருக்கிறதோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. "வக்கீல் மேனேஜரின் திடீர் அன்பு" என்ற அடுத்த பதிவு வந்து வெளியாகிவிட்டதே! அங்கு படிக்கலாமே!




      நீக்கு
  2. வாழ்க்கையில் பெரும்பாலானோர் தினசரி தங்கள் வாழ்வில் நடக்கும் சிறு நிகழ்ச்சிகளையும் கொஞ்சம் நகைச்சுவையோடு உற்று நோக்கினால் வாழ்க்கை ரொம்பவும் சுவாரசியமாகிப்போகும்

    பதிலளிநீக்கு
  3. Jaya Prada was born as Lalita Rani in Rajahmundry, Andhra Pradesh Rajaka family. Her father, Krishna Rao, was a Telugu film financier. Her mother, Neelavani, was a home-maker. The young Lalitha attended a Telugu medium school in Rajahmundry and was also enrolled in dance and music classes at an early age.

    "Siri Siri Muva" brought her to the limelight.
    SRI DEVI and JAYAPRADHA ruled the Tollywood for 10years.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயப்ரதாவுக்கு உங்கள் வயதுதான் இருக்கும். அதனால் தானோ என்னவோ அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்திருக்கிறீர்கள்! உங்களைப் போன்ற தீவிர ரசிகர்களைப் பெற அவர் கொடுத்து வைத்திருக்கவேண்டும்!

      நீக்கு
  4. Jayapradha was introduced in Tamil films by K.Balachandar in Manmatha Leelai & I have seen the film along with Parasuraman .
    RANGADURAI R

    பதிலளிநீக்கு
  5. எங்களை ஒரு நொடியில் சென்னை திநகரில் இருந்து ஹைதராபாத்துக்கு அழைத்து சென்று விட்டீர்கள்.
    இது தான் உங்கள் Speciality.
    RANGADURAI R


    பதிலளிநீக்கு