செவ்வாய், ஆகஸ்ட் 23, 2022

மணிகர்ணிகா (22) இன்று வர மாட்டாள் - தொடர்கதை

மணிகர்ணிகா (22) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)

(அமெரிக்காவில்  119  வது நாள்:  08-8-2022)



இதன் முதல் பகுதி   -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.

இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (10) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


திலகா மௌனமாக இருந்ததைக் கண்டு, உள்ளுக்குள் ஆனந்தப் பட்டார் கருணா. லாரி உரிமையாளரிடம் பெற்ற ஐந்து லட்சத்திற்கு இனிமேல் அவர் யாருக்கும் கணக்குச் சொல்ல வேண்டியதில்லை. மூன்று லட்சம் கிரீஷிடம் கொடுத்ததாகத் திலகாவை நம்பவைத்தாகி விட்டது. மேலும் இரண்டு லட்சம் அவ்வப்பொழுது சில்லறையாகக் கொடுத்ததாகச் சொன்னால் போயிற்று. அதற்குள் கிரீஷைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். 


அதற்குள் இவள் தன் வீட்டுக்குத் திரும்பிவிடக்கூடாது. குட்டு உடைந்துவிடும். அதற்கு ஒரே வழி, இவளை மறுபடியும் ஏதாவது ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுவதுதான்.  அதற்கு கிரீஷ் வந்தால்தான் முடியும். தான் இந்த முயற்சியில் தலையிடுவது நல்லதல்ல.


காஜலுக்குக் குழந்தை பிறந்தது மீனா குல்கர்னிக்குத் தெரியுமா?


“இங்க பாரு திலகா மா! நீங்க ஒடனே இன்னொரு ஆஸ்பத்திரியில் சேர்ந்துடணும். அப்பத்தான் நீங்க தொடர்ந்து அந்த ஆக்சிடெண்ட்டுனால பாதிக்கப்பட்டீங்கன்னு ரெக்கார்டுல வரும்! நடுவுல எழுந்து வெளியில வந்துட்டீங்கன்னா, இல்ல, ஒங்க வீட்டுப் பக்கம் போய்ட்டீங்கன்னா, இவங்க ஒடம்புக்கு ஒண்ணுமில்லேனு பாக்கறவங்க சாட்சி சொல்லிடுவாங்க. நம்ப கேஸ் வீக்காயிடும். அப்புறம் லாரி ஓனருக்குப் பணத்தைத் திருப்பிக்கொடுக்க வேண்டிவரும். அப்படி நடந்தால், நீங்கதான் அவரை டைரக்டா டீல் பண்ணிக்கனும். நான் வரமாட்டேன். புரிஞ்சிகிட்டு நடக்கணும். சரியா?”   

    

அவ்வளவுதான் போனை வைத்துவிட்டார். 


தன்னுடைய தொழிற்சங்கத் தலைவரிடம் பேசினால் என்ன என்று தோன்றியது. எந்த உதவி வேண்டுமானாலும் செய்வதாகக் கூறினாரே!


திலகா பேசியதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட தலைவர், “ஒங்க மெடிக்கல் பில் எல்லாத்தையும் குறைக்காம சாங்க்ஷன் பண்ணச் சொல்லி ஜிஎம் கிட்ட சொல்லிடறேன். அதுக்கு மேல என்கிட்டே எதையும் எதிர்பாக்காதீங்க” என்று நறுக்கென்று பேசி முடித்தார். மயூரியைப் பழிவாங்கவேண்டும், கருங்காலி என்றெல்லாம் சொன்னவர் இப்போது அவளைப் பற்றி வாயே திறக்கவில்லையே! ஒருவேளை அவருடைய சங்கத்தில் சேர்ந்துவிட அவள் ஒப்புக்கொண்டுவிட்டாளோ?    


ஆஸ்பத்திரி வாசலில் வெகுநேரமாக அவள் நின்று கொண்டு இருப்பதைக் கவனித்த ஓர் ஆட்டோக்காரர் “எங்கம்மா போகணும்?” என்று அருகில் வந்தார். ஆட்டோவிலிருந்து ‘வசந்தகால நதிகளிலே’ என்ற மிகப் பழைய பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. உடனே அவள் மனதில் டாக்டர் வசந்தாவின் ஞாபகம் வந்தது. 


ஆம், அதுதான் சரி! அவர் ஏற்கெனவே தன்னைப் பார்த்திருக்கிறார். முன்பணம் கேட்கமாட்டார். அவருடைய நர்ஸிங் ஹோமில் தங்கிவிடலாம். எப்படியும் சில நாட்களுக்குள் கிரீஷ் வந்துவிடமாட்டானா? 


“கோட்டூர்புரம்- டாக்டர் வசந்தா ஆஸ்பத்திரி” என்றாள் திலகா. ஆட்டோ பறந்தது.

***       

ஒருமுறை பார்த்த நோயாளியைத் தன் வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டார் டாக்டர் வசந்தா. இயற்கையாகவே அவருக்கு ஞாபக சக்தி அதிகம். அதே போல, நோயாளிகளின் வசதிக்குத் தக்கபடி தான் பணம் வாங்குவார். ஏழைகள் என்றால் வெறும் ஐம்பதே ரூபாய் வாங்கிக்கொண்டதும் உண்டு. அதை அவர் விளம்பரப்படுத்துவதில்லை. 


திலகாவைப் பார்த்ததுமே அடையாளம் தெரிந்துவிட்டது. “வாம்மா, எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது? உன்னைப் பார்த்தாலும் நார்மலாகத் தான் தோன்றுகிறது” என்று வரவேற்றார் வசந்தா. 


நோயாளிகள் கூட்டம் அதிகமில்லை. அவளை உள்ளே அழைத்துக்கொண்டு தன் அறைக்கதவைச் சாத்தினார். “புஷ்பா, நான் லஞ்சு சாப்பிடவேண்டும். அதனால் இன்று ஓ.பி. யில் வேறு யாரையும் எடுத்துக்கொள்ளாதே” என்று கூறிவிட்டு, தன் உணவுப் பெட்டியைத் திறந்தார். தலையாட்டிவிட்டுக் கிளம்பினாள் நர்ஸ் புஷ்பா. “திலகா, உன் பிரச்சினையைக் கூறு. சாப்பிட்டபடியே கேட்கிறேன்” என்றதும் மடைதிறந்த வெள்ளம்போல் தன்  மனத்தைத் திறந்து கொட்டலானாள் திலகா.


சாப்பிட்டு எழுந்த டாக்டர், திலகாவின் கர்ப்பம் நார்மலாகத்தான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டபின், கூறினார்: “திலகா, எத்தனை நாள் வேண்டுமானாலும் நீ  இங்கு தங்கிக்கொள்ளலாம். உன் பேங்க் கொடுக்கும் ரீ-இம்பர்ஸ்மென்ட் அளவுக்கே நான் பில் கொடுப்பேன். கையை விட்டு நீ ஒரு பைசாவும் தரவேண்டாம். நம்ப செக்யூரிட்டி ஏஜென்சிக்குத் தகவல் சொல்லி, சரியான ஆளை வரவழைக்கிறேன். உன் கணவரின் போட்டோக்கள் சிலதை என் வாட்ஸப்ப்புக்கு  அனுப்பிவை.  அவரைக் கண்டுபிடித்துவிடலாம்” என்று அவளை முதல்மாடியில் ஒரு ஸ்பெஷல் ரூமில் அமர்த்தினார். மனம் ஓரளவு அமைதியடைந்ததில் உடனே கண்ணுறங்கிவிட்டாள் திலகா.


மாலை ஆறு மணிக்கு அந்தப் போட்டோக்களைப் பெற்றுக்கொண்ட செக்யூரிட்டி ஏஜென்சியின் அதிகாரி, கிரீஷின் வீட்டு முகவரியைப் பார்த்தவுடன், அந்தப் பகுதியில் பணிசெய்யும் தங்களுடைய காவலர்களின் மொபைல்களுக்கு அவற்றை அனுப்பினார். சரியாக ஐந்தே நிமிடத்தில் பதில் வந்துவிட்டது. “இவர் இரண்டு நாட்கள் கூடுவாஞ்சேரி லாக்கப்பில் இருந்தார். நிரபராதி என்று கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டார்” என்று! பதிலளித்தவர், தங்கராசு!


திலகா இருக்கும் மனநிலையில், கிரீஷ் லாக்கப்பில் இருந்த விஷயம் அவளுக்குத் தெரிய வேண்டாம் என்று டாக்டர் முடிவுசெய்தார். தங்கராசு மூலமே தகவல் அனுப்பி, கிரீஷைத் தன்னைச் சந்திக்குமாறு ஏற்பாடுசெய்யச் சொன்னார். 


தங்கராசு கிரீஷின் வீட்டை நெருங்கும்போது, அவன் ஒரு மாருதி காரில் ஏறுவது தெரிந்தது. “அரசாங்க வண்டிகளுக்கே உரிய ‘ஜி’ என்னும் ஆங்கில எழுத்து நம்பர்பிளேட்டின் மீது சிகப்பில் எழுதப்பட்டிருந்தது. அந்தக் காரைப் பின்தொடர்ந்ததில் அது ஒரு வங்கி மேனேஜரின் கார் என்று தெரிந்தது. அது போய் நின்ற இடம் மேனேஜரின் வீடாக இருக்கவேண்டும்” என்று தன் ரிப்போர்ட்டில் எழுதியிருந்தார் தங்கராசு. அந்த வீட்டு முகவரியும் கொடுத்திருந்தார்.  


இந்த விவரங்களைத் திலகாவிடம் சொன்ன உடனே அவளுக்குத்  தெம்பு வந்துவிட்டது. தன்னுடைய மேனேஜர் சண்முகத்தின் வீட்டுக்குத்தான் போயிருக்கிறான் கிரீஷ்! பரபரப்புடன் சண்முகத்துக்கு போன் செய்தாள் திலகா.

****       

துணை ஜனாதிபதி வந்தபோது நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சிக்கே வரவேண்டுமென்று முயற்சித்தார் குல்கர்னி. ஆனால் ஐஏஎஸ் பொறுப்புகள் அவரை நகரவிடாமல் செய்துவிட்டன. அடுத்த ஒரு மாதமும் மீனாவிடம் பேசக்கூட முடியாமல் பிஸியாகிவிட்டார். அவளிடமிருந்து போன் வந்தாலும், “இதோ, ஐந்தே நிமிடத்தில் நானே போன் செய்கிறேன்” என்று வைத்துவிடுவார். ஆனால் அவரிடமிருந்து போன் வர மேலும் நான்கு நாளாவது ஆகும்.  


வெறுத்துப்போன மீனா, “இனிமேல் என்னால் பொறுக்க முடியாது. எதற்காக என்னைக் கல்யாணம் செய்துகொண்டீர்கள்? உடனே சென்னைக்கு ட்ரான்ஸ்பர் கேட்டு வாருங்கள். இல்லையென்றால் வக்கீல் நோட்டீஸ்தான் வரும்!” என்று பயமுறுத்தினாள். 


“ஓஹோ, என்னை டைவர்ஸ் செய்துவிடத் தீர்மானித்துவிட்டாயா?” என்று கிண்டல் செய்தார் குல்கர்னி. “ஆமாம், வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்று பதிலடி கொடுத்தாள் மீனா. 


“சொன்னபடி செய்யுங்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது. கலாக்ஷேத்ரா ஆண்டுவிழாவில் எனக்கு ஸ்லாட் கிடைத்திருக்கிறது. ரிஹர்சலுக்குப் போகவேண்டாமா?” என்றாள். 


“தாராளமாகப் போங்க மேடம்! ஆனா ஒண்ணு, நமக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருடம் ஆச்சுன்னு ஞாபகம் இருக்கா?”


“ஏன், அதுக்கு என்ன இப்ப?”


“அம்மா ஒனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பச் சொல்றாங்க. செய்யட்டுமா?”        

    

“என்ன உளறுகிறீரகள்?”


“உளறவில்லை மேடம், எனக்குப் பிறகு கல்யாணம் ஆன என் தம்பிக்குக்  குழந்தை பிறந்து மூன்று வயது ஆகிறது என்று அம்மா சொல்கிறாள். அதான்…” 


மீனாவுக்கு வெட்கத்தால் கன்னம் சிவந்தது. “சரி, ப்ராமிஸ்! நீங்க சென்னைக்கு டிரான்ஸபர்ல வந்துடுங்க. அடுத்த வருஷம் நீங்க கேட்டது கிடைக்கும்” என்று சிரித்தாள். பிறகு அவனுக்கு மட்டுமே கேட்பதுபோல் மிகவும் மெல்லிய குரலில்,”அதற்கு என்னுடைய முயற்சி மட்டுமே போதாது என்று உங்கள் அம்மா சொல்லியிருப்பார்களே!” என்றாள். கலகலவென்று சிரித்தார் குல்கர்னி. 

   

    (அடுத்த அத்தியாயத்தில் முடிந்துவிடும் )


    -இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து 

 இதன் அடுத்த பகுதி   -" மணிகர்ணிகா (23) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


9 கருத்துகள்:

  1. அப்பப்பா! எவ்வளவு வேகமாக தொடரின் தொடரை போட்டு குறுநாவல் படித்ததை போல் இன்பத்தை அள்ளி தந்து விட்டீர்கள்😊

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் பின்னூட்டம் உற்சாகமளிக்கிறது!

      நீக்கு
  2. காஜலுக்குக் குழந்தை பிறந்தது மீனா குல்கர்னிக்குத் தெரியுமா?//

    ஹாஹாஹா

    அதான் கடைசிப் பகுதியில் சுபம் போட மணிகர்ணிகா திருமணத்திற்கு மீனா மூன்றாவது நபரின் வருகையை எதிர்பார்க்கும் மகிழ்ச்சிப் பூரிப்பில் வருவதாக வந்துவிடும் என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகர்களை மகிழ்விப்பதே கதாசிரியரின் பணி அல்லவா?

      நீக்கு
  3. பதில்கள்
    1. ஆமாம், இன்னும் என்னவெல்லாமோ குறும்புகள் செய்ய உத்தேசித்திருக்கிறார். ஆனால் நம் கதை அதற்குள் முடிந்துவிடுமே!

      நீக்கு
  4. காஜல் அகர்வாலுக்கு கல்யாணம் என்ற உடனேயே எத்தனை வாலிபர்கள் சோகமாகி போனர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

    இதில் அவருக்கு குழந்தை பிறந்த செய்தி படத்துடன் போட்டு இருக்கிறீர்களே?
    இது ஞாயமா?

    பதிலளிநீக்கு