ஞாயிறு, ஏப்ரல் 24, 2022

உலக புத்தக தினம் : ‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’ ஒரு மதிப்பீடு

 
உலக புத்தக தினம்: அமெரிக்காவில் 12ஆவது நாள் (இன்று கிழமை சனி-2)

‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’ ஒரு மதிப்பீடு

ஹரணி
(முனைவர் க அன்பழகன்)
தமிழ்ப் பேராசிரியர்
அண்ணாமலைப் பல்கலைகழகம்,
சிதம்பரம்.



                      மானுட மதிப்பைப் புதுப்பிக்கும் கதைகள்..                                 இராய செல்லப்பாவின் 
‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’

மானுட வாழ்வின் பல்வேறு இருத்தல்கள் விதிக்கப்பட்ட ஒன்றாகவே அழுத்தமுறுகின்றன. பிறப்பும் இறப்பும் எனும் இவையிரண்டுக்குமான இடைவெளிகளில் மானுடப் பிறப்பெடுத்துவிட்ட உயிர் அலைக்கழிக்கப்பட்ட சூழமைவுகளாலேயே கட்டமைக்கப்படுகின்றன. இவற்றின் சூட்சுமத்தை யுணர்ந்துகொள்ளும் மனங்கள் சிலவே அலைக்கழிப்பை அவைக்களித்த வரமாக்கிக்கொண்டு வாழ்ந்துவிடுகின்றன. உணராத பலவோ உயிரின் கடைசித் தருணத்தைச் சுகிக்கும் வேளையில் முடிந்துபோகின்றன, சொல்ல முடியாமல். இருப்பினும் வாழ்தல் என்பது மிகமிக முக்கியமானது, அது எப்படியான வடிவத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும் சரி, அல்லது தக்க வைத்துக்கொண்டிருந்தாலும் சரி, அதற்காகப் போராடிக் கொண்டிருந்தாலும் சரி. ஒரு படைப்பாளியின் பிறப்பில் இவையனைத்தும் நிறைக்கப்பட்டு அவ்வக்காலத்தில் பூவிலிருந்து வாசம் இழைவதுபோல வெளிப்படுகிறது. ஆகவே படைப்பாளியாகப் பிறந்துவிட்டவன் பாக்கியவான். மனிதனாக இருந்துகொண்டே அந்த மனிதத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளும் வரத்தையல்லவா அவன் வாங்கிப் பிறந்திருக்கிறான்.

கதைகள் என்பவை மனிதனிடமிருந்துதான் உருவாகின்றன. மனிதனால்தான் உருவாக்கப்படுகின்றன. மனிதாபிமானத்தோடுதான் அவை உயிர்பெறுகின்றன. கடைசி வரையிலும் மனிதக் கூட்டத்தின் கடைசி மனிதன் வரைக்கும் அவை உதவவும் வாழ்ந்துகொண்டேயிருக்கின்றன, அழியாமல். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய வாழ்க்கைச் சுற்றில் ஓர் இடப்பெயர்ச்சி முக்கியமான பின்னலாக அல்லது திருப்பமாக அல்லது ஒட்டுமொத்த அவனது வாழ்வின் இணைப்பாக அமைவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். இதுவும் விதிக்கப்பட்டுவிட்ட ஒன்றாகவே அழுத்தமடைகிறது. அது பல்வேறு தேவைகளை முன்னிறுத்தும், நிறைவேற்றும் கட்டாயத்தில் தன்னை நியாயப்படுத்திக்கொள்கிறது.

இப்படித்தான் தமிழ் மண்ணில் பிறப்பெடுத்து அயல் மண்ணில் இருத்தலை ஊன்றுகிற மனிதர்களிடம் இடப்பெயர்வு அமைகிறது. என்றாலும் அவர்களின் வேர் எவ்விதப் பாதிப்புக்கும் ஆளாகாமல் அது தாயின் பண்புகளோடு வாசத்தோடு மணந்துகொண்டேயிருக்கிறது யுகங்களாய். இப்படித்தான் ஒரு வாசத்தை செல்லப்பாவின் கதைகளில் கண்டறியமுடிகிறது, என்னால்.

இது அவரின் முதல் தொகுப்பு என்று என்னால் நம்ப முடியாமல் போகிறது. கண்களும் உள்ளமும் ஒருமித்தியங்கவேண்டும். அப்போதுதான் அங்கே ஓர் உயிர்ப்பான படைப்பைப் பிரசவிக்கமுடியும் என நம்புகிறேன். தேர்ந்துவிட்ட கதைசொல்லியின் சொற்பிரவாகங்களுக்குள் அமிழ்ந்துபோன அனுபவத்தை இந்தச் சிறுகதைகள் எனக்குத் தருகின்றன இயல்பாகவே. தொடர்ந்த பல்லாண்டுகள் வாசிப்பின் தைரியத்தில் இப்போதெல்லாம் கதையின் கரு பற்றிய சிந்தனையை அவ்வளவாக ஏந்திக்கொள்வதில்லை. அதற்காகப் பொருண்மையின் எந்தவொரு தளத்தையும் மனம் பதிக்காமலும் தாண்டுவதில்லை. ஆகவே புதிதாக ஒரு பொருண்மையின் தளத்தைக் கண்டுபிடித்துவிடமுடியாது என்கிற அழுத்தமான இயற்கை விதியினை உள்வாங்கிக்கொண்டுதான் நான் செல்லப்பாவின் கதைகளுக்குப் பயணிக்கத் தொடங்கினேன். சுகமான பயணம். எப்போதும் சிறுகதைகள் வாசிப்பில் சுகம் காண்பவன். 

இத்தொகுப்பின் 12 கதைகளும் பல்வேறு தருணங்களில் மனிதனின் இருப்பைப் பரிசோதிக்கின்றன. அதற்குப் பல்வேறு செயற்பாடுகளைச் சோதனையாக அறிவிப்பும் செய்கின்றன. என்றாலும் ஒழுங்கான ஒரு சுடரின் அனலெரிப்பைப்போல மாறாத எதார்த்தமும் வருணனைகளும் சோர்வற்று மனத்தைப் புடம்போடுகின்றன. ஒரு குழந்தைக்குத் தாய்மையின் மேன்மையை உணர்த்தும் கதையில் கதை சொல்லத் தொடங்கித் தொகுப்பு இயங்க ஆரம்பிக்கிறது. எங்கிருந்தாலும் இயற்கை இயற்கையாகவே இருக்கும், அதற்கான ஆளுமைப் பண்புடன் என்பதுபோலப் பிறந்த மண்ணின் பண்பாட்டுத் தெளிவுகளுடன் வெளிநாட்டு சூழமைவுகளில் கதையை நகர்த்தும் செல்லப்பா மனத்திற்குள் உயர்ந்துபோகிறார். 

கதையெழுதுவதால் என்ன பயன்கதைகள் என்ன சொலல வருகின்றனஅல்லது முயற்சிக்கின்றனஅவற்றின் சமூகத் தேவையென்னகதைகளில் என்ன விடியலைத் தருவித்துக் காட்டிவிடமுடியும்இப்படி ஓராயிரம் கேள்விகளைக் கேட்டுக்கொண்டு இருக்கலாம். இது எதுவும் இல்லை. தான் கண்டதை, தான் வாழ்ந்ததை, தான் அனுபவித்ததை, தன்னுள்ளம் தக்க வைத்துக்கொண்டதை இயல்பான போக்கில் ஒவ்வொரு கதைக்குள்ளும் பத்திரப்படுத்தி அதைத் தேவைக்கேற்ப வாசிப்பின் உள்ளத்திற்குள் விதைத்துவிடும் திறனை இக்கதைகளில் காணமுடிகிறது.

பல விழுமியங்களைக் கதைகள் சொல்லாமல் சொல்கின்றன. தன்னுடைய ஈடு செய்யவியலாத இழப்பைப் பொறுத்துக் கொண்டு பிறருக்கு உள்ளங்காட்டும் மருத்துவர்.....அன்னையின் மேன்மையை அச்சில் வார்க்கும் ரயில் பயணத்தில் பலகாரம் விற்கும் அந்த உள்ளம்......வாழ்க்கை என்பது நம்பிக்கைகளால் ஆனது எனும் உயர்மதிப்பைச் சிதைக்கும் ஓர் உள்ளத்தின் காயத்தைக் கழுவிட மாமருந்தாய் வரும் இன்னொரு உள்ளம்ஆயிரமானாலும் தாயின் இயல்பென்பது தானீன்ற உயிர்களுக்காவே...பிரதிபலனும் மெய்வருத்தமும் பாராதது என இறந்தும் வெட்டுண்ட பழத்துண்டுகளினூடாகப் புதுப்பிக்கும் தாய்.... உள்ளத்தனையது உயர்வென்ற வள்ளுவனின் வாய்மையைப் புலப்படுத்தும் சாஸ்திரியின் வாய்மையும் ஒழுக்கமும்.... ‘முடிவற்ற தேடலி’ல் வெளிப்படும் குடும்ப அமைப்பின் முறிந்துவிடாத அச்சாணி - என இப்படியாக மனித மதிப்புக்களை மதிப்புக்குறையாமல் சேகரித்து நிற்கின்ற கதைகள் அல்ல இவை. வாழ்க்கை. திசைமாறிப் போய்க்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், வாழ்வின் இருப்பை மனிதாபிமானத்தோடு தக்கவைக்கும் சிறுகதைகளை செல்லப்பா நியாயமான பொறுப்புணர்ச்சியோடு, ஒழுக்கமான படைப்புலகத் தர்மத்தோடு, மனிதநேயச் சிந்தனையோடு எடுத்துக் காட்சிப்படுத்துகிறார்  தன் உள்ள ஈடுபாட்டோடு, அர்ப்பணிப்போடு. ஒருமுறை வாசித்தாலும் பன்முறை பாராயணம் செய்துவிட்ட ஒரு பாடம்போல மனத்தில் தேங்கி மாற்றங்களை விளைவிக்கும் சிறுகதைகள்.

‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’ தாத்தா நமக்களிக்கும் நலந்தரும் விழுமியங்களின் அடையாளம். அவை இந்த மானுடத் தோட்டததில் எப்போதும் எவ்விதப் பூச்சியரித்தலுக்கும் ஆளாகாமல் விளைந்திருக்கும் வெள்ளரிக்காய்கள்தாம். ஆளுக்கொரு வெள்ளரிக்காய் வேண்டாம் அங்கங்கே ஒரு சிறு துண்டு.. ஒரு விள்ளல்.. ஒரு சிறு சுவைப்பு போதும் இந்த சிறுகதைகளின் பலம் அதுதான். சிலவற்றில் புரிந்துகொள்ளமுடியாமல் போய்விடுமோ என்கிற பதைப்பில் என்ன சொல்லவருகிறேன் என்கிற சொற்கள் நீண்டு விடுகின்றன. போகட்டும் நல்லதை சற்று நீட்டித்தால்தான் என்ன?  செல்லப்பாவின் இந்த மனிதத்தைத் தக்கவைக்கும் முயற்சி தலைமுறைகளைத் தாண்டிப்போகும் பயணத்தைத் துணிவுடன் கையெடுத்திருக்கின்றன. 
                                                               அன்புடன்
                                                                ஹரணி
  தஞ்சாவூர், டிசம்பர்  06, 2013

இந்த நூல் மின்பதிப்பாக அமேசானில் கிடைக்கும்.  'Raya Chellappa' என்று search செய்க.                 

(மேற்படி நூலுக்கு வழங்கப்பட முன்னுரை இது.) (மீள்பதிவு)

4 கருத்துகள்:

  1. "தான் கண்டதை, தான் வாழ்ந்ததை, தான் அனுபவித்ததை, தன்னுள்ளம் தக்க வைத்துக்கொண்டதை இயல்பான போக்கில் ஒவ்வொரு கதைக்குள்ளும் பத்திரப்படுத்தி அதைத் தேவைக்கேற்ப வாசிப்பின் உள்ளத்திற்குள் விதைத்துவிடும் திறனை இக்கதைகளில் காணமுடிகிறது."

    இதுதான் திரு.செல்லப்பா அவர்களின் எழுத்தின் வலிமையான மாயம் .

    ஒருமுறை வாசித்தாலும் பன்முறை பாராயணம் செய்துவிட்ட ஒரு பாடம்போல மனத்தில் தேங்கி மாற்றங்களை விளைவிக்கும் திரு. செல்லப்பாவின் சிறுகதைகள் என்று ஹரணி அவர்கள் கூறி இருப்பது மிகவும் பொருத்தம்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல மதிப்பீடு.

    எங்களுக்கும் இப்புத்தகம் நீங்கள் கொடுத்து வாசித்திருக்கிறோம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  3. மதிப்பீடு மிக அருமையாக எழுதியிருக்கிறார். நாங்கள் வாசித்து ஒரு பதிவு எழுதிய நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு