புதன், ஆகஸ்ட் 24, 2022

மணிகர்ணிகா (23) இன்று வர மாட்டாள் - தொடர்கதை

மணிகர்ணிகா (23) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)

(அமெரிக்காவில்  120 வது நாள்:  09-8-2022)


திலகா எங்கு போனாளோ என்று தவித்துக்கொண்டிருந்த சண்முகமும் கிரீஷும் அவள் டாக்டர் வசந்தாவின் நர்ஸின் ஹோமில் பத்திரமாக இருக்கிறாள் என்று தெரிந்தவுடன் அடைந்த நிம்மதிக்கு அளவேயில்லை.  இருவரும் உடனே அவளைப் பார்க்கக் கிளம்பி வந்தார்கள். 


நல்லி சில்க்ஸ்-ரூ 9424 
மயூரிக்குப் பிடிக்குமா? 

அதற்கு முன்பாகத் தன் வீட்டுக்குப் போய் திலகாவுக்குச் சில மாற்று ஆடைகளை எடுத்துக்கொண்டான் கிரீஷ். கொஞ்சம் பழங்களும் வாங்கிக்கொண்டான்.


டாக்டர் வசந்தா அவர்கள் இருவரையும் தனியே அழைத்துப்போய், திலகா தன்னிடம் கூறிய எல்லா விவரங்களையும் தெளிவாகச் சொன்னார். ஒரு போலீஸ் அதிகாரியின் சூழ்ச்சி வலையில்  தன்னை அறியாமலேயே கிரீஷ் விழுந்துவிட்டதைச் சுட்டிக்காட்டிய வசந்தா, முதலில் அந்த வலையில் இருந்து வெளிவருவது பற்றி யோசிக்கவேண்டும் என்றார். 


திலகாவின் கர்ப்பம் பத்திரமாக இருப்பதாகவும், அவளுக்கு எந்த மருத்துவ உதவியும் தேவையில்லை என்றும் உடனே அவளை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகலாம் என்றும் அவர் தெரிவித்தபோது, கிரீஷ் நன்றிப் பெருக்கால் கண்ணீர் உதிர்த்தான். சண்முகம் டாக்டரோடு பேசிக்கொண்டிருக்க, கிரீஷ் மேல்மாடிக்குச் சென்றான்.


அப்போது திலகா உறக்க நிலையில் இருந்தாள். தனக்கு ஏற்பட்ட துயரத்தையும் மீறி, அவளுக்குத் தான் இழைத்துவிட்ட துயரங்களின் சுமை அவனை அழுத்தியது. மெதுவாகச் சென்று அவளுடைய கால்கள் இரண்டையும் பிடித்துக்கொண்டான். வழிந்த கண்ணீரில் கால்கள் சிலிர்த்தபோது திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள் திலகா.


எழுந்து நிற்க முயன்றவளை எழவிடாமல் கட்டி அணைத்துக்கொண்டான். அவள் கண்களும் நீரைப் பெருக்கின. “வாங்க, நம்ப வீட்டுக்குப் போகலாம்” என்று அவன் பிடியில் இருந்து தன்னைத் தளர்த்திக்கொண்டு எழுந்து நின்றாள். “முதலில் மயூரியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அவள் லோன் போட்டு ஒரு லட்சம் கொடுத்திருக்கிறாள். அதைத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும்” என்றாள்.  பிறகு குளித்து விட்டு,  அவன் கொண்டுவந்த உடைகளை அணிந்துகொண்டு புறப்படத்  தயாரானாள்.  


டாக்டரிடம் விடைபெற்றுக்கொள்ளச் சென்றபோது அவர் பிஸியாக இருந்தார். அங்கிருந்த சிசி டிவியின் பதிவுகளை வேறொரு ஹார்டு டிஸ்க்கில் பிரதி எடுக்கும்போது ஏதோ பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. அதனால், பிரதி எடுத்த டிஸ்க்கை ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் திலகாவும் கிரீஷும்  உள்ளே நுழைந்தார்கள். ‘பத்து நிமிஷம் உட்காரும்மா’ என்று சைகை காட்டிவிட்டு பதிவுகளைத் தொடர்ந்து பார்க்கலானார் வசந்தா. கிரீஷும் பார்க்க ஆரம்பித்தான்.


ஒரு கட்டத்தில், “இருங்க டாக்டர்” என்று கத்தினான் கிரீஷ். டாக்டர் அந்தக் காட்சியை ஃப்ரீஸ் செய்தார். என்பீல்டு பைக்கில் மயூரியும் திலகாவும் இருக்கும்போது ஒரு தண்ணீர் லாரி உரசுவதுபோல் செல்லும் காட்சி அதில் பதிவாகி இருந்தது. திலகாவும் உணர்ச்சி வசப்பட்டுப்போனாள். “டாக்டர் அதை முழுசாகக் காட்டுவீர்களா?” என்று கெஞ்சினாள். 


நர்சிங் ஹோமுக்கு எதிரே இருந்த சாலையில் நடந்த அந்த விபத்து சிசிடிவி காட்சியில் நன்றாகப் பதிவாகி இருந்தது. முக்கியமாக, லாரியின் பதிவு எண்  தெளிவாகத் தெரிந்தது. காட்சியில் தேதியும் நேரமும் தெளிவாகத் தெரிந்தன. பைக்கை மயூரி ஓட்டிக்கொண்டிருக்கிறாள். அவளை முந்திக்கொண்டு லாரி இடதுபுறம் திரும்ப முயற்சிக்கும்போது, பைக் மீது உரசுகிறது. மயூரியும் திலகாவும் கீழே விழுகிறார்கள்.


“அதாவது, மயூரி எந்தத் தவறும்  செய்யவில்லை. லாரி மீதுதான் தவறு என்று இதைப் பார்த்தவுடனே யாருக்கும் தெரிந்துவிடும்” என்றார் டாக்டர். “இதை வைத்தே லாரி ஓனர் மீது கேஸ் பதிந்திருக்கவேண்டும். ஏன் போலீஸ் செய்யவில்லை?”


பைக் இன்சூரன்ஸ் காலாவதியாகிவிட்ட விஷயத்தைத் துருப்புச் சீட்டாக்கி போலீஸ் அதிகாரி, மயூரிதான் தவறாக ஓட்டினாள் என்றும் அந்த பைக் பழுதான நிலையில் இருந்ததாகவும் எழுதிவாங்கி விட்டது கிரீஷுக்குத் தெரியாது. திலகாவிற்கும்  தான் எந்த பேப்பரில் கையெழுத்திட்டோம் என்று  ஞாபகம் வரவில்லை. அவள் எதையும் படித்துப் பார்க்கவில்லை. 


“நல்லது, இந்தப் பதிவு உங்களுக்குத் தேவைப்படுமானால், எழுத்துபூர்வமாகக் கேளுங்கள். தருகிறேன். அப்போதுதான் அதை கேசுக்கான ஆதாரமாக நீங்கள் காட்ட முடியும்”  என்ற டாக்டர் அவர்களுக்கு விடை கொடுத்தார். திலகாவை ஒரு நோயாளியாக அவர் பதிவுசெய்யாததால், அவளிடம் கட்டணம் எதுவும் பெறவில்லை. 


சண்முகத்தின் காரில் வீடு வந்து சேர்ந்தாள் திலகா. வேலைக்காரிக்கு போன் செய்து வரச்சொன்னாள். வீடு துப்புரவாகும்வரை பால்கனியில் நின்றுகொண்டாள். தலைவிதி! என்னவெல்லாம் நடந்துவிட்டது! 


சண்முகம் கிரீஷை அழைத்துக்கொண்டு ஐசிஐசிஐ வங்கியின் உள்ளூர் தலைமை அலுவலகத்துக்குச் சென்றார். அன்று ஏடிஎம்-மில் தனக்குத் தவறுதலாகக் கிடைத்த 20,000 ரூபாயை அவர்களிடம் ஒப்படைத்தான் கிரீஷ். அவர்களுக்கு ஆச்சரியம். ஏனென்றால் அதை ஒப்படைக்கச் சொல்லி கோர்ட்டில் உத்தரவு  இல்லை. மாறாக, கிரீஷுக்கு  ஒரு லட்சம் நஷ்டஈடு வழங்கவேண்டும் என்பது தான் உத்தரவு. “மற்றவர்களின் பணம் எனக்குத் தேவையில்லை. அத்துடன் எனக்கு எந்த நஷ்ட ஈடும் தேவையில்லை” என்று எழுதிக்கொடுத்தான் கிரீஷ். ஒரு பெரிய சிக்கலில் இருந்து தங்கள் வங்கியை விடுவித்ததற்காக அதன் உயர் அதிகாரி சண்முகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

  

“கிரீஷ், மயூரிக்கு நீங்கள் ஏதாவது சொல்லவேண்டி இருக்கிறதா?” என்றார் சண்முகம். “ஏனென்றால் அவள் ரெசிக்னேஷன் லெட்டர் அனுப்பியிருக்கிறாள். அவளை இனிமேல் நீங்கள் பார்க்க முடியாது. ஆகவே போன் போடட்டுமா, பேசுகிறீர்களா?”


தலையைக் குனிந்தான் கிரீஷ். போலீஸ் அதிகாரி கருணாவும், தொழிற்சங்கத் தலைவரும் தன்னை எவ்வாறு ப்ரெயின்வாஷ் செய்து வைத்திருந்தார்கள் என்று நினைத்தபோது வெட்கமாக இருந்தது. அதன் காரணமாகவே மயூரியும் வேலையை விட்டுவிட்டு பெங்களூர் செல்லத் தீர்மானித்திருக்கவேண்டும். அவளிடம் மன்னிப்பு கேட்டாகவேண்டும். 


“வணக்கம் மயூரி! எல்லாம் என்னால் வந்த வினை. விதி! உங்களை என்னென்னவோ பேசிவிட்டேன். தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் ஆரோக்கியம் இப்போது பரவாயில்லையா? திலகா உங்களோடு பேச விரும்புகிறாள். அவளும் உங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிறாள்..” என்று குரல் தழுதழுக்கப் பேசினான் கிரீஷ்.


மயூரிக்கும் குரல் நெகிழ்ந்துபோய்விட்டது. சில கணங்கள்  மௌனமாக இருந்தவள், “போனது போகட்டும், கிரீஷ்! திலகாவின் குழந்தைக்கு ஒன்றுமில்லையே? அதைக் கவனியுங்கள். மற்றப்படி, எல்லாம் என் தலையெழுத்து. வண்டியின் இன்சூரன்ஸை ஒழுங்காக ரினியூ செய்யாதது என் கணவரின் தவறு. அதனால் தான் நீங்கள் அந்தப் போலீஸ் அதிகாரி சொன்னபடி கேட்கவேண்டி வந்தது. இந்த விஷயத்தை இத்தோடு மறந்துவிடுவோம். என் ரெசிக்னேஷன் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் ஒருநாள் வந்து எங்கள் பிராஞ்சில் அனைவருக்கும் பார்ட்டி கொடுக்கிறேன். அப்போது தவறாமல் கலந்துகொள்ளுங்கள்” என்று போனை வைத்துவிட்டாள். 


“எவ்வளவு பெரிய மனசு அவளுக்கு! அவளை வைத்து 20 லட்சம் கறந்துவிடலாம் என்று தூண்டிவிட்டானே அந்தக் கயவன்!” என்று பொருமினான் கிரீஷ். “அவனுக்கு எப்படியாவது பாடம் கற்பிக்கவேண்டும் சண்முகம் சார்!” என்றான்.


சண்முகம், “கொஞ்சம் பொறுமையாக இருங்கள். ஒரு காக்கிச் சட்டையை இன்னொரு காக்கிச்சட்டை காட்டிக்கொடுக்காது என்பது பொதுவிதி. ஆகவே முதலில் அவரிடமிருந்து உங்களை முழுசாக விடுவிக்கவேண்டும். அதன் பிறகு அவரைப் பழிவாங்குவது பற்றி யோசிக்கலாம்“ என்றார்.       

  

“ஒரு விஷயத்தில் நீங்கள் உண்மையாக இருக்கவேண்டும். கருணாவிடம் நீங்கள் பணம் வாங்கினீர்களா, எவ்வளவு?”


“சொல்லிவிடுகிறேன் சார்! அன்று அப்போலோவில் அட்மிட் ஆனபோது திலகாவிடம் சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு என்னிடம் ஒரு கவர் கொடுத்தார். அதில் ஐம்பதாயிரம் இருந்தது. அவ்வளவுதான். வேறு எதுவும் அவர் கொடுக்கவில்லை” என்றான் கிரீஷ். “அத்துடன் எந்த பேப்பரிலும் நான் கையெழுத்து போடவும் இல்லை.”


“அந்த அளவில் நிம்மதி” என்ற சண்முகம், அவரை அழைத்துக்கொண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் வீட்டுக்குப் போனார். இடதுசாரிப் பற்றுள்ளவர் அவர். போலீசாரின் வன்முறைக்கு ஆளான எளிய மக்களைப் பற்றிய சில  திரைப்படங்களில் நடித்ததன் மூலம் சாதாரண மக்களுக்கும் தெரிந்தவராகி விட்டவர். சண்முகமும் கிரீஷும் சொன்னதையும், டாக்டர் வசந்தாவிடமிருந்து பெற்ற சிசிடிவி பதிவையும் பார்த்தபின் அவர் கூறினார்: 


“இதுதான் நம் நாட்டில் அடிக்கடி நடப்பது. பதவியைத் தவறாகப் பயன்படுத்திப் பணம் பண்ணுவது அநேகமாக ஒப்புக்கொள்ளப்பட்ட தலைமைப் பண்பாகி விட்டது. பண பலம், சாதி பலம் உள்ளவர்கள் மட்டுமே இவர்களை எதிர்க்க முடிகிறது. மற்றவர்களை இவர்கள் பயத்தாலும் மிரட்டலாலுமே விழுங்கி ஏப்பம் விட்டு விடுகிறார்கள்.” 


பிறகு, “உங்களிடம் மிகச் சரியான சாட்சியம் இருக்கிறது. ஆனால் அதை பயன்படுத்தி நஷ்டஈடு கேட்கவேண்டும் என்ற ஆவேசமோ, அதற்கான நேரமோ, பண வசதியோ இல்லை. அதைத்தான் கருணாவைப் போன்றவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இது ரொம்ப சிம்பிள் கேஸ்! உடனே அந்த லாரி ஓனருக்குத் திலகாமூலம் வக்கீல் நோட்டீஸ் கொடுங்கள். ஒரே வாரத்தில் கருணா உங்களிடம் சரண்டர் ஆகிறாரா இல்லையா பாருங்கள். கவலை வேண்டாம்” என்றார்.


வாசல் வரை வந்து வழியனுப்பியவர், கடைசியாகச் சொன்னார்: “எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசலாம். ஆனால் இந்த விஷயத்தை அதிகம் விளம்பரப்படுத்தவேண்டாம். ஏனென்றால் போலீஸ்காரர்கள் அடிபட்ட நாகம் மாதிரி. ஞாபகம் வைத்துக்கொண்டு இன்னொரு சமயம் கொத்திவிடுவார்கள்” என்றார்.   

  

அதன்படியே வக்கீல் நோட்டீஸ் போயிற்று.

**** 

எந்த மாநிலமானாலும், அமைச்சர்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் முழுமையான கருத்தொற்றுமை இருப்பது அபூர்வமே. சொந்தக் கட்சிக்காரர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பதுதான் அமைச்சர்களின் முன்னுரிமை. ஆனால், எதைச் செய்தாலும் அது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாகவும், தங்கள் எதிர்காலத்தைப் பாதிக்காதவாறும் இருக்கவேண்டும் என்பது இந்த உயர் அதிகாரிகளின் ஆரம்பப் பாடம். இரண்டும் எல்லா நேரங்களிலும் ஒத்துப்போவதில்லை.


குல்கர்னிக்கும் இந்த நிலைமை ஏற்பட்டது. ஒரு அமைச்சரின் நியாயமற்ற யோசனையை ஏற்க மறுத்ததால் அவர் ஆளும்கட்சிக்கு வேண்டாதவரானார். அவரை மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்புமாறு சிபாரிசு எழுதினார் அமைச்சர். இதை இரகசியமாக அறிந்துகொண்ட குல்கர்னி, தாமே விருப்ப மாறுதலுக்கு விண்ணப்பித்தார். அவர் எதிர்பார்த்தபடியே தமிழ்நாடு கேடருக்கு மாறுதல் கிடைத்து,  போக்குவரத்துத் துறையில் துணைக் கமிஷனராக ஒரே வாரத்தில் வந்து சேர்ந்துவிட்டார். 


சம்பிரதாயப்படி, அதிக வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் குல்கர்னியை நேரில் சந்தித்து, வாழ்த்து சொன்னார்கள். அவர்களில் முதலாமவர் ஆளும்கட்சியின் செல்வாக்குமிக்க தொழிலதிபர். ஆனாலும் குல்கர்னியிடம் பணிவாக நடந்துகொண்டார். அத்துடன் தனது தனிப்பட்ட பிரச்சினை ஒன்றையும் அவருடன் பகிர்ந்துகொண்டார். 


“ஒரு சின்ன விபத்து. போலீஸ் சொன்னதை நம்பி ஐந்து லட்சம் கொடுத்தேன். விஷயம் செட்டில் ஆகிவிட்டது என்றார் போலீஸ் அதிகாரி. இப்போது சம்பந்தப்பட்ட பெண்மணி வக்கீல் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். இந்த வருடம் முனிசிபல் தேர்தலில் கவுன்சிலருக்கு நிற்பதாக இருக்கிறேன். விஷயம் பெரிதாகாமல் அடக்கவேண்டும். உங்கள் உதவி தேவை” என்று பணிவாகக்  கேட்டுக்கொண்டார். அரசாங்க அதிகாரிகளிடம் பணத்தைவிடப் பணிவுதான் அதிகம் பலன்தரும் என்று அனுபவத்தில் அறிந்தவர் அவர். 

     

வக்கீல் நோட்டீஸைப் படித்தார் குல்கர்னி. அதில் மயூரி, திலகா என்ற கேள்விப்பட்ட பெயர்கள் இருப்பதைக் கவனித்தார். மீனாவிடம் பேசவேண்டும் என்று தீர்மானித்தார்.


“என்னுடைய டிபார்ட்மண்ட் விஷயம் இல்லையே இது! போலீஸ்துறையில் நான் எப்படித் தலையிட முடியும்?” என்று கேட்டார் குல்கர்னி. 


“அப்படிச் சொல்லக்கூடாது குல்கர்னி சார்! நானே போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்குப் போய் டீல் செய்யமுடியும். ஆனால் அங்கிருக்கும் ஒரு முக்கியமானவர் எனக்கு எதிரானவர். இந்த வக்கீல் நோட்டீசை உடனே நக்கீரனுக்கு லீக் பண்ணிவிடுவார். அத்துடன் நோட்டீஸ் கொடுத்திருக்கும் வக்கீல், பிரபலமான முன்னாள் நீதிபதியின் உறவினர். ஆதாரம் இல்லாமல் கேஸை எடுக்கமாட்டார். விளைவாக, என் அரசியல் முன்னேற்றம் தடைப்படும். அதனால்தான் உங்களிடம் வந்தேன். ஏற்கெனவே ஐந்து லட்சம் கருணாமூர்த்தியிடம் கொடுத்துவிட்டேன். எப்படியாவது நீங்கள் கருணாவை அடக்கி இந்த கேஸை வாபஸ் வாங்கும்படி செய்யவேண்டும்” என்று எழுந்தார் அவர். 


போகும்போது “இந்தக் கருணாமூர்த்தியின் மேலதிகாரி உங்கள் ஊர்க்காரர் தான். அனந்தராம் ஷெனாய்” என்ற தகவலையும்  கொடுத்தார். அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் அதிகாரிகளை ‘கவர்’ செய்கிறார்கள் என்று அதிசயப்பட்டார் குல்கர்னி.   

**** 

குறிப்பு:  இந்த அத்தியாயத்துடன் கதை முடிந்துவிடும் என்று தோன்றியது. ஆனால் மணிகர்ணிகா துபாயில் இருந்துவரும் விமானம் ஆறுமணி நேரம் தாமதமாவதால், அடுத்த அத்தியாயத்தில் தான் அவளை நீங்கள் சந்திக்க முடியும்! அதற்காகக் கஷ்டப்படவேண்டாம். கீழே சொடுக்கினால் போதும். 


-இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.   

 இதன் அடுத்த பகுதி   -" மணிகர்ணிகா (24) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


2 கருத்துகள்:

  1. அடுத்த பகுதியை ஆவலுடன் தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. எப்படி எப்படி எல்லாமோ சிக்கலைப் போட்டு, அவைகளை பக்குவமாக தாங்கள் அவிழ்க்கிற விதமே அலாதியானது.

    எத்தனை Characters, எத்தனை நாடுகள், எவ்வகையான சம்பவங்கள், காய்களை நகர்த்தும் விதம், ஒரு பதிவுக்கும், மறு பதிவுக்கும் உள்ள சஸ்பென்ஸ்..!
    செம அசத்தலான கதை, அழகு நடை,வர்ணனை, நடைமுறை வாழ்க்கை அனுபவங்கள்- எல்லாமே மிக மிக அற்புதமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு