புதன், மார்ச் 20, 2013

சாகித்ய அகாதெமி(3): விருதுகள் - அலசல்கள்

அலசல் (1)

கடந்த 58 வருடங்களில் சாகித்ய அகாதெமி விருதுகள் வழங்கப்பட்ட வகைப்பாடுகள் கொண்ட அட்டவணையைப் பார்த்திருப்பீர்கள். விருதுகள் துவக்கப்பட்ட முதல் வருடமான 1955ல் 12 மொழிகள் மட்டுமே விருது பெற்றன.2005 முதல் அந்த எண்ணிக்கை 24 ஆகிறது. அந்த ஆண்டில் போடோ (Bodo), ஸாந்தலி(Santhali) என்ற இரு மொழிகளும் சேர்க்கப் பெற்றன.


58 விருதுகளில் 57ஐ வென்றன, ஹிந்தியும் மராத்தியும். வங்காளி மொழி 55 பெற்றது. குஜராத்தி, கன்னடம், மலையாளம் தலா 54ம் , தமிழ் 53ம் பெற்றன.

ஒரியா, பஞ்சாபி (தலா 52), தெலுங்கு, உருது (தலா 51), அசாமிய மொழி 49ம் பெற்றன.

சிந்தியும் சமஸ்க்ருதமும் தலா 45 விருதுகளும், மைதிலி 43ம், ஆங்கிலமும், காஷ்மீரியும் தலா 41ம், ராஜஸ்தானி 39ம் வென்றன.

மணிப்புரி(38), டோக்ரி (38), கொங்க்கணி (36), நேப்பாளி (34) விருதுகள் பெற்றன. கடைசியாக 2005 முதல் சேர்க்கப்பட்ட போடோ 8 விருதும், ஸாந்தலி 4 விருதும் பெற்றன.

இது தான் மேலோட்டமான காட்சி.

அலசல் -2

இனி எந்தெந்த இலக்கிய வடிவங்களுக்கு எவ்வளவு பரிசுகள் கிடைத்துள்ளன என்று ஆராயலாம். மேற்படி அட்டவணையின்படி, 24 மொழிகளுக்கும் சேர்த்து 58 வருடங்களில் மொத்தம் 1051 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. வகைப்பாடு விவரம்:

எல்லா மொழிகளும்
கவிதை 362 34%
உரைநடை 265 25%
நாவல் 239 23%
சிறுகதை 144 14%
நாடகம் 41 4%
மொத்தம் 1051 100%



கவிதை-மு.மேத்தா 

இதைப் பார்த்தவுடனே கவிஞர்கள் பொங்கி வழியக்கூடும், ஆஹா, மூன்றிலொரு பங்கு (34%) விருதுகளைக் கவிதைக்கு அளித்ததன்
மூலம் அகாதெமி கவிதைக்கு கிரீடம் வழங்கியுள்ளது என்று.




நாவல்-ஜெயகாந்தன் 

'நாவலர்கள்' (அதாவது நாவல் ஆர்வலர்கள்) சிறுகதையை விட மேம்பட்ட வடிவம் நாவல் தான் என்பதை அகாதெமியே ஏற்றுக் கொண்டுவிட்டது பார்த்தீர்களா என்று பெருமிதப்படக்கூடும். ஏனெனில், சிறுகதைக்கு 144 விருதுகள், நாவலுக்கோ 239.



உரைநடை-வல்லிகண்ணன் 
உரைநடையாளர்களோ, மெல்லச் சிரிப்பார்கள்: நாலிலொரு பங்குக்கு (25%) நாங்கள் தான் உரிமையாளர்கள். எவ்வளவு இலக்கிய வடிவங்கள் வந்தாலும், வடிவமேயில்லாத எங்களை அசைக்க முடியாது. ஆகவே, மூளையைக் கசக்கிக்கொண்டு கதை கவிதை என்றெல்லாம் போகாதீர்கள், கட்டுரையே போதும் என்பார்கள்.
 
சிறுகதை-அசோகமித்திரன் 
சிறுகதையாளர்களோ, எங்களுக்கு 14% தான் என்றாலும் நாடகம் என்று ஒரு வடிவம் இருக்கிறதே அதற்கு வெறும் 4% தான் பார்த்தீர்களா என்பார்கள்.




நாடகம்-பாரதிதாசன் 
ஆனால் உண்மையான அலசல் இதுவல்ல. ஒவ்வொரு தனிப்பட்ட மொழியையும் எடுத்துக் கொண்டு தான் நாம் ஆய்வு செய்ய வேண்டும். ஏனென்றால் ஒவ்வோர் ஆண்டும் நாவலுக்கு இத்தனை சதம், சிறுகதைக்கு இத்தனை சதம் என்று
கொடுக்கும்படி அகாதெமி, தேர்வர்களுக்கு திட்டவட்டமான அறிக்கை எதுவும் கொடுப்பதில்லை.



அப்படியானால், விருதுக்கு நூல்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

நூல் தேர்வு விதிகள்

முக்கியமான விதி, நூல் எந்த வருடம் வெளிவந்திருக்க வேண்டும் என்பது தான். ஒரு உதாரணத்தால் விளக்கலாம். நீங்கள் 2013ல்  அகாதெமி விருதைப் பெற வேண்டுமானால், உங்கள் நூல், 2008 ஜனவரி யிலிருந்து 2011 டிசம்பருக்குள்
வெளியாகியிருக்க வேண்டும். அதாவது மூன்றாண்டுகளுக்கு
முன்பு வெளிவந்ததாயிருக்க வேண்டும்.

(1)  அகாதெமியில் ஒவ்வொரு மொழிக்கும் தலா பத்து உறுப்பினர்களைக் கொண்ட  'மொழியாலோசனை வாரியம்'
 (Language Advisory Board) ஒன்று உண்டு. இதன் உறுப்பினர்கள்
பெரும்பாலும் சிறந்த எழுத்தாளர்களாக அல்லது
அத்துறையோடு  தொடர்பு கொண்டவர்களாக
இருப்பர். இவர்களின் ஆலோசனைப்படி, ஒன்று அல்லது இரண்டு
வல்லுனர்கள் (Experts) ஒவ்வொரு மொழிக்கும் நியமிக்கப் படுவர்.

(2) இந்த வல்லுனர்கள் தாம், விருதுக்குத்  தகுதியானவை என்று கருதப்படும் நூல்களின் 'அடிப்படை பட்டியல்'
(Ground List)  ஒன்றைத் தயாரிப்பர். இத்துடன், ஏற்கெனவே இதுபோன்ற பட்டியல் சென்ற ஆண்டும் தயாரிக்கப்பட்டிருக்கும் அல்லவா,
அந்தப் பட்டியலும் எடுத்துக் கொள்ளப்படும். (இவ்விரு
பட்டியல்களில் குறைந்த பட்சமாக  இருபது நூல்களாவது இருக்கலாம்  என்று தெரிகிறது). இது தான் முதல் கட்டத் தேர்வு.
 
(3) இந்த இரட்டைப் பட்டியல், மொழியாலோசனை வாரியத்தின் பத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பப்படும். ஒவ்வொரு உறுப்பினரும் தலா இரண்டு நூல்களைத் தேர்வு செய்ய வேண்டும். அப்படி தேர்வு செய்யப்படும் இரண்டு நூல்கள்,
           - ஒவ்வொரு பட்டியலிலிருந்தும் ஒரு நூலாக இருக்கலாம், அல்லது,
           - ஏதாவது  ஒரு பட்டியலில் இருந்து ஒரு நூலும் , இன்னொன்று, அவரே புதிதாகத்  தேர்ந்தெடுப்பதாகவும்
இருக்கலாம், அல்லது,
           - இரட்டைப் பட்டியலை நிராகரித்து விட்டு, தானாகவே இரண்டு புது நூல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

  ஆகா மொத்தம் 10 x 2 = 20 நூல்கள் (அதிக பட்சமாக) இவர்களால் தேர்ந்தெடுக்கப்படும். (அனேகமாக ஒருவர் தேர்வு செய்வது அடுத்தவருக்குத் தெரியாத வண்ணம் இருக்கும் என்று கருதலாம்).
சில நேரங்களில், ஒரே நூலையே ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தேர்வு செய்யவும் கூடும். அப்போது மொத்த எண்ணிக்கை 20ஐ விடக் குறைவாக இருக்கும். இது தான் இரண்டாம் கட்டத் தேர்வு.

(4) மொழியாலோசனை வாரியம், 10 நடுவர்களை (Referees) நியமிக்கும். இவர்கள் தாம் மூன்றாம் கட்டத் தேர்வைச் செய்யப் போகிறவர்கள். இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள (சுமார் 20 நூல்களைக் கொண்ட) பட்டியலைப் பார்த்து, அதிலிருந்து ஏதாவதொரு நூலைத் தேர்ந்தெடுத்து அகாதெமிக்குத் தெரிவிக்க வேண்டும். அல்லது, தாங்களாகவே புதியதொரு நூலையும் முன்மொழியலாம். ஆக, மூன்றாம் கட்ட தேர்வுக்குப் பிறகு, பத்து நூல்களின் பட்டியல் அகாதெமியிடம் வரும்.

(5) இந்தப் பட்டியல், சிறந்த அறிஞர்களைக் கொண்ட 'மூவர் குழு' (Jury) முன்பு வைக்கப்படும். இக்குழுவிற்கு ஒரு அமைப்பாளரும் உண்டு. (Convener). மூவர் குழு, ஒருமித்த கருத்துப்படியோ, அல்லது மூவரில் இருவர் (அதாவது, பெரும்பான்மையின்) முடிவுப்படியோ, ஒரு நூலைத் தேர்ந்தெடுக்கும். இது தான்  கடைசி கட்டம். ஒருவேளை, மூன்று பேருமே கருத்தொற்றுமையின்றி, தலா ஒரு நூலை சிபாரிசு
செய்வதாக வைத்துக் கொள்வோம். அப்போது, அமைப்பாளர், மூன்றில் எந்த நூலை ஆதரிக்கிறாரோ, அதுவே இறுதி முடிவாகும்.

-இவ்வாறு ஒவ்வொரு மொழியிலிருந்தும் ஒரே ஒரு நூல் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டு, அகாதெமியின் உயர்குழுவில் வைக்கப்பட்டு, தேவைப்பட்டால் விவாதிக்கப்பட்டு, அதன் பிறகே விருதுக்கு உரிய நூலாக அங்கீகரிக்கப்படும். அறிவிக்கப்படும்.

இப்போது புரிந்ததா? மிகப் பெரியதொரு ஒழுங்குமுறைக்கு
உட்பட்டுத்  தான் அகாதெமி விருதுக்குரிய நூல்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. எனவே, விருதுகள் அறிவிக்கப்பட்ட உடனே எழும் குற்றச்சாட்டே, 'இவருக்கு ஏன் விருது கிடைக்கவில்லை' என்பது தானே யன்றி  'இவருக்கு ஏன் கிடைத்தது ' என்பதில்லை. தமிழில் மட்டுமல்ல, வேறு பல மொழிகளிலும் இதே தான் நிலை.

(கடந்த ஆண்டு 2012க்கான விருதாக  D. செல்வராஜ்  எழுதிய 'தோல்' என்ற நாவலைத் தேர்ந்தெடுத்த மூவர் குழு யார் யார் தெரியுமா? (1) டாக்டர் கே.வி.பாலசுப்ரமணியன், (2) டாக்டர் அப்துல் ரஹ்மான் மற்றும் (3) திரு. சா. கந்தசாமி ஆகியோர்).

இப்படிப்பட்ட நான்கு கட்ட தேர்வு முறைக்கு உட்படுவதால் தான்
இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் நூல் கதையா, கட்டுரையா, கவிதையா, நாவலா, நாடகமா  என்பது அந்தந்த மொழிக்கே உரிய
தனித்தன்மையான முடிவாகிறது. எனவே தான் ஒரு குறிப்பிட்ட  ஆண்டில், சில மொழிகளில் (எடுத்துக்காட்டாக) நாவல்கள் தேர்வு பெறுவதும், அதற்கு அடுத்த ஆண்டிலும் அதே மொழிகளில் நாவல்களே மீண்டும்  தேர்வு பெறுவதும் சாத்தியமாகிறது. இதை வைத்து அனைத்திந்திய அளவிலான இலக்கியப் போக்கு எதையும் சாகித்ய அகாதெமி விருதுகள் நிர்ணயிப்பதாகக் கொள்வதற்கில்லை.

(நாளையும்  அலசுவோம்)
********
(c) Y.Chellappa
email: chellappay@yahoo.com


2 கருத்துகள்: