வியாழன், மே 21, 2020

பொன்னித் தீவு-11

பொன்னித் தீவு-11

   -இராய  செல்லப்பா
(11) பரமசிவம் பரமசிவம்

“இது உங்கள் மகள் வீடா? அப்படியானால் யமுனாதான் உங்கள் மகளா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் இன்ஸ்பெக்டர் கண்ணன்.

“ஆமாம், என் மருமகன் செல்வம் ஒரு ஐ.ட்டி. கம்பெனியில் வேலைசெய்கிறார். அது சரி, யமுனாவை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று பரமசிவமும் அதே ஆச்சரியத்துடன் கேட்டார்.

அப்போது அந்தக் குடியிருப்பின் செயலாளர் ஹரிகோபால், “யமுனா இருக்கிறார்களா?” என்று கேட்டுக்கொண்டே நுழைந்தார்.  இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும், “வணக்கம் மிஸ்டர் கண்ணன்! எங்கே இவ்வளவு தூரம்?” என்றார்.
 
கண்ணனை முந்திக்கொண்டு பரமசிவம் பதில் சொன்னார்: “சார் எங்க ஊர்தான்! ரொம்ப நல்ல மனுஷர்! தராதரம் தெரிந்தவர்! நாலு பேருக்கு நல்லது செய்வதென்றால் இவருக்கு கற்கண்டு சாப்பிடுவதுபோல!”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை ஹரிகோபால் சார்!  நம்ப கடமையை நாம செய்யறோம், அவ்வளவுதான்!” என்றார் கண்ணன்  சற்றே குழைந்த குரலில்.

“இன்று அசோசியேஷனில்  அவசரமான மீட்டிங் இருக்கிறது. பக்கத்து பிளாக்கில்தான் நடக்கிறது. வழக்கமாக யமுனா மேடம்தான் இந்த பிளாக் பிரதிநிதியாக வந்து கலந்துகொள்வார். இன்னும் அரைமணியில் வந்தால் போதும். அவரிடம் சொல்கிறீர்களா? நான் மற்றவர்களையும் ரிமைண்ட் செய்யவேண்டும்” என்று பரமசிவத்திடம் சொல்லிவிட்டுக் கிளம்பினார் ஹரிகோபால்.

ஹாலில் பேச்சரவம் கேட்டு யமுனா மெதுவாக எழுந்துவந்தாள். அவளைப் பார்த்து இன்ஸ்பெக்டர் “வணக்கம் மேடம்! எனக்கு முன்பே தெரியாமல் போய்விட்டது, நீங்கள் பரமசிவம் சாரின் மகள் என்பது! வெரி சாரி” என்றார்.

பிறகு, ராஜாவை வெளியே நிற்கும்படி கூறிவிட்டு, இன்னொரு அறைக்குள் சென்று பரமசிவத்துடன் பேசினார் கண்ணன். “சார், நெக்லஸோ என்னவோ காணாமல் போய்விட்டதாகக் கேள்விப்படுகிறேன். அதுதான் வருத்தமாக இருக்கிறது. அதைப் பற்றிப் பேசலாமா?” என்றார்.

பரமசிவம் திடுக்கிட்டார்.

யமுனா போலீசுக்குப் போன விஷயம் பரமசிவத்துக்குத் தெரியாது. அதே போல, பரமசிவம் மார்வாடியிடம் சென்று நெக்லஸைப் பற்றி விசாரித்து, விஷயம் சேகரித்தது இன்ஸ்பெக்டருக்குத் தெரியாது.

ஒருவழியாக சுதாரித்துக்கொண்டு, “அந்த விஷயம் சரியாகிவிட்டது. நெக்லஸ் கிடைத்துவிட்டது! இப்போது யமுனா கர்ப்பமாயிருக்கிறாள் என்ற நல்ல செய்தி வந்திருக்கிறது. ஆகவே மற்ற விஷயங்களை விட்டுவிடலாம்!” என்றார் பரமசிவம் பொத்தாம்பொதுவாக.

இன்ஸ்பெக்டர் குழப்பத்தில் ஆழ்ந்தார்.  யமுனாவை உற்று நோக்கினார்.

தகப்பனாரின் பேச்சு அவளுக்கும் திகைப்பாகவே இருந்தது. நெக்லஸ் கிடைத்துவிட்டதா? எப்படி? அது செம்பகத்தின்  கழுத்தில் அல்லவா இருக்கிறது? ஆனாலும் தகப்பனார் சொன்னதில் ஏதாவது காரணம் இருக்கும் என்று புரிந்தவளாக, “ஆமாம் சார்! இந்த விஷயத்தை நீங்கள் க்ளோஸ் பண்ணிவிடுங்கள். சரி, என்ன சாப்பிடுகிறீர்கள்? காப்பியா, இல்லை ஜுஸா?” என்றாள்.

காப்பி வந்தது. பரமசிவம் இன்ஸ்பெக்டரிடம் தணிந்த குரலில் சில நிமிடங்கள் ஏதோ பேசினார். “அப்படியானால் சரி! விஷயம் உங்களுக்குத் திருப்தியாக முடிந்துவிட்டால் போதும். எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ராஜாவை இனிமேல் விசாரிக்க வேண்டாம் அல்லவா? மீண்டும் அவன்மீது புகார் வராதல்லவா?” என்றார் இன்ஸ்பெக்டர்.

“இல்லை இல்லை. அவனை விட்டு விடுங்கள். பாவம் அவனுடைய மனைவிக்குப் பேசவராது என்று எனக்கே இப்போதுதான் தெரிந்தது. கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்துகொண்டிருக்கிறான். அவனைத் தொந்தரவு செய்யவேண்டாம்” என்று இன்ஸ்பெக்டரை வழியனுப்பிவைத்தார் பரமசிவம். 
 
கிளம்புமுன்பு பரமசிவத்தின் கைகளைப் பிடித்து நன்றி சொன்னான், ராஜா.

அவர்கள் போனதும் யமுனா, அசோசியேஷனின்  அவசரக் கூட்டத்துக்குப்  புறப்பட்டாள்.  செல்வம் ஒரே ஒரு நிமிடம் வெளியேவந்தவன், “இன்னும் அரைமணிநேரம் என்னை யாரும் தொந்தரவு செய்யவேண்டாம்” என்று மீண்டும் உள்ளேபோய்க் கதவைத் தாளிட்டுக்கொண்டான்.

பார்வதி கணவனிடம் வந்தாள். பேசவில்லை. ஆனால் அவள் பார்வையில் ‘நெக்லஸ் கிடைத்துவிட்டதாக ஏன் பொய் சொன்னீர்கள்’  என்ற கேள்வி இருந்ததைப் பரமசிவம்  புரிந்துகொண்டார்.  ‘உஷ்!’ என்று வாய்மேல் விரலை வைத்து அவளை அடக்கினார்.

செல்வத்தின்மீது போலீசின் சந்தேகக்குறி விழுந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவர் அப்படிச் சொன்னார் என்பதை அவளுக்குப் பின்னால் விளக்கினால் போயிற்று. குடும்ப கௌரவம்தானே முக்கியம்! 

***
அன்றைய அவசரக் கூட்டத்தின் தேவையை ஹரிகோபால் உறுப்பினர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார்.

“கொஞ்ச காலமாகவே நமது குடியிருப்பில் குரங்குகளின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை என்பது உங்களுக்கே தெரியும். நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காகவும்,  அருகில் இருக்கும் மருத்துவமனைக்குப் புதிய ஹாஸ்டல் கட்டுவதற்காகவும் பல மரங்களை வெட்டிப்போட்டுவிட்டார்கள். அதனால் குரங்குகளின் வாழ்வாதாரம் சிதைந்துவிட்டதால், வேறு வழியின்றி அவை உணவுக்காக நமது குடியிருப்பிற்குள் குடும்பம் குடும்பமாகப்  படையெடுத்து வருகின்றன. இதை எப்படிச் சமாளிப்பது என்று ஆலோசிக்கத்தான் நாம் கூடியிருக்கிறோம்!” என்றார்.

“முன்பு தெருநாய்களின் பிரச்சினை இருந்தது. ப்ளூகிராஸில் சொன்னோம். பார்த்துக்கொண்டார்கள். பாம்புகள் பிரச்சினை இருந்தது. சுற்றுப்புறத்தைத் தூய்மைசெய்தவுடன் அது முடிந்துவிட்டது. ஆனால் குரங்குகளை என்னசெய்வது?” என்றார் ஒரு முதியவர்.

“என்னால் கிச்சன் சன்னல் கதவைத் திறக்கவே முடியவில்லை. பெரிய குரங்கு வெளியே நின்றுகொண்டு, குட்டிக்குரங்கை உள்ளே அனுப்பிப்  பழங்கள் மற்றும் பொருள்களைப் பறித்துக்கொண்டு போகிறது” என்றார் ஒரு பெண்மணி.

“ஹாலில் புகுந்து என்னுடைய பர்ஸை ஒருநாள் தூக்கிக்கொண்டு போய்விட்டது. நல்லவேளை, கொஞ்ச தூரம் போய் வீசியெறிந்துவிட்டது. பிடித்துக்கொண்டேன்!” என்றாள் ஓர் இளம்பெண்.
 
வழக்கமாக நான்காம் மாடியின் மேல் இருக்கும் மொட்டைமாடியின் கதவு பூட்டப்பட்டே இருக்கும். சாவி அசோஸியேஷனிடம்தான் இருக்கும். யாருக்காவது அப்பளம், வடாம் அல்லது மிளகாய் வற்றல், ஊறுகாய் போன்றவை உலர்த்த வேண்டியிருந்தால் காலையில் சாவியைக் கேட்டு வாங்கி, மாலையில் பூட்டியபின் திருப்பித்தந்துவிட வேண்டும்.

“சமீப காலமாக யாரும் மொட்டை மாடியைப் பயன்படுத்தவில்லைபோல் தெரிகிறது. இன்று மாலை நான் தற்செயலாகப் போய்ப் பார்த்தபோது ஏராளமான பொருள்கள் இறைந்து கிடந்தன. மருந்து பாட்டில்களும் அட்டைப்பெட்டிகளும் பிஸ்கட் போன்றவையும் இருப்பதைப் பார்த்தால் குரங்குகள்தான் அவற்றைக் கொண்டுவந்து போட்டிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஆகவே, சிரமம் பார்க்காமல் எல்லாரும் ஒருமுறை என்னுடன் இப்போதே மொட்டைமாடிக்கு வந்து பார்த்துவிடுங்கள். முக்கியமான பொருள்கள் கிடைத்தாலும் கிடைக்கும்!” என்றார்  ஹரிகோபால்.   

அவர் சொன்னது உண்மைதான். ஏதோ ஒரு வெள்ளிக்கிழமை அணிந்துகொள்வதற்காக டைனிங் டேபிள் மீது வைத்ததாக யமுனா கருதிக்கொண்டிருந்த நெக்லஸ் அட்டைப்பெட்டி கொஞ்சம் சிதைந்த நிலையில் அங்கே இருந்தது!

ஆர்வத்துடன் அதை எடுத்தாள் யமுனா.

அட்டைப்பெட்டி மட்டும்தான் இருந்தது. உள்ளே நகையைக் காணோம்!

(தொடரும்) 

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

28 கருத்துகள்:

  1. குரங்கும் நெக்லஸ்வோடு விளையாட்டு... சுவாரஸ்யமும் கூடுகிறது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலேயே எங்கள் குடியிருப்பில் குரங்குகள் அடிக்கடி வந்து சமையல் அறையை துவம்சம் செய்கின்றன தான்!

      நீக்கு
  2. கதை ஜோரா களை கட்டுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மகா செல்லப்பா அவர்களே! திருச்சியில் எல்லாரும் நலமா?

      நீக்கு
    2. என்னதான் அடியேன் முறைத்துக் கொண்டாலும்...

      இப்படியா chellapa + blog + ? + என தேட வைப்பது...?

      ஹா... ஹா... கீழே புரியாத :-

      இப்படிக்கு மாணவன்
      தனபாலன்...

      நீக்கு
    3. தலைவரே, இப்படியெல்லாமா என்னை சோதிப்பது? எனது திருச்சி நண்பர் செல்லப்பாதான் என்று நினைத்துக்கொண்டேன்! அதிருக்கட்டும், நீங்கள் முறைத்துக் கொண்டீர்களா? அது உங்களால் முடியுமா? உங்களின் இயற்கையான மேன்மைப் பண்புகளை நீங்கள் இழப்பது எப்படி ஐயா சாத்தியமாகும்? எனிவே, தேன்க்ஸ்!

      நீக்கு
    4. கேட்பொலி கோப்பை தரவிறக்கம் செய்து விட்டேன்... அழகான பாடலுடன் இசை என்று சொல்ல மாட்டேன்... இன்னமும் மேம்படுத்திருக்க வேண்டும்...! ஹா.. ஹா..

      திருமிகு chellappa அவர்கள் அதை MediaFire மூலம் செய்யாமல், தனது (Blogger Gmail-ல்) https://sites.google.com/site மூலமே செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்...

      ஏனென்றால் MediaFire என்றாவது ஒருநாள் காணாமல் போகலாம்... ஆனால் நம் வலைப்பூ மற்றும் அதை சார்ந்த எதுவும், நாமே நீக்கினால் மட்டுமே உலகத்தில் இருந்து மறையும்... நன்றி...

      Google - கேட்பொலி இணைப்பு மேம்படுத்தி உள்ளது... அடியேனும் மேம்படுத்தி (18/10/2019) உள்ளேன்...

      இணைப்பு : https://dindiguldhanabalan.blogspot.com/2014/04/how-to-add-mp3-in-blogger.html

      நீக்கு
    5. எவ்வித சந்தேகமும் எழுந்தால் தொடர்பு கொள்க...

      விரிவாக : dindiguldhanabalan@yahoo.com

      சுருக்கமாக : 99 44 345 233

      நீக்கு
    6. நீங்கள் சொன்னதுபோல, நமது கூகுள் கேட்பொலியே அட்டகாசமாக உள்ளது. குறள்களையும் விளக்கத்தையும் இனிதே கேட்டு மகிழ்ந்தேன். பிற்பாடு ஐயம் எழுந்தால் நிச்சய்ம் தொடர்பு கொள்ளுவென். நன்றி.

      நீக்கு
  3. அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.
    அனுபவித்து எழுதுவது தெரிகிறது.

    ஒவ்வொரு தடவைக்கும் ஒன்று என்றால் இந்தத் தடவை குரங்குகளின் அட்டகாசம்.
    நெக்லஸின் அட்டைப் பெட்டி மட்டும் மொட்டை மாடியில் கிடப்பதாகச் சொல்ல வேண்டும்; அதற்காக குரங்குகளின் அட்டகாசம் என்று கொண்டு வந்து நறுவிசாக கதையை நகர்த்தியது உங்கள் சாமர்த்தியம்.

    ரயில் வண்டி வேகமெடுப்பது போலவான உணர்வு. டெஸ்டினேஷன் ஸ்டேஷன் வரப் போகிறதா, என்ன?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்டேஷன் அவ்வளவு சீக்கிரம் வந்துவிடுமா என்ன? பொறுங்கள் ப்ளீஸ்!

      நீக்கு
  4. செல்லப்பாவின் கதையை வாசித்து ரசிக்க சங்கீத ப்ரேமை கொண்ட இன்னொரு செல்லப்பா.

    வேடிக்கை தான். :))

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. ஆனால் இதற்குமேல் குரங்கிற்கு வேலையில்லை என்றுதான் நினைக்கிறேன். நிச்சயமில்லை!

      நீக்கு
  6. குரங்குகள் வரவால் எதிர்பாரா திருப்பம்.

    துளசித்ரன்

    பதிலளிநீக்கு
  7. கொஞ்ச காலமாகவே நமது குடியிருப்பில் குரங்குகளின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை என்பது உங்களுக்கே தெரியும். நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காகவும், அருகில் இருக்கும் மருத்துவமனைக்குப் புதிய ஹாஸ்டல் கட்டுவதற்காகவும் பல மரங்களை வெட்டிப்போட்டுவிட்டார்கள். அதனால் குரங்குகளின் வாழ்வாதாரம் சிதைந்துவிட்டதால், வேறு வழியின்றி அவை உணவுக்காக நமது குடியிருப்பிற்குள் குடும்பம் குடும்பமாகப் படையெடுத்து வருகின்றன. இதை எப்படிச் சமாளிப்பது என்று ஆலோசிக்கத்தான் நாம் கூடியிருக்கிறோம்!”//

    அதனுடைய இடத்தை நாம் ஆக்ரமித்துக் கொண்டு பின்னர் அது நம் வீட்டில் வந்து ஊணவு கேட்காமல் எங்கே போகும்?!!!!

    சென்னையில் எங்கள் வீட்டில் பால்கனியில் வந்துவிடும். நான் ஜன்னல் வழியாக அதற்குப் பழம் கொடுத்து கடலையும் போடுவேன். அடையாறில் இருந்த போது ஒரு செங்குரங்கு ஒன்று பழக்கமாகியது. அவர் கோபக்காரரும் கூட. ஹா ஹா வயதானவர். நம் இடத்தில் யாரேனும் புகுந்தால் நாம் சண்டை போட்டோ அல்லது போலீஸில் கம்ப்ளெயின்ட் கொடுப்பது போல இவர்களுக்கு யார் ஆதரவாளர்கள் காப்பாளர்கள்?!!!!

    பாவம் சார் இவை.

    எப்படியோ உங்கள் கதையை மொட்டைமாடிக்குக் கொண்டு போக உதவியிருக்காங்க பாருங்க!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், குரங்குகள் அன்று ஸ்ரீராமனுக்கு அணைகட்ட உதவினவாம். இன்றோ அவற்றுக்குச் சோறிட ஆளில்லை. அதே சமயம் சோறிடுபவர்கள்பால் அவை நன்றியோடும் இருப்பதில்லை என்பது கவலை தரும் விஷயம். பெங்களூரில் குரங்குகள் வருகின்றனவா? குறிப்பாக, 'அந்த'ப் பழைய செங்குரங்கு?

      நீக்கு
  8. இறுதி சொற்றொடர் அடுத்து படிக்கும் ஆவனை மிகுவிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சானண்டிலயனின் பாதிப்பாக இருக்குமோ என்று நினைக்கிறேன்!

      நீக்கு
  9. ஓஹோ...அப்படிப் போகுதா கதை...பேஷ் பேஷ்...நல்லாவே இருக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா! தாங்கள் இந்தியாவிலா, சிங்கப்பூரிலா, எங்கு இருக்கிறீர்கள்?

      நீக்கு
    2. தற்சமயம் பெங்களூரில்...

      நீக்கு
  10. பெயரில்லா25 மே, 2020 அன்று PM 3:18

    கொரொனா நேரத்தில் அசோசியேஷன் மீட்டிங் கா?

    S.PARASURAMAN ANNA NAGAR

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொரோனாவை விரட்டுவதற்குத்தான் மீட்டிங்காம்!

      நீக்கு
  11. மொய்க்கு மொய் என்னும் தொடர் பதிவுலகில் இருந்ததே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. பரவாயில்லை. லேட்டஸ்ட் பதிவில் விளக்கிவிடுங்கள். போதும்.

      நீக்கு