சனி, மார்ச் 02, 2013

எம பாரதி

கவிஞர்கள்  'கைமாத்து' கேட்பதில்லை. ஒரு தாளில் வள்ளல்களைப் புகழ்ந்து பாடி அதைச் 'சீட்டுக்கவி'யாக  அனுப்பி வைப்பது வழக்கம்.

சுப்ரமணிய பாரதி, தனது சமஸ்தானமான எட்டயபுரத்தின் அரசராக விளங்கிய திரு வெங்கடேச ரெட்டப்ப பூபதிக்கு இப்படி ஒரு சீட்டுக்கவி எழுதுகிறார்:

விண்ணள(வு) உயர்ந்த கீர்த்தி 
வெங்கடேசு ரெட்ட மன்னா!
பண்ணள(வு) உயர்ந்த(து) என் பண்!
பாவள(வு) உயர்ந்த(து) என் பா!

எண்ணள(வு) உயர்ந்த எண்ணில் 
இரும் புகழ்க் கவிஞர் வந்தால் 
அண்ணலே, பரிசு கோடி 
அளித்திட விரைகிலாயோ?

கோடி யல்ல, சில ஆயிரங்களேனும்  வந்ததா என்று தகவல் இல்லை. மீண்டும் ஒரு சீட்டுக்கவி, சற்று நீளமாகவே, அனுப்புகிறார் பாரதி. பூபதியைச் சற்றுத்  தூக்கலாகவே புகழ்கிறார்:

மன்னவனே! தமிழ்நாட்டில் தமிழறிந்த 
மன்னர் இ(ல்)லை என்று மாந்தர் 
இன்னலுறப் புகன்ற வசை நீ மகுடம் 
புனைந்த பொழு(து) இருந்ததன்றே!

சொ(ல்) நலமும் பொருள் நலமும் சுவை கண்டு 
சுவை கண்டு துய்த்துத் துய்த்துக் 
கன்னலிலே சுவை அறியும் குழந்தைகள் போல் 
தமிழ்ச் சுவை நீ களித்தாயன்றே!

தமிழ்நாட்டில் தமிழறிந்த மன்னர் நீ ஒருவனே அல்லவா என்கிறார். பாரதி சொன்னால் அது உண்மை தானே, வெறும் புகழ்ச்சியாக இருக்க முடியாதே!

அடுத்து, தன்னைப் பற்றித்  தனக்கிருந்த செம்மாப்பை  அடித்துச்  சொல்கிறார்:

புவியனைத்தும் போற்றிட, வான் புகழ் படைத்துத் 
தமிழ் மொழியைப் புகழில் ஏற்றும் 
கவியரசர் தமிழ்நாட்டுக்(கு) இல்லை எனும் 
வசை, என்னால் கழிந்ததன்றோ!

என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

தனது கவிதைகளை பிரான்சு தேசத்திலும், ஆங்கில நாட்டிலும் மொழிபெயர்த்துப் போற்றுகிறார்கள் என்பதையும் தெரிவிக்கிறார்.
தன கவிதையை அடுத்த நூற்றாண்டு என்னவென்று மதிப்பீடு செய்யப்போகிறதோ, அதை, அன்றே சுய மதிப்பீடு செய்து கூறுகிறார்:

"சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
சொல் புதிது, சோதி மிக்க
நவ கவிதை, எந்நாளும் அழியாத 
மகா கவிதை.."

அப்படிப்பட்ட கவிதையை 'நின் பால் கொணர்ந்தேன்', எனக்கு இதெல்லாம் பரிசாகக் கொடுப்பாயாக' என்று பட்டியல் இடுகிறார்:

ஜெயப் பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள் 
பொற்பைகள், ஜதி, பல்லக்கு,
வயப் பரிவாரங்கள் முதல் பரிசளித்துப் 
பல்லூழி வாழி, நீயே!

ஆனால் பொற்பைகள் அல்ல, ஒரு சில பொற் காசுகளேனும் வந்தனவா என்று தெரியவில்லை.

ஆங்கில அரசிடம் பிடிபடாதிருக்கும்படிக்குப் புதுச்சேரிக்கு  ஓடி மறைய வேண்டியதாகிறது.

மனிதர்களிடம் உதவி கேட்டு தோற்றுப்போன பாரதி, தனக்கு மிகவும் நெருக்கமான பராசக்தியிடம் நொந்துகொள்கிறார்:

நல்லதோர் வீணை செய்தே -அதை 
நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி, -என்னைச் 
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்!

வல்லமை தாராயோ, - இந்த 
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி,-நிலச் 
சுமை என வாழ்ந்திடப் புரிகுவையோ?

அவளுக்கு எத்தனையோ வேலைகள், ஆண்ட சராசரங்களையும் காக்க வேண்டியவள் ஆயிற்றே! ஒரு ஏழைக் கவிஞனைப் பற்றித்  தானா அவளுக்குக் கவலை?

பாரதிக்குக் கோபம் வருகிறது. பராசக்தியே, நீ என்னைக் கைவிட்டு விட்டால் மட்டும் நான் அழிந்து போவேன் என்று எண்ணுகிறாயா, நான் என்ன வேடிக்கை மனிதனா  என்று சவால் விடுகிறார். அதே நேரம், பசியும் பணமின்மையும் போற்றுவார் இன்மையும் தன்னை மரணத்தின் பிடிக்கே கொண்டு போய் விடுமோ என்னும் பயமும் அவரை ஆட்கொண்டிருக்க வேண்டும். ஆகவே தானோ என்னவோ, யமனுக்கு சவால் விடும் இந்தக் கவிதையை எழுதுகிறார்:

காலா , உன்னை நான் சிறு புல்  என 
மதிக்கிறேன்; என்றன் 
காலருகே வாடா ! உனைச் 
சற்றே மிதிக்கிறேன்!

பராசக்திக்குக் கேட்காத பாரதியின் விண்ணப்பம், காலனுக்கு மட்டும் எப்படியோ கேட்டு விடுகிறது.

'என்னையா மிதிக்கப் போகிறாய், திருவல்லிக்கேணிக்கு வராமலா போய் விடுவாய்' என்று காலன் யானையோடு காத்திருக்கிறான்.

'யாரைப் பிடிக்கவும் 
எருமையில் வருபவன்,
இவனைப் பிடிக்க 
யானையை அனுப்பினான்' 

என்று நான் கவிதை படித்த போது, தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நிறைய கைதட்டு எழுந்தது. பாரதி தான் எழுந்திருக்கவில்லை.

யமனிடம் சவால் விடாமல், பராசக்தியிடமே இன்னொரு தடவை முறையிட்டிருக்கலாமோ பாரதி?
************
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com

குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?

2 கருத்துகள்:

  1. கண்ணீர் வெள்ளம் பெருகுகிறது. நான் மட்டும் பாரதி வாழ்ந்த காலத்தில் அவனுடன் இருந்திருந்தால் .......

    பதிலளிநீக்கு
  2. கண்ணீர் வெள்ளம் பெருகுகிறது. நான் மட்டும் பாரதி வாழ்ந்த காலத்தில் அவனுடன் இருந்திருந்தால் .......

    பதிலளிநீக்கு