ஞாயிறு, ஜூன் 16, 2013

“ஒற்றை-குழந்தை-பெற்றோர்கள்” : அமெரிக்க ஆய்வு

பெற்றோர்களுக்கு ஒற்றைக் குழந்தையாக இருப்பதின் சாதக பாதகங்களைப் பற்றி லாரன் ஸேண்ட்லர் (Lauren Sandler) என்ற பெண்மணி  எழுதியுள்ள புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது. (“One and Only: The Freedom of Having an Only Child and the Joy of Being One”). இது பற்றிய அறிமுகம், நியூயார்க் டைம்ஸ் ஜூன் 9 ஞாயிறு இதழில் வெளியானது.
பிட்ஸ்பர்க் மியூசியத்தில் (கண்ணாடி) ஒற்றை மனிதன் நடனம் 

‘எது வரவேற்கத்தக்கது – ஒற்றைக் குழந்தையா, பன்மைக் குழந்தைகளா?’ என்ற தலைப்பில் அமெரிக்காவில் பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன. அவற்றின் சார்பாகவும், ஒரே ஒரு பெண்-குழந்தைக்குத் தாயாக இருக்கும் தன் சொந்த அனுபவத்தைச் சார்ந்தும் இவர் இக்கட்டுரையில் சில விஷயங்களைக் கூறுகிறார். அவையாவன:

1.  பொருளாதாரக் காரணங்களால் தான் பெரும்பாலும் பெற்றோர்கள் இரண்டாவது குழந்தையைத் தவிர்க்கின்றனர்.  (அமெரிக்காவில் மட்டும் செய்த ஆய்வு இது).

2.    ஒற்றைக் குழந்தையின் பெற்றோர்கள் தங்கள் முழு சக்தியையும், நேரத்தையும், பொருளையும் ஒரு குழந்தையிடமே செலவிடுவதால் அக்குழந்தை பல வகையிலும் பன்மைக்குழந்தைகளை விட ஆரோக்கியம், கல்வியறிவு, புத்திசாலித்தனம் இவற்றில்  சிறந்து விளங்குகிறது.

3.    அதே காரணத்தால் ஒற்றைக் குழந்தைகள் தம் பெற்றோரிடம் அதிக மனப்பூர்வமான ஒன்றிப்பு உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், பிற்காலத்தில் அதே காரணம் பற்றியே தங்கள் பெற்றொர் இறந்துபோனால் வாழ்க்கையில் வெறுமை அடைந்துவிடுவதாகத் தெரிகிறது. பன்மைக்குழந்தைகளில் இந்த வேதனை தெரியவில்லை. தனது மூத்த உடன்பிறப்பையே இனி பெற்றோர் வடிவத்தில் பார்ப்பதாக உணர்கிறார்கள்.

4.   ஒற்றைக்குழந்தைகள், அதிகமாகச் செல்லம்கொடுக்கப்படுவதால் மூர்க்கர்களாகவும் அகம்பாவிகளாகவும் வளர்கிறார்கள் என்ற கருத்து இருக்கிறது. ஆனால் ஆய்வுகளில் இது உறுதிப்படவில்லை.

“முதல் குழந்தை பெறுவது தனக்காக; அடுத்த குழந்தை பெறுவது, முதல் குழந்தையின் நலனுக்காக” என்று அமெரிக்காவில் சொல்வதுண்டாம்.  குழந்தையை வசதியாக வளர்க்கமுடியுமானால், இரண்டாவது குழந்தை ஏன் பெற வேண்டும் என்கிறார் இந்தப் பெண்மணி.
இந்தக்கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்கள் வருமாறு (ஜூன் 14, 2013)

(1) மர்லின் ஃபாண்ட்டா ஷையர் என்ற பெண்மணி “Here I am, an Only Child” என்ற குழந்தைகளுக்கான சித்திரப்புத்தகம் எழுதியவர். அவர் சொல்கிறார்:
பெற்றோர்களுக்கு ஒரே குழந்தையாக இருப்பதன் சங்கடம் பின்னால் தான் புரிகிறது. முதல் 18 வருடம் நாம் குழந்தையாக இருக்கிறோம். அடுத்த சுமார் 60 அல்லது 70 வருடங்களுக்கு, நாமும் பெற்றோரான பிறகு, நம்முடைய குழந்தைகளுக்கு அத்தையோ மாமனோ இல்லாமல் போவதன் வேதனை சொல்லி முடியாது. பழகி மகிழ நம்மவர்கள் என்று யாரும் இல்லை. ஒரு சிக்கல் வந்தால் யோசனை சொல்ல ஆளில்லை. வயதான பெற்றோர்களைப் பார்த்துக்கொள்வதற்கு மாற்று ஆள் இல்லை. சிறு வயதில் இணைபிரியாது உடன்பிறப்புகளுடன் விளையாடிய இனிய நினைவுகளே இல்லாமல்போனால் முதுமையில் எதைத்தான் அசைபோட்டுப் பார்ப்பது?

எனக்குத் தெரிந்து பல ஒற்றைக்குழந்தைப்பெற்றோர்கள், உடன்பிறப்புகள் இல்லாமல் தாங்கள் பட்ட பாட்டை உணர்ந்து, தங்கள் குழந்தைகளுக்கு இந்த நிலை வரவேண்டாமென்று முடிவு செய்து, ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்லமுடியும்.

(2) குவென் ராமக்னலி என்ற பெண்மணி எழுதுகிறார்:

பெற்றோர்கள் ஒரே குழந்தையுடன் நிறுத்திக்கொள்வதற்கு அவர்களின் சுயநலமே காரணம் என்று சொல்வதை நான் ஏற்க மாட்டேன். எனக்கு இருப்பது ஒரே மகன் தான். நல்ல முறையில் வளர்ந்திருக்கிறான். ஆனால் இது நான் முடிவு செய்தோ, சுயநலத்தினாலோ விளைந்தல்ல. எனக்கு ஒரு குழந்தைக்குமேல் இல்லை என்பதற்கு முக்கிய காரணம், என் திருமணம் முறிந்து போனதே. இல்லையென்றால் குறைந்தபட்சம் இன்னும் ஒரு குழந்தையாவது பெற்றுக்கொண்டிருப்பேன்.
ஒரு குழந்தையாகப் பிறந்தால் விரைவாக அறிவு முதிர்ச்சி ஏற்படும் என்பதையும் நான் மறுக்கிறேன். இரண்டே வயதான என் பேத்தியால் ‘மெஜந்த்தா’ வுக்கும் ‘பிங்க்’ கிற்கும் வித்தியாசம் காணமுடியும். அவளுக்கு உடன் பிறந்தவர்கள் உண்டு.

(3) ஆர்டன் கிரீன்ஸ்பேன் கோல்ட்பெர்க் என்ற பெண்மணி  “What Do You Expect? She’s a Teenager” என்ற நூலை எழுதியவர். திருமண மற்றும் குடும்பம் சார்ந்த உளவியலாளர். இவரது கருத்து வித்தியாசமானது:

நாங்கள் இருவராகப் பிறந்தவர்கள். என் தம்பி என்னை விட 18 மாதங்களே சிறியவன். இதனால் பல பிரச்சினைகள் எங்கள் பெற்றோர்களுக்கு ஏற்பட்டதுண்டு. இதனால் நானும் என் கணவரும் ஒரு முடிவு செய்தோம். அதன் பலன், இன்று என் மகனுக்கு வயது 30, மகளுக்கு வயது 23. இந்த வயது வித்தியாசத்தினால் என்னை எப்போதுமே  ‘ஒற்றைக்குழந்தை-பெற்றோரா’கவே உணர்கிறேன்.
நான், கணவர் இருவருமே வேலைக்குப் போகிறவர்கள் என்பதால், எனது நேரமோ அவரது நேரமோ வீணாகாதபடிக்கு (இவர்கள் 7 வருட இடைவெளியில் பிறந்ததால்)  இருவருமே அன்பும், இரக்கமும், சுறுசுறுப்புமுள்ள சகோதரர்களாக வளர்ந்திருக்கிறார்கள்.  சுருக்கமாகச் சொன்னால், குழந்தைகள் நம்மைப் பார்த்து தான் கற்றுக்கொள்கிறார்கள். நாம் செய்யவேண்டியதெல்லாம் அவர்களுக்கு அன்பான, ஆரோக்கியமான, எல்லையில்லாத புரிதலுள்ள சூழ்நிலையை அமைத்துக் கொடுப்பது தான்.
****

4 கருத்துகள்:

  1. உறவுகள் எல்லாம் குறைந்து மறைந்து வரும் நிலையில்...

    ஒன்று என்றால் நமக்கு கஷ்டம்...! இரண்டு என்றால் (நம்மால்) குழந்தைகளுக்கு கஷ்டம்...!!

    பதிலளிநீக்கு
  2. ஒரு குழந்தை என்பது பொருளாதார நிலை சார்ந்தே எடுக்கப் படும் முடிவாகத்தான் தெரிவிகின்றது அய்யா. அம் முடிவு பெற்றோர்களுக்கு வேண்டுமானால் வசதியாக இருக்கலாம். ஆனால் அக் குழந்தைக்கு..

    பதிலளிநீக்கு
  3. என்னதான் காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஒற்றைக்குழந்தை நிலை ஆரம்ப நிலையைவிட வளர்ந்த நிலையில் சாதகங்களைவிட அதிக பாதகங்களையே தர வாய்ப்புள்ளது.

    பதிலளிநீக்கு