சனி, பிப்ரவரி 11, 2017

அஷ்டமி நவமி கௌதமி

 பதிவு எண் 10/2017
அஷ்டமி நவமி கௌதமி
-இராய செல்லப்பா

எப்போது சினிமாத்துறையின் செல்வாக்கு தமிழக அரசியலில் படியத் தொடங்கியதோ, அப்போதுமுதலே தமிழகத்தின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

தனிக்கட்சி ஆரம்பிப்பதற்கு  சமயம் பார்த்துக்கொண்டிருந்த சி என் அண்ணாதுரை (பின்னாளில் அறிஞர் அண்ணா), பெரியார் ஈ வெ ரா அவர்களின் பொருந்தாத் திருமணத்தைச் சாக்காக வைத்து ஒரு மழைநாளில் வெளியேறி திமுக என்ற அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார். அக்காலத்தில் காங்கிரஸ் கட்சியும்  கம்யூனிஸ்ட்டு கட்சியும்தான் தமிழ்நாட்டின்  பலமான அரசியல் கட்சிகளாக இருந்தன. அவற்றோடு போட்டியிட்டு மக்களைத் தம்வசம் ஈர்க்க சினிமாவை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டார் அறிஞர் அண்ணா. அவரோடு மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், கேஆர் ராமசாமி, சிவாஜி கணேசன் போன்றவர்களும் இந்த அரசியல்-சினிமா பிணைப்பை வலுப்படுத்தும் சங்கிலிகளாக விளங்கினார்கள். பின்னாளில் சிவாஜி கணேசன் காங்கிரசுக்குப் போனதும், அந்த இடத்தை எம்ஜி ராமச்சந்திரன் பிடித்துக்கொண்டதும் தெரிந்த வரலாறே.
 
படம்: இணையத்தில் இருந்து 
ஆனால் அதுமட்டுமே அறிஞர் அண்ணாவின்  வெற்றிக்குக் காரணமல்ல. இரா நெடுஞ்செழியன், சி.பி.சிற்றரசு, மதியழகன், நாஞ்சில் மனோகரன்,  ஏவிபி ஆசைத்தம்பி, என்வி நடராசன், (இன்னும் எவ்வளவோ பேர்கள் – பெயர் மறந்துவிட்டது) -முதலிய தகுதியுள்ள அரசியல்வாதிகளைத் தன்னுடைய இரண்டாம் கட்டத் தலைவர்களாக உருவாக்கி வழிநடத்தியது இன்னுமொரு தலையாய  காரணமாகும்.

அதே மரபைப் பின்பற்றித்தான், எழுபதுகளில் எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்தபோது தன்னுடைய சினிமா பிம்பத்தை மட்டுமே நம்பிவிடாமல், திமுகவில் இருந்த மூத்த அரசியல்வாதிகளை ஒருவர் பின் ஒருவராகத் தன்னுடன் இழுத்துக்கொண்டார். அதன் காரணமாகவே அரசியலில் பழம்தின்று கொட்டை போட்டவராகக் கருதப்பட்ட கலைஞர் கருணாநிதியையே அவரால் வீழ்த்தமுடிந்தது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் எம்ஜிஆரைப் பின்பற்றி எந்த நடிகரும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றால் அதற்கான காரணம் இதுதான். கர்நாடகத்தில் அப்போது பலம்பெற்றிருந்த, எம்ஜிஆரை விடவும் அதிக மக்கள் தொடர்புள்ள, பழகுவதற்கு இன்னும் எளிமையான, அதிக வெற்றிப்படங்களைத்தந்த ராஜ்குமார் கூட அரசியலுக்கு வர சில முயற்சிகளை மேற்கொண்டபோது அவை தோற்றுப்போயின. ஆந்திரத்தில் என்.டி.ராமராவ் முதல்முறை ஒன்றரை ஆண்டும் அடுத்தமுறை ஐந்தாண்டும்  மட்டுமே ஆட்சியமைப்பில்  வெற்றிபெற முடிந்தது. அடுத்தமுறை ஆட்சியைத் தன் சொந்த மருமகனிடமே பறிகொடுக்க வேண்டியாதாயிற்று.வெற்று சினிமா பிம்பம் மட்டுமே அரசியலில் வெற்றியைத் தந்துவிடாது என்ற உண்மை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அதே சமயம், மக்கள் தொடர்புக்கு மிக முக்கியமான, தவிர்க்கமுடியாத,  காரணியாக அமைந்துவிட்ட சினிமாத்துறையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத  காரணத்தால் தமது அரசியல் வாழ்க்கையை  இழந்த தலைவர்கள் தமிழ்நாட்டில் உண்டு. காமராஜரின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், அவர் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், சிவாஜிகணேசன், கண்ணதாசன் போன்ற சினிமாக் கலைஞர்களை உரியமுறையில் பயன்படுத்தாமல் அவர்களுக்குரிய அங்கீகாரத்தை வழங்காமல் போனதுதான் என்பதை நாம் நன்கறிவோம். அரசியலும் சினிமாத்துறையும் ஒன்றுக்கொன்று இட்டு நிரப்புபவர்களாக இருந்தால் மட்டுமே தமிழக அரசியலில் அது வெற்றியைத் தந்திருக்கிறது.  

இன்று தமிழக அரசியலில் நேர்ந்துள்ள வெற்றிடத்திற்கு முழுப் பொறுப்பும் தன்னை மட்டுமே முன்னிறுத்தி, வேறு எவரையும் இரண்டாம் கட்டத் தலைவர்களாக அங்கீகரிக்க மறுத்த ஜெயலலிதாவின் அகம்பாவத்தையே சாரும். இன்று அமைச்சராக இருப்பவர் நாளை வீதியில் தூக்கி எறியப்படுவார் என்ற நிலையில் எந்த அமைச்சரும் மாவட்டச் செயலாளரும் தன்முனைப்போடு அரசியல் செய்ய முன்வராததில் ஆச்ச்சரியம் என்ன? கட்சி என்பது படிப்படியாகக் குடும்பச் சொத்தாக ஆகியதில் வியப்பென்ன?

ஆனால் அரசியலைக் குடும்பச்  சொத்தாக்குவதற்கான  வழிகாட்டும் நெறிமுறைகளை வகுத்தளித்த பெருமையைக் கலைஞர் கருணாநிதி அவர்களிடமிருந்து எவராலும் பறித்துவிடமுடியாது. சர்க்காரியா கமிஷனில் ஆரம்பித்து கனிமொழி-மாறன் சகோதாரர்கள்  என்று அது தொடர்ந்து வருகிறது. காந்திஜி, நேருஜி, ராஜாஜி-க்குப் பிறகு 2-ஜி என்பதுதானே தமிழநாட்டில் புகழ்பெற்ற ஜி?

ஆனால் ஒரே வித்தியாசம்: ஜெயலலிதாவிற்குக் குடும்பம் இல்லை. ஆகவே, அவர்மூலம் வந்தவை எல்லாம் அவருக்குக் காவலாக இருந்த இன்னொரு குடும்பத்திற்குப் போய்விட்டன என்கிறார்கள். கலைஞரின் அரசியலுக்கு அவர் குடும்ப வாரிசுகள் இருப்பதுபோல், ஜெயலலிதாவின் அரசியலுக்கு அவரது நிழலாக இருந்தவர்கள் சொந்தம் கொண்டாடுவதில் வியப்பென்ன?

அப்படி அதிரடியான நியாயத்தை ஓரளவு ஒப்புக்கொண்டாலும், கலைஞரின் அரசியல்ஞானத்தைப் பாராட்டியே ஆகவேண்டும். மகனை அரசியல் வாரிசாக அறிவித்தாலும், அவருக்கு உரிய அரசியல் அனுபவத்தைப் படிப்படியாக வழங்கி, தனக்குப் பின் கட்சியை ஏற்று நடத்துவதற்கான தலைமைப் பண்புகளை வளர்த்துவிட்டவர் கலைஞர். ஆனால் அத்தகைய பயிற்சிவகுப்புகள் எதையும் தன் தோழிக்கு எடுத்தாரா ஜெயலிதா என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. அதுதான் இன்றைய குழப்பங்களுக்கெல்லாம் காரணம்.

பன்னீர்செல்வமா, சசிகலாவா என்பதல்ல தமிழ்நாட்டின் பிரச்சினை. அரசியலைப் புரிந்துகொண்டு, மக்கள் நலனுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற தத்துவத்தை யாரால் செயல்படுத்தமுடியும் என்பதே கேள்வி. அடிவாங்கிய குழந்தை என்பதால் பன்னீருக்கு  இப்போதுஅனுதாபம் கிடைக்கலாம். ஆனால் தொடர்ந்து தைரியமாக இயங்கவல்ல  பிடிவாதம் அந்தக் குழந்தைக்கு இருக்கிறதா என்பது கவனிக்கப்பட வேண்டியது.  

பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகப் பல நடிகர்கள் நடிகைகள் களம் இறங்கி யிருக்கிறார்கள். அவர்களில் முதலாவதாகக் களம் இறங்கியவர், நடிகை கௌதமி. நன்கு படித்தவர். நல்ல திறமையான நடிகை. மார்பகப் புற்றுநோயில் இருந்து கவனத்தோடு மீண்டவர். தெளிவாகச் சிந்திக்கின்றவர். பன்னீர்செல்வம் இவரை உரியமுறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஒருகாலத்தில் நாஞ்சில் சம்பத்திற்கு இன்னோவா கொடுத்து கட்சிப் பிரச்சாரம் செய்வித்ததை விட,  கருணாஸை எம்எல்ஏ ஆக்கியதைவிட, மக்களின் மரியாதைக்குரிய கௌதமி போன்றவர்களை இப்போது உடனடியாகத் தமது அணியில்  இணைத்துக் கொள்வது தமிழக அரசியலுக்கு மிகவும் நல்லதென்றே தோன்றுகிறது. அந்தவகையில் தமிழரான ஹேமமாலினிக்கு எம்பி பதவி கொடுத்து, கட்சியின் உயர்மட்டத்தில் வைத்திருக்கும் பாஜக -வின் உதாரணம் கவனிக்கத்தக்கது.
 
படம்: இணையத்தில் கிடைத்தது
சினிமாக்காரர்களை வெறும் கவர்ச்சியாளர்களாக மட்டுமே பார்க்காமல் அவர்களிடமிருக்கும் மக்கள்-ஈர்ப்பு சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.  சிவாஜி கணேசனையும் கண்ணதாசனையும் அங்கீகரிக்காமல் காங்கிரசை தமிழ்நாட்டில் செல்லாத காசாக்கியவர் காமராசர். சினிமா மட்டுமே போதும், தன் கட்சியில் அரசியல்வாதிகள் வேறு யாரும் பலம் பெற்றுவிடக் கூடாது  என்று அதிமுகவை இக்கட்டில் கொண்டுபோய் நிறுத்தியவர், ஜெயலலிதா.  

இருவரிடமிருந்தும் பாடம் கற்பவரே தமிழ்நாட்டிற்குச் சரியான தலைமையை வழங்கமுடியும் என்று தோன்றுகிறது.

புதன், பிப்ரவரி 08, 2017

நண்பர்கள் வேறு தோழர்கள் வேறு

 பதிவு எண் 09/2017
நண்பர்கள் வேறு தோழர்கள் வேறு

-இராய செல்லப்பா

காலை மணி எட்டேகால். இப்போது கிளம்பினால்தான் கல்லூரிக்கு ஒன்பது மணிக்குள் செல்லமுடியும்.  வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.

வண்டி என்றால் ஏதோ டொயோட்டா, பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ என்று எண்ணிவிடாதீர்கள். அந்தக் காலத்தில் நாட்டில் இருந்ததே அம்பாசடர், பியட் இரண்டுதான். இரண்டும் என்னிடம் இல்லை.

ராயல் என்பீல்ட் மோட்டார் சைக்கிள் அப்போதெல்லாம் பிரபலம். மைசூரிலிருந்து வரும் ‘ஜாவா’வும் பிரபலம்தான். அந்த இரண்டும் கூட என்னிடம் இல்லை. ஸ்கூட்டர் ? அப்போதுதான் ஒன்றிரண்டு ஸ்கூட்டர்களை பூனாவில்    தயாரித்து வந்ததாகக்  கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கள் ஊரில் ஒருவரிடமும்  இல்லாத ஒன்று என்னிடம் மட்டும் எப்படி இருக்கும்?

ஆகவே, என்னுடைய ‘வண்டி’ என்பது நூற்று எண்பது ரூபாய்க்கு வாங்கி, இருபது ரூபாய் மேற்கொண்டு செலவு செய்து, ஓடக்கூடிய நிலையில் சர்வ அலங்காரங்களும் பொருந்தியதாகச் செய்யப்பட ஒரு செகண்ட் ஹேண்ட் கூட இல்லை, தேர்ட் அல்லது போர்த் ஹேண்ட் ‘ஹெர்குலிஸ்’ சைக்கிள்தான்!

இராணிப்பேட்டையில் இருந்து மேல்விஷாரம் வரையான ஏழு அல்லது எட்டு மைல் தொலைவை அது தன்னுடைய வேகத்தில் கடந்துசெல்லும்படியான சுதந்திரத்தை அதற்கு வழங்கியிருந்தேன். இல்லையெனில் அது திடீர் முடிவெடுத்து வழியிலேயே நின்றுவிடும். அநேகமாக ‘செயின்’ சிக்கிக்கொண்டுவிடும். டயர் பஞ்ச்சராகிவிடும். அல்லது தேய்ந்துபோயிருந்த ‘பிரேக்’ கட்டை தவறி விழுந்துவிட்டதால், நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்கும்.  சாலை ஓரப் புளியமரமாகப் பார்த்து நிறுத்தியாகவேண்டும். ஆனால் முற்பிறவியில் (அதுவோ, நானோ) செய்த புண்ணியத்தின் பயனாக  முதல் வகுப்பு ஆரம்பிக்கும் முன்னால் என்னைக் கல்லூரிக்குள் கொண்டுபோய்விடும் வல்லமை அதற்கிருந்தது.

இன்னபல சிறப்பம்சங்கள் கொண்ட என்னுடைய சைக்கிளைத் தான் ஸ்டார்ட் செய்தேன் அப்போது. அந்த நேரம் பார்த்துத்தானா “தம்பி, நில்லுங்க, நில்லுங்க” என்றபடி தோழர் ரேணு  அங்கு வரவேண்டும்?

தோழர் ரேணு, எனது அரசியல் நண்பர்.

ஈவெகி சம்பத் தனது தமிழ் தேசீயக் கட்சியை காங்கிரசோடு இணைத்திருந்த நேரம். அவரோடு கவிஞர் கண்ணதாசன் அப்போதுதான் காங்கிரசில் சேர்ந்திருந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனும் அவரோடு இணைந்து செயல்பட்ட நேரம் அது. இளைஞர்களைக் கொண்டு ‘வெண்புறா மன்றம்’ என்ற அமைப்பை எல்லா ஊர்களிலும் ஆரம்பித்து காங்கிரசுக்கு ஆதரவான சமூகநலப் பணிகளைச் செய்வது கவிஞரின்  உத்தேசம். 

அதன்படி இராணிப்பேட்டையில் நானும், எல்.ஐ.சி  ஊழியரான கஜராஜ் மற்றும் ஈஐடி பாரி கம்பெனியைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து எவரெஸ்ட் தியேட்டர் எதிரில் இருந்த ஒரு மாடி அறையில் வெண்புறா மன்றத்தின்  இராணிப்பேட்டை கிளையைத் தொடங்கினோம். சென்னை சென்று கவிஞரைச் சந்தித்து, பொதுக்கூட்டம் நடத்துவதற்குத் தேதி வாங்கிவந்தோம். அக்கூட்டத்திற்கான அனைத்து கட்டமைப்பு வேலைகளையும் முன்னின்று நடத்தியவர் தோழர் ரேணுதான்.

அவருக்கு வயது முப்பதிலிருந்து முப்பந்தைந்து இருக்கலாம். சற்றே உயரமானவர். அல்லது மெலிந்திருந்த அவரது உடல்வாகு அவரை அப்படிக் காட்டியிருக்கலாம். இராணிப்பேட்டையில் பெரும்பாலான வறுமைக்கோட்டுக்குக் கீழிருந்த மக்கள் செய்துவந்த தொழிலையே அவரும் செய்துவந்தார். அதாவது, பீடி சுருட்டுவது. மகாராஜா பீடி பாக்டரியிலிருந்து ஒவ்வொரு மாலையும் பீடி இலைகளும் ஒட்டுவதற்கான லேபிள்களும் வாங்கிவருவார். மறுநாள் அழகாகச் சுருட்டப்பட்ட பீடிகளாக, ‘மகாராஜா பீடி’ என்ற லேபில்கள் ஒட்டப்பட்டு, முப்பத்திரண்டு பீடிகள் கொண்ட கட்டுக்களாக அவை பாக்டரிக்குத் திரும்பியாகவேண்டும். உடனே கூலி கொடுத்து விடுவார்கள். வீட்டில் இருந்த எல்லாரும் சேர்ந்துசெய்யும் சுயதொழில் அது.
மன்றம் விஷயமாகத் தோழர் ரேணு வைச் சந்திக்க அவரது குடியிருப்பிற்கு ஓரிருமுறைகள் போயிருக்கிறேன். தரையெல்லாம் பீடி இலைகள் உதிர்ந்திருக்க, ஒரு முறத்தில் சுருட்டி முடிக்கப்பட்ட பீடிகள் இறைந்திருக்க, ஒட்டும் பசையானது  விரல்களில் பாதி உலர்ந்தும் உலராமலும் வழிந்துகொண்டிருக்க,  சற்றே அவிழும்  நிலையில்  இருந்த  லுங்கியை இறுகப் பற்றிக்கொண்டு, வாயெல்லாம் பல்லாக, “வாங்க தம்பி வாங்க” என்று அவசரமாக எழுந்துவரும் தோழர் ரேணுவை அப்போதெல்லாம் சந்தித்திருக்கிறேன்.

காங்கிரஸ் கூட்டங்களில் தவறாது முன்னிற்பார். மற்றபடி, அரசியல் அல்லாத பொதுக்காரியங்களுக்கு யாருக்கு வேண்டுமானாலும் உடன்வந்து நிதி திரட்டித் தருவார்.  கையில் அவரே உண்டியலை ஏந்திக் கொள்வார். “கூச்சப்படாம வாங்க” என்று தைரியம் கொடுப்பார். நிதி என்றால் நூறு, ஆயிரம் என்று எண்ணவேண்டாம்.  அதிக பட்சமாக ஒரு ரூபாய் நோட்டுக்கள் சில  மட்டுமே அந்த உண்டியலில் விழும். மற்றதெல்லாம் நாலணா எட்டணா நாணயங்கள் தாம். (அன்று ரூபாய்க்கு நான்கு கிலோ அரிசி கிடைக்குமே!)

அப்படிப்பட்ட தோழர் ரேணு  என்னைத் தேடிக்கொண்டு வந்தது ஆச்சரியமாக இருந்தது. அதேசமயம் அவரை உட்காரவைத்துப் பேசும் அளவுக்கு எனக்கு நேரம் இல்லையே என்று ஆதங்கமாகவும் இருந்தது.

ஸ்டார்ட் செய்த வண்டியை நிறுத்தி, “வாங்க தோழரே, என்ன விஷயம்? “ என்றேன். “கல்லூரிக்கு நேரமாகிவிட்டது..” என்று இழுத்தேன்.

அவருக்கு முகம் சுண்டினாற்போல் தோன்றியது. “சரிங்க, அப்படின்னா சாயந்திரம் மன்றத்துக்கு வரும்போது பேசலாம்” என்றார்.

யாரிடமும் தனிப்பட்ட உதவி கேட்டு அவர் போவதில்லை என்று நண்பர்கள் கூறியதுண்டு. ஆனால் இன்றைக்கு  ஏதோ உதவி கேட்டுத்தான் வந்திருப்பதாக என் உள்ளுணர்வு சொல்லியது.

அவருக்கு நெருக்கமாகச் சென்றேன். “பரவாயில்லை சொல்லுங்கள்” என்றேன்.

சொல்லலாமா கூடாதா என்று தயக்கத்துடன் கொஞ்சநேரம் அவர் போராடியிருக்கவேண்டும். பிறகு சொன்னார்: “ராஜசேகர் சாரைப் பார்த்தேன். அவர்தான் உங்களைப் பார்க்கச் சொன்னார்..” என்று அடங்கிய குரலில் கூறினார். “நேற்று பாக்டரியில் ஒரு விபத்தாம். அதனால் இன்றும் நாளையும் பீடி இலைகள் சப்ளை இல்லை. இரண்டுநாள்  தொழில் இல்லை. ஒரு இருபது ரூபாய் கொடுத்தால் நல்லது.  போய்த்தான் அரிசி வாங்கவேண்டும்” என்றார்.
படத்திற்கும் பதிவிற்கும் சம்பந்தமில்லை!
சென்னை வலையுலக  நண்பர்கள் (2௦13)
ஓ, ராஜசேகர் சொன்னாரா? ஒருவாரம் முன்புதான் எனக்கு லோன் ஸ்காலர்ஷிப் வந்ததும், அந்தப் பணத்தில் உடனடியாக நூறு ரூபாய் என்னிடம் அவர் கடனாகப் பெற்றதும், என் தகப்பனாரிடம் அதைச் சொல்லமுடியாமல் சொல்லி நான் திட்டு வாங்கியதும் நினைவுக்கு வந்தது. இப்போது மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்ய ஆரம்பித்திருக்கிறாரோ?

ஆனாலும், தோழர் ரேணு மிகவும் நல்லவர். அவருக்கு எப்படியாவது உதவி செய்யத்தான் வேண்டும் என்று தோன்றியது. அரிசி வாங்கவும் காசில்லாமல் குடும்பத்தலைவர் படும் சங்கடத்தை என் தகப்பனார் பலமுறை அனுபவித்திருக்கிறார். சுயமரியாதைக்கு சவால் விடும் சங்கடம் அது. உடுக்கை இழந்தவன் கை போல யாராவது உதவமாட்டார்களா என்று ஏங்கிநிற்கும் தருணம் அது.

நல்லவேளையாக, வீட்டுச் செலவுகள் போக, ஸ்காலர்ஷிப் பணத்தில் மீதியான தொகை   இருபத்திரண்டு ரூபாய் என்னிடம் அப்போது இருந்தது. அதில் இரண்டு ரூபாயை மட்டும் அவசரச் செலவுக்காக வைத்துக்கொண்டு, இருபதை அவரிடம் கொடுத்தேன். அவருக்கு அளவற்ற மகிழ்ச்சி.

“நீங்க கல்லூரி மாணவர். ஒங்க கிட்ட கடன் கேக்கறது சங்கடமா இருக்கு. ஆனா வேறே வழியில்லே. மத்தவங்க யாருமே இல்லேன்னுட்டாங்க. இன்னைக்கி ஒங்களால எங்க வீட்டுல அடுப்பெரியப் போகுது. அந்தப் புண்ணியம் ஒங்களுக்குத் தான்... இன்னும் ஒரு மாசத்துக்குள்ள திருப்பிடுவேன்.  வரட்டுமா?” என்று என் கையைப் பிடித்து அழுத்தமாகக் குலுக்கிவிட்டுக் கிளம்பினார் தோழர் ரேணு.
****
இது நடந்து இரண்டு வருடங்களாகி விட்டன. இந்த இடைவெளியில் வெண்புறா மன்றத்தின் சார்பில் நான்கு கூட்டங்கள் நடத்திவிட்டோம். கவிஞர் கண்ணதாசனே ஒருமுறை வந்தார்.  குமரி அனந்தன்  ஒருமுறை. சின்ன அண்ணாமலை ஒருமுறை. நாத்திகம் ராமசாமி ஒருமுறை. எல்லாவற்றிலும் தோழர் ரேணுவுக்குப் பங்கிருந்தது.

கூட்டம் நடக்கும் இடத்தை நகரசபை ஊழியர்களைக்கொண்டு சுத்தப்படுத்துவது முதற்கொண்டு, தென்னக்கீற்றுகளை வாங்கிவந்து மேடைக்கு மேல்கூரை அமைப்பது உட்பட, மைக் செட் கட்டுவதுவரை அவரது மேற்பார்வையில் தான். எதற்கும் காசு வாங்கமாட்டார். ஒன்றிரண்டு முறை தேநீர் கேட்பார். எப்போதாவது இரண்டு ‘பொறை’யும் சாப்பிட்டதுண்டு. காலை முதல் இரவுவரை அவரது உணவுப்பழக்கம் இவ்வளவே.

அது மட்டுமல்ல, கூட்டத்தில் பேசுவதற்கான முதன்மை பேச்சாளர் வரத் தாமதமானால், ஓடிப்போய் மைக்கைப் பிடித்துக்கொண்டு, “நமதருமை தோழர்.. பெருந்தலைவரின் தொண்டர்.....இதோ வருகிறார், வருகிறார், வந்துகொண்டே இருக்கிறார்... காவேரிப்பாக்கத்தைக் கடந்துவிட்டார்...வழியெல்லாம் மக்கள் கூட்டம்... இதோ வாலாஜாப் பேட்டையை நெருங்கிவிட்டார்..” என்று உச்சபட்சக் குரலில் மீண்டும் மீண்டும் அறிவிப்புகள் செய்வதும் அவரது அரசியல் தொண்டின் ஒரு பகுதி.

அப்போதெல்லாம் ரகசியமாக என் காதில்வந்து சொல்வார்: “தம்பி கொஞ்சம் பொறுத்துக்குங்க, அடுத்த மாசம் கொடுத்திடறேன்” என்று.   சைகையால் ‘பரவாயில்லை’ என்று சொல்லுவேன். அவ்வளவே. அவரது கஷ்டம் எனக்குத் தெரியாதா?
****

சரியாக மூன்று வருடங்கள் முடிந்துவிட்டன. எனது பட்டப் படிப்பு முடிந்து திருவண்ணாமலை அருகில் ஒரு பள்ளியில் பயிற்சிபெறாத கணித ஆசிரியராக வேலை கிடைத்து, நான் கிளம்பிக்கொண்டிருந்த நேரம். ஒரு நாள் மாலை ஏழுமணி இருக்கும். தோழர் ரேணு அவசரமாக ஓடிவந்தார்.

என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு “ரொம்ப சந்தோசம் தம்பி! ஒங்களுக்கு வேலை கிடைச்சுட்டதாமே! சொல்லவே இல்லையே!” என்றார்.

“சொல்ல முயன்றேன்; ஆனால்  ஒருவாரமாக உங்களை எங்கேயும் பார்க்கமுடியவில்லையே” என்றேன்.

அவர் வெளியூர் போயிருந்தாராம். 

சட்டைப்பையில் கைவிட்டு நான்கு ஐந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து என்னிடம் கொடுத்தார். “ரொம்ப மன்னிக்கவேண்டும் தம்பி. ஒரு மாசத்துல தரேன்னு சொல்லி வாங்கினேன். மூணு வருஷம் ஆயிட்டுது. ஒரு செலவு போனா ஒரு செலவு வந்துடுது. அதாங்க இவ்ளோ லேட்டாயிட்டுது..” என்று வருத்தமான குரலில் சொன்னார்.

இருபது ரூபாய் என்பது அன்றைக்கு மிகப் பெரிய தொகை. அதை வேண்டாம் என்று மறுக்கும் நிலையில் என் பொருளாதாரம் இல்லை. எனவே பெற்றுக்கொண்டேன். “ஒங்கள என்னிக்கும் மறக்கமாட்டேன் தோழரே! வெண்புறா மன்றத்தோட வெற்றிக்கே நீங்கதான் காரணம் “ என்று பாராட்டினேன். “அடுத்த கூட்டத்திற்கு தபால் போடுங்கள்” என்று முகவரியைக் கொடுத்தேன்.

“ஊருக்கு வரும்போது எங்கூட மறக்காம டீ சாப்பிடணும்” என்று அன்போடு கேட்டுக்கொண்டு விடை பெற்றார்,  தோழர் ரேணு.
****

அதிகாலையில் பஸ் நிலையத்தை நோக்கிச் செல்லும்போது நண்பர் ராஜசேகரின் வீட்டைக் கடந்துதான்  செல்லவேண்டி இருந்தது. 

திறந்த சன்னல் வழியே வெளிச்சம் தெரிந்தது. தூங்கி விழித்த முகத்தோடு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார் ராஜசேகர். “குட் மார்னிங்” என்றேன். சன்னலையும் மீறி வாடை அடித்தது அவரது முண்டா பனியன். 

“அடடே, இவ்ளோ சீக்கிரமா போறீங்களே, மன்னிக்கணும், எங்க போறீங்கன்னு கேட்கக் கூடாது இல்லீங்களா?..” என்றவர், என் கையில் இருந்த பெரிய பெட்டியையும் பைகளையும் பார்த்தவுடன், “..இப்ப புரிஞ்சிட்டது! வேலை ல சேரப்போறீங்க, அதானே? ஆல் தி பெஸ்ட்!” என்றார். "வீட்டுல எல்லாரும் சௌக்கியங்களா?" என்றார்.

மூன்று வருடங்களுக்கு முன் வாங்கிய நூறு ரூபாயைத் திருப்பிக் கொடுப்பது பற்றி மூச்சு விடுவாரோ என்று பார்த்தேன்.  ஒருவேளை கதவைத் திறந்து, “வாங்க காப்பி சாப்பிடலாம்” என்று கூப்பிடுவாரோ என்று எதிர்பார்த்தேன். ஒரு நப்பாசையில் சற்றே நின்றேன்.

நண்பரோ ஜன்னல் கம்பிகளின் வழியே என் முகத்தை நெருங்கியவராக, “ஒங்களுக்குக் கூட ஏதோ நான் பாக்கி வச்சிருக்கேன் இல்ல? எவ்ளோன்னு   ஞாபகம் வரல்லே. டயரியைப் பாத்தா தெரியும். எப்படியும் அடுத்த தீபாவளி போனஸ்ல கொடுக்க முடியுமான்னு யோசிச்சிட்டிருக்கேன். எங்க முடியுது, போங்க! கல்யாணம் ஆனாத்தான் இந்தக் கஷ்டம் எல்லாம் ஒங்களுக்கும் தெரியும் தம்பி!  அதனால தான் சொல்றேன், சீக்கிரமா கல்யாணம், கில்யாணம்னு  பண்ணித் தொலைச்சுடாதீங்க, மீளவே முடியாது! அது சரி, ஒங்களுக்கு எத்தனை மணிக்கு பஸ்?” என்றார்.

அருவருப்புடன் அவர் முகத்தை நோக்கினேன். “ஆறு  மணிக்கு. அதாவது இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

பஸ்ஸில் அமர்ந்தேன். டிக்கெட் வாங்குவதற்குச் சட்டைப்பையைத் தொட்டபோது, தோழர் ரேணு கொடுத்த இருபது ரூபாய்கள் முள்ளாய்க் குத்தின.
***** 
email: chellappay@gmail.com 

வெள்ளி, பிப்ரவரி 03, 2017

சுபாவதாரம் -4 (நிறைவுப் பகுதி)

பதிவு 8/2௦17
சுபாவதாரம் -(நிறைவுப் பகுதி)

சற்றே நீண்ட சிறுகதை

- இராய. செல்லப்பா

சுபாவதாரம்- 1 படிக்க இங்கு சொடுக்கவும் 
சுபாவதாரம்-2 படிக்க இங்கு சொடுக்கவும் 
சுபாவதாரம்-3 படிக்க இங்கு சொடுக்கவும்

பெற்றோர்களை இளம் வயதிலேயே இழந்துவிட்ட கஸ்தூரி,  சொந்தக்காரக் குடும்பம் ஒன்றில் வேலைக்காரியாகச் சேர்ந்திருக்கிறாள். அவர்கள் இவளைப் படிக்கவைத்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்திருக்கிறார்கள். இவளுக்குத் திருமணம் செய்யவும்  முயற்சித்தார்கள். ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை. பெண்ணின் நடத்தை சரியில்லாத காரணத்தால்தான் மாப்பிள்ளை வீட்டார் வரவில்லை என்று சிலர் வதந்தியைப் பரப்பி விட்டார்கள். அவமானம் தாங்கமுடியாத கஸ்தூரி, யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறி ஹைதராபாதிலிருந்த தன் மூத்தசகோதரி வீட்டிற்குச் சென்றாள். அங்கும் துரதிர்ஷ்டம் விடவில்லை. அவளோ லிவர் கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்தாள். மருத்துவச் செலவைச்  சமாளிக்கமுடியாமல் சகோதரியும் அவள் கணவரும் தற்கொலை செய்துகொண்டு விட்டார்கள். அவர்களுக்கு வயதுவந்த ஒரு பெண் இருந்தாள். படிப்பும் சரியாக வரவில்லை. பாவம் கஸ்தூரி, தனக்குப் புகலிடம்தேடிப் போனவள், அக்காவின் பெண்ணுக்கு வாழ்வளிக்க வேண்டியவளானாள்.

ஒரு பணக்கார வீட்டில் தங்கி வேலை செய்யும்படியான ஏற்பாட்டில் அந்தப் பெண்ணை விட்டுவிட்டு, கஸ்தூரி தனக்கொரு சிறிய வேலை தேடிக்கொண்டாள்.  ஆனால் அந்தப் பெண்ணோ சரியான வழிகாட்டுதல் இல்லாமல் ஒருவனை நம்பி ஏமாந்தது மட்டுமின்றி, அவனுக்காகச் சிறுசிறு திருட்டுவேலைகளையும் செய்யத் தொடங்கினாளாம். நிலைமை கைமீறிப் போன நிலையில் கஸ்தூரி, யாரிடமும் சொல்லாமல்  சென்னைக்குக்  குடிபெயர்ந்து  வேலைபார்க்கத் தொடங்கினாள்.  இனியும் சகோதரி மகளுக்காகப் பாடுபடுவதில் அர்த்தமில்லை என்று முடிவுசெய்துவிட்டாள்.
****

“ஆனால் விதி யாரை விட்டது! ஒரு தொண்டு நிறுவனத்தின் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனைக்குப் போன கஸ்தூரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வலது மார்பகத்தில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதை உடனே அகற்றவேண்டும் என்றார்கள்.  அப்போதுதான் அவளுடைய சகோதரி மகள் இவளை எப்படியோ கண்டுபிடித்து எங்களிடம் கொண்டுவந்து சேர்த்தாள். அறுவை சிகிச்சை நடந்து குணம் தெரிந்தது. இரண்டுவாரங்கள் இங்குதான் இருந்தாள். அப்புறம் என்ன ஆனாள் என்று தெரியாது. இப்போது இடது  மார்பகத்திலும் கேன்சர் பாதிக்கத் தொடங்கிவிட்டது. தன் சகோதரி மகளுடன் இங்குவந்து சேர்ந்தாள். பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் சரியான மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தாமல் போனதால் இப்போது பாதிப்பு அதிகமாகி, நோயிலிருந்து மீளமுடியாத “டெர்மினல் பேஷண்ட்” என்று இவளை வகைப்படுத்தி இந்த நிலையத்தில் வைத்திருக்கிறோம். இன்னும் எத்தனை நாள் இருப்பாளோ தெரியாது. அவள் விதிப்படி தானே நடக்கும்? எங்களால் இயன்ற மருத்துவத்தை நாங்கள் செய்துகொண்டு வருகிறோம். இறப்பு வருவது நிச்சயம் என்னும்போது, அதை அமைதியாக எதிர்கொள்வதற்கு  அவளுக்கு உதவியாக இருக்கிறோம். எங்களால் முடிந்தது அதுதான். சரியான வாலண்டியராக நீங்கள் வந்திருக்கிறீர்கள். இனி எல்லாம் உங்கள் கையில் இருக்கிறது” என்று முடித்தாள் சாந்தகுமாரி.
****

ரவு உணவை எடுத்துக்கொண்டு கஸ்தூரியை எழுப்பினாள் சாந்தகுமாரி. கஸ்தூரியின் அருகில் அமர்ந்துகொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்  ஜெயராமன்.

பாதி உறக்கத்தில் இருந்தாள். “கஸ்தூரி, கஸ்தூரி” என்று இருமுறை அழைத்தவுடன் சட்டென்று கண்களைத் திறந்தாள். நல்ல தூக்கத்திற்குப் பின் கிடைத்த நிம்மதியை முகம் காட்டியது. ஜெயராமனின் கண்களோடு அவள் கண்கள் சந்தித்தபோது மெல்லிய கோடாக ஒரு புன்னகை அவள் உதடுகளில் அரும்பியது. ஏதோ பேச வாயெடுத்தாள். அதற்குள் சாந்தகுமாரி, “மொதல்ல சாப்பிடு. அப்புறம் பேசலாம்” என்று தடுத்தாள். இளஞ்சூடான கஞ்சியைச் சிறிய கரண்டியால் மெல்லப் புகட்டி, சில மாத்திரைகளை விழுங்கக் கொடுத்த பின்   டிரஸ்ஸிங் செய்தாள். அவளின் வலதுகையைப் பற்றியபடியே மீண்டும் உறங்க ஆரம்பித்தாள் கஸ்தூரி. 

“அலமாரியில் கஸ்தூரியின் ஆல்பம் ஒண்ணு இருக்கு. பாக்கலாமா?” என்றாள் சாந்தகுமாரி. கஸ்தூரியின் இளம்வயது புகைப்படங்கள் ஆல்பத்தின் பெரும்பகுதியை நிறைத்திருந்தன.

அவள்தான்  எவ்வளவு அழகு! அப்பா- அம்மா- அவள் என்று  எவ்வளவு இனிமையான குடும்பம்!  பள்ளியில் – கல்லூரியில் – ரயிலில் – படகில் – குளு, மணாலியில், கொடைக்கானலில், பம்பாய், டில்லியில் – என்று ஏராளமான படங்கள். ஓவ்வொன்றிலும் அவள் கொள்ளை அழகு. எந்த உடையிலும் அவள் அழகாக இருந்தாள். தேவதை மாதிரி இருந்தாள்.

“இவள் மட்டும் தனக்கு மனைவியாக வந்திருந்தால்..”.என்ற கற்பனை ஓடியது அவன் மனதில்.  அதே சமயம், ஒரு நோயாளியைப் பற்றி இப்படியொரு எண்ணம் எழலாமா என்றும் மனம் தடுத்தது. ஆல்பத்திலிருந்து கண்களை அகற்றிக் கஸ்தூரியைப் பார்த்தான். வற்றி மெலிந்துபோன உடல்,  அவளின் மெல்லிய மூச்சுக்காற்றுக்கேற்ப அசைந்து கொடுத்தபடி இருந்தது. புற்றுநோய்தான் இவளுடைய அழகை என்னமாய்ச் சிதைத்து விட்டது!

இன்னும் சில பக்கங்கள்தான் பாக்கி. அதற்குள் கஸ்தூரியிடமிருந்து கிளம்பிய அலறல் மேற்கொண்டு ஆல்பத்தைப் பார்க்கவிடாமல் செய்தது.  மூச்சுத் திணறல் ஏற்பட்டு, “ஹூம்..ஹூம்” என்று வழக்கத்தைவிட அதிக ஓசையுடன் சுவாசம் வெளிப்பட்டது. எதிர்பார்த்த விபரீதம் நடந்துவிடுமோ என்று பயந்த ஜெயராமன், “சாந்தகுமாரி” என்று சன்னல் வழியாகக் கூவினான். பிறகு ஓடிப்போய் கஸ்தூரியின் தோள்களைப் பிடித்துத் தலையோடு சேர்த்துத் தூக்கிச் சற்றே உயரமாகப் பிடித்துக்கொண்டான். அவன் மார்பில் அழுத்தமாகப் பதிந்தது அவள் உடல்.

“ஹூம்..ஹூம்..” என்ற திணறல் ஓசை நிற்பதாயில்லை. மார்பு மேலும் படபடக்கத் தொடங்கியது. கால்கள் திடீரென்று வேகமாக அசையத் தொடங்கின. கைகள் தன்னிச்சையாக இவனது  கன்னங்களைத் தடவிக்கொண்டே கழுத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டன. ஜெயராமனுக்கு வியர்த்தது. கண்களில் ஆறாக நீர் வழிந்தது. அதனால் இருவரது கன்னங்களும் ஒட்டிக்கொண்டதுபோல் ஆனது.

கஸ்தூரியின் மூச்சுத்திணறல் நிற்பதாயில்லை. ஊசிமருந்தை எடுத்துக்கொண்டு ஒரு நர்சும் அவள் பின்னாலேயே சாந்தகுமாரியும் வேகமாக வந்தனர். ஜெயராமனின் கழுத்தைச் சுற்றிக்கொண்டிருந்த கஸ்தூரியின் கைகளை விலக்கி அவளைப் படுக்கவைக்க  முயன்றாள் சாந்தகுமாரி. முடியவில்லை. கஸ்தூரியின் பிடி இறுக்கமாக இருந்தது. ‘கஸ்தூரி, கஸ்தூரி’ என்று அழைத்தாள். எந்த எதிர்வினையும் இல்லை. எனவே,  அவள் இருந்த நிலையிலேயே ஊசியைச் செலுத்த முன்வந்தாள் நர்ஸ். ஆனால் அதற்குள் கஸ்தூரி, ஜெயராமனின் கைகளிலிருந்து சரிய  ஆரம்பித்தாள். அவளை இறுகப் பிடித்து படுக்கையில் இட்டனர்  சாந்தகுமாரியும் நர்சும். கஸ்தூரியின் நாடியைப் பிடித்துப் பார்த்த சாந்தகுமாரி  “எல்லாம் முடிஞ்சுபோச்சு, ஜெயராமன்“  என்றாள்.

நிலையத்து ஊழியர்கள் ஓடிவந்தனர். மருத்துவர் அவளை மேலும் பரிசோதித்து மரணத்தை உறுதி செய்தார். எல்லாருடைய கண்களிலும் கடைசிமுறையாக வழிந்தது நீர். அவர்களைப் பொறுத்தவரை இது அடிக்கடி நடைபெறும் நிகழ்ச்சி. என்றாலும் ஒவ்வொரு டெர்மினல் பேஷண்ட்டும் ஓர் உயிர்தானே! அதற்கு அஞ்சலி செலுத்தவேண்டுமல்லவா?

கஸ்தூரியின் உடலைவிட்டு விலகாமல் நின்றுகொண்டிருந்தான் ஜெயராமன். ஊழியர்கள் மெல்ல அவளைப் பிரித்துப் படுக்கையில் கிடத்தினார்கள்.

“சிலர் வாழத் தெரியாமல் வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். சிலர், வாழ  முடியாமல் தொலைந்துபோகிறார்கள். ஆனால் யார், யாருடன் வாழவேண்டும் என்பது ஏற்கெனவே விதிக்கப்பட்டிருக்கிறது. அதைத்தான்   விட்ட குறை, தொட்ட குறை என்கிறோம்” என்று வசந்தா ரங்கமணி எப்பொழுதோ சொன்னது திடீரென்று நினைவுக்கு வந்தது. கஸ்தூரியின் ஸ்பரிசம் – தன் கைகளால் அவன் கழுத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டது- அப்படியே உயிர்விட்டது- ஒருவேளை இதுதான் விட்ட குறை, தொட்ட குறையோ?

சாந்தகுமாரி ஊழியர்களை அழைத்து “நடக்கவேண்டியதை கவனிங்க. அட்மிஷன் ரிஜிஸ்டரப்  பாத்து யார் யாருக்குத் தகவல் சொல்லணுமோ சொல்லுங்க. அநேகமா சுபா ஒருத்திக்குத்தான் சொல்லவேண்டியிருக்கும்” என்றாள்.

“சுபாவா?” என்று திகைப்போடு கேட்டான் ஜெயராமன்.

“ஆமாம். இவளோட அக்கா பொண்ணு. இதோ இந்த ஆல்பத்துல கூட இருக்காளே அவ தான்....” என்று ஆல்பத்தின் கடைசி பக்கத்தைக் காட்டினாள்.

ஆம், நந்தினியின்  வைர மோதிரம் திருட முயன்ற அதே சுபா.
“உங்களுக்குத் தெரியுமா அவளை?”

ஜெயராமன் பதில் சொல்வதற்குள்  நந்தினியிடமிருந்து போன் வந்தது. “மன்னிக்கவேண்டும் ஜெயராமன் சார்! இன்று தருவதாக இருந்த  பார்ட்டியை கேன்சல் செய்துவிட்டேன். ஒரு துக்கச் செய்தி காரணம்..” என்றாள்.
***

“அமைதி நிலைய”த்தில் ஜெயராமனைப் பார்ப்போம் என்று சுபா கனவிலும் நினைக்கவில்லை. அவனை ஏசியதற்காக நேரில் பார்த்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தாள். இன்றோ தனது சித்தியின் மரணத்தின்போது அவனைப் பார்க்க நேரிட்டுவிட்டதே!

“என்னை மன்னித்துவிடுங்கள் சார்!..” என்று அவன் கால்களில் விழுந்து அழுதாள். மேற்கொண்டு பேச வார்த்தை வராதவளாய், ஓடிச்சென்று கஸ்தூரியின் உடலைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அவளைத் தொடர்ந்து போனான் ஜெயராமன். “இவங்களுக்கு மருந்து  வாங்கத்தான் அன்னிக்கு வைர மோதிரத்த.. “ என்று சொல்ல முயன்ற சுபாவை  “உஷ்” என்று தடுத்தான். அடிப்படையில் அவள் நல்லவளே. சூழ்நிலைதான் அவளைத் தடுமாற வைத்திருக்கிறது. அதனால்தான் நந்தினி அவளை மீண்டும் தன்னுடன் சேர்த்துக்கொண்டிருக்க வேண்டும்.

இளமையில் இருந்த கஸ்தூரியின் முகத்தையும் நோயால் சிதைந்துபோன இன்றைய முகத்தையும் மனதிற்குள் ஒப்பிட்டுப் பார்த்தான் ஜெயராமன். அன்று பம்பாய்க்குப் போய்ப் பெண்பார்க்க முடியாமல் திரும்பிவிட்டோமே, அவளும் இவளைப் போலவே அழகாய் இருந்திருப்பாளோ?  ஒருவேளை, அவளே இவள்தானோ? காரணமில்லாமல் குடும்ப வாழ்க்கையைத் தவறவிட்டு விட்டேனோ? கஸ்தூரிதான் வசந்தா ரங்கமணி சொன்ன புதிய பந்தமோ? இல்லையென்றால் கஸ்தூரியின் கைகள் தன் கழுத்தை இறுகப் பற்றியபடி மூச்சை நிறுத்திக்கொண்டதற்கு அர்த்தம்தான் என்ன?

பணியிலிருந்து ஒய்வு பெற்றாகிவிட்டது. இனி என்ன செய்யப்போகிறோம் என்று குழம்பியிருந்தவனுக்கு வெளிச்சம் கிடைத்துவிட்டதாகத் தோன்றியது. ஒரு முடிவுக்கு வந்தவனாக ஜெயராமன் சொன்னான்: “சுபா, கஸ்தூரிக்கு நான்தான் ஈமச்சடங்கு செய்யப்போறேன். ஒங்க சொந்தக்காரங்க யாராவது எதிர்ப்பாங்களா?”

சுபாவுக்கு மட்டுமல்ல, சாந்தகுமாரிக்கும் அது ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது. “நாங்க அநாதை சார். யார் வரப்போறாங்க, யார் எதிர்க்கப் போறாங்க!  ஆனா சடங்கெல்லாம் நீங்க செய்யலாமா? ஒங்க வீட்டுல ஒத்துப்பாங்களா” என்றாள் சுபா.

“என் மனைவிக்கு நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்” என்று சொல்ல நினைத்தவன், தன் மொபைலை எடுத்தான். “கனெக்ட் மீ டு ஜி. எம். மல்ஹோத்ரா ப்ளீஸ்” என்றான்.

“யெஸ், மல்ஹோத்ரா ஹியர்”. 

“சார், வணக்கம். என்னுடைய பென்ஷனுக்கு நாமினேஷன் போட வேண்டுமென்று கேட்டீர்கள் இல்லையா? இதோ எழுதிக்கொள்ளுங்கள். நாமினி பெயர் : சுபா”.

“குட், சரி, ரிலேஷன்ஷிப் சொல்லு". 

“சுபா என் தத்துப் பெண் என்று எழுதிக்கொள்ளுங்கள்”.

“ஈஸ் இட் ?” என்று மல்ஹோத்ரா அதிர்ச்சியுடன் கேட்டார். அடுத்த நொடி, “ஜெயராமன், இப்போதுதான் நீ எனக்கு ஒரு குட்நியூஸ் கொடுத்திருக்கிறாய். விஷ் யூ ஆல் தி பெஸ்ட். பதிலுக்கு நானும் ஒரு குட்நியூஸ் தரட்டுமா?” என்றார். 

“நீ ரெகமண்ட் பண்ணின சுமதிக்கு பியூன் போஸ்ட் கொடுத்தாகிவிட்டது. தபாலில் ஆர்டர் வரும். போதுமா?”

“நன்றி மல்ஹோத்ரா! இந்த உதவியை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன். உங்களிடம் நான் கேட்டுப் பெறும் கடைசி உதவி இதுதான்” என்று பேச்சை முடித்தான் ஜெயராமன்.

நடக்கவே முடியாததென்று நினைத்தது நடந்திருக்கிறது.

சுமதி ஓர் ஏழைப்பெண். கார் விபத்தில் பலியான சந்திரனின் மகள். ஒன்பதாவதுவரை படித்துவிட்டு அக்கம்பக்கம் வீட்டுவேலை செய்துவந்தவள். குடும்பத்தின் ஒரே நம்பிக்கை. சந்திரனைப் பலிவாங்கிய விபத்திற்குக் காரணமானவன், குடிபோதையில் வண்டியோட்டிய அதே வங்கியின் உயர் அதிகாரி ஒருவரின்  பதினாறு வயது மகன்தான். மிகுந்த முயற்சி செய்து, போலீஸ் கேஸ் ஆகாதபடி செய்தது  ஜெயராமன் தான். சுமதிக்காக வாதாடி இந்த வேலையைப் பரிந்துரை செய்திருந்தான்.  அவள் வாழ்வு இனி மலரப்போகிறது.

துயரத்தால் தளர்ந்துபோய் நின்றுகொண்டிருந்த சுபாவை அருகில் அழைத்தான் ஜெயராமன். “இதோ பாரம்மா, இன்றுமுதல் நீ என் மகள். இனிமேல்  நீ எங்கும் போகக்கூடாது. நீயும் நானும் இந்த அமைதி நிலையத்தில் நிரந்தரமாகத் தங்கிவிடலாம், சரியா?”

பதில் சொல்லத் தெரியாமல் ஜெயராமன்மீது சாய்ந்தபடி விக்கியழத் தொடங்கினாள் சுபா. துக்கம், மகிழ்ச்சி இரண்டுமே  கண்ணீராக வழிந்துகொண்டிருந்தன. சாந்தகுமாரிக்கும்தான்.    


 (முற்றும்)

புதன், பிப்ரவரி 01, 2017

சுபாவதாரம் -3 சற்றே நீண்ட சிறுகதை

பதிவு 7/2௦17

சுபாவதாரம் -3

சற்றே நீண்ட சிறுகதை

- இராய. செல்லப்பா

சுபாவதாரம்-2 படிக்க இங்கு சொடுக்கவும்

ஜெயராமன் திகைத்துப்போய் நின்றான். சரியான நேரத்தில் கடவுள்தான்  தன்னைக் காப்பாற்றி யிருக்கிறார். மோதிரத்தை மட்டும் சுபாவிடம் கொடுத்துவிட்டிருந்தால்..? உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் திருட்டுப்பெண்ணா சுபா?

“எனக்கு இந்த நெலம வந்ததுக்கு  நீங்கதான் காரணம். பொழுது விடிஞ்சா என்மேல போலீஸ் கம்ப்ளைண்ட் குடுக்கப் போறாங்களாம். அப்டி நடந்தா நான் உயிரோடு இருக்கமாட்டேன். என் மரணத்துக்கு நீங்க ரெண்டுபேரும்தான் காரணம்னு எழுதிவச்சிட்டு தூக்கமாத்திரை சாப்ட்டுடுவேன். ஒங்களப் பழிக்குப் பழி வாங்குவேன்” என்றாள் சுபா.

அவளின் ஆவேசம் பீதியைக் கொடுத்தது. வங்கியின் விதிப்படிதானே அவன் நடந்து கொண்டான். அதில் என்ன தவறு? இந்தப் பெண் அனுபவமுதிர்ச்சி இன்மையால் குழம்பிப்போயிருக்க வேண்டும். அல்லது ‘முக்கியமான ஆஸ்பத்திரி செலவு’ என்றாளே, அதைச் சரிக்கட்டப் பணம் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்க வேண்டும்.. இவளைச் சமாதானமாகத்தான்  வழிக்குக் கொண்டுவர வேண்டும்.

“சுபா, தயவுசெஞ்சு அவசரப்பட்டு எதுவும் செஞ்சுடாதீங்க. பொழுது விடிஞ்சதும் நானே நந்தினிகிட்ட ஒங்க நெலமையை எடுத்துச்சொல்லி எல்லாப் பிரச்சினைக்கும் நல்ல முடிவெ கண்டுபிடிக்கறேன்.  என்னெ நம்புங்க.  ஒருவேள காலைவரைக்கும் பொறுக்கமுடியாதுன்னா, நீங்க இருக்குற முகவரியைக் கொடுங்க. இப்பவே வர்றேன்..” என்று மென்மையாக, நிறுத்தி நிறுத்திக் கூறினான். அது அவளைப் பாதித்திருக்கவேண்டும்.

சில  நிமிட மௌனத்திற்குப்பின் அவளே பேசினாள். “சரிங்க சார், நாளைக்கிப் பன்னெண்டு மணிக்குள்ள ஒங்கள வந்து பாக்கறேன்.  அதுவர நந்தினி மேடம்கிட்ட எதுவும் பேசாதீங்க. நான் இப்ப ஒங்ககிட்ட பேசினதையும் சொல்லிடாதீங்க” என்று உத்தரவிடுவதுபோல் கூறினாள்.

ஆனால் மறுநாள் சுபா வரவில்லை. நந்தினியும் போனில் அகப்படவில்லை. அதன் பிறகு நந்தினி அடிக்கடி வந்துபோனாலும் சுபாவைப் பற்றிய பேச்சே எழவில்லை. தொலைந்த பொருள் கிடைத்துவிட்டது என்றோ, அல்லது ஒரு திருடி ஒழிந்தாள் என்றோ நிம்மதி அடைந்திருக்கவேண்டும். அந்த சுபாவா மீண்டும் வருகிறாள்? அதுவும் நந்தினியுடன்? இதில் ஏதோ ஒரு புதிர் ஒளிந்திருப்பதாகவே தோன்றியது. நினைக்க நினைக்கக் குழப்பம்தான் மிஞ்சியது.
****
சந்தா ரங்கமணி, வங்கியின் எதிர்வீட்டில் குடியிருப்பவர். முன்னாள் பாடகி. இந்நாள்  ஆன்மிகச் சொற்பொழிவாளர்.  ஜெயராமனைப் போலவே மணமாகாதவர்.  அடிக்கடி அவனைச் சந்தித்து நலம் விசாரிப்பார்.

“ஜெயராமன்! ரிடயர்மெண்ட் என்றால் வாழ்க்கையே முடிந்து போனதாகச் சிலர்  கருதுவார்கள். அது சரியில்லை. ஒரு வாழ்க்கை முடிந்து, இன்னொரு சுவாரஸ்யமான வாழ்க்கை தொடங்குவதாக வைத்துக்கொள்ளலாமே!  ஆகவே, நடக்காத திருமணத்தையோ, இல்லாத பிள்ளை குட்டிகளையோ நினைத்து வேதனைப்படாதீர்கள். அப்படிப்பட்ட சுமைகள் இல்லாதவரை நீங்கள் பாக்கியசாலிதான்” என்பார்.

“வங்கியிலிருந்து ஓய்வு பெற்றபின்பு ஆன்மிகத்திலோ, சமூக சேவையிலோ  ஈடுபட நினையுங்கள். விட்டகுறை தொட்டகுறையாகப் புதிய பந்தங்கள் ஏற்பட்டு உங்களை வழிநடத்தும்.  இன்னும் விளக்கம் வேண்டுமென்றால்  போன் செய்யுங்கள். வரட்டுமா?” என்று கிளம்பினார் வசந்தா.

ஆனால் அதற்குள் அவன் சாந்தகுமாரியைச் சந்திக்க நேர்ந்துவிட்டதே!

சாந்தகுமாரி, கணக்கியலில் பட்டம்பெற்றவள். இருபத்துமூன்று வயதில் மணமாகி, இரண்டே வருடத்தில் இரத்தப் புற்றுநோய்க்குக் கணவனைப் பறிகொடுத்தவள். வாழ்வின் அடுத்த படி இன்னதென்று தெரியாமல் குழம்பி நின்றவளை ஆதரவுக்கரம் நீட்டி அணைத்துக்கொண்டது, இறுதிக்கட்ட கேன்சர் நோயாளிகள் பாதுகாப்பு அறக்கட்டளை’. நிச்சயம் மரணத்தைத் தழுவப்போகிறார்கள் என்று தெரிந்தபின்னும் அந்நோயாளிகளைக் கனிவோடு உபசரித்து, அமைதியான சூழ்நிலையில்  அவர்களின் இறுதிமூச்சு பிரிவதற்கு உதவவேண்டும் என்னும் லட்சியத்துடன் அந்த அறக்கட்டளை இயங்கிவந்த கட்டிடத்திற்கு ‘அமைதி நிலையம்’ என்று பெயர்.

தனது சுயநலமில்லாத சேவையினாலும், சுறுப்பான நடவடிக்கைகளாலும்  படிப்படியாக அதன் முழுநேரச் செயலாளரானாள் சாந்தகுமாரி. ஒத்த கருத்துடைய இளைஞர்களையும் பெரியவர்களையும் தேடித்தேடி அறக்கட்டளையின் உறுப்பினராக்கினாள். அப்படித்தான் ஜெயராமனிடமும் வந்தாள்.

நெஃப்டில் பணம் அனுப்புவது எப்படி என்று கேட்க வந்தவள், அரைமணி நேரப் பேச்சில் அவனுடைய ஜாதகத்தையே தெரிந்துகொண்டுவிட்டாள். “உங்களைப் போன்ற குடும்பச்சுமை இல்லாத வாலண்டியர்கள் தான் எங்களுக்கு வேண்டும். ஒருதரம் நேர்ல வந்து  பாருங்க. மரணத்தோட பிடில இருக்கிற நோயாளிகளுக்குப் பணம் காசு வேண்டாம். பக்கத்துல இருந்து ரெண்டு வார்த்தை ஆறுதலாப் பேசினாலே போதும்” என்று சாந்தகுமாரி விளக்கியபோது மறுக்கமுடியவில்லை அவனால்.

‘அமைதி நிலைய’த்திற்கு அடிக்கடி வரலானான் ஜெயராமன். சாந்தகுமாரியோடு சுமார் இருபது இளைஞர்களும் ஆறு நர்சுகளும் அங்கு சம்பளமின்றிச் சேவை செய்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட நோயாளிமீது முழுப் பொறுப்பு எடுத்துக்கொள்ளவேண்டும். அவரவர் வேலைநேரத்திற்கேற்ப காலையோ, மாலையோ, நடுப்பகலோ வந்து இரண்டுமணிநேரம் செலவழிக்கவேண்டும். மற்ற சமயங்களில் ஊதியம்பெறும் ஊழியர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

சுமார் ஐம்பது வயதுள்ள கஸ்தூரி என்ற நோயாளியைக் கவனிக்கும் பொறுப்பு ஜெயராமனுக்கு வழங்கப்பட்டது.  

மார்பகப் புற்றுநோயால் அறுவை சிகிச்சைக்கு ஆளாகி ஐந்து வருடங்களுக்கு முன்பு வலது மார்பகத்தை இழந்தவள் கஸ்தூரி. இப்போது இரண்டாவது மார்பகத்திலும் அது பரவிவிட்டது. இனி அறுவை சிகிச்சையாலும் பலனில்லை என்று தெரிந்ததால் அவளை ‘அமைதி நிலைய’த்திற்கு அனுப்பிவிட்டார்கள். முதலில் சில நர்சுகள் அவளுக்காகப் பணிசெய்ய முன்வந்தாலும், சில வாரங்களிலேயே நோய் முற்றி, மோசமான வாடை அடிக்க ஆரம்பித்ததால், தங்களுக்கும் தொற்றிவிடுமோ என்ற பயம் ஏற்படவே  அவளைத் தவிர்க்கத் தொடங்கினர். சரியானதொரு வாலண்டியர் அவளுக்கு உடனடியாகத் தேவைப்பட்டது. அந்த நிலையில்தான் ‘அமைதி நிலைய’த்திற்குள் வந்தான் ஜெயராமன்.

ஒரு வெள்ளிக்கிழமை மாலை, வங்கி முடிந்து, நிலையத்திற்கு வந்த ஜெயராமன், “ஐயோ, வலி தாங்க முடியவில்லையே” என்ற அலறலைக் கேட்டு  வேகமாக உள்ளே ஓடினான். கஸ்தூரிதான் கதறிக்கொண்டிருந்தாள். அவள் மார்பகத்தைச் சுற்றியிருந்த “பேண்டேஜ்” துணி, சீழும் இரத்தமுமாகக்  காட்சியளித்தது. நர்ஸ்கள் யாரும் அங்கில்லை. “சிஸ்டர், சிஸ்டர்” என்று சிலமுறை கூவியும் யாரும் வரவில்லை. கஸ்தூரியோ வலியினால் சித்ரவதைபட்டுக் கொண்டிருந்தாள். “சமயபுரம் மாரியம்மா, என்னை சீக்கிரம் அழைச்சிக்க மாட்டியா? என்னால தாங்க முடியல்லியே” என்று மிச்சம் மீதி இருந்த சக்தியை எல்லாம் ஒன்றுதிரட்டிக் கேவிக்கேவி அழலானாள். சாதாரணமாக ஐந்தடி இரண்டங்குலம் உயரம் இருக்கும் அவள், இப்போது குறுகிப்போய் எட்டுவயதுச் சிறுமியாகக் காட்சியளித்தாள். கேன்சர் அவளைச் சிறுகச்சிறுகத் தின்று, சதையே இல்லாத வெற்று எலும்புகளின் தொகுதியாக்கி இருந்தது.  தலைமயிர் முற்றிலுமாக அழிந்து மண்டையோட்டுச் சதை வெளிறித் தெரிந்தது. வற்றி ஒடுங்கிப்போன தன் கைகளால் மார்பகத்தை இறுக்கிப் பிடித்துக்கொள்ள எத்தனித்தாள். ஆனால் விரல்களைத்தான் அசைக்க முடிந்தது.  “அம்மா- அம்மா” என்று அரற்ற மட்டுமே முடிந்தது. ஒவ்வொரு அரற்றலுக்கும் மார்பகத்திலிருந்து மேலும் சீழ் வடியலாயிற்று.

இரண்டாம் மாடியின் கடைக்கோடியில் மூன்று சன்னல்கள் கொண்ட அந்த அறையையில் நல்ல காற்றோட்டம் இருந்தது. ஆனால் அங்கிருந்து அழைத்தால் யாருக்கும் எளிதில் கேட்காது.     

ஜெயராமனுக்கு இந்த அனுபவம் புதிது. இதுவரை எந்தப் பெண் நோயாளியையும் அருகிலிருந்து பார்த்ததில்லை. தாயை இளம்வயதிலேயே இழந்துவிட்டவன். திருமணமாகாததால் பெண் ஸ்பரிசமே தெரியாதவன். அப்படிப்பட்டவன் இப்போது கஸ்தூரிக்கு எவ்வாறு அவசரமாகப்  பணிவிடை செய்வதென்று தோன்றாமல் ஒருகணம் விழித்தான்.

சன்னல் வழியாகக் கீழே நோக்கினான். யாருமில்லை.  இவளை இப்படியே விட்டுவிட்டுக் கீழே ஓடிப்போய் யாரையாவது அழைத்து வரலாமென்றால், அதற்குள் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடுமோ என்று பயந்தான். 

சிறிது தயக்கத்திற்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தான். அறைக்கதவைத் தாழிட்டான். சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரு ஃபிளாஸ்க்கில் வெந்நீர் இருந்தது. தன்  கைகளைக் கழுவித் துடைத்துக்கொண்டான். அலமாரியிலிருந்து புதிய பேண்டேஜ் துணியையும், காயத்தைக் கழுவும் “பெட்டாடின்” சொல்யூஷனையும் எடுத்தான். சுவரில் மாட்டியிருந்த ஷீரடி சாய்பாபாவை தியானித்துக்கொண்டு கஸ்தூரியை நெருங்கினான்.

அப்போதுதான் அவள் அவனைப் பார்த்தாள். அந்நியமான ஓர் ஆண் தன்னருகில் நிற்கிறானே என்ற நினைவே இல்லாதவளாய், “வணக்கம் சார்” என்றாள். “ஏதாவது செய்யுங்க, என்னால முடியலே. ப்ரெஸ்ட்டு ரொம்ப வலிக்குது” என்றாள். கையெடுத்துக் கும்பிட முயன்றாள். இப்போதும் சில விரல்கள் மட்டுமே அசைந்தன. “நர்சுங்க யாரும் இல்லயா?” என்றாள் ஈனமான குரலில். பிறகு மயக்கமுற்றவளாய்க் கண்ணயர்ந்தாள்.  

அவளிடம் என்ன பேசுவதென்று ஜெயராமனுக்குத் தெரியவில்லை. தன்னிச்சையாக வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டான். மார்பை மூடியிருந்த பழைய துணியை அகற்றினான். வலி தாங்காமல் அவள் கதறினாள். சீழும் ரத்தமும் துணியோடு கலந்து மார்போடு உலர்ந்துபோயிருந்ததால், மெல்ல மெல்லவே இழுக்கமுடிந்தது. அந்த இழுப்பினால் மார்பிலிருந்து மேலும் சீழ் வடியலாயிற்று. அந்த அசைவில் அவள் கண்கள் திறந்துகொண்டன. “இன்னும்.. இன்னும் கொஞ்சம் அழுத்தமா தொடைச்சுடுங்க” என்று முனகினாள். பிறகு “ரொம்ப நன்றி” என்றாள்.  

காயம் துடைக்கும் சொல்யூஷனை லேசாகத் தடவினான். புற்றுநோயால் சிதைந்துபோன மார்பகம் வெறும் கூழாகக் கிடந்தது. இல்லாதுபோன இன்னொரு மார்பகத்தின் மேலும் அதன் பாதிப்பு தென்பட்டது. கை போன போக்கில் மருந்தைத் தடவினான்.  அது அவளுக்கு ஆறுதலைத் தந்திருக்கவேண்டும். இரு கண்களையும் வெகு முயற்சியோடு விரித்துப் பார்த்துவிட்டு மூடிக்கொண்டாள். புதிய பேண்டேஜ் துணியை மேலேவைத்து, தனக்குத் தெரிந்தவரையில் அழுத்தமாகக் கட்டினான். மீதமிருந்தவற்றை அலமாரியில் வைத்துவிட்டு வெந்நீரால் கைகளைக் கழுவிக்கொண்டான். பிறகு என்ன நினைத்தானோ தெரியவில்லை அவள் அருகில் ஒரு ஸ்டூலைப் போட்டு அமர்ந்துகொண்டான். “கஸ்தூரி” என்று மெதுவாக அழைத்தான்.

அதற்குள் அவளுக்குத் தூக்கம் வந்திருக்கவேண்டும். மீண்டும் அழைத்தான். அசையவில்லை. மெல்ல எழுந்து சன்னல் அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான்.

ரவு ஏழுமணிக்குத்தான் அறையில் நுழைந்தாள் சாந்தகுமாரி. நின்றுகொண்டிருந்த ஜெயராமனையும்,  தூங்கிக்கொண்டிருந்த கஸ்தூரியையும் பார்த்தாள். “ஓ, நீங்க தான் “டிரஸ்ஸிங்” பண்ணினீங்களா ? குட், நல்லாத்தான் பண்ணி இருக்கீங்க” என்றாள்.

அதற்குள் கஸ்தூரியின் உடம்பிலிருந்து சீழ் வாடை எழுந்து அறை முழுவதும் பரவியது.  இருவராலும் நிற்கவே முடியவில்லை. எழுந்து வராண்டாவுக்கு வந்தனர். “இதுதாங்க டெர்மினல் பேஷண்ட்கிட்ட இருக்கிற பிரச்சினை. மணிக்கொருதரம் டிரஸ்ஸிங் பண்ணியாகணும். இந்த நாத்தம் பொறுக்க முடியாமத்தான் நர்சுங்க வரமாட்டேன்னு சொல்றாங்க. பெரும்பாலும் நானேதான் பண்ணிடுவேன்....” என்றாள் சாந்தகுமாரி கவலயுடன். “பாவம் கஸ்தூரி, இப்ப நல்லாத் தூங்குறா பாருங்க!”  

கேன்சர் நோயாளிகளை – அதுவும்- மார்பகத்தில் கேன்சர் வந்த பெண்களை- ஜெயராமன் இதுவரை பார்த்ததில்லை. கஸ்தூரியைப் பார்த்தவுடன் அவனுக்கு மனமே ஆடிப்போய்விட்டது. இவ்வளவுதானா வாழ்க்கை என்று விரக்தியடைந்தான். தானும் சாந்தகுமாரிபோல சேவைக்கே இனி வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டால் என்ன என்ற உத்வேகம் எழுந்தது.

அவளுடைய இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு, “சாந்தகுமாரி, ஒரு நர்ஸ் செய்யவேண்டிய வேலைகளையெல்லாம் எனக்குச் சொல்லிக்கொடுங்கள். கஸ்தூரியை இனிமேல் நானே கவனித்துக் கொள்கிறேன்” என்றான்.

சாந்தகுமாரியின் முகத்தில் நன்றியின் வெளிச்சம் தெரிந்தது. “ரொம்ப சந்தோசங்க. எல்லாப் பயிற்சியையும்  இன்னும் மூணே நாள்ல சொல்லித் தந்துடுவோம். இனிமே கஸ்தூரிக்கு நல்லகாலமே” என்று சொன்னவள், பல்லைக் கடித்துக்கொண்டாள். “அதாவது, இன்னும் கொஞ்ச நாளைக்கு நல்ல காலமே” என்றாள் சோகத்துடன். “டெர்மினல் கேன்சர் பேஷண்ட்டுக்கு எப்போ கடைசிநாள்னு யாராலயும் சொல்ல முடியாது. பாவம், கஸ்தூரி. ரொம்ப நல்லவ....”

கண்களைத் துடைத்துக்கொண்டாள் சாந்தகுமாரி.

“கஸ்தூரியின் பின்னணி பற்றிச் சொல்லுங்களேன். குடும்பம், பெற்றோர்கள்...படிப்பு என்று  ஏதாவது தெரியுமா?” என்றான் ஜெயராமன்.

“இப்போது நேரமில்லை, நாளைக்குச் சொல்லட்டுமா?” என்றாள் சாந்தகுமாரி.