புதன், ஜூலை 31, 2013

தாகூரின் கையெழுத்தில் ‘கீதாஞ்சலி’ – ஓர் அபூர்வ வெளியீடு


 வங்காள மொழியில் ரவீந்திரநாத தாகூர் எழுதி, நோபல் பரிசு பெற்ற கவிதை நூல் “கீதாஞ்சலி”. இதை, அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1912 நவம்பர் மாதம் லண்டனில் வெளியானது. அங்குள்ள “இந்தியா சொசைட்டி” இதனை வெளியிட்டது. முதல் பதிப்பில் 750 பிரதிகள் அச்சிட்டதாகவும், அதில் 250 பிரதிகள் மட்டுமே விற்பனைக்கு விடப்பட்டிருப்பதாகவும் அதில் குறிக்கப்பட்டிருந்தது. 

புதன், ஜூலை 24, 2013

கம்பன் புகழ் பாடிய கம்யூனிஸ்ட் அறிஞர் "எஸ்.ஆர்.கே." நினைவு நாள் (ஜூலை 24)


மனைவி டாக்டர் கமலாவுடன் டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன் 

தஞ்சை மாவட்டம் கிளிமங்கலத்தில் பிறந்த எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சிறுவயதில் இருந்தே பத்திரிகையாளனாக வேண்டும் என்ற கனவு இருந்தது. 13வது வயதில் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் சென்னைக்கு ரயிலேறி, ஆனந்தவிகடன் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது ஆசிரியராக இருந்த ‘கல்கி’, ஆச்சரியத்துடன் இவரைப் பார்த்து, ‘நீ சிறிய பையனாக இருக்கிறாய், படிப்பை முடித்துக்கொண்டு வா’ என்று திருப்பி அனுப்பிவிட்டார்.

புதன், ஜூலை 17, 2013

தொல்காப்பியம் கூறும் திருமணப் பொருத்தங்கள் பத்து


சைந்தவி- ஜி.வி.பிரகாஷ் திருமணம் (முகநூல்)
திருமணத்திற்குப் பத்து பொருத்தங்கள் பார்ப்பது தமிழ்நாட்டில் வழக்கமாக உள்ளது. இது பற்றிக் கையடக்கப் புத்தகங்கள் நிறைய கிடைக்கின்றன. பஞ்சாங்கங்களில் விளக்கமான குறிப்புகள் உண்டு. தங்கள் குடும்ப சோதிடரிடம் மணமகன்-மணமகள் இருவரின் ஜாதகங்களையும் காட்டி இந்தப் பத்து பொருத்தங்களில் எவ்வளவு பொருத்தங்கள் உள்ளன, திருமணம் செய்யலாமா கூடாதா என்று தெரிந்து அதன்படி செய்வது பெரும்பாலானவர்களின் வழக்கம். அதே ஜாதகங்களை வேறு ஒரு ஜோதிடரிடம் காட்டினால் அவர் நேர்மாறான கருத்தையும் சொல்லக்கூடும்.

சனி, ஜூலை 06, 2013

எழுத்தாளருக்குத் தூக்கு!
எண்ணெய் நிறுவனத்தை எதிர்த்ததால்!!

பன்னாட்டு நிறுவனங்களின் மனித உரிமை மீறல்கள் (2)

நைஜீரியாவில் ‘ஷெல்’(SHELL)லின் சாகசங்கள்
இயற்கை தன் வளங்களையெல்லாம் பூமிக்கடியிலும் கடலுக்கடியிலும் புதைத்து வைத்திருக்கிறது. தங்கமாகவும், வைரமாகவும், இரும்பாகவும், பெட் ரோலிய எண்ணெயாகவும் ஒளிந்து கிடக்கும்  இவற்றை யாரும் எளிதில்  திறந்து பார்த்துக் களவாடிவிடக்கூடாது என்னும் கருத்தில் தானோ என்னவோ தொழில்நுட்ப அறிவு, பொருள்வளம், மானிடத்திறமை போன்ற வசதிகள் இல்லாத ஏழை நாடுகளுக்கே இவற்றை பெரும்பாலும் வழங்கியிருக்கிறது. மத்திய கிழக்காகட்டும், ஆஃப்ரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளாகட்டும் இத்தகைய PARADOX OF PLENTY என்னும் சிக்கலில் வீழ்ந்திருக்கின்றன. தங்கள் நாட்டு வளங்களை வெளியில் எடுத்துத் தங்களுக்குப் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளவும் பிறநாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களையே சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இவர்கள் இருக்கிறார்கள்.
கென் சாரோ விவா 
பெரும்பாலும் இந்நாடுகள், குடியரசோ, அல்லது நேர்மையான சர்வாதிகாரமோ இல்லாத நாடுகளாக அமைந்தது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிகுந்த சாதகமாயிற்று. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சிலரையோ, அல்லது ஓர் அரச குடும்பத்தையோ திருப்திப்படுத்தினால்

புதன், ஜூலை 03, 2013

பன்னாட்டு நிறுவனங்களின் மனித உரிமை மீறல்கள் (1) – நைக்கீ (‘Nike’)

பன்னாட்டு நிறுவனங்கள், ‘வெளிவேலை’ (outsourcing) என்ற பெயரில் தங்கள் தொழிலைப் பிறநாடுகளுக்கு அனுப்பிவிட்டு நிம்மதியோடு லாபம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எத்தகைய மோசமான பணிச்சூழலில் இருக்கிறார்கள் என்று இவர்கள் கவலை கொள்வதில்லை. மனித உரிமை மீறல்கள் அன்றாட நிகழ்ச்சியாகின்றது. இது பற்றி ஐ.நா.சபை பெரியதொரு ஆராய்ச்சி நடத்தி சில முக்கிய முடிவுகளை எடுத்து, எல்லா உறுப்பு நாடுகளும் பின்பற்றுவதற்காக அறிவித்துள்ளது. அது பற்றிய விரிவான கட்டுரை இது. (மூன்று அல்லது நான்கு பகுதிகளாக வெளிவரும்).

 (1)‘நைக்கீ’ (‘Nike’)
‘நைக்கீ’ என்பவள், கிரேக்கப் புராணங்களில் வரும் வெற்றியின் தேவதை. (நமது தைரியலட்சுமி போல). நரகத்தில் ஓடும் நதியின் ஆன்மாவான ‘ஸ்டிக்ஸ்’ என்ற தேவதைக்கும், ‘பள்ளாஸ்’ என்ற அரக்கனுக்கும் மகளாகப் பிறந்தவள். ரோமானியர்கள் இவளை ‘விக்டோரியா’ என்று அழைப்பர். இறகை விரித்து தேரில் அமர்ந்து பறந்து செல்பவள். அதே சமயம் மிக வேகமாக ஓடக்கூடியவள். அதிவிரைவாகத் தேரூட்டுபவள்.


இதனால் தான், நைக்கீ (‘Nike’) என்ற பெயரை விளையாட்டு வீரர்களுக்கான விலை உயர்ந்த ஷூக்கள், பந்துகள், சட்டைகள், பேண்ட்டுகள் தயாரிக்கும் ஒரு நிறுவனம் தன்னுடைய ‘பிராண்டு’க்குப் பெயராக வைத்திருக்கிறது.

திங்கள், ஜூலை 01, 2013

அப்துல் ரகுமானின் “தேவ கானம்” – கவிதை நூல்


‘கவிக்கோ’ என்று அன்போடு அழைக்கப்படும் முன்னாள் ‘வானம்பாடி’க் கவிஞரான அப்துல் ரகுமானின் கவிதைப்படைப்பு, “தேவகானம்”. வழக்கமான அவரது புதுக்கவிதைப் பாணியிலிருந்து விலகி, முழுதும் மரபுக்கவிதையாலான 356 விருத்தங்கள் இடம் பெற்றுள்ள நூல்.

ரகுமான் இதுவரை காதலைப் பாடினார். கவலைகளைப் பாடினார். ‘ஆலாபனை’ செய்தார். அகாதெமி விருது பெற்றார். இப்போது கடவுளைப் பாட முனைந்து இந்த நூலைப் படைத்திருக்கிறார். இளமையில் காதலும் முதுமையில் ஆன்மிகமும் இயற்கையின் வரமல்லவா?
“இளமையில் சிவவாக்கியர் பாடல்களைப் படித்தபோது அவற்றில் ஏதோ ஓர் ஈர்ப்பு இருப்பதை உணர்ந்தேன். அந்த ஈர்ப்பு பாடல்களின் கருத்தில் மட்டுமல்ல, யாப்பிலும் இருந்தது” என்று குறிப்பிடுகிறார் கவிஞர். ஆரம்பப் பாடலைப் பாருங்கள்:

சனி, ஜூன் 29, 2013

சாரு ஜயராமன்

அமெரிக்காவில்
ஓட்டல் தொழிலாளர் தலைவி

சாரு  ஜெயராமன் 

சாரு ஜயராமன் என்ற பெயரைக் கேட்டிருக்கிறீர்களா?

2001 செப்டம்பர் 11 அன்று நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாதிகளின் இரு விமானங்களால் தாக்கப்பட்டு சிதைந்து போனபோது 3000க்கும் அதிகமான உயிர்கள் இழக்கப்பட்டன. ‘நைன்-லெவென்’ (‘9/11’) என்று இந்த நிகழ்வை அமெரிக்கர்கள் குறிப்பிடுவர்.

வியாழன், ஜூன் 27, 2013

இன்று அகிலன் பிறந்தநாள்- (ஜூன் 27) - ‘பால்மரக் காட்டினிலே’

தமிழின் மறக்க முடியாத எழுத்தாளர்களில் ஒருவர், அகிலன். 1922ல் இதே ஜூன் 27 ல் பிறந்தவர். 1988 ஜனவரி 31ல் அமரரானவர். அவரது நினைவாக இக்கட்டுரையை எழுதுவதில் நெஞ்சம் நெகிழ்கிறது.
அகிலன் (என்கிற அகிலாண்டம்) 
1960 முதலே கல்கி, விகடன், கலைமகள் இம்மூன்று பத்திரிகைகளும் என் வீட்டிற்கு வரும். (இவை மூன்றும் தான் 'குடும்ப'ப் பத்திரிகைகளாகக் கருதப்பட்டன.   முதலில் மாதம் மும்முறையாகவும் பிறகு வார இதழாகவும் வந்த  'குமுதம்'  இந்த கௌவரத்தை அடைய நீண்ட காலம் ஆயிற்று. எனவே குமுதம் தொடர்ச்சியாக வாங்க மாட்டார்கள்).

புதன், ஜூன் 26, 2013

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் (3): இதோ வந்து விட்டது தீர்ப்பு!


Updated 26 June 2013 (இதோ தீர்ப்பு!)
 
ஃபிஷர் வெர்ஸஸ் யுனிவர்சிடி ஆஃப் டெக்ஸஸ்
  (Fisher vs University of Texas)

இந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

“டெக்ஸஸ் பல்கலைக்கழகம் கூறுவதை ஏற்பதற்கில்லை. ‘இனம்’ என்ற ஒன்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே ‘பன்முகத்தன்மை’ யை (diversity in student body) கொண்டுவர வேறு வழிகள் இல்லை என்பதைப் பல்கலைக்கழகம் சரியாக ஆராய்ந்த பிறகு தான் இம்முடிவை எடுத்ததா என்று சரியான தகவல் இல்லை. எனவே நீங்கள் விசாரித்து சொல்லுங்கள்” என்று அம்மானில அப்பீல் கோர்ட்டுக்கு உத்தரவிட்டதுடன் நிறுத்திக்கொண்டு விட்டது சுப்ரீம் கோர்ட்.

‘கறுப்பினத்தை சேர்ந்தவர்கள் இப்போது பெரும்பான்மையாகப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படித்துவருகிறார்கள். அதே இனத்தவர் ஜனாதிபதியாகவே ஆகியிருக்கிறார். எனவே, தனியாக ‘இனம்’ என்ற ஒரு விஷயத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்’ - என்பது சுப்ரீம் கோர்ட்டின் கருத்து.

செவ்வாய், ஜூன் 25, 2013

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்- 4 முக்கிய வழக்குகள் (2) (updated on 26 June 2013)

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் , வாஷிங்டன் 

இன்று பார்க்கப் போகும்  இரண்டு வழக்குகளும் குடும்ப வாழ்க்கை பற்றிய மாறிவரும் சிந்தனைப்போக்கை ஒட்டியதாகும்.

1.   ஹாலிங்க்ஸ்வொர்த் வெர்ஸஸ் பெர்ரி (Hollingsworth vs Perry)
      2.   யு.எஸ் வெர்ஸஸ் விண்ட்ஸர் (US vs Windsor)

உயிரினங்களின் அடிப்படைப் பண்புகளில் தலையாயதாகக் கருதப்படும் இனப்பெருக்கம் என்ற கொள்கையானது மனிதனைப் பொறுத்தவரையில் தனது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது எனலாம். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது: (1) சில மனிதர்களால் இனப்பெருக்கம் செய்ய முடிவதில்லை. இதற்கு மருத்துவம் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம். (2) சில மனிதர்கள் இனப்பெருக்கம் செய்ய விரும்புவதில்லை. இதற்கும் மருத்துவ மற்றும் பொருளாதாரக் காரணங்கள் இருக்கலாம்.