புதன், மார்ச் 15, 2017

காலம் வரும் ....


பதிவு எண்  18/ 2017
காலம் வரும்  .... 
-இராய செல்லப்பா

திருமணமான அடுத்த ஆண்டே முதல் குழந்தை பிறந்தது. அழகான பெண்குழந்தை. ‘மகாலட்சுமி பிறந்திருக்கிறாள்’ என்று மகிழ்ந்தார், மாமனார்.
கண்ணனும் துளசியும் -துலாபாரம்

முதல் குழந்தை பெண் குழந்தையாக இருப்பதுதான் குடும்பத்துக்கு நல்லது. சிறிது சிறிதாக நகை நட்டுக்கள் சேரும்.  உரிய நேரத்தில் திருமணம் செய்விக்க முடியும், பேரன் பேத்தி எடுக்க முடியும். ஆண் குழந்தையை விடப் பெண் குழந்தைக்குப் பொறுப்புணர்ச்சியும், அறிவு முதிர்ச்சியும் சீக்கிரமே ஏற்படும். அதனால், அடுத்த குழந்தை பிறக்கும்போது  இவளே  பாதுகாவலாக இருப்பாள். வளர வளரத் தாய்க்கும் உதவியாக இருப்பாள் என்று விளக்கினார்.

தான்  நினைத்தபடியெல்லாம் உடை உடுத்தவும், அலங்காரம் செய்யவும், பின்னி முடிக்கவும்,  தான் கற்காத கவின் கலைகளை யெல்லாம் கற்பிக்கவும் பெண்குழந்தைதான் சரி என்று பெற்றவளும் மகிழ்ந்தாள். எப்படியோ அனைவருக்கும் திருப்திதான்.

சில விஷயங்களில் நாம் திட்டமிட முடிவதில்லை, திட்டமிட்டாலும் எண்ணியது நடப்பதில்லை அல்லவா? இரண்டாவதும் பெண்ணாகவே பிறந்தது. அவளும் இவளும் நல்ல தோழிகளாக இருப்பார்கள் என்று பூரிப்போடு சொன்னார் மாமனார். அடுத்தது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் பாருங்களேன் என்று அவர் சொன்னதை அவரே ரசித்தாரா என்று தெரியாது. நாட்கள் கடந்தன.

இயல்பாகவே தன்னம்பிக்கை உடையவன் நான். ஆனால் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தபிறகு, மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்புவதற்கும், ஏன், எதிர்பார்ப்பதற்கும்  தன்னம்பிக்கை மட்டுமே போதுமானதாக இருக்காது என்று தோன்றியதால்,  இறைவனின் துணையை நாட முடிவு செய்தோம். திருப்பதி சென்று வந்தோம். சன்னதியில் வேங்கடவனை வணங்கிவிட்டு வெளியில் வந்தவுடன் குதூகலத்துடன் இருந்தாள் துணைவி. உத்தரவு கிடைத்துவிட்டதாம்!

பல நாட்களாகத் திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவனை வழிபடவேண்டும் என்று எண்ணம் இருந்தது. அதையும் நிறைவேற்றிக் கொண்டோம். ஏற்கெனவே நேர்ந்துகொண்ட வேண்டுதல்களுடன், ஆண்குழந்தை வேண்டும் என்பதும் சேர்ந்துகொண்டது.

அதற்குமுன், சென்னை மயிலாப்பூர் லஸ்முனை நவசக்தி விநாயகரை வணங்கினோம். அண்ணனுக்குப் பிறகுதானே தம்பி? நவசக்தி விநாயகரைத் தொழாமல் எந்த முக்கியமான காரியத்தையும் தொடங்கமாட்டாள் என் மனைவி.

அங்கிருந்து கொஞ்சம் தொலைவில், ‘கலைமகள்’ அலுவலகத்துக்கு  அருகில் இருந்த முண்டகக்கண்ணி அம்மனும் அவளுக்கு ஆகிவந்த தெய்வம். அங்கும் தொழுதோம்.

கருவுற்றாள்.

நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக எங்கள் பயமும் வளர்ந்தது. மூன்றாவதும் பெண் குழந்தையாக இருந்துவிட்டால்? அப்படி நேர்ந்துவிட்ட நண்பர் ஒருவரின் மூன்று பெண்களும் கண்ணில் நிழலாடினர். குறைந்த வருமானத்தில் பெரிதும் சிரமப்பட்டார் அவர். நாங்கள் இருவரும் சம்பளக்காரர்கள் என்பதால், குழந்தை வளர்ப்பிற்கான பொருளாதாரச் சுமை இல்லைதான். ஆனால் ஆண்குழந்தையைப் பெற்றவர்கள் எல்லாரும் நம்மை இளக்காரமாகப் பார்ப்பார்களோ என்ற உலகியல் அச்சம் அடிக்கடி ஏற்பட்டுக்கொண்டே இருந்தது.

மகப்பேறு விடுப்பில் கடலூரிலுள்ள தாய்வீட்டிற்குச் சென்றாள் மனைவி. சென்னையில் நான்.  

அந்த நாளும் வந்தது.....

பகல்நேரம். ஒருமணி இருக்கலாம். வங்கியில் அதுதானே  கூட்டமும் பரபரப்பும் மிகுந்த நேரம்! அப்போது ‘டிரங்க் கால்’ வந்தது. 
மருத்துவமனையில் இருந்து மாமனார் பேசினார். ‘இருவரும் நலம்’ என்றார். குரலில் மகிழ்ச்சி தெரிந்தது.

ஓ, குழந்தை பிறந்துவிட்டதா? எனக்கு திக்திக் என்றது. என்ன குழந்தை என்றல்லவா முதலில் சொல்லியிருக்க வேண்டும்? இருவரும் நலம் என்கிறாரே என்று கோபம் வந்தது.

.....மணிக்கு வலி எடுத்தது. உடனே வண்டியை வரச்சொல்லி ஆஸ்பத்திரிக்குப் போனோம். அதற்குள் டாக்டர் சாப்பிடுவதற்கு வீட்டுக்குப் போய்விட்டாராம். உடனே வரச்சொன்னோம். வந்தவுடனேயே பிரசவம் ஆகிவிட்டது. சுகப்பிரசவம்...இருவரும் நலம்.. என்றார்.

எனக்கோ பொறுமை எல்லை கடந்துவிட்டது. இரத்த அழுத்தம் அதிகமாவதுபோல் இருந்தது. ஆணா, பெண்ணா என்றேன் சற்றே உயர்ந்த குரலில். மறுபடியும் பெண்தான் என்று சொல்லிவிடுவாரோ என்று அச்சம் ஒருபக்கம் உறுத்திக்கொண்டே இருந்தது. வங்கியில் இருந்த அனைவரும் என்னை ஆர்வத்தோடு பார்த்தார்கள்.

கடகடவென்று சிரித்தார் மாமனார். ஆண் குழந்தைதானே வேண்டும் என்று எதிர்பார்த்தீர்கள்? அதே தான்! ஆண் குழந்தைதான். நட்சத்திரமும் நல்ல நட்சத்திரம்தான் என்றார். முருகன் பேராகவே வைத்துவிடலாம் என்றார். கார்த்திக் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தாள் மனைவி.
****
நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக  (தமிழில் வேறு சொற்களே இல்லையா?) வளர்ந்தான் கார்த்திக். மூன்றாண்டுகள் சென்னை, மூன்றாண்டுகள் வெளிமாநிலம் என்று ‘பொருள்வயின் பிரிவு’ எனக்கு நிகழ்ந்துகொண்டிருந்தது. அதாவது ‘டிரான்ஸ்ஃபர்’. மனைவி ஆசிரியையாக இருந்ததால் கோடை விடுமுறைநாட்கள் நிறைய உண்டு என்று ஆவலாக இருந்தேன். குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியூர் செல்லலாம், பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொடுத்த கோவில்களுக்குப் போய் நன்றி தெரிவிக்கலாம்  என்று எண்ணினேன். ஆனால் கோடை விடுமுறை முழுவதும் அவளுக்குத் தேர்வுப் பணியும், அதன் பிறகு விடைத்தாள் திருத்தும் பணியும் வந்துவிட்டதால் நினைத்தது நடக்கவில்லை.

இதே போல் ஒன்றல்ல, அடுத்தடுத்து பல ஆண்டுகள் நடந்தது. அதன்பிறகு, மூத்த குழந்தைகள் உயர் வகுப்புகளுக்குப் போய்விட்டதால், கோடை விடுமுறையில் அடுத்த வருடப் பாடங்களை அவர்களுக்குத் தொடங்கிவிட்டார்கள். எனவே விடுமுறை எடுக்க வழியில்லை. மற்ற நேரங்களில் எனக்கு விடுமுறை கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது.

இடையில் எனக்கு மூன்று இடமாற்றங்கள். எல்லாமே ஏப்ரல்- மே மாதங்களில்தான் வரும். கோடையாவது விடுமுறையாவது.

குருவாயூருக்கு மட்டுமாவது போய்வந்துவிடலாம் என்று நச்சரித்தாள் மனைவி. இவனுக்காக வேண்டிக்கொண்டிருக்கிறேன் என்றாள். எப்போது என்ன வேண்டிக்கொண்டாள் என்று சொல்லவில்லை. கார்த்திக் உயரமாக வளர்ந்துகொண்டிருந்தான்.

ஒருவழியாக ஏதோ ஒரு செப்டம்பர் மாதம் குருவாயூருக்குக் கிளம்பிவிட்டோம்.  நீண்ட ரயில் பயணம். ‘மாலையும் இரவும் சந்திக்கும் பொழுதில்’ கோவிலை அடைந்தோம். என் மனைவி முகத்தில் எல்லையில்லாத மகிழ்ச்சி. குருவாயூரப்பனைச் சந்தித்து நன்றி சொல்லப்போகிற மகிழ்ச்சி. குழந்தைகள் மூவருக்கும் அது புது அனுபவம். குதூகலத்துடன் இருந்தார்கள்.

அப்போது திடீரென்று சொன்னாள், மனைவி. குழந்தைக்குத் துலாபாரம் நேர்ந்துகொண்டிருக்கிறேன். அதை நிறைவேற்றிவிடலாம் அல்லவா? என்றாள். குழந்தை என்றது என் மகனை. அப்போது கார்த்திக் வயது பதின்மூன்று இருக்கும்.

எதிரே பார்த்தேன். கோவில் அலுவலகத்தின் அருகில் பெரியதொரு தராசு தொங்கிக்கொண்டிருந்தது. துலாபாரம் என்றால் ஆசாமியைத் தராசில் உட்கார வைத்து, எடைக்கு எடை ஏதேனும் பொருளை வைத்து, அப்பொருளை கோவிலுக்கு வழங்கிவிடவேண்டும் என்ற விவரம்  எனக்குத் தெரியாது. விசாரித்தேன். துலாபாரத்திற்குச் சிலநூறுகள் கட்டச் சொன்னார்கள். சரி, இவ்வளவுதானே என்று எண்ணிக்கொண்டேன்.

ரசீது கொடுத்த கோவில் பணியாளர் கேட்டார்: ஏலக்காய் போடலாமா? என்று. எதற்குக் கேட்கிறார் என்று புரியாமல் விழித்தேன். ஏலக்காய், பாயசத்திற்கல்லவா போடுவார்கள்?

நல்ல வேளை, என் மனைவி முன்வந்து, ஏலக்காய் வேண்டாம். அதிகம் செலவாகும். வேறு என்ன இருக்கிறது? என்றாள். அப்போதுதான் எனக்குப் புரிந்தது, எடைக்கு எடை ஏலக்காய் போடலாமா என்று அவர் கேட்டிருக்கிறார் என்று. போட்டிருந்தால் சுமார் பத்தாயிரம் ரூபாய் ஆகியிருக்கும்.

வேற ஏதாவது என்றால்..முந்திரி இருக்கிறது, திராட்சை இருக்கிறது, ஆப்பிள் போடலாம். துவரம்பருப்பு போடலாம்.. என்று சொல்லிக்கொண்டே போனார் பணியாளர். விலை உயர்ந்த பொருள்களாகவே அவர் வாயில் வந்தன. 

எதிரில் வாழைப்பழம் மலைபோல் குவிந்துகிடந்தது. ஏன், வாழைப்பழம் போட்டால் என்ன? என்றாள் மனைவி.

ஏமாற்றம் அடைந்தவர் போல், சரிங்க என்று தன் மேலதிகாரியைப் பார்த்தார். அவங்க கேட்கிறதைப் போடுங்க என்றார் அவர்.

பிறகு கார்த்திக்கைத் தராசின் ஒரு தட்டின் மேல் ஏறி உட்காரச் சொன்னார்கள். அவ்வளவு சிறிய பலகையின்மீது உடம்பைக் குறுக்கிக்கொண்டு உட்காருவது சுகமான அனுபவமாயில்லை. கார்த்திக் நெளிந்தான். இன்னொரு தட்டில் வாழைப்பழங்களை ஏற்றினார்கள். ஏற்றிக்கொண்டே இருந்தார்கள். முதலில் அவனை எடைபோட்டுவிட்டு, அதன்பிறகு பொருளை அடுக்கலாமே என்றால், அப்படிச் செய்வது தெய்வக்குற்றமாம். அவனுடைய எடை எவ்வளவு என்று தெரியக்கூடாதாம். 

கோவிலுக்கு வந்திருந்த பெண்களும் வாண்டுகளும் ஏதோ விநோதத்தைப் பார்ப்பதுபோல் சுற்றி நிற்கவும், கார்த்திக்  முகத்தில் சற்றே கூச்சம் படர்வதைக் கண்டேன்.

ஒருவழியாக எடைக்கு எடை வாழைப்பழங்கள் வைத்து, துலாபாரப் பிரார்த்தனை நிறைவேற்றியாகிவிட்டது. பழங்களுக்காக சுமார் ஆயிரம் ரூபாய் ரசீது கொடுத்தார்கள். பணியாளருக்கு டிப்ஸ் ஐம்பது ரூபாய். சிறப்பு அனுமதியுடன் சுவாமி தரிசனம். கேட்டதும் கொடுப்பவனே, கிருஷ்ணா, கிருஷ்ணா என்று போற்றினேன்.

எப்படிடா இருந்தது? என்று சகோதரிகள் இருவரும் கேட்டனர்.

சூப்பராக இருந்தது. தராசில் உட்காரவே முடியவில்லை. முட்டி வலிக்கிறது. அதனால், சின்னக் குழந்தையாக இருந்தபோதே செய்திருக்கவேண்டும் என்றான் கார்த்திக். ஆனாலும் முகத்தில் பெருமிதம் இருந்தது.

அவனை அணைத்துக்கொண்டாள் தாய். அதனால் என்னடா, நாளைக்கு உனக்கு ஒரு பையன் பிறந்தால், தாமதம் இல்லாமல்  உடனே துலாபாரம் செய்துவிடலாம். சரியா? என்றாள். எல்லாரும் சிரித்தார்கள்.

எந்த ஒரு செயலுக்கும் அதற்குரிய காலம் என்று ஒன்று இருக்கும் போலும். அப்போதுதான் அது நடக்கிறது. விதி என்று  சிலர் கூறுவது இதுதானோ?
*****
© Y Chellappa

திங்கள், மார்ச் 13, 2017

பாதிக்கிணறு தாண்டினேன்

பதிவு எண் 17/ 2017
பாதிக்கிணறு தாண்டினேன்  
-இராய செல்லப்பா

ஹைதராபாத்தில் நான் பணியில் இருந்தபோது, நேரத்தை வீணாக்காமல்  ஏதேனும் மேற்படிப்பு படிக்கலாமே என்ற எண்ணம் எழுந்தது. மங்களூரில் எனது நண்பர்கள் சிலர், மாலைநேரக் கல்லூரியில் சட்டப்படிப்பு (BL) சேர்ந்திருந்த நேரம் அது. ஊருக்குள்ளேயே தனியார் சட்டக்கல்லூரி ஒன்று மாலைநேர வகுப்புகளை நடத்திவந்தது அவர்களுக்கு வசதியாகப் போனது. தரமான கல்லூரியாகவும் அது இருந்தது.

வங்கிப் பணிக்குரிய CAIIB என்னும் படிப்பின் இரண்டு பாகங்களையும் பணியில் சேர்ந்த மூன்றாண்டுகளுக்குள்ளேயே வெற்றிகரமாக நான் முடித்திருந்தேன். அதில் Commercial Law, Banking Law and Practice என்ற இரண்டு பாடங்கள் இருந்தன. BL படிப்பின் பாடப்பகுதியில் நான்கில்  ஒரு பங்கை  இந்த இரண்டின் வழியாகவும் படித்திருந்ததால், BL எளிதாகப் படிக்கமுடியும் என்ற நம்பிக்கை எழுந்தது. வங்கியில் சேரும் முன்பு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதியபோது, இந்திய அரசியல் சட்டத்தை அக்குவேறு ஆணிவேறாகப் படித்திருந்தேன். அதுவும் BL படிப்பிற்கு உதவிகரமாக இருக்கும் என்று தோன்றியது. எனவே சட்டம் படிக்கவேண்டும் என்ற அடங்காத ஆவல் எனக்குள் எழுந்தது.

ஆனால் ஹைதராபாத்தில்  மாலைநேரக் கல்லூரி அப்போது இருக்கவில்லை. எனவே அஞ்சல்வழிக் கல்விதான் பயின்றாகவேண்டும். அஞ்சல்வழியாகக் கல்வி போதிக்கும் தொலைதூரக் கல்விமுறையை  இந்தியாவில் மூன்றோ நான்கோ பல்கலைக்கழகங்கள்தான் துவக்கியிருந்தன. அவற்றில் மிகவும் பிரபலமாக இருந்தவை டில்லிப் பல்கலையும், மதுரை காமராசர் பல்கலையும்தான். உண்மையில் காமராசர் பலகலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி போதிப்பு மிகவும் சிறப்பாக இருந்ததாக மற்ற பல்கலைக்கழகங்களே  பாராட்டும் நிலை அப்போது இருந்தது. டில்லியில் BL அஞ்சல்வழியில் இல்லை. மதுரையில் இருந்தது. எனவே அது பற்றிய விவரங்களைத் தேடினேன்.

கணினி வந்திராத நேரம். இணையம் உதிக்காத நேரம். தனியொருவருக்குத் தொலைபேசி இணைப்பு வாங்க ஆறு முதல் பத்தாண்டுகள் ஆன நேரம். எனவே தகவல் பரிமாற்றம் என்பது அஞ்சல்வழியாகத்தான் நடக்கும். மதுரைக்கு அஞ்சல் அனுப்பினேன். நம்பியபடியே ஒரு மாதம் ஆகியும் பதில் வரவில்லை. எம் வங்கியின் மதுரைக் கிளையில் இருந்து ஒருவரை நேரில் அனுப்பி விசாரிக்கச் சொன்னேன். அவர் கொடுத்த தகவல் இது:

மதுரை காமராசரில் முதலில் BL படிப்பு அஞ்சல்வழியில் ஆரம்பிக்கப்பட்டதாம். அதற்கு மிகுந்த வரவேற்பும் இருந்ததாம். அதில் பயின்று பட்டம் பெற்றால், நீதிமன்றத்தில் வாதாடும் தகுதியும் உண்டாம். இது தங்களின் எதிர்காலத்திற்கு வேட்டு வைக்கும் என்று அஞ்சிய   BL நேரடிக் கல்வி மாணவர்கள், அரசியல்ரீதியாக அழுத்தம் கொடுத்து இப்படிப்பைக்  கைவிடுமாறு செய்துவிட்டார்களாம்.  அதற்குப் பதில், BGL என்னும் ‘பொதுச் சட்டங்களில் இளநிலை படிப்பு’ இப்போது நடத்தப்படுகிறதாம் என்று தெரிவித்த அவர், அதற்கான விண்ணப்பத்தையும் வாங்கி அனுப்பியிருந்தார். ஆனால் இதைப் படிப்பதால் நீதிமன்றத்தில் வாதாடும் தகுதியைப் பெறமுடியாது. வெறும் ஏட்டுப்படிப்புக்குத்தான் உதவியாக இருக்கும் என்பதையும் தெரிவித்தார். இன்னொன்றும் சொன்னார்: எனது முகவரி தமிழ்நாட்டிற்குள் இருக்கவேண்டுமாம். மாநிலத்திற்கு வெளியே உள்ளவர்களை அஞ்சல்வகுப்பில் சேர்க்க அனுமதியில்லையாம். யு.ஜி.சி. இன் விதியாம். (இப்போது இல்லை.)

கறுப்பு அங்கி அணிந்துகொண்டு, கைகளை நீட்டிக்கொண்டு, கனம் கோர்ட்டார் அவர்களே.. என்று பராசக்தி வசனம் பேசும் ஆசை எனக்கு இருந்ததில்லை. கிடைத்தவரை போதும் என்று தோன்றியது. சட்டம் என்பது இருட்டறை என்று ஒருவரும், சட்டம் என்பது கழுதை என்று ஒருவரும் சொன்னதை வள்ளுவப் பெருந்தகையிடம் சொன்னபோது அவர் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று ஒரே போடாகப் போட்டார். அதற்காகத்தான் சட்டம் படிக்க விரும்பினேன். உடனே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்பினேன். பணமும் செலுத்தினேன். சென்னையிலுள்ள வீட்டு முகவரியைத்தான் பதிந்தேன். 

சில மாதங்களுக்குப் பிறகு என்னை மாணவனாக ஏற்றுக் கொண்டதற்கான சான்றுகளும், பாடப்பகுதிகளின் விவரங்களும் வந்தன. பல்கலைக் கழகத்தின் பெயர்பொறித்த அடையாள அட்டையில் என் பெயரும் பதிவெண்ணும் எழுதி அனுப்பியிருந்தார்கள். தேர்வு மையத்தில் நுழைய அடையாள அட்டை அவசியமாம். சட்டம் படிக்கவேண்டும் என்னும் உறுதியை எனக்குள் தொடர்வதற்கான உந்துசக்தியாக அந்த அட்டையை அடிக்கடி எடுத்துப் பார்க்க ஆரம்பித்தேன்.

ஆனால்  எனது உற்சாகம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அஞ்சல் மூலம், பாடப் பகுதிகள் சிறுசிறு புத்தகங்களாக வரத்தொடங்கின. ஒவ்வொன்றிலும், ஏராளமான அச்சகப் பிழைகள். ஆங்கில வாக்கியக் கட்டமைப்பில் இருந்த எழுத்துப் பிழைகளை விடுங்கள். அதை எப்படியும் புரிந்துகொண்டு சரியான ஆங்கிலத்தை நம்மால் எழுதிவிட முடியும். (நான் தமிழ் மீடியத்தில் பயின்றவன் என்பதால், எனக்கு ஆங்கில அறிவு சராசரியை விடவும் அதிகமாகவே இருந்தது!)  ஆனால் எண்களில் காணப்பட்ட அச்சுப் பிழைகள்தாம் மூளையைக் குழப்பியது. உதாரணமாக, ஒரு பாடத்தில் இந்திய அரசியல் சட்டம் பிரிவு 632 இன் படிஎன்று அச்சாகியிருந்தது. அது தவறாக இருக்கலாமோ என்ற ஐயம் எழுந்தது. அது 6-3-2 அல்ல, 6-2-3 அல்லது 3-2-6 அல்லது 2-3-6 ஆக இருக்கவேண்டும் என்று தோன்றியது. மனைவியின் முதல்நாள் கண் மை, கணவனின் மறுநாள் கன்னத்தில் பளிச்சென்று வெளிப்படுவதுபோல,   ஏற்கெனவே படித்திருந்த அரசியல் சட்டப்படிப்பு இன்னும் மறக்காமல் இருந்தது. உடனே BARE ACTஐ ப் புரட்டினேன். நான் நினைத்தபடியே அது 632 அல்ல, 326 தான்.

உடனே ஒருவிதப் பரபரப்பு என்னை ஆட்கொண்டது. சட்டத்திற்கு அடிப்படையே செக் ஷன் எனப்படும் பிரிவுகள்தான். அதிலேயே பிழை என்றால்? என்னடா  மதுரைக்கு வந்த சோதனை என்ற தொடர் என் மாதிரியான அஞ்சல்வழி மாணவன் உருவாக்கியதாகத்தான் இருக்கவேண்டும். மதுரை காமராசரை நம்புவதில் பயனில்லை என்று தோன்றியதால், சம்பந்தப்பட்ட BARE ACTகளை எல்லாம்  தனித்தனியாகவும், விளக்க உரையுடன் கூடியதாகவும் ஏராளமான புத்தகங்களை வாங்கிக் குவித்தேன். என் வங்கிக்கு மிக அருகிலேயே சட்ட நூற்கள் விற்கும் புத்தகக்கடை இருந்ததால் அது சாத்தியமாயிற்று. (அப்போது பெரும்பாலான சட்டப் புத்தகங்கள், அலகாபாத்தில் உள்ள பதிப்பகங்களால் வெளியிடப்பட்டவை. ஒன்றிலாவது  சின்னதாகவேனும் ஒரு பிழை இருக்கவேண்டுமே! கிடையாது. இன்றளவும் சட்டப் புத்தகங்கள் என்றால் அலகாபாத் பதிப்பகங்கள் அதே அளவு ஒழுங்குடன் வெளியிடுகின்றன என்கிறார்கள்.)

BGL க்கான பாடங்களை மொத்தம் சுமார் முப்பது, நாற்பது சிறு புத்தகங்களாக அவ்வப்பொழுது அனுப்பிக்கொண்டிருந்தார் மதுரை காமராசர். சில சமயம் 27ஆவது புத்தகம் வந்துவிடும். 23ஆவது வந்திருக்காது. வரும் வரும் என்று காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. கடிதம் அனுப்பினால் வீண்செலவு. பதிலே வராது. ஆனால், படிப்புக் காலம் முடிந்து சில மாதங்கள் ஆனபிறகும் இம்மாதிரி விடுபட்ட புத்தகங்கள்  வந்துகொண்டே இருந்தன. அனுப்புகை  எழுத்தர் தன் பணியைக் குறையின்றி முடித்துவிட்டார்.  ஆனால் எழுத்துப் பிழையும் எண் பிழையும் இல்லாத ஒரே ஒரு புத்தகமாவது வந்துவிட்டால் போதும், நான் பிறவி எடுத்த பயன் கிட்டும் என்று ஏங்கினேன். அருளவில்லை மதுரை காமராசர்.

தேர்வு நேரம் வந்தது. ஏப்ரல் மாதம். வங்கிகளில் மார்ச் இறுதி முதல் ஏப்ரல் பதினைந்து வரை  தணிக்கை நடக்கும் நேரம். விடுமுறை கிடைப்பது கடினம். அதிலும், என்னைப்போல் (அப்போது) மேலாளர்களாக இருப்பவர்களுக்கு  விடுமுறை என்றால் தலைமை அலுவலகம் அனுமதிக்கவேண்டும். மண்டலத்தலைவர் மட்டும் அனுமதித்தால் போதாது. கெஞ்சிக் கூத்தாடி ஒரு வாரம் விடுமுறை பெற்றேன். சென்னைக்கு வந்தேன். தேர்வு நடக்கும் பள்ளிக்குச் சென்றேன். அங்கே தேர்வு நடப்பதற்கான அறிகுறியே இல்லை. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தலைமை ஆசிரியரும் இல்லை. நல்லவேளை, சிறியதொரு அறிக்கை  அங்கே ஒட்டியிருந்தார்கள். ‘இங்கு நடக்கவிருந்த தேர்வுகள், அருகிலுள்ள ...பள்ளியில் நடைபெறும்’ என்று இருந்தது. நேற்றைய தேதியிட்ட அறிவிப்பு. அவர்களுக்கு என்ன சங்கடமோ! புதிய மையத்தைக் கண்டுபிடித்து உரியநேரத்திற்குள் அரங்கில் நுழைந்துவிட்டேன்.

தேர்வு எழுத வந்திருந்தவர்கள் சுமார் நூறு பேர்தான்.  பலர் முதல்முறையாகவும், சிலர் இரண்டாவது மூன்றாவது முறையாகவும் எழுதுபவர்களாக இருந்தார்கள். நான் நன்றாக எழுதினேன். இரண்டுநாள் கழித்து நடந்த அடுத்த தாளிலும் நன்றாகவே எழுதினேன். நான்கு தாள்களுக்குப் பணம் கட்டியிருந்தாலும் இரண்டுடன் நிற்கவேண்டியதாயிற்று. ஏனெனில், மற்ற  இரண்டு தாள்களும் நான்கு நாள் இடைவெளிக்குப் பிறகுதான் நடக்கவிருந்தன. எனக்கு அதுவரை விடுமுறை இல்லை.

உரிய நேரத்தில் தேர்வு முடிவுகள் வந்தன. முதல் தாளில் அறுபதும், இரண்டாவதில்  நாற்பது சொச்சமும் என்றும் ஞாபகம்.

சட்டப் படிப்பு என்பது கணக்குப் படிப்பு மாதிரி. பொதுவாக, பேப்பர் திருத்துவோர்  மதிப்பெண்களைக் குறைக்க வழியில்லை.

கேள்வியில் கொடுக்கப்பட்டுள்ள சட்டச் சிக்கல் எது என்பதை இனம் காணுதல் முதல் பகுதி. அது, எந்தச் சட்டத்தின் எத்தனையாவது  பிரிவில் வருகிறது என்பது இரண்டாம் பகுதி. அதை எவ்வாறு தீர்க்கவேண்டும் என்ற எனது சிபாரிசு மூன்றாவது பகுதி. அதுபோன்ற வழக்குகளில் ஏற்கெனவே தீர்ப்புகள் வெளியாகியிருந்தால், அந்த வழக்குகளின் பெயரையும் சுருக்கமான விவரங்களையும் குறிப்பிட வேண்டும் என்பது நான்காம் பகுதி. இந்த நான்கையும் நான் சிறப்பாகவே செய்திருந்தேன். எனவே எப்படி நாற்பதும் அறுபதும் வந்தது என்று கவலைப்பட்டேன். தொலையட்டும், நாம் படிப்பது அறிவு வளர்ச்சிக்குத்தானே என்று ஆறுதல் கொண்டேன்.

அடுத்த ஆண்டு, மொத்தம் எட்டுத்  தாள்களுக்குப் பணம் கட்டினேன். இம்முறையும் விடுமுறை ஒருவாரம்தான் கிடைத்தது. ஆனால், தேர்வு அட்டவணைப்படி  நான்கு தாள்களை அந்த வாரத்தில் எழுதமுடியும் என்பது மகிழ்ச்சியளித்தது. ஆனால் அதற்கும்  எனக்குச் சோதனை வந்தது. இரண்டு தாள்கள் எழுதியபிறகு, அலுவலகத்தில் அவசரமான காரியமாகத் திரும்பிவரச் சொன்னார்கள். விடுமுறை ரத்து செய்யப்பட்டதாக தந்தி வந்தது. ஆனால் எந்த அவசரக் காரியமும் அங்கே இருக்கவில்லை என்று போனபிறகுதான் தெரிந்தது. கேட்டால், அவருக்கும் மேலாக இருந்த இன்னொரு அதிகாரி அனுப்பிய தந்தியாம் அது. இளைஞர்களின் உயர்கல்விமீது அடங்காத ஆத்திரம் கொண்டவர் அவர். 

எப்படியோ, எழுதிய இரண்டு தாள்களும் மிக நன்றாக எழுதியிருந்தேன். எப்படியும் எண்பது மதிப்பெண்ணுக்குக் குறையாது என்று நம்பினேன்.

ஆனால் தேர்வு முடிவுகள் வரவேண்டிய சமயத்தில் ஓர் அதிர்ச்சி அறிவிப்பு வந்தது. ‘சில தேர்வு மையங்களில் ஓழுங்கான முறையில் தேர்வு நடக்கவில்லை என்பதால், அனைத்துத் தேர்வுகளையும் ரத்து செய்வதாக’ அறிவிப்பு வந்தது. அடப்பாவிகளா! வெளிமாநிலத்தில் இருந்து விடுமுறையும் ரயில் செலவும் செய்துகொண்டு வருபவனின் துன்பத்தை உணரவே மாட்டீர்களா?

சட்டப் படிப்பு இவ்வாறாகப் பாதிக் கிணற்றுடன் நின்றுவிட்டது. மீதிக்கிணற்றைத் தாண்டவேயில்லை நான்.  

உடனடி ஊர் மாற்றம், பதவி உயர்வு, கணினித்துறையில் மாற்றம், அதற்கேற்ற கடமைப் பெருக்கம், இலக்குக்களைப் பின்தொடர்ந்து ஓடுதல், குழந்தைகளின் கல்வி...அதனால் வேறு பணிகளுக்கு நேரமின்மை...என்று சூழ்நிலைகள் மாறிவிட்டன.

இப்போதெல்லாம் யாரும் பாதிக்கிணறு தாண்டுவதில்லை என்று கேள்விப்படுகிறேன். அஞ்சல்வழிக் கல்வியில் பதிவுசெய்த சில நாட்களிலேயே சில முகவர்கள் உங்களோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, தேர்வை எப்படி எழுதினாலும் சரி, நீங்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண்களை வாங்கித்தர முடியும் என்று உறுதி யளிக்கிறார்களாம். செலவும் அதிகமில்லை என்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீதியின் தரம் தாழ்ந்து போவதைத் தடுக்கமுடியும் என்று தோன்றவில்லை.
****
(c) Y Chellappa

email: chellappay@gmail.com

வியாழன், மார்ச் 09, 2017

ஒரு நேரடி ரிப்போர்ட்- 2

பதிவு எண் 16/2017
ஒரு நேரடி ரிப்போர்ட்- 2 (நிறைவுப்பகுதி)
சற்று நேரம் கழித்து வெளியில் வந்த தலைவர், என்னிடம் மாடி அறையைக் காட்டி, ‘எல்லா இடங்களையும் ஒன்று விடாமல் சோதனை செய்யவேண்டும். பத்திரங்கள், எஃப்.டி. ரசீதுகள், வங்கிக் கடிதங்கள், செக் புத்தகங்கள், அல்லது இம்மாதிரி காகித ஆவணங்கள் எல்லாவற்றையும் எடுத்து லிஸ்ட் போட வேண்டியது உங்கள் பொறுப்பு’ என்றார்.  
நியூயார்க்கில் எடுத்த படம்
மற்ற இருவரையும் பார்த்து, ‘அலமாரிகள், சூட்கேஸ்கள், பைகள், அட்டைப் பெட்டிகள் என்று எல்லாவற்றையும் இரண்டு பேரும் சேர்ந்து லிஸ்ட் போடுங்கள். பிறகு என் முன்னிலையில் ஒவ்வொன்றாகத் திறந்து உள்ளிருப்பவற்றைப் பார்க்கலாம். தேவையானதை மட்டும் ஃபைனல் லிஸ்ட்டாக எழுதிக்கொள்ளலாம்’ என்றார்.

எனக்கு உள்ளுக்குள் ஆத்திரமாக வந்தது. சாட்சிக்கு ஆள் வேண்டும் என்று சொல்லிவிட்டு எடுபிடி வேலை செய்யச் சொல்கிறாரே என்பது ஒரு காரணம். இந்த ரெய்டை யார் மீது நடத்துகிறோம், தனி மனிதரா, நிறுவனமா, எதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று ரெய்டு நடக்கிறது என்று அடிப்படை விளக்கமின்றி வேலை வாங்குகிறாரே என்பது இன்னொரு காரணம். வங்கியில் எனக்குக் கீழ் இருபத்தைந்து பேர் வேலை பார்க்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் சரியான விளக்கம் சொல்லாமல் வேலை வாங்கியதில்லை நான்.

‘மன்னிக்க வேண்டும், உங்கள் ஐடி கார்டைப் பார்க்கவேண்டும்’ என்றேன் தலைவரிடம். கொடுத்தார், சற்றே துணுக்குற்றவராக. பெயர்: (ஏதோ ஒரு) அகர்வால். பதவி: சிபிஐ தலைமையகத்தில் சீனியர் இன்ஸ்பெக்டர்.

‘மிஸ்டர் அகர்வால், எங்களை இங்கே அழைத்து வந்தீர்கள் சரி; அதற்கான அதிகாரபூர்வ ஆணையைக் காட்டவில்லையே?’ என்றேன்.

‘அப்படியா, மன்னிக்க வேண்டும், ஜெயின் உங்களிடம் எதுவும் கூறவில்லையா?’

இல்லை என்று தலையசைத்தேன். கல்யாண மண்டபத்தில் என்னை முதலில் பார்த்துக் காரில் ஏற்றிக்கொண்டாரே அவர்தான் ஜெயின். அகர்வாலுக்கு மேலதிகாரி.

‘ஐ யாம் சாரி. மத்திய அரசாங்கத்தின் நிறுவனமான ....இல் மூத்த அதிகாரியாக இருக்கும் திரு. கண்ணப்பன் மீது நிறைய லஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு வந்திருக்கிறது. அதன் உண்மை கண்டறிவதற்காக இந்த ரெய்டு நடக்கிறது. இப்போது உள்ளே போனாரே அவர்தான் கண்ணப்பன். போதுமா?’ என்றவர் அதற்கான உத்தரவைத் தன் கைப்பையிலிருந்து எடுத்துக் காட்டினார். மற்ற இருவரும் எட்டிப் பார்த்தனர்.    

கண்ணப்பனும் தம்பியும் இன்னும் அறையில் இருந்து வெளியில் வரவில்லை. அவர்கள் வெளியில் வர மாட்டார்கள். இன்னும் விசாரிக்கவேண்டியது பாக்கி இருக்கிறது. நானும் உள்ளே போகிறேன். முக்கியமான விஷயம் என்றால் கதவைத் தட்டுங்கள். கொடுத்த வேலையைச் சீக்கிரமாக முடித்துவிடுங்கள் என்று கூறியபடி உள்ளே போனார் அகர்வால்.
 ****   
எனக்குச் ‘சப்’பென்று ஆனது. பெரிய கல்லூரியின் அதிபரை விசாரிக்கப் போகிறோம், கோடிக்கணக்கில் நகையும் ரொக்கமும் கண்டுபிடிக்கலாம், வெளியில் சொல்லக்கூடாது என்றாலும் குறைந்த பட்சமாக நம் பட்டத்து ராணியிடமாவது பெருமையாகப் பேசிக்கொள்ளலாம் என்ற கனவுகள் தகர்ந்து போயின. இந்தக் கண்ணப்பன் வெறும் அதிகாரி. ஆயிரமோ பத்தாயிரமோ லஞ்சம் வாங்கியிருக்கிறார் அவ்வளவுதான். இதற்கு ஏன் இத்தனை பில்ட்-அப் என்று புரியவில்லை.

வெளி மாநிலத்தில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது எமது வாடிக்கையாளரான ஓர் அரசு அதிகாரி மீது இப்படித்தான் விசாரணை என்று வந்தார்கள். மாதாமாதம் இவர் ....என்ற ஊருக்கு டிராஃட்  எடுத்து அனுப்பிக்கொண்டிருந்ததாக எங்களுக்குப் புகார் வந்துள்ளது. எனவே அந்த விவரங்களைக் கொடுங்கள் என்றார் விசாரணை அதிகாரி.

இப்படி மொட்டையாகக் கேட்டால் தருவதற்கில்லை. எழுத்துமூலமாகக் கேளுங்கள். எந்தத் தேதியில் இருந்து எந்தத் தேதி வரை தகவல் வேண்டும் என்பதை முக்கியமாகக் குறிப்பிடுங்கள் என்றேன்.

நீங்கள் கேட்பீர்கள் என்று தெரியும். இந்தாருங்கள் அதிகாரபூர்வமான வேண்டுகோள் என்று காகிதத்தை நீட்டினார் அவர். குறிப்பிட்ட அதிகாரி, என்றைக்குக் கணக்கு ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து இன்றுவரை தகவல் வேண்டுமாம்.

வங்கியில் கணினி வந்திராத காலம். நான்கு ஓரமும் சிதைந்துபோன தடிமனான லெட்ஜர்கள் பலவற்றைப் புரட்டிய பிறகுதான் தெரிந்தது, அந்த அதிகாரியின் கணக்கு, இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்திருப்பது! இன்னும் சற்றே தோண்டியபோதுதான் விளங்கியது, அவர் ஐந்து வயதுக் குழந்தையாக இருந்தபோதே தொடங்கிய கணக்கு அது என்று! (அந்த வங்கிக் கிளைக்கு வயது அறுபது.)

பத்துநாள் தவணை கேட்டேன். வயதான ஒரு பியூன் இருந்தார். அவருக்குத்தான் பழைய லெட்ஜர்கள் இருந்த இடம் தெரியும். ஒட்டடைக் குவியல்களுக்கு நடுவே போராடிப் பார்த்து பத்தொன்பது லெட்ஜர்களைக் கண்டுபிடித்தார். அப்படியும் ஒன்றிரண்டு கிடைக்கவில்லை. பெருச்சாளிகள் தின்றுபோட்ட குவியல்களைக் காட்டினார். அதில் இருக்கலாம் என்றார். விடுங்கள், இருப்பதை வைத்துச் சமாளிக்கலாம் என்றேன். புதிதாக இன்னொரு மாநிலத்தில் இருந்து பணியில் சேர்ந்த அதிகாரி ஒருவரை விவரம் சேகரிக்கும் பணியில் அமர்த்தினேன். இம்மாதிரி காலணா பொறாத வேலைகளுக்குப் புதியவர்கள்தான் லாயக்கு என்பது அதிகாரவர்க்கத்தின் அனுபவம். கடைசியாகக் கிடைத்த விவரங்களைப் பட்டியல் இட்டோம். ஏதோ சில வருடங்களில் அவ்வப்பொழுது முன்னூறு அல்லது நானூறு ரூபாய்க்கு டிராஃட் எடுத்திருந்தார் அவர். அவ்வளவே. அதுவும் ஊரில் இருந்த தன் தாயின் பெயருக்கு.

விவரங்களைப் பெற்றுக்கொண்ட விசாரணை அதிகாரி நன்றி சொன்னார். புகார், பொய்யானது என்று தெரியுமாம். ஆனாலும் விசாரித்தாக வேண்டுமல்லவா என்றார்.

‘படுபாவி, வங்கி என்றால் கிள்ளுக்கீரையா? இம்மாதிரி இருபத்தைந்து வருடத்து விவரங்களை எந்த அரசு அலுவலகத்தில் இருந்தும் கேட்டவுடன் பெற்றுவிட முடியுமா?’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். (அவர் போன பிறகுதான்!)

இந்தக் கண்ணப்பனும் அப்படி ஏமாற்றிவிடக்கூடாதே என்று கவலை வந்தது. நான் பங்குபெறும் முதல் ரெய்டு அல்லவா? ஏதாவது கவர்ச்சிகரமான தகவலைக் கண்டுபிடித்துக் கொடு, ஆண்டவனே!
***
மாடி அறைக்குப் போனேன். பெரிய அறை என்று சொல்ல முடியாது. இருபதுக்குப் பதினைந்து இருக்கும். சின்னதாய் ஒரு குளியலறை இருந்தது. துணி உலர்த்தும் கொடி இருந்தது. அதில் நேற்றுக் குளித்தவரின் பனியனும் ஜட்டியும் தொங்கின. பனியன், வாங்கியபோது  வெள்ளை நிறமாக இருந்திருக்கலாம். ஜட்டியின் நிறத்தை வர்ணிக்கப்போவதில்லை. முடியாத காரியத்தில் தலையிடுவானேன்!

சுவரை ஒட்டிப் புத்தக அலமாரி நின்றது. இரண்டு மேசைகள் இருந்தன. ஒன்றில் கணினி. இன்னொன்று எழுதும் மேசை.

மேசை இழுப்பான்களில் இருந்த காகிதங்களை வெளியில் எடுத்தேன். அலமாரியில் புத்தகங்களுக்கு நடுவே செருகப்பட்டிருந்த  துண்டுக் காகிதங்களையும் எடுத்தேன். ஒன்றில் ‘மாலதி: 897…’ என்ற அலைபேசி எண் இருந்தது. ஆனால் ஒன்பதே இலக்கங்கள். பின்புறம் தி.நகர் ஓட்டல் ஒன்றில் இருவர் சாப்பிட்ட 325 ரூபாய்க்கான பில்.

அலமாரிக்கு மேல் இரண்டு பழைய சூட்கேஸ்கள் இருந்தன. குளியலறை பனியனை எடுத்துவந்து தூசியைத் தட்டினேன். உள்ளே வெறும் காகிதங்கள்தான். யார் யாருக்கோ கண்ணப்பன்  எழுதிய கடிதங்களின் கார்பன் காப்பி. மனைவிக்குத் தொடர்ந்து வியாதிகள் படுத்துகிறது, என்ன செய்யலாம் என்று கோயம்புத்தூர் சாமியாருக்கு எழுதிய கடிதத்திற்கும் காப்பி இருந்தது. ஒரு பையன் ஜாதகம், பெண் ஜாதகம் இருந்தது. தெரிந்தவர்களுக்குப் பயன்படுமா என்றால்  இரண்டிலும் செவ்வாய் தோஷம். ஏதோ ஒரு கூட்டுறவு வங்கியில் பத்து ரூபாய் ஷேர்கள் முப்பதிற்கான ரசீது. கூடவே ஒரு நகைக்கடனுக்குப் பணம் கட்டிய ரசீதும் ‘பின்’னியிருந்தது.

வேறு ஏதாவது காகிதங்கள் உண்டா என்று பார்த்தேன். ஒரு மூலையில் தினசரிச் செய்தித்தாள்கள் குவிந்திருந்தன. தேர்தல் நேரத்துக் கருத்துக் கணிப்புகளைக் கொண்ட ‘நக்கீரன்’, ‘ஜூனியர் விகடன்’ இருந்தன. ஸ்டேட் பேங்க் கிரெடிட் கார்டுக்கான  மாதாந்திர பில்கள் கிடைத்தன.
டாட்டா டெலிகாமின் ஏழாவது நினைவூட்டுக் கடிதம்: ‘ஒரு வாரத்திற்குள் பணம் செலுத்தவில்லையென்றால் எழும்பூர் நீதிமன்றத்தில்...’

எல்லாவற்றையும் அறையின் நடுப்பகுதியில் பரப்பினேன்.

அகர்வால் வந்தார். காகிதக் குவியலைக் கண்டதும் முகம் மலர்ந்தார். ‘வெரி குட்’ என்றார். குப்பைக் கூடைகளை ஆராய்ந்தீர்களா என்றார். சிபிஐ காரர்கள் முதலில் குப்பைக்கூடையைத்தான் எடுப்பார்களாம். முக்கியமான துப்பு அங்குதான் கிடைக்குமாம்.

அறையின் ஒரு மூலையில், குளியலறைப் பக்கமாக  ஒரு அழுக்கான பிளாஸ்டிக் குப்பைக்கூடை இருந்தது. அதில் காகிதங்கள் இல்லை. மூடியில்லாத ஷேவிங் கிரீம் டியூப், லேசாகத் துருப்பிடிக்க ஆரம்பித்திருந்த இரண்டு பிளேடுகள், ‘ரின்’ சோப்பின் கடைசித் துண்டுகள், அதிக நீளமில்லாத தலைமுடிக் குவியல், தீர்ந்துபோன தேங்காய்எண்ணெய் பாட்டில், பயன்படுத்தி உடைந்துபோன பல் குத்தும் குச்சிகள் முதலியன இருந்தன.  செத்துப்போன கரப்பான் பூச்சிகள்மீது எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. வீட்டில் வேலைக்காரி இல்லை போலும்.     

கணினி மேசைக்கு அடியில் சற்றே நாகரிகமான குப்பைக்கூடை இருந்தது. காலியான பிரிண்டர் இங்க் கார்ட்ரிட்ஜ்கள், சிடிக்களின்  பிளாஸ்டிக் மேலுறைகள், சுடோக்கு ஆரம்பித்து முடிக்காமல்  கிழித்துப்போட்ட நாளிதழ்த் துண்டுகள், லக்னோ போய்வந்த ரயில் டிக்கட், வங்கியின் இன்னொரு கிளையில் சென்று பணம் எடுத்ததற்காக விதிக்கப்பட்ட நூற்றைம்பது ரூபாயை எதிர்த்து எழுதிய புகார்க்கடிதம், அம்பத்தூர் ரிஜிஸ்திரார் அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழ் விண்ணப்பித்த ரசீது (இரண்டு வருடம் பழையது), டயபடீஸ் ஊசிமருந்து வாங்கிய ரசீது.
   
எல்லாவற்றையும் அகர்வாலுக்குக் காட்டினேன். அம்பத்தூர் ரசீதை எடுத்துக்கொண்டார். லக்னோ ரயில் டிக்கட்டும் இருக்கட்டும் என்றார். கூட்டுறவு வங்கி ரசீதும் அவசியம் என்றார். எதற்கும் இன்னொருமுறை ஆழமாகப் பாருங்கள், முக்கியமான தடயத்தைத் தவறவிடக்கூடாது என்றார். நேரமாகிவிட்டதே, சாப்பிட்டீர்களா? என்றார்.

அப்போதுதான் காலையில் வாங்கிவந்த உணவுப்பொட்டலம் நினைவுக்கு வந்தது. எல்லாரும் கீழே ஒன்றாகச் சாப்பிட்டோம். கண்ணப்பனும் தம்பியும் இன்னும் வெளியில் வரவில்லை.  

***
மாலை ஐந்துமணிக்குத் தேநீர் வந்தது. கண்ணப்பனும் தம்பியும் அகர்வாலும் ஒன்றாக மாடிக்கு வந்தனர். மற்ற இரண்டு அதிகாரிகளும்தான். அகர்வாலின் வழிகாட்டுதலின்படி, ஆவணங்கள் பட்டியல் இடப்பட்டன. தங்க நகைகளோ, வைரங்களோ, ரொக்கமோ, சொத்துப் பத்திரங்களோ எதுவும் கிட்டவில்லை. ஏற்கெனவே கண்டுபிடித்த வில்லங்கச் சான்றிதழ்தான் முக்கியமான ஆவணம். லக்னோ போய்வந்த ரயில் டிக்கட்டும் முக்கியமாகத் தெரிந்தது. இரண்டையும் மேற்கொண்டு விசாரிக்கவேண்டும் என்று சிபாரிசு செய்யப்போவதாக அகர்வால் தெரிவித்தார். எல்லாரும் பட்டியலில் கையெழுத்திட்டோம்.

கண்ணப்பன் வருத்தம் தோய்ந்த முகத்துடன் இருந்ததால் அவரது பனியனை எடுத்து சூட்கேசைத் துடைத்தது பற்றிக் கூறவில்லை. குப்பைக்கூடைகளை வாரம் ஒருமுறை சுத்தம் செய்வது பற்றி மட்டும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

***
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை நேரம். ஞாயிறு என்றால் இரண்டு அல்லவா? இரண்டாவது தினமலர் படித்துக்கொண்டிருந்தேன். அதற்குள் வாரமலரில் ‘அந்தரங்கம்’ படிக்கலாமே என்று தோன்றியது. அப்போதுதான் அலைபேசி ஒலித்தது. பேசியவர்: கண்ணப்பன்!

வணக்கம் சார்!..கண்ணப்பன் பேசறேன். ரெண்டு மாசம் முன்னால நம்ம வீட்டுக்கு ரெய்டுக்கு வந்திருந்தீர்களே... என்றார்.

எனக்கு திடுக் என்றது. இவரோடு பேசலாமா கூடாதா? ஆனால் நான் வெறும் சாட்சி மட்டும்தானே! எனக்கு வேறு பொறுப்புக்கள் இல்லையே, பேசினால் என்ன என்று தோன்றியது. வணக்கம், சொல்லுங்க என்றேன்.

சாதாரணமா ரெய்டுக்கு வந்தா, அடுத்த வாரம் அவங்களுக்கு ஸ்டார் ஓட்டல்ல பார்ட்டி வேணும்னு கேப்பாங்க. அப்புறம், ‘கவனிக்க’ச் சொல்லுவாங்க. அகர்வால் ரொம்ப நல்ல மனுஷன். வேணாம்னுட்டார். ஒங்களத்தான் பிடிக்கவே முடியல்லே.. என்று இழுத்தார்.

அப்படியா விஷயம்? கொக்கி போடுகிறார். மாட்டக் கூடாது என்று முடிவு செய்தேன்.

அட, நீங்க ஒண்ணு. நான் ரெய்டுக்கெல்லாம் புதுசுங்க. அத்தோட, அன்னிக்கு ஒங்க வீட்டுல ஒண்ணுமே கண்டுபிடிக்கலியே. நான் வெறும் சாட்சியாத் தானே வந்தேன். பார்ட்டி கீர்ட்டின்னு என்னெப் பயமுறுத்தாதீங்க என்றேன்.

கடகடவென்று சிரித்தார் கண்ணப்பன். எப்படி ஐயா கண்டுபிடிக்க முடியும்? ரெய்டு வரப்போவது நாலுநாள் முன்னமே எனக்குத் தெரியுமே! எல்லா டாக்குமெண்ட்டும் வேற மாநிலத்துக்குப் போயிட்டுதே! அகர்வாலும் ஒங்கள மாதிரிப் புதுசு. அவருக்கு மேல இருக்கிற ஜெயின் சார் நமக்கு ரொம்ப வேண்டியவராச்சே.

உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது எனக்கு. வேலியே பயிரை மேய்கிறதா?  

எங்க டிபார்ட்டுமெண்ட்டுல இதெல்லாம் சகஜமுங்க. பெரிய தொகை கைமாறிச்சுன்னா நாங்களே ஆளை விட்டு லஞ்சம் வாங்கினார்னு புகார் எழுதச் சொல்லுவம். ரெய்டு வருவாங்க. கவனிச்சுருவோம். அந்த நாள் வரைக்கும் ரெக்கார்டு கிளீன் ஆயிடும் பாருங்க. அப்புறம் கவலைப்பட வேண்டாமே. நீங்க பேங்க்கில இருக்கீங்க. அதனால் ஒங்களுக்கு இதெல்லாம் பழக்கமில்ல போல.

ரொம்ப நன்றிங்க. எனக்கு இதெல்லாம் பழக்கமாகவே வேண்டாங்க. ஆளை விடுங்க என்றேன். கை உதறல் இன்னும் நிற்கவில்லை. சிபிஐ யாராவது ஒட்டுக்கேட்கிறார்களோ என்று பயம் வந்தது.

கண்ணப்பன் விடவில்லை. பொழைக்கத் தெரியாத ஆளா இருக்கீங்களே! ஒங்களுக்குன்னு எடுத்து வச்சத இப்ப என்ன செய்றதாம்? என்று சிரித்தபடியே அலைபேசியை அணைத்தார்.
   
‘பொழைக்கத் தெரியாதவன்.’ அகர்வாலைத் தொடர்பு கொள்ளத் தோன்றியது. அவருக்கும் இந்தப் பட்டம் கிடைக்கவேண்டும் தானே?
****
(c) Y Chellappa
email: chellappay@gmail.com

செவ்வாய், மார்ச் 07, 2017

ஒரு நேரடி ரிப்போர்ட்-1

பதிவு எண் 15/2017
ஒரு நேரடி ரிப்போர்ட் -1
-இராய செல்லப்பா

காலை ஏழு மணிக்கு மயிலாப்பூர் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்திற்கு வந்துவிடவேண்டும் என்பது உத்தரவு.
 
எச்சரிக்கை: படத்திற்கும் பதிவிற்கும் தொடர்பில்லை!
பெட்டியோ, கைப்பையோ, அலைபேசியோ, காமிராவோ கொண்டுவரக் கூடாது. சட்டையிலோ, பேண்ட்டிலோ மணிபர்ஸ், டயரி, காகிதங்கள் இருக்கக்கூடாது. பேனா, பென்சிலும் கூடாது. காலை உணவும்,  பகல் உணவுக்குப் பொட்டலமும் தரப்படும். இரண்டு தண்ணீர் பாட்டில்கள் உண்டு. இடையில் யாருடனும் நேரடியாகவோ, அலைபேசி, தொலைபேசி மூலமோ பேச அனுமதியில்லை. தெரிந்தவர்கள் யாரையாவது பார்த்துவிட்டால், தெரியாத மாதிரி நடந்துகொள்ள வேண்டும். அருகில் நெருங்கக் கூடாது. எங்கே போகிறோம் என்றோ, எப்போது திரும்புவோம் என்றோ கேட்கக் கூடாது. போகும் இடத்தில் யாருடனும் பேசக்கூடாது. எதையும் தொடக்கூடாது. முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டக்கூடாது.

எனக்கு அனுபவம் இல்லையே என்றேன். இதற்காகவே படைக்கப்பட்டவன் போல் ஒரு நண்பன் இருக்கிறான், அவனை எடுத்துக் கொள்ளுங்களேன் என்றேன். அடிக்கடி பாத்ரூம் போகவேண்டி வருமே என்றேன். மணிக்கு ஒருமுறையாவது அலைபேசியில் என்னைக் கடிந்து கொள்ளாவிடில் என்னவளுக்குப்  பைத்தியம் பிடித்துவிடுமே என்றேன். ஹூஹூம்! மேலிடத்து முடிவு, நீங்கள்தான் வருகிறீர்கள் என்று பதில் வந்தது.  

அன்று முகூர்த்த நாள் இல்லை. கல்யாண மண்டபம் காலியாக இருந்தது. லேசாக ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலும் வரிசையாக உயரமாக அடுக்கியிருந்த நாற்காலிகளும் சன்னல் வழியாகத் தெரிந்தன. ஆயினும் வாகன நிறுத்தம் நிரம்பி வழிந்தது. பக்கத்து ஓட்டலுக்கு வந்த வாகனங்கள்.

என்னைப் போல வேறு யாராவது வந்திருக்கிறார்களா என்று பார்த்தேன். இரண்டுபேர் நின்று கொண்டிருந்தார்கள்.

ஒருவர், ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியாம். (பத்து வருடம் முன்பு?) மைசூர்க்காரர். மைத்துனிக்கு நிச்சயமாகி இருக்கிறதாம். மண்டபம் கிடைக்கும் நாளில் முகூர்த்தம் வைக்கலாம், கிடைக்கும் இல்லையா என்றார். உதட்டைப் பிதுக்கினேன். பெரிய இடம், கஷ்டம் என்றேன். கமல்ஹாசன் சொன்னால் கிடைக்காதா என்றார். கமல்ஹாசனின் கார் மெக்கானிக், அவரது டிரைவரின் பக்கத்து வீட்டுக்காரருக்கு நண்பராம்.

இன்னொருவர் இலக்கிய ரசிகர். இந்த வருடம் கம்பன் விழா எப்போது என்று விசாரிக்க வந்தாராம். அந்த மண்டபத்தில் தான் நடப்பது வழக்கம். விழா முடிந்தபிறகு, வழக்கம் போல்  இரவுச் சாப்பாடு உண்டு தானே என்றார். சப்பாத்தி போடுவார்களா என்றார். தெரியாது என்றேன்.

மணி ஏழு பத்து ஆகிவிட்டது. யாரையும் காணோமே, என்னடா இது சென்னைக்கு வந்த சோதனை என்று யோசித்துக்கொண்டே ஒரு காப்பி சாப்பிட்டு வைக்கலாம் என்று ஓட்டலுக்குள் நுழைந்தேன். சர்வர் ஒருவர் ஓடிவந்து உள்ளே போகுமாறு கை காட்டினார். அங்கே ‘பேமிலி ரூம்’ அடையாளத்தின் அருகில் மூன்று பேர் நின்றுகொண்டிருந்தார்கள். எல்லாரும் புதியவர்கள்.

என் பெயரைச் சொல்லி ‘வணக்கம்’ என்றார் அவர்களில் வயதான ஒருவர். குழுவின் தலைவராக இருக்கலாம். ‘அடையாள அட்டை கொடுங்கள்’ என்றார். கொடுத்தேன். ‘ஒரு பொங்கல் வடை காப்பி உங்களுக்காக ஆர்டர் கொடுத்திருக்கிறோம். பத்து நிமிடத்திற்குள் முடியுங்கள். பகல் உணவும் தண்ணீரும் காருக்கு வந்து விடும்’ என்றார். சரிதான், நமக்கு முன்பே வந்து வயிற்றை நிரப்பிக்கொண்டு நம்மை வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்.  

மற்ற இருவரை அறிமுகப்படுத்தவில்லை. என்றாலும் மரியாதைக்காகப் புன்முறுவல் காட்டினேன். நான் சாப்பிட்டு முடித்த மறு நிமிடமே கார் கிளம்பியது.

யாரோ என்னைக் கடத்திக்கொண்டு போவதுபோல் உணர்ந்தேன். குழுவின் தலைவர், யாருடனோ அலைபேசியில் மெல்லப் பேசினார்.  ‘ஓ, அந்த .... கல்லூரியா?’ என்றார். டிரைவர் காதுக்குள்  ‘பூந்தமல்லி போங்க’ என்றார்.

அப்போதுதான் எனக்குப் புரிந்தது. ஏதோ ஒரு சிபிஐ ரெய்டுக்கு நம்மையும் அழைத்துப் போகிறார்கள் என்று. சொல்லித் தொலைக்கக்கூடாதா? ரெய்டுகளின் போது வங்கி அதிகாரி ஒருவர் கட்டாயம் சாட்சியாக இருக்கவேண்டும் என்ற விதியை மத்தியப் புலனாய்வுத் துறை பின்பற்றி வருவதாக அப்படிப் போய் வந்த  நண்பன் ஒருவன் சொன்னதுண்டு. பூந்தமல்லியில் உள்ள ...கல்லூரிக்கு இன்று ரெய்டு நடத்தப் போய்க்கொண்டிருக்கிறோம்!

பூந்தமல்லியில் என்னென்ன கல்லூரிகள் இருக்கின்றன என்று மனதிற்குள் வரிசைப்படுத்தினேன். சுமார் பத்து முதல் பன்னிரண்டு இருக்கும். எந்தக் கல்லூரிக்கு  இந்த ரெய்டோ? மருத்துவக் கல்லூரியாகத்தான் இருக்கும். அங்குதான் ஏராளமாகப் பணம் புரளும்.

வந்திருப்பவர்களில் தலைவர் மாதிரி இருந்தவர்,  நிச்சயம் சிபிஐ அதிகாரியாகத்தான் இருக்கவேண்டும். அடுத்தவர் இவருடைய உதவியாளராகவும், இன்னொருவர், வருமானவரி அதிகாரியாகவும் இருக்கலாம் என்று எண்ணினேன். அது சரிதான் என்று பின்னால் தெரிந்தது.

ரெய்டு என்றால் எப்படி ஆரம்பிப்பார்கள்? முன் அறிவிப்பின்றி கல்லூரிக்குப் போவோம். நிர்வாக இயக்குனரின்  அறையைத் திறக்கச் சொல்வோம். காவலாளி மறுப்பார். சிபிஐ அதிகாரி தனது ஐடி கார்டை நீட்டுவார். உடனே கதவு திறக்கப்படும். அதே சமயம் காவலாளி வெளி கேட்டை இழுத்துப் பூட்டிவிட்டு கல்லூரி உரிமையாளருக்கு போன் போடுவார். கல்லூரி நடத்துபவர் ஆளும் கட்சியாக இருந்தால் ரெய்டை நிறுத்தச் சொல்லி டில்லியிலிருந்து தகவல் வரும். எதிர்க்கட்சியாக இருந்தால் முடிந்தவரை நோண்டச் சொல்லி ஆணை வரும். எதுவாக இருந்தாலும் மூட்டை கணக்கில் ஆவணங்களோ, மற்ற காகிதங்களோ கட்டப்படும். அவற்றைப் பட்டியலிட்டு ஒன்று இரண்டு என்று எண்கள் கொடுத்து அந்தப் பட்டியலை எல்லா அதிகாரிகளும் கையெழுத்திட வேண்டும்.... என்று திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். இன்று எப்படி நடக்கப் போகிறதோ?

ஆனால் கார் பூந்தமல்லிக்குப் போகும் வழியில் அண்ணா நகர் வளைவின் அருகில் நின்றுவிட்டது. சிபிஐ அதிகாரி இறங்கினார். என்னையும் இறங்கச் சொன்னார். அப்போது இன்னும் இரண்டு கார்கள் அணைப்பதுபோல் வந்து நின்றன. அதில் ஒன்றில் என்னை ஏறச் சொன்னார். ‘நீங்கள் வேறு டீமில் போகிறீர்கள்’ என்றார். இப்போது போகப்போவது அடையாறுக்காம். இன்னொரு காரில் அவர் ஏறிக்கொண்டார். ரெய்டு போகிறவர்கள் இப்படித்தான் திடீர் திடீரென்று திட்டத்தையும் ஆட்களையும் மாற்றுவார்களாம். அப்போதுதான் சஸ்பென்ஸ் காப்பாற்றப்படுமாம்.

அண்ணா நகரில் இருந்து அடையாறு போவதற்குள் இன்னும் ஒரு திருப்பம். இப்போது வேளச்சேரி  செல்ல வேண்டுமாம். அங்கு எந்த இடத்தில் ரெய்டு என்று யாருக்கும் தெரியவில்லை. டிரைவரிடம் சொல்லியிருப்பார்கள் போல. காரில் இருந்த மற்ற இரண்டு பேரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஒருவர் சுயதொழில் செய்யும் ஆடிட்டர். இன்னொருவர் மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் என்னைப் போலவே நடுத்தரநிலை அதிகாரி. இருவருக்கும் முதல் அனுபவமாம். பதற்றத்துடன் இருந்தார்கள். என்னைப் பற்றி அவர்களுக்குத் தெரியாததால், எனக்கு முன் அனுபவம் இருப்பதாக எண்ணிக்கொண்டு சில கேள்விகள் கேட்டார்கள். வாய்மீது விரலை வைத்து ‘உஷ்’ என்றேன். ரகசியம் காக்கவேண்டும் அல்லவா? அப்போதிலிருந்து அவர்கள் இருவரும் என்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

வேளச்சேரி எனக்கு அவ்வளவு பழக்கமில்லாத பகுதி. பல வருடங்களாகப் பராமரிப்பிலேயே இருக்கும் முக்கியச் சாலை ஒன்றின் வழியாக வண்டி நகர்ந்தது. பிறகு சில சந்துகளைக் கடந்து பள்ளமான ஒரு குடியிருப்புப் பகுதியை அடைந்து ஒரு சாதாரணமான வீட்டின் முன்பு நின்றது. தனி வீடு. ஒற்றை மாடி. இரண்டு தென்னை மரம். தலைமேல் செல்லும் மின்கம்பிக்கு இசைவாகக் கிளை வெட்டியிருந்த பாதாம் மரம். ஒரு சைக்கிளும், ஒரு ஸ்கூட்டியும் தென்னை மர நிழலில் இளைப்பாறின. ஸ்கூட்டியின் மேலிருந்த சாய்பாபா ஸ்டிக்கரில் காகம் எச்சமிட்டிருந்தது.

சுஜாதா பாஷையில் ஒரு ‘மத்யமர்’ வீடு.  இங்கு போய் ரெய்டு நடத்தி என்னத்தைக் கண்டுபிடிக்கப் போகிறார்கள்!

வாசல் கேட் பூட்டப்படவில்லை. நான்கு பேரும் உள்ளே போனோம். அதாவது, நாங்கள் மூவரும், டிரைவரும். டிரைவர்தான் சிபிஐ அதிகாரி என்று அப்போதுதான் தெரிந்தது. உடனே அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு விட்டோம்.

அழைப்புமணி அடித்ததும் கதவு திறக்கப்பட்டது. திறந்தவருக்கு வயது ஐம்பது இருக்கும். ‘அண்ணன் இதோ வந்துவிடுவார். நீங்களெல்லாம் யார்?’ என்று கேட்டார். சற்றே திகைப்புடன், சோபாவில் உட்காரச் சொன்னார். ‘அண்ணி வெளியூர் போயிருக்கிறார்கள். பிள்ளைகள் பள்ளிக்கூடம் போயிருக்கிறார்கள்’ என்றவர், ‘காப்பி சாப்பிடுகிறீர்களா?’ என்றார்.

இது யாருடைய வீடு என்பதுபோல் தலைவரின் முகத்தைப் பார்த்தோம். ரெய்டு நடக்கும் வீட்டில் காப்பி குடிப்பது ஒழுங்குமுறைக்கு விரோதமானதா என்ற கேள்வியும் எங்கள் பார்வையில் இருந்தது. ‘இல்லை, காப்பி குடித்துவிட்டுத்தான் வந்தோம். ஒருமணி நேரத்திற்குப் பிறகு தேநீருக்கு மட்டும் ஏற்பாடு செய்யுங்கள்’ என்றார் தலைவர்.

தம்பி பதற்றத்துடன் இருந்தார். ‘ஒன்றும் இல்லை; என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள் என்று சொல்லலாமா?’ என்றார்.

‘அண்ணனிடம் சில விஷயங்கள் பேச வேண்டும், அவ்வளவுதான்’ என்றார் தலைவர். உள்ளே போக முயன்ற தம்பியை, ‘மன்னிக்க வேண்டும்; அண்ணன் வரும்வரை இந்த இடத்தைவிட்டு நீங்கள் நகரவேண்டாம்’ என்றார். திகைப்புடன் ஒரு நாற்காலியில் அமர்ந்தார் தம்பி. அப்போது அலைபேசியில் அவருக்கு ஓர்  அழைப்பு வரவும், எடுத்து ‘ஹலோ’ என்பதற்குள் அவரிடம் இருந்து அலைபேசியைப் பறித்துக் கொண்டார் தலைவர். பிறகு, தானே பேசினார். ஸ்பீக்கரைப் போட்டார். ‘ஹலோ’ என்றார்.

‘ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு. உங்கள் அலைபேசி எண்ணுக்கு ஒரு லாட்டரி விழுந்திருக்கிறது. விவரம் அரிய நாளை மாலை அக்கார்டு ஹோட்டலுக்கு வருவீர்களா?’ என்று இளம்பெண் ஒருத்தி அமுதமாய்ப் பொழிந்தாள். 

அழைப்பை வெட்டிவிட்டு அலைபேசியைத் தன் சட்டைப் பையில் வைத்துக்கொண்டார் தலைவர். தம்பி திகைத்து நின்றார். 


அண்ணன் என்று குறிக்கப்பட்டவர் சற்று நேரத்தில் வந்தார். அவர் முகத்தைப் பார்ப்பதற்குள் அவரை அணைத்தபடியே எதிரில் இருந்த அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டார் தலைவர். தம்பியும் அவசரமாக உள்ளே போனார். 


இதன் (அடுத்த) நிறைவுப் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்