செவ்வாய், மே 24, 2022

குழந்தை வளர்ப்பில் அமெரிக்காவும் இந்தியாவும்

குழந்தை வளர்ப்பில் அமெரிக்காவும் இந்தியாவும்  

(இன்று கிழமை திங்கள்-6)

அமெரிக்காவில் 42  ஆவது நாள்

(அட்லாண்டிக் கடலோரம்)

“குழந்தைகள் எப்போதுமே குழந்தைகள்தான்.  அமெரிக்காவில் இருந்தாலும் சரி இந்தியாவில் இருந்தாலும் சரி அவர்களைக் குழந்தைகளாக இருக்க விடுவதுதான் பெரியோர்களின் முதல் கடமை”  என்று இதுவரை யாராவது சொல்லியிராவிட்டால் அந்தப் பெருமையை ஏற்றுக்கொள்வதில் எனக்குத் தயக்கமில்லை. 


ஆனால் அதைச் செயல்படுத்துவது மிகக் கடினமாக இருப்பதாகவே இளம் பெற்றோர்கள் கருதுகின்றனர். 


திருமணம் ஆனவுடன் தனிக்குடித்தனம் போன  தம்பதிகளுக்குக் குழந்தை பிறந்தால், அது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தால்,  இரு தரப்பிலிருந்தும் குழந்தையின் தாத்தா பாட்டிகள் முன் வந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது பெரும்பாலும் நிகழ்கிறது. இந்தியாவில் இருந்தாலும் அமெரிக்காவில் இருந்தாலும் இது சாத்தியமே. 


பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத திருமணமாக இருந்தாலும்,  பேரக்குழந்தைகள் பிறக்கும்போது  பெண்களுக்கே உரிய கருணை உணர்வினால் இரண்டு பாட்டிகளில் ஒருவராவது  குழந்தையைப் பார்த்துக்கொள்ள முன்வருவது இயற்கையே. 


ஆனால் முதுமையினாலோ,  ஆரோக்கியம் இன்மையினாலோ பாட்டிமார்கள் யாரும் முன்வராவிட்டால் அந்தக் குழந்தையை வளர்ப்பது இளம் பெற்றோர்களுக்கு சவாலான காரியமே. 


குழந்தையின் தாய் அலுவலகப் பணிக்குச் செல்லாதவளாக இருந்தால் இந்தப் பிரச்சினையை ஒருவழியாகச் சமாளித்துவிடலாம். 


குழந்தையின் பெற்றோர்கள் இருவருமே அலுவலகப் பணியாளர்களாக இருந்தால்,  பேறுகால விடுமுறை பெண்ணுக்கு  மட்டுமின்றி ஆணுக்கும் வழங்கப்படுவதால் அது உள்ள வரையில்  ஓரளவுக்கு நிம்மதியான குழந்தை வளர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இருவருமே அல்லது அந்தப் பெண் மட்டுமாவது ‘இ. இ. ப.’ வாக இருந்துவிட்டால் நிலைமை சிக்கலாகாமல் இருக்க வழியுண்டு. (  ‘இ. இ. ப.’ என்றால் இல்லத்தில் இருந்து பணியாற்றுவோர் - Work From Home வகையினர்). 


அப்படியில்லாதவர்கள் பாடு கடினமே. ஆனால் இந்தியாவை விட அமெரிக்காவில் இந்த பிரச்சினைக்குச் சிறந்த தீர்வு உள்ளது அதுதான்  “பேபி சிட்டர்”களைப் பணிக்கு அமர்த்திக்கொள்வது.   இந்தியாவில் பெங்களூர், மும்பை போன்ற சில நகரங்களில் இந்தச் சேவைகக்கான ஏஜன்சிகள் உள்ளன. சென்னையில் உண்டா என்று தெரியவில்லை. அச்சேவையில் ஈடுபடும் பெண்மணிகளுக்குத் தேவையான பயிற்சியை வழங்கும் நிலையங்களும் சென்னையில் இருப்பதாகத் தெரியவில்லை. 


அமெரிக்காவைப் பொறுத்தவரையில் பேபிசிட்டிங் என்னும் பணி, அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழிலாக இருப்பதால், அதில் பணியாற்ற வரும் பெண்களும் சரி, அவர்களைப் பணியமர்த்திக் கொள்ளும் பெண்களும் சரி, அந்தத் தொழிலை எவ்வாறு சரியாக எதிர்கொள்வது என்று தெரிந்திருக்கிறார்கள். ஆகவே அப்பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய ஊதியமும் கண்ணியமானதாகவே உள்ளது. எனவே உரிய பயிற்சியை மேற்கொண்டு இத்தொழிலுக்கு வருகிறார்கள். 


சொல்லப்போனால், பேபிசிட்டர்கள்  கிடைப்பதுதான் மிகவும் கடினம் என்று தெரிகிறது. அதிலும் குழந்தையின் தாய்மொழி தெரிந்தவளாக ஒரு  பேபிசிட்டர்  கிடைப்பது சாத்தியமே இல்லையாம். பெரும்பாலும் ஸ்பானிஷ் மொழி பேசும் பெண்களே எளிதில் கிடைக்கிறார்கள். சமீபகாலமாக, வேலைக்குச் செல்ல விசா கிடைக்காமல் வீட்டில் தாங்கள் முடங்கிப் போவதை விரும்பாத சில இந்தியப் பெண்களும்  பேபிசிட்டர்களாகப் பணியாற்ற முன்வருவதாகத் தெரிகிறது. நியூ ஜெர்சி போன்ற மாநிலங்களில் இதற்கு அதிக சாத்தியமுண்டு. 


இந்தியாவிலும் இத்தொழிலை ஊக்குவிக்கும் முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்று குறிப்பாகத் தகவல் தொடர்புத் துறையில் பணியாற்றும் ‘இ. இ. ப.’ அல்லாத இளம்பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள். நர்சிங் தொழில் போன்றே இத்தொழிலுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கும் என்கிறார்கள். கூடவே சமையல்கலையிலும்  இப்பெண்கள் திறமையை வளர்த்துக்கொண்டால் நல்ல ஊதியம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. 


இங்கு எனக்கு நன்கு தெரிந்த ஒரு வீட்டில் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணியை பேபிசிட்டராக நியமித்திருக்கிறார்கள். அவருடைய ஆங்கிலத்தை இவர்களும் இவர்களுடைய ஆங்கிலத்தை அவரும் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்கிறதாம். ஆனால் ஒன்றரை வயதுகூட ஆகாத அந்தக் குழந்தைக்குத் தன்னுடைய பேபிசிட்டரின் ஸ்பானிஷ் மொழியைப் புரிந்துகொள்வதில்  எந்த சிரமமும் இல்லையாம்! இன்னும் ஆறுமாத காலம் இதே பெண்மணி தொடர்ந்து இருந்தால், குழந்தை பேச ஆரம்பிக்கும்போது ஸ்பானிஷ் மொழியிலேயே பேச ஆரம்பித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள். 


‘நீ ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும்’ என்று குழந்தையை வழியுறுத்தினால்,  அவனிடமிருந்து ஸ்பானிஷ் மொழியில் இம்மாதிரி பதில் கிடைக்கலாம்:

“Te cortaré la nariz ..”


இதற்கு அர்த்தம் வேண்டுவோர் Google Translate இல் சென்று பார்த்துக்கொள்ளலாம். 


என்னுடைய மூன்று குழந்தைகளுக்கும்  ஊதியம் பெறாத பேபிசிட்டராக இருந்த, ‘பமேலா’  என்று எங்களால் அன்போடு அழைக்கப்பட்ட, என் மனைவியின் பாட்டி, திருமதி செல்லம்மாள் அவர்கள் இந்தச் சொற்றொடரால் தான் குழந்தைகளை மிரட்டிவைப்பார்கள். (“உன் மூக்கை நறுக்கி விடுவேன்”). 


(2009 இல் அமரத்துவம் எய்திவிட்ட  அவரை, என்னுடைய 46 ஆவது திருமண ஆண்டுநிறைவு நாளான இன்று 24-5-2022 நினைவுகூர்வதன் மூலம் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்). 


படத்தில்: என் மைத்துனர், மாமியார், மனைவி, நான் 


-இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து. 

 

திங்கள், மே 23, 2022

ராஜீவ் காந்தி படுகொலையும் விதியின் எட்டு விளையாட்டுகளும்

ராஜீவ் காந்தி படுகொலையும் விதியின் எட்டு விளையாட்டுகளும்

(இன்று கிழமை ஞாயிறு-6)

அமெரிக்காவில் 41 ஆவது நாள்

(மணித்திருநாடு)

விளையாட்டு -1


உண்மையில் தமிழ்நாட்டில் வைத்து ராஜீவ் காந்தியை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் விடுதலைப்புலிகளுக்கு இல்லை.. ராஜீவ்காந்தி கொலையை செய்து முடிக்கும் பொறுப்பு பொட்டுஅம்மான் என்பவரிடம் வழங்கப்பட்டிருந்தது.  அவர் தன்னுடைய நம்பிக்கைக்குரிய ஒற்றைக்கண் சிவராசனை இதற்காக தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார். 


அப்போது-  மார்ச் 1991 -  இந்தியாவில் பொதுத்தேர்தல் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான அட்டவணையை தேர்தல் கமிஷன் வெளியிடுகிறது.  அதைக் கண்டு சிவராசன் மகிழ்ச்சி அடைகிறார்.  தேர்தல் பிரச்சாரத்திற்காக பல இடங்களுக்கு ராஜீவ் வருவார் அவரை எப்படியும் தீர்த்துக் கட்டிவிடலாம் என்று திட்டமிடுகிறார்.


ஆனால் பொட்டு அம்மானோ, "டெல்லியில் வைத்துச் செய்ய முடியாதா?" என்று கேட்கிறார். தலைவர் உத்தரவிடும் போது மறுக்க முடியுமா சரி என்று அதற்கான ஏற்பாட்டைச் செய்ய முற்படுகிறார் சிவராசன். ஆனால் அது நடைமுறைக்கு வருவதற்கு முன்பே ஆடுகளத்தைத் தமிழ்நாட்டுக்கு மாற்றிவிட்டார் பிரபாகரன்.


விளையாட்டு - 2 


இம்மாதிரி சதித் திட்டங்களுக்கு ஏற்ற இடம் கொடைக்கானல் தான்.  உல்ஃபா  போன்ற  வடகிழக்கு மாநில தீவிரவாத இயக்கங்கள் கூட கொடைக்கானலையே தங்கள் பயிற்சிக்குத் தேர்ந்தெடுத்து இருக்கிறது.  காரணம் யாரும் எளிதில் ஊடுருவ முடியாத அளவுக்கு அடர்த்தியான  மலைப்பகுதி.  மக்கள் தொகையும் குறைவு. விடுதலைப்புலிகளும் இதே எண்ணத்தில் தான் இருந்தார்கள். 


தாங்கள் கொண்டு வந்திருந்த தங்கக் கட்டிகளைப் பணமாக மாற்றி ஒரு பண்ணை வீட்டை வாங்கித் தங்கள் தீவிரவாத திட்டங்களுக்கு அதை அலுவலகமாக மாற்றிவிடவும், மலையில் வசிக்கும் ஆதிவாசிகளுக்குப் பயிற்சி கொடுத்து அவர்கள் மூலம் ராஜீவை கொலை செய்துவிட்டால் தங்கள் மீது பழி வராது என்றும் திட்டமிட்டார்கள். 


ஆனால் இந்த விஷயம் பிரபாகரனின் கவனத்திற்குச் சென்ற உடன் கடுமையாக அவர்களைக் கண்டித்தார்.  ராஜீவ் காந்தி கொலையில் இந்தியர்கள் யாருக்கும் தொடர்பு இருக்கக் கூடாது.  புலிகளின் தற்கொலைப் படையே அதை முன்னெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


விளையாட்டு - 3


தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக  இருந்தவரும், ராஜீவ் காந்திக்கு நெருக்கமானவருமான வாழப்பாடி ராமமூர்த்தி மட்டும்  தேர்தல் பிரச்சாரத்திற்குதித் தமிழ்நாட்டுக்கு ராஜீவ் வரவேண்டியதில்லை என்று ஆரம்பம் முதலே கூறிவந்தார். ஆனால்  மயிலாடுதுறையில் போட்டியிட இருந்த மணிசங்கர் அய்யர் மட்டும் எப்படியும் ராஜீவ் காந்தி தன்னுடைய தொகுதிக்குப் பிரச்சாரம் செய்ய வருவார் என்று நம்பிக்கையுடன் இருந்தார்.  அப்படி அவர் வருவதானால் அங்கேயே இந்தக் கொலையை நிகழ்த்துவதற்கு சிவராசன் தயாராக இருந்தார்.  அங்கிருந்து கடல்வழி மிகவும் அருகில் இருந்ததால்  கொலை செய்த பிறகு தப்பி ஓடுவது எளிது என்பது அவருடைய எண்ணம்.


விளையாட்டு - 4


ராஜீவின் தேர்தல் பிரச்சாரப் பயணத்திற்கான பொறுப்பாளராக இருந்தவர் மார்கரெட் ஆல்வா.  அவரால் ராஜீவ் காந்தியின் தமிழ்நாட்டுப் பயணத்திற்கு ஒன்றரை நாள் மட்டுமே ஒதுக்க முடிந்தது. ஆகவே மூன்று தொகுதிகளில் மட்டுமே ராஜீவ் பிரச்சாரம் செய்ய முடியும்:  1 வாழப்பாடி ராமமூர்த்தி போட்டியிடும் கிருஷ்ணகிரி தொகுதி,  2 மணி சங்கர் ஐயர் போட்டியிடும் மயிலாடுதுறை,  3 ப.சிதம்பரம் போட்டியிடும் சிவகங்கை. 


இந்தப் பட்டியல் ராஜீவ் கைக்குப் போனவுடன் அவர்  தன் கைப்படவே இப்படி எழுதினார்: Please include Aunty’s constituency. அதாவது 'ஆண்ட்டி" என்று அவரால் அழைக்கப்படும் மரகதம் சந்திரசேகர் போட்டியிடும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கும் தான் போயாக வேண்டும் என்ற உத்தரவே அது. முன் அனுமதி பெறாமல் இந்திராகாந்தி குடும்பத்தில் எப்போது வேண்டுமானாலும் வரவும் போகவும் ஆண்ட்டிக்கு சலுகை இருந்தது.  அந்த அளவுக்கு அக்குடும்பத்தின் மீது பாசம் கொண்டிருந்தார் மரகதம் சந்திரசேகர். 


இதன்படி ராஜீவின் பயண திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.  முதல்நாள் புவனேஸ்வரில் பயணம் செய்யும் ராஜீவ் மறுநாள் விசாகப்பட்டினத்தில் இறங்கி, அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்து, 21 ஆம் தேதி இரவு ஸ்ரீபெரும்புதூரில் மரகதம் சந்திரசேகர் தொகுதியில் பிரச்சாரம் செய்து, அங்கேயே தங்கி விட்டு, மறுநாள் பாண்டிச்சேரி வழியாக மயிலாடுதுறை;  பின்னர் அங்கிருந்து சிவகங்கை;  அதன்பிறகு கிருஷ்ணகிரி;  அங்கிருந்து பெங்களூர் நேரடியாக டெல்லி -என்று பயணத்திட்டம் அமைந்தது.


கொலை திட்டம் தீட்டிக் கொண்டிருந்த சிவராசன் மயிலாடுதுறையில் பகல் நேரத்தில் ராஜீவ் பேசுவதாக அமைந்துவிட்டதால் தன் திட்டத்தை மாற்றிக் கொண்டு விட்டார்.  அதாவது இரவு நேரப் பொதுக்கூட்டம் ஆன ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்திலேயே தன் சதியை நிறைவேற்றுவது எளிது என்று முடிவு செய்து கொண்டார்.


விளையாட்டு -5


மரகதம் சந்திரசேகரின் மருமகள் ஒரு இலங்கைப் பெண்மணி. இதுவும் விதியின் விளையாட்டு தானே! இதைத் தெரிந்து கொண்ட சிவராசன்,  அவர் மூலம் காங்கிரஸ் நிதிக்கு ஐந்து லட்ச ரூபாய் கொடுக்கச் செய்தார்.  அதற்கு நன்றியாக பொதுக்கூட்டத்தில் ராஜீவ் காந்திக்கு மாலை போடுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்  கொள்ளப்பட்டது. 


விளையாட்டு -6


சம்பவ தினத்தன்று ஸ்ரீபெரும்புதூரில் கருணாநிதி பேசும் கூட்டம் ஒன்று மாலை 4 மணிக்கு நடைபெற அனுமதி பெற்றிருந்தது. ராஜீவ்காந்தி பேசும் கூட்டம் மாலை 6 மணிக்கு என்று தற்செயலாக அமைந்து விட்டது.  குறுகிய கால இடைவெளியில் இரு பெரும் தலைவர்களின் கூட்டம் அமைந்தது, போலீஸ் அதிகாரிகளுக்கு மிகப்பெரிய  சவாலாக இருந்தது. அதனால் பெருத்த எண்ணிக்கையில் போலீஸ் படையைக் கொண்டு வந்து குவித்துவிட்டார்கள். ஆனால் கடைசி நேரத்தில் கருணாநிதியின் கூட்டம் ரத்தாகி விட்டதாக உள்ளூர் திமுகவினர் போலீசாருக்குத் தெரிவித்தனர். இதற்கு எந்தக் காரணமும் கூறப்படவில்லை. ஆனால் இது போலீசாருக்கு ஒருவகையில் நிம்மதியை அளித்தது.  கூடுதலான போலீஸ் படையைக் கொண்டு ராஜீவ் கூட்டத்தை நல்ல முறையில் பாதுகாப்பாக நடத்த முடியும் என்று அவர்கள் கருதினார்கள்.


விளையாட்டு -7 


புவனேஸ்வரில் இருந்து  கிளம்பிய ராஜீவ் மாலை 5 மணிக்கு விசாகப்பட்டினத்தில் இருந்தார்.  அவர் கிளம்ப வேண்டிய சென்னை விமானத்தில் கடைசி நேரத்தில் ராடார் கருவி பழுதாகிவிட்டது.  விமானி தன்னால் முடிந்தவரை முயற்சித்தும் பயனில்லை.  பதில் கருவி வந்தால் தான் கிளம்ப முடியும்  என்ற நிலை.  அது விமானியான ராஜீவுக்கும் புரிந்தது. பதிலுக்கு வேறு விமானத்தில் வேண்டுமானாலும் சென்று ஆண்ட்டியின் தொகுதியில் நிச்சயம் பேசியாக வேண்டும் என்று விரும்பினார் ராஜீவ். அது முடியாததால் வேறுவழியின்றி விசாகப்பட்டினத்தில் அரசு மாளிகைக்குப் புறப்பட்டார்.  ஆனால் பாதி வழியில் அவர் இருக்கும்போதே கருவி சரியாகி விட்டதாக  விமானி தெரிவித்ததால் வண்டியைத் திருப்பிக்கொண்டு விமானத்தில் ஏறினார் ராஜீவ்.


விளையாட்டு -8


ஸ்ரீபெரும்புதூரில் எட்டு மணிக்கு வந்திருக்கவேண்டும் ராஜீவ்.  ஆனால் இப்போது பத்து மணி ஆகிவிட்டது.  மக்கள் பொறுமை இழந்து கொண்டிருந்தனர்.  கூடவே சிவராசனும்  அவனது சதியாட்களும்.  விசித்திரம் என்னவென்றால்,  ராஜீவ் எத்தனை மணிக்கு விசாகப்பட்டினத்தில் கிளம்புவார் என்ற தகவலே இங்கிருந்த போலீஸ் உயரதிகாரிகளுக்குக் கிடைக்கவில்லையாம். ஆனால் சிவராசனுடைய ரகசிய டைரியில் மட்டும் அந்த சரியான நேரம் எழுதப்பட்டிருந்ததாம்! அதேபோல,  ராஜீவ் காந்திக்கு மாலையிட அனுமதிக்கப்பட்டவர்களின்  பெயர்கள் சரியாக பட்டியலிடப்படாமல் ஒரு துண்டுச் சீட்டில் மட்டுமே எழுதப்பட்டிருந்ததாம்!  இது விஐபிக்களின்  பாதுகாப்பு பொறுப்பில் இருந்த அதிகாரியின் மோசமான கடமைப் பிறழ்வாகும்! அதை விடவும் மோசம், மாலையிட வந்த யாரையும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கொண்டு பரிசோதிக்க வில்லையாம்!


சதி நிறைவேறியது!


இலங்கைப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காணவேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்பி அதற்கான பணியை முன்னெடுத்த ராஜீவ் காந்தியை, அமைதிப் பூங்காவாக விளங்கிய தமிழகத்தில் 1991 மே 21ஆம் தேதி அன்று விடுதலைப்புலிகள் தீர்த்துக் கட்டியதன் மூலம், உலக அரங்கில் தங்களுக்கு இருந்த ஒரே கடைசி ஆதரவான தமிழ்நாட்டின் ஆதரவை ஒட்டுமொத்தமாக இழந்துவிட்டார்கள். அதன்பிறகு நடந்த முள்ளிவாய்க்காலுக்குத் தங்களைத் தாங்களே பழித்துக்கொள்வதைத் தவிர வேறு யாரையும் காரணிகளாக்க முடியாது.


புலன் விசாரணை அதிகாரி கே. ரகோத்தமன்


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ புலன் விசாரணை அதிகாரியாகச் செயல்பட்டு முக்கிய முடிச்சுகளை அவிழ்த்தவர், ரகோத்தமன். உள்துறை, உளவுத்துறை, மாநில போலீஸ் துறை மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் செல்வாக்கு மிக்க தலையீடு ஆகிய  வலைப்பின்னல்களின் நடுவே புகுந்து புறப்பட்டு 'மெய்ப்பொருள் கண்ட'  போற்றுதலுக்குரிய அதிகாரி.  இந்த வழக்கில் தன்னுடைய அனுபவங்களை  ஒரு நூல் வடிவில் ஆதாரப்பூர்வமாக வழங்கியிருக்கிறார் ரகோத்தமன்.  அந்த நூலின் பெயர் : "ராஜீவ் கொலை வழக்கு -  மர்மம் விலகும் நேரம்"  என்பதாகும்.


தமிழ்ப் புத்தக வெளியீட்டுத் துறையில் நவீனத்தன்மையையும், உலகத் தரத்தையும், புத்தகங்களை சந்தைப்படுத்துவதில் புதுப்புது வழிகளையும் அறிமுகப்படுத்திய பத்ரி சேஷாத்ரி அவர்களின் "கிழக்கு பதிப்பகம்" 2009 இல் வெளியிட்ட  நூல் இது. 232 பக்கம் , அப்போதைய விலை 100 மட்டுமே.


(அந்த ஒருவரை மட்டும் விடுதலை செய்தது சரியா, அவரோடு தண்டனை பெற்ற மற்றவர்களையும் விட்டுவிடலாமே- என்று ஒரு தரப்பு வாதிடுகிறது. நாட்டின் தலைவரைக் கொன்றவனுக்கு, ஒரு தியாகிக்குத் தரும் வரவேற்பை அரசியல் சட்டத்திற்கு உடன்பட்டு நடப்பதாக சத்தியப் பிரமாணம் செய்த அரசியல் குழுவினரே தருவது சட்ட விரோதம் அல்லவா என்று இன்னொரு தரப்பு - இது தான் நாட்டில் பெரும்பகுதி- கொந்தளிக்கிறது.  யார் மீதும் பழியில்லை, எல்லாம் விதியின் விளையாட்டு என்று இரு தரப்புமே அமைதியடையட்டும் என்பதற்காகவே ரகோத்தமனின் புத்தகத்தை அலசி ஆராய்ந்து இக்கட்டுரையை எழுதினேன். இனிமேலாவது இந்த நூலில் அவர் கூறியிருக்கும்  முக்கிய ஆலோசனைகளை அரசு அதிகாரிகள் சார்பு மனப்பான்மை  இல்லாமல் செயல்படுத்தவேண்டும், அதன்மூலம் நாட்டின் அரசியல் தலைவர்களின் உயிர்களுக்கு முறையான, மேம்பட்ட, தவறிப்போகாத, பாதுகாப்பை வழங்கவேண்டும் என்பதே நமது விருப்பம்.)


  -இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து

ஞாயிறு, மே 22, 2022

எனக்குப் பிடித்த ஹைக்கூ கவிதைகள்

 எனக்குப் பிடித்த ஹைக்கூ கவிதைகள்

 (இன்று கிழமை சனி-6)

அமெரிக்காவில் 40 ஆவது நாள்

சாகித்ய அகாதெமிக்காக அமரர் முனைவர் இரா.மோகன் தொகுத்தளித்த ‘தமிழ் ஹைக்கூ ஆயிரம்’ என்ற அற்புதமான நூலில் இருந்து எனக்குப் பிடித்த சில ஹைக்கூ கவிதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.  

தமிழில் வெளியான  ஹைக்கூ கவிதை நூல்களில் நூறைத் தேர்ந்தெடுத்து, அவை ஒவ்வொன்றிலிருந்தும் பத்துக் கவிதைகளைப் பொறுக்கியெடுத்து ஆயிரம் ஹைக்கூ கொண்ட இந்நூலைத் தொகுத்திருக்கிறார், மோகன். (144 பக்கம்  விலை ரூ.90.)   வெளியீடு: சாகித்ய அகாதெமி. 

நூறு கவிஞர்களை நேருக்கு நேர் சந்திப்பதுபோன்ற அனுபவத்தைத் தருகிறது இந்நூல். ஆயிரம் கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் (நன்றியில்லாத) திருப்பணியை விடவும், மோகன் வழங்கியிருக்கும் அற்புதமான முன்னுரை மதிப்பு மிக்கது. ஹைக்கூ வின் தமிழ்நாட்டு நுழைவின் சரித்திரத்தை அவர் இப்படித் தருகிறார்:   

 

“1916இல் ‘ஹொக்கு’ என்ற பெயரால் தமிழுக்கு முதன்முதலில் அறிமுகம் செய்தவர் கவியரசர் பாரதியார். 1968ஆம் ஆண்டில் ‘நடை’ முதல் இதழில் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை முதன்முதலில் மொழிபெயர்த்துத் தந்தவர் கவிஞர் சி.மணி. 1970ஆம் வாக்கில் தமிழ் மரபுப்படி இக்கவிதைக்கு ‘சிந்தர்’ எனப் பெயர் சூட்டி, தமிழில் சோதனை முயற்சியாகச் சில ஹைக்கூ கவிதைகளையும் முதன்முதலில் எழுதி வெளியிட்டவர் –‘வாமனக் கவிதைகள்’, ‘மின்மினிக் கவிதைகள்’ என்ற பெயர்களையும் சூட்டி மகிழ்ந்தவர் – கவிக்கோ அப்துல் ரகுமான்; ‘ஜப்பானிய ஹைக்கூ’ (1987), ‘இதுதான் ஹைக்கூ’ (1990) என்ற இரு நூல்களை வெளியிட்டு ஹைக்கூ கவிதையின் வளர்ச்சிக்கு அயராது பணியாற்றியவர் முனைவர் தி.லீலாவதி; 1984-ஆம் ஆண்டில் ‘புள்ளிப் பூக்கள்’ என்ற முதல் தமிழ் ஹைக்கூ கவிதைத் தொகுதியை வெளியிட்டவர் ஓவியக் கவிஞர் அமுதபாரதி; தொடர்ந்து 1985-ஆம் ஆண்டில்  ‘ஜப்பானிய ஹைய்கு வடிவக் கவிதைகள்’ என்ற அறிமுகக் குறிப்போடும், ‘வாசல் ஓர வாசகம்’ என்ற பதினான்கு பக்க ஆய்வு முன்னுரையோடும் ‘சூரியப் பிறைகள்’ என்னும் தொகுப்பினை வெளியிட்டவர் முன்னணிக் கவிஞர் தமிழன்பன்; 1988-ஆம் ஆண்டில் இலங்கையில் ‘கூடைக்குள் தேசம்’ என்ற தலைப்பில் முதன்முதலாகத் தமிழில் ஹைக்கூ வடிவக் கவிதைத் தொகுதியை வெளியிட்டவர் சு.முரளிதரன். இன்று தமிழில் இருநூற்றுக்கு மேற்பட்ட ஹைக்கூ கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன....”   

 “ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளில் இயற்கையின் தரிசனமும், தத்துவப் பார்வையும், படிமப் பாங்கும் சிறப்பிடம் பெற்றுள்ள நிலையில், தமிழ் ஹைக்கூ கவிதைகளில் இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகளும், அன்றாட நடைமுறை வாழ்க்கை அனுபவங்களும் முதலிடம் பெற்றுள்ளன...சுருங்கக் கூறின், அங்கதம், முரண், நகை ஆகிய மூன்று சுவைகளும் ஒன்று சேர்ந்த ‘திரிவேணி சங்கமம்’ ஆகத் தமிழ் ஹைக்கூ கவிதைகள் காட்சியளிக்கின்றன....”

 தமிழ் தெரிந்த அனைவர் கையிலும் இருக்கவேண்டிய முக்கியமான நூல் இது. ஆசிரியர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் மேற்கோள் காட்டுவதற்கு இனிமையான ஹைகூக்கள் ஆயிரம் ஒரே இடத்தில் வேறெங்கே கிடைக்கும்? இந்த அருமையான தொகுப்பை நமக்கு வழங்கிய முனைவர் இரா மோகனுக்கு நமது வாழ்த்துக்கள்!

 இனி, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், ஆயிரத்திலிருந்து சில ஹைகூக்கள் இதோ உங்கள் பார்வைக்கு:   

 ***  

ஒரு கன்னத்தில் அறைந்தான்

மறு கன்னத்தைக் காட்டினேன்

அங்கும் அறைந்தான்.

-கழனியூரன் (‘நட்சத்திர விழிகள்’ – 1990)

 படித்துப் படித்துப்

பட்டம் வாங்கினோம்

எரியாத ஈரவிறகு.

-துறவி (‘சிறகுகளின் சுவடுகள்’-1993)

 கருத்த பெண்

புகுந்தகம் வந்தாள்...

கலர் டிவியோடு!

-மு.முருகேஷ் (‘விரல் நுனியில் வானம்’-1993)

 தென்றல் வீசுகிறது

அனுபவிக்க இயலவில்லை

நாளை இண்டர்வியூ.

-ஆர்.வி.பதி (‘ஹைக்கூ கவிதைகள்’-1994)

 

கல்லாகவே இருந்துவிடுகிறேன்

மிதித்து விடாதே

சுற்றிலும் இந்திரன்கள்

-ராஜ முருகு பாண்டியன் (‘ஹைகூப் பறவைகள்’ – 1994)

திண்ணையிலிருந்து

நிலவை ரசிப்போம்

தொலைந்தது வீட்டுச் சாவி.

-ராஜ முருகு பாண்டியன் (‘ஹைகூப் பறவைகள்’ – 1994)

பெண் பிறக்கட்டும்

குடும்பத்தோடு பிரார்த்தனை-

பிரசவ வலியில் பசு!

-நவதிலக் (‘பூக்கள் பறிப்பதற்கில்லை’ – 1994)

 கார்காலம் வந்தது

பனிக்காலம் வந்தது

நல்ல காலம்?

-மாடப்பள்ளி ஜெயசீலன் (‘சுண்டு விரல்’ – 1998)

 எதிலும் சந்தேகம்

போலியோ சொட்டு மருந்து

போலியோ?

-மாடப்பள்ளி ஜெயசீலன் (‘சுண்டு விரல்’ – 1998)

 இறுக்கிக் கட்டுங்கள்

இடுப்பு வேட்டியை

போகுமிடம் சட்டசபை!

-கவிமுகில் (‘சூரியத் துளிகள்’ -1998)

பெண்பார்க்கும் படலம்

வீடு கடத்தப்பட்டாள்

அழகான தங்கை!

-பாரதி மணியன் (‘ஹைக்கூ 50’ – 1999)

ஓய்வெடுத்தன

பறவைகள்

உழைப்பாளர் சிலைமேல்

-ந.முத்து (‘எடை குறைவாய்...’ -1999)

 திதி செய்ய மனமில்லை

இன்னும் வாழ்கிறாள்

மனதில் அம்மா!

-பால பாரதி (‘இதயத்தில் இன்னும்’ -2000)

 தொலைந்த மோதிரத்தை

தேடினாள் சகுந்தலை

அடகு வைக்க.

-வண்ணை சிவா (‘ஒற்றைக் கல் சிற்பம்’ -2002)

பெண் உரிமை பற்றி

முழக்கமிட்டாள்

கணவன் அனுமதியுடன்.

-சோலை இசைக்குயில் (‘சூரியனுக்கு வெட்கமில்லை’ -2002)

இரவெல்லாம் குளித்தும்

கறை போகவில்லை

குளத்தில் நிலா.

-இளந்தென்றல் (‘ஊசித்துளை வழியே ஓர் ஊர்வலம்’ – 2003)

நிறையப் பேச நினைத்து

அமைதியாய் விழுந்தேன்

விழி ஈர்ப்பு விசை.

-ஆலா (‘உயிர் வேலி’ – 2003)

நெடுநேரமாய்ப் பேசும் நண்பன்

போகையில் கேட்பானோ...

கடன்!

-இரா.அ.தென்றல் நிலவன் (‘முதல் ரோஜா’ – 2003)

புல் வெட்டுகிறார், ஹைக்கூ எழுதத்
தெரியாத கவிஞர்

 இரவுப் பேருந்துப் பயணம்

தூங்கவேயில்லை

சில்லறை பாக்கி.

-சு. சேகர் (‘முள்ளின் முகவரி’ – 2003)

சக்கையாய்ப் பிழிகிறான்

சாறு விற்பவன்

பாவம், கரும்பு.

-சி.கே.சந்திர மோகன் (‘அல்வாத் துண்டுகளும் சில அணுகுண்டுகளும்’-2004)

 கோயிலில்

பக்தர்கள் கூட்டம்

நெரிசலில் கோரிக்கைகள்.

-ராஜசேகர் (‘நதியில் சிறகுகள்’ – 2004)

வீடு நிறையப் பொருள்

பெட்டி நிறையப் பணம்

அயல்நாட்டில் கணவன்.

-மரியா தெரசா (‘துளிப்பா தோப்பு’ – 2004)

இறந்த அப்பா

இன்னும் வழிகாட்டுகிறார்

அலமாரியில் புத்தகங்கள்.

-கம்பம் மாயவன் (‘மின்மினியின் வெளிச்சத்தில்’ -2005)


மகனின் கடிதத்தில்

என்றென்றும் அன்புடன்

காப்பகத்தில் தாய்.

-கன்னிக்கோவில் இராஜா (‘தொப்புள் கொடி’ – 2005)

கோட்டு சூட்டுடன்

திருஷ்டிப் பொம்மை

கோவணத்தில் தொழிலாளி.

-வெ.கலிவரதன் (‘ஒத்திகை’ – 2006)

நாற்காலியைத்

தூக்கியெறிந்து சண்டை

நாற்காலிக்காக.

-சி.விநாயக மூர்த்தி (‘புன்னகை மின்னல்’ -2007)

 
(இந்நூலின் தொகுப்பாசிரியரான 2019இல் அமரரான பேராசிரியர் இரா மோகன், 1972இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக அடியெடுத்துவைத்து, படிப்படியாக முன்னேறி பேராசிரியராகவும் ஆட்சிக் குழு உறுப்பினராகவும், சாகித்ய அகாதெமியின் பொதுக் குழு உறுப்பினராகவும் இருந்தவர்). 

 -இராய செல்லப்பா  நியூஜெர்சியில் இருந்து

சனி, மே 21, 2022

இன்னதென்று அறியாமல்..

39   இன்னதென்று அறியாமல்..  

(இன்று கிழமை வெள்ளி -6 )  

அமெரிக்காவில் 39  ஆவது நாள் 

(விட்டுப்போன கட்டுரைகள்)


இன்றைய சமுதாயத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் மிகப் பரவலாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.  அவசரமாக எழுதுவதும், அதற்கு அவசரமாகப் பின்னூட்டம் (‘பதில்’) போடுவதும் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அண்மையில் ஓர் நிகழ்வின் மூலம் நான் தெரிந்துகொண்டேன்.  

எனது வலைத்தளம் தவிர,  வாட்ஸ் அப்பிலும் முகநூலிலும்  தான் நான் புழங்குகிறேன். தினமலரில் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும் ஆன்மிக மலரில் கோவில்கள், இதிகாசங்கள், பக்தி ஆகியவை  பற்றிய எளிமையான ஒரு குறுக்கெழுத்து போட்டி வெளியாகும். 



அதற்கான விடையை புகைப்படம் எடுத்து டெலிகிராம் என்ற ‘ஆப்’  மூலம்தான் அனுப்ப வேண்டும்.  பரிசு ஒரு லட்ச ரூபாய். (“ஆயிரம் பொன்னாச்சே!”)   ஆனால் நூறு பேரைத் தேர்ந்தெடுத்து தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதே  வழக்கம்.  அதில் பல முறை பங்கெடுத்துக் கொண்டும்  அலைபேசி எண்ணை மாற்றி மாற்றிக் கொடுத்தும்  அந்த ஆயிரம் ரூபாய் கூட நமக்கு வருவதாய் இல்லை.  எனவே டெலிகிராம் ஆப்பை  அலைபேசியில் இருந்து  அகற்றி விட்டேன். (ஆனாலும் குறுக்கெழுத்தைப் பூர்த்திசெய்யத் தவறுவதில்லை). 


மற்றப்படி இன்ஸ்டாகிராம்,  ட்விட்டர்  ஆகியவற்றில் நான் இல்லை. முன்னது (அழகான) பெண்களுக்கானது, பின்னது அரசியல்வாதிகளுக்கானது என்று கேள்விப்படுகிறேன். 


சில ஆண்டுகளுக்கு முன்பு கோரா. காம் என்ற தளத்தில் கணினித் துறை பற்றிய கேள்விகளுக்கு விஷயம் தெரிந்த பலர் விடையளிப்பதாகக் கேள்விப்பட்டு அதை நிறுவிக்கொண்டேன். ஆனால் இப்போதெல்லாம் ஆபாசம், ஜாதிவெறி, வீண் வம்பு இவைதான் அதில் அதிகம் வருகின்றன. எனவே எப்போதாவதுதான் அதில் நுழைவதுண்டு. அகற்றினாலும் அது போவதில்லை. ஜிமெயில் வழியாக ஆங்கிலத்தில் மட்டுமின்றித் தமிழிலும்  எப்படியோ வழுக்கிக்கொண்டு வந்துவிடுகிறது. 


பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன்,  சக-ஓய்வாளர்கள் செய்ததுபோல் நானும் லிங்க்டு-இன்னில் பதிவுசெய்துகொண்டேன். அதை எப்போது  பில் கேட்ஸ் எக்கச்சக்க விலைக்கு வாங்கினாரோ அன்றுமுதல் அது அடிக்கும் லூட்டிக்கு அளவேயில்லை.


ஒரு நாள் ‘இன்று உங்களை மூன்று பேர் பார்த்தார்கள்’ என்று மெயில் அனுப்பும்.


ஆயிரத்துக்குமேல் குடும்பங்கள் வசிக்கும் எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள சூப்பர்மார்க்கெட்டுக்கு தினமும் ஒருமுறையாவது சென்றுவரவேண்டிய தேவை இல்லறத்தானாகிய எனக்கு உண்டு என்று உங்களுக்குத் தெரியும்தானே! தவிரவும், மாலை நேரத்தில் என் வயதையொத்தவர்களும், மற்றும் ‘வாழ்த்த வயதில்லை- வணங்குகிறேன்’ வகையறாவைச் சேர்ந்தவர்களும் சுமார் பதினைந்து அல்லது இருபது பேர்,  கோவிட் ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்து ஒரே இடத்தில் கூடி ஒருமணிநேரம் உரையாடுவதுண்டு. உலக நன்மைக்கான விஷயங்கள் அதில் இடம்பெறுவதாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.            


எனவே, மூன்றே பேர்தான் என்னைப் பார்த்தார்கள் என்று சொன்னால் அது நியாயமா? லிங்க்டு-இன் உள்ளே சென்று பார்த்தால், அரைமணி நேரம் சுற்றிக்கொண்டே இருந்தாலும் அந்த மூன்று பேரைக் கண்டுபிடிக்கமுடியாது.


“நான் பத்து மாதமாக வேலையில்லாமல் இருக்கிறேன், உதவிசெய்யுங்கள்” என்று நான்கு புலம்பல்கள் தெரியவரும். அதற்கு பதில் சொல்வதாக ஏழெட்டு பேர்களிடமிருந்து “.... என்ற கம்பெனியில்...  என்ற பொசிஷன்  காலியிருக்கிறது. விண்ணப்பிக்கலாம்”  என்று ஆதரவுக்குரல் எழும்பியிருக்கும். “நான் ராஜினாமா செய்ததால்தான் அந்த இடம் காலியாகியிருக்கிறது” என்ற உண்மையையும் அவர்களில் யாராவது ஒருவர் பெருந்தன்மையாகச் சொல்லியிருப்பார். ஆகவே இந்த ஊடகத்தில் என்னுடைய பெயர், மற்றும் பழைய அனுபவங்கள் தவிர வேறெந்த சங்கதியும் புதுப்பிக்கப்படாமலே இருக்கும் என்பதை அறியவும். 


இப்போது விஷயத்துக்கு வரலாம்.  வாட்ஸ் அப்பிலும் முகநூலிலும் இப்போதெல்லாம் இரண்டு பக்கம் முதல் இருநூறு பக்கம் வரை எழுதுகிறார்கள் அல்லது ஃபார்வேர்ட் செய்கிறார்கள்.  எல்லாமே இலவசம் என்பதால் பழைய சினிமா பாடல்கள் அல்லது நண்பர்களின் யூடியூப் இணைப்புகள் அடிக்கடி வந்து விழுகின்றன.  ‘விருட்சம்’,  ‘குவிகம்’, ‘உரத்தசிந்தனை’  போன்ற சில நல்ல குழுக்களில் நல்ல கவிதைகள், கட்டுரைகள், கதைகள் வருகின்றன. சில சமயம், அழகான பெண்களின் புடவை கட்டிய படம் போட்டு அதற்குக் கவிதை எழுதும் போட்டிகளும் வருகின்றன. (கவிதையைப் போலவே அந்தப் புடவை கண்டாங்கியா  நைலக்ஸா  என்ற விவாதமும் அருமையாக இருக்கும்).


ஆனால் தனக்கு வரும் எல்லா செய்திகளையும்  ஒன்றுவிடாமல் படிப்பதென்பது என்னைப் போன்ற சராசரி மனிதனால் ஆகாத காரியம்.  ஆகவே அவ்வப்பொழுது மட்டுமே நான் படிப்பேன்.  அந்த நிமிடம் கண்ணில்படும் நல்ல விஷயத்திற்கு உடனே பாராட்டுரை  எழுதிவிடுவேன். 


இப்படித்தான் அந்த ஊடகத்தில் ஒருமுறை, ஒரு கவிதை மிகச் சிறப்பாக இருந்தது.  அதைப் பாராட்டாமல் விடுவது நியாயமில்லை என்று தோன்றியதால் மனப்பூர்வமாக வாழ்த்தி எழுதினேன். நான் எழுதியதைப் பார்த்து மேலும் நான்கைந்து பேர் கைதூக்கினார்கள் அல்லது கைகூப்பினார்கள். அந்தக் கவிஞர் நன்றி உணர்வால் திக்குமுக்காடிவிட்டார் போலும்.  பதிலுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் அல்லவா! உணர்ச்சிவசப்பட்டு “நன்றி அம்மா”  என்று பதில் எழுதினார். 


சில நாள் கழித்து இன்னொரு ஊடகத்தில் யாரோ ஒருவர் ஃபார்வேர்ட் செய்த ஒரு விஷயமும் மிக மிக உயர்வானதாக இருந்தது. ஆகவே நல்ல முறையில் அதற்குப் பாராட்டு வழங்கியிருந்தேன். இந்த முறையும் எனக்குக் கிடைத்த நன்றிச் செய்தி:   “நன்றி அம்மா” என்பதே! அவரே இவர்! 


யார் நல்லது செய்தாலும் வஞ்சனையின்றிப் போற்றிப் பாராட்டுவது அடிப்படையில் ஒரு தாய்மைப் பண்புதானே என்று  புன்முறுவலுடன் அவருடைய பதிலை ஏற்றுக்கொண்டுவிட்டேன். ஆனால் மறுபடியும் அதே தாய்மை உணர்வை எதிர்காலத்தில் காட்டவேண்டாம்  என்று எதிர்பார்க்கிறேன். பெயரைப் பார்த்து ஆணா பெண்ணா என்று தெரிந்து பதிலளிப்பது பலவகையிலும் பாதுகாப்பானது. 


(இருந்தாலும் அவருக்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும், இன்று வலைப்பதிவில் என்ன எழுதுவது என்று விழித்துக்கொண்டிருந்தபோது எனக்குக் கைகொடுத்தது அவருடைய வாசகம் அல்லவா!)


 -இராய செல்லப்பா, நியூ ஜெர்சியில் இருந்து. 

வெள்ளி, மே 20, 2022

மகா பெரியவரின் மகத்தான தரிசனம்

 38  மகா பெரியவரின் மகத்தான தரிசனம் 

(இன்று கிழமை வியாழன்-6 )  

அமெரிக்காவில் 38 ஆவது நாள் 


(மணித்திருநாடு)

குல்பர்கா என்ற இருள் நகரத்தில் நான் வங்கி மேலாளராகப் பணியில்  இருந்தது ஓராண்டு மட்டுமே. ஆனால் அந்த ஓராண்டில் தான் எத்தனை இனிய அனுபவங்கள்!


கருணைத் தெய்வமாய்க் காஞ்சியில் வீற்றிருந்த (அமரர்) மகாஸ்வாமிகள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களை, முதன் முதலில் நேரில்  தரிசிக்கும் பேறு பெற்றது அவ்வூரில் தான். 

 

(ஆறு வயதில், சிவப்புப் பட்டுடுத்தி, பச்சைப் பட்டு மேலாடையுடன் அவரை எங்கள் சொந்த ஊரான இராணிப்பேட்டையில் தரிசித்தேனாம். அம்மா சொல்வதுண்டு. ஆனால் ஞாபகம் வரவில்லை).

 

1980 ஜூன் 25ஆம் தேதி  சுவாமிகள்  மகராட்டிர மாநிலம் சத்தாரா அடைந்து சுமார் ஒரு வருடம் வாசம் கொண்டிருந்தார்கள். தில்லை நடராஜப் பெருமானுக்குச் சிதம்பரத்தில் உள்ளது போன்றே ஒரு திருக்கோயிலை சத்தராவில் எழுப்பிடத் திருவுள்ளம் கொண்டார்கள்.  அதற்குரிய ஏற்பாடுகளைத் தகுதியுள்ளவர்களிடம் ஒப்படைத்தார்கள்.  (1981இல் தொடங்கிய பணி மூன்றாண்டுகளில் நிறைவடைந்தது).


பின், காஞ்சியை நோக்கிப் பாத யாத்திரையாக அவர்கள் திரும்பிக் கொண்டிருந்த போது தான் இந்த வாய்ப்பு எனக்குக் கிட்டியது.


1982 ஜனவரி 31ஆம் தேதி துல்ஜாபூர் வந்தடைந்தார்கள். பிப்ரவரி 24ஆம் தேதி சித்தபல் என்ற இடத்தில் குரு ஆராதனை நடந்தேறியது. 1982 மே மாதம் 18ஆம் தேதி குல்பர்கா நகர எல்லையான மகாகாவ் என்ற இடத்திற்கு வருகை தந்தார்கள். அங்கு 256 நாட்கள் தங்கி, வியாச பூஜையும் சாதுர்மாஸ பூஜையும் முடித்துக்கொண்டு 1983 ஜனவரி 28ஆம் தேதி அன்று தமிழகம் நோக்கி நடந்தார்கள்.

 

ஆச்சாரியர்களின் பாதயாத்திரை அணி மஹாகாவுக்குள்  நுழையும் போது குல்பர்கா நகரத்தில் இருந்த சான்றோர்கள் அவர்களுக்குப் பூரணகும்ப மரியாதை சமர்ப்பித்து  ஆசி பெற்றனர். அவர்களில் நானும் ஒருவன்.

 

உத்தர நடராஜர் ஆலயம் சத்தாரா 

ஏற்கெனவே மெலிந்த திருமேனி. 89 வயது. அதிலும் சுட்டெரிக்கும் மே மாதத்துச் சூரியனின் தாக்கம் தொடர்ந்து பட்டதால் இன்னும் வாடிப் போயிருந்தது. எனினும்  தன் கனிவு சுரக்கும் திருப்பார்வையால் அனைவரையும் கை உயர்த்தி ஆசீர்வதித்தார் மகாபெரியவர்.  தனக்கென்று அமைக்கப்பட்டிருந்த சிறிய  ஓலைக்குடிலை நோக்கித் தன் நடைபயணத்தைத் தொடர்ந்தார். 

 

காஞ்சி நகரில் அரசன் முதல் ஆண்டி வரை அவரைத் தரிசிக்க வரிசையில் காத்துக்கிடக்கும் போது, அதுவரை அவரைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணமே வராமல் இருந்தவன்பால்  கருணை கொண்டு தரிசனம் கொடுப்பித்த பேரன்பை என்னென்று சொல்வேன்! கண்ணில் நீர் வழிய அவரின் அடிச்சுவட்டைப் பார்த்துக் கொண்டே நின்றேன்.

 

சுற்றி நின்ற கிராமத்து மக்கள் இவர் யார் என்பது கூடப் புரியாதவர்கள், இவ்வளவு வயதானவர், இந்த வெய்யிலில் கால் நடையாகவே ஆயிரக் கணக்கான மைல் நடந்து வந்திருக்கிறாராமே என்று பிரமித்து நின்றார்கள். அவரோடு தாங்களும் மஹாகாவ் வரை நடந்தார்கள்.

 

அலுவலகப் பணியால் கட்டுண்டிருந்த நான் மேற்கொண்டு தொடர முடியாமல் குல்பர்கா திரும்பினேன்.

 

என்னுடைய ஆறாவது வயதில் அவரைத் தரிசித்த நிகழ்ச்சியைக் கண் முன் கொண்டு வர முயன்றேன்:

 

ஓர் இளம்  துறவி, கையில் துறவுக்கோலுடன், சுற்றிலும் பூஜைத் திரவியங்கள் சூழ்ந்திருக்க, ஞானப் பெருமிதத்துடன் அமர்ந்திருக்கிறார். நகரத்துப் பணக்காரர்களும் முக்கியஸ்தர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு கை நிறைய பழங்கள், பட்டு வேட்டி, புடவை, அங்கவஸ்திரம், மற்றும்  தட்சிணை என வெற்றிலை தட்டில் வைத்துச் சமர்ப்பித்து ஆசி பெறுகின்றனர்.

 

ஆண்களுக்கான வரிசை முடிந்தவுடன், பெண்கள்.

 

அம்மா என்னைக் கையோடு அழைத்துச் சென்று ஆச்சாரியர்களின் முன் நிறுத்தி, 'நமஸ்காரம் பண்ணு'' என்கிறார். பட்டு வஸ்திரம் தரையில் புரளத் தரையில் விழுந்து நமஸ்கரிக்கிறேன். புன்சிரிப்போடு, பேர் என்ன என்கிறார். நான் சொல்வதற்குள், அம்மா  முந்திக் கொண்டு 'பரசுராமன்' என்கிறார். 'இல்லை இல்லை, என் பேர் செல்லப்பா' என்கிறேன் அவசரமாக. எல்லோரும் சிரிக்கிறார்கள். அவர் உள்பட.

 

'அது பள்ளிக்கூடத்திற்கு. இது சமஸ்காரங்களுக்கு' என்கிறார். கையில் கற்கண்டுக் கட்டிகளைத்  தந்து, 'நன்றாகப் படிக்கிறாயா பரசுராமன்?' என்கிறார். 'எப்போதும் நான் தான் பர்ஸ்ட்டு மார்க்கு' என்கிறேன். ஆமாம்  என்பது  போல் அம்மா அவரைப் பணிவாக நமஸ்கரிக்கிறார். மஞ்சள் குங்குமமும் மாங்கல்யச் சரடும் தவிர வேறு அணிகலன்கள் இல்லாததை ஆச்சாரியார் கவனிக்காமல் இருந்திருப்பாரா? 'காமாட்சி கை விட மாட்டாள்' என்கிறார். குங்குமம் தருகிறார். நிறைவோடு வெளியே வருகிறார் அம்மா. எனக்கும் இன்னதென்று தெரியாத மன நிறைவு தோன்றுகிறது.

 

அடுத்த சில நாட்களில் நான் குல்பர்காவிலிருந்து விடை பெற்றுக் கொண்டுவிட்டேன். ஆனால் மகாகாவில் ஏற்பட்ட மகத்தான அனுபவம் இன்றும் மனதிலேயே நிற்கிறது.

மகாஸ்வாமிகளுக்கு 1993 மே 7ஆம் தேதி, நூறாண்டு நிறைந்தது. 1994 ஜனவரி 8ஆம் தேதி அவர்கள் மகாசமாதி அடைந்தார்கள்.

 

முதல் கனகாபிஷேகம் முடிந்த சில நாட்களில் மகாஸ்வாமிகளை மீண்டும் தரிசிக்கும் பேறு பெற்றேன். புது டில்லியிலிருந்து எனது சிறந்த நண்பரும் நாடறிந்த எழுத்தாளருமான திரு ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம்பதி சமேதராக இதற்கெனவே காஞ்சிக்கு வந்தார்கள். அவர்களோடு நானும் தரிசனம் பெற்றேன். அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். 


திருமதி ஆனந்தம் , திரு (அமரர்) எஸ் கிருஷ்ணமூர்த்தி 

ஆனந்தம் என்னும் தன் மனைவியின் பெயரைச் சேர்த்துக்கொண்டு ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி என்ற எழுத்துலகப் பெயரை கொண்டிருந்த திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 06-4-2019  அன்று  அமரர் ஆகிவிட்டார். கோவையில் தற்போது தனியாக வசிக்கும் திருமதி ஆனந்தம் அம்மையார் அவர்களுக்கு மீண்டும் நன்றி சொல்லவிழைகிறேன். 


நியூ ஜெர்சியில் ஸ்ரீ மகாஸ்வாமிகளின்   பாதுகைகளை வைத்து ஓர் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.  விரைவில் சென்று தரிசிக்க வேண்டும். ‘ அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்பதுபோல் அதற்கும் ஸ்ரீ மகா பெரியவரின் ஆசியை வேண்டுகிறேன். 


-இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து