கொரோனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 09, 2020

பொன்னித்தீவு -4

பொன்னித்தீவு - 4
     -இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும். அல்லது

முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்


(4) நெக்லஸ் நெக்லஸ்

கேலியும் கிண்டலுமாகத் தன்னைச் சூழ்ந்திருந்த தோழிகளிடம் இருந்து ஒரு வழியாக விடைபெற்று முதலிரவு அறைக்குள் நுழைந்தாள் யமுனா. விடியற்காலையில் இருந்து நடைபெற்ற திருமணச் சடங்குகளின் சுமை அவள் கண்களின் கீழ் கருவளையமாக உருமாறி இருந்தது. பதினெட்டு டிகிரிக்குக் குளிரூட்டப்பட்ட அறையிலும் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது.

அனுபவம் புதுமை என்பதால் தயக்கமும் பயமும் இருந்தது. என்னதான் செல்வம் அவளுக்கு ஆறுமாதம் முன்பிருந்தே பழக்கமானவன் என்றாலும் வெறுமனே அலைபேசி வழியே ஏற்பட்ட பேச்சுப் பழக்கம்தான் அது. பெண் பார்க்கவந்தபோது சில நிமிடங்கள்தான் நேரில் பார்த்துப் பேசமுடிந்தது. ஆகவே முகத்தில் நாணம் பொங்கிக்கொண்டிருந்தது.

பூவும் பொட்டும் படத்தில் முதல் இரவுக் காட்சி 
அலங்கரிக்கப்பட்ட கட்டிலின் ஓரத்தில்  விஷமப் புன்னகையுடன் நின்றிருந்தான் செல்வம். பட்டு வேட்டியில் இருந்தான். புழுக்கம் காரணமாகப் பட்டுச் சட்டையைக் கழற்றிச் சுவரில் மாட்டியிருந்தான். அவனது அழகை இரசித்தபடியே தயங்கித்தயங்கி  நின்றாள் யமுனா.

எவ்வளவு சினிமாக்களில் பார்த்திருக்கிறாள், கதாநாயகன் ஓடிவந்து கதாநாயகியை அலேக்காகத் தூக்கிக்கொண்டு கட்டிலில் போடுவதை! இந்தக்  கல்லுளிமங்கன்  சும்மா சிரித்துக்கொண்டே நிற்கிறானே!

ஆகட்டும், என்னதான் செய்கிறான் பார்க்கலாம் என்று தலைக்கு மேல் சுழன்றுகொண்டிருந்த காற்றடியை நோக்கிக் கண்களைப்  பாயவிட்டாள்.
முந்தானையால் முகத்தை மீண்டும் மீண்டும் துடைத்துக்கொண்டாள்.

அதே நிமிடத்தில் விளக்கு அணைக்கப்பட்டது. செல்வத்தின் கைகள் அவளை வேகமாகப் பற்றி இழுத்துக் கட்டிலில் போட்டன. பிறகு சன்னமான ஒரு விளக்கை ஒளிர ஆரம்பித்தது.

“என்ன மேடம், மேக்கப் அதிகமாகிவிட்டதா? அரிக்கிறதா?” என்று கிண்டலாகக் கேட்டவன், தன்  பட்டு வேட்டியின் ஒரு முனையால் அவள் முகத்தைத் துடைக்கமுயன்றான். அவள் பொய்க் கோபத்துடன் அவன் கைகளை விலக்கினாள்.
     
அவளுடைய முகத்தைத் தன் கைகளால்  பிடித்துக்கொண்டான் செல்வம். “மேடம், முதலிரவில் முதல்முதலில் செய்யவேண்டிய காரியம் என்ன தெரியுமா?”  என்றான்.

தெரியாது   என்று கண்களால் சொன்னாள்  அவள்.

“நிச்சயமாகத் தெரியாதா?”

“பிளீஸ், எனக்கு நிஜமாகவே தெரியாது” என்றாள்  அழும் குரலில்.

 “உங்களுக்குத் தெரியாது சரி. உங்கள் தோழிகளுக்குமா தெரியாது? உங்கள்  சித்தி, பெரியம்மா, அத்தை, பாட்டிமார்கள் யாரும் உங்களுக்குத் சொல்லித் தரவில்லையா?” என்றான். வீட்டுப்பாடம் எழுதாத மாணவியை ஆசிரியர் கேட்பதுபோல் இருந்தது அவன் குரல்.

அவளுக்குக் குழப்பம் அதிகமாகிவிட்டது. உண்மையிலேயே தான் ஏதோ தவறு செய்துவிட்டதுபோல் உணர்ந்தாள். அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு, “பிளீஸ், என்னை ரொம்ப சோதிக்காதீர்கள்.  நான் மிகவும் களைத்துப் போயிருக்கிறேன். நீங்களே என்னவென்று சொல்லிவிடுங்களேன், நான் செய்கிறேன்!” என்றாள் கொஞ்சும் குரலில்.

“அப்படி வா வழிக்கு!” என்றவன், அவள் செய்யவேண்டியதை இரகசியமாக அவள் காதுகளில் சொன்னான்.

“ச்ச்சீய்..!” என்று அவன் முகத்தை விலக்க முயன்றாள். “மாட்டேன்!” என்றாள்.

“ஓ, மாட்டீர்களா? அப்படியானால்  இப்போதே என் மாமியாருக்குப் போன் செய்யட்டுமா?” என்று அலைபேசியை எடுத்தான் செல்வம்.

“நோ!” என்று அதை பிடுங்கி எறிந்தாள் யமுனா. அதே கணத்தில், அறையில் இருந்த சிறிய வெளிச்சமும் அணைந்துபோனது.

கட்டில் மட்டும் விட்டுவிட்டு மெல்லிய முனகல்களைப் பலமுறை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.

யமுனா எழமுயன்றாள். கால்கள் இரண்டும் நெறிகட்டியதுபோல் வலித்தது. அவன் தன்னை நோக்கி அவளை இழுத்துக்கொண்டான். “இதுதான் என் மனைவிக்கு நான் தரும் முதல் பரிசு” என்று அவள் கழுத்தில் ஒரு நகையை அணிவித்தான். இருட்டிலேயே அவளுக்குப் புரிந்தது. அது ஒரு நெக்லஸ்!

அப்படியே அவனை அள்ளி அணைத்துக்கொண்டாள். அவனுக்கு மூச்சு முட்டியது.

“ஒன்று கேட்கட்டுமா, நீங்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது” என்று அவன் கன்னங்களை வருடினாள். அவன் உரியமுறையில் சரி என்றான்.

“நீங்கள் ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறீர்கள்? உங்கள் வீட்டில் சாப்பாடு போடமாட்டார்களா?” என்று கடகடவென்று சிரித்தாள்.

அவள் பிடியை விடாமலேயே அவன் சடக்கென்று எழுந்துகொண்டான். “என்ன திமிர் உனக்கு! நான் சொல்லட்டுமா, நீ ஏன்  என்னைவிட குண்டாக இருக்கிறாய் என்று? புகுந்த வீட்டில் உனக்கு சோறு போடமாட்டார்களோ என்ற சந்தேகத்தில் உனக்கு இரண்டு பங்கு சோறு போட்டு கொழுக்க வைத்திருக்கிறார்கள். சரிதானே?” என்றான்.

பிறகு மௌனம்.   

வெகு நேரத்துக்குப் பின்  மெல்ல எழுந்த யமுனா, “பால் கொஞ்சம் மீதமிருக்கிறது. குடிக்கிறீர்களா?” என்றாள்.

“மாட்டேன், நீதான் குடிக்கவேண்டும்” என்று டம்ளரைப் பிடுங்கி அவள் வாயில் திணித்தான் செல்வம். அவள் வெட்கத்துடன் அவன் முகத்தில் நகக்குறியிட்டாள். அவ்வளவில் ‘ணங்’கென்ற சப்தத்துடன் பால் டம்ளர் நழுவித் தரையில் விழுந்தது.

***
“என்ன மாப்பிள்ளை, இப்படிச் செய்துவிட்டீர்கள்?” என்று பரமசிவத்தின் குரல் கேட்கவும் அலறிக்கொண்டு எழுந்தான் செல்வம்.

“உங்களுக்கு இராத்திரியில் பால் குடிக்கும் பழக்கம் உண்டு என்று யமுனா சொன்னாள். அதுதான் ஒரு டம்ளரில் உங்கள் பக்கமாக வைத்திருந்தேன். நீங்கள் குடிக்க மறந்துபோய், இப்போது தலையணையை அதன்மீது உதைத்துத்தள்ளி விட்டீர்களே!” என்றவர், துடைக்கும் துணியால் தரையில் சிந்தியிருந்த பாலைத் துடைத்தெடுத்தார். பிறகு ஈரமான துணியால் அந்த இடத்தை நன்றாகத்  துடைத்தார்.    

“சாரி மாமா! சாரி மாமா! “ என்று இரண்டுதரம் கூறிவிட்டு மறுபடி அயர்ந்து தூங்க ஆரம்பித்தான் செல்வம். ‘எல்லாம் கனவுதானா?’

அவனைப் பார்க்கப்  பரிதாபமாக இருந்தது பரமசிவத்திற்கு. ரொம்ப நல்லவன். பாவம், பொழுது விடிந்தால் செம்பகத்தின் பிரச்சினை எப்படி ஆகுமோ என்று கலங்கிப் போயிருக்கிறான் போலும். நன்றாகத் தூங்கட்டும்.

****
காலையில் அவன் எழுந்திருப்பதற்கு எட்டுமணி ஆகிவிட்டது. எப்படியும் ‘ஒர்க் ஃப்ரம்  ஹோம்’ தான்.  ஒன்பதரை மணிக்கு லாக்-இன் செய்தால் போதும். என்றாலும் எட்டரைக்கே தயாராகிவிட்டான்.

ஆச்சி வரவேண்டும். செம்பகம், அவளுடைய கணவன், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகிய நான்குபேர்களும் வரவேண்டுமே!

பரமசிவத்துக்கு இருப்புக் கொள்ளவில்லை. பிரச்சினையை எவ்வளவு சீக்கிரம் தீர்த்துவிட முடியுமோ அவ்வளவு நல்லது என்று கருதினார். பையில் பணம் இருந்தது. என்றாலும் ஏ.டி.எம். போய் இன்னும் கொஞ்சம் எடுத்துவந்தார். யமுனா வருவதற்குள் எல்லாம் சுமுகமாக முடியவேண்டும். ஆனால் இந்த ஆச்சியம்மா யமுனாவிடம் சொல்லாமல் இருக்கவேண்டுமே!

சொல்லமாட்டார். அவருக்கும் மூன்று பெண்கள். இன்னொரு குடும்பத்தை நிச்சயம் கலைக்கமாட்டார். ஏற்கெனவே வாக்குறுதி கொடுத்துவிட்டார்.

பத்துமணி வரையில் யாரும் வரவில்லை. குழப்பமடைந்த பரமசிவம், ஆச்சியம்மாவுக்கு போன் செய்தார். “வந்துகிட்டு இருக்கீங்களாம்மா?” என்றார்.

“நான் மட்டும் வந்து என்ன செய்வது? செம்பகமும் அவ புருஷனும் வரமாட்டாங்களே! தெரியாதா உங்களுக்கு?” என்கிறார் ஆச்சி. 

“என்ன விஷயம்?” என்றார் பரமசிவம் கலவரத்துடன்.

“அவங்க தெருவில் கொரோனா  டெஸ்ட் செஞ்சதில் ரெண்டு பேருக்கு பாசிட்டிவ் வந்ததாம். அதனால் இவங்களையும் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்களாம். பதினைந்துநாள் வெளியே வர முடியாதாம்!”

அப்போது திடுக்கென்று அங்கு தோன்றினாள்  புஷ்பா. “இன்ஸ்பெக்டர் சாரும் வரமாட்டார்” என்றாள் கேலியாக. 

“நெஜம் தாங்க. ஐயா போனவாரம் கோயம்பேட்டில் டியூட்டி பண்ணினார் இல்லையா, அதனால் அவரையும் தனிமைப்படுத்திவிட்டார்கள்” என்றாள். கோயம்பேடுதான் சென்னையில் கொரோனாவின் புது கிளஸ்டராம்.

ஒரு பிளாஸ்டிக் கவரில் முல்லைப்பூவை எடுத்து செல்வத்திடம் கொடுத்தாள். “உங்க செம்பகம் கொடுத்தாள்” என்றாள். ‘உங்க’ என்பதை அவள் உச்சரித்ததில் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தம் இருந்ததைப்  பரமசிவம் கவனிக்கத்  தவறவில்லை.  

(தொடரும்)  (கன்னித் தீவு போலவா?)

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

வெள்ளி, ஏப்ரல் 17, 2020

உலகை உலுக்கும் மரணங்கள்


BLOG-17 April 2020

உலகை உலுக்கும் மரணங்கள் 

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு  25-3-2020 முதல் அமலில் உள்ளது.
நாள்தோறும் தொலைக்காட்சியிலும் சமூக ஊடகங்களிலும் இறந்தோரின் எண்ணிக்கை பெரிதாகக்  காட்சிப்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மரணம் அடைவதாகவும், அந்த உடல்களைப் பாதுகாத்துவைக்க இடமின்மையால், வீதிகளிலெல்லாம் தார்பாலின் கொட்டகை அமைத்து சவப்பெட்டிகள் இடப்பட்டிருப்பதாகவும் தெரியவரும்போது நெஞ்சம் திடுக்கிட்டுத்தான் போகிறது. 


நமது பிள்ளைகளும் தெரிந்தவர்களின் பிள்ளைகளும் இரண்டு வீட்டிற்கு ஒருவராவது அமெரிக்காவில் பணிபுரிந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் நல்ல செய்தி வரவேண்டுமே என்பதைவிடவும், தீய செய்தி வந்துவிடக்கூடாதே என்றுதான் எண்ணவேண்டி இருக்கிறது. 

வரிசை வரிசையாக சவப்பெட்டிகளைப் பார்த்தேன். நியூயார்க்கில் மட்டுமின்றி ஸ்பெயினிலும்  இத்தாலியிலும் இராணுவ வண்டிகளில் சவங்கள் எடுத்துச்செல்லப்படுவதைக் கண்டேன். ஏன், நமது விழுப்புரத்திலேயே ஒரு காட்சி வந்தது. டில்லி மாநாட்டில் கலந்துகொண்டு கொரோனாவைப் பெற்றுக்கொண்டு விழுப்புரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்துபோன ஒருவரின் உடலை உறவினர்கள் பதினைந்தடி தூரத்தில் இருந்துகொண்டே, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூலமாகவே சவக்குழிக்குள் வழியனுப்பிவைத்ததைப்  பார்த்தபோது, இந்திய ரூபாயின் மதிப்பை விடவும் மனித வாழ்வின் மதிப்பு  எந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்துவிட்டது என்பதைக் கண்கூடாகக் கண்டேன்.

வாய்விட்டு அழவும் முடியாமல், கைதொட்டு உடலைத் தூய்மைப்படுத்தவும்  முடியாமல், மத வழக்கங்களின்படி சடங்குகளைச் செய்யவும் முடியாமல், சவப்பெட்டியின் மீது கூடக்  கைவைக்க முடியாமல்….என்ன ஒரு துரதிர்ஷ்டம்! 

இறந்துபோனவர்களில் நல்லவர்கள் இருக்கலாம், வாய்மையாளர்கள் இருக்கலாம், சாதனையாளர்கள் இருக்கலாம், சமுதாயத்தின் நன்றிக்குப் பாத்திரமானவர்கள் இருக்கலாம். பட்டாசுகள் முழங்க, பறையடித்துக்கொண்டும் கூத்தாடியும் வழியனுப்பிவைக்க ஏராளமான நண்பர்களும் உறவினர்களும் தயாராக இருக்கலாம். ஆனால் யாருக்கும்  எந்த வாய்ப்பும் அளிக்காமல் கொரோனா என்னும் கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சி மனித சமுதாயத்தின் கைகளைக் கட்டிப்போட்டுவிட்டதை  என்ன சொல்வது!

கொரோனா இல்லாமலே தினமும் பலபேர் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் இறுதி ஊர்வலங்களின் கதியும் இதேதான். என்னுடன் வங்கியில் நாற்பதாண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த நண்பர் ஒருவர் இந்த  கொரோனா காலத்தில் இயற்கை மரணம் எய்தினார். அது ஒன்றுதான் அவர் செய்த பாவச்செயல். ஏனெனில் அவர், எறும்புக்கும் தீங்கு விளைவித்ததில்லை. உடன் பணியாற்றியவர்களுக்கு அவர் என்றுமே தொல்லை தந்தவரில்லை. வீண் வம்பு பேசாதவர். பொய்யான தகவல் சொல்லிப் பயணப்படி பெற்றதில்லை. தன் நெற்றியில் மெல்லிய கோடாக மின்னிய விபூதியைப் போலவே மென்மையான மனம் படைத்தவர்.

அவருடைய இறுதி ஊர்வலத்திற்கு நாங்கள் யாருமே போகமுடியாதபடி கொரோனா ஊரடங்கு சதிசெய்துவிட்டது. அவருடைய முகத்தையும் இறுதியாகப் பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

எனக்கு அருகாமையில் இருந்த இன்னொருவீட்டில் நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருந்த தாயார், ஊரடங்கு நாளில் மரணம் அடைந்துவிட்டார். ஒரே மகன் வெளிநாட்டில் இருக்கிறார். விமானப் பயணங்களுக்குத் தடை இருப்பதால், பாவம், பெற்ற தாய்க்கு இறுதிச் சடங்கு செய்யவும் பேறிழந்தவரானார் அவர்.

நல்ல இடத்தில் திருமணம் ஆகவேண்டுமா? அதிர்ஷ்டம் வேண்டும். நல்ல பிள்ளைகள் பிறக்கவேண்டுமா? அதிர்ஷ்டம் வேண்டும். நல்ல வேலை, நல்ல பதவி, தேர்தலில் வெற்றி ..கிடைக்க வேண்டுமா? அதிர்ஷ்டம் வேண்டும். தொலையட்டும். 

செத்துப் போவதற்குமா அதிர்ஷ்டம் வேண்டும், ஐயா?

எல்லா வசதிகள் இருந்தும், கொள்ளிவரை வருவதற்குக்  கூட்டம் தயாராக இருந்தும், அனாதை பிணம்போல் மரணிப்பதை வேறெப்படிக் காரணப்படுத்துவது?

விரைவில் விலகட்டும் கொரோனா என்று வேண்டுவோமாக. அரசின் கெடுபிடிகளுக்கு உட்படுவோமாக.  சமூக விலகலைக் கடைப்பிடிப்போமாக. மூக்கையும் வாயையும் மூடுதுணியால் இறுக்குவோமாக. நம்மால் யாருக்கும் கொரோனா பரவாமல் இருப்பதாக.

நம்மைவிட்டுப் பிரிந்துபோனவர்களின் நினைவுகளுக்கு அமைதியாக அஞ்சலி செலுத்துவோமாக.

-இராய செல்லப்பா, சென்னை