ஞாயிறு, பிப்ரவரி 04, 2024

வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 5 (கடைசிப் பகுதி)

வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 5

 (குறுநாவலின் கடைசிப் பகுதி)

 -இராய செல்லப்பா 


இதன் முந்தைய பகுதி   -"  வண்ணம் கொண்ட வெண்ணிலவு - 4  " படிக்க இங்கே சொடுக்கவும்


(12)

பதினோரு மணிக்குப்  பொன் ஃபைனான்ஸின் கிளைமேலாளர்கள் வந்தபோது  தன் சூத்திரத்தை அவர்களுடன் பகிர்ந்துகொண்டாள் பொன்னி.

 தன்னோடு வங்கியிலிருந்து விருப்ப ய்வுபெற்று  சென்னையில் வசிக்கும் சுமார் இருநூறு பேரை முறையாகச் சந்திக்கவேண்டும்.  ஓய்வுப்பலனாக ஒவ்வொருவரும் குறைந்தது முப்பதிலிருந்து ஐம்பது லட்சம் வரை பெற்றவர்கள். ஆக மொத்தம்  60 கோடி முதல் 100 கோடி வரை அவர்களிடம் இருக்கும்.  பெரும்பாலும் அவை, மற்ற வங்கிகளில் குறைந்த வட்டிக்கு பிக்சட் டெபாசிட்டுகளாக இருக்கலாம். அதில் நாலில்  ஒருபங்கை பொன் ஃபைனான்சுக்குத் திருப்பினாலே  15 முதல் 25  கோடி சேர்ந்துவிடும். இதுதான் பொன்னியின் திட்டம். 

அடுத்த முப்பது நாட்களுக்குள் ஒவ்வொரு கிளைமேலாளரும் இவர்களிடமிருந்து மட்டும் குறைந்தது ஐந்து கோடியாவது டெபாசிட் திரட்டவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தாள். இவர்களின் டெபாசிட்டுக்கு அரை சதவீதம் கூடுதல்  வட்டியும்,  ஒருவேலை அவர்களுக்கு நகைக்கடன் தேவைப்படுமானால் வட்டியில்  அரை சதவீதம் தள்ளுபடியும் கொடுப்பதாக, அதிகம் விளம்பரப்படுத்தாமல் தெரிவிக்கச் சொன்னாள். கிளைமேலாளர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப புதிய போனஸ் திட்டத்தையும் அறிவித்தாள்.

இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஒரே மாதத்தில் நாற்பது கோடி ரூபாய்போல புதிய முதலீடு கிடைத்துவிட்டது! திட்டமிட்டபடி ‘ஐயா’ வின் பணம் இப்போது அவருக்குக் கொடுக்கப்படப் போகிறது. ஆனால் அதற்குள்?

 (12)

 மலர்வண்ணன் தன் ஆபீசுக்கு வருவாரென்று வாசு கனவிலும் நினைத்ததில்லை.

 “ரொம்ப அவசரம். ‘ஐயா’ வோட பணத்தைத் திரும்பக்  கொடுத்துவிட்டீர்களா?”  என்றார் மலர்.

 “இன்னும் இல்லை, என்ன விஷயம்?” என்றான் வாசு திகைப்புடன்.

“கொடுத்துவிடாதீர்கள். அவர் எதிர்க்கட்சி வேட்பாளராக நிற்கப்போகிறார். அதனால் அவருக்கு உதவிசெய்தால் நீங்கள் ஆளும்கட்சிக்கு எதிரியாகி விடுவீர்கள்.”

வாசு சிரித்தான். “இது என்ன தனிப்பட்ட கொடுக்கல் வாங்கலா மலர்வண்ணன்? அவருடைய டெபாசிட்டை அவர் திருப்பிக் கேட்கிறார். நாங்கள் ஒரு நிதி நிறுவனம். கொடுக்காமல் இருக்க முடியுமா?”

“எனக்குத் தெரியாது மிஸ்டர் வாசு! உங்களை விடப்  பெரிய ஃபைனான்ஸ் கம்பெனிகள் எல்லாம் கொடுக்க மறுத்துவிட்டார்களே, அது எப்படி?”

பொன்னி தனது அலைபேசியில் வந்த குறுஞ்செய்தியை அவரிடம் காட்டினாள். “அவர் பணம் அவருடைய வங்கிக்கு ட்ரான்ஸ்பர் ஆகிவிட்டது. இனிமேல் நாங்கள் எதுவும் செய்ய இயலாது. மன்னிக்கவும்” என்று கூறிவிட்டுத்   தன் இருக்கைக்குச் சென்றுவிட்டாள்.

"காபி குடிக்கிறீர்களா மலர்வண்ணன்? இங்கு உங்கள் தோட்டத்து டீ கிடைப்பதில்லை” என்று சிரித்தான் வாசு. கறுப்புப்பணத்தைக் கையாளும் பினாமிக்கு எவ்வளவு துரோக புத்தி!

ஆவேசத்துடன் எழுந்த மலர்வண்ணன், “உங்கள் கம்பெனியை உண்டு இல்லை என்று ஆக்குகிறேனா இல்லையா பாருங்கள்” என்று சபதம் செய்துவிட்டு வெளியேறினார்.

வாசுவும் பொன்னியும் உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தார்கள். தங்கள் கம்பெனியில் எந்த விதமான குளறுபடிகளும் கிடையாது. நகைக் கடன்களிலும் எந்தக் குறைபாடும் கிடையாது என்று தணிக்கை அறிக்கையும் உள்ளது. டெபாசிட்டர்களுக்கு உரிய தேதியில் பணத்தைத் திருப்பித் தராமல் இருந்தது கிடையாது. லாப நஷ்டக் கணக்கிலும் ஒரு ரூபாய் கூட பொய்க்கணக்கு எழுதியது கிடையாது.

 “ஆனாலும் நாம் இப்போது பயப்படத்தான் வேண்டும்” என்றாள் பொன்னி. “நாம் இருவரும் சாதாரணக் குடும்பங்களில் இருந்து கிளம்பி வந்து, இந்தக் கம்பெனியை உருவாக்கி நல்ல பெயரோடு வளர்த்திருக்கிறோம். இவர்கள் நினைத்தால் இன்றைய சமூக ஊடகங்கள் வழியாக நமக்கு எத்தனையோ வழிகளில் கெட்ட  பெயரை உண்டாக்க முடியும். அதனால் …”

“அதனால் இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். அதற்கு என்னுடைய பழைய வங்கியின் சேர்மனை உடனே சந்திக்கவேண்டும்.  அவரிடம்  பேச வேண்டிய விஷயத்தைப் பற்றி ஒரு ரிப்போர்ட் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். அதற்குள் நீங்கள் அவரிடம் அப்பாயிண்மெண்ட்  ஏற்பாடு செய்துவிடுங்கள்” என்றாள் பொன்னி. 

பிறகு தன் மயிலாப்பூர் கிளை மேலாளர் தமிழ்ச்செல்வியை அழைத்து “உடனே கிளம்பு. அந்த எடிட்டரிடம் பேசு. நம்மைப்பற்றித் தவறான தகவல் வராமல் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்” என்று அவளிடம் ஒரு முக்கியமான பணியை ஒப்படைத்தாள். 

(13)

 பிரபல பொருளாதார நாளேட்டின் விருது பொன் ஃபைனான்சுக்குக் கிடைத்தபோது முதலில் வந்த வாழ்த்துச்செய்தியே பொன்னியின் பழைய வங்கியின் சேர்மனிடம் இருந்துதான். “இன்னும் சில வாரங்களில் உங்களைச்  சந்திக்க விரும்புகிறேன்” என்றும் சொன்னார். அந்தச் சந்திப்புதான் இன்று  நிகழப்போகிறது.

“வாங்க வாங்க மிஸ் பொன்னி! மிஸ்டர் வாசு!” என்று எழுந்து நின்று வரவேற்றார் பிரதீப்குமார். சேர்மன்.  “எங்கள் வங்கியின் முன்னாள் ஊழியர் இவ்வளவு வெற்றிகரமான நிறுவனத்தைத் தொடங்கி நடத்துவது எங்களுக்கு மிகுந்த பெருமை யளிக்கிறது” என்று பாராட்டினார்.

 “ஒரு காலத்தில் நகைக்கடன் கொடுக்கும் வங்கிகள் என்றாலே ரிசர்வ் பேங்க்கில் மரியாதை கொடுக்க மாட்டார்கள். இப்போது அதையே  வீட்டுக்கடன், வாகனக்கடன் மாதிரி ஒரு முக்கியமான கடன் துறையாக அங்கீகரித்துவிட்டார்கள். அதற்கான காரணங்களில் உங்கள் அணுகுமுறையும் ஒன்று” என்றார் அவர்.

 பொன்னியும் வாசுவும் ஒரு புன்சிரிப்பின் மூலம் அவரின் பாராட்டை ஏற்றுக்கொண்டார்கள். பிறகு பொன்னி தன் கையிலிருந்த ஃபைலை சேர்மனிடம் கொடுத்தாள். அரசியல்வாதியின் பினாமி ஒருவர் தங்களைப் பற்றி அவதூறு கிளப்ப முற்படுவதை அதில் சுட்டிக்காட்டி இருந்தாள்.

 சேர்மன் அதை படித்துவிட்டு கலகலவென்று சிரித்தார்.  “நாங்கள் மகாராஷ்டிராவில் பார்க்காத அரசியல் தலையீடா!  நமக்குள்ள கடமைகளை நேர்மையாக நிறைவேற்றினால் எந்த அவதூறுக்கும் அஞ்சவேண்டியதில்லை. எதற்கும் உங்களுக்கு விருது கொடுத்த பத்திரிகையின் காதில் இந்த விஷயத்தைச் சொல்லிவைப்பது நல்லது” என்றார்.

“எங்கள் சார்பாக தமிழ்ச்செல்வி அந்த எடிட்டரிடம் இப்போது அதைத்தான்  பேசிக்கொண்டிருப்பாள்” என்றாள் பொன்னி.

 “சரி, இப்போது இந்தக் கடிதத்தைப் படியுங்கள். இது சுவாரஸ்யமானது” என்று அவளிடம்  ஒரு கடிதத்தை நீட்டினார் சேர்மன். அதைப் படித்த பொன்னியும் வாசுவும் ஆச்சரியத்தினால் வாயடைத்துப் போனார்கள்.

 “பொன்னி ஃபைனான்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கண்டு உற்சாகமடைகிறோம். நாங்களே நகைக்கடன் வழங்கும் துணை நிறுவனம் ஒன்றைத் தொடங்குவதற்காக இருந்தோம். ஆனால் அதற்குப் பதிலாக, உங்கள் நிறுவனத்தில் முதல் தவணையாக 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய விரும்புகிறோம். இது உங்களுக்கு ஏற்புடையதென்றால் எங்கள்  எக்சிகியூடிவ் டைரக்டரைத் தொடர்புகொள்ளுங்கள்” என்றது அக்கடிதம்.

 பொன்னி உற்சாக மிகுதியால் எழுந்து நின்றாள். “உங்கள் ஆஃபரை  ‘இன்-ப்ரின்சிபிள்’ ஆக இப்போதே ஒப்புக்கொள்கிறோம். அதிகாரபூர்வ பதிலை  நாளை அனுப்புகிறோம்” என்றாள் வாசுவைப் பார்த்துக்கொண்டே.

 (14)

 மறுநாள் இந்தியாவின் எல்லாப் பொருளாதார நாளேடுகளிலும்  பொன்னி-வாசுவின் புகைப்படங்கள் முதல் பக்கத்தில் வெளிவந்தன. “இந்தியாவின் பிரபல தனியார் வங்கி, பொன்னி ஃபைனான்சில் 500 கோடி முதலீடு” என்ற தலைப்பில் மேற்படி வங்கியின் முன்னாள் ஊழியரான பொன்னி, எவ்வாறு விருப்ப ஒய்வு பெற்றபின் ஒரு தங்கநகைக் கடன் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்துகிறார் என்று மூன்று பத்திகளில் செய்தி வெளியிட்டன. 

 இவர்களுக்கு விருது கொடுத்த நாளேடு மட்டும், ‘அரசியல் தலையீடு இல்லாதவரை இம்மாதிரி புதிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் நன்றாக வளரமுடியும்’ என்று பொடிவைத்து எழுதியது.

அடுத்த சில வாரங்களில் அந்த வங்கி வேகமாகச் செயல்பட்டது. தாங்கள் செய்யப்போகும் 500 கோடி முதலீட்டுக்கு இரண்டு நிபந்தனைகளை விதித்தது.

முதல் நிபந்தனை, வாசுவிடமிருந்து பொன்னி, அந்த நிறுவனத்தின் சேர்மன் & மேனேஜிங் டைரக்டராகப் பொறுப்பேற்கவேண்டும். இரண்டாவது நிபந்தனை, வாசு, ராஜினாமா செய்துவிட்டு, மும்பையில் அந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் சேர்ந்து, வட இந்தியாவை இலக்காக வைத்து, தங்கநகைக் கடன் நிறுவனம் ஒன்றைப் புதிதாகத் தொடங்கி அதன் சேர்மனாக இருக்கவேண்டும்.

 இரண்டாவது நிபந்தனை சாந்திக்கு மிகவும் பிடித்துவிட்டது. சரண்யாவையும் பாலுவையும் அழைத்துக்கொண்டு மும்பைக்குச் செல்வதென்று அவள் மனதளவில் தயாராகிவிட்டாள். 

“நல்ல பள்ளிக்கூடமாகப் பாருங்கள். வீடும் பக்கத்திலேயே இருந்தால் நல்லது” என்று நாணத்தோடு புன்னகைத்தாள் சாந்தி.

“வேறு வழி?” என்று அவளுடைய வலதுகரத்தைப் பற்றினான் வாசு.

“என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றாள் பொன்னி, கண்களில் ஆனந்தக்கண்ணீர் மின்ன.

அப்போது அவளுடைய அலைபேசி ஒலித்தது. ‘ஐயா’வின் குரல்!

“வணக்கம் சார்! நானே உங்களைப் பார்க்கவேண்டும் என்று இருந்தேன். உங்கள் பணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டோம். எப்போது வேண்டுமானாலும் வந்து பெற்றுக்கொள்ளலாம்” என்று மலர்ச்சியோடு சொன்னாள் பொன்னி. “அல்லது மலர்வண்ணனை அனுப்பிவைக்கிறீர்களா?”

“அந்த துரோகியின் பெயரைச் சொல்லாதீர்கள்! நானே வருகிறேன்” என்று போனை வைத்தார் ‘ஐயா.’

வாசுவைப்பார்த்து நிம்மதியாகச் சிரித்தாள் பொன்னி.

 **** முற்றும் ****    

9 கருத்துகள்:

  1. நல்லதொரு முடிவு. அரசியல் தலைவர்கள், பினாமிகள் தொல்லை இப்படி நிறைய இடங்களில் இருக்கத்தான் செய்கிறது. அவற்றை வெற்றிகரமாக கடந்த விதம் நன்று. குறுந்தொடர் நன்றாக முடிந்தது - வெங்கட் நாகராஜ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேர்ந்த எழுத்தாளரான தங்களின் பாராட்டு நெஞ்சை நிறைக்கிறது நண்பரே! மிக்க நன்றி!

      நீக்கு
  2. பாசிட்டிவாக நிறைவுற்றது. எல்லாம் சுபம். பொன்னியின் மனதில் என்னமோ புதைந்து விட்டது போல ஒரு உணர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், பெண்களின் மனதில் புதைந்துள்ளதை முழுமையாக வெளிக்கொணரும் கலை எனக்குப் புரிவதில்லை நண்பரே !

      நீக்கு
  3. திருப்பங்களை வைத்த விதம் வித்தியாசம். கடைசியில் last lap ஓடும் ஓட்டக்காரரைப்போல் விறு விறுவென்று கதையைக் கொண்டு சென்று முடித்து விட்டீர்கள்.

    ஆனாலும் கதை ஒரு உரையாடல் போன்று அமைந்ததே அல்லாமல் ஒரு உபமானம் உருவகம் போன்ற இலக்கியத்தனம் இல்லாததால் பொலிவு குறைகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் விமர்சனத்தை மதிக்கிறேன். புத்தகமாக ஆக்கும் போது பொலிவுறச் செய்து விடுகிறேன்!

      நீக்கு
    2. நல்லதொரு முடிவு. அரசியல்வாதிகள், பினாமிகள் பல இடங்களில் இப்படி பிரச்சனைகளை உண்டுசெய்ப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

      நீக்கு
  4. வாசு சாந்தி - எதிர்பார்த்த முடிவு. பொன்னியின் மனம் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்திருக்குமோ!

    அரசியல் தலையீடுகள் இருக்கும் எதுவுமே நேர்மையாக சிக்கல் இல்லாமல் இருப்பது கடினமே. எப்படியோ இவர்கள் தப்பித்தார்கள் அதாவது ஆசிரியர் தப்ப வைத்துவிட்டார்!!!!! இப்பகுதி ஓடிவிட்டது! முந்தைய பகுதிகளில் கூட...கொஞ்சம் விஸ்தரிக்கலாமோ!?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக! புத்தகமாக வெளியாகும்போது கொஞ்சம் ஊதிப் பெருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு!

      நீக்கு