திங்கள், ஜனவரி 30, 2017

சுபாவதாரம் (2) சற்றே நீண்ட சிறுகதை

 சுபாவதாரம் (2)
சற்றே நீண்ட சிறுகதை

- இராய. செல்லப்பா
சுபாவதாரம்-1 படிக்கவில்லையா? இங்கே சொடுக்கவும்

ருபதுபேர் கொண்ட  வங்கிக்கிளையில் அன்று ஆஜராகியிருந்தவர்கள் பதினைந்துபேர்தான்.  ஆளுக்கு நூறு ரூபாய் போட்டதில் ஒரு ஸ்வீட் காரம் காப்பிதான் ஏற்பாடு செய்யமுடிந்தது, ஜெயராமனின் பிரியாவிடை நிகழ்ச்சிக்கு. தன் பழைய நண்பன் என்பதால் ஜி.எம். மல்ஹோத்ரா ஒரு பெரிய பரிசுப் பொட்டலத்தைக் கொண்டுவந்திருந்தார். வங்கியின் சார்பில் ஒரு பொன்னாடை மட்டுமே.

கிளைமேலாளர் முதலில் பேசினார். ஓய்வு பெறப்போகும் ஜெயராமனை விடவும் வந்திருந்த ஜி.எம்.மைப் பற்றியே அதிகம் பேசினார். பெரிய பதவியில் இருந்தும், பழைய நட்பை மறவாமல் வருகை தந்தது எவ்வளவு  பெருந்தன்மை என்றும், அம்மாதிரியானவர்கள் இன்றைய வாழ்வில் மிகவும் குறைவு என்றும் மல்ஹோத்ரா ரசிக்கும்படி பேசித் தனது  அடுத்த பதவி உயர்வை உறுதிப்படுத்திக்கொண்டார்.

“என் இனிய நண்பர்களே” என்று தமிழில் பேசத் தொடங்கினார் மல்ஹோத்ரா. “நான் சென்னையில் நான்கு ஆண்டுகள் ஜெயராமனுடன் ஒரே அறையில் தங்கியிருந்து ஒரே கிளையில் பணியாற்றியவன். சொல்லப்போனால் எனக்குத் தமிழ் மட்டுமல்ல, வங்கிப்பணிகளின் சில நுட்பங்களையும் சொல்லிக்கொடுத்தவர் ஜெயராமன்தான் என்பதை இந்தச் சமயத்தில்  நன்றியோடு கூறக் கடமைப்பட்டுள்ளேன்” என்றதும் கிளைமேலாளர் எழுந்துநின்று கைதட்டினார்.

“ஆனால் மிக முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாகவேண்டும். ஜெயராமன் திருமணமே செய்துகொள்ளாமல் இருப்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் திருமணத்திற்காக அவர் முயற்சிக்கவேயில்லை என்று எண்ணிவிட வேண்டாம்...” என்று மல்ஹோத்ரா ஜெயராமனின் முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தார். எல்லோரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர்.

“ஜெயராமனின் அம்மா எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் எப்படியாவது அவனை அழைத்துக்கொண்டுபோய், பெண் பார்த்துவிட்டு வருமாறு ஒரு பம்பாய் முகவரியைக் கொடுத்திருந்தார். ஜெயராமனுக்குத் திருமணத்தில் இஷ்டமில்லை. என்றாலும் என் வற்புறுத்தலுக்காக வந்தார். இரண்டுநாள் லீவில் பம்பாய் போனோம். ஆனால் பெண்ணைத்தான் பார்க்க முடியவில்லை. ஏனென்றால்...” என்று ஜெயராமனின் முகத்தை நோக்கினார்  மல்ஹோத்ரா.

ஜெயராமன் பேசத் தொடங்கினான்.  “மேற்கொண்டு நான் சொல்கிறேன். பம்பாயில் இறங்கியதும் ஓர் ஆட்டோவில் ஏறினோம். பல சந்துபொந்துகளைக் கடந்து மெயின்ரோடுக்கு வந்த ஆட்டோ, திடீரென்று ஒரு கல்லில் இடறித் தலைகுப்புறக் கவிழ்ந்தது. நல்லவேளை யாருக்கும் அதிகக் காயம் இல்லை. ஆனாலும், நல்ல விஷயத்திற்குப் போகும்போது விபத்து ஏற்பட்டால் அது அபசகுனம் அல்லவா? எனவே நாங்கள் அடுத்த ரயிலில் திரும்பிவிட்டோம். அந்தப் பெண் வீட்டில் பாவம், காத்திருந்து ஏமாந்திருப்பார்கள். அதன்பிறகு  எவ்வளவோ வரன்கள் வந்தாலும் இந்த அபசகுனமே கண்ணில் நின்றதால் நான் திருமணமே வேண்டாம் என்று இருந்துவிட்டேன்” என்று உட்கார்ந்தான்  ஜெயராமன்.

“காலாகாலத்தில் நடக்கவேண்டியது நடந்தால்தானே நல்லது? நானும் எவ்வளவோ வற்புறுத்திப் பார்த்துவிட்டேன். இவன் மசியவில்லை... அந்தப் பெண்ணுக்கு வேறிடத்தில் திருமணமாகிப் பிள்ளை குட்டிகளோடு இருப்பாள் என்று நினைக்கிறேன். எல்லாம் விதி! ... இப்போது பேசி என்ன பயன்? காட் ஈஸ் கிரேட். அமைதியான ரிட்டையர்ட் லைஃப் அமைய  ஜெயராமனுக்கு என் வாழ்த்துக்கள் “ என்று கைகுலுக்கினார் மல்ஹோத்ரா.   

ஒருவர் பின் ஒருவராக எல்லா ஊழியர்களும் பேசினர். அந்த வங்கிக்கிளைக்கே அவன்தான் உயிர்நாடி என்பதுபோல் புகழாரம் சூட்டினர். உள்ளுக்குள் சிரிப்பு வந்தது ஜெயராமனுக்கு. எல்லாமே போலி. அடுத்தவாரம் இதே வங்கிக்கு வந்தால் தன்னை ஒருவரும் கவனிக்கப் போவதில்லை என்று அவனுக்கா தெரியாது? ஆனாலும் புன்சிரிப்போடு அவர்களுக்கு நன்றி சொன்னான்.

அவர்களின் ஒத்துழைப்பே தன்னுடைய வெற்றி என்றான். 

விடைபெறும்போது மல்ஹோத்ரா அவனிடம் சில காகிதங்களை நீட்டினார். “என்னப்பா இது! பென்ஷன் பாரத்தில் நாமினேஷன் போடவில்லையாமே  நீ? உனக்குப் பிறகு எல்லாமே அரசாங்கத்திற்குப் போய்விடும், தெரியுமா?”

ஜெயராமன் தயக்கத்துடன் கேட்டான்: “எனக்குத் தான் குடும்பமே இல்லையே! யார் பெயரைக் கொடுப்பது?”

“முதலில் நீ கையெழுத்து போடு. பாரம் என்னிடம் இருக்கட்டும். ஒரு வாரத்திற்குள் யார் பெயரையாவது சொல். எழுதி டிபார்ட்மெண்ட்டில் கொடுத்துவிடுகிறேன். இல்லையென்றால் நீ அலட்சியமாக இருந்துவிடுவாய்” என்று உரிமையுடன் அவனிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டார் மல்ஹோத்ரா.
****
ன்று சிறப்பான முகூர்த்த நாள். அதனால் லாக்கர் சேவைக்குக் கூட்டம் அதிகம் இருந்தது. நந்தினியும் வந்தாள். அவளுக்கு இரண்டு லாக்கர்கள் இருந்தன. வழக்கமாக அவளுடன் உதவியாக ஓர் இளம்பெண்ணும் வருவாள். சுபா என்று பெயர். ஏழ்மை நிரம்பிய முகம். ஆனால்  நந்தினியைவிட அழகு.

லாக்கரிலிருந்து நகைகளை எடுத்து அணிந்துகொண்டு கிளம்பினார்கள் நந்தினியும் சுபாவும். பிற்பகல் மூன்றுமணி சுமாருக்குத்  திரும்பி வந்தார்கள். நகைகளைக் கழற்றி வைத்து, லாக்கரை மூடிவிட்டு நந்தினி முன்செல்ல,  பின்தொடர்ந்த சுபா,  பிறகு என்னவோ நினைத்தவள்போல் திரும்பி வந்து, “ரொம்ப நன்றி சார்” என்று சொல்லி, அவனை உற்றுப் பார்த்துவிட்டுப் போனாள்.

“நன்றி” என்று மனதிற்குள்ளேயே முனகிக்கொண்டான் ஜெயராமன். சுபாவின்  ஏழ்மை அவன் மனதை உறுத்தியது. நந்தினி இவளிடம் இன்னும் கொஞ்சம் தாரளமாக நடந்துகொள்ளலாமே என்று தோன்றியது.

மாலையில் லாக்கர் அறையை மூடுவதற்கு முன்னால் உள்ளேபோய், எல்லா விளக்குகளையும் போட்டு, தரையில் யாராவது நகையையோ அல்லது வேறு பொருளையோ தவறவிட்டுப் போனார்களா என்று பார்ப்பது  ஜெயராமனின் பழக்கம். அன்றும் அப்படிப் பார்த்தபோது சுவரின் இருண்ட மூலையில் கிடந்தது, ஒரு சிறிய நகைப்பெட்டி. ஆவலுடன் பிரித்தான். உள்ளே ஒரு வைர மோதிரம்!

அதிர்ச்சியுடன் நகைப்பெட்டியை ஒரு தடித்த காகித உறையில் வைத்து மூடுவதற்குள் அவன் கைகள் நடுங்கின. வைரமோதிரம் என்றால் லட்சக்கணக்கில் விலைபெறுமே,  யார் தவற விட்டிருப்பார்கள்?
அன்று காலையிலிருந்து சுமார் இருபதுபேர் லாக்கர்களைப் பயன்படுத்தி யிருந்தார்கள். அவர்களில் யாருடையதாகவும் இருக்கலாம். யாரிடம் போய்க் கேட்பது?

திடீரென்று நந்தினியின் ஞாபகம் வந்தது. அவள் விரலில் இதுபோன்ற வைரமோதிரம் இருந்ததைப் பார்த்த ஞாபகம் வந்தது. அவள்தான் தவற விட்டிருப்பாளோ? 

வங்கியில் அவனையும் இன்னொரு அதிகாரியையும் தவிர எல்லாரும் போய்விட்டிருந்தனர். மணி ஆறரை. மழைக்கால மாதலால் வெளியே வானம் இருண்டிருந்தது. தெருவிளக்குகள் எரியத் தொடங்கியிருந்தன. தன் மற்ற வேலைகளை முடித்துவிட்டுக் கிளம்புவதற்கு ஜெயராமனுக்கு இன்னும் ஒன்றரை மணிநேரம் ஆகலாம். அதுவரை பொறுக்கலாம். தொலைத்தவர்கள் போன் செய்யக்கூடுமே!  அதற்குள், அலுவலக ஒழுங்குமுறைப்படி தன் கிளைமேலாளருக்குப் போன் செய்து விஷயத்தைக் கூறினான். “பத்திரமாக எடுத்து உள்ளே வையுங்கள். நாளை பார்த்துக்கொள்ளலாம்” என்று பதில் வந்தது.

ஜெயராமனுக்கு உதறலாகவே இருந்தது. வங்கியின் பணம் எத்தனையோ கோடிகளை ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு எடுத்துப் போகும்போதெல்லாம் எந்தப் பயமும் இருந்ததில்லை. ஆனால்,  யாருக்கோ சொந்தமான இந்த  வைர மோதிரம்  தன்னை எந்தச் சிக்கலிலாவது  மாட்டிவிடுமோ என்று பயந்தான்.

அப்போது டெலிபோன் மணி ஒலித்தது. “தொந்தரவுக்கு மன்னிக்க வேண்டும் சார்!” - சுபா பேசினாள். ஜெயராமனுக்கு அப்போதுதான் உயிர் வந்தது.

“சார், உங்கள் லாக்கர் அறையைக் கொஞ்சம் திறக்கமுடியுமா? நந்தினி மேடத்தின் வைரமோதிரம் அங்கே தவறியிருக்கவேண்டும்” என்றாள் சுபா பதற்றத்துடன். “நீலக்கலரில் சிறிய நகைப்பெட்டி. கும்பகோணத்தில் போன ஆகஸ்ட்டில் வாங்கியது. ரசீதும் பெட்டியில் இருக்கும்”.

ஜெயராமன் நகைப்பெட்டியைத் திறந்தான். அவள் சொன்னதெல்லாம் சரியே. இது நந்தினியின் மோதிரமே. அப்பாடா, ஒரு கவலை தீர்ந்தது என்று நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டான். “இங்குதான் இருக்கிறது. கவலைப்படவேண்டாம். நாளை வந்து பெற்றுக்கொள்ளச் சொல்லுங்கள்” என்றான்.

“ஐயய்யோ” என்று அலறினாள் சுபா. “அந்த மோதிரம் இப்போதே வேண்டும் சார். மேடம் நாளை அதிகாலை கல்கத்தா போகிறார்கள். நான் வந்து பெற்றுக்கொள்கிறேன். நீங்கள் இன்னும் அரை மணிநேரம் அங்கேயே இருப்பீர்களா, ப்ளீஸ் எங்கும் போய்விடாதீர்கள்”  என்றபோது குரலில் பதற்றமும் அழுகையும் கலந்திருந்தன.

“வாங்க, ஒங்களுக்காக வெயிட் பண்றேன்” என்று சொல்லிவிட்டு நகைப்பெட்டியைத் தன் தோல்பையில் வைத்துக் கொண்டான் ஜெயராமன். லாக்கர் அறையின் கனத்த கதவை மூடினான்.  உடனிருந்த அதிகாரி தன் இரண்டாவது சாவியால் கதவைப் பூட்டிவிட்டு “குட்நைட்” சொல்லிக் கிளம்பினார்.  

பிறகுதான்  ஜெயராமனுக்குப் புரிந்தது, தான் எப்படிப்பட்ட சிக்கலில் மாட்ட இருக்கிறோம் என்று. தானோ மணமாகாதவன். நேரமோ இரவு. வங்கியில் வேறு யாருமில்லை. வரப்போகிறவளோ அழகான இளம்பெண். யாராவது பார்த்துவிட்டால்? தன்னுடன் அந்தப் பெண்ணுக்கும் அல்லவா கெட்டபெயர் வந்துவிடும்?

அவசரமாக எழுந்தான். வங்கியின் வெளிக்கதவுகள் இரண்டையும் பூட்டினான். சுபா வருவதற்குள் தானே சென்று நந்தினி வீட்டில் கொடுத்துவிடுவதென்று கிளம்பினான்.
****
ழைப்புமணியை அழுத்தினான் ஜெயராமன்.  சுபா வந்து திறப்பாள் என்று எதிர்பார்த்தால் வந்தவள் நந்தினி.

இரவுநேர உள்ளாடையில் அவள் வழக்கத்தைவிட அழகாக இருப்பதாகத்  தோன்றியது.  “உள்ளே வாருங்கள் ஜெயராமன்! என்ன விஷயம்? இந்த நேரத்தில் வந்திருக்கிறீர்கள்?” என்றாள் ஆச்சரியத்துடன்.

“சுபா இல்லையா?”

“வந்துவிடுவாள். அவளைத் தேடிக்கொண்டுதான் வந்தீர்களா?”

ஏதோ நெருடியது அவனுக்கு. அப்படியானால் வைரமோதிரம் தவறியது    இவளுக்குத் தெரியாதா?

நகைப்பெட்டியை அவளிடம் கொடுத்தான். “சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வைரமோதிரம். லாக்கர் அறையில் தவறவிட்டு விட்டீர்கள். நல்ல வேளை சுபாதான் போன்செய்து அடையாளம் காண உதவினாள்..” என்றான்.

“சுபா என்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே!” என்று சந்தேகத்தோடு  புருவத்தைச் சுருக்கியவள், “எனிவே, உங்களுக்கு மில்லியன் தேங்க்ஸ். இதன் விலை இரண்டு லட்ச ரூபாய்” என்று மோதிரத்தை எடுத்து முத்தமிட்டபடி விரலில் அணிந்துகொண்டாள். “என்ன சாப்பிடுகிறீர்கள் - ஸாஃப்ட் டிரிங்க்ஸ் ஆர் பியர்?”

வேண்டாம் என்றவன், மோதிரத்தைப் பெற்றுக்கொண்டதன் அடையாளமாக அவளிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு கிளம்பினான் ஜெயராமன். அவன் கிளம்பிய அடுத்த சில நிமிடங்களில் சுபாவின் ஸ்கூட்டர் வந்து சேர்ந்தது. வங்கியின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் ஏமாற்றமும் கலவரமும் அடைந்தவளாகத் திரும்பி வந்திருந்தாள் சுபா. ‘நந்தினி மேடம் என்ன சொல்லப்போகிறாளோ?’
****
ரவு பதினோரு மணிக்கு ஜெயராமனுக்கு ஒரு போன் வந்தது. பேசியவள் சுபா. “ஏன் சார் இப்டி பண்ணினீங்க?” என்று ஆத்திரமும் அழுகையுமாகக் கேட்டாள்.

“ஏன்..என்ன விஷயம்.. மோதிரத்தைத் தான் நந்தினி மேடத்திடமே கொடுத்துட்டேனே,  சொன்னாங்களா இல்லையா?” என்று  பரபரப்போடு கேட்டான் ஜெயராமன். 

“சொன்னாங்க. அத்தோட இன்னொண்ணும்  சொன்னாங்க...” என்று பொருமினாள்.

“என்ன?”

“இனிமே ஒனக்கு வேலை இல்லைன்னு! வீட்டை விட்டே தொரத்திட்டாங்க. இப்ப என் தோழியோட ரூம்ல இருந்துதான் பேசறேன்..” வார்த்தைக்கு வார்த்தை விம்மினாள். “எல்லாம் ஒங்களால வந்த வெனை”.
ஜெயராமனுக்குத் திக்கென்றது.

“ஒங்களுக்கு நந்தினியைப் பற்றித் தெரியாது சார்! ரொம்ப மோசமான லேடி. எங்கிட்ட  எல்லா வேலையும் வாங்கிப்பாங்க, சம்பளம் மட்டும் ஏத்தவே மாட்டாங்க. லீவும் குடுக்கமாட்டாங்க. வேலையை விட்றதுக்கும்  அனுமதிக்கமாட்டாங்க. முக்கியமான ஆஸ்பத்திரி செலவுன்னாக் கூட கடன் கொடுக்கமாட்டாங்க. அவங்களப்  பழிதீர்க்கணும்னுதான் இந்த வைரமோதிரத்தை லாக்கர் ரூம்ல ஒளிச்சி வச்சேன். ராத்திரிக்குள்ள நானே வந்து ஒங்ககிட்டருந்து வாங்கிட்டு ஊரைவிட்டே போய்டலாம்னு திட்டம் போட்டேன். எல்லாத்தையும் பாழாக்கிட்டீங்களே” என்றாள் சுபா.
 (தொடரும்)

சுபாவதாரம்-3 படிக்க இங்கு சொடுக்கவும்


6 கருத்துகள்:

  1. நந்தினிக்கு என்னவொரு வில்லத்தனம்....!

    பதிலளிநீக்கு
  2. அடடா, நல்லது செஞ்சாலும்...தொடர்கிறோம்

    பதிலளிநீக்கு
  3. ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது....தற்போதுதான் கதையைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. திரைப்படம் பார்ப்பதுபோல விறுவிறுப்பாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  4. அட என்னவொரு திட்டம்.... தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு