திங்கள், மார்ச் 24, 2014

விஜயகாந்த்தின் மனமாற்றமும் நடிகை நந்திதாவுக்கு வந்த சோதனையும் ( ‘அபுசி-தொபசி’-37)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல்  

1962 பொதுத் தேர்தலின்போது நான் பள்ளி மாணவன். தேன்கனிக்கோட்டையில் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஏழாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒருநாள் வீதியெங்கும் வரிசையாக ஏராளமான மாட்டுவண்டிகள். ஒவ்வொன்றிலும் சுமார் ஆறரை அடி உயரமுள்ள காளைமாடுகள். முன்னூறு வண்டிகள் என்று ஞாபகம். வண்டிகளின் அணிவகுப்புக்குப் பின்னால்,  “உங்கள் ஓட்டு காங்கிரசுக்கே” என்று உற்சாக முழக்கமிட்டபடி ஏராளமான சைக்கிள்களில் இளைஞர்கள் வரிசை வரிசையாக வந்துகொண்டிருந்தனர். என்ன விஷயம் என்று 
கேட்டேன். 
இவை புதிய காளைகள்
“பொதுத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர், ஓட்டு சேகரிப்பதற்காக வந்துகொண்டிருக்கிறார்” என்றார், தாத்தா. “காங்கிரசின் தேர்தல் சின்னம், இரட்டைக் காளை என்பதால், காளைகள் பூட்டிய மாட்டுவண்டிகளில் வந்துபோகிறார்கள்” என்றார். அப்போது அந்தத் தொகுதியில் (ஓசூர்) போட்டியிட்டு வென்றவர், அமரர் ராஜாஜியின் குமாரர், நரசிம்மன் அவர்கள்.
 எம்.ஜி.ஆர்., மதியழகன், அண்ணாதுரை, ராஜாஜி, கருணாநிதி
(1967 புகைப்படம்)
இந்திரா காந்தியின் பெருமுயற்சியால் காங்கிரஸ் பேரியக்கம் இரண்டாகத் துண்டாடப்பட்டவுடன், அந்த இரண்டு காளைகளை யாருக்குத் தருவது என்று சிக்கல் ஏற்பட்டது. நீதிமன்றத்தில் ஏறின காளைகள். “A TALE OF TWO BULLOCKS” என்று ஆங்கிலப் பத்திரிகைகள் அந்த வழக்கை வருணித்தன. இறுதியில் இரட்டைக் காளைகளும் நிஜலிங்கப்பா/காமராசர் தலைமையிலான ‘ஸ்தாபன காங்கிரஸ்’ கட்சிக்கே சொந்தம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள்ளேயே, ‘தன் கையே தனக்குதவி’ என்று நம்பிய இந்திரா காந்தி அம்மையார், தன் ‘கை’யையே தன் கட்சியின் சின்னமாக அறிவித்தார். ஸ்தாபன காங்கிரசும் தன் கட்சிக்கு ‘ராட்டை’ சின்னத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டது. அத்துடன் இரண்டு காளைகளும் மறக்கப்பட்டுவிட்டன. 

எதற்குச் சொல்கிறேன் என்றால், ஓட்டு கேட்கவரும்போது மிகப்பெரும் படையுடன் வந்து மக்களைச் சந்திப்பது அப்போதெல்லாம் வழக்கமாக இருந்தது. பின்னாளில் சினிமாக் கவர்ச்சியோடு தேர்தலைச் சந்தித்த தி.மு.க.வோ, இன்னும் ஒருபடி மேலேபோய், வேட்பாளர் மனு தாக்கல் செய்யும்போதே அத்தகைய  ரத, கஜ, துரக, பதாதிகளுடன், அட்டகாசம் செய்தபடி, போக்குவரத்தை நிறுத்தச் செய்யும் அளவுக்குச் சாலைகளை ஆக்கிரமித்துக்கொண்டும் பட்டாசு வெடித்துக்கொண்டும் போகும் புதிய கலாச்சாரத்தை ஆரம்பித்துவைத்தது. தேர்தல் என்றாலே, அந்த ஒன்றிரண்டு மாதங்களில் வாடகைக் கார்களோ, ஆட்டோக்களோ, ஏன், வாடகை சைக்கிள்களோ கூட பொதுமக்களுக்குக் கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டது.
அரசியல்வாதிகளை நடுநடுங்கவைத்த ட்டி.என்.சேஷன்
நல்ல வேளையாக, ட்டி.என்.சேஷன் என்ற தேர்தல் கமிஷனர் வந்தாலும் வந்தார், இந்த மாதிரி ‘புது கலாச்சாரம்’ முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனானப்பட்ட லல்லு பிரசாத் யாதவின் தொகுதியிலேயே அவர் தன் கண்டிப்பைக் காட்டி நேர்மையான தேர்தல் நடைபெற வைத்தார். பிறகு வந்த தேர்தல் கமிஷனர்களும் இன்றுவரை அவர் கிழித்த கோட்டைத் தாண்டவில்லை. அதனால்தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையிலும் இன்று சாலைகளில் எந்தத் தொந்தரவுமின்றி  நடமாட முடிகிறது.

நடிகை நந்திதாவுக்கு வந்த சோதனை:

உத்தரப் பிரதேசம், மீரட் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், நடிகை நந்திதா. தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கு கலெக்டர் அலுவலகத்திற்குத் தன் ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போதுதான் அவருக்கு அந்தச் சோதனை ஏற்பட்டது.

என்னதான் காங்கிரஸ், தோற்கப்போகும் கட்சி என்றாலும், நடிகை என்றால்  கூட்டம் வராமல் இருக்குமா?  நந்திதாவுடன் ஏராளமான ஆதரவாளர்கள் இருந்தனர். எல்லாரும் முண்டியடித்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றனர். உ.பி.யில் ஆள்வது காங்கிரசுக்கு எதிரான சமாஜ்வாடி கட்சி அல்லவா? வெறும் ஐந்து பேருக்குத்தான் அனுமதி என்று மற்றவர்களை வெளியே தள்ளிவிட்டார்கள் கலெக்டர் அலுவலகத்தினர். உள்ளே போன நந்திதாவுக்கு அதிர்ச்சி! அவருடைய வேட்பு மனுவையும், தொடர்புடைய ஆவணங்களையும் யாரிடம் கொடுத்திருந்தாரோ அந்த ஆதரவாளர் உள்ளே வர முடியாமல் வெளியிலேயே நின்றுவிட்டார்! பிறகென்ன, ‘இன்றுபோய் நாளை வா’ கதைதான்!

“போலீசார் வேண்டுமென்றே என்னை, வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்தனர். இதுகுறித்து, கட்சி மேலிடத் தலைவர்களிடம் புகார் அளிப்பேன். மீண்டும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வேன்” என்றார் பதற்றத்தில் இருந்து மீளாத நந்திதா.


'காதலன்'
நந்திதாவின் முழுப்பெயர்: நந்திதா மொரார்ஜி. (ஆனால் இவருக்கும் அமரர் மொரார்ஜி தேசாய்க்கும் தொடர்பு கிடையாது.) நந்திதா, ரஜினியுடன் ‘பாட்சா’ படத்திலும், பிரபுதேவாவுடன் ‘காதலன்’ படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார். அப்படங்களில் அவருடைய பெயரை ‘நக்மா’ என்று மாற்றிவிட்டிருந்தார்கள்! 

இதை நீங்கள் படித்து முடிப்பதற்குள் நக்மா தன் வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டிருக்கலாம். ஊழல் எதுவும் செய்யாதவர், தமிழ்ப் படங்களில் நடித்துத் தமிழர்களுக்குக் களிப்பூட்டியவர் என்ற   காரணங்களுக்காகவே இவரை வெற்றி பெற வாழ்த்தலாமே!  

விஜயகாந்த்தின் மனமாற்றம்:
பா.ஜ.க.வை விட்டால் புகலிடம் இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் விஜயகாந்த் – என்று பத்திரிகைகள் எழுதுகின்றன. ‘கூட்டத்தினரை அச்சுறுத்தும் சொற்களைப் பயன்படுத்தாமல், அவரின் சொற்பொழிவு அமைவதில்லை; வேட்பாளரின் பெயரையே சிலநேரம் மறந்துவிடுகிறார்; தற்பெருமை பேசுகிறார்’ என்று வேண்டாதவர்கள் அவரைப் பற்றி எழுதுகிறார்கள். ஆனால், இப்போது அவரிடம் வரவேற்கத்தக்க மாற்றம் தெரிவதை மறுப்பதற்கில்லை.  

தன்னையோ தன் பெருமைகளையோ முன்னிலைப்படுத்தாமல், “மோடி தான் பிரதமர். அவரால்தான் ஈழப் பிர்ச்சினை, மீனவர் பிரச்சினை  முதலியவற்றைத் தீர்க்க முடியும்” என்று விஜயகாந்த் மேடைகளில் பேச ஆரம்பித்திருக்கிறார். 2016இல் தமிழக முதல்வர் நான்தான் என்று அவர் இப்போது சொல்வதில்லை. (ராமதாசும் கூட!). தமிழக அரசியலில் மட்டுமன்றி, இந்திய அரசியலிலும் இது நல்ல விளைவை ஏற்படுத்தப்போகும் மனமாற்றமே.

புத்தகம்

காளிதாசர், எனக்கு மிகவும் பிடித்த ‘பண்பட்டமொழி’ (சமஸ்க்ருதம்) கவிஞர். அவரது சாகுந்தலம், மாளவிகா-அக்னிமித்ரம், குமார சம்பவம் காவியங்களைத் தமிழ் மொழிபெயர்ப்பில் பள்ளிப் பருவத்திலேயே படித்திருக்கிறேன். (அக்காலத்து ‘அல்லயன்ஸ்’ வெளியீடு. இப்போதும் அந்தப் பதிப்பகம் இருக்கிறது-சென்னை மயிலாப்பூர் குளத்தின் எதிரே. ஆனால் அந்த நூல்கள் கிடைப்பதில்லை.) பின்னாளில் ரகுவம்சம் படித்தேன். ஆனால், அளவில் சிறியதான ருது சம்ஹாரம் என்ற காவியத்தை இப்போதுதான் படிக்க நேரம் வந்தது. ‘ருது சம்ஹாரம்’ என்பதன் மொழிபெயர்ப்பு, ‘பருவ காவியம்’ என்பதாகும். (பருவ காவியம் என்றவுடன் ஜொள்ளு வழிவதைத் தவிர்க்கவும்.) இது, வசந்தகாலம், கோடைகாலம், மழைக்காலம், பனிக்காலம் போன்ற ஆறு பருவகாலங்களை வருணிக்கும் காவியமாகும்.  ஆனால் காளிதாசன் தன் கட்டிளம் பருவத்தில் எழுதிய காவியம் என்பதால், இளமைக்கே உரிய ‘பருவ’ எழுத்துக்கள் அதிகம் இடம்பெற்ற நூல் இது.

மொத்தம் நூற்று நாற்பத்து நான்கு செய்யுட்கள் உள்ளன. இவை ஆறு பருவங்களின் பெயரால் அமைந்த ஆறு அதிகாரங்களில் அடங்கியுள்ளன. ஒவ்வொரு அதிகார முடிவிலும், “நண்பனே, உனக்கு இந்தப் பருவகாலம் நனமையைச் செய்வதாக!” என்று முடியும் இறுதிச் செய்யுளை அமைத்திருக்கிறார். காதல் காட்சிகளைவிட இயற்கை எழிலையே முதன்மையாக வருணிக்கும் சிறிய காவியம் இது. என்றாலும், காளிதாசன் என்றால் ‘காதல் கவிஞன்’ என்றுதானே இலக்கிய வரலாற்றில் பதிவு செய்திருக்கிறார்கள்! எனவே இன்றைய பதிவில் ருது சம்ஹாரத்தின் சில காதல் பதிவுகளை மட்டும்  பார்ப்போமா? (எச்சரிக்கை: எனது மொழிபெயர்ப்பு அவ்வளவு துல்லியமானதல்ல; ஆனால் எடுத்துக்கொண்ட செய்திக்கு இது போதும் என்று கருதுகிறேன்.)

கோடைப் பருவம்:
(1)    என் அன்பே! இதோ, கோடைப்பருவம் வந்துவிட்டது! கதிரவன் மிகவும் கடுமையாக இருக்கிறான். (எனவே) குளிர்ந்த நிலவை மக்கள் விரும்புகின்றனர். முப்பொழுதும், குளிர்ந்த நீர்நிலைகளில் மூழ்கிக் குளிப்பதை நாடுகின்றனர். பகல் முடிந்து இரவு மலரும் தருணமே மக்களுக்கு மகிழ்ச்சி தருவது. (கோடையின் தாக்கத்தால்) காதல் உணர்ச்சி சற்றே தணிந்துள்ள பருவம் இது.

(3)    நறுமணம் ஊட்டப்பெற்ற (வீட்டின்) மேல்தளங்களையும் (மொட்டை மாடிகளையும்), கிண்ணங்களில் ஊற்றப்பட்டு, காதலியருடன் சேர்ந்து பருகும்போது அவர்தம் மூச்சுக்காற்றால் அசையும் இனிய மதுவையும், யாழிலிருந்து ஒலிக்கும் இன்னிசையையும் (தம் காதல் உணர்வைத் தூண்டிடவேண்டி) மக்கள் நாடும் பருவம் இது.

'மகாகவி  காளிதாஸ்' - சிவாஜி கணேசன்

(4)    பட்டாடை மீது மேகலை அணிந்த இடையினராய், முத்துமாலை அணிந்து, சந்தானம் மணக்கும் மார்பகத்தினராய், (நறுமணப் பொடிகள் பூசிக்) குளித்தலால் நறுமணம் பூண்ட கூந்தலினராய் விளங்கும் பெண்களின் பேரெழில் ஒன்றே, காதலர்களின் கோடை வெம்மையைத் தணிக்கவல்லதாகிறது.
(5)    இப்பருவத்தில், தம் மென்பாதங்களில் செம்பஞ்சுக் குழம்பை அதிகமாகப் பூசிச் சிவக்க வைக்கின்றனர் பெண்டிர். கால்களில் சிலம்பொலிக்க அவர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் அன்னம் நடக்கும் ஓசையை ஒத்திருக்கிறது.

(6)    இத்தகைய இடையழகும் மார்பழகும் எவனுடைய மனத்தைத்தான் ஆசையுறச் செய்யாது?    
(7)    பருவப் பெண்கள், தடிப்பான ஆடைகளை நீக்கி மெல்லாடைகளை உடுத்துகின்றனர்.

(8)    (அவர்கள் பயன்படுத்தும்) சந்தன நீர் தெளித்த விசிறிகளிலிருந்து  எழும் இளங்காற்றும், முத்துமாலை அணிந்த அவர்தம் மார்புகளும், அவர்கள் வாசிக்கும் யாழின் இசையும், ஆண்களின் மனத்தில், உறங்குபவன் போல் அசைவற்றிருக்கும் காமனை எழுப்புகின்றன.

(9)    இரவு முழுவதும் (நிலவொளியால்) வெண்ணிறமான மாளிகையின்  மேல்தளத்தில், திறந்த வெளியில், சுகமாக உறங்குகின்ற (அப்பெண்களின்) முகங்களை, அவர்கள் அறியாதவாறு, ஏக்கத்துடன் (ஆர்வத்துடன்) வெகுநேரம் பார்த்துப் பார்த்து வெட்கமுற்றவன்போல் சந்திரனானவன், விடியற்காலையில் வெளிறிப்போய்க் காண்கிறான்.

(10) கோடை வெப்பத்தினால் தரை கடும் சூடாகிறது. புழுதி மண்டலம் காற்றில் எழுகிறது, காதலியரைப் பிரிந்து (அதனால் வெம்மையடைந்தவர்களாய்)      வேற்றூரில் வசிக்கும் காதலர்கள், இத்தரையைக் கண்கொண்டு காணவும் முடியாதவர்களாகிறார்கள்.

(12) நிலவு ததும்பும் முன்னிரவு, கேளிக்கைகளில் இயல்பாகவே நாட்டம் கொண்ட ஆண்கள் மனத்தில் காம உணர்வைத் தூண்டுவதுபோல், காமம் விரும்பிய பெண்டிர், தம் மனம்  கவர் செயல்களாலும், கடைக்கண் புன்னகையாலும் காமத்தைத் தூண்டுகின்றனர்.

இதன் பிறகு, இயற்கை வருணனைகள் வருகின்றன. (அதைப் பிறகு பார்க்கலாம்.) இனி, இந்த அதிகாரத்தின் கடைசிப் பாடல்:

(28) கடும் கோடையிலும் காடுபோல் தாமரை பூத்துள்ள  குளங்களில் நீர்  இருக்கும். பாதிரிப்பூக்கள் மணம்பரப்பிக் கோடையை இனிப்பாக்கும். நீரில் அமிழ்ந்த குளியல், சுகம் தரும். நிலவும், முத்துமாலைகளும், இதம் தரும். உள்ளம்கவர் பெண்டிர் உடனிருந்தால், கோடை முழுதும் மகிழ்ச்சி தரும். இன்னிசை மிதக்கும் மாளிகையின் மேல்தளத்தில் உறங்கும் (பேறு பெற்ற)  நண்பனே, உனக்கு இக்கோடைப் பருவம் இனிமையே செய்வதாகட்டும்!

LIFCO பதிப்பகத்தில் இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு கிடைக்கும். என்னிடம் இருக்கும் 1987ஆம் வருடப் பதிப்பின் விலை நான்கு ரூபாய். மொழிபெயர்த்தவர்: திரு. வேங்கடராகவாச்சாரியார் அவர்கள். சென்னை விவேகானந்தாக் கல்லூரியின் முன்னாள் பண்பட்டமொழி (சம்ஸ்க்ருத) பேராசிரியர்.

சினிமா

எழுத்தாளர் ராஜு முருகன் எழுதி இயக்கி இருக்கும் கன்னி முயற்சியான குக்கூ திரைப்படம் வெளியாகியுள்ளது. எல்லா விமர்சனங்களும் ஒரே கருத்தைப் பிரதிபலிக்கின்றன. ராஜு முருகன் மீது இருந்த ஆற்றாமையை வட்டியும் முதலுமாக அறுவடை செய்துவிட்டர்களோ என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இணையங்களில் வரும் பெரும்பாலான விமர்சனங்கள், குழு மனப்பான்மையுள்ளவர்களால் எழுதப்படுவது தெரிந்ததே. எனவே ‘ஹிந்து’ விமர்சனத்தைக் கவனிக்கலாம். (தமிழ் இந்து அல்ல, ஆங்கில ஹிந்து.) விமர்சனத்தின் சுருக்கம் இதுதான்:

“ஒருதலைக் காதல்,  முக்கோணக் காதல் என்று சிக்கல்கள் நிறைந்த கதைபோல ஆரம்பிக்கிறது இப்படம். காதலை எதிர்க்கும் அண்ணன், புகலிடம் கொடுக்கும் நண்பர்கள் என்று தொடர்கிறது. ஆனால் இதில் எந்த ஒன்றும் திரைக்குப் புதிதல்ல. பார்வையற்றவர்கள் நாயக நாயகி ஆவதும் புதிதல்ல. அவர்கள் ரயிலில் சந்திப்பதும் புதிதல்ல. ‘பழசாகிப்போன இளையராஜாவின் பெயரைப் பயன்படுத்தி இன்னும் பழசாக்கிவிட்டார்கள். டைட்டில்கள் வரும் ஆரம்பக்காட்சி ஒன்றை மட்டுமே சிறப்பானதாகச் சொல்லமுடியும். மற்றக் காட்சிகளும் இதைப் போலவே இருந்திருக்கக்கூடுமானால்?...” என்று முடிகிறது விமர்சனம்.

நல்ல எழுத்தாளர்கள், நல்ல இயக்குனர்களாக இருக்கமுடிந்ததில்லை: உதாரணம்: கோவி.மணிசேகரனும் ஜெயகாந்தனும். இப்போது  ராஜு முருகனும். ஆனால் இவர் இளைஞர். காலம் இவருக்கு முன்னே இருக்கிறது. அனுபவம் என்னும் உளி இவரைச் செதுக்க அனுமதித்தால் இனிவரும் காலங்களில் நல்ல திரைப்படங்கள் இவர் மூலம் உருவாக முடியும். 
22-3-2014 விஜய் டிவியில் 'குக்கூ' பற்றிய நிகழ்ச்சியில்
கண்ணாடியுடன் ராஜு முருகன்
ஒன்றை மறக்கவேண்டாம்: எதிர்மறையான விமர்சனங்களையும் மீறி ஒரு படம் வெற்றி பெறவும் கூடும். ஏனெனில், படம் பார்ப்பவர்களில் பலர், விமர்சனங்களைப் படிக்கும் வழக்கம் கொண்டவர்களில்லை.

(அது சரி, திரைக்கதை இவ்வளவு பழசு என்பதை, சில கோடிகளை இறைத்துப் படமாக்கியிருக்கும் தயாரிப்பாளருக்குக் கூடவா முன்பே தெரியவில்லை? என்னடா இந்தத் தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!)

தொலைக்காட்சி : (அடுத்த இதழில் பார்க்கலாம்!)

பத்திரிகை

தீவிர அரசியலில் இருந்து ஒதுங்க முடிவு செய்துவிட்ட நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கேலி செய்து கருத்துப்படங்களும் கட்டுரைகளும் வந்துகொண்டே இருக்கின்றன பத்திரிகைகளில். சிதம்பரத்தைப் பற்றிய விருப்பு வெறுப்பற்ற மதிப்பீடு வெளியாக இன்னும் சில வருடங்களாவது ஆக வேண்டும். அவருடைய செயல்பாடுகளை நன்கு அறிந்துகொள்ளும் வாய்ப்பு, வங்கித் துறையில் உள்ளவர்களுக்கு உண்டு. அவ்வகையில், வங்கி அதிகாரியான எனக்கு அவரைப் பற்றிய, சீர்தூக்கிப் பார்த்தபின் புலப்படும் மதிப்பீடு இதுதான்:

(1) மாதச் சம்பளம் வாங்கும் அனைவரின் நன்றிக்கும் உரியவர், சிதம்பரம். இன்றுள்ள மிகக் குறைந்த வருமானவரிக் கட்டமைப்பைச் சாத்தியமாக்கியவர் அவரே. இதற்கு முன்னால், வருமானவரி செலுத்தியதுபோக மீதமிருந்த வருமானம்,   வங்கியில் காப்பி, டீ விநியோகம் செய்யும் வியாபாரியின் வருமானத்தைவிடக் குறைவானதாகும்.

(2) நாடு முழுவதும் பரவலாக வீட்டுக்கடன் வழங்கும் கொள்கையை அமுலாக்கியவர் அவரே. வீட்டுக் கடன் பெற்றுவிட்டு, திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றுபவர்களை வழிக்குக் கொண்டுவர, வீடுகளை, நீதிமன்றத்துக்குப் போகாமலேயே, ஏலத்துக் கொண்டுவரும் சட்டத்தை இயற்றிட அவரே காரணம். இந்தச் சட்டம் மட்டும் வந்திராவிட்டால், எந்த வங்கியிலும் பொதுமக்கள் வீட்டுக்கடன் பெறுவது இயலாமல் போயிருக்கும்.

(3) நாடு தழுவிய அளவில், கல்விக்கடன் வழங்கும் கொள்கையை மிகுந்த முனைப்புடன் வங்கிகள் அமுலாக்கிடத் தூண்டுகோலாய் இருந்தவர் அவரே. அவர் மட்டும் இல்லாதிருந்தால், கடன்தொகைக்குப் பிணையாக சொத்துக்களையோ, பிற நபர்களின் ஜாமீனையோ, அடைமானம் தர வசதியற்ற லட்சக்கணக்கான மாணவர்கள்,  கல்லூரி வாசலையே மிதித்திருக்க முடியாது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் (என் மகன் உட்பட) வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயின்றிருக்க முடியாது. இதன் இன்னொரு முகமாக, போதுமான மாணவர்கள் இன்றிப் பல தொழிற்கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் அபாயம் நிகழ்ந்திருக்கும்.  

(4) இன்று அனைத்து வங்கிகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. (கூட்டுறவு வங்கிகள் உள்பட.) இதற்கு அடிப்படையான காரணம் தொழிற்போட்டி. இதைத் தீவிரப்படுத்தியவர் சிதம்பரமே. தனியார் துறையில் வங்கிகள் தோன்றவும் தொழில்நுட்பத்தில் வளரவும் அவரே காரணம். எச்.டி.எஃப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, யு.ட்டி.ஐ. வங்கி (இப்போது ஆக்சிஸ்), போன்ற வங்கிகள் வந்திருக்காவிட்டால், அரசுத் துறை வங்கிகளில் கணினி நுழைந்திருக்க முடியுமா? இன்று நாட்டிலேயே பரவலாக அதிக எண்ணிக்கையில் ஏ.ட்டி.எம்.கள் திறந்துள்ளதே ஸ்டேட் பேங்க், இது நடந்திருக்குமா?

(5) சென்ட்ரல் எக்சைஸ் போன்ற மறைமுக வரித்  துறைகளின் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நிரந்தரமாகக் கிடைத்துவந்த லஞ்சத்தை ஒரே கையெழுத்தின் மூலம் ஒழித்தவர் இவரே: அதாவது, மறைமுக வரிகளைப் பெருமளவுக்குக் குறைத்தார். முன்பெல்லாம் எந்தப் பொருளுக்கு எவ்வளவு சதம் வரி என்பது  வரித்துறை ஆடிட்டர்களுக்கு மட்டுமே தெரியும். தயாரிப்பாளர்களுக்குத் தெரியாமல் இருந்தது. இன்றோ, மிகச் சில இனங்களுக்கு மட்டுமே வரி என்பதால், தெளிவுநிலை (TRANSPARENCY) ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏற்றுமதி இறக்குமதிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது மிகுந்த நன்மை புரிந்துள்ளது.

(6) கறுப்புப் பணத்தைப் பெருக்கி, வருமான வரி எய்ப்பு செய்து வந்த வியாபாரிகளைக் கட்டுக்குள் கொண்டுவர ஏராளமான காரியங்களை முடுக்கிவிட்டவர் இவரே. வங்கியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணம் போட்டாலோ, எடுத்தாலோ பான்கார்டு வேண்டும் என்றும், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் வரி செலுத்தவேண்டும் என்றும், பங்குச் சந்தையில் ஊழல் நிகழ்த்துவோரை ‘செபி’ மூலம்   தண்டிக்கவும் சட்டங்கள் கொண்டுவந்ததுடன், அவற்றை வன்மையாக அமுல்படுத்தவும் செய்தவர் இவரே. இணையத்தின் மூலம் வருமானவரி செலுத்திடவும், அதிகம் செலுத்திய வரியை, அதிகாரிகளுக்கு லஞ்சம் தராமலேயே வங்கிகள் மூலம்  NEFT வழியாகப் பெற்றிடவும் காரணகர்த்தர் இவரே. இதற்கு முன்னால், சென்னையில் வருமானவரியைத் திரும்பப் பெறவேண்டுமானால், அது முன்னூறு ரூபாயாக இருந்தாலும் அதற்கு இருநூறு ரூபாய் லஞ்சம் கேட்பது வழக்கம். (என் சொந்த அனுபவம்.) 
வருமான வரிக்கான அடிபடைச்சட்டவடிவம் ( CODE) ஒன்றையும் இவர் கொண்டுவந்துள்ளார். அது அமல்படுத்தப்பட்டால், ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ஏற்படும் வரி-மாற்றங்கள் மிகக் குறைந்த அளவே இருக்கும். பெரும்பாலான வரிகள், பல ஆண்டுகளுக்கு மாறாதவையாக இருக்கும். இது, நாட்டில் தொழிலும், வணிகமும், சேவைத்துறையும் நிலைத்து வளர மிகவும் அவசியமாகும். 

(7) இன்று, சிதம்பரத்தை எதிர்ப்பவர்களின் முக்கிய வருத்தமே, தங்களுடைய கருப்புப் பணத்தைப் பெருக்க முடியாமல் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு ஆட்டும்படியான கட்டமைப்பை உருவாக்கிவிட்டாரே என்பதுதான்.  இவர்களில் பெரும்பாலானோர், அரசியல்வாதிகளும், சினிமாத்துறையினரும், வியாபாரிகளும், ரியல் எஸ்டேட் அதிபர்களுமே. அதாவது, சிதம்பரத்தை எதிர்ப்பவர்களில், ஏழைகளோ, நடுத்தர வர்க்கத்தினரோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம், உயர் வட்டிவிகிதம், பற்றாக்குறை மூன்றையும்
எதிர்த்துத் தனியொரு மனிதனாகப் போராடினார்
ப.சிதம்பரம்
ஒவ்வொரு நிதியமைச்சரும் தன் கட்சிக்கும் பிரதம மந்திரிக்கும் உட்பட்டுத்தான் செயலாற்றவேண்டும். ஆனால் அந்தச் செயல்பாட்டிலும் தனது சுதந்திரத்தன்மையை நிலைநாட்டி, தனது துறையில் எண்ணற்ற சீர்திருத்தங்களைக் கொணர்ந்து, நாட்டிற்கு மிகப்பெரும் தொண்டு புரிந்தவர் சிதம்பரம் என்பதை நாளைய பொருளாதார வரலாறு உறுதி செய்யும். இந்தச் செயல்பாட்டில் அவர் தன்னைத் தீவிரப்படுத்திக்கொண்டதால், பொது மக்களிடமிருந்து சிறிது சிறிதாக விலகிப்போனார். அதனால் ஒரு கருணாநிதி போலவோ, வைகோ போலவோ, அவருக்கு மக்களுடன் தொடர்பில்லாமல் போனது. இன்று அரசியலிலிருந்து அவர் விலகவும் அதுவே காரணமாயிற்று.

ஆனால் நிலக்கரி மூலமோ, அலைக்கற்றை மூலமோ கொழுத்த கறுப்புப் பண மூட்டைகளைச் சம்பாதிக்கச் சிலர் முயன்றபோது, அதைத் தடுக்கும் வன்மையை அவர் பிரயோகித்துவிடாதபடி அவரது கைகள் கட்டப்பட்டுவிட்டதுதான், என்னைப் போலவே அவருக்கும் மீதமுள்ள வேதனையாக இருக்கும்.

சிரிப்பு

“இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்ததற்குத் தண்டனையாக, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் என்னைக் கவிழ்க்க முயற்சிக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.....நாங்கள் தமிழர்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை; பயங்கரவாதத்துக்கு எதிராகத்தான் போரிட்டோம்.” – இலங்கை அதிபர் ராஜபக்சே பேச்சு. (நன்றி: தினமலர்-24.3.2014- சென்னை பதிப்பு- பக்.16 – மூன்றாம் பத்தி.)
கண் திறந்தபடி    செய்த பாவங்களுக்கு,
கண்மூடிப்  பிராயச்சித்தம்  வேண்டல்?  

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.
 © Y Chellappa
Email: chellappay@yahoo.com

வியாழன், மார்ச் 20, 2014

ஹேமமாலினியும் ஞாநி சங்கரனும் (‘அபுசி-தொபசி’-36)


(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல்  
நாடாளுமன்றத் தேர்தல் சூடு பிடித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அரசியல் கட்சித்தலைவரும் ஆயிரக்கணக்கில் மக்களைக் கூட்டிப் பொதுக்கூட்டம் நடத்திக்கொண்டு வருகிறார்கள். இதுவரை மத்தியில் பதவியில் இல்லாத அரசியல் கட்சிகள் ஆர்வமுடன் இயங்கும் நிலையில், மூன்று தலைமுறைகளாக ஆண்டுவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களோ இன்னும் வீதிக்கு வரவில்லை. மூத்த தலைவர்கள் பலர், இம்முறை தேர்தலில் போட்டியிட மறுத்துவருகிறார்கள். லாபம் அனுபவிக்கும்போது கூடிநின்றவர்கள், இனி காங்கிரஸ் மீளப்போவதில்லை’ என்று தெரிந்ததும்,  ‘அற்ற குளத்தில் அறுநீர்ப்பறவை போல்’ கட்சியைவிட்டு விலகி நிற்கப் பார்க்கிறார்கள். ப.சிதம்பரம் கூடப் போட்டியிடப் போவதில்லை என்கிறார்கள்.

‘காங்கிரசைக் கலைத்துவிடவேண்டும்’ என்று மகாத்மா காந்தி கூறினார், (இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன்.) 2014 தேர்தலில் அது நடந்துவிடும் போலிருக்கிறது. மகாத்மாவின் கனவை நிறைவேற்றினோம் என்று சோனியாவும் ராகுலும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.


தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. அதற்குள் கேப்டனும் மருத்துவரும் தனித்தனியாகச் சில தொகுதிகளில் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்கள். ‘மோடியின் கரத்தைப் பலப்படுத்துவோம்’ என்று விஜயகாந்த் வெளிப்படையாகக் கூறிவிட்டார். ஆனால் மருத்துவரோ, மோடியின் பெயரை இன்னும் உச்சரிக்க ஆரம்பிக்கவில்லை. தனக்கும் விஜயகாந்த்துக்கும் உள்ள  ஆளுமை மோதலை அவரால் தவிர்க்கமுடியாமல் இருக்கிறது. அதே சமயம் தருமபுரியில் அன்புமணியை ஜெயிக்கவைக்க வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு உள்ளது. இல்லையெனில் கட்சி விரைவில் காணாமல் போகும் என்று பட்சி சொல்கிறது. ஆனால் தருமபுரி தொகுதி அவர் கட்சிக்குக்  கிடைப்பது உறுதியா என்று தெரியவில்லை.

வழக்கம்போல் பொறுமை காத்திருப்பவர் வை.கோ தான். என்ன செய்வது, அநாகரிகத்திற்கும் அவருக்கும் காத தூரமாயிற்றே! இந்த முறையாவது  அவர் கட்சி, போட்டியிடும் எல்லாத் தொகுதிகளிலும் ஜெயிக்கவேண்டும் என்பது நடுநிலையாளர்களின் விருப்பம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று கொள்கைகளும் உடைய கட்சி இன்று தமிழ்நாட்டில் ம.தி.மு.க.வை விட்டால் வேறேது?

ஸ்டாலின் – அழகிரி யுத்தம் தொடர்கிறது. தென்தமிழ்நாட்டில் திமுக சார்பில் போட்டியிடும் ஏழு வேட்பாளர்களைத் தோற்கடிக்க அழகிரி வியூகம் வகுத்திருப்பதாகப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அந்த ஏழுபேரும் நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் அழகிரியைத் தாக்கி எதுவும் பேசவேண்டாமென்று ஸ்டாலின் உத்தரவு போட்டிருக்கிறார் என்று இன்னொரு செய்தி கூறுகிறது. வேலூரில் முஸ்லிம் வேட்பாளருக்கு ஆதரவாகப் பணிபுரிய மாட்டோம் என்று துரைமுருகன் சார்பினர் அறிவித்திருக்கிறார்கள். இதேபோன்ற எதிர்ப்பு, வேறு சில தொகுதிகளிலும் தெரிகிறது. பேரறிஞர் அண்ணாவால் துவக்கப்பட்டு, பேச்சாலும் எழுத்தாலும் சினிமாவாலும் இளைஞர்களைக் கவர்ந்து சுமார் ஐம்பது ஆண்டுகளாக இயங்கிவரும் ஒரு கட்சி, கடைசியில் வெறும் ‘குடும்பக் கட்சி’ யாகப் பலவீனப்பட்டுப்போனதை நடுநிலையாளர்கள் வருத்தத்துடன் பார்க்கிறார்கள். தான் வளர்த்த கட்சியைத் தானே அழித்த பெருமை கலைஞருக்கு வந்துவிடும் அபாயம் தெரிகிறது.


சற்றுமுன் வந்த செய்தி: டில்லியிலிருந்து தாஜ்மகாலைப் பார்க்க ஆக்ரா போனால், வழியில் எதிர்ப்படும் நகரம் ம(த்)துரா. அங்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தான் ஹேமமாலினி. தமிழச்சி! அவரது வெற்றிக்கு நமது வாழ்த்துக்கள். 

புத்தகம்
பிரபல ஆன்மிகப் பேச்சாளரான சுகி.சிவம், சிறந்த எழுத்தாளரும் கூட. தமிழ்நாட்டின் பிரபலமான எல்லாப் பத்திரிகைகளிலும் இவர் எழுதிவருகிறார். புத்தகக் கண்காட்சியில் இவரது நான்கு புத்தகங்கள் வாங்கினேன். கனவு மெய்ப்படும், ஏமாற்றாதே-ஏமாறாதே, ஊருக்கு நல்லது சொல்வேன், பெண்ணே நீ வாழ்க – என்பவையே அவை. (கவிதா பப்ளிகேஷன் சென்னை வெளியீடு.044-24364243/24322177. விலை ரூ.50 ஒவ்வொன்றும்.)


மனித மனம் அலைபாய்ந்துகொண்டே இருப்பது. நின்றாலும், அமர்ந்தாலும், படுத்தாலும், நடந்தாலும்  அது மட்டும் எங்கெங்கோ திரிந்துகொண்டே இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்துவது சாதாரணமான விஷயமல்ல. சுகி.சிவத்தின் நூல்கள் அந்தப் பணியை அமைதியாகச் செய்கின்றன. சிக்கலில் ஆட்பட்டு, குழப்பத்தில் மூழ்கி,  தெளிவில்லாது தவிக்கும் நேரத்தில் இந்த நூல்களிலிருந்து எந்தக் கட்டுரையைப் படித்தாலும் மனம் விரைந்து தெளிவடைவதைக் காணலாம்.

‘கனவு மெய்ப்படும்’ என்பது, கல்கியில் பகவத்கீதையைப் பற்றி எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு. ஆனால் இது முழு ஆன்மிக நூல் அல்ல. நகைச்சுவை ததும்பும் குட்டிக்கதைகள் நிறைந்த கருத்துக் களஞ்சியம். உதாரணம்:

(பக்கம் 22 – 24): டவுன் பஸ்ஸில் போகவேண்டிய ஒருவர் கையில் சில்லறை இல்லை. ஐம்பது ரூபாய் நோட்டு மட்டும்தான். சில்லறை இல்லாமல் ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினால் நல்லவருக்கே கோபம் வரும். ஐயாவுக்கு ஒரு யோசனை. பக்கத்தில் இருந்த பளபள ஓட்டலில் நுழைந்தார். ‘இன்றைய ஸ்பெஷலை’ நோட்டம் விட்டார். ஆஹா, கோதுமை அல்வா! வாங்கிச் சாப்பிட்டார். அருமை. பிறகு ஒரு வடை, காப்பி. பில்லும் சில்லறையும் கைமாறியது. பஸ்சுக்குச் சில்லறை பிரச்சினை தீர்ந்தது என்று கவலை போனது.

ஒரு வாரம் கழித்து அதே வழியாக வருகிறார். கையில் சில்லறை நிறையவே இருக்கிறது. இருந்தாலும் ஷோகேசில் இருந்த அல்வா அவரைப் பார்த்து கண்சிமிட்டியது.  “நான் அல்வா அல்லவா? நீ கொஞ்சம் உள்ளே வா!” என்று அழைப்பு விட்டது. சம்பாதித்து என்ன கண்டோம்! அல்வாவாவது சாப்பிடுவோம் என்று முடிவு செய்தார். அதன் பிறகு எப்போது அந்த வழியாகப் போனாலும் அல்வா அவருக்கு ஆசை காட்டியது.

அந்த அல்வாவுக்கு ஒரு விசேஷம். நாளாக நாளாக நன்றாக இருப்பது அதன் ஸ்பெஷாலிட்டி. கொஞ்ச நாள் போனதும் நண்பர்களிடம் அவர் பெருமையாகச் சொல்லிக்கொண்டார். ‘எப்ப இந்தப் பக்கம் போனாலும் அல்வா சாப்பிடாமல் நான் போனதே இல்லை!’

தமது பலவீனத்தைப் பெருமை போலப் பேச ஆரம்பித்தார்.


திரு கி.வா.ஜ. சொல்வார்: “முதல் நாள் அல்வாவை அவன் விழுங்கினான். அடுத்த நாள் முதல் அல்வா அவனை விழுங்க ஆரம்பித்தது!”

நான் அல்வா என்று நாசூக்காகச்சொன்னேன். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு பொருள் அல்வா போல் ஆட்டிவைக்கிறது.

ஆசை நமக்குள் கட்டுப்பட்டிருந்தால் குற்றம் இல்லை. ஆசை இல்லாமல் இருக்கவே முடியாது. ஆனால் ஆசைக்குள் முழுமையாக நாம் சிக்கிக் கொண்டால் யாராலுமே நம்மைக் காப்பாற்ற முடியாது.

கிருபானந்த வாரியார் இன்னும் நன்றாக விளக்குவார்: “நாம் காரிலே ஏறலாம்; கார் நம்ம மேலே ஏறக் கூடாது. 12-பி பஸ்ஸிலே நீ ஏறினால் தேனாம்பேட்டை போகலாம். 12-பி  உன் மேலே ஏறினால் கிருஷ்ணாம்பேட்டை போவாய்” என்பார். (கிருஷ்ணாம்பேட்டை என்பது சுடுகாடு.)

சினிமா
ஆஸ்கார் பரிசு பெறவேண்டும் என்று இந்தியாவில் ஒவ்வொரு நடிகரும் தயாரிப்பாளரும் ஆசைப்படுகிறார்கள். ஆனால், ஆஸ்கார் வென்ற ஆங்கிலப் படங்கள் இந்தியாவில் வெற்றிகரமாக ஓடுகின்றனவா? இல்லவே இல்லை என்கிறது அவுட்லுக். ஒரு ஷாருக் கான் நடித்த இந்திப்படத்தைத் தூக்கிச் சாப்பிடுகிற அளவுக்கு எந்த ஆஸ்கார் வென்ற படமும் இந்தியாவில் ஓடவில்லை என்று புள்ளிவிவரம் தருகிறது.

2014ஆம் வருடம் ஆஸ்கார் வென்ற படங்களும் இந்தியாவில் அவற்றின் வசூலும் (கோடி ரூபாய்களில்):

GRAVITY: 31.2 , 12 YEARS A SLAVE: 2.1, AMRICAN HUSTLE:3.3, THE WOLF OF WALL STREET: 6.5, CAPTAIN PHILLIPS: 4.4.

2013ஆம் வருடம் ஆஸ்கார் வென்ற படங்களும் இந்தியாவில் அவற்றின் வசூலும்:

LIFE OF PI: 62.1, SILVER LININGS PLAYBOOK: 2.5, DJANGO UNCHAINED: 2.6, ARGO: 2.0, ZERO DARK THIRTY: 1.7, LINCOLN: 1.3.

2012ஆம் வருடம் ஆஸ்கார் வென்ற படங்களும் இந்தியாவில் அவற்றின் வசூலும்:

MONEYBALL: 3.9, THE DESCENDANTS: 3.5, THE HELP: 1.0, HUGO: 0.9.

இத்துடன் கீழ்க்கண்ட ஹிந்திப் படங்களின் வசூலை ஒப்பிட்டுப்பாருங்களேன்:
ஜெய் ஹோ: 107 கோடி, தூம் 3: 261 கோடி, ஏக் தா டைகர்: 184 கோடி, பாடிகார்டு: 148 கோடி, தபாங்: 141 கோடி.  தமிழில் எந்திரனும் விஸ்வரூபமும் தலா 150 கோடிக்குமேல் வசூலானதாமே!

இதிலிருந்து என்ன தெரிகிறது? ‘சொர்க்கமே என்றாலும், நம்மூரு போலாகுமா?’

தொலைக்காட்சி
24 மணி நேர ஒளிபரப்புகள் வந்தாலும் வந்தன, தொலைக்காட்சி நிறுவனங்களுக்கிடையே செய்தி சேகரிக்கும் போட்டி கடுமையாகி வருகிறது. செய்திகளே இல்லையா, கவலயில்லை, இல்லாத ஒன்றையே செய்தியாக்கி விடுகின்றன இவை. அதிலும் ஆங்கிலமொழி தொலைக்காட்சிகளின் அட்டூழியம் தாங்க முடியவில்லை. 
அர்னாப் கோஸ்வாமி- Times Now

டைம்ஸ் னௌ’ தொலைக்காட்சியில் அர்னாப் கோஸ்வாமியின் காட்டுக் கூச்சல்கள் சகிக்கமுடிவதில்லை. விவாதத்திற்கு வரும் யாரையும் இவர் பேசவிடுவதேயில்லை. கற்பனையாக ஒரு நிலைப்பாட்டை முன்மொழிந்து, அதில் தான் எதிர்பார்க்கின்ற முடிவு வருகின்றவரை, இவர் விவாதம் புரிவோரின் வாயில் வார்த்தைகளைத் திணிக்கிறார்.  தன்னை எதிர்த்துப் பேசுவோரைப் பெரும்பாலும்  அசிங்கப்படுத்திவிடுகிறார். கண்ணியமில்லாத ‘டைம்ஸ் நௌ’ வை இனி  பார்ப்பதில்லை என்று தீர்மானம் செய்திருக்கிறேன்.
 ராஜ்தீப் சர்தேசாய்- CNN-IBN
‘சிஎன்என்-ஐபிஎன்’ னில் வருபவர் ராஜதீப் சர்தேசாய்.  ‘என்டிடிவி’யின் நிறுவனர், பிரன்னாய் ராயின் சீடர். ஆனால் இவரும் அர்னாப் கோஸ்வாமி மாதிரியே கத்த ஆரம்பித்திருக்கிறார். பிரன்னாய் ராயின் கண்ணியமான நடத்துகை இவரிடம் சற்றுக் குறைவு என்றுதான் கூறவேண்டும்.

இவர்களோடு ஒப்பிடுகையில், தமிழ்மொழி தொலைக்காட்சிகளில் அரசியல் விவாதத்தை மேற்கொண்டு நடத்தும் நல்ல காம்ப்பியர்கள் குறைவே. இருக்கிற சிலரும், தத்தம் சேனல்களின் முதலாளிகளின் லட்சியத்தின்படியே இயங்குகிறார்கள். எனவே விவாதம் புரிவோரின் கருத்துக்களும் அதேமாதிரி முதலாளியைச் சார்ந்தாகவே இருக்கின்றன. ‘புதிய தலைமுறை’யில் ஓரளவு நல்ல விவாதங்கள் வருகின்றன என்றாலும் அவற்றில் வழவழா கொழகொழா விவாதங்களே மிகுதி. ‘தந்தி டிவி’யில்  பாண்டே சற்று ஆக்ரோஷத்துடன் (அர்னாப் மாதிரி, சர்தேசாய் மாதிரி) ஆழமான கருத்தாக்கம் செய்கிறார். ஆனாலும் தமிழக முதல்வரைப் பற்றிக் குறைவாகப் பேசி அவரை நோகடிக்கச்செய்துவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வு அதிகம் தென்படுகிறது. காரணம் தெரியவில்லை.

பத்திரிகை

பிரபல பத்திரிகையாளர் ஞாநி(சங்கரன்) ஆம்-ஆத்மி கட்சியில் சேர்ந்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. இந்தியாவில், சினிமாவில் இருந்து புகழ் பெற்றவர்கள் கூட, அரசியலுக்கு வரவேண்டும் என்ற அரிப்பு உடையவர்களே. காரணம், ஏதேனும் ஓர் அரசியல் கட்சியைச் சார்ந்து இயங்கினால் தான் மக்கள் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்துக் கேட்பார்கள். சுயேச்சைகளுக்கு இங்கு மதிப்பில்லை. ஞாநி, சுய சிந்தனையுள்ள எழுத்தாளர். நாடகம், சினிமா தளங்களிலும் இயங்கும் லட்சியவாதி. அவருடைய ‘ஓ பக்கங்கள்’ புகழ் பெற்றவை. ஆனால், அவற்றைத் தொடர்ந்து வெளியிடும் துணிச்சல் தமிழ்நாட்டுப் பத்திரிகைகளுக்கு இருந்ததில்லை. விகடன், குமுதம், கல்கி என்று ‘ஓ பக்கங்கள்’ மாறிக்கொண்டே வந்து இப்போது கல்கியில் நிற்கிறது. ஆம் ஆத்மியில் இவர் சேர்ந்துவிட்ட நிலையில் கல்கியும் இனிமேல் இதை வெளியிடத் தயங்கலாம். ஞாநி இதெற்கெல்லாம் கவலைப்படமாட்டார். தனக்கு நியாயம் என்று பட்டதை அவர் எடுத்துச் சொல்லத் தயங்கவே மாட்டார். ஆம்-ஆத்மிகளின் லட்சியமும் இதுதானே!

தன் அரசியல் பிரவேசம் பற்றி ‘கல்கி’யில் அவர் எழுதியதிலிருந்து ஒரு பகுதி:

“............நான் ஏன் இப்போது ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தேன் ?

இந்தியாவில் காங்கிரஸ், பா.ஜ.க, தமிழகத்தில் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய நான்கு கட்சிகளுக்கு எதிராக மாற்று உருவானால்தான் இந்திய, தமிழக அரசியலில் ஆரோக்கியமான மாற்றங்கள் வரமுடியும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. இந்த மாற்றத்தை இடதுசாரி அமைப்புகள் ஏற்படுத்தியிருக்கமுடியும். ஆனால் தற்காலிக அரசியல் சிக்கல்களை சந்திக்கும் போக்கால், அது நடக்காமலே போய்விட்டது. தவிர ஒற்றை சித்தாந்த அடிப்படையில் இயங்கி மக்களைத் திரட்டுவது ஒரு பற்றாக்குறையோ என்று எனக்குத் தோன்றுகிறது.

நமக்கு காந்தி, அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ், விவேகானந்தர், நாராயண குரு, பாரதி, நேரு, பகத்சிங் என்று பலரிடமிருந்தும் எடுத்துக் கொள்ள நிறைய உள்ளன என்று எப்போதும் நான் நம்புகிறேன். ஒருவரிடமிருந்து எடுக்கும்போது இன்னொருவரை நிராகரிக்கும் போக்கும் ஒருவரிடமிருந்து மட்டுமே எல்லாம் கிடைத்துவிடும் என்று பிடிவாதமாக நம்பும் மூர்க்கமும் எனக்கு உடன்பாடில்லை. எனவே ஒற்றை சித்தாந்த அடிப்படை இல்லாமல், திறந்த மனதுடன் அரசியலை அணுகும் வாய்ப்பு இருக்கும் கட்சியாக இன்று ஆம் ஆத்மி உருவாகியிருப்பதால், பல ஆரோக்கியமான அரசியல் அம்சங்களின் தொகுப்பாக அது வளரும் வாய்ப்பு இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. டெல்லியில் காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் மாற்றாக இன்னொரு சக்தி இருக்கமுடியும் என்று மக்கள் நம்பிக்கையை தூண்டியதால் இன்று நாடு முழுவதும் ஆம் ஆத்மிமீது ஆங்காங்கே எதிர்பார்ப்பு இளைய தலைமுறையிடம் மலர்ந்திருக்கிறது. அதே போல தமிழ்நாட்டிலும், தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றாக ஒரு சக்தியாக வரவேண்டியவை எதுவும் இன்னும் வளரவில்லை. வந்தவையெல்லாம் அவற்றின் குளோன்களாகவே இருப்பவை. அந்த இடத்தையும் ஆம் ஆத்மி என்ற எளிய மக்கள் கட்சி பூர்த்தி செய்யும் வாய்ப்பிருக்கிறது.”

தமிழக அரசியலில் ஒரு புதிய அலையை இவர் கொண்டுவருவார் என்ற நம்பிக்கையுடன் அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்போமா?
படம்-நன்றி: தமிழ் இந்து-20.3.2014 - பக்கம் 10

சிரிப்பு
“கமலா, எங்க அம்மா கீழே விழுந்தப்ப நீ பார்த்துட்டே இருந்தியாமே! ஏன் தூக்கலை?”

“டாக்டர் என்னை ரொம்ப வெயிட்டான பொருளைத் தூக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு.”

(நன்றி: ‘கல்கி’ 23.2.2014- பக்கம் 21 – எழுதியவர்: பி.பாலாஜிகணேஷ், சிதம்பரம்)


குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.
 © Y Chellappa

திங்கள், மார்ச் 17, 2014

எம்.ஜி.ஆருக்குச் சம்பளம் ரூ.200, நம்பியாருக்கு ரூ. 600! ( ‘அபுசி-தொபசி’-35)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல்  
தமிழருவி மணியன் நடத்தும் ‘ரௌத்திரம்’ மாத இதழ் இப்போதுதான் பார்க்கிறேன். அவருடைய தமிழ் எழுத்தைப் பல்வேறு நூல்கள் வாயிலாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் படித்திருக்கிறேன். என்றாலும் ஒரு பத்திரிகை ஆசிரியராக அவரது மேதைமையை ‘ரௌத்திர’த்தில் தான் பார்க்கிறேன். தமிழை வெறுப்பவர்கள் மட்டுமே தமிழருவி மணியனின் எழுத்தை வெறுக்கமுடியும்.

இந்த இதழில் வை.கோ.வுடன் ஒரு நீண்ட பேட்டி வெளியாகியுள்ளது. அதிலிருந்து சுவையான ஒரு பகுதி: (வை.கோ. பேசுகிறார்)

“நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. கலைஞரின் பாதுகாப்பு அரணாகவே நான் இருந்திருக்கிறேன். டெல்லி நிலநடுக்கத்தின்போது, அவரைக் கையில் ஏந்தி வெளியே ஓடிவந்தேன். அவர் மீது உளி வீசிய சம்பவத்தில், குற்றவாளியை ஓடிப் பிடித்து, அடித்து உதைத்தேன். அவரின் நிழலாய் அலைந்தவன். தொலைக்காட்சிப் பெட்டி உடைப்பு, விமான மறியல் போன்ற போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று சிறைப்பட்டபோது ஒரு திமுக பிரமுகர், என்னால்தான் இப்படி சிறைக்கு வர நேர்ந்தது என்று என்னைத் திட்டினார். ஒருநாள் சிறை வாழ்வைக் கூட ஏற்க முடியாத அவர் பின்னர் திமுகவில் மந்திரியாகக் கூட வலம் வந்தவர். இப்படி அவர் ஏசிப் பேசுகிறார் என்று கலைஞரிடம் கூறியபோது, ‘அதற்கெல்லாம் கவலைப்படவேண்டாம். எனக்குப் பின்னர் யார் இருக்கிறார் கட்சியை நடத்த. சிலவற்றை கண்டு கொள்ளாமல் விட்டுவிட வேண்டும்’ என்று ஆறுதல் படுத்தியவர்தான் கலைஞர்.  பின்னர் அவர் மனநிலையில் மாற்றம் வருகிறது. ஸ்டாலினுக்குப் போட்டியாக நான் வந்து வந்துவிடுவேனோ என்று நினைத்திருக்கலாம். 1987-88ல் ஸ்டாலினுக்கு கூட்ட ஏற்பாடுகளைச் செய்தவனே நான்தான். ஸ்டாலின் வருவதற்கு நான் ஒன்றும் தடையாக இருக்க நினைத்ததில்லை. ஒரு கட்டத்தில் கூட்டங்களில் பேசக் கூட கட்சியில் எனக்கு மறைமுகத் தடை விதிக்கப்பட்டது.

1992ல் உட்கட்சித் தேர்தலில் நான் முன்னிறுத்திய ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தங்கவேலு வெற்றி பெறுகிறார். கலைஞர் நிறுத்திய வேட்பாளர் தோல்வியுறுகிறார். தங்கவேலு வெற்றியை மகிழ்ச்சியோடு கொண்டாடியவர்களைப் பார்த்து, நீங்களெல்லாம் அதிமுகவுக்கு செல்லலாம் என்று சாடினார்.

‘வைகோவுக்கு ஆதரவாக கலைஞரைக் கொல்ல புலிகள் சதி’ என்று மத்திய உளவுத்துறை ஊர்ஜிதமாகாத ஓர் அறிக்கையைத் “தயாரித்து” அனுப்ப, அதை, திமுகவில் குழப்பம் ஏற்படட்டும் என்று ஜெயலலிதா கலைஞருக்கு அனுப்புகிறார். இந்தச் செய்தியைப் பத்திரிகைகளுக்கு அறிவித்துவிட்டு, பாதுகாப்பை ஏற்றுக் கொள்கிறார்.

எனக்கு உலகமே சூனியமானது போன்ற ஓர் உணர்வு; ‘கும்பகர்ணனைப் போல் இந்தத் தம்பி இருப்பான்’ என்று அறிக்கை கொடுத்துவிட்டு, வேண்டாம் இந்த வீண் பழி அரசியல் என்று விலகியிருக்க நினைத்தவன் வீட்டு முன் திமுக தொண்டர்கள் அணி திரண்டனர். நொச்சிக்குப்பம் தண்டபாணி உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்க வேண்டும் என்று சுடுகாட்டில் உரையாற்றவேண்டிய நிலைக்குத் தள்ளிவிட்டது....”

தவறாமல் இளைஞர்கள் படிக்கவேண்டிய தமிழ் இதழ், ரௌத்திரம்.

புத்தகம்
மேற்கு மாம்பலத்தில் ராம்ஸ் மாருதி குடியிருப்பில் இருக்கும் எனது நண்பர் ஒருவரைப் பார்க்கும்போது சரசுராம் என்ற இளம் எழுத்தாளரைச் சந்திக்க நேர்ந்தது.   தற்போது திரைத்துறையில் பிசியாக இருப்பவர். ‘இன்னொரு மழைக்கு முன்பு..’ என்ற கவிதை மாதிரி தலைப்புள்ள, சிறுகதை தொகுப்பு வந்திருப்பதாகச் சொன்னார். தற்செயலாக அந்த நூலை டிஸ்கவரியில் பார்த்தேன். வாங்கிவிட்டேன். (மித்ரா வெளியீடு, சென்னை. தொலைபேசி: 044-23723182, 24735314. ரூ.75.பக்கம் 136)


தேர்ந்த எழுத்தாளர். பதினேழு கதைகள் கொண்ட இத்தொகுப்பில், பதினேழுமே சிறந்த கதைகளாக இருப்பது ஆச்சரியம்தான். பத்திரிகைகளில் வெளிவருவதற்காக எழுதப்பட்டவையாதலால் ஒவ்வொன்றும் அளவில் சிறியவை. ஆனால் அளவில் சிறிய கடுகும் ரசத்திற்குத் தாளித்தால் வாசனை தூக்கியடிப்பதுபோல், கதை படித்து முடித்தபின் அதன் தாக்கம் எளிதில் விலக மறுக்கிறது.

கதைகளின் ஆரம்பங்கள் நேர்த்தியாகவும் வாசகனை ஈர்த்துப் பிடிப்பதாகவும் அமைந்துள்ளதைக் குறிப்பிட்டாக வேண்டும். உதாரணத்திற்கு “அர்த்தத்தைத் தேடி...” என்ற கதையின் ஆரம்பம் இது (பக்.21):

விளக்கை அணைக்காமல் மனைவியின் முகத்தருகில் நெருங்கியது தப்பென ரவிக்குத் தோன்றியது. அவள்தான் முதலில் தாடியில் நரையைக் கண்டு பிடித்தாள். நிஜமாஎன ரவி கன்னத்தை அதிர்ச்சியோடு தடவிப் பார்த்தான். உடனடியாகக் கட்டிலைவிட்டு எழுந்துகொண்டான்.

“கவலைப்படாதீங்க...அப்புறம் மொத்தமும் நரைச்சிரும். முகத்துக்கும் சேர்த்து இனி ‘டை’ அடிக்கலாம்..”

“கிண்டலா...இது பித்த நரை.”

“பித்தம் தலைக்குத்தான் ஏறும். முகத்திலயுமா பரவும்?”

“வயசு ஆயிடுச்சுங்கறையா?”

“பின்ன ஆகலையா? பனிரெண்டு வயசுல ஒரு பையன். ஞாபகமிருக்கா..”

ரவி அவளைத் தலையணையால் செல்லமாக அடித்தான். அதில் அவள் நரியைக் கண்டுபிடித்த கோபமும் இருந்தது. லட்சுமி திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

வாழ்த்துக்கள் சரசுராம்! உங்கள் திரைப்படம் எப்போ வரும்?

சினிமா
எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிக்கவந்தபோது அவருக்கு யாரும் சிகப்புக் கம்பளம் விரிக்கவில்லை. பல படங்களில் எடுபிடியான வேடங்களே கிடைத்தன. மேற்கொண்டு வாய்ப்பு தேடித்தான் அவர் நடனம், இசை, சண்டை பயிற்சி போன்றவற்றைக் கற்றுக்கொண்டார். அப்படியும் வாய்ப்புக்கள் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டவில்லை.

எம்.ஜி.ஆர். சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் கழித்துதான் வந்தார், எம்.என். நம்பியார்.  சக்தி நாடக சபாவில் இவர் நடித்த ‘கவியின் கனவு’ நாடகத்தில் நம்பியாருக்கு வில்லன் வேடம். ராஜகுருவாக இவர் நடித்ததை பார்த்து ஜூபிடர் பிக்சர்ஸார் தங்களது படங்களில் நடிப்பதற்கு இவரை மாதம் அறுநூறு ரூபாய் சம்பளத்தில் அமர்த்திக்கொண்டார்கள். இதே ஜூபிடரில் அப்போது நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., பி.எஸ்.வீரப்பா, டி.வி.நாராயணசாமி போன்றோருக்கு மாதச் சம்பளம் இருநூறு ரூபாய்தான்!
திறமைக்கு அந்தக் காலத்தில் அவ்வளவு மரியாதை!
     (ஆதாரம்: ‘கலைமகள்’ மார்ச் 2014 இதழில் எஸ்.சுந்தரதாஸ் எழுதிய கட்டுரை.)


கலைஞரைப் பிரச்சாரத்திற்குப் போகவேண்டாமென்று சொல்லிவிட்டாராம் இளையவர். பொழுதுபோக வேண்டுமல்லவா? அவருக்காகவோ என்னவோ,  ‘நாம் இருவர்’ படம் இன்று (16.3.2014) திரையிட்டார்கள். குமாரி கமலா நடித்து ஏ.வி.எம். தயாரித்த மகத்தான வெற்றிப்படம். இதைப் படிக்கும் உங்களில் பலர் அப்போது பிறந்திருக்க மாட்டீர்கள். தேசபக்திக்கும் நடனத்திற்கும் பாரதியார் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம்.

ஒரு காட்சி திரைப்படமாவது எப்படி என்று காட்டுவதுபோல் அதில் ஒரு நகைச்சுவை காட்சி. அசோகவனத்தில் சீதை அமர்ந்திருக்கிறாள். அசோக மரத்தின்மீது அனுமார் அமர்ந்திருக்கிறார். பத்து தலை இராவணன் வந்து நின்று சீதையை மிரட்டுகிறான். இதுதான் காட்சி. நகைச்சுவை நடிகரோ அதிகம் புகழ்பெறாதவர். சீதையாக நடிப்பவரோ புகழ்பெற்ற தெலுங்கு நடிகை. கையில் வாட்ச் கட்டிக்கொண்டிருக்கிறார். அதிகமான வளையல்கள் அணிந்திருக்கிறார். நடிக்கும்போது கூட அவற்றை எடுக்க மறுக்கிறார். இயக்குனரும் தயாரிப்பாளரும் புதியவர்கள். ‘பிச்சைக்காரியாக நடித்தாலும் நான் இவற்றைக் கழற்றமாட்டேன்’ என்கிறார். அசோகவனத்தில் சீதை எப்படி ஏழ்மையாக இருக்கவேண்டுமென்று சொன்னபோது, நகைச்சுவை நடிகரையும் இயக்குனரையும் திட்டிவிட்டு நான் நடிக்கமாட்டேன் என்று எழுந்துபோய்விடுகிறார்!

வலைப்பூ எழுதும்  நண்பர்களில் பலர், சினிமாவில் உதவி இயக்குனர்களாக இருக்கிறார்கள். சிலருக்கு இயக்குனர் பதவியும் கிடைத்துக்கொண்டு வருகிறது. பாவம், இந்த ஜூனியர்கள், பழம் தின்று கோட்டை போட்ட சீனியர் கலைஞரகளிடம் என்ன மாதிரி திட்டு வாங்குகிறார்களோ? ஆனால் அதை வெளியில் சொல்லமாட்டார்கள். மனதிற்குள்ளேயே விழுங்கிவிடுவார்கள்.

தொலைக்காட்சி

இன்று மெகா டிவியில், மகளிர் தினத்தை முன்னிட்டு,  சாதனை புரிந்த மகளிருக்கான மெகாவிருதுகள் வழங்கப்பட்ட நிகழ்வைக் காட்டினார்கள். அனுபவமுள்ள சின்னத்திரை கலைஞர் லதாராவ் தொகுத்தளித்தார். பாரம்பரிய உடையான சேலை அணிந்து, ஆரம்பம் முதல் இறுதிவரை கண்ணைவிட்டு விலகாத இளஞ்சிரிப்புடன், உதடுகளைச் சுழித்தும் சுருக்கியும் அற்புதமான தமிழில், சுத்தமான உச்சரிப்பில்,  இந்தக் கன்னடப்பெண் தொகுத்தளித்தது, ‘சூப்பர் சிங்கர்’ தொகுப்பாளினிகளுக்கு    வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் என்பது உறுதி.

விருது பெற்ற ஒவ்வொரு சாதனையாளரைப் பற்றியும் ஐந்து நிமிடத்திற்குக் குறையாத ஆவணப்படம் சேர்த்திருந்தது மனதுக்கு நிறைவளித்த விஷயம்.  ‘கந்த சஷ்டி கவசம்’ பாடிய சகோதரிகளில் இன்றும் நம்மோடிருக்கும் மூத்த சகோதரியான சூலமங்கலம் ராஜலட்சுமிக்கு விருது வழங்கியதாகும். இப்படிப்பட்ட அங்கீகாரம் தனக்குக் கிடைத்ததை நெகிழ்ந்து வரவேற்று நன்றி சொன்னார் அந்த முதுபெரும் பாடகி. மிகச்சிறந்த நடிகையான லட்சுமிக்கும் விருது வழங்கப்பட்டது.  அதை அவர் வாங்கிக்கொண்டு, உடனே,  வழங்கிய திருமதி தங்கபாலுவிடமே கொடுத்துவிட்டார். “மற்றவர்கள் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் சாதனை செய்தவர்கள். அதனால் விருதுக்குத் தகுதியானவர்கள். நான் என்ன சாதனை செய்தேன்? இன்றுவரை நடித்து, பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். இது என் தொழில். இதற்காக ஏன் விருது கொடுக்கவேண்டும்?” என்பது அவர் கொள்கை. வாழ்க லட்சுமி!

பின்னணிக் குரல் கொடுக்கும் நடிகை நித்யா, குழந்தை நடிகையாக இருந்து ‘கோழி ஒரு கூட்டிலே’, ‘முத்தான முத்தல்லவோ’ போன்ற பாடல்களால்  பிரபலமாகி, இன்று திறமையான தயாரிப்பாளராக இருக்கும் குட்டி பத்மினி, எங்கள் வட ஆற்காடு மாவட்டக்காரரான பிரபல பாடகி வாணி ஜெயராம்   போன்றவர்களுடன் மேலும் பலர் விருது பெற்றனர்.  94 வயதிலும் யோகா பயில்விக்கும் ஆசிரியை ஒருவருக்கும் விருது வழங்கிக் கௌரவப்படுத்தியது, மெகா டிவியின் நேர்மையையும் மனிதாபிமானத்தையும் காட்டுவதாக இருந்தது.  

பத்திரிகை

தமிழில் கேள்வி-பதில் என்ற பகுதிக்கு இலக்கியத்தரம் வழங்கியவர், கல்கண்டு தமிழ்வாணன். அவருக்குப் பிறகு, கேள்வி-பதில் என்றாலே, சோவின் துக்ளக்தான் நினைவுக்கு வரும்.

ஆதாரபூர்வமான பதில்களை அளிக்கும்போதும், சிறிது நையாண்டி தடவாமல் அவரால் பரிமாற முடியாது. அது மட்டுமன்றி, தன்னையே நையாண்டி செய்துகொள்வதும் சோவின் பழக்கம். 19.3.2014 இதழிலிருந்து ஒரு சுவையான பதில்:


கேள்வி: (த. நாகராஜன், சிவகாசி): முக்காலமும் உணர்ந்த திரிகால ஞானியே! பாவம் என்றால் என்ன? புண்ணியம் என்றால் என்ன?

சோ வின் பதில்: காலை, மதியம், மாலை என்ற மூன்று சாப்பாட்டு வேளைகளையும் தெரிந்து வைத்திருப்பதால் என்னை திரிகால ஞானியாகக் கருதுகிறீர்கள் போலிருக்கிறது; இருக்கட்டும். பாவம் என்றால் -  மாட்டிக்கொள்வது; புண்ணியம் என்றால் – தப்பித்துக் கொள்வது.

சிரிப்பு
தலைவருக்கு ஜெனெரல் நாலட்ஜ் கம்மியா....எதை வச்சு அப்படிச் சொல்ற?”
“லோக் ‘பால்’ மசோதா கொண்டு வரும்போது, தண்ணி கலக்காம பார்த்துக்கணும்கிறாரே!”
-    குமார்.   (நன்றி: தினமலர்- வாரமலர்- 16.3.2014 பக்.11)
குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.
 © Y Chellappa