BLOG லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
BLOG லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூன் 01, 2015

எது வேண்டும் சொல் தோழா-BLOG ஆ, FACEBOOK ஆ ?

கடந்த நான்கு மாதங்களாக  உங்களை BLOG வழியாகச் சந்திக்காமல் இருந்துவிட்டேன் தோழர்களே. மன்னித்துவிடுங்கள். காரணம் என்ன தெரியுமா?

ஃபேஸ்புக் என்னும் முகநூலில் எப்படியோ இணைந்துவிட்டேன். எனக்குத் தெரியாமலேயே எனது பொன்னான நேரம் முழுதும் வீணாகிக்கொண்டிருக்கிறது. (உதாரணம் சொல்லவேண்டும் என்றால் விஜய் டிவியில் கோபிநாத் நடத்தும் 'நீயா நானா' பார்க்கும் அனுபவம் மாதிரி.)

ஒன்றா இரண்டா என்று எண்ணிக்கொண்டிருந்த காலம் போக, இப்போது ஆயிரக்கணக்கில் நட்பு அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ஓரளவுக்கு அழைப்பாளர்களின் முகநூல் பக்கத்திற்குச் சென்று விசாரித்துவிட்டுத்தான் அழைப்பை ஏற்கிறேன். என்றாலும் சிலரை மறுக்கவேண்டியிருக்கும்போது மனது சங்கடப்படுகிறது. அதே சமயம் எனது நட்புவட்டத்தில் எழுதுபவர்களும் அதிகரித்துக்கொண்டே போகிறார்கள். அவர்களின் படைப்புகளைப் பார்வையிடுவதில் அதிக நேரம் கழிந்துபோகிறது.

பெரும்பாலும் அரட்டை அடிப்பவர்கள்தான் மிகுதி என்றாலும்,  முகநூலை BLOGGER மாதிரியே பயன்படுத்தும் மேலானவர்களும் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். செங்கோட்டை  ஸ்ரீராம், கீழாம்பூர் முதலிய பத்திரிகையாளர்களின் முகநூல் பதிவுகளும் புகைப்படங்களும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் போன்ற ரகம். ஹோசூர் கண்ணன் ஒரு நாளைக்கு நான்குமுறையாவது ஜோக்குகளை அள்ளித் தெளிக்கிறார். அரவிந்த அன்னை, ரமண மகரிஷி, வியாழக்கிழமைதோறும்  ஷீரடி சாயிபாபா -என்று  ஆன்மிகப் பக்கங்கள் பலரால் நடத்தப்படுகின்றன. காலையில் விழிக்கும்போதும் இரவில் படுக்கப்போகும்போதும் பக்திபூர்வமான இம்முகநூல் பதிவுகளைப் பார்க்கும்போது  மனதுக்கு எவ்வளவு ஆறுதல் கிடைக்கிறது தெரியுமா?

நாள்தோறும் ஒரு திருக்குறளை அதன் பொழிப்புரையுடன் ஒருவர் தருகிறார். இன்னொருவரோ, திருக்குறளை அழகான பாடலாக்கித் தினமும் அளிக்கிறார். அண்மையில் ஒரு பேராசிரியர், தான் பழகிய தமிழ்ச்சான்றோர்களைப் பற்றி தினம் ஒருவர் வீதம் வரலாற்று ஆவணம்போல அறிமுகப்படுத்திவருகிறார்.

கவிஞர்களைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. BLOG கவிஞர்கள் எல்லாருமே அநேகமாக முகநூலுக்குத் தாவிவிட்டார்கள் என்று தோன்றுகிறது. நொடிக்குநொடி ஐந்துமுதல் பதினைந்துவரையான வரிகளில் கவிதைகள்  அருவி மாதிரி கொட்டுகின்றன. அந்தக் கவிதைகளுக்கு அவர்கள் இணைக்கும் அழகிகளின் படங்கள் ...அம்மம்மா... அவற்றின் தரமே தனி!

சிலர் இப்போது தொடர்கட்டுரைகளையும் தொடர்கதைகளையும்கூட முகநூலில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

குமுதம், விகடன் முதல் பெரும்பாலான  இதழ்களும் இப்போது முகநூலின் வழியாகப் படிக்கவும் விமர்சிக்கவும் கிடைக்கின்றன.

அதெல்லாம் விடுங்கள்.  தொலைக்காட்சியைவிட வேகமாகச் செய்தியைத் தாங்கிவரும்    சாதனமாக முகநூல் உருவெடுத்துவிட்டது. தனக்குப் போட்டியாக வளரவிருந்த 'வாட்ஸ்-அப்'பை  19 பில்லியன் டாலர்கள் கொடுத்து வளைத்துப்போட்டுவிட்ட மேதாவித்தனம் நம்மை அசரவைக்கிறது.

அன்றாட நிகழ்வுகளைப் பற்றிய விவாதங்கள் சுடச்சுட நம்மை வந்துசேருவது முகநூல் மூலமாகத்தான். சிலசமயம், பின்னூட்டப் போர்கள், ஆயுதம்தாங்கிய போர்களைவிட அனல்பறக்கும் வகையில் நிகழ்கின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தோழர்களே சொல்லுங்கள், BLOG களுக்கு எதிர்காலம் இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அல்லது, BLOG எழுதும் நாமெல்லாம் இனி முகநூல் மூலமாகவே பேசிக்கொள்வது  சிறப்பானது என்று கருதுகிறீர்களா?

"BLOGஐ படிக்காமல் இருந்துவிடலாம். ஆனால், FACEBOOKஐ படிக்காமல் இருக்கமுடியுமா? எனவே, FACEBOOKஐ நாம் விரும்பியவண்ணம் பயன்படுத்திக்கொண்டு மேல்நோக்கி நகர்வதுதானே அறிவுடைமை?" என்று ஓர் அறிவார்ந்த நண்பர் கூறினார். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? BLOG ஐ  ஒரேயடியாக மூடிவிட்டு FACEBOOKஐ வளர்த்தால் அது தவறாகுமா?

தயவு செய்து எனக்கு ஆலோசனை தாருங்கள். பின்னூட்டம் இடுங்கள்.

உங்கள் கருத்தை வைத்தே நான் இனிமேல் BLOG ஆ, FACEBOOK ஆ என்று முடிவெடுக்கவேண்டும்.
செய்வீர்களா? செய்வீர்களா?

அன்புடன்,

இராய செல்லப்பா, சென்னை
(செல்லப்பா  யக்யஸ்வாமி)
chellappay@yahoo.com