வியாழன், ஆகஸ்ட் 01, 2019

(2) அமெரிக்க ஜனாதிபதி ஆவாரா எலிசபெத் வாரன்?


(2) அமெரிக்க ஜனாதிபதி ஆவாரா இந்தி நடிகரின் மாமியார்? 
அமெரிக்காவின் ஓக்லஹாமா-வில் பிறந்தவர் எலிசபெத். அவருடைய தந்தை தரைவிரிப்புகளை விற்பவராகவும், கட்டிடங்களைப் பராமரிப்பவராகவும் இருந்தார். தாயார் குடும்பத்தலைவி மட்டுமே. எலிசபெத்துக்கு மூன்று அண்ணன்கள் உண்டு. மிகவும் கஷ்டமான வாழ்க்கைதான்.
 
தொலைக்காட்சி விவாதத்தில் எலிசபெத் வாரன்
எலிசபெத்துக்கு 12 வயதானபொழுது அவருடைய  தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதனால் அவர் பணிக்குச் செல்ல முடியாமல் மருத்துவச் செலவுகள் குவிந்தன. அவர்களிடம் இருந்த ஒரே வாகனமான  ஸ்டேஷன் வேகனை விற்க வேண்டியதாயிற்று. வீட்டுக்கடனிலும் பாக்கி இருந்ததால் எந்த நிமிடமும் வீடும் பறிமுதல் செய்யப்படும் நிலைமை ஏற்பட்டது. அப்போதுதான் அவர் தாயார் துணிந்து வீட்டுக்கு வெளியே வந்தார். அருகிலிருந்த ஸியர்ஸில் (Sears) தொலைபேசி ஊழியராகக் குறைந்த ஊதியத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

இதை அடிக்கடி தன்னுடைய சொற்பொழிவுகளில் குறிப்பிடும் எலிசபெத் வாரன், "அந்தக் குறைந்த ஊதியத்தைக் கொண்டு வீட்டுக் கடனை அடைத்து எங்கள் நான்கு பேரையும் அம்மாவால் முன்னுக்குக் கொண்டுவர முடிந்தது. அப்படிப்பட்ட அமெரிக்காதான் இன்றைக்கு நடுத்தர வர்க்கத்தினர் கடன் இல்லாமல் வாழ முடியாத நிலைமைக்குக் கொண்டுபோய்த் தள்ளிவிட்டது" என்பார்.

எலிசபெத்தின் தாயார் அமெரிக்காவின் ஆதிக்குடிமக்கள் (Native Indian tribe) இனத்தைச் சேர்ந்தவர். ஆனால் அதை முன்னிட்டு இட ஒதுக்கீடோ வேறு சலுகைகளோ பெற முயற்சித்தது கிடையாது. இளைஞர்கள் ஆனபிறகு எலிசபெத்தின் மூன்று அண்ணன்களும் இராணுவத்திற்குப் போய்விட்டார்கள். எலிசபெத்திற்கு ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஆனால் 19 வயதிலேயே தன் பள்ளிக் காதலர் வாரனைத்    திருமணம் செய்து கொள்வதற்காக அதைத் துறந்துவிட்டு வேலைக்குப் போனார். கூடவே அந்த வருமானத்தைக் கொண்டு இன்னொரு கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். துப்புரவுத்  தொழிலாளியின் மகளாகப் பிறந்த எலிசபெத் வாரன் முதலில் ஆசிரியராகவும் பிறகு பேராசிரியராகவும் ஆனார். பிறகு அரசியலில் ஈடுபட்டுத் தன்னுடைய மாநிலமான மாசாசூசெட்ஸ் - இல் இருந்து செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எலிசபெத்  படித்தது சட்டம். திவால் சட்டத்தில் அவர் சிறப்பான திறமை கொண்டவர். ஹார்வர்டு சட்டப் பள்ளியில் பேராசிரியராக இருந்தார். நுகர்வோர் பாதுகாப்புக்காக   US Consumer Financial Protection Bureau என்ற அமைப்பு நிறுவப்பட அவர் காரணமாக இருந்தார். அதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதிக்கு உதவியாளராகவும், அமெரிக்க நிதி அமைச்சருக்குச் சிறப்பு ஆலோசகராகவும் பதவி வகித்தார்.

ஒரு பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து சில பகுதிகள் இதோ:

இந்தியாவைப் பற்றியோ இந்தியப் பண்பாட்டைப் பற்றியோ ஏதேனும் தெரிந்து கொண்டு இருக்கிறீர்களா?

எனது மருமகனும் என் மூன்று பேரக்குழந்தைகளுக்கும் தந்தையுமான திரு. தியாகி,    இளைஞனாக இருந்தபோது இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்தவர்தான். அவருடைய கதையும், அவரைப்போலவே இலட்சக்கணக்கான இந்தியர்கள் பல தலைமுறைகளாக அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்களே அவர்களுடைய  கதையும்  ஒன்றுதான். அமெரிக்காவின் சரித்திரத்தில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

தற்போதைய இந்திய அமெரிக்க உறவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்தியாவும் அமெரிக்காவும் மிக வலிமையானதும் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதுமான  உறவைக் கொண்டிருக்கின்றன. உலகப் பொருளாதாரம் அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் இரு நாடுகளும் இன்னும் அதிக அளவு உறவை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புண்டு. அதன்மூலம் தெற்கு ஆசியாவில் சர்வதேசப் பாதுகாப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் உயர்த்த முடியும் என்று நம்புகிறேன்.


எனது மாசாசூசெட்ஸ் மாநிலம் மிக வலுவான, ஆரோக்கியமான இந்திய சமுதாயமும் தெற்காசிய சமுதாயமும் நிரம்பியுள்ள மாநிலமாகும். இவர்களால் இந்த மாநிலம் பல இலாபங்களை  அடைந்துள்ளது. அவர்கள் உழைப்பிற்கு ஏற்ப மேலும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அந்த வெற்றியை அவர்களும் நாடும் நுகரவும் வேண்டும் என்று விரும்புகிறேன்.

(இங்கு உள்ள பாஸ்டன் நகரத்தில் தான் புகழ்பெற்ற தொழில் பல்கலைக்கழகமான MIT உள்ளது. அண்மையில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம் உள்ளது. மிகப் பெரிய தொழிலதிபர்கள் உருவாவதற்குக் காரணமான ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் இங்குதான் உள்ளது. அமெரிக்காவின் மருந்துக் கம்பெனிகளின் தலைமையகம் பாஸ்டன் தான். பிரிட்டனிடம் இருந்து அமெரிக்கா விடுதலை பெறக் காரணமாக இருந்த "பாஸ்டன் டீ பார்ட்டி" இங்குள்ள துறைமுகத்தில் தான் நடைபெற்றது. மின்னஞ்சலை முதன் முதலில் கண்டுபிடித்த தமிழரான டாக்டர் சிவா அய்யாதுரை இங்கு தான் வாழ்கிறார். ஆனால் அரசியலில் அவர் எலிசபெத் வாரனுக்கு  எதிர்க்கருத்தைக் கொண்டவர். அவரை அடிக்கடி சீண்டிப் பார்ப்பவரும் கூட.)

வெளிநாட்டு மக்கள் அமெரிக்காவில் குடியேறுவது அதிகமாகி வருகிறது. இதனால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

அமெரிக்காவின் சரித்திரத்தை எடுத்துக்கொண்டால், காலம் காலமாகவே வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் தான் அமெரிக்கா முன்னேறி உள்ளது. புதுமைகளையும் படைப்பாற்றல்களையும் அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே அவர்களைப் பொறுத்தவரை சட்டபூர்வமான குடியேற்றங்களை உற்சாகப்படுத்துவதற்கான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

உங்கள் பெற்றோர்களிடம் இருந்து நீங்கள் கற்றுக் கொண்டது ஏதேனும் உண்டா?

அவர்கள் இன்று உயிருடன் இல்லை. ஆனால் ஒவ்வொரு கணமும் அவர்களை நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவர்களிடம் பணம் இருந்ததில்லை. உழைப்பு இருந்தது.  உழைப்பின் மூலமே தம் நான்கு குழந்தைகளுக்கும் நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்பினார்கள். உழைப்பவர்களுக்கு அமெரிக்கா நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துகொண்டே இருக்கும்  என்று நம்பினார்கள்.

நீங்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் செய்யப்போகும் முக்கியமான சில காரியங்களைக் கூறுவீர்களா?

தாராளமாக!

வாஷிங்டனில் நடைபெறும் ஊழல்களை நிறுத்துவேன்.

இன்று வாஷிங்டன் அதாவது மத்திய அரசு பெரும் பணக்காரர்களுக்கும், அதிகாரவர்க்கத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்கும் மட்டுமே சேவை செய்து வருகிறது. இந்தப் பணக்காரர்களும் வர்த்தக நிறுவனங்களும் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டாலர்களைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மத்திய அரசு நிறுவனங்களுக்கும் செலவு செய்வதன் மூலம் பொதுமக்களின் நலனை விடவும் தங்கள் நலன்களைப் பாதுகாக்கும்படி ஏற்பாடு செய்துவருகிறார்கள். இதைத்தான் நான் ஊழல் என்கிறேன்.

இந்த ஊழலை ஒழிப்பதற்கு என்னிடம் தீவிரமான திட்டம் உள்ளது. முதலாவதாக "லாபி" (Lobby) களை ஒழிப்பேன். ஒவ்வொரு ‘லாபி’யும் தன் நோக்கத்தையும் யாருக்காக வேலை செய்கிறேன் என்பதையும் அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும். வெளிநாட்டு அரசாங்கங்கள் இந்த ‘லாபி’களைப் பயன்படுத்திக்கொள்வதைச் சட்டத்தின் மூலம் தடுக்க வேண்டும். அரசாங்கப் பதவியில் இருந்தவர்கள், பிறகு ‘லாபி’களுக்கு வேலைக்குச் செல்வதோ, அல்லது ‘லாபி’களில் இருந்தவர்கள் பிற்பாடு அரசு அரசு பதவிகளுக்கு வருவதோ முற்றிலும்  தடுக்கப்பட வேண்டும்.

இப்போது வாஷிங்டனுக்கும் நாட்டின் பங்குச் சந்தைக்கும் இடையே ஒரு சுழல் கதவு உள்ளது. இதனால் பதவியில் இருக்கும்போது செனட்டர்களும், காங்கிரஸின் பிரதிநிதிகளும் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே பங்குச்சந்தை வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பதவி விலகிய பிறகு பங்குச்சந்தைக்கு "லாபி" யர்களாகி, ஆயுள்முழுதுவதும் பணத்தில் கொழிக்கிறார்கள். இது நிரந்தரமாகத் தடுக்கப்படும்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பின்பற்றவேண்டிய நடவடிக்கை விதிகள் மற்றும் தார்மீக நெறிகள் பலப்படுத்தப்படும். அதனால் நீதி மன்றத்தில் உள்ள எல்லா நீதிபதிகளுக்கும் ஒவ்வொருவருக்கும் நியாயமான அளவில் வழக்குகள் கிடைக்கும்.

மத்திய அரசாங்கத்தில் உயர் அதிகாரியாக வேலை தேடும் எவரும் தங்களுடைய வருமான வரிப் படிவங்களை நேரலையில் மக்கள் முன்பு பார்வைக்காக தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டம் வகுப்போம்.

இவ்வாறெல்லாம் செய்வதன் மூலம் பணத்தையும் அதிகாரத்தையும் யாரிடம் போய்ச் சேர வேண்டுமோ அந்த பொதுமக்களுக்குப் போய்ச் சேருமாறு செய்வோம்.

நடுத்தர வர்க்கத்தைத் தலைநிமிரச் செய்வோம்.

பல்லாண்டுகளாக மாறாமல் இருக்கும் சம்பள விகிதங்களும், ஆனால் உயர்ந்துகொண்டே இருக்கும் குடும்பச் செலவுகளும் மில்லியன் கணக்கான நடுத்தர மக்களை மூச்சுவிடாமல் செய்திருக்கின்றன. மேனி நிறத்தில் குறைந்தவர்கள் பல காலமாகவே பண பலம் பெற முடியாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே பொருளாதாரக் கட்டமைப்பில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவந்து, அவற்றின் பயனாகப் பொருளாதார அதிகாரத்தை அமெரிக்க மக்களிடத்தில் திரும்பவும் ஒப்படைப்போம்.

அமெரிக்காவின் மிகப் பெரிய கம்பெனிகளில் நிர்வாகக்குழு உறுப்பினர்களில் 40 சதம் பேரையாவது அந்த கம்பெனியின் தொழிலாளர்களே வாக்களித்துத்  தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் ஊதியம் தொடர்பான வேலை நிலைமைகளில் ஊழியர்களுக்கு நன்மை உண்டாகும்.பெரிய நிறுவனங்களின் ஏகபோக வர்த்தக நிலைமையை மாற்றுவதற்குச் சட்டம் கொண்டுவரப்படும்.

இன்று அமெரிக்காவின் மொத்தப் பொருளாதாரத்தையும் கையில் வைத்திருக்கும் 75 ஆயிரம் பேர் (அல்லது கம்பெனிகள்) மீது "அல்ட்ரா மில்லினர் டேக்ஸ்" எனப்படும் உயர் பணக்காரர்களுக்கான வரி விதிக்கப்படும். இதிலிருந்து எல்லாக் குழந்தைகளுக்கும் நலவாழ்வு, மாணவர்களின் கல்விக் கடன் ரத்து ஆகியவை செய்து தரப்படும்.  ஏழை அமெரிக்கர்களுக்கு வீட்டு வசதி செய்வதற்கு அரசு மிகப்பெரிய முதலீட்டைச் செய்யும். அதனால் நாட்டில் வீட்டு வாடகைகள் 10 சதம் அளவுக்குக் குறையும். அத்துடன் 15 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையானது எங்கேயாவது தொடர்ந்து யுத்தத்தை உண்டு பண்ணுவதன் மூலம் பணக்காரர்களுக்கும், உயர் அதிகாரத்தோடு தொடர்பு உள்ளவர்களுக்கும் இலாபத்தை ஏற்படுத்துகிறது. இதை மாற்ற வேண்டும். உள்நாட்டில் உள்ள உழைப்பாளர்களின் வலிமைதான் ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் வலிமையாக மாறமுடியும். எனவே பணக்காரர்களுக்கு மட்டுமல்லாது எல்லா அமெரிக்கர்களுக்கும் நன்மையைச் செய்யும் கொள்கையை நாங்கள் பின்பற்றுவோம்.

****
எலிசபெத் வாரன்  மிகவும் துணிச்சலுடன் இன்னொன்றும் அறிவித்திருக்கிறார். அதாவது பெரிய கம்பெனிகளிடமிருந்து தேர்தல்  நிதியைப் பெற்றுத்  தருவதற்காகவே அமைக்கப்பட்டுள்ள  PAC எனப்படும் அமைப்புகளிடமிருந்து தேர்தல் நிதி பெற மாட்டோம் என்றும், ஏற்கனவே லாபி களாக இயங்குபவர்கள் இடமிருந்து நிதியுதவி பெற மாட்டோம் என்றும் அறிவித்திருக்கிறார். ஆகவே பொதுமக்களிடம் இருந்து சிறு தொகையிலான தேர்தல் நிதியைத் தான் இவரால் பெற முடியும்.
*****

எலிசபெத் வாரன் ஓர் எழுத்தாளரும் கூட. பொருளாதார வல்லுநரான தன் மகள் அமீலியா தியாகியுடன் இணைந்து  The Two Income Trap என்ற புத்தகம் எழுதியிருக்கிறார். இதில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போய்ப்  பொருளீட்டினாலும் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தவுடன் பொருளாதார நிலை அம்போ என்று ஆகிவிடும்  நிலை அமெரிக்காவில் இருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

இருவரும் வேலைக்குப் போகும் நிலையில், பிறந்த குழந்தைக்கு Baby sitting முதல் பள்ளிக்கூடம், மருத்துவச் செலவுகள், விளையாட்டுக்கள், சுற்றுப்பயணங்கள் என்று  செலவுகள் பெருகிக் கொண்டே போவதை இந்தப் புத்தகம் ஆராய்கிறது. முற்காலத்தில் பெண்கள் வேலைக்குப் போகாமல் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது உண்மையிலேயே பொருளாதார நிலை இப்போது இருப்பதை விடத் திருப்திகரமாக இருந்தது என்பது இவர்கள் கருத்து. அதற்காக இன்றுள்ள நிலையில் வேலைக்குப் போகாமல் பெண்கள் இருக்க வேண்டும் என்று இவர்கள் சிபாரிசு செய்யவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
 
தாயும் மகளும் -படம் நன்றி: இணையத்திலிருந்து

All Your Worth என்ற இன்னொரு புத்தகத்தையும் இருவரும் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். அமெரிக்கர்கள் எவ்வாறு படிப்படியாகத் தங்களுடைய சொந்த நிதி நிலைமையை மேம்படுத்திக் கொண்டு பணக்காரர்களாக மாற முடியும் என்பதற்கான வழிகளைக் கூறும் நூல் இது.

சிக்கனமாக இருப்பதால் செல்வந்தனாக முடியாது;

ரூபாய்களின் மீது கவனம் வையுங்கள், பைசாக்களின் மீதல்ல;

கடன் வாங்குவது, நாளைய வருமானத்தை இன்றே திருடிக் கொள்வதற்குச்  சமம். எனவே கடனைக் குறையுங்கள்;

சொந்த வீடு முக்கியமானதல்ல, வாடகை கொடுக்க வசதி இருந்தால் வாடகை வீட்டிலேயே இருங்கள்.

அமெரிக்காவின் வங்கித் துறையும் கடன் வழங்கும் நிறுவனங்களும்  தான் உங்களை ஏழையாக்கி வைத்திருக்கின்றன. அதற்காக அவர்களைக் குறை சொல்லிப் பயனில்லை. உங்களை நீங்கள்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

இவையே மேற்படி நூலில் உள்ள முக்கியக் கருத்துக்கள்.

இவரைப் பற்றிய மற்ற விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு இவருடைய தேர்தல் இணையதளத்தைப் பார்க்கலாம்: https://ElizabethWarren.com

இக்கட்டுரையில் உள்ள கருத்துக்கள், மேற்படி தளத்தில் இருந்தும், எலிசபெத் ஆற்றிய பல உரைகளில் இருந்தும், நேற்று (ஜூலை 30) CNN தொலைக்காட்சிக்காக ஜனநாயக கட்சி யின் பத்து முக்கிய வேட்பாளர்களுடன் நடத்திய கேள்வி பதில் பகுதியிலிருந்தும் தொகுக்கப்பட்டவை ஆகும்.

பொறுப்புத் துறப்பு: நான் எலிசபெத் வாரனுக்கு உறவினர் அல்லன். அவரிடம் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவன் அல்லன். அவருடைய கட்சியில் உறுப்பினர் அல்லன். மக்கள் நலனுக்காகவே இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. இதன் நோக்கம் அவரை ஆதரிக்க வேண்டும் என்பதோ அவருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்பதோ அல்ல.

அதே சமயம் சில ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க்  சென்றிருந்த பொழுது MoMA எனப்படும் நவீன அமெரிக்க மியூசியத்தில் எங்கள் குடும்பத்தினர் காட்சிப் பொருள்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு தற்செயலாக எலிசபெத் வாரன் நடந்து கொண்டிருந்ததைப்  பார்த்தோம். நாங்கள் இந்தியர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, முகமலர்ந்து வரவேற்று, விசாரித்து, என் 5 வயது பேரனுடன் இனிமையாகப் பேசினார் என்பதை இங்கு தெரிவிக்க வேண்டுமா என்று தெரியவில்லை.

© இராய செல்லப்பா


13 கருத்துகள்:

  1. இந்தியர்களுக்கு அல்லது வெளிநாடு வாழ் அமெரிக்கர்களுக்கு ஆதரவாக இருக்கிறாரே... அவர் தொகுதியில் வெற்றிபெற அது தேவை போலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக அது தேவைதான். ஆனால் அவர் தேர்தல் தேவையைப் பொறுத்து செயல்படுவதில்லை. எப்போதுமே அவர் சிறுபான்மை யினருக்கு அதரவாகவே இருப்பவர்.

      நீக்கு
  2. நிறைய செய்திகள். ஆழ்ந்து படித்தேன். நிச்சயமாக எலிசபத் ஜனாதிபதி போட்டிக்கே தேர்வாக முடியாது என்று புரிந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் ஒரு வருடம் இருக்கிறதே தேர்தலுக்கு! அதற்குள் என்னவெல்லாம் நடக்குமோ!

      நீக்கு
  3. வழிமுறைகள் சொல்லும் நூல் நல்லாயிருக்கே....!

    பதிலளிநீக்கு
  4. பதிவில் ஆழமான, நிறைவான செய்திகள். மிகவும் அருமை. பொறுப்புத்துறப்பினை அதிகம் ரசித்தேன் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி ஐயா. தங்கள் வரவுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  5. அப்படிப்பட்ட அமெரிக்காதான் இன்றைக்கு நடுத்தர வர்க்கத்தினர் கடன் இல்லாமல் வாழ முடியாத நிலைமைக்குக் கொண்டுபோய்த் தள்ளிவிட்டது" என்பார்.//

    இன்று இது இந்தியாவுக்கும் பொருந்தி வருவது போலத்தான் இருக்கிறது.

    நல்ல வேட்பாளராகத் தெரிகிறார்.

    புத்தகம் நல்ல கருத்துகளைச் சொல்கிறது. இங்கு நீங்கள் பகிர்ந்திருக்கும் அவையே அதற்கு நல்ல உதாரணங்கள்.

    அமெரிக்காவுக்கு மட்டுமல்ல அவர் சொல்லியிருக்கும் கருத்துகள் நம் நாட்டிற்கும் பொருந்தும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  6. இந்த வேட்பாளர் பற்றி உங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு