வியாழன், ஜூலை 31, 2025

அறிவிப்பு: அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி- 2025

 அறிவிப்பு: தேதி: 31-7-2025

எழுத்தாளர் இராய செல்லப்பா குடும்பத்தினர் நடத்தும்
அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு
சிறுகதைப் போட்டி- 2025



நோக்கம்
அச்சுப் பத்திரிகைகள் குறைந்துவிட்டன; அவற்றில் வெளியாகும் சிறுகதைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது; எழுத்துக்குச் சன்மானம் வழங்கும் வழக்கமே அருகிவிட்டது. இந்நிலையில், உள்ளம் தளர்ந்துள்ள எழுத்தாளர்களின் படைப்பாற்றலைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் எளிய முயற்சியே இந்தப் போட்டி.

சென்ற ஆண்டு (2024) நடைபெற்ற முதல் போட்டியில் 355 கதைகள் பங்கெடுத்து வரலாறு படைத்ததை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? அதில் பத்துக் கதைகளுக்கு முதல் பரிசு ரூ.5000 மற்றும் 25 கதைகளுக்கு இரண்டாம் பரிசு ரூ.1000 என்றும் வழங்கப்பட்டன.
**
2025 ஆண்டுக்கான போட்டியின் விவரம்:
முதல் பரிசு: மொத்தம் ரூ.50,000 (பத்து பேருக்குத் தலா ரூ. 5000)
• இரண்டாம் பரிசு: மொத்தம் ரூ.20,000 (பத்து பேருக்குத் தலா ரூ. 2000)
• பரிசு பெறுபவர் வயது 31க்குக் கீழிருந்தால், ரூ.500 ‘இளமை போனஸ்’ வழங்கப்படும்.
• கதைகள் அனுப்பக் கடைசிநாள்: 15 செப்டம்பர், 2025.
• முடிவு அறிவிப்பு : அக்டோபர் 15 க்குள்.

சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் பரிசளிப்பு விழா சென்னையில் சிறப்பாக நடத்தப்படும். எழுத்தாளர்கள் உரிய மரியாதையுடன் கௌரவிக்கப்படுவார்கள். பரிசுத்தொகை, விழா நாளன்று காலை 6-8 மணி அளவில் பரிசு பெற்றவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். பரிசுபெறும் இருபது சிறுகதைகளும் ஒரே தொகுப்பாக வெளியாகும்.

விதிமுறைகள்

1. உலகில் எங்கிருந்தும் தமிழர்கள் வயது வரம்பின்றி கலந்துகொள்ளலாம்.
2. ஒருவர் ஒரு கதைதான் அனுப்பவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
3. சிறுகதையின் அளவு எழுத்தாளரைப் பொறுத்தது. என்றாலும், 1000 முதல் 1600 சொற்களுக்கு உட்பட்ட கதைகளையே வாசகர்கள் விரும்புகிறார்கள் என்பதையும், சுவாரஸ்யம் கருதி நீளமான கதைகள் ‘எடிட்’ செய்யப்படலாம் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
4. எழுத்தில் நாகரீகம் வேண்டும்; கூடுமானவரையில் வட்டார வழக்குகளைத் தவிர்க்கவும்; கதைகள் எந்தக் கருத்தையும் உள்ளடக்கியதாக இருக்கலாம். ஆனால் சொல்வதில் புதுமை இருக்கட்டும். யாரையும் காயப்படுத்த முயற்சிக்கவேண்டாம்.
5. நிறுத்தக்குறிகள் சரியாகப் பயன்படுத்தப்படவேண்டும். முக்கியமாக, உரையாடல்களுக்கு மேற்கோள்குறிகள் இருப்பது அவசியம். அப்படி இல்லாத கதைகள் நிராகரிக்கப்படலாம். (ஒற்றுப் பிழைகளைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். இது கணினியுகம்!)
6. போட்டிக்கு வரும் எல்லாக் கதைகளையும் முதலில் இராய செல்லப்பா கவனமாகப் படித்து மதிப்பெண் இடுவார்; அதிக மதிப்பெண் பெற்ற முதல் 80-100 கதைகள் இரண்டாம் கட்டமாக இரண்டு நடுவர்களுக்கு அனுப்பப்படும். அவர்கள் ஒவ்வொருவரும் எல்லாக் கதைகளையும் தனித்தனியே படித்து மதிப்பெண் இடுவார்கள். இந்த மூன்று கட்ட மதிப்பெண்களையும் கருத்தில்கொண்டு இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். அதிலிருந்து பரிசுக்குரிய 20 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
7. புதியவர்களுக்கு வாசல்திறக்கும் முகமாக, சென்ற ஆண்டு (2024) நமது சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற பத்து எழுத்தாளர்களும் இந்த (2025) ஆண்டுப் போட்டியில் கலந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் அடுத்த ஆண்டு (2026) போட்டிக்கு மகிழ்ச்சியோடு வரவேற்கப்படுவார்கள்.
8. MS Word வடிவில், உங்களுக்குப் பிடித்த UNICODE FONT இல், கதைகள் அனுப்பவேண்டிய முகவரி: award.swarnatrust@gmail.com

(அவார்டு. ஸ்வர்ணாடிரஸ்ட் @ ஜிமெயில்.காம்) மின்னஞ்சல் மூலமாக மட்டுமே கதைகள் அனுப்ப வேண்டும். Pdf வேண்டாம். கையெழுத்துப் பிரதிகள் வேண்டாம்.
9. முக்கியம்: எழுத்தாளர்களின் பெயர், வயது (கட்டாயம்), முகவரி, மின்னஞ்சல், அலைபேசி எண் மற்றும் கீழ்க்கண்ட உறுதிமொழியை இணைத்து அனுப்பவும்:
உறுதிமொழி

1. இந்தச் சிறுகதை எனது சொந்தப் படைப்பாகும். வேறொன்றின் தழுவலோ, மொழிபெயர்ப்போ, சுருக்கமோ அன்று.
2. இந்தப் போட்டியின் முடிவு அறிவிக்கப்படும் வரையில், இக்கதையை வேறெந்த அச்சிதழுக்கோ, இணைய தளத்திற்கோ (ஆடியோ, வீடியோ, டிஜிட்டல்) அனுப்பமாட்டேன்.

10. மேற்கொண்டு விவரங்கள் தேவைப்பட்டால் என்னை அணுகவும்: chellappay@gmail.com
சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் எழுத்தாள நண்பர்களின் உற்சாகமான பங்களிப்பைக் கோருகின்றேன்.
அன்புடன்,
இராய செல்லப்பா, சென்னை.


சனி, பிப்ரவரி 01, 2025

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு இலக்கிய விருதுகள் 

**** 

சிறுகதைப் போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்வு -2025 ஜனவரி 17 வெள்ளிக்கிழமை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் நடைபெற்றது. 


அழைப்பிதழ் 

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே பரிசு பெற்றவர்களுக்கு ஜிபே மூலம் பரிசுத்தொகை அனுப்பப்பட்டு விட்டது. (வெளிநாட்டு மூவரைத் தவிர).  

முதல் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்த ரூ 5000 மங்கலகரமாக இருக்கவேண்டும் என்பதற்காக 5001 ஆகத் திருத்தப்பட்டது. இரண்டாம் பரிசு ஏற்கெனவே மங்கலகரமான ரூ 1001  ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

முதல் பரிசுக் கதைகள் பத்தும் 'வேண்டுதல்' என்ற தலைப்பில் ஒரு தொகுப்பாகவும், இரண்டாம் பரிசுக் கதைகள் 25 ம் 'கரையேற்றம்' என்ற தலைப்பில் இன்னொரு தொகுப்பாகவும் வெளியிடப்பட்டன. 

செயற்கை நுண்ணறிவினால் ஆக்கிய படம்

இதுவும் செயற்கை நுண்ணறிவினால் ஆக்கிய படம்

விழா நிகழ்வின் வீடியோ விரைவில் இங்கு வெளியிடப்படும். இதற்கிடையில் பரிசு பெற்ற எழுத்தாள நண்பர்கள் பலர் தத்தம் வலைப்பதிவுகளில் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.   அவர்களுக்கு நன்றி. 

இலக்கிய இதழ்கள் இந்த நிகழ்வை  மனமுவந்து போற்றியுள்ளன. இன்று 'அமுதசுரபி' மாத இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரையின் படவடிவம் கீழே தரப்படுகிறது.  அமுதசுரபி ஆசிரியர் மதிப்பிற்குரிய திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்கு நமது நன்றிகள். இக்கட்டுரையை வடித்த அன்பர் 'ஸ்ரீ' அவர்களுக்கும் நன்றி! 



மேற்படி சிறுகதைத்  தொகுப்புகளை நமது அன்பிற்குரிய 'குவிகம்' பதிப்பகம் தனது 249-250 ஆவது வெளியீடுகளாகப் பதிப்பித்துள்ள பெருந்தன்மையை எவ்வளவு போற்றினாலும் தகும். இதற்கு மனம் - மொழி- மெய்யால் உழைப்பை நல்கிய திரு கிருபானந்தன் அவர்கள் நமது நன்றிக்கு என்றென்றும் உரித்தானவர். 

இந்தப் புத்தகங்களை வாங்க விரும்பும் நண்பர்கள் கீழ்க்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். கொடுத்துள்ள அலைபேசி எண்ணுக்கு (9791069435)  ஜிபே அல்லது வங்கிப் பரிவர்த்தனை மூலம் பணம் அனுப்பிவிட்டு, முகவரியை அதே எண்ணில் உள்ள வாட்ஸ் அப் மூலம் திரு கிருபாநந்தன் அவர்களுக்குத் தெரிவித்தால் புத்தகங்கள் கூரியரில் வந்துசேரும்.  

'வேண்டுதல்' விலை ரூ.120; 'கரையேற்றம்' விலை ரூ.200.  கூரியர் செலவு -சென்னைக்கு  ரூ. 20; தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு ரூ.40. இந்தியாவின் பிற பகுதிகளுக்கு ரூ.50. (தோராயமாக). 

(மேற்படி சிறுகதைப் போட்டியில் பங்குபெற்று, ஆனால்  பரிசு பெற முடியாமல்  தவறவிட்ட எழுத்தாள நண்பர்கள், புத்தக விலையில்  25%  தள்ளுபடியைக் கழித்து மீதியை அனுப்பினால் போதும்.  கூரியர் செலவையும்  அனுப்ப வேண்டாம்). 


  
  -இராய செல்லப்பா