செவ்வாய், ஜூன் 24, 2014

பத்து கேள்விகள் - பத்துக்கும் பதில்கள்

பத்து கேள்விகள்  - பத்துக்கும் பதில்கள்

முகநூல்பக்கம் போனால் ஒன்று, ஜெயமோகன் Vs பெண் கவிஞர்கள்  என்ற விஷயத்தில் மாட்டிக்கொள்ளவேண்டும். அல்லது, தம் பிள்ளைகள் பேரன்கள் எல்லாரையும் ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிட்டு அதன் பிறகு சாவகாசமாகத் தமிழ்வழிக் கல்விதான் வேண்டும் என்று காத்திரமான போராட்டத்தில் இறங்கியிருப்பவர்களுடன் கைகுலுக்கவேண்டும்.

சரி, நம்ம பதிவுலகம் பக்கம் வந்தாலோ, யாரோ ஒரு அம்மையார் பத்து கேள்விகளைக் கேட்டுவிடுகிறார்; ஆளாளுக்குப் பதில் சொல்லி நம்மையும் மாட்டிவிடுகிறார்கள். போதாக்குறைக்கு, சுப்புத்தாத்தா வேறு அவருடைய தளத்தில் என்னுடைய பதிலை எதிர்பார்ப்பதாக எழுதியிருக்கிறார். நட்சத்திர எழுத்தாளரான திண்டுக்கல் தனபாலன் திரைப்படப் பாடல்களைக்கொண்டு  தன்னுடைய பதில்களை ஏற்கெனவே எழுதிவிட்டார். துளசிதரன் போன்ற வாத்தியார்களும் தங்கள் பள்ளிக்கூட வேலைகளைவிட்டுவிட்டுப் பதில் எழுத வந்து விட்டார்கள். நான் மட்டும் வெளிநாட்டில் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஒதுங்கினால் விடவா போகிறார்கள்?

ஆகவே இதோ எனது பதில்கள்:.

1. உங்களுடைய நூறாவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?..

மண்ணாங்கட்டி! ஏதோ, பணி ஒய்வு பெற்றபிறகு ஒன்றிரண்டுமுறை பாயசம் வைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள். 42 சைசில் ஒரு சட்டை கிடைப்பதுண்டு.  இதெல்லாம் நூறு வயதுவரை தொடரும் சாத்தியம் குறைவு என்றுதான் தோன்றுகிறது. நான் ஒருத்தி, இனிப்பைக் கண்ணால் பார்க்கவும் முடியாமல் படுத்துக்கொண்டிருக்கிறேன், உமக்குப் பிறந்தநாள் கேக் கேட்கிறதா என்று அடுத்த அறையிலிருந்து அன்று முனகல் சப்தம் கேட்குமே!  

2. என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?..
ரஷ்ய மொழியை நானாகவே கற்றுக்கொண்டேன். பெரிய எழுத்தில் வரும்  சிறுவர் புத்தகங்களை எழுத்துக்கூட்டிப் படிக்கவரும் அளவோடு நின்றுவிட்டது. மீண்டும் அதைத் தொடரமுடியுமானால் டால்ஸ்டாயின் நூல்களைப் படிக்க விரும்புகிறேன்.

3. கடைசியாக  நீங்கள் சிரித்தது எப்போது - எதற்காக ?..

அமெரிக்கா வரும்போது திருக்குறளின் பரிமேலழகர் உரையையும், வ.வே.சு. அய்யரின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் என்னுடன் கொண்டுவந்தேன். (காரணத்தைக்  கசியவிடுவேன் என்று பார்க்கிறீர்களா? ஹுஹூம், நடக்காது!) ஒரு திருக்குறளைப் படித்துக்கொண்டிருந்தபோது எனக்குள் சிரிப்பு வந்தது. அதே நேரம், ‘என்ன பைத்தியம் மாதிரி உங்களுக்கு நீங்களே சிரிக்கிறீர்கள்?’ என்று முறைத்துக்கொண்டு வந்தார் துணைவியார். (அவரும் அமெரிக்கா  வந்திருக்கிறார்).  அவரைப் பார்த்ததும் சிரிப்பு இன்னும் அதிகமாயிற்று. அப்போதுதான் அந்தக் குறளின் பெருமை எனக்குப் புரிந்தது. அது என்ன குறள் என்று சொல்லிவிட்டால் இந்தக் கேள்விக்கும் விடை கிடைத்துவிடுமே!

வீட்டில் தினந்தோறும் காலையில் மனைவி முகத்தில்தானே முழிப்போம்! உடனே புன்முறுவலாவது பூக்கிறோம் அல்லவா? (‘ஆம்’ என்ற ஒரே பதிலைத்தான் நீங்கள் சொல்லவேண்டும், புரிந்ததா?)

மனைவியைப் பார்த்ததும் ஏன் சிரிக்கிறீர்கள்? ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று வள்ளுவன் சொன்னதால்தானே!

(கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதல்லவா?)

4. 24 மணி நேரம் பவர் கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?..

கருணாநிதியைத் திட்டலாம். ஜெயலலிதாவைத் திட்டலாம். மனைவியைத் திட்ட முடியாது. இன்வெர்ட்டரில் சார்ஜ் இல்லை என்று அவர் என்னைத் திட்டிக்கொண்டிருப்பாரே!

மற்றபடி எனக்கு எந்த இழப்பும் இல்லை. படுக்கும்போதும் எனக்கு மின்விசிறி தேவையில்லை. ஏசி பிடிக்கவே பிடிக்காது. கொசுவோ மூட்டைப்பூச்சியோ கடித்தாலும் எனக்கு உறைக்காது. பனியனை (மட்டும்!)  கழற்றிவிட்டு, வெறும் தரையில் படுத்துக்கொண்டு, மேலே பார்ப்பேன். ஒட்டடை இருந்தால் குறித்துக் கொள்வேன். எழுந்திருக்கும்போது அவற்றை அகற்றுவேன். அதற்குப் புதுத் துடைப்பத்தை பயன்படுத்துவேன். உடனே துணைவியார் ஓடிவந்து நூறு ரூபாய் துடைப்பம் உமக்கு ஒட்டடைக்கு வேண்டுமா என்று பிடுங்கி எறிவார். ரொம்ப நல்லது  என்று மீண்டும் படுத்துக்கொண்டு விடுவேன். ஒட்டடை எங்கே போய்விடும், நாளைக்கு அகற்றினால் போகிறது!

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாள் அன்று அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன ?..

நன்றாக இருங்கள் என்று வாழ்த்துவோம். சென்னையானால் நவசக்தி விநாயகர், வெள்ளீஸ்வரர் கோயில்களுக்குப் போகச் சொல்லுவோம்.  அமெரிக்காவானால் ப்ரிஜ்வாட்டர், பொமோனா, அல்லது ஃப்ளஷிங் கோவிலுக்குப் போகுமாறு சொல்லுவோம். (‘..வோம்’ என்பது எதனால் என்றால், குழந்தைகளுடன் பேசும்போது துணைவியாரும் அருகிலேயே இருப்பார் என்பதால்!)

அது சரி, உங்கள் குழந்தைகள் நீங்கள் சொல்வதைக் கேட்பார்களா?

6. உலகத்தில் நடக்கும் பிரச்னைகளை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்னையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள் ?..

அமெரிக்காவில் இன்று 75 சதம் பேருக்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் கிடையாது! நோய் வந்தால் நடுங்கிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். எந்த டாக்டரும் உங்களை  ஏற்றுக்கொள்ள முன்வரமாட்டார். பிள்ளையும் பெண்ணும் அங்கிருப்பதால், அடிக்கடி நாங்கள் வரநேரும். இன்ஷூரன்ஸ் எடுக்கவிரும்பினாலும் ‘pre-existing disease not covered’  என்று இருக்கிறதல்லவா? ஊருக்குத் திரும்பும்வரை எந்த நோயும் வந்துவிடக்கூடாதே என்று பிரார்த்தித்துக்கொண்டே இருப்போம். எனவே, ஒபாமா  அரசு உடனடியாகத் தனது இன்ஷூரன்ஸ் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தவேண்டும். அதில், H-1–B இல் இருப்பவர்களின் பெற்றோர்களுக்கு இலவச மருத்துவ வசதியோ அல்லது இலவச மெடிக்கல் இன்ஷூரன்ஸ் வசதியோ அளிக்கவேண்டும். இதற்கான கட்டணத்தை இன்போசிஸ், டி.சி.எஸ்., சி.டி.எஸ். போன்ற நிறுவனங்களிடமிருந்து பெறலாம். மேற்கொண்டு விவரங்களுக்கு என்னை அழைத்துப் பேசுமாறு  நீங்கள் ஆலோசனை கூறலாமே!

7. உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அதைத் தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க விரும்புவீர்கள் ?..

முதலில் மனைவியிடம் கேட்டுவிடுவதே மேல் என்று நினைப்பவன் நான். (உங்களைப் போல் தானே, நானும்!)

8. உங்களைப் பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார். அதைக் கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?..

நேரில் கண்டால்- உடனே விளக்கம் சொல்லித் தடுத்து நிறுத்துவேன். நான் இல்லாதபோது அப்படி நடந்தால், அது எனக்குத் தெரியவரும்வரை பொறுத்திருந்துதானே ஆக வேண்டும்?

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்து விட்டால் அவரிடம் என்ன சொல்வீர்கள் ?..

அதை என் மனைவியிடம் விட்டுவிடுவேன். பெண்களுக்குப் பெண்களாயிற்று என்று!

மரணம் நடந்த அன்றே அவர்கள் வீட்டுக்குப் போகமுடிந்தால், எரிகாடுவரை சென்று வருவேன். நாள்கழிந்து துக்கம் கேட்கப்போனால், என் மனைவி முதலில் பேசுவார். அதையே  வேறு மாதிரியான வார்த்தைகளில் நான் பேசி நேரத்தைக் கடத்துவேன். ஏனெனில் பேச்சா முக்கியம்? துக்கத்தில் பங்கெடுத்துக்கொள்ள சிலர் வந்திருக்கிறார்கள் என்ற எண்ணமே அவர்களுக்கு ஓரளவு ஆறுதலைத்   தருமல்லவா?

10. உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?.

சொல்லலாம், வெட்கமாக இருக்குமே பரவாயில்லையா?

-சமையலறைக்குள் போய், சிப்ஸ், முறுக்கு, மிக்சர் போன்றவை எந்த பாட்டிலிலாவது பாக்கி இருக்கிறதா என்று பார்ப்பேன்.  படித்தால் மட்டும் போதுமா-வில் வரும் ‘தண்ணிலவு  தேனிறைக்க’ பாட்டு கேட்பேன். யூடியூபில் ‘ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸநேஸ்வரி.’ யாராவது இளம்பெண்கள் பாடியது இருந்தால் கேட்பேன். (என் மனைவியைப் பெண்பார்க்கப் போனபோது அவள் பாடிய பாடல்). விசாகா ஹரியின் பிரசங்கம் கேட்பேன். கஸ்தூரியின் வினா-விடை-வேட்டை பார்ப்பேன். டிவி ரிமோட்டைக் கையில் எடுத்துக்கொண்டு எல்லாச் சேனல்களையும் உருட்டிக்கொண்டே போவேன்....

*****
ஒரு வேண்டுகோள்: கொஞ்ச நாளைக்கு வேறு எந்தப் பதிவரும் இம்மாதிரிப் பத்து கேள்வி, பதினைந்து கேள்வி என்று கிளம்பிவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
© Y.Chellappa