சனி, ஜூன் 24, 2017

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எதிர்காலம் உண்டா?

பதிவு எண் 42/2017
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எதிர்காலம் உண்டா?

ஒருவழியாக NEET தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. முதல் இருபத்தைந்து இடங்களில் தமிழக மாணவர்கள் யாரும் இல்லை என்று புலம்பல்கள் எழுந்துள்ளன. ஏன் முதல் நூறு இடங்களைப் பற்றி யாரும் எழுதவில்லை?

நீட் தேர்வு, CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டதால் தமிழ்நாட்டு மாணவர்கள் பெருமளவு வெற்றிபெற முடியவில்லை என்பது தெளிவு. ஆனால் இம்மாதிரி வாதங்கள் அனுதாபங்களைப் பெற்றுத்தருமே  அல்லாது  மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது என்பதும் தெளிவே.

தமிழ்நாட்டில் எஞ்சினியரிங் படிப்பின் தரம்  ஆண்டுக்காண்டு தாழ்ந்துவருவதை நாம் கண்கூடாகக் கண்டுவருகிறோம். இதில் பல தனியார் கல்லூரிகள் திட்டமிட்டு ஈடுபடும் சதித்திட்டமே, ‘கேம்பஸ் ரெக்ரூட்மெண்ட்’ என்று போலியாக ஒன்றை நடத்திவிட்டு ஒரு சில மாணவர்களுக்கு ‘ஆஃபர் லெட்டர்’ என்று ஆறுபக்க அறிவிப்பை சில கம்பெனிகள் மூலமாக வழங்குவது. இப்படி  ‘ஆஃபர் லெட்டர்’ பெற்ற மாணவர்களில் வெறும் ஐந்துசதவிகித மாணவர்களே கடைசியில் வேலை பெறுகிறார்கள் என்று நம்பிக்கையான தகவல்கள் கூறுகின்றன. ஆனால் சம்பந்தப்பட்ட கல்லூரிகளோ இதையே மார்க்கெட்டிங் உத்தியாகப் பயன்படுத்தி அடுத்தடுத்த ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்திக்கொண்டு விடுகிறார்கள்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால் கடந்த ஐந்து ஆண்டுகளில் என்ஜினீயரிங் படித்து இறுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்களில் சுமார் எழுபத்தைந்து சதம் பேருக்கு இன்றும் உரிய வேலை கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை நிலை.

இப்படி வேலை கிடைக்காதவர்களில் பாதிப்பேர்களாவது, வங்கிகளில் கடன்பெற்று கல்வி கற்றவர்களாக இருக்கலாம். இதெல்லாம் மல்லையா கடன் மாதிரி வாராக்கடன்களே. அல்லது, அந்தந்த மாணவர்களின் பெற்றோர்கள் முன்வந்து செலுத்தினால்தான் உண்டு.

தனியார் கல்லூரிகளில் பல, அரசியல்வாதிகளின் பொறுப்பில் இருப்பதால் அரசியல்ரீதியான செல்வாக்கைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் கல்விக்கடன் தரப்படும் நிலைமை உருவாகியுள்ளது. தன்னால் என்ஜினீயரிங் படிப்பு படிக்கமுடியுமா என்ற தெளிவோ, சுயபரிசோதனையோ இல்லாத மாணவன், மற்ற மாணவர்களைப் பார்த்து அதே மந்தையுணர்வில் தானும் என்ஜினீயரிங் வகுப்பில் சேர்ந்துவிடுகிறான். சேர்ந்த நாளில் இருந்தே தோல்வி மனப்பான்மைக்கு ஆளாகிறான். குறைந்த பட்ச ஆங்கிலமோ, குறைந்தபட்ச கணித அறிவோ இல்லாமல் அவனால் எப்படி தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்?

எனவேதான், அவனை நம்பி லட்சங்களைச் செலவழிக்கும் பெற்றோர்களும், கல்விக்கடன் வழங்கும் வங்கிகளும் நிலைகுலைந்து நிற்கின்றன. இதற்கு யார் அடிப்படை காரணம்?

மூன்று பேர்தான் காரணம்.
1.   பெற்றோர்
2.   பெற்றோர்
3.   பெற்றோர்
ஆம், பெற்றோர் தான் காரணம்!

கீழே உள்ள இரண்டு செய்திகளை நீங்கள் படித்திருக்கலாம்; ஆனால் இன்னொருமுறையும் படிக்கலாம். தவறில்லை.
****
(தமிழ் இந்து - ஜூன் 20, 2017 நாளிதழில் வந்த செய்தி)
வெற்றி முகம்: சுதந்திரமாகப் படித்து ஐ.ஐ.டி.க்குள் நுழைந்தவர்!
-     ஜெ. கு. லிஸ்பன் குமார்

படிப்பில் சிறந்து விளங்கும் பிளஸ் டூ மாணவர்கள் பலரது கனவு, ஐ.ஐ.டி.யில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான். நாடு முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டி.களில் பி.டெக். படிப்பில் உள்ள மொத்த இடங்கள் 11 ஆயிரத்துக்கும் குறைவுதான். ஆனால், இந்த இடங்களுக்கு லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் முட்டிமோதுகிறார்கள். ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு இறுதி ஆண்டு படிக்கும்போதே முன்னணி நிறுவனங்களிலும் பன்னாட்டு கம்பெனிகளிலும் கைநிறையச் சம்பளத்தில் வேலை கிடைத்துவிடுகிறது. அதனால்தான் இந்த அளவுக்குக் கடும் போட்டி.

கனவை நிறைவேற்றும் வழி

தனியார் பயிற்சி மையங்களிலும் மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சில மாணவர்கள் 6-ம் வகுப்பு படிக்கும்போதே ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்குத் தயாராக ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்நிலையில், ஐ.ஐ.டி.யில் நடப்புக் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வின் முடிவுகள் (ஜெ.இ.இ. அட்வான்ஸ்டு) கடந்த வாரம் வெளியானது. ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேர் கலந்துகொண்ட இந்தத் தேர்வில் 50,455 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதில் சென்னை மாணவர் அர்ஜுன் பரத் அகில இந்திய அளவில் 26-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

படம்: தமிழ் இந்துவில் இருந்து

தமிழக அளவில் இவருக்குத்தான் முதலிடம். விஷயம் இதுவல்ல. அர்ஜுன் பரத், பள்ளி சென்று பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கவில்லை. இவர் தேசியத் திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனம் (National Institute of Open Schooling) வழியாகப் படித்தவர். வழக்கமாகப் பள்ளி சென்று படித்த மாணவர்களுடன் போட்டிபோட்டு இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் அர்ஜுன்.

10-ம் வகுப்புவரை தனியார் பள்ளி ஒன்றில் படித்தேன். ஐ.ஐ.டி.யில் சேரும் கனவை நிறைவேற்ற வழி தேடினேன். அதன் நுழைவுத் தேர்வுக்குத் தயாராக நிறைய நேரம் தேவைப்படும். ஆகையால் தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வித் திட்டம் பற்றித் தெரியவந்தது. அதன் பாடத்திட்டத்தில் 75 சதவீதம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம். 2 ஆண்டுகளில் ஒரு புறம் பிளஸ் டூ முடித்துவிடலாம். இன்னொரு புறம் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்கும் தயாராகிவிடலாம் என்று திட்டமிட்டேன். எனது இந்தப் புதிய திட்டத்துக்குப் பெற்றோர் பெரிதும் ஊக்கம் அளித்ததோடு பக்கபலமாகவும் இருந்தனர் என்கிறார் அர்ஜுன்.

அதிக நேரம் கிடைத்தது

அவருடைய தந்தை என்.எஸ். பரத், மெர்ச்சன்ட்ஸ் நேவியில் கேப்டனாகப் பணிபுரிகிறார். தாயார் அமிர்தா, இல்லத்தரசி. வழக்கமான பள்ளியில் படிக்காமல் திறந்தநிலைப் பள்ளித் திட்டத்தில் படித்தபோது, சக மாணவர்களோடு பழகும் வாய்ப்பு போன்ற சமூகத் தொடர்புகளை இழந்தாரா எனக் கேட்டபோது,
நிச்சயம் அது இழப்புதான். இருந்தாலும் நேரடி, செய்முறை உள்ளிட்ட வகுப்புக்குச் செல்லும்போது, என்னைப் போன்று வந்த மாணவர்களுடன் பேசிப் பழக முடிந்தது. தேசிய திறந்தநிலைப் பள்ளித் திட்டத்தில் படித்ததன் காரணமாக எனக்கு ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்குத் தயாராக அதிக நேரம் கிடைத்தது. பள்ளி சென்று படித்திருந்தால் இந்த அளவுக்குக் கூடுதல் நேரம் கிடைத்திருக்காது என்கிறார் அர்ஜுன்.

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்காகத் தயாராகும்போதே நிச்சயம் தேர்ச்சி பெற்றுவிடுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அர்ஜுனுக்கு இருந்தது. ஆனால், அகில இந்திய அளவில் 26-வது இடம் பிடித்துத் தமிழக அளவில் முதல் மாணவராக வருவார் என அவர் எதிர்பார்க்கவில்லை. இனி சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்புகிறார். 26-வது ரேங்க் பெற்றிருப்பதால் அவரது ஆசை எளிதாக நிறைவேறும்.

விருப்பப்படி படிக்கலாம்

அர்ஜுன் பரத்தைச் சாதனை மாணவர் ஆக்கிய தேசியத் திறந்தநிலைப் பள்ளி கல்வி நிறுவனத்தின் சென்னை மண்டல இயக்குநர் பி.ரவி கூறுகையில்,
பொதுவாகவே திறந்தநிலைக் கல்வித் திட்டம் என்றாலே கல்வித் தரம் குறைவாக இருக்கும் என்று பலரும் தவறாக நினைக்கிறார்கள். அதேபோல பள்ளி செல்ல விரும்பாத மாணவர்கள்தான் இதுபோன்று திறந்தநிலைக் கல்வித் திட்டத்தில் சேருவார்கள் என்ற கருத்தும் பரவலாக நிலவுகிறது. தேசியத் திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனம் என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு கல்வி நிறுவனம். தேசியக் கல்வித் திட்டம் -2005 (National Curriculum Framework-2005) வழிகாட்டி நெறிமுறைகளின்படி உருவான பாடத்திட்டம் இங்கே பின்பற்றப்படுகிறது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையானது இது. தரமான கல்வியை விருப்பப்படி படிக்கும் முறைதான் தேசியத் திறந்தநிலைப் பள்ளிக் கல்வி முறை. இதில் மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான பாடங்களை அவர்களே தேர்வுசெய்துகொள்ளலாம் என்கிறார்.

சுதந்திரமான தேர்வு முறை

திறந்தநிலைக் கல்வித் திட்டத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை (ஏப்ரல், அக்டோபர்) பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி மாணவர்கள் தாங்கள் விரும்பும் நேரத்திலும் தேர்வு எழுதும் வசதியும் (On Demand Exam-ODE) உண்டு. பிளஸ் ஒன், பிளஸ் டூ ஆகிய இரண்டு பாடங்களையும் உள்ளடக்கியதுதான் இதில் பிளஸ் டூ பொதுத்தேர்வு.

சுயமாகப் பாடங்களைப் படிக்கக்கூடிய வகையிலான புத்தகங்கள் மாணவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. நேர்முக வகுப்புகளும் நடத்தப்படுகிறது. இதில் அனைத்துப் பாடங்களையும் ஒரே நேரத்தில் எழுத வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு பாடமாகவோ இரண்டு பாடங்களாகவோகூட எழுதிக்கொள்ளலாம். தற்போது ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றுள்ள அர்ஜுன் 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்களிடம் வந்தார். 10-ம் வகுப்புவரை பள்ளி மாணவராக இருந்த அவர், சுதந்திரமாகப் படிக்க விரும்புவதாகச் சொன்னார். தேசியத் திறந்தநிலைக் கல்வித் திட்டம் குறித்து அவரிடம் எடுத்துச்சொன்னோம். நம்பிக்கையோடு சேர்ந்து படித்தார் என்கிறார் ரவி.

தரமான பாடத்திட்டம், விருப்பமான பாடங்களைத் தேர்வுசெய்யும் வாய்ப்பு, விரும்பும் நேரத்தில் தேர்வு எழுதிக்கொள்ளும் வசதி இப்படிப் பல்வேறு வசதிகள் இருந்தும் தேசியத் திறந்தநிலைப் பள்ளிக் கல்வி முறை குறித்துத் தமிழக மாணவர்கள் இடையே போதிய விழிப்புணர்வு இல்லை. தற்போது தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 2,500 முதல் 3 ஆயிரம் பேர் வரைதான் இதில் சேருகிறார்கள்.

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு, அடுத்துப் பொறியியல் படிப்புக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு என்று கல்விச்சூழல் மாறிவரும் நிலையில், தேசியத் திறந்தநிலைப் பள்ளிக் கல்வித் திட்டமானது வருங்காலத்தில் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்று உறுதிபடக் கூறுகிறார் ரவி.
*****
அடுத்த செய்தி நீட் தீர்வைப் பற்றியது. இதுவும் தமிழ் இந்துவில் வெளியானதே. (24 ஜூன் 2017).

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
-பாரதி ஆனந்த்

நீட் தேர்வில், அரசுப் பள்ளியில் பயின்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் வெற்றி பெற்றுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட் தேர்வு ) முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்டது.

நீட் தேர்வில் முதல் 25 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு மாணவ மாணவியும் இடம்பெறவில்லை என்பது வேதனையான விஷயம்தான். ரேங்க் பட்டியலில் இல்லாவிட்டாலும் நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

படம்: தமிழ் இந்துவில் இருந்து

வந்தவாசியைச் சேர்ந்த அன்புபாரதி, நிலாபாரதி சகோதரிகள். வந்தவாசி அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் அன்பு பாரதியும் நிலா பாரதியும் பயின்றனர். நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் அன்பு பாரதி 1165 மதிப்பெண்களும், நிலாபாரதி 1169 மதிபெண்களும் பெற்றனர். இதனையடுத்து அவர்கள் நீட் தேர்வுக்கு ஆயத்தமாகினர்.

நீட் தேர்வை எதிர்கொண்டது குறித்து அவர்கள் 'தி இந்து'விடம் கூறும்போது, "பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடன் ஐந்து நாட்கள் ஓய்வு எடுத்தோம். பின்னர் நீட் தேர்வுக்காக திட்டமிட்டோம். நீட் 2014 தேர்வு வினாத்தாள், எய்ம்ஸ் முந்தைய வினாத்தாள்களை வாங்கி பயிற்சி மேற்கொண்டோம். பள்ளியில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தும் எங்களுக்கு அந்தக் கேள்விகள் புதிதாக இருந்தன. அதனால், சிபிஎஸ்இ 11, 12 வகுப்பு புத்தகங்களை வாங்கிப் படித்தோம்.

அதன் பின்னரே எங்களால் அந்தக் கேள்வித்தாளில் இருந்த வினாக்களுக்கு பதில் அளிக்க முடிந்தது. நீட் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டுமானால் சிபிஎஸ்இ தரத்துக்கு பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும்" என்றனர்.
******
எனது கருத்து:

பள்ளிக் கல்வித் துறையில் மாற்றங்கள் கொண்டுவர நாளாகலாம். அதுவரையில் மாணவர்களின் நலனுக்கு யார் பொறுப்பு? பெற்றோர்கள் மட்டுமே. சலுகைகளைக் கேட்டுப்பெறலாம. அது அரசியல்வாதிகள் செய்யும் வேலை. பெற்றோர்கள் செய்யவேண்டியது, ‘அவையத்து முந்தி இருப்பச் செயல்.’ அதற்கு எல்லாவிதமான போட்டித்தேர்வுகளுக்கும் தயாராக இருக்கும் நிலையில் நமது குழந்தைகளை நாம்தான் தயார்ப்படுத்தவேண்டும். நமது கடமையை நாம் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது.

அதே சமயம், நீட் தேர்வில் அல்லது IIT நுழைவுத்தேர்வில்  வெற்றிபெறாத குழந்தைகளை ஏதோ கொலைக்குற்றம் செய்துவிட்டவர்களைப் போல நாம் பார்க்கவேண்டியதில்லை. போட்டியிடும் மொத்த மாணவர் எண்ணிக்கையில் நூற்றுக்கு ஒருவரே இறுதியில் வெற்றிபெறக்கூடும் என்பது கவனிக்கவேண்டிய விஷயம்.

இந்தவகையில், ஆந்திர மாணவர்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும். IIT அல்லது MEDICAL தான் சேரவேண்டும் என்று மாணவன் விரும்பினால், அதற்காக, ப்ளஸ்-2 முடித்தபிறகு ஒரு வருடம் வேறு வேலைகள் செய்யாமல், வேறு படிப்புகளில் சேராமல், முழுக்க முழுக்க தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டு அதன்பிறகே நுழைவுத்தேர்வை எதிர்க்கொள்கிறார்கள். அதற்குப் பெற்றோர்களும் முழு ஆதரவு அளிக்கிறார்கள். ஆகவேதான் எந்த அனைத்திந்திய நுழைவுத்தேர்வுகளிலும் ஆந்திர மாணவர்கள் மிகுந்த எண்ணிக்கையில் வெற்றிபெறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் இது நடப்பதில்லை. காரணம், இலவசங்களால் வளர்ந்த மாநிலம் இது. உழைப்பின்றி இலவசத்தின் மூலமாகவே எல்லாம் நடந்துவிடவேண்டும் என்று எதிர்பார்க்கும் மாநிலம் இது. அப்படிப்பட்ட மனநிலையில் மக்களைத் தொடர்ந்து நிறுத்திவைத்தால் மட்டுமே தங்களுக்கு வாக்குகள் கிடைக்கும் என்று தமிழக அரசியல்வாதிகள் நம்புகிறார்கள். விளைவு, நமது மாணவர்களை வெற்றிக்கான உழைப்பைத் தொடர்ந்து வழங்கிடும் மனநிலையில் நாம் வைக்கவில்லை. அரசாங்க உத்தரவுகள் மூலம் எப்படியாவது விரும்பிய கல்லூரிகளில் இடம் பெற்றுவிடலாம் என்ற நப்பாசையைத்தான் நாம் உண்டாக்கிவிட்டோம். அதனால் நம் குழந்தைகளின் மன உளைச்சலுக்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் நாமே காரணமாகிவிட்டோம். 

ஸ்டேட் போர்டு-க்குப் பதில் CBSE கொண்டுவந்துவிடலாம். ஆனால் அதிலும் இலவசமும் சலுகைகளும் வேண்டும் என்று அரசியல்வாதிகள் கூக்குரல் எழுப்புவார்கள். அது நின்றால் மட்டுமே தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் பத்திரமாக இருக்கும். இல்லையென்றால், ஆந்திரா மாணவர்கள்தாம் எங்கும் முன்னணியில் இருப்பார்கள்!

இப்போதே தமிழ்நாட்டு வர்த்தக நிறுவனங்களில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பணிபுரிகிறார்கள். எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக் கல்லூரிகளிலும் மருத்துவமனைகளிலும் பிற மாநிலத்தவர்களே பணிகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இதை மாற்றுவதற்கான திறவுகோல் பெற்றோர்களாகிய நம்மிடமே உள்ளது. மாணவனின் இயல்புக்கு ஏற்புடைத்தான கல்விமுறையைத் தேர்ந்தெடுத்து, எப்படிப்பட்ட நுழைவுத்தேர்வுகளையும் எதிர்கொள்ளும் மனவலிமையையும் அறிவுக்கூர்மையையும் அவனுக்கு அமைத்துக்கொடுக்கும் பெரும்பணி நம்முடையது. அரசுடையது அல்ல. 

அதற்கு உதாரணமே இக்கட்டுரையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள ஒரு மாணவனும் இரண்டு மாணவியரும். 

*****


28 கருத்துகள்:

  1. கல்வி வணிகப் பொருளாகி விட்டது ஐயா
    பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படாதவரை முன்னேற்றம் கேள்விக் குறிதான் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெற்றோர்கள் என்று சொல்லிவிட்டேனே தவிர, நானும் ஒரு பெற்றோர்தானே, எனது பிள்ளைகளை எந்தப் பள்ளியில் சேர்ப்பது எனற கேள்வி வந்தபோது, தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் படித்தால்தான் அதிக மதிப்பெண் வரும் என்பதாலும், CBSE பள்ளிகள் அப்போது அதிக அளவில் இல்லாததாலும், அரசுப் பள்ளியில் சேர்ப்பது கௌரவக்குறைவு என்று அறிவுறுத்தப்பட்டதாலும், என் வீட்டிற்குப் பின் புறம் அப்போது திறக்கப்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளியில்தான் எனது மூன்று குழந்தைகளும் ப்ளஸ் 2 வரை படித்தார்கள். இத்தனைக்கும் என் மனைவி, ஓர் அரசினர் பெண்கள் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர். மிகுந்த மனப்போராட்டத்திற்குப் பிறகே இந்த முடிவை எடுக்கவேண்டி இருந்தது. இன்றும் நிலைமை மாறிவிடவில்லை. மிக உயர்ந்த பள்ளியில்தான் சேர்க்கவேண்டும் என்று விரும்புகிறோம்; ஆனால், நடைமுறை சிரமங்களை உத்தேசித்து, வீட்டின் அல்லது நம் அலுவலகத்தின் அருகாமையில் உள்ள பள்ளியில்தான் சேர்க்கிறோம். கணவனோ அல்லது மனைவியோ அடிக்கடி ஊர்மாற்றம் பெறும் பணியில் இருந்துவிட்டால் இன்னும் அதிகத் தொல்லையே. ஒவ்வொரு மாணவனின் கதையும் ஒரு தனிக்கதையே.பெற்றோர்கள் பாடு திண்டாட்டமே.

      நீக்கு
  2. முதல்ல த ம + 1. அப்புறம் படிச்சுட்டு எழுதறேன். Heavy Subject

    பதிலளிநீக்கு
  3. முதலில் இலவசம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் கன்சுமபிள் குட்ஸ் வேண்டுமானால் இலவசமாகக் கிடைக்கலாம் ஆனால் தேர்வு என்று வரும்போது முதலில் வெற்றி எனும் முனைப்பு இருக்க வேண்டும் நாங்கள் பயிற்சியின் போது எங்கள் வெற்றிக்கோ தோல்விக்கோ யார் பொறுப்பு என்னும் கேள்வி கேட்கப்பட்டு அதறு ஒரு ரெஸ்பான்சிபிலிடி கர்வ் வரையப்பட்டது பலரும் பெற்றோர் என்றும் அரசு என்றும் சமூகம் என்றும் அதிர்ஷ்டம் என்றும் விதி என்றும் கடவுள் என்றும் பதில் எழுதியிருந்தனர். யாருமே தானும் பொறுப்பு உள்ளவர் என்று கூற வில்லை ஒரு மனிதனின் வெற்றிக்குக்கோ தோல்விக்கோ முதன்மை பொறுப்பே அவனதுதான் என்பதை உணர்வதில்லை நெல்லைத் தமிழன் சொல்படி இது ஒரு கனமான சப்ஜெக்ட் நிறையவே எழுதலாம் ஒருமித்த கருத்து கிடைக்காமல் போகலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. எனது எதிர்காலத்திற்கு நான்தான் பொறுப்பு. ஆனால் நமது பிள்ளைகள, அவர்களது ப்ளஸ்-2 பருவத்தில் அவர்களின்அ எதிர்காலம் பற்றிய அப்படியொரு பெரிய முடிவை தன்னிச்சையாக எடுக்கும் அளவுக்கு அவர்களை சுதந்திர சிந்தனையோடு இயங்க நாம் அனுமதித்திருக்கிறோமா என்பதே கேள்வி!

      நீக்கு
  4. வணக்கம்
    ஐயா
    ஜெயக்குமார் ஐயா சொன்னது போல் வணிகமாகிட்டது இலவசம் அதிகம் கொடுப்பதால் அதன் மகத்துவம் தெரிவதில்லை சாதி வேற்றுமை பார்ப்பதும் உண்டும் இப்படி இருந்தால் மாணவர்களின் கல்வி உயர்வு எங்கே போகும் நல்ல தலைப்பில் விரிவான படைப்பு தந்தமைக்கு நன்றி
    த.ம-2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே! அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குச் சென்றுவந்த ஒவ்வொருமுறையும் எனக்கு ஏற்படும் ஆயாசம் இதுவே: அவர்களால் எப்படி பள்ளிக்கல்வியை இலவசமாக வழங்கமுடிகிறது? நம்மூரில் ஆடு, மாடு, டிவி, மிக்சி போன்றவற்றை இலவசமாக வழங்க முடிந்தவர்களால், குறைந்தபட்சம் ஆரம்பக்கல்வியையாவது ஏன் அனைவருக்கும் இலவசமாக வழங்கமுடியவில்லை? இன்று அரசியல்வாதிகள் அனைவரும் கல்வித்தந்தைகளாக அல்லது கல்வி ஆண்டிகளாக அல்லவா இருக்கிறார்கள்? இதுபோல் வேறு நாடுகளில்-ஏன்- மாஃபியாக்களின் தயவால் ஆளப்படும் ரஷ்யா போன்ற நாடுகளில் கூட- இருக்குமா என்று தெரியவில்லை. நினைக்க நினைக்க நெஞ்சம் பதறுகிறது.

      நீக்கு
  5. அனைத்தும் சரி...

    பெற்றோர்களின் மனம் மாறுமா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெற்றோர்கள் நிலை பரிதாபத்துக்குரியதே. கரந்தையாருக்கு அளித்த பதிலைப் பார்த்துவிடுங்கள் ப்ளீஸ்!

      நீக்கு
    2. பெற்றோர் மாறினாலும் அக்கம் பக்கத்தார் மாற விடமாட்டாங்கப்பா.

      நீக்கு
  6. படிக்காத பெற்றோர்களுக்கு இதன் வழிமுறை தெரியவில்லை என்ன செய்வது ?
    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையே. நகரங்களில் வாழும் பெற்றோர்களுக்கும் கூட சரியான வழி எது என்று தெரிவதில்லை. இது பற்றிய ஆலோசனைகள் வழங்குவதற்கு தினமணி, தினமலர், தினத்தந்தி போன்ற பத்திரிகைகளும், அநேகமாக ஐந்து அல்லது ஆறு தொலைகாட்சி சேனல்களும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றன. ஆனால், இயேசுநாதர் சொன்னதுபோல், 'காதுள்ளவன் கேட்கக்கடவன்' என்ற கதைதான். ஆயிரமாயிரமாகக் கல்விக்கட்டணத்தை அழுகிறோம். இம்மாதிரி நிகழ்ச்சிகளுக்கு நேரம் என்ற ஒன்றையாவது செலவழிக்கலாமே! இல்லையென்றால், எவ்வளவு தாழ்த்தப்பட்ட, இட ஒதுக்கீடு உள்ள சாதியினராயினும் சரி, வசதி உள்ளவரின் பிள்ளைகளுக்கே பயன் கிடைக்கும். ஏழைகளாய், படிப்பும் அற்றவர்களாய் இருப்பவர்களுக்கு விமோசனம் இல்லாமல் போய்விடும். இது மிகுந்த சிந்தனைக்கு உரிய விஷயமே.

      நீக்கு
  7. இன்றைய சூழலில் மிக மிக அவசியமான
    விஷயத்தை விரிவாக ஆழமாகச் சிந்தித்துப்
    பதிந்த விதம் மனம் கவர்ந்தது

    கூடுமானவரையில் அதிகம் பேரைச்
    சென்றடையவேண்டும் என்கிற நோக்கில்
    என் முக நூலில் தங்கள் அனுமதியை
    எதிர்பார்த்து பகிர்வு செய்கிறேன்

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே! முக்கியமாக நான் சொல்ல வந்தது என்னவென்றால், ஒவ்வொரு பெற்றோரும் தனது மக்களுக்குத் தேவையான கல்விமுறையைத் தனி சிரத்தையோடு தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதே. சரியானா ஊக்கம் கொடுத்தால் எப்படிப்பட்ட போட்டித் தேர்வையும் அவனால் எதிர்கொள்ள முடியும் அல்லவா?

      நீக்கு
  8. இது எல்லாமே இல்லுமினாட்டிகளின் வேலை! (நன்றி நண்பர் இ பு ஞா)

    பதிலளிநீக்கு
  9. அருமையான மிகவும் பயனுள்ள கட்டுரை. மாணவர்கள் + பெற்றோர்கள் பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடும். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  10. மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான் ஆனால் எங்கும் சங்கிலிகளால் கட்டப்பட்டுக் கிடக்கின்றான் என்று ஓர் அறிஞர் கூறியதைப் போல பல நிலைகளில் நாம் நம்மை சரி செய்ய முயற்சித்தாலும், அதில் தோற்றோ உலகோடு ஒத்துவாழ் என்ற நிலையிலோ தவறு செய்ய ஆரம்பிக்கிறோம். அதில் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  11. "பல தனியார் கல்லூரிகள் திட்டமிட்டு ஈடுபடும் சதித்திட்டமே" - சில DEEMED UNIVERSITYகள்ல, செமெஸ்டருக்கு 5 லட்சம் கொடுத்தால் 75%க்கு மேல் மதிப்பெண்கள் அளித்துவிடுவார்கள். 75%க்கு மேல் மதிப்பெண்கள் என்றால் அவர்களை INTERVIEW செய்யாமலேயே கன்சல்டன்சி கம்பெனிகள் (வேற யாரு.. I.T. துறைதான்) ஆஃபர் லெட்டர் கொடுத்துவிடுவார்கள். பொதுவா CAMPUS RECRUITMENT என்பதே பல சதிகள் நிறைந்தது. சம்பந்தப்பட்ட கம்பெனி HR மற்றும் கல்லூரிகளின் மேனேஜ்மென்ட் சேர்ந்து செய்யும் முறைகேடுகள் சர்வ சாதாரணம்.

    "ப்ளஸ்-2 முடித்தபிறகு ஒரு வருடம் வேறு வேலைகள் செய்யாமல்" - எனக்குத் தெரிந்து பலர் இதனைச் செய்கிறார்கள். பெற்றோர் ஆதரவளிப்பது பெரும்பாலும் வேறு வழியில்லாமல். 1 வருடம் சும்மா இருந்து முயற்சி செய்வதற்கு கொஞ்ச காலத்தில் கரெஸ்பான்டென்ட் +2 போன்று ஏதாகிலும் வந்து மாணவன் +1லிருந்தே ஐ.ஐ.டி எக்சாமுக்குத் தயார் செய்ய ஆரம்பிப்பது சர்வ சாதாரணமாகிவிடும்.

    இவைகளை எழுதின நீங்கள், கூட்டல் கணக்குத் தெரியாத 25% ஆசிரியர்களைப் பற்றி எழுதாமல் விட்டுவிட்டீர்களே? இத்தகைய பதர்களால் எத்தனை எத்தனை சி.பி.எஸ்.ஸி மாணவர்கள் இந்த ஆண்டு பாதிக்கப்பட்டுவிட்டார்கள்? இவர்களெல்லாம் (30 + 40 = 45 என்று மாணவனின் பேப்பரைத் திருத்து மொத்த மார்க் போடும் ஆசிரியர்கள்) எப்படி ஆசிரியப்பணிக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டார்களோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கூறும் கருத்தில் நான் அதிகம் முரண்படமாட்டேன். ஏனென்றால் எனது பேரக்குழந்தைகளுக்காக இதுவரை ஐந்து CBSE பள்ளிகளை -வெவ்வேறு நகரங்களில்- பார்த்துவிட்டேன். அதன் பயனாக எனக்குக் கிடைத்த முடிவு இது: ஆங்கிலத்தை நான்குவகையில் பேசலாம்: ஒன்று, இங்கிலாந்தினர் போல் பேசலாம், இரண்டு, அமெரிக்கர்கள் போல் பேசலாம், மூன்று, ஆங்கிலம் படித்த இந்தியர்கள் போல் பேசலாம், நான்கு, CBSE பள்ளிகளின் தலைமை ஆசிரியைகளைப் போல் பேசலாம். பல ஆண்டுகள் பணியாற்றியும் தங்களைத் திருத்திக்கொள்ளாத ஆசிரியர்கள், அரசுப் பள்ளிகளைவிட, ஆங்கில மீடியம் பள்ளிகளிலும், CBSE பள்ளிகளிலும் அதிகம் இருக்கிறார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். அதிலும் தமிழ்நாட்டில் அத்தகையவர்கள் அதிகம். அதனால்தான், பிற மாநிலத்து ஆங்கிலமீடியம் பள்ளிகளின் மாணவர்கள் நீட் மாதிரியான தேர்வுகளில் நன்கு எழும்பி பிரகாசிக்கும்போது, நம்மூர் CBSE மாணவர்கள் எப்போதுமே பின்தங்கியிருக்கிறார்கள். CBSE பள்ளிகளில் ஒழுங்காக சம்பளம் கொடுப்பதில்லை, ஒழுங்கான சம்பளமும் கொடுப்பதில்லை என்று உலகமே அறியும். நிகரமான பலன், மாணவர்களின் எதிர்காலம் பாழாகுவதே.

      நீக்கு
  12. நல்ல ஆழமான அலசல். திறந்த நிலை கல்வி திட்டம் பற்றி தெரிந்து கொண்டோம். தேவையானவர்களுக்கு தெரிவிப்போம்.நன்றி!

    பதிலளிநீக்கு
  13. இந்த வருடம், என் பையன் cbse ல் 95சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தும் ,அவன் விரும்பிய EEE ல் இடம் கிடைக்கவில்லை ,இதென்ன கல்வி முறையோ :)

    பதிலளிநீக்கு
  14. இம்மாதிரி வாதங்கள் அனுதாபங்களைப் பெற்றுத்தருமே அல்லாது மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது என்பதும் தெளிவே.// இது மிக மிகச் சரியே!!! நமது கல்வி முறைத் திட்டமே மாற வேண்டும் சார்.

    எஞ்சியரிங்க் கல்வியின் தரம் வருடம் தோரும் குறைந்து வருவது உண்மை உண்மை.....என் கணவர் ரொம்பவே புலம்புவார்!!! செயல்திட்ட அடிப்படையில் இல்லாமல், அப்டுடேட்டாக இல்லாமல் அங்கும் ஸ்பூன் ஃபீடிங்க், ப்ராஜெக்ட் ரூபாய் கொடுத்து செய்து வாங்குவது, இன்றைய தேவைக்கு ஏற்ப கல்வி இல்லாமல், பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருத்தல் என்று...பள்ளியிலும் அப்படித்தானே சார்....

    இதோ அடுத்தது வாசித்துவிட்டு வருகிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  15. தனியார் கல்லூரிகளில் பல, அரசியல்வாதிகளின் பொறுப்பில் இருப்பதால் அரசியல்ரீதியான செல்வாக்கைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் கல்விக்கடன் தரப்படும் நிலைமை உருவாகியுள்ளது. தன்னால் என்ஜினீயரிங் படிப்பு படிக்கமுடியுமா என்ற தெளிவோ, சுயபரிசோதனையோ இல்லாத மாணவன், மற்ற மாணவர்களைப் பார்த்து அதே மந்தையுணர்வில் தானும் என்ஜினீயரிங் வகுப்பில் சேர்ந்துவிடுகிறான். சேர்ந்த நாளில் இருந்தே தோல்வி மனப்பான்மைக்கு ஆளாகிறான். குறைந்த பட்ச ஆங்கிலமோ, குறைந்தபட்ச கணித அறிவோ இல்லாமல் அவனால் எப்படி தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்?// சார் இதைத்தான் நான் பார்க்கும் மாணவர்கள் பலரிடமும் சொல்லிவருவது. உன்னால் படிக்க முடியுமென்றால் உன்னை சுய பரிசோதனை செய்து கொண்டு சேர் உனக்கு எது படிக்க முடியும் என்று பார்த்து அந்தப் படிப்பைத் தேர்ந்தெடு என்று சொல்லிவருவது. இப்போது கூட எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் பாவம் மூத்த பையன் எஞ்சினீயரிங்க் முடித்துவிட்டு ஆனால் வேலை இல்லாமல்...இருக்கிறான். அதற்கு முதற்காரணம் அவன் தன்னை முன்னேற்றிக் கொள்ள முயற்சி செய்யாதது. டிகிரி வாங்கிவிட்டால் வேலை கிடைத்துவிடும் என்று நினைப்பது. டிகிரி அல்ல...தன் அறிவுதான் வேலை பெற்றுத் தரும் என்று நினைக்க்காதது. சார் எத்தனை மாணவர்கள் கல்லூரியில் லைப்ரரி ஒன்று இருந்தால்...அதில் நேரம் செலவழிக்கிறார்கள்? தன் பாட சம்பந்தமான துறையில் தற்போதைய முன்னேற்றம் என்ன நடந்திருக்கிறது, பாடத்தின் அடிப்படைத் தகவகள் என்ன என்று அறிய முயற்சி செய்கிறார்களா? எனக்குத் தெரிந்து பெரும்பான்மையான மாணவர்கள் இல்லை எனலாம். வெரும் புக்கிஷ் நாலெட்ஜ் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் தான். அதனை ப்ராக்டிக்கலாக அப்ளை செய்து பார்க்க வேண்டும் என்ற உந்துதல் இல்லாமல் பலரும் இருக்கின்றனர். இப்போது வேலை இல்லாமல் இருக்கிறான் என்று நான் சொன்ன பையன் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறான். நான் சொன்னேன் அண்ணா செண்டினரி லைப்ரரி இருக்கிறது அங்கு சென்று வேலை வாய்ப்புகளுக்கான இதழ்களைப் பார்....முயற்சி செய் என்று. ஆனால் அவனோ என் அப்பா அவருக்குத் தெரிஞ்சவர்ட்ட சொல்லியிருக்கிறார் என்கிறான் என்ன சொல்ல சார். இப்படித்தான் இருக்கிறது நிலை....

    கீதா

    பதிலளிநீக்கு
  16. உங்கள் கருத்துகள் அனைத்தும் ஏற்கக் கூடியவையே. தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னிலையில் வர வேண்டும் என்றால் நீங்கள் சொல்லியிருப்பது போல் நடந்தால் மட்டுமெ சாத்தியம். இல்லை என்றால் சும்மா கூக்குரல் போட்டுக் கொண்டு நம்மை நாமே தாழ்த்திக் கொண்டுதான் இருப்போம்....ஆந்திரா உதாரணம் ஆம் மிகவும் சரியே...அது போன்று வட இந்திய மாணவர்களும்....இதற்காகவே தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்கிற்னர்...

    பெற்றோர் மாற வேண்டும்....

    அருமையான பதிவு சார்! இதில் நிறைய இருக்கு இன்னும் பேச....

    கீதா

    பதிலளிநீக்கு
  17. muyarchiyum payirchiyum mukkiya ena nirubithu vitaargal. vaazththukaL. pakirvukku nandri :)

    பதிலளிநீக்கு
  18. மிகவும் ஏற்புடைய பதிவு. இன்றைய சூழலில் பிள்ளைகள் தங்கள் ப்ளஸ்-2 பருவத்தில் அவர்களின் எதிர்காலம் பற்றிய முடிவை தன்னிச்சையாக எடுக்கும் அளவுக்கு அவர்களை சுதந்திர சிந்தனையோடு இயங்க நாம் அனுமதித்திருக்கிறோமா என்னும் தங்கள் கேள்வி சிந்திக்கவைக்கிறது. பெற்றோர் தம் எல்லையை உணரவேண்டும். பிள்ளைகளை சுயசிந்தனையுடையவர்களாய்.. சுயசார்புடையவர்களாய் வளர்த்தெடுப்பது பெற்றோரின் கடமை என்பதை உணரவேண்டும் என்பதை உணர்த்தும் நல்லதொரு பதிவு.

    பதிலளிநீக்கு
  19. //கடந்த ஐந்து ஆண்டுகளில் என்ஜினீயரிங் படித்து இறுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்களில் சுமார் எழுபத்தைந்து சதம் பேருக்கு இன்றும் உரிய வேலை கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை நிலை

    இதற்கு ஆதாரம் உள்ளதா? இது உண்மை நிலையெனில் பரிதாபம்.

    பதிலளிநீக்கு
  20. செல்லப்பா சார்... உங்களை ரொம்ப நாளாக் காணோமே....

    பதிலளிநீக்கு