புதன், செப்டம்பர் 18, 2019

வளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி


வளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப்  பகுதி
(வாத்தியார் கதைகள்-2 -தொடர்ச்சி)

(முன்னுரை: சென்னை வந்து சேர்ந்தவுடன் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் குறைந்தது பதினைந்து நாளைக்காவது ஒளித்திரையைப் பார்க்க வேண்டாமென்று மருத்துவர்கள் அறிவுரைத்ததால், வலைப்பதிவை உடனே எழுத முடியவில்லை. தாமதத்திற்கு வாசகர்கள் மன்னிக்கவும்.)

அடுத்த சில நாட்களில் இரண்டு பில்டிங் கமிட்டி ஆட்களும் சென்னை சென்று விட்டனர். அதன் விளைவாக எனக்கு அன்றாட சாப்பாட்டு பிரச்சினை ஆரம்பித்து விட்டது. சொரகொளத்தூரில் இருந்தபோது அய்யாக்கண்ணு என்ற ஓவிய ஆசிரியரும் குபேந்திரன் என்ற வந்தவாசியைச் சேர்ந்த ஆசிரியரும் எனக்கு ஓரளவுக்கு சமையற்கலையைக் கற்றுத் தந்திருந்தார்கள். அது இப்போது உதவிக்கு வந்தது.

குண்ட்டூர் நகரம் குண்டு மிளகாய்க்குப் பெயர்போனது!

ஒருநாள் மாலை திடீரென்று மூத்த அரசியல் தலைவர் ஒருவர் மரணமடைந்ததால் மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆகவே  நானும் என்னைப்போலவே தனியராக இருந்த இன்னொரு ஆசிரியரும் (குமார்) ஆரணிக்குச் சென்று இரவு படம் பார்த்துவிட்டு (பெயர் ஞாபகம் இல்லை - மலையாளப்  படம் அல்ல!) அங்கேயே  அவரது நண்பர் வீட்டில் தங்கி விட்டு மறுநாள் மாலை ஊர் திரும்புவதென்று தீர்மானித்தோம். வறுத்த வேர்க்கடலையைக் கொறித்தவாறே கூட்டுரோடு வரை நடந்துசென்று பஸ் ஏறுவது என்று ஏற்பாடு.

அறைக்கதவை நான் பூட்டும்போது அந்த வளைக்கரம் வேகமாக ஓடி வந்தது. அப்போதுதான் அவளை முழுமையாகப் பார்த்தேன். நன்றாக வளர்ந்த பெண். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் இடைநின்றுவிட்ட பெண்ணாக இருக்கலாம். இரண்டு மூன்று பெரிய பைகள் அவளிடம் இருந்தன. 3 ஹார்லிக்ஸ் பாட்டில்கள் அவற்றில் இருந்தன. கடையில் இருந்து வாங்கி வர வேண்டிய  சாமான்கள் பட்டியல் அடங்கிய ஒரு துண்டுச் சீட்டும்  இருந்தது.

குண்டு மிளகாய் 1 கிலோ
தணியா அரை கிலோ
அரப்புத்தூள் அரை கிலோ
ந.எண்ணை 1 லிட்டர்
க.எண்ணை 1 லிட்டர்
தே.எண்ணை கால் லிட்டர்

இதெல்லாம் வாங்கி வர வேண்டுமாம். பெரியநாயகி அம்மா அனுப்பினார்களாம்.

குமாரை  ஏறிட்டுப் பார்த்தேன். நாம் வாத்தியார் வேலைக்கு வந்தோமா, அல்லது கடைகண்ணிக்குப் போய்,  வீட்டுச் சாமான்கள் வாங்கி வரும் வேலைக்கு வந்தோமா என்று கண்களாலேயே கேட்டேன். அவரும் கண்களாலேயே பேசாமல் இருங்கள் என்றார். வளைக்கரத்தை நோக்கி "சரி வாங்கி வருகிறோம் என்று அம்மாவிடம் சொல்லி விடு" என்றார். வளைக்கரம் பதில் சொல்லாமல் ஓடிப் போய்விட்டது.

குமாரைக்  கேள்விகளால் துளைத்தேன். "இந்த ஊரில் இது தான் வழக்கம்" என்றார் அவர். அந்த அம்மா ரொம்ப நல்லவராம். முக்கிய நாட்களில் அவர் வீட்டில் இருந்து எல்லா ஆசிரியர்களுக்கும் பலகாரங்கள் வருமாம். அதனால் யார் ஆரணிக்குப் போனாலும் அவர்களிடம் இந்த மாதிரி பைகளும் பாட்டில்களும் துண்டு சீட்டும் அவ்வப்போது தரப்படுமாம். யாரும் மறுக்க மாட்டார்களாம். மறுக்கவும் முடியாதாம்.

நியூ ஜெர்சியில் என் மகள் வீட்டுத் தொட்டியில் விளைந்த குடைமிளகாய்

"இந்த விஷயத்தில் உங்களுக்கு அனுபவம் அதிகம் போல" என்றேன். "இல்லை இல்லை, அந்த அம்மா என்னைப் போல பழைய ஆசிரியர்களை நம்புவதில்லை. இளமையான புதிய ஆசிரியர்களை நம்பித்தான் வேலை கொடுப்பார்கள்" என்று சிரித்தார் குமார்.

பணத்தைக் கொடுக்காமல் பொருளை மட்டும் வாங்கி வரச் சொன்னால் எப்படி என்று கேட்டேன். "கவலைப்படாதீர்கள், மாதம் ஒருமுறை கணக்குத் தீர்த்து விடுவார்கள்" என்று மீண்டும் சிரித்தார் குமார்.
***
விடுமுறை நாளானதால்  ஆரணி நகரை  முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு என் அறைக்குத் திரும்பியபோது மாலை ஆறுமணி ஆகிவிட்டது. கூட வந்த குமார் ஆரணியில் தங்கிவிட்டார். மறுநாள் காலை நேரடியாகப்  பள்ளிக்கு வந்து விடுவார்.

நான் வருவதை எதிர்பார்த்து ஒரு பெரிய கூட்டமே என் அறை வாசலில் காத்திருந்தது. வளைக்கரம் ஓடிவந்து கையில் இருந்த பைகளைப் பிடுங்கிக் கொண்டு ஓடியது. "ஏன் சார் இவ்வளவு லேட் பண்ணி விட்டீர்கள்? இராத்திரியே  வந்து விடுவீர்கள் என்று தானே உங்களிடம் குண்டு மிளகாய் வாங்கி வரச் சொன்னார்கள்? காலையில் வெயிலில் காயவைத்து மிளகாய்ப்பொடி அரைக்க வேண்டாமா? உங்களால் எனக்குக் கெட்ட பெயர் ஆகிவிட்டது" என்று கூறியபடியே ஓடினாள்.

கூட்டத்தில் இருந்த ஒரு பெரியம்மா, "சார் புதுசு. அதான் விஷயம் தெரியல. முன்னாடி இருந்த வாத்தியார்கள் எல்லாம் பெரியநாயகி அம்மா என்றால் பார்த்ததுமே நடுங்கிப் போவார்கள். சார்  எதற்கும் அந்த அம்மா கிட்ட போய்  இப்பவே சமாதானம் சொல்லிவிடுவது நல்லது. இல்லைன்னா நாளைக்கு ஹெட் மாஸ்டர் வந்தால் பெரிய பிரச்சனையாகிவிடும், இல்லடி அஞ்சலை?" என்றார். கூட இருந்த ஏழெட்டு அஞ்சலைகள்  ஆமாம் என்று  தலையாட்டினார்கள்.

இப்படி ஒரு விசித்திரமான ஊரை நான் பார்த்ததில்லை. தாட்சண்யத்திற்காக என் கைக்காசைப்  போட்டு மளிகை சாமான்களை வாங்கி வந்திருக்கிறேன். அதற்குப் பணம் எப்போது வருமோ தெரியாது. இந்த இலட்சணத்தில் அந்த அம்மையாரிடம் நான் போய் மன்னிப்புக் கேட்க வேண்டுமாம்!

நான் பதில் பேசாமல் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டேன். அதைச்  சற்றும் எதிர்பார்க்காத அப்பெண்கள் ஆச்சரியத்தோடு சிறிது நேரம் குசுகுசுவென்று தங்களுக்குள் பேசிவிட்டுப்  பின்  கலைந்து போனார்கள்.
****
காலை ஏழு மணிக்கே என் அறைக்கு வந்துவிட்டார் பியூன் பஞ்சாட்சரம். வரும்போதே இரண்டு கண்ணாடி கிளாஸ்களில் தேநீர் வாங்கி வந்திருந்தார். எனக்கு ஒன்று அவருக்கு ஒன்று.

"சார், அந்த அம்மா கிட்ட கொஞ்சம்  ஜாக்கிரதையா இருக்கணும். நேத்து மளிகை சாமான் வாங்கி வர ரொம்ப லேட் பண்ணிட்டீங்களாமே! தெரிந்தால் ஹெட்மாஸ்டர்  ரொம்ப கோவித்துக் கொள்வார்!" என்றார் பஞ்சாட்சரம்.

எனக்கு வந்த கோபத்தில் தேநீரைக் குடித்துவிட்டு கண்ணாடி கிளாசைத் தூக்கி வீதியில் எறிந்தேன். அது எந்த ஓசையும் எழுப்பாமல் ஒரு முட்புதரில் போய் உட்கார்ந்து கொண்டது என் ஆத்திரத்தை மேலும் அதிகப்படுத்தியது.

"பஞ்சாட்சரம், என்ன மாதிரியான ஊர் ஐயா இது! வாத்தியார்களை மளிகை சாமான் வாங்கிவரும் எடுபிடிகளாக நடத்துகிறார்கள். நீங்களும் அந்தப் பொம்பளையை பூதம் பிசாசு ரேஞ்சுக்கு பில்ட்-அப் கொடுக்கிறீர்கள்! முதலில் போய்  மளிகை சாமான்களுக்கு 40 ரூபாய்  ஆயிற்று, அதை வாங்கி வாருங்கள்" என்று சற்றே குரல் எடுத்துப் பேசினேன்.

பஞ்சாட்சரம் சிரித்தார். "பூதம் பிசாசு என்றால் சமாளித்துவிடலாம் சார், இது அதற்கும் மேலே" என்றார். "நம்ம ஹெட்மாஸ்டருக்கு இது ரெண்டாவது சம்சாரம்" என்றார்.

எனக்குப்  பகீரென்றது. அப்படியானால் என்னுடைய நாற்பது ரூபாய் திரும்பி வரப்போவதில்லை என்று எண்ணிக் கொண்டேன். (அது பெரிய தொகை! அப்போது பட்டதாரி ஆசிரியர்களின் மாதச் சம்பளம் ரூ.180க்கும் குறைவுதான்.)

"பஞ்சாட்சரம், மாணவர்களுக்குப் பாடம் சொல்வதுதான் என்னுடைய வேலை. யாருக்கும் மளிகை சாமான் வாங்கி வருவது அல்ல. ஆகவே என் மீது எந்தத்  தவறும் கிடையாது. அந்த ஹெட்மாஸ்டர் ஏதாவது சொன்னால் என்ன நடக்கப்போகிறது என்று பாருங்கள்" என்று கோபமாகக்  கூறிவிட்டு, குளிப்பதற்குக் கிணற்றடிக்குப் போனேன்.
****
வேண்டுமென்றே ஐந்து நிமிடம் லேட்டாகப் பள்ளிக்குள்  நுழைந்தேன். என்ன ஆச்சரியம்! ஹெட்மாஸ்டர் அறையில் சற்றே பருமனான ஒரு பெண் மந்தகாசப் புன்னகையுடன் அமர்ந்திருந்தார்.

என்னைப் பார்த்தவுடன் ஹெட்மாஸ்டர் "சபாஷ் யாராலும் சாதிக்க முடியாததை சாதித்து விட்டீர்களே!" என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது அப் பெண்மணி என்னைப் பார்த்து, "ஆமாம் தம்பி, இதுவரை எத்தனையோ வாத்தியார்களை குண்டு மிளகாய் வாங்கிவரச் சொல்லியிருக்கிறேன். உங்களை மாதிரி நல்லா பதமா, சூப்பரான ஐட்டமாய்ப் பார்த்து யாரும் வாங்கிக்கொண்டு வந்ததில்லை. அதான் நேரில் பாராட்டலாம்னு  வந்தேன்" என்றார். ஓஹோ இதுதான் ஹெட் மாஸ்டரின்  இரண்டாவதோ?

இதுதான் சாக்கு என்று ஹெட் மாஸ்டர் அவளைப் பார்த்து, "மழைக்காலம் வருவதற்குள் என்னென்ன மளிகை சாமான் வேண்டுமோ, சாரை அனுப்பி வாங்கிக்கொண்டு விடு. வேணுமானால் அவர் ஒருநாள் லீவு எடுத்துக் கொள்ளட்டும். அப்புறம் என்னை குறை சொல்லக்கூடாது. சரி, நீ வீட்டுக்குப் போகலாம்" என்று அவளை வழியனுப்பினார்.

என்னுடைய நாற்பது ரூபாய் பற்றி இருவரும் பேசக் காணோம். ஆகவே  நானே வாய்திறந்து அந்த அம்மையாரிடம் "40 ரூபாய்?" என்றேன்.  உடனே அவர் "கவலைப்படாதீங்க, ஹெட்மாஸ்டர் உங்க பேர்ல ஒரு கணக்கு ஆரம்பிச்சுருவாரு. மாசம் பொறந்தா கேட்டு வாங்கிடுங்க. சமயத்தில் அவர் மறந்தாலும் மறந்துடுவார்" என்று காற்றில் யாரிடமோ சொல்வதுபோல் சொல்லிக்கொண்டே நடையைக்கட்டினார்.

ஹெட்மாஸ்டர் அதைக் கவனிக்காதது போல் பதினொன்றாம் வகுப்பிற்கு ஆங்கிலப் பாடம் எடுக்கக் கிளம்பிவிட்டார்.

***
என்னுடைய 40 ரூபாய் போனது போனதுதான்! எப்படி என்கிறீர்களா?

அடுத்த சில நாட்களில் நான் ஏற்கனவே விண்ணப்பித்திருந்த (எம்.எஸ்.சி கணிதம்) பட்ட மேற்படிப்பிற்கு சேலம் அரசு கலைக் கல்லூரியில் எனக்கு இடம் அளித்திருப்பதாக அரசாணை வந்தது. அன்று ஹெட்மாஸ்டர் ஊரில் இல்லை. மேற்படிப்புக்காக வேலையை ராஜினாமா செய்வதாகக் கடிதம் எழுதி அவர் மேசையில் வைத்து, அது பறக்காமல் இருப்பதற்காக வருகைப் பதிவேட்டை  அதன்மீது வைத்து, பஞ்சாட்சரத்திடம் விவரத்தைச் சொல்லிவிட்டு, இரவோடு இரவாக அறையைக் காலி செய்துவிட்டுக் கிளம்பினேன்.

அதன் பிறகு அம்மையாருக்கு எந்த ஆசிரியர் தன் சொந்தக் காசில் குண்டு மிளகாய் வாங்கிக்கொடுத்தாரோ தெரியாது. அதேபோல் பில்டிங் கமிட்டியாரும், வளைக்கரமும் என்ன ஆனதென்றும் எனக்குத் தெரியாது. 
****
© இராய செல்லப்பா

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

வளைக்கரங்களும் வாத்தியாரும்- முதல் பகுதி (வாத்தியார் கதைகள்-2)


வளைக்கரங்களும் வாத்தியாரும் - முதல் பகுதி
(வாத்தியார் கதைகள்-2)

மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் இருந்து வெளிவந்த முதல்  பி.எஸ்சி. (கணிதம்) வகுப்பைச்  சேர்ந்தவன் நான். (1967-70). எதிர்பார்த்தபடியே நல்ல மதிப்பெண்: டி பிளஸ் (D Plus) கிடைத்தது. அதாவது 85 முதல் 99 க்குள் ஏதோ ஒரு மதிப்பெண் என்று அர்த்தம்.  தேர்ச்சி பெற்றவுடன் அப்போதைய உலக வழக்கப்படி வேலூரில் இருந்த எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் வேலை வேண்டும் என்று பதிவுசெய்துகொண்டேன். வரிசையில் நின்றதில் இரண்டு தேநீர், ஒரு ஆனியன் சமோசா, ஒரு தினமணி மற்றும் நான்குமணி நேரம் ஆகியவை செலவழிந்தது இன்னும் நினைவிருக்கிறது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தலைமை அதிகாரி அப்போது விடுப்பில் இருந்ததால், இராணிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், மாவட்டக்கல்வி அலுவலருமான, பச்சை இங்க்கில் கையெழுத்துப் போடும் அந்தஸ்து பெற்றிருந்த  ஒருவர் அப்போது ‘ஆக்டிங்’ கில் இருந்தார். பதினைந்தாவது  நாளே எனக்கு 10-ஏ-1 விதிப்படி அவர்மூலம் பணி உத்தரவு கிடைத்தது.  போளூருக்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் நெடுஞ்சாலையில் இருந்து ஆறு கிலோமீட்டர் நடந்துசென்றுதான் அடைய வேண்டியிருந்த ‘சொரகொளத்தூர்’ என்ற ஊரில் இருந்த  உயர்நிலைப்பள்ளிக்குப் பட்டதாரி ஆசிரியராக நியமனம். அந்த வேலை, அந்தப் பள்ளி ஆண்டின் பள்ளி இறுதி வேலைநாள் வரை நீடித்தது. பிறகு ஊஸ்ட் (oust) செய்துவிட்டார்கள். (அதைப் பற்றியும் அவ்வூரில் எனக்கு ஏற்பட்ட மர்மக் கதைகளை விஞ்சக்கூடிய விசித்திரமான பல அனுபவங்களையும்  என் ‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’ நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன்.)
இதுபோலத்தான் அந்தப் பள்ளியும் இருந்திருக்கலாம்! 
மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் 10-ஏ-1 ஆசிரியர்களுக்குச் சம்பளம் தராமல் அரசுக்குப் பணத்தை  மிச்சப்படுத்தும் விதமாக  இப்படிச் செய்தார்கள். அடுத்த கல்வியாண்டில் அவர்களுக்கு ஆசிரியர்கள் தேவைப்படுமானால் மீண்டும் பதிவு செய்யாமலேயே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பணி நியமன உத்தரவு கிடைக்கும். (“மகாத்மா காந்தி என்று ஒருவர் இருந்ததையே எதிர்காலத்தில் யாரும் நம்பமுடியாமல் போகலாம்” என்று ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் சொன்னமாதிரி, ஒற்றை  பைசா  கொடுக்காமல் இப்படியெல்லாம் நடக்கும்  என்று யாராவது இன்று நம்புவார்களா?) அப்படித்தான் எனக்கும் வளையாத்தூர் என்ற ஊரில் இருந்த உயர்நிலைப்பள்ளிக்கு ஆசிரியராகப் பணி நியமனம் தபாலில் வந்துசேர்ந்தது.

அந்தக்  கதைதான் இனிவருவது.

****
ஆரணியில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது வளையாத்தூர் என்ற விவசாய கிராமம். நான் பதவி(?!) ஏற்பதற்குச் சென்ற முதல்நாளில் வளையாத்தூர் கூட்ரோடு என்ற இடத்தில் பஸ்சிலிருந்து இறங்கி சுமார் பதினைந்து நிமிடம் நடந்த பிறகுதான் பள்ளியை அடைய முடிந்தது. ஊருக்குள் பஸ்  வாராத காலம்.

வழியில் காக்கி அரை நிஜாரும் வெள்ளை மேல்சட்டையும் அணிந்த சில மாணவ மாணவியர் சைக்கிளிலும், நடந்தும், பள்ளியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். ஒருவருக்காவது என்னைப் பார்த்தால் தங்கள் பள்ளிக்கு வரப்போகும் ஆசிரியர் என்ற  கற்பனை கூடத் தோன்றவில்லை என்பதை எண்ணியபோது என் எதிர்காலமே  இருண்டுபோய்விடும்  போல் தோன்றியது. நானாகப் போய் அவர்களிடம் அறிமுகம் செய்துகொண்டால்  ‘சீப்பாக’ இருக்குமென்பதால் மௌனமாகவே நடந்தேன்.

பள்ளிக்கு மிக அருகில் வந்ததும், அந்த மாணவச் செல்வங்களில் பலர், உடனே பள்ளிக்குள்  நுழையாமல், தங்கள் புத்தகப் பைகளை மற்ற நண்பர்களிடம் கொடுத்துவிட்டு,  பள்ளியின் பின்புறமாக ஓடுவதைக் கண்டேன். சுமைகளைப்  பெற்றுக்கொண்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்குள் நுழைந்தார்கள். 
****
மணி அடிப்பதற்கு இன்னும் பத்து நிமிடம் இருந்தது. தலைமை ஆசிரியர் எனக்கு முன்பே வந்திருந்தார். அப்போதுதான் அறிமுகமாகியிருந்த மோட்டார் வைத்த சைக்கிள் அவரிடம் இருந்ததால், ஆரணியில் இருந்தே அதில் வந்துவிடுவாராம். பள்ளிக் கட்டிடம் பழையதாக இருந்ததால் புதிய இடத்தில் விரிவுபடுத்திக் கட்டுவதற்கு ஊர் மக்களைக்  கொண்ட  பில்டிங் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டதாம். ஊரில் இருந்த இரண்டு பெரிய மனிதர்களில்  ஒருவர் ஆரம்பத்தில் விவரம் புரியாதவராக இருந்ததால், கூட்டத்திற்கு வராமல் அலட்சியமாக இருந்துவிட்டதால், இரண்டாவது பெரிய மனிதரைக் கமிட்டியின் தலைவராகப் போட்டுவிட்டார்களாம். அப்படி வராமல் இருந்தவர், ‘காளி,  என்று பேசினாள்,  இன்று பேச?’ என்ற வகையறாவைச் சேர்ந்தவராம். விஷயம் தெரிந்து மேலிடத்தில் அவருக்குக்  குட்டு விழுந்ததாம். உடனே அவர் பொங்கியெழுந்து போட்டியாக ஒரு பில்டிங் கமிட்டியை உண்டாக்கி விட்டாராம். “ஒவ்வொரு நாளும் இந்த இரண்டுபேரும் வந்து உட்கார்ந்துகொண்டு என் தலையைத் தின்கிறார்கள்” என்றார் தலைமை ஆசிரியர். ஆனால் அவர் தலையின் முன்புறம் இருந்த வழுக்கைக்கு  வேறு காரணங்களும் இருக்கலாம்..

“ஆகவே இந்த இரண்டுபேரின் பக்கமும் சாயாமல் முள்ளின்மீது நடப்பதுபோல் நீங்கள் நடக்கவேண்டும்” என்றார். “எதற்காகச் சொல்கிறேன் என்றால், நான் பள்ளிக்கு வராத நாட்களில் எனக்கு அடுத்தபடியாக இருக்கப்போவது பட்டதாரி ஆசிரியரான நீங்கள்தான். மற்றவர்கள் எல்லாருமே செகண்டரி கிரேடுதான். ஆகவே தான் உங்களை வசப்படுத்தப் பார்ப்பார்கள். இல்லையென்றால் மிரட்டவும் செய்வார்கள். அதற்கெல்லாம் பயந்துவிடக்கூடாது” என்றார். முதல்நாளே எவ்வளவு அற்புதமான அறிமுகம் பாருங்கள்!

"இந்த வருடத்தின் முதலாவது பில்டிங் கமிட்டி கூட்டம் செப்டம்பர் முதல் வாரத்தில் ஏற்பாடு செய்திருக்கிறது. அன்று மாவட்ட கல்வி அதிகாரியையும்  வரச்சொல்லி அழைத்திருக்கிறேன். அதுவரை நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும். சரி நீங்கள் வகுப்புக்கு போகலாம்" என்று என்னைக் கிளப்பினார் தலைமையாசிரியர்.

அசெம்பிளியில் என்னை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தினார். பிறகு மூத்த ஆசிரியர் ஒருவரைக் கூப்பிட்டு எனக்கு
உரிய வகுப்புகளைப் பட்டியல் இட்டு தரச்சொன்னார்.

ஒன்பதாம் வகுப்பிற்கு  ஆங்கிலம் எடுப்பதுதான்  என்னுடைய முதல் வகுப்பு. சென்ற ஆண்டு எடுத்த அதே புத்தகம், அதே சிலபஸ் என்பதால் தயக்கமில்லாமல் பாடம் படித்தேன். 30 மாணவர்கள். பார்ப்பதற்கு நல்ல மாதிரியாகத் தான் தெரிந்தார்கள். ஆனால் பாடத்தை கவனிக்காமல் யானையைப் பார்த்த எல்கேஜி மாணவன் மாதிரி என்னைப் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது தெரிந்தது. திடீரென்று ஐந்து  மாணவர்கள்  வகுப்பிற்குள் நுழைந்தார்கள். ஆசிரியரின் அனுமதி கேட்கவேண்டும் என்று கூட அவர்களுக்குத் தெரியவில்லை. ஒவ்வொருவர் கையிலும் அப்போதுதான் வயலில் இருந்து பிடுங்கிய முற்றிய வேர்க்கடலைச்  செடிகள் இருந்தன.  நீரில் கழுவி ஈரம் சொட்டச் சொட்டக் கொண்டு வந்திருந்தார்கள். அதிலிருந்து கடலைக்காய்களைப் பிடுங்கி வகுப்பிலிருந்த எல்லா மாணவர்களுக்கும் சமமாகப் பங்கிட்டார்கள். சிலவற்றை என் மேஜையிலும் வைத்துவிட்டு என்னிடம் நன்றியுணர்ச்சியை எதிர்பார்ப்பது போல் நின்றார்கள். ஆம், இவர்கள்தான் காலையில் பள்ளிக்குள் நுழையாமல் பின்புறம்  ஓடியவர்கள்!

முதல்நாளே அவர்களைக் கண்டிக்க வேண்டாம் என்று கண்களால் சற்றே கோபமாகப் பார்த்தேன். அவர்கள் இருக்கையில் அமர்ந்தார்கள். வகுப்பில் திடீரென்று அமைதி நிலவியது. "நாளை முதல் இந்த வேர்க்கடலை பிசினஸ் எல்லாம் வேண்டாம். வகுப்பிற்கு யாரும் லேட்டாக வரக்கூடாது" என்று உறுதியாகச் சொன்னேன். அதற்குள் இரண்டாம் வகுப்பிற்கான மணி அடித்தது. வெளியே வந்தேன்.
***
பள்ளி விட்டதும் உள்ளூர் ஆசிரியர் ஒருவரோடு கிளம்பினேன். தங்குவதற்கு வீடு பார்க்க வேண்டுமே! நல்லவேளையாகச் சென்றவருடம் என்னைப்போலவே தற்காலிகப் பணியில் சேர்ந்திருந்த ஆசிரியர் ஒருவர் விட்டு விட்டு போன வீடு இன்னும் காலியாகவே இருந்தது. மாதம் இருபது ரூபாய் என்றார்கள். சரி என்று அதை எடுத்துக்கொண்டேன்.
  
அதை வீடு என்று சொல்வதை விட ஒரு வீட்டின் போர்ஷன் என்றுதான் சொல்ல வேண்டும். ஜன்னல் உடன் இரண்டு அறைகள் இருந்தன. ஒரு மரக் கட்டிலும் மர பீரோவும் இருந்தன. தலைக்கு மேல் பழைய மின்விசிறி ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது. ஒரு டியூப் லைட், ஒரு நாற்பது வாட்ஸ் பல்பு. வெளிப்புறம் இருந்த கிணற்றில் தண்ணீர் சேந்திக் குளிக்க வேண்டும். குடிக்கவும் அதுவே. துணி துவைப்பதற்குக் கருங்கல் ஒன்று பதித்திருந்தார்கள்.     

கையோடு கெரசின் ஸ்டவ் மற்றும் சமையல் பாத்திரங்கள் கொண்டு வந்து இருந்தேன். எனவே இரவு சமைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆரம்பித்தேன். அப்பொழுது கதவருகே வளையல் குலுங்கும் சத்தம் கேட்டது. ஒரு அழகான இளம்பெண் எவர்சில்வர் தட்டில் சாதம், கறி, கூட்டு, கிண்ணத்தில் குழம்பு, கிண்ணத்தில் தயிர் வைத்து மேலே ஒரு பேப்பரைப் போர்த்தி எடுத்து வந்து முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு எதுவும் பேசாமல் தட்டை மட்டும்  நீட்டினாள். இரவு மணி ஏழரை இருக்கும்.

தட்டை வாங்குவதா இல்லையா என்று எனக்குள் ஒரு போராட்டம். அந்தப் பெண் யார் என்று எனக்குத் தெரியாது. சாப்பாடு தருவது பற்றி முன்கூட்டியே தகவலும் இல்லை. வெளிச்சம் குறைவான  இரவு. குழம்பினேன்.

தட்டை வைத்துக் கொண்டிருந்த பெண் மிக மிக மெல்லிய குரலில் 'உஷ்'  என்றாள். இப்பொழுது சற்றே என் பக்கம் திரும்பினாள். "சாருக்கு ரொம்ப தான் பயம் போலிருக்கிறது" என்றாள்.

"யார் நீங்கள்? நான் கேட்காமலே சாப்பாடு கொடுக்கிறீர்கள்? ஏதும் ஓட்டல் நடத்துகிறீர்களா? இதற்கு எவ்வளவு ரூபாய் கொடுக்கவேண்டும்?" என்று தயங்கியபடி கேட்டேன்.

களுக் என்று சிரித்தாள்  அவள். “ஆமாம், இந்த ஊரிலேயே பெரிய ஓட்டல் எங்களுடையதுதான். ஆனால் வாத்தியார்களுக்கு மட்டும்தான் சாப்பாடு கொடுப்போம்” என்று சிரித்தாள். “எவ்வளவு வாத்தியார்கள் சாப்பிட  வருவார்கள் தெரியுமா?”

தெரியாது என்று தலையசைத்தேன்.

மறுபடியும் சிரித்தாள். “ஒரே ஒரு வாத்தியார் தான் போன வருடம் சாப்பிட்டார். இந்த வருடம் நீங்கள் மட்டும்தான் சாப்பிடுவீர்கள் என்று நினைக்கிறேன்! தலைமை ஆசிரியர் அப்படித்தான் சொன்னார்!”

இப்போது சிரிக்கவேண்டிய முறை என்னுடையதாயிற்று. “என்னது, ஒரே ஒரு ஆசாமிக்காக ஓட்டல் நடத்துவீர்களா? கட்டுப்படியுமாகுமா?” என்றேன். அதற்குள் அவள் “சூடு ஆறிவிடும், சீக்கிரம் சாப்பிடுங்கள். அம்மா கோபித்துக்கொள்வார்கள். ரொம்ப நேரம் ஆகிவிட்டது” என்று தட்டை, கட்டில்மீது வைத்துவிட்டு ஓடினாள்.  எட்டிப்பார்த்தேன். அடப்பாவி, இரண்டு பில்டிங் கமிட்டிகளில் இரண்டாவதான கரைவேட்டிக்காரர் வீட்டுக்குள் அவள் நுழைவது தெரிந்தது.

இதைத்தான் ‘வசப்படுத்துவார்கள், எச்சரிக்கையாக இருக்கவேண்டும்’ என்று சொன்னாரா தலைமை ஆசிரியர்?

பசி பிடுங்கித்தின்றது. ஆபத்துக்குப் பாவமில்லை, நாளை மற்ற விஷயங்களை பார்த்துக்கொள்ளலாம் என்று சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தேன்.  சும்மா சொல்லக்கூடாது, அற்புதமான சமையல்!
****
மறுநாள் தலைமை ஆசிரியர் வரவில்லை. அலுவலக வேலையாக வேலூர் சென்றுவிட்டார். நல்லவேளை பில்டிங் கமிட்டி ஆட்கள் யாரும் வரவில்லை. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும் வேர்க்கடலை பக்கம் போகவில்லை.

பகல் உணவு நேரம் வந்தபோது சாப்பிட என் அறைக்குக்  கிளம்பினேன். காலையிலேயே இரண்டு வேளைக்குத் தேவையான உப்புமா செய்துவைத்தேன். தொட்டுக்கொள்ள எலுமிச்சை ஊறுகாய் இருந்தது.  

அதற்குள் “சார், உங்களுக்கு சாப்பாடு!” என்று ஆபீஸ் பியூன் பஞ்சாட்சரம் மூடிய தட்டோடு வந்தார். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று நினைத்துக்கொண்டே, “யார் வீட்டில் செய்தது?” என்றேன். ஒருவேளை இது இன்னொரு பில்டிங்  கமிட்டி ஆசாமியிடமிருந்து வந்திருக்குமோ என்று அஞ்சினேன்.

“இல்லீங்க சார், தலைமை ஆசிரியர் தான் வாங்கித்தரச் சொன்னார். நான்தான் போய் மாரிமுத்து ஓட்டலில் வாங்கிவந்தேன். சுத்த சைவம் சார்!” என்றான். அப்பாடா என்று சாப்பிட்டு முடித்தேன். “நான்கு ரூபாய் சார். இப்போதே கொடுக்கவேண்டும் என்று இல்லை. கணக்கு நோட்டில் எழுதிவிட்டால் சம்பளம் வந்தவுடன் கொடுத்தால் போதும்” என்றார் பஞ்சாட்சரம். “இல்லை, தினமும் கொடுத்துவிடலாம்” என்று அவரிடம் ஐந்து ரூபாய் நோட்டைக் கொடுத்தேன்.
****

இரவு நெருங்கியது. சரி, காலையில் செய்த உப்புமாவை வைத்து சமாளித்துக் கொண்டு விடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு சபலம். ஒருவேளை அந்த வளைக்கரம்  இன்றும் வருமோ?     கதவை லேசாகத் திறந்தே வைத்திருந்தேன்.

கொஞ்சநேரத்தில் காற்று அற்புதமாக வந்தது. பஞ்சாயத்து ரேடியோவில் தென்னையில் ஊடுபயிராக வெற்றிலை பயிரிடுவது பற்றி அழகான தமிழில் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். குடிபோதையில் இருவர் நடந்துகொண்டே தூய தமிழில்  ஒருவர் மற்றவரின் குணாதிசயத்தை விலாவாரியாக வர்ணித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த வளைக்கரம் மட்டும் வரவேயில்லை.

இரவு சுமார் ஒன்பது மணி இருக்கும். கிராமத்தில் எட்டு மணிக்குமேல்  உயிர் ஏது? பாதி உறக்கத்தில் இருந்தேன். யாரோ கதவைத் தட்டினார்கள்.

எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது. அந்த முதலாம் பில்டிங் கமிட்டித் தலைவர்தான் நின்றுகொண்டிருந்தார். கூடவே அவரது ஆட்கள் சிலர்.

“வணக்கம் சார்! இராத்திரியில் எழுப்பறதுக்கு மன்னிக்கணும்” என்றார் தலைவர். “காலையில் திருவண்ணாமலை  போய்ட்டேனுங்க. அதான் உங்களை பள்ளிக்கூடத்துல பாக்க முடியல. எல்லா விஷயமும் தலைமை ஆசிரியர் சொல்லியிருப்பார்னு நெனைக்கிறேன்” என்றார். அவரை உட்காரச் சொல்ல நாற்காலி இல்லை என்பதால், “வாங்க, நடந்துகிட்டே பேசுவோம்” என்று எழுந்தேன்.      

“சார், நீங்க ரொம்ப சின்ன பையன். இந்த ஊர் ஒரு மாதிரி. கொஞ்சம் எக்குத்தப்பா ஆய்ட்டாலும்  காலி பண்ணிடுவாங்க. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணுங்க” என்றார்  அவர்.  அதன் பிறகு என்னைத் தனியாக அழைத்துக்கொண்டுபோய், “சார், அந்த இன்னொரு பில்டிங் கமிட்டி இருக்கானே  அவன் ஆளும்கட்சி. அதனால் ஆடறான். ஆனா இந்த ஊர்ல என் வார்த்தைக்கு ரெண்டாம் வார்த்தை கிடையாதுங்க. அதனால அவன் சாப்பாடு குடுக்கறான்னுட்டு அவன் பக்கம் சாஞ்சிடாதீங்க” என்றார்.

“அய்யய்யோ, நான் யார் கிட்டயும் சாப்பாடு கேக்கலீங்களே” என்றேன் பரிதாபமாக.

“நீங்க கேக்கமாட்டீங்க. ஆனா அவன் அந்தப் பொண்ணுகிட்ட குடுத்து அனுப்புவானே! அந்தப் பொண்ணு ஒரு மாதிரிங்க. பாத்து நடந்துக்கணும். அதனால்தான் இன்னைலேருந்து உங்களுக்கு நம்ம ஊட்டுலேருந்து சாப்பாடு சொல்லியிருக்கேன். இன்னிக்கு கூட பஞ்சாட்சரம் கொண்டுவந்து கொடுத்திருப்பானே!” என்றார்.

நான் பதில் சொல்வதற்குள் அவருடன் இருந்த ஆசாமி ஒருவர் “ஆமாங்க, அவர் கொண்டுபோய்க் கொடுத்தார். சார் விரும்பி சாப்பிட்டார். நான் பார்த்தேன்” என்றான்.

அடப்பாவிகளே! மாரிமுத்து ஓட்டலில் சாப்பாடு வாங்கிவந்ததாக அல்லவா ஐந்துரூபாய் வாங்கிக்கொண்டார் பஞ்சாட்சரம்! இந்த ஊரில் எல்லாருமே எமகாதகர்கள் போலிருக்கிறது!

என்ன பேசுவது என்று தெரியவில்லை. மௌனமாக இருந்தேன்.

தலைவர் பேசினார்: “சார், இனிமே, நீங்க என்னிக்கு இந்த ஊரில் தங்கி இருக்கீங்களோ  அன்னிக்கு காலையில  பஞ்சாட்சரம் கிட்ட சொல்லிடுங்க. ரெண்டுவேளை சாப்பாடு நம்ம ஊட்டுலேருந்து வந்துசேரும். நம்ம ஊருக்கு எவ்வளவோ கஷ்டப்பட்டு பாடம் சொல்லித்தரணும்னு வர்றீங்க. இது கூட நாங்க செய்யலேன்னா எப்படீங்க?” என்றார். உடனே அவருடன் இருந்தவர்கள் “ஆமாம், ஆமாம்” என்று ஒத்து ஓதினார்கள்.

“சரி, ராத்திரி ரொம்ப நேரம் ஆயிட்டது, வரட்டுங்களா?” என்று அவரே விடை பெற்றார். போகும்போது என்னை மறுபடியும் அழைத்து, “அந்தப் பொண்ணு கிட்ட கொஞ்சம் தள்ளியே இருங்க” என்று எச்சரிக்கத் தவறவில்லை.

அன்று இரவு  எனது கனவில் என்ன வந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? தட்டு தட்டாக சாப்பாடுதான்! மாயாபஜார் மாதிரி!

(அடுத்த இதழில் முடியும்)
டைம்ஸ் ஸ்கொயர் - நியூயார்க் - இரண்டு நாள் முன்பு
குறிப்பு: இன்னும் சில மணி நேரத்தில்  நியூயார்க்கில் இருந்து சென்னைக்குத் திரும்பவிருக்கிறேன். ஏர்போர்ட்டுக்குக் கிளம்ப வேண்டும்.  எனவே நேரமின்மையால்  இத்துடன் நிறுத்துகிறேன். மீதிப் பகுதியை செப்டம்பர் 3 அல்லது 4 ஆம் தேதி எழுதட்டுமா? நன்றி!)

© இராய செல்லப்பா