சனி, ஜூன் 24, 2017

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எதிர்காலம் உண்டா?

பதிவு எண் 42/2017
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எதிர்காலம் உண்டா?

ஒருவழியாக NEET தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. முதல் இருபத்தைந்து இடங்களில் தமிழக மாணவர்கள் யாரும் இல்லை என்று புலம்பல்கள் எழுந்துள்ளன. ஏன் முதல் நூறு இடங்களைப் பற்றி யாரும் எழுதவில்லை?

நீட் தேர்வு, CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டதால் தமிழ்நாட்டு மாணவர்கள் பெருமளவு வெற்றிபெற முடியவில்லை என்பது தெளிவு. ஆனால் இம்மாதிரி வாதங்கள் அனுதாபங்களைப் பெற்றுத்தருமே  அல்லாது  மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது என்பதும் தெளிவே.

தமிழ்நாட்டில் எஞ்சினியரிங் படிப்பின் தரம்  ஆண்டுக்காண்டு தாழ்ந்துவருவதை நாம் கண்கூடாகக் கண்டுவருகிறோம். இதில் பல தனியார் கல்லூரிகள் திட்டமிட்டு ஈடுபடும் சதித்திட்டமே, ‘கேம்பஸ் ரெக்ரூட்மெண்ட்’ என்று போலியாக ஒன்றை நடத்திவிட்டு ஒரு சில மாணவர்களுக்கு ‘ஆஃபர் லெட்டர்’ என்று ஆறுபக்க அறிவிப்பை சில கம்பெனிகள் மூலமாக வழங்குவது. இப்படி  ‘ஆஃபர் லெட்டர்’ பெற்ற மாணவர்களில் வெறும் ஐந்துசதவிகித மாணவர்களே கடைசியில் வேலை பெறுகிறார்கள் என்று நம்பிக்கையான தகவல்கள் கூறுகின்றன. ஆனால் சம்பந்தப்பட்ட கல்லூரிகளோ இதையே மார்க்கெட்டிங் உத்தியாகப் பயன்படுத்தி அடுத்தடுத்த ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்திக்கொண்டு விடுகிறார்கள்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால் கடந்த ஐந்து ஆண்டுகளில் என்ஜினீயரிங் படித்து இறுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்களில் சுமார் எழுபத்தைந்து சதம் பேருக்கு இன்றும் உரிய வேலை கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை நிலை.

இப்படி வேலை கிடைக்காதவர்களில் பாதிப்பேர்களாவது, வங்கிகளில் கடன்பெற்று கல்வி கற்றவர்களாக இருக்கலாம். இதெல்லாம் மல்லையா கடன் மாதிரி வாராக்கடன்களே. அல்லது, அந்தந்த மாணவர்களின் பெற்றோர்கள் முன்வந்து செலுத்தினால்தான் உண்டு.

தனியார் கல்லூரிகளில் பல, அரசியல்வாதிகளின் பொறுப்பில் இருப்பதால் அரசியல்ரீதியான செல்வாக்கைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் கல்விக்கடன் தரப்படும் நிலைமை உருவாகியுள்ளது. தன்னால் என்ஜினீயரிங் படிப்பு படிக்கமுடியுமா என்ற தெளிவோ, சுயபரிசோதனையோ இல்லாத மாணவன், மற்ற மாணவர்களைப் பார்த்து அதே மந்தையுணர்வில் தானும் என்ஜினீயரிங் வகுப்பில் சேர்ந்துவிடுகிறான். சேர்ந்த நாளில் இருந்தே தோல்வி மனப்பான்மைக்கு ஆளாகிறான். குறைந்த பட்ச ஆங்கிலமோ, குறைந்தபட்ச கணித அறிவோ இல்லாமல் அவனால் எப்படி தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்?

எனவேதான், அவனை நம்பி லட்சங்களைச் செலவழிக்கும் பெற்றோர்களும், கல்விக்கடன் வழங்கும் வங்கிகளும் நிலைகுலைந்து நிற்கின்றன. இதற்கு யார் அடிப்படை காரணம்?

மூன்று பேர்தான் காரணம்.
1.   பெற்றோர்
2.   பெற்றோர்
3.   பெற்றோர்
ஆம், பெற்றோர் தான் காரணம்!

கீழே உள்ள இரண்டு செய்திகளை நீங்கள் படித்திருக்கலாம்; ஆனால் இன்னொருமுறையும் படிக்கலாம். தவறில்லை.
****
(தமிழ் இந்து - ஜூன் 20, 2017 நாளிதழில் வந்த செய்தி)
வெற்றி முகம்: சுதந்திரமாகப் படித்து ஐ.ஐ.டி.க்குள் நுழைந்தவர்!
-     ஜெ. கு. லிஸ்பன் குமார்

படிப்பில் சிறந்து விளங்கும் பிளஸ் டூ மாணவர்கள் பலரது கனவு, ஐ.ஐ.டி.யில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான். நாடு முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டி.களில் பி.டெக். படிப்பில் உள்ள மொத்த இடங்கள் 11 ஆயிரத்துக்கும் குறைவுதான். ஆனால், இந்த இடங்களுக்கு லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் முட்டிமோதுகிறார்கள். ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு இறுதி ஆண்டு படிக்கும்போதே முன்னணி நிறுவனங்களிலும் பன்னாட்டு கம்பெனிகளிலும் கைநிறையச் சம்பளத்தில் வேலை கிடைத்துவிடுகிறது. அதனால்தான் இந்த அளவுக்குக் கடும் போட்டி.

கனவை நிறைவேற்றும் வழி

தனியார் பயிற்சி மையங்களிலும் மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சில மாணவர்கள் 6-ம் வகுப்பு படிக்கும்போதே ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்குத் தயாராக ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்நிலையில், ஐ.ஐ.டி.யில் நடப்புக் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வின் முடிவுகள் (ஜெ.இ.இ. அட்வான்ஸ்டு) கடந்த வாரம் வெளியானது. ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேர் கலந்துகொண்ட இந்தத் தேர்வில் 50,455 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதில் சென்னை மாணவர் அர்ஜுன் பரத் அகில இந்திய அளவில் 26-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

படம்: தமிழ் இந்துவில் இருந்து

தமிழக அளவில் இவருக்குத்தான் முதலிடம். விஷயம் இதுவல்ல. அர்ஜுன் பரத், பள்ளி சென்று பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கவில்லை. இவர் தேசியத் திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனம் (National Institute of Open Schooling) வழியாகப் படித்தவர். வழக்கமாகப் பள்ளி சென்று படித்த மாணவர்களுடன் போட்டிபோட்டு இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் அர்ஜுன்.

10-ம் வகுப்புவரை தனியார் பள்ளி ஒன்றில் படித்தேன். ஐ.ஐ.டி.யில் சேரும் கனவை நிறைவேற்ற வழி தேடினேன். அதன் நுழைவுத் தேர்வுக்குத் தயாராக நிறைய நேரம் தேவைப்படும். ஆகையால் தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வித் திட்டம் பற்றித் தெரியவந்தது. அதன் பாடத்திட்டத்தில் 75 சதவீதம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம். 2 ஆண்டுகளில் ஒரு புறம் பிளஸ் டூ முடித்துவிடலாம். இன்னொரு புறம் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்கும் தயாராகிவிடலாம் என்று திட்டமிட்டேன். எனது இந்தப் புதிய திட்டத்துக்குப் பெற்றோர் பெரிதும் ஊக்கம் அளித்ததோடு பக்கபலமாகவும் இருந்தனர் என்கிறார் அர்ஜுன்.

அதிக நேரம் கிடைத்தது

அவருடைய தந்தை என்.எஸ். பரத், மெர்ச்சன்ட்ஸ் நேவியில் கேப்டனாகப் பணிபுரிகிறார். தாயார் அமிர்தா, இல்லத்தரசி. வழக்கமான பள்ளியில் படிக்காமல் திறந்தநிலைப் பள்ளித் திட்டத்தில் படித்தபோது, சக மாணவர்களோடு பழகும் வாய்ப்பு போன்ற சமூகத் தொடர்புகளை இழந்தாரா எனக் கேட்டபோது,
நிச்சயம் அது இழப்புதான். இருந்தாலும் நேரடி, செய்முறை உள்ளிட்ட வகுப்புக்குச் செல்லும்போது, என்னைப் போன்று வந்த மாணவர்களுடன் பேசிப் பழக முடிந்தது. தேசிய திறந்தநிலைப் பள்ளித் திட்டத்தில் படித்ததன் காரணமாக எனக்கு ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்குத் தயாராக அதிக நேரம் கிடைத்தது. பள்ளி சென்று படித்திருந்தால் இந்த அளவுக்குக் கூடுதல் நேரம் கிடைத்திருக்காது என்கிறார் அர்ஜுன்.

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்காகத் தயாராகும்போதே நிச்சயம் தேர்ச்சி பெற்றுவிடுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அர்ஜுனுக்கு இருந்தது. ஆனால், அகில இந்திய அளவில் 26-வது இடம் பிடித்துத் தமிழக அளவில் முதல் மாணவராக வருவார் என அவர் எதிர்பார்க்கவில்லை. இனி சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்புகிறார். 26-வது ரேங்க் பெற்றிருப்பதால் அவரது ஆசை எளிதாக நிறைவேறும்.

விருப்பப்படி படிக்கலாம்

அர்ஜுன் பரத்தைச் சாதனை மாணவர் ஆக்கிய தேசியத் திறந்தநிலைப் பள்ளி கல்வி நிறுவனத்தின் சென்னை மண்டல இயக்குநர் பி.ரவி கூறுகையில்,
பொதுவாகவே திறந்தநிலைக் கல்வித் திட்டம் என்றாலே கல்வித் தரம் குறைவாக இருக்கும் என்று பலரும் தவறாக நினைக்கிறார்கள். அதேபோல பள்ளி செல்ல விரும்பாத மாணவர்கள்தான் இதுபோன்று திறந்தநிலைக் கல்வித் திட்டத்தில் சேருவார்கள் என்ற கருத்தும் பரவலாக நிலவுகிறது. தேசியத் திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனம் என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு கல்வி நிறுவனம். தேசியக் கல்வித் திட்டம் -2005 (National Curriculum Framework-2005) வழிகாட்டி நெறிமுறைகளின்படி உருவான பாடத்திட்டம் இங்கே பின்பற்றப்படுகிறது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையானது இது. தரமான கல்வியை விருப்பப்படி படிக்கும் முறைதான் தேசியத் திறந்தநிலைப் பள்ளிக் கல்வி முறை. இதில் மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான பாடங்களை அவர்களே தேர்வுசெய்துகொள்ளலாம் என்கிறார்.

சுதந்திரமான தேர்வு முறை

திறந்தநிலைக் கல்வித் திட்டத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை (ஏப்ரல், அக்டோபர்) பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி மாணவர்கள் தாங்கள் விரும்பும் நேரத்திலும் தேர்வு எழுதும் வசதியும் (On Demand Exam-ODE) உண்டு. பிளஸ் ஒன், பிளஸ் டூ ஆகிய இரண்டு பாடங்களையும் உள்ளடக்கியதுதான் இதில் பிளஸ் டூ பொதுத்தேர்வு.

சுயமாகப் பாடங்களைப் படிக்கக்கூடிய வகையிலான புத்தகங்கள் மாணவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. நேர்முக வகுப்புகளும் நடத்தப்படுகிறது. இதில் அனைத்துப் பாடங்களையும் ஒரே நேரத்தில் எழுத வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு பாடமாகவோ இரண்டு பாடங்களாகவோகூட எழுதிக்கொள்ளலாம். தற்போது ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றுள்ள அர்ஜுன் 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்களிடம் வந்தார். 10-ம் வகுப்புவரை பள்ளி மாணவராக இருந்த அவர், சுதந்திரமாகப் படிக்க விரும்புவதாகச் சொன்னார். தேசியத் திறந்தநிலைக் கல்வித் திட்டம் குறித்து அவரிடம் எடுத்துச்சொன்னோம். நம்பிக்கையோடு சேர்ந்து படித்தார் என்கிறார் ரவி.

தரமான பாடத்திட்டம், விருப்பமான பாடங்களைத் தேர்வுசெய்யும் வாய்ப்பு, விரும்பும் நேரத்தில் தேர்வு எழுதிக்கொள்ளும் வசதி இப்படிப் பல்வேறு வசதிகள் இருந்தும் தேசியத் திறந்தநிலைப் பள்ளிக் கல்வி முறை குறித்துத் தமிழக மாணவர்கள் இடையே போதிய விழிப்புணர்வு இல்லை. தற்போது தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 2,500 முதல் 3 ஆயிரம் பேர் வரைதான் இதில் சேருகிறார்கள்.

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு, அடுத்துப் பொறியியல் படிப்புக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு என்று கல்விச்சூழல் மாறிவரும் நிலையில், தேசியத் திறந்தநிலைப் பள்ளிக் கல்வித் திட்டமானது வருங்காலத்தில் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்று உறுதிபடக் கூறுகிறார் ரவி.
*****
அடுத்த செய்தி நீட் தீர்வைப் பற்றியது. இதுவும் தமிழ் இந்துவில் வெளியானதே. (24 ஜூன் 2017).

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
-பாரதி ஆனந்த்

நீட் தேர்வில், அரசுப் பள்ளியில் பயின்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் வெற்றி பெற்றுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட் தேர்வு ) முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்டது.

நீட் தேர்வில் முதல் 25 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு மாணவ மாணவியும் இடம்பெறவில்லை என்பது வேதனையான விஷயம்தான். ரேங்க் பட்டியலில் இல்லாவிட்டாலும் நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

படம்: தமிழ் இந்துவில் இருந்து

வந்தவாசியைச் சேர்ந்த அன்புபாரதி, நிலாபாரதி சகோதரிகள். வந்தவாசி அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் அன்பு பாரதியும் நிலா பாரதியும் பயின்றனர். நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் அன்பு பாரதி 1165 மதிப்பெண்களும், நிலாபாரதி 1169 மதிபெண்களும் பெற்றனர். இதனையடுத்து அவர்கள் நீட் தேர்வுக்கு ஆயத்தமாகினர்.

நீட் தேர்வை எதிர்கொண்டது குறித்து அவர்கள் 'தி இந்து'விடம் கூறும்போது, "பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடன் ஐந்து நாட்கள் ஓய்வு எடுத்தோம். பின்னர் நீட் தேர்வுக்காக திட்டமிட்டோம். நீட் 2014 தேர்வு வினாத்தாள், எய்ம்ஸ் முந்தைய வினாத்தாள்களை வாங்கி பயிற்சி மேற்கொண்டோம். பள்ளியில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தும் எங்களுக்கு அந்தக் கேள்விகள் புதிதாக இருந்தன. அதனால், சிபிஎஸ்இ 11, 12 வகுப்பு புத்தகங்களை வாங்கிப் படித்தோம்.

அதன் பின்னரே எங்களால் அந்தக் கேள்வித்தாளில் இருந்த வினாக்களுக்கு பதில் அளிக்க முடிந்தது. நீட் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டுமானால் சிபிஎஸ்இ தரத்துக்கு பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும்" என்றனர்.
******
எனது கருத்து:

பள்ளிக் கல்வித் துறையில் மாற்றங்கள் கொண்டுவர நாளாகலாம். அதுவரையில் மாணவர்களின் நலனுக்கு யார் பொறுப்பு? பெற்றோர்கள் மட்டுமே. சலுகைகளைக் கேட்டுப்பெறலாம. அது அரசியல்வாதிகள் செய்யும் வேலை. பெற்றோர்கள் செய்யவேண்டியது, ‘அவையத்து முந்தி இருப்பச் செயல்.’ அதற்கு எல்லாவிதமான போட்டித்தேர்வுகளுக்கும் தயாராக இருக்கும் நிலையில் நமது குழந்தைகளை நாம்தான் தயார்ப்படுத்தவேண்டும். நமது கடமையை நாம் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது.

அதே சமயம், நீட் தேர்வில் அல்லது IIT நுழைவுத்தேர்வில்  வெற்றிபெறாத குழந்தைகளை ஏதோ கொலைக்குற்றம் செய்துவிட்டவர்களைப் போல நாம் பார்க்கவேண்டியதில்லை. போட்டியிடும் மொத்த மாணவர் எண்ணிக்கையில் நூற்றுக்கு ஒருவரே இறுதியில் வெற்றிபெறக்கூடும் என்பது கவனிக்கவேண்டிய விஷயம்.

இந்தவகையில், ஆந்திர மாணவர்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும். IIT அல்லது MEDICAL தான் சேரவேண்டும் என்று மாணவன் விரும்பினால், அதற்காக, ப்ளஸ்-2 முடித்தபிறகு ஒரு வருடம் வேறு வேலைகள் செய்யாமல், வேறு படிப்புகளில் சேராமல், முழுக்க முழுக்க தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டு அதன்பிறகே நுழைவுத்தேர்வை எதிர்க்கொள்கிறார்கள். அதற்குப் பெற்றோர்களும் முழு ஆதரவு அளிக்கிறார்கள். ஆகவேதான் எந்த அனைத்திந்திய நுழைவுத்தேர்வுகளிலும் ஆந்திர மாணவர்கள் மிகுந்த எண்ணிக்கையில் வெற்றிபெறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் இது நடப்பதில்லை. காரணம், இலவசங்களால் வளர்ந்த மாநிலம் இது. உழைப்பின்றி இலவசத்தின் மூலமாகவே எல்லாம் நடந்துவிடவேண்டும் என்று எதிர்பார்க்கும் மாநிலம் இது. அப்படிப்பட்ட மனநிலையில் மக்களைத் தொடர்ந்து நிறுத்திவைத்தால் மட்டுமே தங்களுக்கு வாக்குகள் கிடைக்கும் என்று தமிழக அரசியல்வாதிகள் நம்புகிறார்கள். விளைவு, நமது மாணவர்களை வெற்றிக்கான உழைப்பைத் தொடர்ந்து வழங்கிடும் மனநிலையில் நாம் வைக்கவில்லை. அரசாங்க உத்தரவுகள் மூலம் எப்படியாவது விரும்பிய கல்லூரிகளில் இடம் பெற்றுவிடலாம் என்ற நப்பாசையைத்தான் நாம் உண்டாக்கிவிட்டோம். அதனால் நம் குழந்தைகளின் மன உளைச்சலுக்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் நாமே காரணமாகிவிட்டோம். 

ஸ்டேட் போர்டு-க்குப் பதில் CBSE கொண்டுவந்துவிடலாம். ஆனால் அதிலும் இலவசமும் சலுகைகளும் வேண்டும் என்று அரசியல்வாதிகள் கூக்குரல் எழுப்புவார்கள். அது நின்றால் மட்டுமே தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் பத்திரமாக இருக்கும். இல்லையென்றால், ஆந்திரா மாணவர்கள்தாம் எங்கும் முன்னணியில் இருப்பார்கள்!

இப்போதே தமிழ்நாட்டு வர்த்தக நிறுவனங்களில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பணிபுரிகிறார்கள். எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக் கல்லூரிகளிலும் மருத்துவமனைகளிலும் பிற மாநிலத்தவர்களே பணிகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இதை மாற்றுவதற்கான திறவுகோல் பெற்றோர்களாகிய நம்மிடமே உள்ளது. மாணவனின் இயல்புக்கு ஏற்புடைத்தான கல்விமுறையைத் தேர்ந்தெடுத்து, எப்படிப்பட்ட நுழைவுத்தேர்வுகளையும் எதிர்கொள்ளும் மனவலிமையையும் அறிவுக்கூர்மையையும் அவனுக்கு அமைத்துக்கொடுக்கும் பெரும்பணி நம்முடையது. அரசுடையது அல்ல. 

அதற்கு உதாரணமே இக்கட்டுரையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள ஒரு மாணவனும் இரண்டு மாணவியரும். 

*****