திங்கள், மே 08, 2017

வேண்டும் வேண்டும் முதியோர் இல்லங்கள்


பதிவு எண் 37/ 2017
வேண்டும் வேண்டும் முதியோர் இல்லங்கள் 
   -இராய செல்லப்பா

1 அநாதை இல்லம் வேறு முதியோர் இல்லம் வேறு

புதுக்கவிதைகளின் கொடூரம்
நமது புதுக்கவிதைக்காரர்கள் படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
‘பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு, கடவுளைத் தேடிக் கோவிலுக்குப் போகிறார்கள்..’ என்று ஒரு கவிதை.

‘தாய்க்குப் பின் தாரம் அல்லவா? தாரம் வந்தபிறகு தாய் எதற்கு? தாரத்திற்கு வீடு, தாய்க்கு முதியோர் இல்லம்’ என்பது போல் ஒரு கவிதை.

படம்- நன்றி: இணையம்
தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு மகன் போகிறான். ‘பார்த்துப் போடா கண்ணு.. வேளாவேளைக்குச் சாப்பிடு’ என்கிறாள் தாய். - இப்படி ஒரு கவிதை.

இவர்களுக்கெல்லாம் ஏனோ புரியவில்லை, முதியோர் இல்லம் என்பது வேறு, அநாதை இல்லம் என்பது வேறு என்ற உண்மை.

பெற்ற தாய், தந்தையை வைத்துக்காப்பாற்ற வேண்டிய கடமை குழந்தைகளுக்கு உண்டு. இந்தியாவில் இதற்கென்று  சட்டமும் உண்டு. காப்பாற்றவில்லை என்றால் குழந்தைகள் மீது வழக்கு போட்டு இழப்பீடு பெறவும் அதில் வழியுண்டு. ஆனால், தனக்கு வசதி இருந்தபோதும், அதே ஊரில் பணியில் இருக்கும் போதும், பெற்றவர்களைக் கவனிக்க முடியாமல், மனைவியின் தொந்தரவாலோ, மாமியார், மைத்துனிகளின் மந்திரத்தாலோ, தன்னைப் பெற்றவர்களை அநாதை இல்லத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்த்தால் அதுதான் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. அதைக் குறித்துப் புதுக்கவிஞர்கள் தாராளமாக எழுதட்டும்.

ஆனால், மாதமாதம் பணம் செலுத்தும் வகையில், நல்ல உணவும், உறையுளும், கவனிப்பும் கொண்டதொரு முதியோர் இல்லத்தில் பெற்றோர்களைச் சேர்க்கும் ஒருவனை இகழ்வதற்கு இடம் உண்டா?

2 முதியோர் இல்லம் ஏன் அவசியமாகிறது?

குழந்தை இல்லாதவர்கள்:
குழல் இனிது, யாழ் இனிது என்பர், தம்’ மக்கள் மழலைச்சொல் கேளாதவர் - என்று ‘தம்’மை அழுத்திக் கூறுவார் திருவள்ளுவர். என்னதான் சூப்பர் சிங்கரில் இன்னொரு குழந்தை அற்புதமாகப் பாடினாலும், தான் பெற்ற குழந்தையின் ஸ்வரம் இல்லாத பாடலைத்தானே பெற்றவர்கள் இனிமை என்று கருதுவார்கள்! 

ஆனால் விதியின் விளையாட்டு, சிலருக்குக் குழந்தைகள் பிறப்பதில்லை. பிறந்திருந்தாலும், பெற்றோர்கள் முதுமையடையும் முன்பே இவர்கள் மறைந்துவிடுகிறார்கள். இன்னும் சில பெற்றோர்களுக்கு உடலாலோ, மனதாலோ ஊனமுற்ற குழந்தைகள் இருப்பதுண்டு. தங்கள் முதுமையின் இன்னல்களோடு, இக்குழந்தைகளையும் தாங்கிப்பிடிக்கவேண்டிய நிலைமை இவர்களுக்கு ஏற்படுகிறது. 

இன்னும் சிலருக்கோ, தாங்கள் அறுபது, எழுபது வயதில் இருக்கும்போது, எண்பது, தொண்ணூறு வயதிலுள்ள தம் பெற்றோர்கள், அல்லது மாமியார், மாமனார், அத்தை, பெரியம்மா, போன்றவர்களையும் காப்பாற்றவேண்டிய கடமை உண்டாகிவிடுவதுண்டு.

இவர்களுக்கெல்லாம் முதியோர் இல்லம்தானே புகலிடமாக இருக்கமுடியும்?

பாதுகாப்பு:
பெற்ற குழந்தைகள் ஒரே ஊரில் இருந்தாலும் தனித்தனி வீடுகளில், பணிநிமித்தம் வெவ்வேறு இடங்களில் வசிக்க நேரிடுகிறது. அடிக்கடி பெற்றோர்களைப் பார்க்க நினைத்தாலும் நேரமும் தூரமும் தடுக்கிறதே! சென்னையில் பூந்தமல்லியில் இருக்கும் மகன், கூடுவாஞ்சேரியில் இருக்கும் பெற்றோர்களை வாரம் ஒருமுறை சந்திக்க முடிகிறதா? அப்படியானால், வெளியூரில் வசிக்கும் மகன் எப்படித் தன் பெற்றோர்களை அடிக்கடி வந்து பார்க்கமுடியும்?
படம்-நன்றி: இணையம்

சென்னையில் வாரம் ஒருமுறையாவது, செய்தித்தாளில் பார்க்கிறோமே, வீட்டில் தனியாக இருந்த முதியவர்களைக் கழுத்தையறுத்துக் கொன்றுவிட்டு நகைகளைக் களவாடினார்கள் என்ற செய்தியை! மேற்கு மாம்பலத்தில் தனது வங்கியில் கணக்கு வைத்திருந்த முதிய சகோதரிகளை, அவர்களுக்கு வாரிசு இல்லை என்பதை அறிந்த வங்கி அதிகாரியே ஆள்வைத்துக் கொன்றது தெரியுமே! 

அதிகாரிகளின் கருத்தை ஏற்காமல், மக்கள் நலனில் அக்கறையின்றி, சரியான நேரத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா ஏரிகளைத் திறந்துவிடாததால், சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கிப் போன சமயம், ஒதுக்குப்புறமான பகுதியில் வீட்டில் படிந்த வெள்ள  அழுக்குகளைச் சுத்தம்செய்வதற்காக அழைத்துவரப்பட்ட பெண்மணியே, சில வாரங்களில் அவ்வீட்டு உரிமையாளரைக் கொன்று களவாடியதும் நாம் அறிந்ததுதானே!

தனி வீட்டில் வாழும் முதியவர்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? ஏன், அடுக்குவீடுகளிலும் இதே போன்ற கொலைகள் நடந்துள்ளனவே! 

ஆள்மாறாட்டம் செய்தல், அச்சுறுத்திப் பணம் நகை பறிமுதல் செய்தல், வாசலில் கோலம் போடும் பெண்களின் நகையைப் பறித்தல், காலையில் பால் வாங்க வரும் முதியவர்களைத் தாக்கி, இருக்கின்ற பணத்தைப் பிடுங்குதல் - போன்றவை அன்றாட நிகழ்வுகள் அல்லவா தமிழ்நாட்டில்? மும்பை நகரம் ஒன்றைத்தவிர, இந்தியாவின் பிற நகரங்களிலும் நிலைமை இதுதானே!

இப்படிப்பட்ட சூழலில், தமது பெற்றோர்களைத் தனியாகத் தவிக்கவிடுவதற்குப் பதில், அவர்களை உரிய வசதிகளுடன் கூடிய முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதுதானே அறிவுடைமை!

வெளிநாட்டில் இருக்கும் குழந்தைகள்
உலகமயமான இன்றைய காலகட்டத்தில், நமது குழந்தைகள் வெளிநாடு சென்று பணிசெய்வதை எவ்வகையிலும் தடுக்க இயலாது. அவசரத்திற்கு ஓடிவர முடியாதபடி கடமைகளும் அரசின் கட்டுப்பாடுகளும் அவர்களைத் தடை செய்வதுண்டு. வெளிநாட்டில் இருந்தாலும், அவர்கள் மனம் தங்கள் தாய் தந்தையரைப் பற்றி ஓயாமல் நினைத்திருப்பது கண்கூடு. விலகினால் வளர்வதன்றோ அன்பு!  

தாம் பணிரியும் வெளிநாடுகளில் முதியவர்கள் இம்மாதிரி இல்லங்களில் சேர்ந்து அமைதியாக வாழ்வதைப் பார்க்கும்போது, தாய்நாட்டிலும் தமது பெற்றோருக்கு இதே போன்ற வசதியை அவர்கள் செய்துதர முன்வருகிறார்கள். முக்கிய நோக்கம், பெற்றோர்களின் உயிருக்குப் பாதுகாப்பு அளிப்பதே.

3 வேளைக்கு சோறு, நோய் வந்தால் கவனிப்பு

வேளைக்கு சோறு, நோய் வந்தால் கவனிப்பு இந்த இரண்டு முக்கியத் தேவைகளையும் முதியோர் இல்லங்கள் நிறைவேற்றுகின்றன. இதைப் பற்றிப் பேசும்போது, எனக்குத் தெரிந்த ஒரு முதியோர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. 

நல்ல அணுகுமுறை உடைய  நிர்வாகம். அங்கு மாதம் சாப்பாட்டுக்கென்று ஒரு குறித்த தொகை செலுத்தவேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு, இரண்டுவேளை காபி, இரண்டுவேளை சிற்றுண்டி தரப்படும். ஒவ்வொன்றுக்கும் ஒரு தொகை என்று கணக்கிட்டு, மாதம் முடிந்ததும் செலுத்தவேண்டும். கடந்த இரண்டாண்டுகளில் எண்ணெய் விலையும், பருப்பு விலையும் தாறுமாறாக ஏறிவிட்டதை அனைவரும் அறிவர். காய்கறி விலையும் கண்டபடி ஏறிவிட்டது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விலையையே வசூலித்துவந்த முதியோர் இல்ல நிர்வாகம், ஒரு கூட்டத்தைக் கூட்டித் தனது சிக்கலை விளக்கியது. உணவின் விலையை உயர்த்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இனிமேல் ஒவ்வொரு வேளை உணவுக்கும் மேற்கொண்டு பத்து (அல்லது பதினைந்து) ரூபாய் கொடுக்கவேண்டும் என்று கோரியது.

அவ்வளவுதான், ஒரே கசமுசா. எங்களால் முடியாது என்று போர்க்குரல். ஒன்றுபட்ட முடிவை அவர்களால் எடுக்கமுடியவில்லை. நாங்கள் முதியவர்கள், சாப்பிடும் அளவும் குறைவுதானே என்று முறையிடல் எழுந்தது. நிர்வாகம், சரி, விலை உயர்வைக் கைவிடுகிறோம் என்று சொல்லிவிட்டது. ஆனால், உணவில் சில மாறுதல்கள் செய்தது. 

காய்கறிகளின் விலையைக் கருத்தில்கொள்ளாமல் இதுவரை தினமும் வெவ்வேறு காய்கறிகளைச் சமைத்துவந்தவர்கள், இப்போது அந்தந்த சீசனில் மலிவாகக் கிடைக்கும் ஒரே காய்கறியை வாரம் முழுதும் போட ஆரம்பித்தார்கள். தினமும் ஒரு பொரியல், ஒரு கூட்டு என்று இருந்ததை, ஒருநாள் பொரியல் மட்டும், அடுத்தநாள் கூட்டு மட்டும் என்று ஆக்கினார்கள்.  இரண்டாவது முறை கூட்டோ பொரியலோ கேட்டால், இருப்பு உள்ளவரையே தரப்படும் என்று ஒரு பிடிபிடித்தார்கள். இரண்டாவது அப்பளம் கிடையாது. சிற்றுண்டியின்போது, கேட்பவர்களுக்கு (மட்டும்) இல்லை என்று சொல்லாமல் அதிகப்படியாகவும் பரிமாறியவர்கள், இப்போது இரண்டு இட்லிதான், இரண்டு பூரிதான், ஒரே ஒரு கட்லெட்தான்  என்று கெடுபிடி செய்தார்கள்.

இத்தனைக்கும் அங்கு வசித்த முதியோர்கள் அனைவரும் தாம் குடியிருக்கும் வீடுகளைச் சொந்தமாக வாங்கி வசிப்பவர்களே. பணம் காசுக்குக் குறைவில்லை. பத்து ரூபாய்க்குக் கணக்குப் பார்க்கும் குணம் அவர்களுக்கே பாதகம் செய்துவிட்டது! (அதன் பிறகு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிப்பார்கள் என்று கருதுகிறேன்.)

4 பேச்சுத்துணை

முதியோர் இல்லத்தின் அடிப்படையான பண்பே, அது ஒரு கூட்டு வாழ்க்கை என்பதுதான். வயதானவர்கள் ஏங்குவது எதற்காக? வாய்க்கு ருசியாகச் சாப்பிடுவதற்காகவா? இல்லை. தன்னோடு யாராவது பேச மாட்டார்களா என்றுதான்  ஏங்குகிறார்கள். குறைந்த பட்சம், தான் திட்டுவதற்காகவாவது, அல்லது தன்னைத் திட்டுவதற்காகவாவது யாராவது கிடைக்க மாட்டார்களா என்று ஏங்குகிறார்கள். முதியோர் இல்லத்தில் இந்த இரண்டுக்கும் வசதி உண்டு. 

(தேவைப்படுவோருக்கு மட்டும்) சில குறிப்புகள்: ‘நான் இரண்டு இட்லி சாப்பிட்டேன். பார்த்தால் நோஞ்சானாக இருக்கிறாள். நான்கு இட்லி சாப்பிடுகிறாள்’ என்று ஆரம்பிக்கலாம். இந்த வயசிலும் அந்த ஆள் ‘சைட்’ அடிக்கிறான் என்று புகார்  செய்யலாம். முதியோர் இல்லத்துப் பெற்றோர்களைப் பார்க்கவரும் பிள்ளையிடம், ‘ஒங்க அம்மா அடிக்கடி டவுனுக்குப் போகிறார்களே, பொண்ணுக்கு ஏதும் வாங்கி அனுப்புகிறார்களோ?’ என்று வத்தி வைக்கலாம். சும்மா ஒரு ‘இது’ தானே!

5 செவிக்கு உணவு வேண்டும்

முதியோர் இல்லங்களில் உபன்யாசம், கச்சேரி, அரட்டை அரங்கம் போன்றவை எளிதாக ஏற்பாடு செய்யமுடிகிறது. கலைஞர்கள் குறைந்த பணம் வாங்கிக்கொண்டோ, அல்லது பணமே வாங்காமலோ நிகழ்ச்சிகளை நடத்திக்கொடுக்கிறார்கள். தங்கள் செல்வாக்கால் இது சம்பந்தமான புகைப்படங்களை ஊடகங்களில் (முக்கியமாக மங்கையர் மலர்) வெளியிடுகிறார்கள். அந்தப் படங்களில்தான் இம்முதியவர்கள் எவ்வளவு பெருமிதமாகக் காட்சியளிக்கிறார்கள் தெரியுமா?
      அமெரிக்காவில்      முதியோர் இல்லம்
தேடுகிறாரோ ?
6 அன்பின் அடையாளம் முதியோர் இல்லம்

ஆம், முதியோர் இல்லம் என்பது அன்பின் அடையாளம். தான் அருகில் இருந்து கவனிக்கவில்லையே என்ற வருத்தம் இல்லாமல் பெற்றோர்கள் வாழவேண்டும் என்ற பிள்ளையின் அன்பு; தன் பிள்ளைகள் மனக்கவலையின்றி வெளியூரில்/வெளிநாட்டில் பணிபுரியவேண்டும், அதற்காக இந்தச் சிறிய இடத்தில் மகிழ்ச்சியாக வசிப்போமே என்ற பெற்றோர்களின் அன்பு - இவ்விரண்டின் அடையாளமே முதியோர் இல்லம்.

7 முதியோர் இல்லங்கள் பெருகவேண்டும்

முதியோர் இல்லங்கள் பெருகவேண்டும். தாங்களாகவே பிள்ளைகளிடம் தம்மை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடு என்று கேட்கும் மனப்பக்குவம் வரவேண்டும். அதுவே முதிர்ச்சியின் அறிகுறி.

தனிவீட்டில், அல்லது அடுக்குவீட்டில், ஒருவராகவோ அல்லது இருவராகவோ இருந்துகொண்டு, சின்ன ஓசை கேட்டாலும் அஞ்சி நடுங்கிக்கொண்டு, வாசல்கதவை யார் தட்டினாலும் சந்தேகப்பட்டுக்கொண்டு, சின்னச்சின்ன தேவைகளுக்கும் யாராவது உதவமாட்டார்களா என்று கவலைப்பட்டுக் கொண்டு இருப்பதைவிடவும், நம்பகமான, பாதுகாப்பான முதியோர் இல்லமே நமக்கு இறுதிக்காலத்தில் நிம்மதியளிக்கும் என்பதை அதிகம் பேர் உணர ஆரம்பித்தால் அதுவே நமது அடுத்த தலைமுறையினருக்கு நாம் வழங்கும் பெருஞ்செல்வமாகும். தந்தை மகற்காற்றும் உதவி அதுவே. அவர்களின் நிம்மதி தானே நமது குறிக்கோள்! அதற்குத்தானே நாம் பிள்ளைகள் பெற்றோம்!

சென்னையில் ஒரு தாயும் மகளும் இருந்தார்கள். மகளுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. உடனே தாயை ஒரு நல்ல முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டாள். தாய்க்கும் அது மகிழ்ச்சியே. சில ஆண்டுகள் கழித்து அவளுக்கும் அதே நாட்டில் பணியாற்றும் ஒரு இந்தியனுக்கும் திருமணம் நடந்தது. அவனுக்கும் தாய் மட்டுமே. அவள் தன் சொந்த வீட்டில் பெங்களூரில் இருந்தாள். தனிமை அவளை வாட்டியது. சம்பந்திகள் இருவரும் பேசிக்கொண்டனர். இப்போது அவ்விரண்டு பெண்மணிகளும் சென்னையில் வேறொரு வசதியான முதியோர் இல்லத்தில் இரண்டு அறைகள் கொண்ட ஒரே வீட்டை விலைக்கு வாங்கிக்கொண்டு, ஒன்றாக, நிம்மதியாக வாழ்ந்துவருகிறார்கள்! நம்பமுடிகிறதா? எல்லாம் முதுமையின் முதிர்ச்சிதான்!

****
பின்குறிப்பு: பிள்ளைகள் என்று வரும் இடங்களில் பிள்ளைகள் அல்லது பெண்கள் அல்லது இருவருமே என்று எடுத்துக்கொள்ளலாம்.

© Y Chellappa
Email: chellappay@gmail.com 

50 கருத்துகள்:

  1. ஒரு மாறுபட்ட கோணத்தில் அலசிய விதம் அருமை நண்பரே...

    இதில் என்னதான் இருந்தாலும் மகன், மருமகள், பேரன், பேத்திகளோடு கிடைக்கும சந்தோஷமே தனி என்று சொல்லத்தான் நினைக்கிறேன்

    ஆனால் ?

    இன்றைய கால மாற்றத்தை ஏற்றுத்தானே ஆகவேண்டும் நாளை எனக்கும் இதேகதிதானே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக! மகன், மகள், மருமக்கள், பேரன், பேத்திகளோடு வாழும் வாழ்வுதான் மேலானது. எவ்வளவு இடையூறுகள் இருந்தாலும் அந்த வாழ்க்கை முறை வழங்கும் மன அமைதிக்கு இணை இல்லை. ஆனால், அது அமையாதபோது என்ன செய்வது - என்பதைத்தான் எழுதினேன். எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்துவிடுவதில்லையே நண்பரே! தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  2. வணக்கம்
    ஐயா
    மாறுபட்ட சிந்தனையில் கருத்து இயம்பிய விதம் சிறப்பு ஐயா.. யாவற்றுக்கும் பெற்ற பிள்ளைகள்தான் காரணம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலநேரம் பெற்றோர்கள் வயதாக ஆக, தங்கள் எதிர்பார்ப்புகளையும் அதிகப்படுத்திக்கொண்டு விடுகிறார்கள். இது பிள்ளைகளின் மன அமைதியைக் குலைப்பதை உணரவும் முடியாதவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட நிலையில் இருவருக்கும் அமைதிதரும் வழியே, முதியோர் இல்லம். தங்கள் வரவுக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  3. த.ம. கடமை முடிஞ்சது. பிறகு வருகிறேன் உங்களை முதியோர் இல்லம் பக்கம் வரவிட்டால் அவங்களுக்குள்ளேயே உங்களால் ஆன நாடகங்களை நடத்திவிடுவீர்கள் போலிருக்கிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயய்யோ, அதெல்லாம் இல்லை. இப்படியும் இருக்கிறார்கள் என்பதைத்தானே சொல்கிறேன் நண்பரே! தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  4. மாற்றி யோசியுங்கள் என்று 'செல்லும்' 'சொல்லப்பா' தற்போதைய தலைமுறை நிலமையை நன்கு புரிந்து கொண்டு இருக்கிறார். விஜய் டிவியில் நீயா நானா கோபிநாத் நிகழ்ச்சியில் பங்கு பெறலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ..லாம்! சென்னை வந்த பின்! இம்மாத இறுதியில்! தங்கள் வரவுக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  5. செல்லப்பா இது போன்ற நல்ல கருத்துகளை மேலும் சொல்லப்பா! சொன்னது அனைத்தும் உண்மை! சொல்லிய விதமோ அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் ஆசிகளை என்றும் கோருகிறேன் ஐயா! வரவுக்கு நன்றி.

      நீக்கு
  6. முதியோர் இல்லங்களை விட சொந்த இடத்தில் உடல் ஒத்துழைத்தால் தனியே இயஙக முதியோர்கள் தயங்கக் கூடாது மற்றபடி பயம் என்பதே பல சிந்தனைகளுக்கு ம் காரணமாகும்ஒவொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம் பொதுப்படையாக்க முடியுமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை, இது பொதுப்படையான கருத்து இல்லை. தங்களைத் தங்களால் பாதுகாத்துக்கொள்ள இயலாத நிலையில் தனி வாழ்வு வாழ்வதை விடவும் கூட்டாக முதியோர் இல்லத்தில் வாழ்வது உயிருக்குப் பாதுகாப்பு என்பதுதான் முதல் நோக்கம். மற்றபடி, எல்லாருக்கும் இது அவசியமில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  7. நியாயம்.. நெஞ்சை அழுத்துகின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேர்ந்து வாழ்வதன்மூலம் நம்மால் நம் குழந்தைகளுக்கு இன்னல் வரவேண்டாமே என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் என் கட்டுரை. தேவையானவர்களுக்கு மட்டுமே. தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளையோர், முதியோர் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. உங்கள் கருத்துக்களை அப்படியே வழி மொழிகின்றேன். நானும் எனது அப்பாவுடனான, (அப்பா (92 வயது) எங்களுடன்தான் இருக்கிறார்) எனது அனுபவங்களை வைத்து முதியோர் குறித்து எழுதலாம் என்று இருக்கிறேன்.

      நீக்கு
    2. நிச்சயம் எழுதுங்கள். இந்தக் காலத்துப் பிள்ளைகள் கனிவும் பரிவும் மிகுந்தவர்கள். பெற்றவர்களை வைத்துப் பாதுகாக்கவேண்டும் என்று நெஞ்சார நினைக்கிறார்கள். ஆனால் காலமும் இடமும் பொருளாதார நெருக்கடிகளும், குழந்தைகளின் படிப்பு சார்ந்த தேவைகளும், தமது பெரியோர்களுக்கு உரிய கவனத்தை வழங்கமுடியாமல் செய்துவிடுகின்றன.
      இதைப் பெரியவர்கள் உணர்ந்து செயல்படவேண்டியது அவசியம். தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  9. முதியோர் இல்லம் பற்றி நம்மூர்ல சரியான புரிதல் இல்ல. வசதியிருந்தும், வாய்ப்பிருந்தும் முதியோர் இல்லத்தில் விடுறவங்களை என்ன சொல்ல?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியும் சிலர் இருக்கிறார்கள். பொதுவாக அம்மாதிரி நிலைமை, மருமகள் அல்லது அவளுடைய குடும்பத்தாரின் அழுத்தம் காரணமாகவே ஏற்படுகிறது என்று சில முதியோர் இல்லங்களை ஆய்ந்தபோது தெரிந்தது. போதுமான பேச்சுவார்த்தைக்குப் பின் இப்படி நடந்தால் அதை ஏற்றுக்கொள்வது சுலபமாக இருந்திருக்கும்.ஆனால், இன்றைய வாழ்வில் கணவன்-மனைவிக்கு அவர்களின் மூத்த தலைமுறையுடன் பேசவே நேரம் இல்லையே! தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  10. முதியோர் இல்லங்களைப் பற்றி நீங்கள் எழுதியிருப்பது சரியான ஒன்றுதான். கால மாறுதல்களுக்கு ஏற்ப நாமும் நம் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். (பழைய காலத்தில் பெரும்பாலும் எல்லோரும் சேர்ந்திருந்தார்கள். விளை நிலம் அல்லது வளர்ந்த கிராமம் ஒன்றே. அப்போது, வெவ்வேறு சமையலறை இருந்தால், அதாவது சேர்ந்தில்லாமல் பிரிந்திருந்தால் மட்டுமே, மறைந்த பெற்றோருக்குச் செய்யும் திதி அண்ணன் தம்பிகள் தனித் தனியாகச் செய்யலாம். இல்லாவிடில் ஒருவர் செய்தால் போதும். அப்புறம் இது போய், ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில் வேலைபார்ப்பதுபோல் நிலைமை மாறிவிட்டது. அதுக்கப்புறம், எங்கெங்கோ குடும்ப உறுப்பினர்கள் வேலை பார்க்கும் நிலைமை வந்துவிட்டது. மாற்றத்துக்கேற்றபடி நாமும் மாறவேண்டியதுதான்.

    இப்போது, common kitchen என்றெல்லாம் முதியோர்களுக்கான குடியிருப்பு வளாகங்கள் பெருகிவிட்டன. நிறைய flatsம் அங்கே இருக்கிறது. முதியோர்கள் அங்கு சேர்ந்தால், பாதுகாப்பு, உடல் நலம் பேணுவதும் சுலபம். பேச்சுத்துணைக்கும் நிறைய ஆட்கள் உண்டு. காலார நடப்பதற்கும் பாதுகாப்பான இடங்கள் உண்டு.

    தனி வீட்டில் வசிப்பதைவிட, இத்தகைய இடங்கள் மிகவும் பாதுகாப்பானது.

    உங்கள் படத்தைப் பார்த்தால், முதியோர் இல்லம் தங்குவதற்குத் தேடுவதுபோல் தெரியவில்லை. பை நிறைய வம்பு ஐடியாக்களோடு முதியோர்களுக்கு பொழுதுபோக்க ஐடியா கொடுக்கச்செல்வதுபோல் தெரிகிறது.

    'தெரிந்த முதியோர் இல்லம்' - என்னவென்று எங்களுக்குத் தெரிவிக்கக்கூடாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான வம்புக்காரரய்யா நீங்கள்! அந்த முதியோர் இல்லத்தின் பெயரைச் சொல்லிவிட்டு நான் மாட்டிக்கொண்டு அவதிப்படவேண்டுமா? அப்புறம் அங்கிருக்கும் ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி எழுதச் சொல்வார்கள். நானும் மறுக்காமல செய்வேன். அப்புறம் என் வலைப்பதிவிற்கு முதியோர் இல்லங்களில் மட்டும்தான் வாசகர்கள் இருப்பார்கள்...! தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  11. சார் நீங்க சொல்லி இருப்பது அனைத்தும் ஓகே என்றாலும்...இதற்கு பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?..மே பி என் ஆர் ஐ மக்களுக்கு இது ஒத்துவரலாம்.....பணம் உள்ளவர்களுக்கு ஒத்து வரலாம்.....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவலையை விடுங்கள். உங்கள் வீட்டிலும் ஒரு என்ஆர்ஐ வராமலா போய்விடுவார்? அல்லது, உங்கள் வீட்டையே உங்களுக்குரிய முதியோர் இல்லமாக மாற்றிக்கொண்டு (எதிர்காலத்தில் நான் முதியவனாகும் போது) தேவைப்படுமானால், எனக்கும் அங்கே இடம் தரலாமே! பென்சன் வருவதால் வாடகை பாக்கி வைக்கமாட்டேன் என்று நம்பலாம்! தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  12. கில்லர்ஜி மற்றும் ராஜியின் கருத்தையும் ஆமோதிக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் எல்லார் கருத்தையும் வரவேற்கிறேன். த.ம. போட்டீர்களா? நன்றி.

      நீக்கு
  13. பெற்றோரை
    முதியோர் இல்லத்தில் தள்ளிவிடும்
    பிள்ளைகளை வெறுக்கிறேன்...
    பிள்ளைகளே பெறாத
    என் போன்ற மலடுகளுக்கு
    முதியோர் இல்லம் சொர்க்கமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம்மைப் பெற்றெடுத்தவர்களை இறுதிவரை வைத்துக் காப்பாற்றும் பிள்ளைகளே உலகில் மிகுதி. முடியாத ஒருசிலருக்கே முதியோர் இல்லம் ஒரு வாய்ப்பாக அமையும். தங்கள் வரவுக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  14. பதிவைப் படித்தேன். பின்னூட்டங்களும்படித்தேன். தம வாக்குப் போட்டேன். சுற்றிக் கொண்டே இருக்கிறது. விழுந்து விடும்! வர்ட்டா....!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! நானும் இன்று ஐந்து பேருக்கு தம வாக்கு போட்டேன். ஒன்று மட்டும்தான் விழுந்தது. மற்றவை சக்கரங்களாகச் சுற்றிகொண்டே இருந்தன...!

      நீக்கு
  15. இந்த மனோ நிலைக்கு நாங்கள்
    இருவரும் வந்து வெகு நாளாகிவிட்டது

    இது ஒன்றே சாத்தியமானதும் கூட

    விரிவாக அருமையாக பதிவு செய்துள்ளது
    மனம் கவர்ந்தது

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவுக்கு நன்றி. நம் குழந்தைகளுக்கு பிரச்சினை இல்லாமல் நமது முதுமைக்காலத்தைக் கழிக்க முடியுமானால், அதைவிட நாம் அவர்களுக்குக் கொடுக்கும் பெரும் செல்வம் வேறில்லை.

      நீக்கு
  16. தர்மராஜன்.S9 மே, 2017 அன்று AM 5:47

    சரியான அணுகுமுறை தான் இது மாறிவரும் காலத்தின் கட்டாயம் என் வயது 54 எனது மூத்த சகோதரி மன நிலை சரியில்லாதவர் என் தாயார் (83) மூன்று ஆண்டுகள் முன்பு காலமானார் 10 மாதம் படுக்கையில் இருந்த அவரை நன்கு கவனித்தேன் அப்படியும் என் தந்தைக்கு என் மீது நம்பிக்கை கிடையாது இத்தனைக்கும் நான் அவரது செல்லப் பிள்ளை தந்தை (வயது 88) கடந்த டிசம்பர் வர்தா புயல் அன்று காலமானார் 2 மாதம் படுக்கை பகலில் செவிலியர் இரவில் நான் கவனித்துக் கொண்டேன் மூத்த சகோதரர் எந்த உதவியும் செய்யவில்லை அதனால் மனைவிக்கு என் மேல் கோபம் என் மனைவி மிகவும் நல்லவர் அவர் எது பண்ணினாலும் என் பெற்றோர் திருப்தி அடைய மாட்டார்கள் மேலும் அவர் என் தந்தையின் சகோதரி மகள் பணம் ஒர் பிரச்சினை இல்லை அதனால் என் விவகாரங்களில் மனைவி தலையீடு கிடையாது நல்ல முறையில் கவனித்தும் அவர்களுக்கு முதியோர் இல்லத்தில் இருப்பது போண்ற உணர்வு எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை நாளை நாங்கள் எங்கு செல்வது Serene Homes ஒன்றே வழி தற்சமயம் சகோதரியை மனநல காப்பகத்தில் payment basisல் சேர்த்தில் உள்ளேன் குணமாகும் போதெல்லாம் வீட்டுக்கு அழைத்து வருவேன் அவளை வாரம் ஒருமுறை சந்திக்கும் பொழுது கட்டுரையாளர் கருத்தையே சொல்வேன் என் தந்தை அவரது இளமை காலத்தில் தன் தாயாரை பாட்டியை கவனித்து வந்ததை அருகில் இருந்து பார்த்து வளர்ந்தது வந்ததால் ஒர் வைராக்கியத்தோடு அவர்களுக்கு செய்தேன் மேலும் பெற்றோரை நல்ல முறையில் பேணும் பாக்கியம் பிள்ளைகளுக்கு வேண்டும் பெற்றோருக்கும் அதுபோல் தங்களை பேணும் பிள்ளைகளை காணும் பாக்கியம் வேண்டும் நிறைய பேர் எவ்வளவோ சிக்கலில் தங்கள் பெற்றோரை நல்ல முறையில் கவனித்து வருகிறார்கள் என்ன செய்வது வயதாகும் போது பொதுவாக எல்லோருடைய மனநிலையும் மாறிவிடுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவுக்கு நன்றி. எவ்வளவுதான் நல்லமுறையில் கவனித்துக்கொன்டாலும் திருப்தி அடையாத பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மையே. முதியோர் இல்லங்கள்தாம் இதற்கு ஒரே வழி.

      நீக்கு
  17. இளைஞர்களுக்கு அறிவுரை, முதியோருக்கு வரப்பிரசாதம் என்ற நிலையில் அமைந்துள்ள பதிவு. வித்தியாசமான நோக்கில் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ள உங்கள் பதிவிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவிற்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

      நீக்கு
  18. இது தப்பில்லை என்பதால் நான் , முன்பு ஒருமுறை எழுதியது ....பெற்றோர்கள் செய்ததும் ,குழந்தைகள் செய்ததும் :)
    பெற்றோர்கள் குழந்தைகளை
    'கிரச் 'சில் சேர்த்தார்கள் ...
    குழந்தைகள் பெற்றோர்களை
    முதியோர் இல்லங்களில் சேர்க்கிறார்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டுக்கும் நிறைய அழ வேண்டுமே! தானிக்கி தீனிக்கி சரிபோயிந்தி!

      நீக்கு
  19. துணிந்த முதியோர் இல்லத்தின் தேவையை உரக்கச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ நாலு பேருக்கு உதவும் என்று தான்!தங்கள் வரவுக்கு நன்றி!

      நீக்கு
  20. நீங்கள் சொல்லியிருப்பது போல் முதியோர் இல்லத்தை அனாதை இல்லமாகக் கருதிக் குழப்பிக் கொள்ளக் கூடாது. முதியோர் இல்லம் என்பது பணம் கொடுத்து முதியவர்களைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ளச் செய்யும் ஏற்பாடு. காலத்துக்கேற்றபடி நம் மனநிலையில் மாற்றம் வேண்டும். பிள்ளைகள் வெளியூரில் இருக்கும் போதோ, வீட்டில் வைத்துப் பார்த்துக்கொள்ள வசதியில்லாமல் இருக்கும் போதோ, பணம் செலுத்தி முதியோர் இல்லங்களில் விடுவது நல்லது என்பதே என் கருத்தும். தனியே வீட்டில் உதவிக்கு ஆள் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு அங்கு நேரா நேரத்துக்குச் சாப்பாடு, ஒத்த வயதினருடன் உரையாடல், மருத்துவ உதவி என எல்லாமே கிடைக்கும். காலத்துக்கேற்ற பதிவு. பாராட்டுகள் செல்லப்பா சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் பிள்ளைகளுக்கு சுமையாகவும் இடையூறாகவும் இருப்பதை விட முதியோர் இல்லம் ஜனநாயகமானது அல்லவா?

      நீக்கு
  21. அப்பட்டமான உண்மை.

    இங்கு முதியோ இல்லம் பற்றிய தெளிவான கருத்து இல்லை.
    நம்மைப் பொறுத்தவரை ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம்.

    உடம்பில் தெம்பும், கையில் பணமும் இருக்கும்வரை தாராளமாக தனியாக இருக்கலாம் எவ்வளவு வயதானாலும். அதற்குப் பின்........

    எங்கள் நல்ல காலம். இன்று பிள்ளை, மருமகள், இரண்டு பேத்திகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாளை என்ன நடக்குமோ. மனதளவில் எங்களை நாங்கள் இப்பொழுதே தயார் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

    மாறு பட்ட கோணம், மாறு பட்ட கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. உண்மைதான் எல்லாருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை..ஏன்? சாவு கூட கிடைப்பதில்லைதான்.....

    பதிலளிநீக்கு
  23. ***சென்னையில் வாரம் ஒருமுறையாவது, செய்தித்தாளில் பார்க்கிறோமே, வீட்டில் தனியாக இருந்த முதியவர்களைக் கழுத்தையறுத்துக் கொன்றுவிட்டு நகைகளைக் களவாடினார்கள் என்ற செய்தியை! மேற்கு மாம்பலத்தில் தனது வங்கியில் கணக்கு வைத்திருந்த முதிய சகோதரிகளை, அவர்களுக்கு வாரிசு இல்லை என்பதை அறிந்த வங்கி அதிகாரியே ஆள்வைத்துக் கொன்றது தெரியுமே!***

    இதெல்லாம் ஒரு காரணமா??!!!

    அமெரிக்காவைப் பொறுத்தவரையில் முதியோர் இல்லம் என்பது ஏழைகள் "அஃபோட்" பண்ண முடியாத அளவுக்கு "எக்ஸ்பென்ஸிவ்" என்பது தெரியுமா உங்களுக்கு?

    அதேபோல் நம்மூரில் உள்ள உங்களைப்போல் "பண்க்காரர்களை" விடுத்து ஏழை பாழைகள் எப்படி முதியோர் இல்லததுக்கு காசு செலுத்த முடியும்? அதற்கேதாவது உங்க அரசாங்கம் வழி வகுத்துள்ளதா? இல்லை ஏழை 70 வ்யதுக்கு மேலே எதுக்கு உயிரோட இருக்கணும்னு என்பீரா?

    அமெரிக்காவில் ஏழைகளுக்கு அரசாங்கம் இதற்காக பணச் செலவை ஏற்றுக் கொள்கிறது. மெடிக்கெய்ட், மெடிக்கேர், சோசியல் செக்குரிட்டி என்று ஏழைகளை "கவனித்து"னக் கொள்கிறது. அதுபோல் இந்தியாவில் ஒரு சாதாரண கூலித் தொழிலாலிக்கு வசதி ஏதுவும் உண்டா?

    இல்லை இது அப்பர் மிடில் கிளாஸுக்கான (உங்களையும் உங்களைப்போல் மக்களையும்) மட்டுமே மனதில் கொண்டு எழுதப்பட்ட "சுயநல" பதிவா? விளக்கவும்!

    பதிலளிநீக்கு
  24. எனது கட்டுரையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளபடி, இது நடுத்தர வர்க்கத்தினரைக் குறித்த கட்டுரையே. ஏழை vs பணக்காரர் அல்லது இந்தியா vs அமெரிக்கா என்பது என்னுடைய கட்டுரைக்கு அப்பாற்பட்ட விஷயம். தங்கள் வரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. பல்வேறு அம்சங்களை, பலகோணங்களில், பலராலும் சிந்திக்க வைக்கும் பதிவு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  26. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  27. உண்மையில் முதியோர் இல்லங்கள் என்பவை உலகில் உள்ள அத்தனை தெய்வங்களும் வாசம் செய்யும் கோவில்கள் எனலாம் ... கடவுளுக்கு அருகிலிருந்து பணிவிடை செய்யும் புண்ணியம் இல்லாதவர்களே அவர்களை முதியோர் இல்லம் அனுப்பிவிடுகின்றனர் ... கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    பதிலளிநீக்கு