புதன், மே 24, 2017

பட்டுப்பாய் கனவுகள்

பதிவு எண் 41/  2017
பட்டுப்பாய் கனவுகள்
-இராய செல்லப்பா

சீர்காழியிலிருந்து வரவழைப்பாராம் என் மாமனார். ஆனால் அது தயாராவதென்னவோ பத்தமடையில்தானாம். சீர்காழியில் அவர்களுடைய ஏஜென்ட்டு ஒருவர் மொத்தமாக ஆர்டர் பிடித்து அனுப்புவாராம். பத்தமடைக்காரர்கள் அதற்கேற்ப உடனடியாகத் தயார்செய்து ஒவ்வொன்றையும் ஈரம்போக உலரவைத்து பழுப்புநிறத்தாளில் சுற்றி லாரியில் அனுப்புவார்களாம். இவர் அதைப் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு பஸ் மூலம் அனுப்புவாராம். அவரும் ஒரு பாய்தான்; ஆனால் bhai !  

‘பட்டுப்பாய்’ இல்லாமல் கல்யாணம் களைகட்டுமா?

சாதாரணமாகத் தயாராகும் கோரைப்பாய்களை விட இது மிகவும் நைசாக இருக்கும். ஓரங்களில் பட்டுத் துணியை  மடித்துத் தைத்திருப்பார்கள். தைக்கப் பயன்பட்ட நூலும் பட்டுநூலாகவே இருக்கும்.   மணமேடையில் மணமக்களை உட்காரவைக்கும் பாய் என்பதால் சிறப்பான கவனத்தோடு நெய்திருப்பார்கள். மணமகன், மணமகள் பெயர்களும், திருமணத்தேதியும் பெரிய எழுத்தில் நெய்திருப்பார்கள். மணமகன் பெயர் ஒரு வண்ணத்திலும், மணமகள் பெயர் இன்னொரு வண்ணத்திலும், திருமணத்தேதி இன்னொரு வண்ணத்திலும் இருப்பது வழக்கம். வேறு மாதிரியாகவும் இருக்கலாம். கொடுத்த ஆர்டர்படி செய்து கொடுப்பார்கள். எழுத்துக்கள் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். ஆங்கிலத்தில்தான் எழுதுவார்கள். தமிழ் எழுத்துக்களை நெய்ய அதிக நேரம் ஆகும் என்பதால் விலையும் கூடுதலாகும்.

வசதியான கட்டில் இருந்தாலும்,  முதல் இரவுக்குப் பட்டுப்பாய்தான் ஆகிவந்தது என்று தஞ்சாவூர்க்காரர்கள் நம்புவார்கள். ஆகவே என் மாமனார் மிகுந்த கவனத்தோடு ஆர்டர் கொடுப்பார். பாய் வந்து சேர்ந்தவுடன் அங்குலம் அங்குலமாகத் தடவிப் பார்த்து நெருடல் இல்லாமல் இருக்கிறதா என்று சோதிப்பாராம். (அவருக்குப் பத்துக்கு மேற்பட்ட சகோதரிகள்.)   ஒருமுறை மணமகனின் பெயரிலோ, அல்லது இனிஷியலிலோ  எழுத்துப்பிழை நேர்ந்துவிட்டதாம். அதற்காக டிரங்க்கால் புக் செய்து தயாரிப்பாளரை ஒரு பிடிபிடித்துவிட்டாராம். வாத்தியார் ஆயிற்றே! திருத்தப்பட்ட புதிய பாய் வந்துசேருவதற்குள் நிலைகொள்ளாமல் தவித்துப்போனாராம்.

எனது திருமணத்திற்கு வரவழைக்கப்பட்ட பட்டுப்பாயில் நல்லவேளையாக எந்தப் பிழையும் இல்லை. ‘சுத்தமாக வந்திருக்கிறது’ என்று என்னிடம் பெருமையாகச் சொன்னார் (திருமணத்திற்கு முன்பு). ஒரே தயாரிப்பாளரிடம்தான் இதுவரை பன்னிரண்டு திருமணங்களுக்குப் பாய் வாங்கினாராம். அவரிடம் வாங்கினால் ‘ஆகி’வரும் என்றார். அதற்குப் பொருள் என்னவென்று அப்போது தெரியவில்லை.

அந்தப் பாயை உண்மையிலேயே பட்டுப்புடைவையை விட கவனமாகக் கையாளுவார் என் மனைவி. சுருட்டிவைப்பதில் சற்றே அசிரத்தையாக இருந்தாலும் தொலைந்தேன். தனக்கே உரிய உவமைகளைச் சொல்லி வெருட்டுவார். ஆனால் என் முதல் மகள் பிறந்தவுடன் அவள் இந்தப்பாயைப் படுத்திய பாடு சொல்லிமாளாது. ஆனால் மகளைக் கோபிக்கும் வழக்கம் மனைவிகளுக்கு இல்லையே! மேலே போட்ட ரப்பர் ஷீட்டையும் மீறி ஈரமாகிவிடும் அந்தப் பாய். அதை நாசூக்காகக் கழுவி, நிழலில் உலர்த்தி எடுத்துவைக்கும் நளினம் அடடா..!

மூன்று குழந்தைகளை அந்தப் பட்டுப்பாய் பார்த்துவிட்டது. (இதுதான் ‘ஆகி’ வருதலோ?) ஆனால் அது அலுத்துக்கொண்டதே இல்லை. அதில் எப்போது படுத்தாலும் எனக்கு உடனே உறக்கம் வந்துவிடும். ஆரம்பத்தில் நல்ல நல்ல கனவுகளும் வருவதுண்டு. (பிற்பாடு நின்றுவிட்டது!)

எங்கள் சுக துக்கங்களில் தவறாமல் பங்கெடுத்துக்கொண்ட உற்ற துணை அது.

வேலைநிமித்தமாக நான் வெவ்வேறு ஊர்களுக்குப் பயணித்தபோதும் சென்னை வீட்டிலேயே அது நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அவ்வப்பொழுது அதை வெளியில் எடுத்துச் சற்றே வெயிலில் காட்டி மீண்டும் உள்ளேவைப்பது வழக்கமாகியது. 
  
  
இன்று அதற்கு வயதாகிவிட்டது. ஆனால் நைந்துபோகவில்லை. வண்ணம் மாறவில்லை. ஓரத்தில் தைக்கப்பட்ட பட்டுத்துணி மட்டும் நிறம் மாறியுள்ளது. கட்டில்களையே எல்லோரும் பயன்படுத்துவதால் இது சற்றே உயரமான பரணில் ஒதுங்கிவிட்டது. கடைசியாகப் பயன்படுத்திப் பல வருடங்கள் ஆகிவிட்டாலும், அதை எடுத்து வீச அவளுக்கு மனம் வரவில்லை. அதிலுள்ள எங்கள் இருவர் பெயரும் இன்னும் மெருகழியாமல் இருக்கிறதே!   ‘வயதாகிவிட்டால் என்னையும் எடுத்து வீசிவிடுவீர்களா?’ என்பாள். அந்த மாதிரி ரிஸ்க் எடுப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை என்பதற்குக் காரணம் உண்டு.


நினைத்துப்பார்க்கிறேன். மல்லிகைப்பூ, ஊதுவத்தி மணத்தோடு தனக்கே உரிய மணத்தையும் பரப்பி, அந்த (முதல்) இரவுக்கு இனிமை ஊட்டிய  பட்டுப்பாய்க்கு இப்போது நாற்பத்தொரு வருடங்கள் ஆகிவிட்டன!  (மே 24 அன்று.) ‘எப்படித்தான் இவ்வளவு காலம் உங்களோடு குப்பை கொட்டினேனோ?’ என்று ஆச்சரியப்படுகிறாள் விஜி. பட்டுப்பாய் ஆச்சரியப்படுமா என்று தெரியவில்லை. நாங்கள் இருவரும் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் அது இன்னும் பணிசெய்யத் தயாராகவே இருக்கிறது.

சென்னைக்குப் போனவுடன் வெளியில் எடுத்துப் பார்க்கவேண்டும். முடிந்தால் ஒருமுறை பயன்படுத்தியும்!

© Y Chellappa


வியாழன், மே 18, 2017

நான் அவனில்லை!

பதிவு எண் 40/2017
நான் அவனில்லை!
இராய செல்லப்பா

(‘மனசு’ வலைத்தளத்திற்காக எழுதப்பட்டது)

மதுரையைச் சேர்ந்த ஒரு தம்பதியரை இன்று சந்திக்க நேர்ந்தது. இருவரும் அறுபது வயதுவரை பணிசெய்து முறையாக ஓய்வு பெற்றவர்கள். மகன் இப்போது அமெரிக்காவில் இருப்பதால் அவரைப் பார்க்க வந்திருக்கிறார்கள். மரியாதை நிமித்தமான சந்திப்பு.
எழுத்தாளர்,  பேராசிரியர்
இந்திரா  பார்த்தசாரதி அவர்கள்

இருவரும் பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக்கொண்டோம். சொந்த ஊர் எது, மனைவியின் ஊர் எது, எங்கு வேலை செய்தோம், எத்தனை முறை அமெரிக்கா வந்துள்ளோம் போன்ற தகவல்கள். அடுத்து வழக்கமாக அமெரிக்கா வருபவர்கள் கேட்கும் கேள்வி: எப்படிப் பொழுது போகிறது உங்களுக்கு?

அமெரிக்கா மட்டுமல்ல, இந்தியாவிலும் இது ஒரு முக்கியமான கேள்வி. ஒருவன் பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டால் அவனுக்கு நிறைய நேரம் இருப்பதுபோலவும், என்ன செய்வதென்று தெரியாமல் அவன் விழிப்பது போலவும் ஒரு பிரமையான எண்ணம் பலருக்கும் இருக்கிறது. கண்ணாடியில் பார்க்கிறவனுக்குத் தன்முகமே தெரிவது போல, பணியிலிருந்த போதும் ஓய்வெடுத்தே பழகிவிட்டவர்களுக்கு, யாரைப் பார்த்தாலும் அவர்களும் கை நிறையப் பொழுதை வைத்துக்கொண்டு செலவழிக்கும்விதம் அறியாமல் இருப்பதாகவே தோன்றிவிடுகிறது.
 
இப்படிக் கேள்வி கேட்பவர்களை நான் எளிதாகச் சமாளித்துவிடுவேன்:  இன்னும் ஒரு மாதம் கழித்து நாம் சந்திக்கலாமா? அப்போது, உங்களுடைய பொழுதை நீங்கள் எப்படிக் கழித்தீர்கள் என்று எனக்குச் சொல்வீர்களா? என்று எதிர்க் கேள்வி எழுப்புவேன். அவ்வளவே.

இன்று சந்தித்த தம்பதியரிடம் சொன்னேன்: நான் ஒரு எழுத்தாளனும் கூட. எனவே படிப்பதிலும் எழுதுவதிலும் எனக்குப் பொழுது செலவாகிறது. இருபத்துநாலு மணிநேரமே போதுமானதாயில்லை என்றேன். அந்தப் பெண்மணி ஆர்வத்துடன் கேட்டார்: எந்தப் பெயரில் எழுதுகிறீர்கள் என்று. சொன்னேன்.

தெரியுமே! பல வருடங்களாக நீங்கள் தினமலர் வாரமலரில் தெய்வீகம் பற்றி எழுதிவருகிறீர்களே! ஞாயிற்றுக்கிழமை வந்தால் உங்கள் கட்டுரையைத்தான் நான் முதலில் படிப்பேன் என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

எனக்கு வெட்கமாகப் போனது. ஏனெனில் அந்த செல்லப்பா நான் அல்லன். இன்னொருவர். அந்தப் பெண்மணியால் அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
****
பல வருடங்களுக்கு முன்பு எனது கவிதைத்தொகுதி ஒன்று வெளியானபோது, சென்னையில் ஒரு புத்தகக்கடையில் என்னைப் பார்த்த (அப்போதே) முதுபெரும் எழுத்தாளர் ஒருவர், நலமாக இருக்கிறீர்களா? உங்கள் கவிதைகளையும் கட்டுரைகளையும் நான் தொடர்ந்து படிக்கிறேன். தமிழுக்கு உங்களால் இன்னும் நிறைய சேவைகள் பாக்கியிருக்கிறது என்றார். இந்தியில் இருந்து தமிழுக்கு ஏராளமான  கதைகளை மொழிபெயர்த்து கல்கி, கலைமகள், மஞ்சரி, அமுதசுரபி போன்ற இதழ்களில் வெளியிட்டுவந்தவர் அவர். எனக்கு மகத்தான அதிர்ச்சி. 

ஏனென்றால் அதுவரை நான் எந்தப் பத்திரிகையிலும் தொடர்ச்சியாக எழுதியதில்லை. அவ்வப்போது ஒன்றிரண்டு வந்திருக்கும். அதையும் படித்தவர்கள் உடனே மறந்திருப்பார்கள். அமர இலக்கியம் எதையும் அப்போது நான் படைத்திருக்கவில்லை. இவர் சொல்வதைப் பார்த்தால் நிச்சயம் இது அவர் நினைவில் எழுந்த ஆள்மாறாட்டம்தான் என்று தெரிந்துவிட்டது.     

"மன்னிக்க வேண்டும் ஐயா, அது நானாக இருக்கமுடியாது. ஏனென்றால்... என்பதற்குள் அவர் இடைமறித்தார். இப்படித் தன்னடக்கத்துடன் இருந்துதான் இந்த நிலைமையில் இருக்கிறீர்கள். இல்லையென்றால் உங்களுக்கு எப்போதோ சாகித்ய அக்கடெமி கிடைத்திருக்காதா? இவ்வளவு வருடங்கள் நீங்கள் காத்திருக்க வேண்டுமா? என்றார் அவர். 













அப்பொழுதுதான் அவர் யாரைச் சொல்கிறார் என்று புரிந்தது. தமிழின் மூத்த எழுத்தாளரும்,  ‘மணிக்கொடி’ பரம்பரையைச் சேர்ந்தவரும், ‘எழுத்து’ இதழின் ஆசிரியருமான சி.சு.செல்லப்பா அவர்களைத்தான் நான் என்று நினைத்துக்கொண்டுவிட்டார், பாவம்! சில மாதங்களுக்கு முன்புதான் சி.சு.செல்லப்பா தமிழ் எழுத்தாளர் என்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு சிவலோகப் பதவியை அடைந்திருந்தார்.  அந்த விஷயமே அவருக்குத் தெரியவில்லை என்பது எவ்வளவு சோகமான செய்தி!
*****
சென்னை அடையாறில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது இந்து சீனியர் உயர்நிலைப் பள்ளியில் அடிக்கடி பேச்சு, கவியரங்கம் என்று ஏதாவதொரு நிகழ்ச்சிக்கு என்னை அழைப்பார்கள். கம்பீரமான ஷெர்வாணி அணிந்து சிங்கம் மாதிரி நடைபோடுவார் அந்தப் பள்ளியின் முதல்வராக  இருந்த வெங்கடாசலம் அவர்கள். ஒரு கவியரங்க நிகழ்ச்சியின் இடைவெளியில் இரண்டு ஆசிரியர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். ‘இவரை நாம் அடிக்கடிக் கூப்பிடுகிறோம் அல்லவா? போன மாத நிகழ்ச்சிக்கும் இவர் தானே வந்திருந்தார்?'

இல்லை நண்பரே, போன மாதம் வந்தவர் ‘சிலம்பொலி’ செல்லப்பன்; நான் வெறும் செல்லப்பா மட்டுமே; அவர் வேறு, நான் வேறு; அவர் என்னைவிட பதினைந்து வருடமாவது பெரியவர் - என்று சொல்லவிரும்பினேன். அதற்குள் அவர்கள் கலைந்துவிட்டார்கள்.
*****
வங்கிப்பணியில் இருக்கும்போது எமது வங்கியின் அப்போதைய தலைவர் ஒரு வழக்கத்தைக் கொண்டிருந்தார். தம் கீழ்ப் பணியாற்றும் மேலாளர் பொறுப்பில் இருந்தவர்களுக்குத் தம் கைப்படப் பிறந்தநாள் வாழ்த்துக்  கடிதங்களை அனுப்புவார். பிறந்தநாளன்று சரியாக வந்துசேரும்.  அதில் சிறு தவறு நடந்தாலும் பொறுக்கமாட்டார்.  என் பிறந்த நாளுக்கும் அதுபோல் வாழ்த்துக் கடிதங்கள் வரும். ஆனால் என் விஷயத்தில் மட்டும் அவருடைய செயலாளர்கள்  ஒரு சிறிய தவறு செய்துவிடுவார்கள். ‘To’ என்ற இடத்தில் செல்லப்பாவிற்குப் பதில், ‘புல்லப்பா’ என்று ஒருமுறை அடித்திருந்தார்கள்.

வங்கியின் தலைவர் இம்மாதிரி வாழ்த்து அட்டைகள் அனுப்பிப் பெயர்வாங்கிவிடுவதைப் பொறுக்காத ஒரு பொதுமேலாளர், தாமும் இம்மாதிரி வாழ்த்து அட்டைகளை  அனுப்பத்தொடங்கினார். அவருடைய செயலாளர் என் பெயரை ‘எல்லப்பா’ என்று டைப் செய்திருந்தார். புல்லப்பா என்று ஒருவர் நிச்சயமாக வங்கியில் இருந்தார். ஆந்திராவைச் சேர்ந்தவர். என்னைவிட பணிமூப்பு மிகுந்தவர். ஆனால் எல்லப்பா என்று ஒருவரும் வங்கியில் இல்லை. மேலும், செல்லப்பா என்ற பெயரில் கடந்த நாற்பது ஆண்டுகளில்  வங்கியில் இருந்தவன் நான் ஒருவனே. ஆனால்...? இம்மாதிரிச் சின்ன விஷயங்களை நாம் பெரிதுபடுத்தினால் தொலைந்தோம். பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்புகள் ஆயிற்றே,  கருடனைப் பார்த்து சௌக்கியமா என்றல்லவா கேட்கும்? 
*****
தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் இந்திரா பார்த்தசாரதி. ‘சாகித்ய அகாடமி’, ‘சம்ஸ்கிருதி சம்மான்’ விருதுகளைப் பெற்றவர். சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் ஆகிய படைப்புத்துறைகளில் சிறந்து விளங்குபவர். ‘குருதிப்புனல்’ நாவல், ஒளரங்கசீப்’, ‘ ராமானுஜர்’ நாடகங்கள் போன்றவை, இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

அண்மையில் மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானபோது, அஞ்சலி செலுத்தப்போயிருந்தார், இந்திரா பார்த்தசாரதி. அப்போது நடந்ததை அவருடைய  வார்த்தைகளிலேயே பார்ப்போமா?

நண்பரைப் பனிப்பெட்டியில் பார்த்துவிட்டு கனத்த நினைவுகளுடன் அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தேன். திடீரென்று கேமராவுடன் இரண்டு இளைஞர்கள் என் முன் முளைத்தார்கள்.

‘‘அவரைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா?’’ என்றார் ஒருவர்.
கேமரா என்னை உற்றுப் பார்த்தது. தொலைக்காட்சி சேனல் பெயரைச் சொன்னார் இன்னொரு இளைஞர்.

அமரர் அசோகமித்திரன் 
முதலில் மறுத்துவிடலாம் என்ற எண்ணம் தலைத்தூக்கியது. இது நான் என் நண்பருக்குச் செய்யும் தர்மம் அன்று என்ற எண்ணம் அதைத் தடுத்தது. நான் யாரென்று தெரிந்து கேட்கிறார்கள் என்ற லேசான பெருமையும் என் முகத்தில் புன்னகையாக அடையாளம் கொண்டது.
நான் அவரைப் பற்றி இரண்டு நிமிடங்கள் என் கருத்துகளைச் சொன்னேன்.

கேமரா கண் மூடியது. என்னைப் பேசச் சொன்ன இளைஞர் மிகவும் இயல்பான, யதார்த்தமான குரலில் என்னைக் கேட்டார்:
உங்கள் பெயர் என்ன?

நான் யாரென்று தெரியாமலா என்னைப் பேசச் சொன்னார்கள்? புதிதாக வெளியிடப்படும் திரைப்படத்தின் முதல் ‘ஷோ’ முடிந்தவுடன் வெளியே வரும் ரசிக மக்களைத் தொலைக்காட்சி விமர்சகர்கள் கேட்பது போன்ற கேள்வியா என்று எனக்குத் தோன்றிற்று.

அவர்களுக்கு யாரோ சொல்லி யிருக்க வேண்டும். என் பெயரைச் சொல்லி, ‘‘அவர் அதோ போகிறார். கேளுங்கள்’’ என்று கூறியிருக்கக்கூடும். ஒன்று, கேமரா இளைஞர்கள் அந்தப் பெயரை மறந்திருக்கக்கூடும். அல்லது, அந்தக் குறிப்பிட்ட பெயரை உடையவர் நான்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்வதற்காகக் கேட்ட கேள்வியாகவும் இருக்கலாம்.

நான் என் பெயரைச் சொன்னதற்கு, ‘‘தேங்க்ஸ்’’ சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.
இந்த அனுபவம் எனக்குத் தேவை யென்று எனக்குத் தோன்றிற்று. என்னைப் பற்றி நானே மிகைப்பட நினைத்துக் கொண்டிருந்தால், என்னை பூமியின் தளத்துக்குக் கொண்டுவரும் அனுபவம்.
****
எந்த நிமிடத்திலும் ‘நான்’ என்று கர்வப்படுவதற்குத் தமிழ் எழுத்தாளனுக்கு அதிகாரமில்லை என்பதைப் புரிந்துகொண்டீர்கள் அல்லவா? ‘என்னைப் பற்றி நான்’ என்று பெருமையோடு என்னத்தை எழுதுவது?

என்றாலும், என்மீது மிகுந்த பிரியம் கொண்டு பரிவை கே குமார் அவர்கள் என்னை எழுதச் சொன்னதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக என்னைப் பற்றி இதோ சில வரிகள்:

கவிஞராக அறிமுகம் ஆகி, கதாசிரியராகவும் கட்டுரையாளராகவும் தன் எழுத்துப் பரப்பை விரித்துக்கொண்டிருக்கும் இராய செல்லப்பா, இதுவரை மூன்று புத்தகங்களின் ஆசிரியராவார். (‘இரா’ என்பது அவருடைய சொந்த ஊரான இராணிப்பேட்டையைக் குறிக்கும். ‘ய’ என்பது தகப்பனார் யக்யஸ்வாமி என்பதின் முதலெழுத்து. மற்றபடி, பழம்பெரும் எழுத்தாளரான ராய சொக்கலிங்கத்திற்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  வங்கி அதிகாரியாக இருந்து, இந்தியாவின் பல நகரங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பலமுறை வெளிநாடு செல்லும் வாய்ப்பினைப் பெற்றவர். அந்த அனுபவங்களைத் தமது எழுத்துக்களில் தக்க முறையில் வெளிப்படுத்துபவர். ‘செல்லப்பா தமிழ் டயரி’ என்ற இணையதளத்தின்மூலம் தொடர்ந்து எழுதிவருபவர். மனித உணர்வுகளும் தனிமனிதப் பிரச்சினைகளும், மனிதாபிமானமும் இவரது எழுத்துக்களின் ஆதாரமாக இருப்பவை.

இவருடைய ஆறு புத்தகங்கள் விரைவில் புஸ்தகா நிறுவனத்தின்மூலம் வெளியாகவுள்ளன. (www.pustaka.co.in) (மின்னூல் பதிப்பாளர்கள்).

1 ஊர்க்கோலம் -கட்டுரைகள்;    
2 உண்மைக்குப் பொய் அழகு – சிறுகதைகள்;  
3 சொல்லட்டுமா கொஞ்சம்? -கட்டுரைகள்;   
4 காதல் பூக்கள் உதிருமா? -சிறுகதைகள்;  
5 அபுசி-தொபசி-பகுதி 1;   
6 அபுசி-தொபசி-பகுதி 2.

இவை தவிர மேலும் ஆறு புத்தகங்கள் இன்னும் சில மாதங்களில் தயாராகிவிடும் நிலையில் உள்ளன. 2013 இல் வலைத்தளம் தொடங்கியிருந்தாலும் 2016 முழுவதும் எழுதாமல் இருந்துவிட்டார். இந்த ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் புத்துணர்ச்சியோடு எழுத ஆரம்பித்துவிட்டார். இதுவரை நாற்பது பதிவுகள் வெளியாகியுள்ளன.
*****
சரி, பொழுது எப்படிப் போகிறது என்ற கேள்விக்கு சற்றே நேர்மையான பதிலைச் சொல்லிவிடலாமா?

கணினித்துறையில் ஆர்வம் உள்ளவன் என்பதால், கடந்த பன்னிரண்டு மாதங்களாக, கணினி மொழிகளைப் படிப்பதில் எனது நேரத்தை அதிகம் செலவிட்டிருக்கிறேன். 

(1) சென்னை ஐஐடி நடத்தும் ஆன்லைன் படிப்பான IMAD- Introduction to Modern Application Development  என்ற படிப்பை வெற்றிகரமாக முடித்தேன் 

(2)  IIT Kharagpur நடத்தும்  Natural Language Processing  என்ற மிகக் கடினமான படிப்பையும் படித்தேன். தேர்வு மட்டும் எழுதமுடியவில்லை. தேர்வுத் தேதியில் அமெரிக்கா வந்துவிட்டேனே.  

(3) Chennai Mathematical Institute நடத்தும்   Design and Analysis of Algorithms என்ற மேலும் கடுமையான படிப்பில் பதிவு செய்துகொண்டேன். ஆனால் முந்தைய படிப்புகளுக்குக் கொடுத்த நேரம்போக, இந்தப் படிப்புக்கு நேரம் மீதி இல்லாததால், முடிக்கமுடியவில்லை. இந்த ஆண்டு முடிப்பேன். 

(4) பைத்தான் என்ற -இன்று மிகவும் அதிகம் டிமாண்டு உள்ள - கணினி மொழியைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். Python Language  - Harvard University ( edX course). இதைத்தொடர்ந்து 

(5) Big Data Analytics என்ற இன்னொரு மிகுந்த டிமாண்டு உள்ள படிப்பையும் ஆரம்பித்துள்ளேன். முடிக்க ஆறேழு மாதங்கள் ஆகலாம்.

இவை எல்லாமே கணித மற்றும் கணினித்துறையில் மிக நுட்பமான, அதே சமயம் மிகுந்த உழைப்பைக் கோருகின்ற படிப்புகளாகும். ஆர்வத்தின் காரணமாகவே படிக்கிறேன். எனவே வாரத்தில் ஒன்றுக்குமேல் வலைப்பதிவு எழுதவும் கூட எனக்கு நேரம் இல்லை என்பதுதான் உண்மை நிலை.

இதையே ‘மனசு’ தளத்திலும் படிக்கலாம். நன்றி குமார் அவர்களே!

*****
(c) Y Chellappa

செவ்வாய், மே 16, 2017

இது நியாயமா...?

பதிவு எண்  39/2017
 இது நியாயமா...?
-இராய செல்லப்பா

பள்ளிப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சி.

அப்போதெல்லாம் தமிழகப் பள்ளிகளில் பேஸ்பால் (ஆம், அமெரிக்காவின் BASEBALL தான்!) விளையாட்டு இடம்பெற்றிருந்தது. சதுரமான விளையாட்டுத்தளம். நான்கு மூலைகளிலும் நான்கு மட்டையாளர்கள் நிற்கவேண்டும். கிரிக்கெட் மட்டையைப் போல் அல்லாமல் உருண்டையாக இருக்கும் மட்டையால், பந்தை அடிக்கவேண்டும். கிரிக்கெட் பந்தைவிட இரண்டுமடங்கு பெரிதாக ஆனால் அவ்வளவு அழுத்தமாக இல்லாத பந்து. பந்தை ஒருவன் வீசுவான். நாம் அடித்துவிட்டு, மட்டையைத் தரையில் போட்டுவிட்டு, சதுரத்தின் அடுத்த மூலையை நோக்கி ஓடவேண்டும்.

தொங்குவது தினத்தந்தியா?

அன்று பந்து வீசியவன், பந்தைப் போலவே பெரிய உருவம் கொண்டவன். ஆகவே பந்து சற்றே வேகமாக வந்து விழுந்தது - மட்டையின்மேல் அல்ல, என் தலைமேல்! வலியென்றால் அவ்வளவு வலி. தலைசுற்றிக் கீழே விழுந்துவிடுவேன் போல் கண்கள் இருண்டுகொண்டுவந்தது.  அடுத்த நிமிடம், மட்டையைக் கீழே எறிந்தேன், தரையில் இருந்து கல் ஒன்றை எடுத்து அவன் மேல் எறிந்தேன். எப்படியோ குறிதவறாமல் அது அவனது நெற்றியைப் பதம் பார்த்துவிட்டது. அவன் ‘ஐயோ’ என்று அலறினான். துடிதுடித்தான்.

பந்துபட்ட வலியால் துடித்தபடி நான் கீழே விழுந்தேன். கல் தாக்கிய வலியால் அவன் கீழே விழுந்தான். பி.டி.மாஸ்டர் ஓடிவந்து என்னை ஓங்கி ஓரடி கொடுத்தார். அவனையோ, அன்போடு தூக்கியெடுத்து உபசரித்தார். நெற்றியைத் தடவிக் கொடுத்தார்.

இன்றுவரை எனக்கு விளங்கவேயில்லை: முதலில் அடிபட்டவன் நான். வலியால் முதலில் துடித்தவனும் நான்தான். எனக்கு மேலும் ஒரு தர்ம அடி கிடைத்தது. ஆனால் அவனுக்கு ஏன் அடிக்குப் பதில் அன்பு கிடைக்கிறது? இதுதான் நியாயமா?

ஒருவேளை, அவனுக்கு முன்பாக நானும் அலறித்துடித்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தால், எனக்கும் அதே அன்பு கிடைத்திருக்குமோ?
****

என்னுடைய ‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’ கதையில் ஒரு தோட்டம் வருமே, அதில் ஒரு புளியமரம் இருந்தது. அதில் ஊஞ்சல் கட்டி ஆடுவோம். சற்றுத் தொலைவில்  ஒரு மாமரமும் இருந்தது. ஆனால் அதில் ஊஞ்சல் கட்டுவதில்லை. காரணம் தெரியாது. ஆனால் அந்தப் புளியமரம் அடுத்த வருடம் வெட்டப்பட்டு விட்டதாம். வீட்டில் புளியமரம் வைக்கக்கூடாதாம். வைத்தால் அந்த வீடும் நிலமும் கையைவிட்டுப் போய்விடுமாம்.

ஒவ்வொருமுறை அந்தப் புளியமரத்தை வெட்டவேண்டும் என்று நினைக்கும்போதும் அதில் காகங்கள் கூடு கட்டியிருக்குமாம். கூடுகளை அழிக்கவேண்டாமே என்று மரத்தை வெட்டாமல் விடுவார்களாம். கடைசியாக ஒரு சமயம், காகத்தின் கூடுகள் இல்லாத நிலை வந்தவுடன், மரத்தை வெட்டினார்களாம். காக்கைகளின் கூடுகளை மட்டுமல்ல, குளவிக்கூடுகளையும் அழிக்க உடன்படமாட்டார் பாட்டி. குடிசையின் வெளிப்புறச் சுவரின் இடுக்குகளில் ஒன்றுக்கு மேற்பட்ட குளவிக்கூடுகள் இருக்கும். அருகில் போவதற்கே சிறுவனான எனக்குப் பயமாக இருக்கும். பெரிய குளவி ஒன்று அடிக்கடி ரீங்காரமிட்டபடி சுற்றிச்சுற்றி வரும். கொஞ்சநாள் பொறுத்தால், கூட்டை உடைத்துக்கொண்டு குஞ்சுக்குளவி வெளியே போய்விடும், அதுவரை பக்கத்தில் போகாமல் இரு என்பார் பாட்டி.

புளியங்கொட்டையைப் பார்க்கும்போதெல்லாம் இந்தக் கேள்வி என் மனத்தில் எழுந்துகொண்டே இருக்கும்:  காக்கையின் கூட்டையும், குளவியின் கூட்டையும் காப்பாற்ற நினைப்பவர்கள், புளியமரத்தை வெட்ட நினைப்பது சரியா? நியாயமா?
****

எங்கள் வீட்டருகில் ஒரு தேநீர்க்கடை இருந்தது. காலையில் ஐந்தரை மணிக்கெல்லாம் கடை திறந்துவிடும். உடனே கூட்டம் சேர்ந்துவிடும். குறைந்தது பத்துப் பேராவது இருப்பார்கள். தேநீர் தம்ளரைக் கையில் பிடித்தபடி அன்றைய ‘தினத்தந்தி’க்காக ஆவலோடு காத்திருப்பார்கள். பேப்பர் வந்தவுடன் அதை நான்குபேர் பிரித்துப் பங்குபோட்டுக் கொண்டு படிப்பார்கள். சிலர், தன் கையில் மூன்றாவது பக்கம் இருந்தாலும், அடுத்தவர் கையில் இருக்கும் முதல் பக்கத்தையே எட்டிஎட்டிப் பார்த்துக்கொண்டிருப்பதும் உண்டு. அதுவரை தேநீர் மட்டுமே அருந்தியவர்கள், பேப்பர் கிடைத்த மகிழ்ச்சியில் ஒரு பொறையோ, ‘பன்’னோ ஆர்டர் செய்வதும் உண்டு. சிலர், எதுவுமே சாப்பிடாமல் வெறும் பேப்பரையே கையில் வைத்துக்கொண்டு ஒருமணிநேரம் பொழுதுபோக்குவதும் உண்டு.

பகல் உணவுக்காகப் பள்ளியிலிருந்து நான் வரும்போது பேப்பர் படிக்கப்போவேன். அப்போது பேப்பரின் வடிவம் சிதைந்திருக்கும். கண்டபடி மடிந்திருக்கும். கசங்கியிருக்கும். ஓரங்களில் எண்ணெய்ப் பசையும் கலந்திருக்கும். நடுவில் சில பக்கங்கள் கிழிந்திருக்கும்.

மாலையில் பஜ்ஜி போடுவார் கடைக்காரரின் மனைவி.  உடனே கடைக்காரர், மீதியிருக்கும் தினத்தந்தியின் பக்கங்களைப் பதினாறாக மடித்துக் கிழிப்பார். கிழித்த துண்டுகளை ஒரு நீண்ட இரும்புத்தண்டில் செருகுவார். பஜ்ஜி கேட்போருக்கு இந்தத் துண்டுப் பேப்பரில்தான் பஜ்ஜியை வைத்துச் சுற்றித்தருவார். பஜ்ஜியைச் சாப்பிட்டவர்கள், அந்த எண்ணெய்ப் பசையைப் போக்க மேலும் சில தினத்தந்தித் துண்டுகளை விரும்பிக்கேட்டு, கை துடைத்து, எறிவார்கள்.

மாலையில் நான் போய், ‘மாலைமுரசு’ படிப்பேன். அப்போது மீதியிருக்கும் தினத்தந்தித் துண்டுகள் என் கண்ணில்படும். ஒன்றில் ‘சதக் என்று குத்தி’ என்று பெரிய எழுத்தில் இருந்தது. ‘குத்தி’ என்று இருந்ததே, குத்தி’னானா’, குத்தி’னாளா’ என்று அறிய ஆவலாக இருக்கும். ஆனால் மீந்திருக்கும் எந்தத்துண்டிலும் அதனுடைய தொடர்ச்சிப் பகுதி இருக்காது. யார், யாரைக் குத்தினார்கள், எந்த ஊரில், என்ன தகராறு  என்று தெரிந்துகொள்ளாவிடில் தலை வெடித்துவிடும் போலிருக்கும். உடனே பக்கத்தில் இருக்கும் வேறு ஏதாவது தேநீர்க்கடைக்குப் போய் அன்றைய தினத்தந்தியைத் தேடுவேன். அங்கும் இதே நிலைதான். காலை தினத்தந்தி, மாலைக்குள் துண்டுதுண்டாகி இருக்கும். அது மட்டுமல்ல, அங்கிருந்த ஒரு துண்டில்  ‘வரும் திங்கட்கிழமை ஆறுமணிக்கு’ என்ற வாசகம் கண்ணில் படும். அதன் தொடர்ச்சித்துண்டு இருக்காது. அந்த ஆறுமணிக்கு என்ன நடக்கப்போகிறது, எந்த இடத்தில் நடக்கப்போகிறது  என்று தெரிந்துகொள்ளாமல் தூக்கம் வராதுபோல் ஆகிவிடும்.

அப்படி ஒருநாள் மாலைமுரசு படித்துக்கொண்டிருந்தபோது, பஜ்ஜி வாங்கவந்த ஒருவருக்கு, தினத்தந்தியின் கிழித்த துண்டு இல்லாததால், அன்றைய முரசின் ஒரு பகுதியையே கிழித்து, அதில் பஜ்ஜியைச் சுற்றிக் கொடுத்தார் கடைக்காரர். வந்தவர் பஜ்ஜியைச் சுவைத்துவிட்டு, ‘நேற்று மாதிரி டேஸ்ட்டா இல்லையே’ என்று முகம் சுளித்தார். கடைக்காரருக்கு நகைச்சுவை உணர்வு அதிகமோ, அல்லது உண்மையைத்தான் சொன்னாரோ தெரியவில்லை. சொன்னார்: ‘அதொண்ணும் இல்லீங்க! நேற்று ‘தந்தி’ பேப்பரில் சுற்றிக்கொடுத்தேன். இன்று ‘முரசு’ பேப்பரில் கொடுத்தேன் இல்லையா, அதாங்க டேஸ்ட்டு வித்தியாசப்படுது.’

அறிவுச்சுவையை ஊட்டுவதற்காக ஆரம்பித்த பேப்பரை, இப்படி பஜ்ஜிக்கான பேப்பராக மாற்றுவது நியாயமா? ஆதித்தனார் பார்த்தால் என்ன சொல்லுவார்?

© Y Chellappa

புதன், மே 10, 2017

அம்மாவுடன் பேசினீர்களா?

பதிவு எண் 38/ 2017
அம்மாவுடன் பேசினீர்களா?
   -இராய செல்லப்பா

இன்றைய குழந்தைகள் புத்திசாலிகள். காரணம் அவர்களின் தாயார்கள் புத்திசாலிகள். (அதற்குக் காரணம் அந்தத் தாயார்களின் பெற்றோர்கள் புத்திசாலிகள் with some exceptions- அதாவது நம்மைப்போல.)

ஆனால் இன்றையக் குழந்தைகளைப் புத்திசாலியாக்குவதில்  முக்கியமான காரணியாக இருப்பது, தங்கள் குழந்தைகளுடன் அத் தாய்மார்கள் தொடர்ந்து நடத்தும் தரமான பேச்சுவார்த்தையே (க்வாலிட்டி கான்வர்சேஷன்) என்றால் மிகையில்லை.

பள்ளியில் இருந்து வந்தவுடன், லஞ்ச்பாக்ஸை திறந்து பார்த்து, மிச்சம் மீதி இருந்தால் ‘ஏன் முழுதாகச் சாப்பிடவில்லை’ என்று கேள்வி கேட்பது; மற்றப் பிள்ளைகள் முழுதாகச் சாப்பிடுகிறார்களா, மீதம் வைக்கிறார்களா, என்ன மாதிரியான உணவு கொண்டுவருகிறார்கள், நாளை உனக்கும் அதுபோலச் செய்து கொடுக்கட்டுமா என்று கேட்பது;

மீதமின்றிச் சாப்பிட்டிருந்தால், பாராட்டுவது; கூடவே சிறுநீர் கழித்தாயா, தண்ணீர் குடித்தாயா என்று கேட்பது; தரும் பதிலில் இருந்து பள்ளியின் சூழல் சரியாக இருக்கிறதா என்று அவ்வப்பொழுது தெரிந்துகொள்வது; தொடர்ந்து முன்னேற்றமில்லை என்றால், குழந்தையை வேறு பள்ளிக்கு மாற்றலாமா என்று யோசிப்பது;

வீட்டுப்பாடங்களைச் செய்வதற்கு உதவுவது; தேர்வுகளுக்கு முதல்நாள், கேள்வி கேட்டு, பதில் சரியாக வருகிறதா என்று சரிபார்ப்பது;

விடுமுறை நாட்களில்  காலையும் மாலையும் பாட்டு, நடனம், ஓவியம் அல்லது அறிவியல், விளையாட்டு, கராத்தே, ரோபோட்டிக்ஸ் என்று படிப்பல்லாத பிற வகுப்புகளில் சேர்ப்பது; அங்கு நடந்தவற்றை விவாதிப்பது;

பத்திரிகைகளிலும், மால்களிலும் நடைபெறும் போட்டிகளிலும், க்விஸ்களிலும் கலந்துகொள்ள ஏற்பாடு செய்வது; தொலைக்காட்சிகளில் நடக்கும் சூப்பர் சிங்கர், ஜோடி, கோடீஸ்வரன் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அனுமதிப்பது; அதற்கேற்ற பயிற்சிகளுக்கு நேரமும் பணமும் செலவழிப்பது;  

ம்மாதிரியாக, இன்றைய தாய்மார்கள், தம் குழந்தைகளுடன் தொடர்ந்த, இடைவிடாத பேச்சுத்தொடர்பில் இருப்பதால்  அம்மாவிடம் தொப்புள்கொடி உறவையும் தாண்டியதொரு அழகிய, இனிமையான, என்றும் நினைவுகூரத்தக்க உறவைப் பெறுகிறார்கள் என்றால் மிகையாகாது.
-         
  இம்மாதிரியான உறவுமுறை தந்தைக்கும் குழந்தைக்கும் பெரும்பாலும் ஏறபடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையால் அதிகநேரம் வீட்டில் இருக்கமுடிவதில்லை என்பதும் தன் பிள்ளைகளின் வளர்ப்பைத் தனது முக்கியப் பொறுப்பாகப் பெண்கள் ஏற்றுக்கொண்டுவிடுவதும் காரணங்கள்.

ஆனால் சென்ற தலைமுறையில் இதெல்லாம் சாத்தியப்பட்டதா?
தாயாரின் வேலை, சமையலறையையும் பூசையறையையும்  மட்டுமே கருத்தில் கொண்டதாக இருந்தது. தனக்குத் தெரிந்த கலைகளையும் செயல்களையும்  - இசைக்கருவிகள் வாசித்தல், வாய்ப்பாட்டு, நடனம், கோலம் போடுதல், பூத்தொடுத்தல், விதவிதமான சமையல்களும் இனிப்புகளும் செய்தல், நோன்புகள் இருத்தல், பூசைகள் செய்தல், பண்டிகைகளைக் கொண்டாடும் முறைகள் - போன்றவற்றைத் தம் பெண் குழந்தைகளுடன் பகிர்ந்துகொள்ளும்போது நடைபெற்றதுதான் பேச்சுத்தொடர்பு. ஆண் குழந்தைகளுடன் தாயார்களுக்கு அவ்விதமான வாய்ப்புகள் குறைவு.     

வயதாக ஆக, ஆண் குழந்தையின் உலகம், வீட்டைத் தாண்டியதாக மாறுகிறது. மேற்படிப்பு, வேலை என்று அவனது பேச்சுலகில் தாயாருக்கு இருந்த பங்கு மேலும் குறைந்துபோகிறது.

காதலுக்கென்று  ஒரு பருவம் வரும். பார்க்கின்ற பொருளெல்லாம் மயங்கவைப்பதாக இருக்கும்.  ஆண்களில் (சிலருக்கு)  அதுதான் தாயாருடன் மிக நெருக்கமாகப் பேசும் வாய்ப்பைத் தரும். மகன் காதல்வயப்பட்டிருப்பதை வேறு யாரையும்விட முதலில் தெரிந்துகொள்ளும் உள்ளுணர்வு தாயாருக்கு உண்டு. அதன் விளைவாகத் துருவித்துருவிக் கேள்விகள் கேட்டு, அவள் யாரென்று கண்டுபிடித்துவிடும் தருணம் இருக்கிறதே, அதை அம்மகன் மறந்துபோக வாய்ப்பேயில்லை. தாய்-மகன் பேச்சுத்தொடர்பின் உச்சகட்டம் அது. சில மகன்களைப் பொறுத்தவரையில், தம் தாய்களுடன் பேச்சுத்தொடர்பை நிரந்தரமாக நிறுத்திகொண்ட தருணமும் அதுவாகவே இருப்பதுண்டு.

நல்லமுறையில் தாய்-மகன் உரையாடல்கள் நடைபெறும் வீடுகளிலும், அவனுக்குத் திருமணமானபிறகு, தாயானவள்  தொடர்பு எல்லைக்கு அப்பால் போகவேண்டிய கட்டாயம் நேர்கிறது. மனைவியே முழு மனதையும், நடமாடும் இடத்தையும், சிந்தனையையும் ஆக்கிரமித்துக்கொள்கிறாள். ஆண்டிப்பட்டி முதல் அமெரிக்கா வரையில் எழுதப்படாத சட்டம் இதுவே. ஒரே வீட்டில் வசிப்பதோ, வெவ்வேறு ஊர்களிலோ நாடுகளிலோ வசிப்பதோ இந்தச் சட்டத்தை எவ்வகையிலும் பாதிப்பதில்லை.
****
இன்றைக்கு என்ன எழுதலாம் என்று நினைத்தபோது ‘பேச்சு’ என்பதைப் பற்றி எழுதலாமே என்று தோன்றியது. உடனே, என் அம்மாவுக்கும் எனக்கும் ‘பேச்சு’ என்று ஒன்று நடந்ததுண்டா என்று ஆராயத் தோன்றியது. (நீங்களும் நினைவுபடுத்திப் பாருங்களேன்.)

அம்மாவுக்குப் பூஞ்சையான உருவம். காதுகள் மட்டும் சற்றே பெரிதாக இருக்கும். இரண்டு கண்களில் ஒன்றில் பூ விழுந்து, முழி சற்றே வெளியில் பிதுங்கினாற்போல் இருக்கும். குளிர்காலமானால் இருமல் வந்துவிடும். (பின்னால் சென்னைக்கு வந்தவுடன் இருமல் தானாகவே நின்றுபோயிற்று.) இத்துடன் நாங்கள் ஏழைகளாகவும் இருந்துவிட்டதால்,  உறவினர்கள், நண்பர்கள் என்று யாரும் அவரைக் கொண்டாடியது கிடையாது. அதற்காக அம்மா வருந்தவில்லை. தானாகவே தன்னைப் பின்வாங்கிக்கொண்டார். பேப்பர் படிப்பது, விகடன், குமுதம், கலைமகள், பேசும்படம் ஆகிய இதழ்களைப் படிப்பது என்று தன் உலகத்தை வரையறுத்துக்கொண்டார். நாவல்களைப் படிப்பது, லக்ஷ்மி, ராஜம் கிருஷ்ணன், அனுத்தமா, ஆர்.சூடாமணி, தமிழ்வாணன் ஆகியோரின் எழுத்துக்களை என்னோடு பரிமாறிக்கொள்வது என்று அவரது தளம் விரிந்தது. 

மூன்றம் வகுப்பிலிருந்தே விகடன் படிக்கும் சுதந்திரம் மட்டுமல்ல, அம்மா சமையல் செய்துகொண்டிருக்கும்போது தொடர்கதையைப் படித்துக்காட்டும் வழக்கமும் எனக்கு அளிக்கப்பட்டது. தெளிவான உச்சரிப்பும், வேகமான வாசிப்பும் எனக்கு மிக இளம்வயதிலேயே அம்மா வழங்கிய கொடைகள். எப்பொழுதாவது நாலணா கொடுத்து, ‘கண்ணன்’ இதழை வாங்கிக்கொள்ளச் சொல்வார். என் வாழ்வின் மிக நெகிழ்ச்சியான தருணங்கள் அவை. அந்த நாலணாவுக்கு ஆயிரம் செலவுகள் இருந்தன. அதை எனக்காகத் தியாகம் செய்தவர் அவர்.   

ஆனால், அப்போதெல்லாம் கூட, அவருடன் பேசியிருக்கிறேனா? நிச்சயமாக இல்லை. அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, ஆமாம் இல்லை என்று சில வார்த்தைகளைச் சொன்னதல்லாமல் வேறு பேசியதில்லை. ‘அம்மா, நீ சாப்பிட்டாயா, உனக்கு உடம்பு சரியில்லையே, டாக்டரிடம் போகலாமா? தீபாவளிக்கு உனக்கு ஏன் புதுப்புடவை எடுக்கவில்லை?...’ என்ற சாதாரணமான உரையாடல் கூட நிகழ்ந்ததாக நினைவில்லை.

அப்பாவின் கோபம் பிரசித்தமானது. போதிய வருமானம் இல்லாமையே முக்கியக் காரணமாக இருக்கும். இரவுநேரங்களில் அம்மாவின் விசும்பல் கேட்டுக்கொண்டே இருக்கும். அப்போதும்கூட, ‘அம்மா அழாதே’ என்று நான் பேசியிருக்கிறேனா? இல்லையே, ஏன்?

வீட்டில் பல வருடங்கள் பசுமாடும் கன்றும் இருந்தன. அவைகளுக்குப் பச்சைப்புல் வேண்டுமே, அம்மாவும் நானும் ஒரு கூடையும் உடைந்த சட்டுவமும் எடுத்துக்கொண்டு ஆற்றங்கரை நெடுக நடப்போம். கண்ணில் தெரிந்த புற்ளை எல்லாம் வெட்டிக் கொண்டுவருவோம். அப்போதும் ஏதாவது பேசியிருக்கிறேனா? இல்லையே! கண் பார்க்கும், கை செய்யும். வாய் மௌனமாகவே இருக்கும்.

நினைவுகளைக் கிள்ளிப் பார்த்ததில் மூன்று முறை அம்மா பேசியது மட்டும் நினைவில் இருக்கிறது.

தாத்தா (அப்பாவின் அப்பா) அப்போது தேன்கனிக்கோட்டையில் வசித்துவந்தார். பாட்டிக்கு மிகவும் உடம்பு சரியில்லாமல் இருந்ததாம். உதவிக்கு என்னை அழைத்துப் போகட்டுமா என்று கேட்டார். அது ஒரு ஜூன்மாதம் முதல்தேதி. இன்னும் சில தினங்களில் பள்ளிக்கூடங்கள் திறந்துவிடும். ‘இவன் அங்கேயே படிக்கட்டுமே’ என்றார். அப்பா சரியென்று சொல்லிவிட்டார். ஒரு வாரத்தில் டி.சி. வாங்கி அனுப்பித்தருகிறேன் என்றார். அவ்வளவுதான். அடுத்த சில மணி நேரத்தில் என் பயணம் தொடங்கிவிட்டது.

அம்மாவுக்கு அப்பாவையோ தாத்தாவையோ எதிர்த்துப் பேசிப் பழக்கமில்லை. என்னுடைய இரண்டு உடைகளையும் எடுத்துவைத்தார். ஆறாம் வகுப்பு முடிந்து ஏழாம் வகுப்பு போகவேண்டிய தருணம். பள்ளி திறந்த முதல்நாளில்தான் இங்கு ரிசல்ட் போடுவார்கள். உடனே அடுத்த வகுப்பில் சென்று அமரவேண்டும். அப்புறம்தான் டிசி தருவார்கள்.

அதற்குள் அந்த ஊரில் பள்ளி திறந்துவிடுவார்களே, சேர்வதில் தாமதம் ஆகிவிடுமோ என்று  கவலைப்பட்டேன். (அப்படி எதுவும் இன்றி முதல்நாளே ஒரு டெஸ்ட் வைத்து ஏழாம் வகுப்பில் என்னைச் சேர்த்துக்கொண்டார்கள்.)

பஸ் கிளம்பும்போது அம்மா வந்து என்னைக் கட்டிக்கொண்டார். கண்ணிலிருந்து குபுகுபுவென்று நீர் வழிந்து என் சட்டை ஈரமாகியது. தாத்தா, பாட்டி சொல்படி நடந்துகொள்ளணும்டா ராஜா! பாட்டி ரொம்ப நல்லவா. ஒனக்கு வேளாவேளைக்குச் சாப்பாடு கெடைக்கும். ஒரு பருக்கையையும் வீணாக்கக்கூடாது. வீடு பெருக்கறது, கடைக்குப் போறது, எல்லா வேலையும் நீதான் செய்யணும். மத்தப் பசங்களோட ரொம்ப சேரவேண்டாம். நல்லாப் படிக்கணும். அடுத்த வருஷம் லீவு விட்டதும் வரியா? என்று முத்தமிட்டார். பிறகு யாருக்கும் தெரியாமல் என்னிடம் நாலணா நாணயத்தைக் கொடுத்தார். ‘அங்க விகடன் வரும்னு நெனைக்கிறேன். இந்த வாரம் மட்டும் காசுகொடுத்து வாங்கிக்கோ. அப்புறம் லைப்ரரில படிச்சுக்கோ. தெருவிளக்கு ரொம்ப நல்ல கதை. விட்டுடாதே’ என்றார்.

அதற்கு என்ன பதில் சொன்னேன் என்று நினைவில் இல்லை. சரிம்மா என்று தலையசைத்தேன் என்றே நினைவு.

(தேன்கனிக்கோட்டை போனதும் நாலணா கொடுத்து அந்த வாரத்து விகடன் வாங்கினேன். அவ்வளவுதான், ‘பள்ளிக்கூடம் படிக்கிறவனுக்கு ஆனந்த விகடன் கேக்குதா? கதை கிதையெல்லாம் படிச்சுட்டு பரிட்சையில் கோட்டைவிட்டால் எனக்குத்தான் கெட்ட பெயர் உண்டாகும்’ என்று தாத்தா இடிமுழக்கம் செய்தார். நல்லவேளை, எனக்கு அடுத்த வீட்டில் இருந்த ஒரு மாமி விகடன், குமுதம், கல்கண்டு மூன்றும் வாங்கிக்கொண்டிருந்தார். அவ்வப்பொழுது கடைக்குப்போய் ரவையோ சர்க்கரையோ வாங்கிக்கொண்டு வரச்சொல்லுவார். அதற்கு ஈடாக அவர் வீட்டில் எப்போது வேண்டுமானாலும் இந்த இதழ்களைப் படிக்க அனுமதி கொடுத்தார். அவர் வாழ்க!)    

அம்மா சொன்ன ‘ஒரு பருக்கையையும் வீணாக்கக்கூடாது’ என்ற வார்த்தைகளை நான் இன்றும் மறக்கவில்லை. என் குழந்தைகளுக்கும் அதையே அடிக்கடிச் சொல்வேன்.
*****
அம்மாவுக்கு ஒரு கண்ணில் பூவிழுந்து பார்வை போய்விட்டது. சின்ன வயதிலிருந்தே இரண்டாவது கண்ணில்தான் பார்த்துக்கொண்டிருந்தார். அந்தக் கண்ணில் ஒருநாள்  கேடராக்ட் வந்துவிட்டது. எப்போதோ வந்திருக்கவேண்டும். யாரிடமும் சொல்லவில்லை. ஒருநாள் என்னிடம் வந்து ‘என்னால முடியலேப்பா. கண்ணு கொஞ்சம் கூடத் தெரியலே’ என்றார். அப்போது அவருக்கு வயது அறுபத்து மூன்று இருக்கலாம்.

என் மூத்த மகள் பள்ளியிறுதி முடித்து, கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வு எழுதப்போகும் சமயம். அருகில் இருந்த இரண்டு மருத்துவர்கள் கண்ணைப் பரிசோதித்துவிட்டு, ‘முதலில் பல்லில் உள்ள சொத்தைகளை அகற்றி வந்தால்தான் கண் ஆப்பரேஷன் செய்யமுடியும்’ என்று கூறிவிட்டார்கள். ஆப்பரேஷனுக்குப் பிறகு கண்பார்வை கிடைக்குமல்லவா என்று கேட்டதற்கு, உறுதியாகச் சொல்லமுடியாது என்றார்கள். ஆப்பரேஷன் செய்து, இருக்கின்ற மங்கலான பார்வையும் பறிபோய்விட்டால் என்ன செய்வது என்ற பயம் அம்மாவைத் தொற்றிக்கொண்டது. பல் டாக்டரிடம் போனோம். இரண்டுமாத டிரீட்மென்ட் செய்யவேண்டும் என்றார். அப்படியானால் அதற்குப்பிறகுதான் கண்ணில் கைவைக்க முடியுமா? அதுவரை என்ன செய்வது?

அப்போது டாக்டர் ராகவன் என்ற புதிய கண் டாக்டர் அறிமுகமானார். வயது அறுபத்தைந்துக்குமேல் இருக்கும். இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர். அவர் சிரித்தார். ‘இந்த சிவில் டாக்டர்களே இப்படித்தான். பயந்தாங்கொள்ளிகள். பல் சரியில்லை, டயபெட்டிஸ் இருக்கிறது என்று தள்ளிப்போடுவார்கள். நான் போர்முனையில் இருந்தவன். ஒருவனுக்குக் கண்ணில் குண்டு பாய்ந்துவிட்டது என்றால் பல்லையும் மற்றதையும் பார்த்துக்கொண்டிருக்கமுடியுமா? அடுத்த நிமிடம் ஆபரேஷன் செய்தாகவேண்டுமே!அதனால், நீங்கள் பயப்படவேண்டாம் அம்மா! நான் ஆப்பரேஷன் செய்கிறேன். நாளை மறுநாள் காலை ஆறுமணிக்கு வந்துவிடுங்கள்.  நிச்சயம் உங்களுக்குக் கண்பார்வை கிடைக்கும்’ என்று கம்பீரமாக அவர் சொன்னபிறகுதான் அம்மாவின் பயம் நீங்கியது. 

அதேபோல் ஆப்பரேஷன் நடந்து. கண்பார்வை கிடைத்தது. ஆனால், கண் தெரிய ஆரம்பித்ததும் அம்மா செய்த முதல் காரியம் என்ன தெரியுமா?

வீட்டுக்கு எதிரில் ஒரு பழைய பேப்பர் கடை இருந்தது. அங்குபோய், பத்து ரூபாய் கொடுத்து, இருபது முப்பது தினத்தந்தி பேப்பர்களை வாங்கிக்கொண்டுவந்தார். கொஞ்ச நாளைக்கு கண்களுக்கு அதிக வேலை கொடுக்கவேண்டாம் என்று டாக்டர் சொன்னதை அறவே மறந்தார். இரண்டு மூன்று நாளில் எல்லாப் பேப்பர்களையும் ஒருவரி விடாமல் படித்துமுடித்துவிட்டார்!

அதாவது, தனக்குக் கண்பார்வை வந்ததைக் கொண்டாடும் விதமாகவும், ஆப்பரேஷன் செய்த கண் எந்த வகையிலாது தன்னைக் கைவிட்டுவிடுமோ என்று சோதிப்பதற்காகவும் அப்படிச் செய்தாராம்.

‘நான் பயந்துண்டே இருந்தேன். எனக்கு நீதாண்டா  கண்ணைக் கொடுத்தே’ என்றார் அம்மா. அந்த வார்த்தைகள் நினைவில் இருக்கிறது.
***
ஏற்கெனவே தளர்ந்திருந்த உடல். கண் ஆப்பரேஷனைத் தாங்கும் சக்தி இல்லை. கண்ணுக்கும் அம்மா அதிகப்படியான வேலை கொடுத்துவிட்டார். எல்லாமாகச் சேர்ந்து ஒருநாள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கும்நிலைக்குக் கொண்டுபோனது.

ஒரேவாரம் இருந்தார். ஒரு குழந்தைபோலானார். நான்தான் உடன் இருந்தேன். ‘நிச்சயம் நான் பிழைக்கமாட்டேன்...’ என்றார். பிழைக்கவில்லை. எனக்கு உடல் ஊனமுற்ற தங்கை ஒருத்தி இருந்தாள். ‘அவளைப் பார்த்துக்கொள்’ என்றார். அதுதான் அவர் பேசிய கடைசி வார்த்தை.
****
இப்போது எழுத முடிகிறது. அப்போது பேச முடியவில்லையே ஏன்? இத்தனைக்கும் அம்மா, அப்பா தனியாக வேறொரு வீட்டில்தான் குடியிருந்தார்கள். போய்ப் பேசுவதை மனைவியோ, மற்றவர்களோ தடுக்கப்போவதில்லை. ஆனால் பேசவில்லையே ஏன்?

புளியம்பழமும் ஓடும் போலப் பிரிந்துவிடுவதுதான் மனித உறவா? விடை தெரியவில்லை.
****
© Y Chellappa