ஞாயிறு, ஏப்ரல் 30, 2017

தரமணியில் ஒரு நவமணி

பதிவு எண் 34/2017
தரமணியில் ஒரு நவமணி
-இராய செல்லப்பா  

‘தரமணி’ என்ற இடம் சென்னையில் எங்குள்ளது என்று இப்போது கேட்டால் எளிதாகச் சொல்லிவிடுவார்கள்: ஐ.ஐ.ட்டி.யின் பின்புறம், மத்தியகைலாஷ் அருகில், டைடல் பார்க்கின் பின்புறம், வேளச்சேரியில் இருந்து அடையார் போகும் வழியில் ...என்று. ஆனால் இருபத்தைந்து வருடங்கள் முன்பு தரமணி என்ற பெயரைக் கேள்விப்பட்டவர்கள் குறைவு. அவர்களில் நானும் ஒருவன்.

அடையாரில் வங்கி மேலாளராகப் பணிமாறுதல் பெற்று வந்த நிமிடமே, தரமணியைத் தெரிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.
****
வங்கி மேலாளரின் முக்கியமான கடமைகள் இரண்டு:
1 ஏற்கெனவே கொடுத்துள்ள கடன்களை வசூலித்தல்
2 புதிய கடன்களைக் கொடுப்பதற்காக டெபொசிட் சேகரித்தல்

வங்கியின் புதிய கிளையொன்றில் மேலாளராகப் பதவி ஏற்பவர் பாக்கியசாலி. அவருக்கு முதல் கடமை இருக்காது. இரண்டாவது கடமைதான்  படுத்தும். பழைய கிளையில் மேலாளராகப் பதவியேற்றால் முதல் கடமையே முக்கியக் கடமையாகும்.

நமக்கு முன்னால் இருந்த மேலாளர்கள் கொடுத்துச் சென்ற கடன்களை வசூலிப்பதற்குத்தான் முன்னுரிமை கொடுக்கவேண்டும். ஏனென்றால், கடன்களை மூன்று வருடங்களுக்குள் வசூலிக்கவில்லை என்றால், அதன்பிறகு வசூலிப்பதில் சட்டச் சிக்கல்கள் ஏற்படும்.  வங்கியில் கடன் வாங்கும்போது, புரோநோட்டு எனப்படும் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டிய தாளில் கடன்தாரரின் கையொப்பம் பெறப்படும். இந்த புரோநோட்டின் ஆயுள் மூன்று வருடங்கள் மட்டுமே. எனவேதான், பெரும்பாலான வங்கிக்கடன்கள் மூன்றாண்டுத் தவணைக்குள் செலுத்தும்படியாகவே தரப்படும். (கல்விக்கடன், வாகனக்கடன், வீட்டுக்கடன், தொழில்கடன்கள் போன்றவை மூன்றாண்டுகளுக்கு மேலும் செல்லக்கூடியவை என்பதால் அந்தக் கடன்கள் வழங்கும்போது மூன்றாண்டுகளுக்கு மேலும் செல்லத்தக்கதான வேறு சில ஆவணங்கள் கடன்தாரரிடமிருந்து பெறப்படும்.)

ஆனால், நடைமுறையில், பல்வேறு காரணங்களால், மூன்றாண்டுக்குள் பல கடன்கள்  திருப்பிச் செலுத்தப்படாமல் இருக்கும். அந்த புரோநோட்டுக்கள் காலாவதியாகிவிடும் அபாயம் ஏற்படும். எனவே, அவற்றின் ஆயுளை நீடிப்பதற்காக, கடன்தாரரிடமிருந்து இன்னொரு ஆவணத்தில் கையெழுத்து வாங்கவேண்டும். அதற்குக் ‘கடன் உறுதி ஏற்பு’ ஆவணம் என்று பெயர். Acknowledgement of Debt -சுருக்கமாக AOD என்று  ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதில் என்ன எழுதியிருக்கும்?

‘நான் தங்கள் வங்கியில்....தேதியில், ... என்ற கடன் எண்ணில், ரூபாய்.... ஐ, கடனாகப் பெற்றுக்கொண்டேன். அதற்காக மேற்படி தேதியில் புரோநோட்டு எழுதிக்கொடுத்திருக்கிறேன். மேற்படி புரோநோட்டின் கீழ், இன்றைய தேதியில்......(தேதி)  இன்னும் ரூபாய்.....பாக்கித்தொகையாக உள்ளது என்பதை இதன்மூலம் உறுதி செய்கிறேன்’ என்று இருக்கும். இதன் விளைவு என்னெவென்றால், இந்த AOD பெறப்பட்ட நாள் முதற்கொண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேற்படி கடன் ஆவணங்கள் நீட்டிக்கப்படும்.  
****
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய அரசில் வி.பி.சிங் நிதியமைச்சராக இருந்தபோது ஜனார்த்தன் பூசாரி என்ற மங்களூர்க்காரர் அவருக்குத் துணையமைச்சராக இருந்தார். வங்கித்துறைக்கு இவரே தனியமைச்சர். அப்போது இவர் ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல.

ஒவ்வொரு வங்கியும் ஒவ்வோராண்டும் எவ்வளவு பேருக்குக் கடன் வழங்கியாகவேண்டும் என்று இவர்தான் நிர்ணயம் செய்வார். அந்தந்த ஊரிலுள்ள காங்கிரசார், அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப, கடன் விண்ணப்பங்களைப் பெற்று, அவற்றை சம்பந்தப்பட்ட கிராமப் பஞ்சாயத்து, அல்லது, நகராட்சி அல்லது மாநகராட்சி அதிகாரிகள் மூலம் குறிப்பிட்ட வங்கிகளுக்கு அனுப்புவர். உள்ளூர் நிலவரத்தைப் பொறுத்து, கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளும், தமிழ்நாட்டில் திமுக-வினரும் இந்தப் பட்டியலைத் தயாரிப்பதில் காங்கிரசாருக்கு ஒத்துழைப்பு நல்கினர்.

பட்டியல் வந்தவுடன், வங்கி அதிகாரிகள் அப்பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களைச் சந்தித்து உண்மை நிலையை ஆராய்ந்து ஒரு மாத காலத்திற்குள் கடன் வழங்கவேண்டும். இல்லை, இல்லை, கடன்வழங்கியாக வேண்டும். மறுப்பதற்கு கிளைமேலாளர்களுக்கு அதிகாரம் இல்லை என்று ஜனார்த்தன் பூசாரி தெளிவுபடுத்தியிருந்தார். அப்படி மறுப்பதானால், உரிய காரணத்தை எழுத்துமூலம் தன்னுடைய மண்டல மேலாளருக்குத் தெரிவித்து அவருடைய அனுமதி பெறவேண்டும். நடைமுறையில் இது சாத்தியமில்லை. பட்டியல் வந்தவுடன், எல்லாருக்கும் கடன் வழங்கிவிடு என்றுதான் மண்டலமேலாளர் உத்தரவிடுவார். மேலும், பட்டியல் வரும்முன்பே, சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகள் தமது ஆதரவாளர்களோடு  திரண்டுவந்து வங்கியின் வாசலில் முழக்கமிடுவது வாடிக்கையாக இருக்கும். எனவே மேலாளர்கள் இந்தப் ‘பட்டியல் கடன்’களை முணுமுணுக்காமல் வழங்கிவிடுவது வழக்கம்.

வழங்கிவிடுவது என்றால் வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுப்பது என்று பொருளல்ல. ‘உங்களுக்கு இந்தக் கடனை வழங்க ஒப்புக்கொள்கிறோம். வங்கிக்கு வந்து உரிய ஆவணங்களில் கையொப்பம் இட்டுக் கடனைப் பெற்றுக்கொள்ளவும்’ என்ற கடிதத்தை வழங்குவது என்று பொருள்.       

இப்படிக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சியைத் தமது கட்சியை வளர்க்கும் பணியாகப் பயன்படுத்திக்கொண்டார் ஜனார்த்தன் பூஜாரி. ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் பெரிய விழாவாக ஏற்பாடுசெய்து, தாமே வந்து தலைமை தாங்கி, இந்தக் கடன்தாரர்களுக்கு வங்கியின் கடிதத்தை வழங்கி, அதை ஊடகங்களில் பெரிதாக வெளியிடுவார். கடன்பெற்றவர்களும் தாங்கள் வங்கிகளுக்கு ஏதோ ஒரு மிகப்பெரிய உதவியைச் செய்துவிட்டதாகப் பெருமிதம் கொள்வர். இந்த நிகழ்வின்போது வங்கி அதிகாரிகளைத் தன்னால் முடிந்தமட்டும் அசிங்கப்படுத்துவார் பூஜாரி.

‘கடன் வழங்குவதற்கு வங்கி அதிகாரிகள் இலஞ்சம் கேட்டார்களா?’ என்று மேடையில் விண்ணப்பதாரர்களைக் கேட்பார். ‘அஞ்சவேண்டாம், உண்மையைச் சொல்லுங்கள். அப்படி யாராவது இலஞ்சம் கேட்டிருந்தால் இந்த மேடையிலேயே அவர்களை சஸ்பெண்டு செய்கிறேன்’ என்று மிரட்டுவார். அந்த வங்கியின் தலைவரும் மேடையில் இருப்பார். அவரால் வெறுமனே முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அமைச்சரின் முகத்தை நோக்குவதை மட்டுமே செய்யமுடியும். மொத்தத்தில், வங்கி மேலாளர்களை அச்சுறுத்துவதற்காகவும், கடன் வழங்க முன்வராத அதிகாரிகளை மக்கள் மத்தியில் சிறுமைப்படுத்துவதற்காகவுமே விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தோன்றும். வங்கி அதிகாரிகளின் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அமைச்சரின் போக்கு மாறவில்லை.

இதன் விளைவாக, அடுத்த சில நாட்களில், வங்கியின் தலைமையகத்திற்கு நூற்றுக்கணக்கில் புகார்க்கடிதங்கள் போய்ச்சேரும். (‘எனக்குக் கடன் வழங்க 500 ரூபாய் இலஞ்சம் கேட்டார் உங்கள்.... கிளை மேலாளர்’ போன்ற புகார்கள்.) தமிழ்நாட்டின் பல கிராமங்களில் பெரும்பாலும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நூறு ரூபாய் பெற்றுக்கொண்டு இம்மாதிரிப் புகார்க் கடிதம் எழுதிக்கொடுப்பதை ஓர் இயக்கமாகவே நடத்தினார்கள்.

இந்தக் கடன்களில் பெரும்பாலானவை திரும்பிவராது என்று தெரிந்தே  கொடுக்கப்பட்டவை என்பது புரிகிறதல்லவா? இன்னொரு காரணமும் உண்டு. ‘யாரும் திருப்பிச் செலுத்தவேண்டாம். அரசாங்கமே தள்ளுபடி செய்துவிடும்’ என்று கடன்தாரர்களுக்கு அரசியல்தலைவர்கள் முன்கூட்டியே வாக்குறுதி  அளித்தபிறகுதான் கடன்விண்ணப்பத்தில் பலர் கையொப்பம் இட்டிருந்தார்களாம். இதெல்லாம் இன்றைய இளைஞர்களுக்குப் புதுமையாக இருக்கலாம். ஆனால் இவ்வாறு பலகோடிப் பேருக்குத் திரும்பிவராத கடன்களை அளித்த சுமை, இன்னும் பல வங்கிகளின் அடித்தளத்தையே ஆடவைத்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.  
****  
சென்னையில் பல வருடங்களாக இயங்கிக்கொண்டிருந்த கிளைக்கு மேலாளராக நான் மாறுதலாகி வந்தபோது மேற்படிக் கடன்கள் பலவற்றின் ஆயுள் இன்னும் சில மாதங்களில் காலாவதியாகிவிடும் என்ற நிலை இருந்தது. உடனடியாகக் கடன்தாரர்களைச் சந்தித்து, ஒன்று, கடனை முழுவதுமாக வசூளித்துவிடவேண்டும், அல்லது, AOD வாங்கியாகவேண்டும். அம்மாதிரி சுமார் நூறு கடன்கள் தரமணி என்ற பகுதியில் கொடுக்கப்பட்டிருந்தன. ஆகவே தரமணியைத் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க கடமை எனக்கு ஏற்பட்டது.

மேற்படி கடன்களை அடையாறு பகுதியில் வங்கியாளர்கள் ‘வைஜயந்திமாலா கடன்கள்’ என்று பெயரிட்டிருந்தார்கள். காரணம், வைஜயந்திமாலா அவர்கள் தென்சென்னை பாராளுமன்றத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டபோது அவர்சார்பான காங்கிரஸ் கட்சியின் அனுதாபிகளிடம் இருந்து  இம்மாதிரி ஆயிரக்கணக்கில் கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டனவாம். அப்போது காங்கிரசும் திமுகவும் ஒரே கூட்டணியில் இருந்ததால் இவ்விரு கட்சியைச் சேர்ந்தவர்களே கடன்விண்ணப்பம் கொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள். ஆனால் வைஜயந்திமாலாவுக்கு இவர்களில் யாரையும் தெரியாது என்பதே உண்மைநிலை.

இந்தக் கடன்கள் ஒவ்வொன்றும் ஐயாயிரம் ரூபாயில் இருந்து பத்தாயிரம் ரூபாய் வரையான கடன்கள். சிலர் ஓரளவு தவணைகளைக் கட்டியிருந்தார்கள். சிலர் எதுவுமே கட்டவில்லை. இவர்களில் அடுத்த இரண்டு மாதங்களில் காலாவதியாகப் போகும் புரோநோட்டுக்களுக்கு AOD வாங்குவதற்காகக் கிளம்பினோம். நானும் எனது உதவியாளரான ஒரு அதிகாரியும். எனது லாம்பிரெட்டா ஸ்கூட்டரில்.
****
தரமணியில் அப்போது பெரும்பாலும் குடிசைகளே இருந்தன. தேர்தலை முன்னிட்டு அவசரம் அவசரமாகப் போடப்பட்ட குடிசைகள். சாலைகள் இல்லை. ஒற்றையடிப் பாதைகள்தான் இருந்தன. எங்குபார்த்தாலும் வேலிகாத்தான் எனப்படும் சீமைக் கருவேலமரங்கள் கிளைபரப்பி ஒய்யாரமாக வளர்ந்திருந்தன. மாதாகோவில் ஒன்று இருந்த ஞாபகம். தரமணி என்ற பெயர்ப்பலகையே இல்லை. எங்கள் ஆவணங்களில் தெருப்பெயர்கள் இருந்தாலும், தரமணியில் எங்கும் தெருக்களின் பெயர்ப்பலகைகளைக் காண முடியவில்லை.

ஸ்கூட்டரை ஓரிடத்தில் நிறுத்தினோம். மேற்கொண்டு போனால் வண்டி பங்க்ச்சர் ஆகிவிடும் அளவுக்கு முட்கள் கிடந்தன. மேலும் எங்களைப் பார்த்தவுடனேயே ஒரு கும்பல் கைகளில் கட்டைகளோடு எங்களை நோக்கி வந்தது. எனவே ஒதுங்கினோம்.

‘யார் நீங்கள்? இந்த வேளையில் தரமணியில் உங்களுக்கு என்ன வேலை?’ என்றார் அவர்களில் அதிக முரடராகக் காணப்பட்ட ஒருவர். மற்றவர்கள் தம் கைகளில் இருந்த கட்டைகளைத் தயார்நிலையில் வைத்துக்கொண்டனர்.

‘வணக்கம் நண்பரே! நாங்கள் உங்களுக்கு மிக அருகில் உள்ள இந்திராநகரில் இருந்து வருகிறோம்’ என்றேன். உதவியாளர் எங்கள் வங்கியின் பெயரைச் சொன்னார்.’சார் தான் புது மேனேஜர்’ என்று அறிமுகப்படுத்தினார்.

முரடர் தலைவர் சற்றே பின்வாங்கினார். கும்பலைப் பார்த்துக் கலைந்துசெல்லுமாறு உத்தரவிட்டார். அவர்களும் விலகிச் சென்றனர்.

‘நீங்க புது மேனேஜர் என்பதால் விடுகிறோம். இதுவே பழைய மேனேஜராக இருந்தால் இவ்வளவு தூரம் கூட வந்திருக்க முடியாது. அதை விடுங்க. போனவரப் பத்தி நாம்ப ஏன் பேசணும்? நீங்க வந்த  விஷயம் சொல்லுங்க’ என்று அதிகார தோரணையில் கேட்டார். சொன்னேன். கிட்டத்தட்ட நூறு பேரிடம் கடன் வசூலிக்கவேண்டும். குறைந்தபட்சம் AOD யாவது வாங்கவேண்டும் என்றேன். அவ்வளவுதான். மனிதர் பொரிந்துதள்ளி விட்டார்.

‘கடனை வசூல் பண்ணணுமா? பண்ணிடுவீங்களா? நான் இருக்கிற வரையில் அது நடக்குமா? சரி, போய் வசூல் பண்ணிக்குங்க...’ என்று ஆக்ரோஷமாகக் கூறியவர், ஒரு விசில் அடித்தார். உடனே கலைந்துபோன கும்பல் மீண்டும் வந்து சூழ்ந்துகொண்டது. கைவசம் கட்டைகள் தயார் நிலையில்.  

என் உதவியாளருக்கு இந்த அனுபவம் பழகியிருக்கவேண்டும். என் காதருகே வந்து ‘இவனுங்களோட இதே ரோதனை சார். ஊருக்குள்ளே விடமாட்டங்க. பேசாம சமாதானமாப் போயிடலாம். இன்னொருநாள் வரலாம்’ என்றார். ஆனால் அது சரியாகப் படவில்லை எனக்கு.

‘வழியை விடுங்க. நாங்க அரசாங்க வங்கியிலிருந்து வருகிறோம். எங்களைத் தடுப்பது சரியில்லை. அதோட, கடன் வாங்கினவங்கள மட்டும்தான் நாங்க பார்க்கப்போகிறோம். மத்தவங்களுக்கு என்ன வேலை? தயவுசெய்து எங்களோட வந்து தெருக்களையாவது அடையாளம் காட்டுங்க’ என்றேன்.

உடனே முரடர் தலைவன் இளக்காரமாகத் தனது நண்பன் ஒருவனைப் பார்த்து ‘சார் சொல்றதும் சரிதாண்டா. கூட்டிக்கினு போய் அடையாளம் காட்டு. ஒன்னு ரெண்டு காட்டு. போதும்’ என்று உத்தரவிட்டான். பின்னாடியே நாங்கள் போனோம். கும்பலும் பின்தொடர்ந்தது.

அவர்கள் மட்டும் இல்லையென்றால் சத்தியமாகப் பத்தடி கூட நடந்திருக்க முடியாது. குடிசைகளில் இருந்து கழிவுநீரானது சாலைகளில் வழிந்து பாசிபடிந்திருந்தது. கால்வைத்த இடமெல்லாம் வழுக்கியது. தவறினால் முள்வேலிமீதுதான்  விழவேண்டும். அல்லது கொர்..கொர் என்று முனகியபடி கூட்டமாக நடமாடிகொண்டிருந்த பன்றிகளின் மீதுதான் விழவேண்டும்.

எங்கள் ஆவணங்களில் வீட்டு எண், தெருப்பெயர் முதலியன இருந்தாலும் அவை பயன்படவில்லை. குடிசைகளில் எந்த அடையாளமும் இல்லையே. எனவே கடன்தார்களின் பெயர்களைப் படிக்க ஆரம்பித்தேன்.

செல்வி’ என்றதும் இரண்டு செல்விகள் வந்தனர். ஒரு ஆள் ஓடிவந்து ‘நீ ஏம்மே வர்றே, ஒன்னயா கூப்பிட்டாங்க?’ என்று ஒரு செல்வியைப் பின்னுக்கிழுத்தார். இதுதான் சமயம் என்று இரண்டாவது செல்வியும் பின்வாங்க முயன்றார். ‘ஒங்க பேங்கு எங்க இருக்குதுன்னே தெரியாதே. எவ்ளோ கடன் குடுக்கப் போறீங்க?’ என்றார். பாவம், புதிதாகக் கடன் கொடுப்பதற்காக வந்திருப்பதாக நினைத்துவிட்டார் போலும். அவரிடம் உண்மைநிலையை விளக்கினோம். புரோநோட்டை காட்டினோம். தன்னுடைய கையெழுத்துதான் என்று ஒப்புக்கொண்டார்.  ஆனால் தான் கடன் வாங்கவேயில்லை என்று சாதித்தார். பலமுறை எடுத்துச் சொன்னபிறகு, ஒரு முதிய பெண்மணியை நோக்கி, ‘ஒம் புள்ள வரட்டும், என் பேரச் சொல்லி ஊரெல்லாம் கடன் வாங்கி இருக்கு’ என்று முனகினார்.  
அப்பெண்மணி முன்வந்து, ‘பாவங்க, இதுக்கு ஒண்ணும் தெரியாது. ஒரு லாரிக்காரனை லவ் பண்ணிட்டு வூட்டை விட்டு வந்திடுச்சி. அவன் பாதியிலே வுட்டுட்டு போயிட்டான். என் தம்பிதான் இவள வச்சிக் காப்பாத்தறான். இப்ப வூட்டுல இல்லே. நாளைக்கி வந்தவொடனே பேங்க்கிக்கு அனுப்பிவெக்கறேன் சார்’ என்றார். ‘இந்த அம்மா தாங்க கையெழுத்து போடணும். இவங்களையும் அனுப்பிவையுங்க’ என்றேன்.

அதற்குள் கும்பலில் சிலர், ‘அதெல்லாம் வரமாட்டாங்க சார்! குடுக்கும்போதே கடனைத் திருப்பவேண்டாம்னு சொல்லித்தானே குடுத்தாங்க! அப்ளிகேஷனுக்கே ஐநூறு ரூபாய் குடுத்தமே’ என்றனர். இன்னொருவன் முன்வந்து, ‘நாங்க வாங்கின கடன்ல கூட ஆளுக்கு முன்னூறு ரூபா பிடிச்சிட்டுதானே குடுத்தாங்க’ என்றான்.

‘இவனுங்க இப்படித்தான் சார் சொல்லுவாங்க’ என்றார் என் உதவியாளர்.

‘தவமணி’ என்று அடுத்த கடன்தாரரைக் கூப்பிட்டேன். ‘எம் பொஞ்சாதி தாங்க’ என்றார் ஒருவர். ஒரு பக்கம் திரும்பி ’ஏய்’ என்று கூவினார். முப்பது வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஓடிவந்தார். புரோநோட்டைக் காட்டினேன். ‘என் கையெழுத்து தாங்க’ என்றாள். அவள் கணவன் அதை வாங்கிப் பார்த்து, ‘ஏம்மே, ஒனக்கு புத்தி இருக்குதா? இதுல தவமணின்னு கையெழுத்து இருக்குது. ஒம்பெரு நவமணி இல்லியா? மூதேவி’ என்றான்.

அவனை இடக்கையால் குத்தியபடி நவமணி பேசினாள்: ‘நீ எல்லாத்தையும் மறந்துடுவே. ஏற்கெனவே கனரா பேங்க்குல நவமணிங்கற பேர்ல லோன் வாங்கிட்டமில்ல. இந்த பேங்க்குல தவமணின்னு பேர் போட்டுக்கலாம்னு நீதான சொன்ன. இப்ப இல்லேன்னு ஏமாத்தலாமா?’ என்றாள்.

நான் உதவியாளரைப் பார்த்தேன். இது பெரிய சிக்கலில் கொண்டுவிடுமே என்று பயந்தேன். அவர் உடனடியாக ‘இந்தாம்மா, இது ஒன் கையெழுத்துதானே, இதோ, இந்தப் பேப்பர்ல அதே மாதிரி  கையெழுத்துப் போடு’ என்றார். அந்த பெண்ணும் நியாயத்திற்குக் கட்டுப்பட்டவராக ‘தவமணி’ என்று கையெழுத்து போட்டார். அப்பாடா,  ஒரு கடன் காலாவதியிலிருந்து தப்பியது.

அடுத்ததும் ஒரு பெண் பெயர்தான். அமுதா. வயது எழுபது இருக்கும். ‘சத்தியமா நான் தாங்க ஒங்க பேங்குல வந்து கடன் வாங்கினேன். ஆனா கட்சிக்காரங்க பாதிப் பணத்தை வாங்கிட்டானுங்க சார். நான் எப்படிங்க கட்டுறது? தள்ளுபடி பண்ணிடுங்க சார்’ என்றாள்.

‘இதுல கையெழுத்து போட்டா தான் தள்ளுபடி குடுக்கறத பத்தி நடவடிக்கை எடுப்பாங்க’ என்று கூறியபடி கையெழுத்து வாங்கினார் உதவியாளர்.

இப்படியாக சுமார் இருபதுபேரிடம் AOD வாங்கினோம். ஏழெட்டுப்பேர் அடுத்தநாள் வங்கிக்கு நேரில் வந்து கையெழுத்து போடுவதாக வாக்களித்தார்கள். ‘இங்க வேண்டாங்க, பிராப்ளம் ஆயிடும்’ என்றார்கள். மனைவிக்குத் தெரியாமல் கணவன் லோன் வாங்கியதை  பிராப்ளம் என்று அவர்கள் சொன்னதாக மறுநாள் ஒருவர் சொன்னார்.

இருட்டிவிட்டது. ஓரிரு தெருவிளக்குகள் தவிர, குடிசைகளில் எங்கும் மின்விளக்கு இல்லை. எனவே நன்றி சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தோம். இப்போது எங்களைத் தொடர்ந்து யாரும் வரவில்லை, இரண்டு பேரைத் தவிர.

அவர்களில் ஒருவர் கேட்டார். ‘நாளைக்கு எல்லாரையும் நான் பேங்குக்கு அழைத்துவருகிறேன். ஒரு AODக்கு எவ்வளவு கொடுப்பீர்கள்?’ என்றார். ‘கனரா பேங்கில் ஐம்பது ரூபாய் கொடுத்தார்கள். இந்தியன் பேங்கில் நூறு ரூபாய் கொடுத்தார்கள்...’   

பாவிகளா! மூன்று வருடமாக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல், இப்போது வெறும் கையெழுத்து போடுவதற்கு அதே பேங்க்கில் இருந்து லஞ்சம் கேட்கிறீர்களே, இது அடுக்குமா?

அந்த இன்னொருவர் என்ன கேட்கப்போகிராறோ என்று பயத்துடனேயே நடந்தேன். அவர் பேசவேயில்லை. கையில் ஒரு காலி சாக்குப்பை வைத்திருந்தார்.

ஸ்கூட்டர் வைக்கும் இடம் வந்தது. வண்டியின் மீது சகதி படிந்து ஒரே நாற்றமாக இருந்தது. சாக்குப்பை நண்பர் ஓடிவந்து, ‘இருங்க சார். இந்தப் பன்றிகள் படுத்துற பாடு சொல்லி மாளாதுங்க’ என்றபடி, தனது சாக்குப் பையால் வண்டியைத் துடைத்தார். பிறகு கண்ணில் விஷமத்துடன் ‘வண்டியை இப்ப மூவ் பண்ணுங்க சார்’ என்றார். முடியவில்லை. பின் சக்கரம் பன்ச்சர் ஆகியிருந்தது.

‘இதற்காகத்தான் நான் வந்தேன்’ என்று சிரித்தார் அவர். என்னிடம் சாவியை வாங்கி டூல்பாக்சை திறந்தார். பத்து நிமிடத்தில் ஸ்டெப்னியை மாற்றிக் கொடுத்தார். ‘AOD வாங்கறதுக்கு யார் வந்தாலும் இப்படித்தான் பன்ச்சர் பண்ணிடுவோம். தரமணியில இதாங்க வழக்கம். கனரா பேங்க்குன்னா ரெண்டு சக்கரமும் பண்ணுவோம். ஒங்க பேங்க்குன்னா ஒரு சக்கரம் மட்டும்தான்’ என்றார்.

‘ஏன்னா, நமக்குப் பக்கத்துல இருக்கீங்க. கிழிஞ்ச நோட்டு மாத்தணும்னா ஒங்க பேங்க்குலதான் முடியும்.’

அடுத்தமுறை தரமணியில் AOD வாங்குவதற்கு ஸ்கூட்டரில் போகவில்லை. ஆட்டோவில் போய் இறங்கினோம்.
****
© Y Chellappa
Email: chellappay@gmail.com   

வெள்ளி, ஏப்ரல் 28, 2017

கனியுதிர்சோலை (சிறுகதை)

பதிவு எண் 33/2017
கனியுதிர்சோலை
- இராய செல்லப்பா 

விடியற்காலையிலேயே எழுந்தாகிவிட்டது. பரபரப்புடன் கடைசி நேர முன்னேற்பாடுகளைச் செய்து முடித்தாள் சாந்தி. அழைப்பு மணி அடித்தது. டாக்சி வந்துவிட்டதன் அடையாளம். குட் மார்னிங் மேடம் என்றான் கோபால். நேரம் தவறாதவன்.

அவனிடம் காப்பியைக் கொடுத்தபடி இதோ, ஐந்தே நிமிடத்தில் கிளம்பிவிடலாம் என்று உள்ளே போனாள் சாந்தி. எதற்கும் நீ எல்லா ரூமும் சுத்தமா இருக்கானு ஒருதடவ பார்த்துடு என்றாள்.


அமெரிக்காவிலிருந்து லதா வருகிறாள். ஒரே மகள். கணினித் துறையில் ஓர் அமெரிக்க நிறுவனத்தில் பத்தாண்டு காலமாக வேலை செய்கிறாள். மூன்றாண்டுகளுக்குப் பிறகு வருகிறாள். கையில் இரண்டு வயது மகனுடன்.

அழுக்கு என்பதே எங்கும் இருக்கக்கூடாது அவளுக்கு. சுவற்றில் சிறு கீறல் இருந்தாலும் அவளுக்கு எரிச்சல் வரும். தரையில் பிசிபிசுக்கு இருக்கக்கூடாது. பல் துலக்கும் பிரஷ்கூட நேற்று வாங்கியது போல் சுத்தமாக இருக்க வேண்டும். சோப்புப் பெட்டியின் மேல் திட்டுத்திட்டாக சோப் படிந்திருந்தால் அவ்வளவு தான், தூக்கி எறிந்து விட்டு மறுவேலை பார்ப்பாள்.

பால்கிண்ணத்தை மூடி ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது கொஞ்சம் பால் சிந்திவிட்டது. இருக்கிற அவசரத்தில் இது வேறு கேடா என்று தன்மீதே கோபம் வந்தது. ஈரத்துணியால் அவசரமாகத் துடைத்தாள். பிறகு ஈரமில்லாத துணியால் மீண்டும் துடைத்தாள். மின்விசிறியைச் சுழலவிட்டாள்.

கைப்பையை எடுத்துக்கொண்டு கதவைச் சாத்திய போது மணி ஏழு. கவலைப் படாதீங்கம்மா! ஃப்ளைட் எட்டரைக்குத் தானே! அதற்குள் போய்விடலாம் என்று கோபால் வண்டியைக் கிளப்பினான். ஆனாலும் பொண்ணுக்கு ரொம்பத்தான்  பயந்து போயிருக்கீங்கம்மா! வீடு சுத்தம்னா சுத்தம் அவ்ளோ சுத்தம்! என்று புன்முறுவல் செய்தான் கோபால். 

மெட்ரோ ரயிலுக்காக அங்கங்கே தோண்டியும் வெட்டியும் இருந்த இடங்கள் குறுக்கிட்டபோது சாந்திக்குப் பகீரென்றது. கோபால், நேரம் ஆகிவிடாதே? என்று கேட்டுக்கொண்டே இருந்தாள். அவன் சிரித்துக்கொண்டே தினமும் இப்படித்தான் இருக்கும் அம்மா! இதனால் தாமதம் ஆகிவிடாது என்று வண்டியைக் கிடைத்த சந்துகளில் நுழைத்தான். சொல்லியபடியே எட்டரைக்கு முன்னால் விமான நிலையத்தை அடைந்துவிட்டான்.

‘எமிரேட்ஸ் விமானம் ஈ.கே.544 இன்னும் சற்று நேரத்தில் வந்து சேரும்’ என்ற அறிவிப்பு கேட்டபிறகு தான் சாந்திக்கு உயிர் வந்தது. 
அமெரிக்காவிலிருந்து துபாய் வழியாக வரும் விமானம். 

விமானம் தரையிறங்கியவுடனே லதா போன் செய்து விடுவாள். ‘உனக்காகத்தான் ஒருமணி நேரமாய்க் காத்திருக்கிறேன்’ என்ற பதிலைத்தான் அவள் எதிர்பார்ப்பாள். ‘இதோ வந்துகொண்டிருக்கிறேன், நீ இமிக்ரேஷன் முடித்து வருவதற்குள் வந்துவிடுவேன்’ என்றெல்லாம் சொல்லிவிட்டால் அவ்வளவு தான் அவளுக்கு ஆத்திரம் வந்துவிடும்.. ‘நான் பதினைந்தாயிரம் மைலுக்கு அப்பாலிருந்து வருகிறேன். உன்னால் பதினைந்து மைல் தூரத்திலிருந்து  முன்னால் வர முடியாதா?’ என்று கொந்தளிப்பாள். எல்லாம் முன்கோபம்தான். சிறிது நேரம் போனதும் தானே ஓடிவந்து, ‘சாரிம்மா’ என்பாள்.

குழந்தையிலிருந்தே அவள் அப்படித்தான். அத்துடன் இப்போது கைக்குழந்தை வேறு.

விமானம் வந்துவிட்டதற்கு அறிகுறியாகத் தகவல் பலகையில் விமான எண்ணுக்கு நேராகப்  பச்சை விளக்கு அணைந்து அணைந்து எரிய ஆரம்பித்தது. டாக்ஸி டிரைவர்களும் ஓட்டல் பிரதிநிதிகளும் கையில் பெயர்ப்பலகைகளை உயரே தூக்கியபடி  முண்டியடித்து நின்றனர். பல பெயர்கள் அமெரிக்கப் பெயர்களாக இருந்தன. 

நின்று நின்று கால் தொய்வதுபோல் ஆனது சாந்திக்கு. உட்கார எங்கும் இடமே இல்லை. முதல் நாள் பெய்த சிறுமழையில் சிமெண்ட் தரையின் விளிம்புகளில் சேறும் சகதியும் ஓரடி அகலத்திற்கு நிலைகொண்டிருந்தன. வருபவர்கள் எப்படியும் அந்தச் சகதியை மிதிக்காமல் வெளியேற முடியாது. மேல்கூரையிலிருந்து சதுரமான பலகைகள் சரிந்து விழத்தயாராக இருந்தன. பல கோடிகள் செலவில் புதுப்பித்ததாகச் சொன்னார்களே, அந்த லட்சணம் இது தானா என்று மனதிற்குள் நொந்துகொண்டாள்.

அழகுணர்ச்சி இல்லாது போனாலும், அடிப்படையான சுத்தமும் சுகாதாரமும் கூட இவர்களால் வழங்கமுடியவில்லையே! சென்னைக்கும், ஏன், இந்தியாவிற்கும் முதல்முறையாக வருபவர்களுக்கு இதைவிட மோசமான வரவேற்பு இருக்கமுடியுமா என்று வேதனை எழுந்தது. பக்கத்தில் நின்றிருந்த பலரும் இதை ஆமோதித்தனர். உடனடியாக ‘ஹிந்து’ வுக்கு ‘லெட்டர்ஸ் டு தி  எடிட்டர்’ எழுதப்போவதாகச் சபதம் எடுத்துக்கொண்டார் ஒரு முதியவர். எழுதினாலும் அவன் போடுவானா, ஆளெல்லாம் மாறிவிட்டார்களே என்று அலுத்துக்கொள்ளவும் செய்தார்.

வண்டி தரையிறங்கி அரைமணிக்கு  மேல் ஆனபிறகும் லதாவிடமிருந்து போன் வராதது ஆச்சரியமாக இருந்தது. நியூயார்க்கிலிருந்து கிளம்பியபோதும் சரி, துபாயில் வந்திறங்கியபோதும் சரி, உடனே பேசினாளே! ஒருவேளை குழந்தை படுத்துகிறானோ?

எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும் என்று தோன்றியது. பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் முடிந்து வர. பிறகு பெட்டிகளைச் சரிபார்த்து டிராலியில் ஏற்றிக்கொண்டு வரவேண்டும். யாராவது உதவி செய்தால் தேவலை என்று தோன்றியது. எப்படியும் மூன்று பெட்டிகள் இருக்கும். குழந்தை வேறு. வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாள் சாந்தி.

அப்போது ஒரு காவலர் வேகமாக அவ்விடம் வந்தார். திருமதி சாந்தி என்பவர் இங்கு இருக்கிறாரா? அவரது மகள் லதா அழைக்கிறார் என்றதும் நான் தான் என்று பரபரக்க முன்னால் வந்தாள் சாந்தி. அடையாள அட்டை ஏதும் இருக்கிறதா? என்றதற்குத் தன் வருமானவரியெண் அட்டையைக் காட்டினாள். உள்ளே அழைத்துக்கொண்டுபோனார். என்னவோ ஏதோ என்று புரியாமல் அவர் பின்னால் நடந்தாள் சாந்தி.

சரக்குகள் வந்திறங்கும் சுழல்மேடைக்கு அருகில் லதா கலக்கத்துடன் நின்றிருந்தாள். குழந்தை அங்கும் இங்கும் ஓட எத்தனித்து அவளின் பிடியிலிருந்து திமிறிக்கொண்டிருந்தான். அருகில் அவளது பெட்டி ஒன்று பாதி உடைந்த நிலையில் கிடந்தது. சாமான்கள் தரையெங்கும் வீசி எறியப்பட்டிருந்தன.

சாந்திக்குப் புரிந்துவிட்டது. சுழல் மேடையிலிருந்து ஒரு கையால் பெட்டியை இழுக்க முயன்றபோது பெட்டியின் கைப்பிடி எகிறிக்கொண்டு வந்ததில் பெட்டி சற்று தூரத்தில் போய் விழுந்திருக்கிறது. உள்ளிருந்த பொருள்கள் சிதறிப்போய் விட்டன.

அம்மா, சாரிம்மா! என் மொபைல் போனும்  உடைந்துபோய் விட்டது. அதனால் தான் ஆளை விட்டுக்கூப்பிடச் சொன்னேன் என்றாள் லதா. குழந்தை பாட்டியைப் பார்த்து ஹாய் என்பதுபோல் கைதூக்கிக்கொண்டு அவளருகில் ஓடிவந்தான்.  அவனைத் தூக்கிக் கொஞ்சி முத்தமிட்டபின் கீழிறக்கி விட்டாள் சாந்தி. 

சிதறியிருந்த பொருள்களைச் சேகரித்துப் பெட்டிக்குள் ஒவ்வொன்றாக வைத்தாள். உடைந்த பெட்டியை ஒருவாறு மூடி அங்கிருந்த ஒரு பணியாளிடம் பிளாஸ்டிக் டேப் வாங்கிச் சுற்றினாள். ஒரு டிராலியில் அதை மட்டும் தனியாகவும், மற்ற பெட்டிகளை இன்னொரு டிராலியிலும் வைத்து வாசலுக்கு வந்தார்கள். லதா மீண்டும் மீண்டும் சாரி சொல்லிக்கொண்டே வந்தாள். புத்தம்புதுப்  பெட்டிதானம்மா, அதற்குள் கைப்பிடி இற்றுப்போனது எப்படி என்று தெரியவில்லை என்றாள்.

கோபால் அதற்குள் அவர்கள் இருக்குமிடம் தேடி டாக்சியைக் கொண்டுவந்தான். உடைந்த பெட்டியை முன்சீட்டில் வைத்துவிட்டு மற்ற பெட்டிகளை டிக்கியில் அடுக்கினான். சாந்தியும் லதாவும் குழந்தையும் பின்சீட்டில் அமர்ந்தனர்.

அப்போது டிராலியில் ஒரு நீலப் பெட்டியுடன் அவர்களை வேகமாகப் பின்தொடர்ந்து வந்தான் ஓர் இளைஞன், மேடம், மேடம் என்று கலவரத்துடன் கூவியபடி. 

சாந்தி  வேகமாக இறங்கினாள். யாரப்பா, என்ன வேண்டும்? என்பது போல் பார்த்தாள்.

மன்னிக்க வேண்டும் மேடம்! இது உங்கள் பெட்டியா என்று பாருங்கள். அவசரத்தில் என்னுடைய பெட்டி உங்களிடம் மாறி வந்திருக்குமோ என்று எண்ணுகிறேன். என் பெட்டியின் கைப்பிடி மட்டும் இதோ இருக்கிறது! என்று ஆங்கிலத்தில் கூறினான்.

லதா இறங்கினாள். என்ன ஆச்சரியம்! அந்த இளைஞன் சொன்னது சரி தான். அவன் கொண்டு வந்த நீலப் பெட்டி தான் அவளுடையது. அதில் தொங்கிய எமிரேட்ஸ் விமான அடையாள அட்டையைப் பார்த்தாள். அவளுடைய பெயரும் விமான டிக்கட்டின் எண்ணும் சரியாக இருந்தன. அப்படியானால் உடைந்து சிதறிய பெட்டி யாருடையது?

நன்றியோடும் அதே சமயம் குழப்பத்துடனும் அவனைப் பார்த்தாள் லதா. மிக்க நன்றி நண்பரே! ஆனால் அவசரத்தில் எடுத்தபோது உடைந்துபோன ஒரு பெட்டி என்னிடம் இருக்கிறது. அதுவும் இதே பிராண்டுள்ள நீல நிறப் பெட்டி தான். அது உங்களுடையதாக இருக்குமா பாருங்கள்! இவ்வளவு நேரம் இந்த வித்தியாசத்தைக்கூட கவனிக்காமல் இருந்திருக்கிறேனே, எவ்வளவு பெரிய முட்டாள் நான்! என்றாள் தழுதழுப்புடன். அவனுடைய பெட்டி உடைந்ததற்குக் காரணம் தன்னுடைய தவறுதான் என்ற குற்ற உணர்வு அவள் முகத்தில் தெளிவாக எழுதியிருந்தது. 

அடுத்த நிமிடம் அவன்முகம் வெளிச்சமானது. ஆம், இதுதான் என்னுடைய பெட்டி. கைப்பிடி பொருந்துகிறது பாருங்கள். அடடா, உடைந்துவிட்டதா? இன்னும் கொஞ்ச நாளாவது வரும் என்று பார்த்தேனே! உண்மையில் உங்கள் மீது தவறேதுமில்லை. இதன் கைப்பிடி கொஞ்ச நாளாகவே ஆடிக்கொண்டு தான் இருந்தது. அமெரிக்காவில் இதை சரிசெய்யும் பணத்தில் இந்தியாவில் புதிய பெட்டியே வாங்கிவிடலாமே என்று இருந்தேன். என்னுடைய தவறு தான். மன்னிக்க வேண்டும் என்றான் அவன்.

ஒன்று மட்டும் சொல்வீர்களா? பெட்டிக்குள் இருந்த பொருட்கள் எல்லாம் பத்திரமாக இருக்குமல்லவா? எதுவும் தவறிப்போயிருக்க வாய்ப்பில்லையே! ஏனென்றால்   முக்கியமான சில பத்திரங்களும் தபால்களும் அதில் இருந்தன என்றான்.

சாந்தி முந்திக்கொண்டு கூறினாள். பயப்படாதே அப்பா! எல்லாம் பத்திரமாக இருக்கிறது. நானே எடுத்து வைத்தேன் என்றவள், நான் சொல்வதைக் கேட்பாயா? உன்னிடம் இருக்கும் சாமான்களையும் இந்த வண்டியிலேயே வைத்துக்கொண்டு எங்களுடன் வா. வீட்டில் வந்து எல்லாவற்றையும் சரிபார்த்துக்கொள். குளித்துச் சாப்பிட்டுவிட்டுப் போகலாம். அதற்குள் கோபாலிடம் சொல்லிப் புதிய பெட்டி வாங்கிவரச் சொல்கிறேன் என்று அவன் முகத்தை ஆவலுடன் பார்த்தாள்.

அவனுக்கு வயது சுமார் இருபது, இருபத்திரண்டு இருக்கும். கல்லூரி மாணவன்போல் தோன்றினான். தமிழ் அவ்வளவாகப் பேச வரவில்லை. ஆனால் தமிழன்தான்.

உங்கள் அழைப்புக்கு நன்றி. எனக்காக வண்டி வந்திருக்கும். அதில்தான் நான் போகவேண்டும். ஏனென்றால் எனக்கு சென்னையைப் பற்றி எதுவும் தெரியாது. நான் துபாயில் பிறந்து வளர்ந்தவன். இங்கு வருவது இதுதான் முதல்தடவை. உங்கள் அறிமுகம் ஏற்பட்டதிலும், என் பெட்டி திரும்பக் கிடைத்ததிலும் மிக்க மகிழ்ச்சி. நான் இந்த முகவரியில்தான் இருப்பேன். வீட்டுக்காரரின் பெயரும் தொலைபேசி எண்ணும் இதில் இருக்கிறது. வரட்டுமா? என்று ஒரு முகவரி அட்டையை சாந்தியின் கையில் திணித்துவிட்டு, லதாவையும் குழந்தையையும் பார்த்துப் புன்னகைத்தபடியே கிளம்பினான் அந்த இளைஞன். கையசைத்து ‘பை,பை' சொன்னான் குழந்தை.

கார் கத்திப்பாராவைத் தாண்டிய பிறகுதான் முகவரியைப் பார்த்தாள் சாந்தி. ‘ராஜேஷ் வாசுதேவன், அபிராமபுரம் சென்னை’ என்ற பெயரைப் படித்ததுமே  உடம்பெல்லாம் இரத்தம் கொதிப்பது போலாகியது. முகமெல்லாம் வேர்த்துப்போயிற்று. அயோக்கிய ராஸ்கல்! நீ இன்னும் சென்னையில் தான் இருக்கிறாயா? என்று மனதிற்குள் முனகினாள். தண்ணீர் குடிக்கவேண்டும்போல் இருந்தது. பாட்டிலைக் கையில் எடுத்தாள்.

‘அயோக்கிய ராஸ்கல்’ என்ற வார்த்தை மட்டும் லதாவின் காதில் விழுந்த மாதிரி இருந்தது. யாரையாவது திட்டுகிறாயா அம்மா? என்று மெதுவாகக் கேட்டாள்.

அதற்குள் ஒரு கையில் தண்ணீர் பாட்டிலும் மறுகையில் அந்த விசிட்டிங் கார்டுமாக அப்படியே மூர்ச்சையானாள் சாந்தி. அம்மா என்று அலறினாள் லதா. காரை அவசரமாக நிறுத்தினார் கோபால்.
    (தொடரும்)
***** 
(c) Y Chellappa
email: chellappay@gmail.com

ஞாயிறு, ஏப்ரல் 23, 2017

நினைப்பதா மறப்பதா

பதிவு எண்   32/2017
நினைப்பதா மறப்பதா
-இராய செல்லப்பா

காலத்தால் அழியாத பாட்டு: ‘நினைக்கத் தெரிந்த மனமே, உனக்கு மறக்கத் தெரியாதா?’ (கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, ஆனந்தஜோதி.)


நினைத்தலும் மறத்தலும் மனித மனத்தின் இரண்டு பெரும் கடமைகள் ஆகும். பிறக்கும் முன்பிருந்தே ‘நினைத்தல்’ செயல்பட்டுவருகிறது என்பதை ஆன்மிகம் மட்டுமன்றி அறிவியலும் நிரூபித்திருக்கிறது.

அறிவியல் கூறுவது:

தாயின் கருப்பையில் இருக்கும்போதே, ஒன்பது வாரம்  ஆனவுடன், கருவுக்குக் காதுகள் உருவாகத்தொடங்கிவிடும்.  பதினாறு வாரங்கள் ஆகும்போது வெளியில் இருந்து எழும் ஓசைகளை உணரத் தொடங்கிவிடும். ஆனால் வார்த்தைகள் இன்னவென்று அதற்குப் புரியாது. தாயின் குரல் மட்டும் மிகமிகத் தெளிவாகக் கேட்கும். காரணம், தாயின் குரல் வெளியிலிருந்து மட்டுமின்றி, அவளது நரம்புகள் மூலமும் பயணிப்பதால் பலமுனைகளில் இருந்தும் உணர்ந்துகொள்ளும் வசதி கருவிற்கு ஏற்படுகிறது. தாயின் நுரையீரலில் காற்று உள்வந்து வெளியேறும் ஓசையும், இரைப்பையில் எழும்பும் ஓசையும் கருவுக்குப் பழக்கமாகிவிடுகிறது. அந்த ஓசைகளின் நினைவைக்கொண்டே தாய் அருகில் இருக்கிறாள் என்று அதனால் புரிந்துகொள்ளமுடியும். இருபத்துநாலு வாரங்களில் கருவானது, வெளி ஓசைகளுக்கு ஏற்றவாறு  தலையையோ உடலையோ அசைத்து எதிர்வினை செய்யமுடியும்.

ஆகவேதான், பாரம்பரிய இசையை வாசித்துக் காட்டுவதன்மூலம் கருவுக்கு இசைஞானத்தைப் புகட்டமுடியும் என்று கண்டிருக்கிறார்கள்.

ஆன்மிகம் கூறுவது:

அபிமன்யு கதை நாமறிவோம். கிருஷ்ணனின் சகோதரியான சுபத்ராவை மணந்து கொள்கிறான் அர்ச்சுனன். அபிமன்யுவை வயிற்றில் கருவாக ஏந்தியிருக்கும் ஒரு நாளில், போர்முனை எப்படியிருக்கும், அணிவகுப்பு என்றால் எப்படி இருக்கும் என்றெல்லாம் கேட்கிறாள் சுபத்ரா.

அணிவகுப்பை ‘வியூகம்’ என்பார்கள். எதிரியை உள்ளே நுழையாதபடியும், அப்படி நுழைந்தால் உயிரோடு வெளியேற முடியாதபடியும் நுட்பமாகப் படைகளை நிறுத்திவைக்கும் ஒழுங்குமுறைக்கு வியூகம் என்று பெயர். பலவகை வியூகங்கள் உண்டு. அதில் பத்மவியூகம் என்பது மிகவும் சிக்கலானதாகும். 

அதை அமைக்கும் வழியைத் தனது குரு துரோணரிடமிருந்து கற்றுக்கொண்டவன் அர்ச்சுனன். ஆனால் அதை வேறு யாருக்கும் அவன் கற்றுத்தரக் கூடாது. மூல குருவுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு. (தன்னுடைய அனுமதியின்றி, மறைவாக இருந்து  தனது வில்வித்தையைக் கற்றுக்கொண்ட குற்றத்திற்காக ஏகலவ்யனிடம் இருந்து கட்டைவிரலையே குருதட்சிணையாகக் கேட்டவர் துரோணர்.)

ஆனால், ஆசை மனையாள் கொஞ்சிக் கேட்கும்போது சொல்லாமல் இருக்க முடியுமா? வியூகம் அமைப்பது எப்படி, அதற்குள் நுழைவது எப்படி என்று உற்சாகமாகச் சொல்லத் தொடங்குகிறான் அர்ச்சுனன். கருவில் இருக்கும் அபிமன்யு அதனைக் கவனமாகக் கேட்டுக்கொள்கிறான்.

வியூகத்தினுள் நுழைந்தவன், அதிலிருந்து வெற்றியோடு தப்பி வருவது எப்படி என்பதைச் சொல்ல ஆரம்பிக்கும்போது திடீரென்று அங்கு வந்துவிடுகிறான் கிருஷ்ணன். ‘அர்ச்சுனா, என்னோடு வா’ என்று அழைத்துப்போய்விடுகிறான். அபிமன்யுவின் ஞானம் அத்துடன் நின்றுவிடுகிறது, அரைகுறையாக. பின்னால் அவன் உயிர் பிரிவதற்கும் அதுவே காரணமாகிவிடுகிறது.

மறத்தலும் இப்படியே, நம் கருவிலிருந்தே ஆரம்பமாகிவிடுகிறது. இல்லையெனில் முற்பிறவியின் ஞாபகங்கள் அல்லவா நம் மனம் முழுதும் எப்போதும் நிறைந்திருக்கும்!
*****
சிலர் இருக்கிறார்கள். அபாரமான நினைவாற்றல் படைத்தவர்கள். தங்களுக்குப் பணமுடை என்றால் யாரை கேட்டால் உடனே கிடைக்கும் என்று இவர்களுக்குத் தெரியும். எந்த நிறுவனத்தில் எந்தத் தேதியில் சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதைத் தமது நினைவுப் பலகையில்  அழியாப்பதிவாக வைத்திருப்பார்கள்.  

சம்பளத்தைப்  பணமாகக் கொடுக்கிறார்களா, வங்கியின் வழியாகவா என்பதும், வங்கியின் பெயர், கிளையின் முகவரி, தொலைபேசி எண் என்று அனைத்தும் இவர்களுடைய ஹார்ட்-டிஸ்கில் பதிந்திருக்கும். (Hard-Disk என்றேன். Heart-Disk என்று படித்தீர்களா?)

அரசாங்க ஊழியர்கள் இவர்களின் வலையில் இருந்து தப்பவே முடியாது. ஆறாவது பே-கமிஷேன் அரியர்ஸ் எப்போது வரும், எவ்வளவு வரும் என்று செய்தித்தாள் மூலம் தெரிந்து வைத்திருப்பார்கள். காலையில் காப்பி நேரத்தில் வந்து கதவைத் தட்டுவார்கள். ‘அவருக்கு கிரெடிட் ஆகிவிட்டதே, உங்களுக்கு இன்னும் வரவில்லையா?’ என்று ஆதரவாகக் கேட்பார்கள். டி.ஏ அரியர்ஸ் வந்துவிட்டதா என்பார்கள். பிஎஃப் லோன் வேண்டுமானால் சொல்லுங்கள், என் நண்பர் அங்குதான் செக் ஷன் ஆபீசராக இருக்கிறார் என்று மகிழ்ச்சியோடு தெரிவிப்பார்கள்.

அவசரத்துக்கு இவர் கடன்கேட்டால்  நாம் இல்லை என்று சொல்லிவிடவே முடியாது. உதாரணமாக, மாதக் கடைசியில் ஏதய்யா பணம் என்று நாம் எரிந்து விழுந்தால் ஆசாமி அசரமாட்டார். அடடே, எல்ஐசி  பாலிசியில் லோன் எடுத்துத் தரட்டுமா என்று ஆலோசனை கூறுவார். ஒரே நாளில் வாங்கிவிடலாம், நீங்கள் வரவேண்டும் என்றில்லை. பாலிசியை மட்டும் கொடுங்கள். மற்றதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பார். பாலிசி இல்லையென்றால், அனுதாபப்படுவார். புதியதாக நகைக்கடன் தரும் கம்பெனி வந்திருக்கிறது, குறைந்த வட்டிதான், நமக்குத் தெரிந்தவர்கள்தான் என்று அறிமுகப்படுத்துவார்.

அவருடைய எல்லா அஸ்திரங்களையும் தாங்கிக்கொண்டு நாம் கைவிரித்து விட்டாலும் அயரமாட்டார். ‘ரொம்ப கஷ்டப்படுகிறீர்கள் போலிருக்கிறதே! நம்ம நண்பர் 'கே...' யிடம் கேட்டு ஐந்தோ பத்தோ கைமாற்று வாங்கித் தரட்டுமா? மனுஷன் நம்ப ஏரியாவுக்கே படியளக்கிறவர். நடு ராத்திரியில் கதவைத் தட்டினாலும் லட்ச ரூபாய் கிடைக்கும். பரம்பரை பணக்காரர். என்ன, வட்டி கொஞ்சம் அதிகம். அதைப் பார்த்தால் நம்ம அவசரத்துக்குப் பணம் கொடுப்பவர்கள் யார் இருக்கிறார்கள்?’ என்பார். 

என்னடா, இப்படி கொக்கி போடுகிறாரே என்று தயங்குவோம். அதே நேரம், நடுத்தர வர்க்கத்து சாபம், ஐந்தோ  பத்தோ கிடைத்தால் பரவாயில்லையே, நமக்கும் வேறு செலவுகள் இருக்கிறதே என்று சபலம் உண்டாகும். நம் கண்ணில் அப்படி ஒரு மின்னல் தோன்றுவதைத் தானே அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்! ‘சரி, நீங்கள் எட்டரை மணிக்கு வந்துவிடுங்கள். ரெடி பண்ணிவிடுகிறேன்’ என்பார். அதற்குப் பத்து நிமிடம் முன்பு அவரே நம் வீட்டுக்கு வந்து நிற்பார், கையில் புதிய நோட்டுக்களோடு. 

நம் தரித்திரத்தின் அளவைக் கூட்டியும் பெருக்கியும் சொல்லி, பதினைந்து வாங்கி, அதில் பத்தை நமக்கும், ஐந்தைத் தனக்கும் அவர் வைத்துக் கொண்டது கொஞ்ச நாளைக்குப் பிறகுதான் தெரியவரும். கோபிக்கவா முடியும்! அவசரத்திற்கு உதவினாரே!

சிலர் இருக்கிறார்கள். அபாரமான மறதி உடையவர்கள். தம்முடைய வீட்டு விசேஷங்களுக்கு நம்மிடம் நூறு முறை நினைவூட்டுவார். நம்முடைய விசேஷங்களுக்கு வரமாட்டார். முதல்நாள்தான் அவருக்கு வேறு வேலைகள் வந்துவிடும். 

தன் அலுவலகத்தில் நடந்த விழாக்களைப் பற்றி எந்தப் பத்திரிகையில் வந்தாலும் வெட்டிக் கொண்டுவந்து காட்டுவார். நம்மைப் பற்றி அதே பத்திரிகையில் வந்திருக்கும் செய்தியை ‘நான் பார்க்கவே இல்லையே’ என்று அதிசயிப்பார். 

அடுத்த மாதம் வெளிநாடு போவதாகச் சொன்னால் போதும், அடுத்த வாரமே நாம் போகப்போவதாகச் செய்தியைப் பரப்பிவிடுவார். நம்மைப் பார்க்க வருவதாகச் சொன்ன நண்பர்கள் வாராமல் போய்விடுவார்கள். வழியில் நிறுத்திக் கேட்டால் மறந்துவிட்டேனே என்று அசடு வழிவார்.

வெளிநாடு என்றதும் ஞாபகம் வருகிறது. வெளிநாடு போய்விட்டுத் திரும்புகிறவர்கள், விமான நிலையத்தில் டியூட்டி-ஃப்ரீ ஷாப்பில் வெளிநாட்டு மதுவகைகள் வாங்கிவர அனுமதியுண்டு. ஒரு டிக்கட்டில் இரண்டு பாட்டில்கள் வாங்கலாம். 

ஒரு நண்பர் இருந்தார். அடிக்கடி வெளிநாடு போவார். வரும்போது பாட்டில்கள் வாங்கிவருவார். குளிர்பெட்டியில் அடுக்கி வைப்பார். தமது குடியிருப்பில் யார்யார் உயர்ரக மதுவகைகளை விரும்பிக் குடிப்பார்கள் என்று அவருக்கு நினைவில் இருக்கும். அதிலும், பிறந்தநாள், திருமணநாள், நண்பர்கள் கூடும்நாள் போன்றவை யாரால் எப்போது கொண்டாடப்பட உள்ளது என்பதையும் குறித்துவைத்திருப்பார். சரியான நேரத்தில் அவர்களிடம் தகவல் தெரிவிப்பார். வாங்கியவிலைக்கு ஐந்து டாலர் அதிகம் வைத்து விற்றுவிடுவார். 

பேரம் பேசுபவர்களும் உண்டு. அவர்களைத் தன் நினைவுப் பலகையில் இருந்து மறதிப் பலகைக்கு மாற்றிவிடுவார். அவர்களுக்கு இனிமேல் இவர்மூலம் வெளிநாட்டு மதுவகைகள் கிடைக்காது. வேறு வழியின்றி இவர் சொல்லும் விலைக்கே வாங்கியாக வேண்டிய மனநிலைக்குத் தள்ளப்படுவார்கள். உடனே அவர்கள் பெயரை மீண்டும் நினைவுப் பலகைக்கு மாற்றிக்கொள்வார்.

இரயில் நிலையத்தில் ஒருநாள். வண்டி கிளம்ப இன்னும் அரைமணி நேரம் இருந்தது. உரிய பெட்டியில் ஏறி அமர்ந்தேன். அப்போது சன்னல் வழியாக ஒருவர் ‘சார், வணக்கம்’ என்று சொன்னார். பெட்டியை உயரே வைத்துவிட்டு சன்னலை நோக்கினால், சன்னல் அருகில் நின்றவர்களின் தலை மறைப்பில் அவர் எங்கோ மறைந்துபோனார். யாராயிருக்கும் என்ற ஆவலில் பக்கத்து இருக்கையரிடம் பெட்டியைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுக் கீழே இறங்கினேன். 

அவர் அதற்குள் நாலு பெட்டிகளைக் கடந்து போய்க்கொண்டிருந்தார். ஓடிச் சென்று பிடித்தேன். ‘வணக்கம், நீங்கள் யார்?’ என்றேன்.

‘என்ன சார் மறந்துவிட்டீர்களா? போன மாசம் நம்ம வீட்டு கிருகப்பிரவேசத்திற்கு வந்திருந்தீர்களே, பெங்களூர் போகிறீர்களா’ என்று கேட்டுக்கொண்டே தன்பாட்டுக்கு அவருடைய பெட்டியில் ஏறிக்கொண்டார்.

பெங்களூர் மெயிலில் போனால் பெங்களூர்தானே போகமுடியும்! மேலும், கடந்த ஐந்து வருடங்களில் எந்த ஒரு கிருகப்பிரவேசத்திற்கும் நான் போனதில்லையே, இவர் யாராயிருக்கும்?

ஞாபக மறதி. யாரையோ நினைத்து யாரையோ அழைத்திருக்கிறார் போல.

அதற்குள் கூட்டம் அதிகமாக என்னைக் கடந்துசெல்லவும், நான் விரைந்துசென்று என் பெட்டியில் ஏறினேன். நல்லவேளை பெட்டி பத்திரமாக இருந்தது. பக்கத்து இருக்கையரைத்தான் காணவில்லை. மறதியாக வேறு பெட்டியில் ஏறிவிட்டாரோ?

வண்டி கிளம்புவதற்கான ஊதல் முழங்கும் கடைசி நேரத்தில் அவர் வந்துவிட்டார். என்னைப்  பார்த்துப் புன்னகைத்தார். 'நண்பர்  எஸ்-12 இல் வருகிறார். ஃபாரின் போயிருந்தார். இது அவருடைய கிஃப்ட்' என்று ஓர் உயர்வகை மதுப்புட்டியைக் காட்டினார்.

டக்கென்று எனக்குப் பொறி தட்டியது. அடுத்த முறை வெளிநாடு போய்வரும்போது தனக்கும் அதேபோன்ற இரண்டு புட்டிகள் வாங்கிவரவேண்டுமென்று ஒரு நண்பர் சொல்லியிருந்தது  ஞாபகம் வந்தது. 

நல்ல நினைவாற்றல் கொண்டவர்.  நம் பெயரையும் திரும்பிவரும் தேதியையும் தன் நினைவுப்பலகையில் பத்திரமாகப் பதித்து வைத்திருப்பார். மறந்துவிட்டது என்று சாக்குபோக்கெல்லாம் சொல்ல முடியாது. ரொம்ப நல்லவர். அன்பானவர். அவருக்குச் செய்யாமல் இருக்க முடியுமா?      

நினைக்கத்தெரிந்த மனமே பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்
***
© Y Chellappa
================================================================
எழுத்தாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
================================================================
படைப்பு குழுமம்

படைப்பின் இலக்கிய விருது - 2016
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...
நமது படைப்பு குழுமம் இப்போது அடுத்தகட்ட நகர்த்தலுக்கு உயர்கிறது. ஆம் இனி ஒவ்வொரு வருடமும் தமிழில் சிறந்த இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த இலக்கியத்துக்கான விருது கொடுத்து கவுரவிக்க இருக்கிறது...
நமது படைப்பின் இலக்கிய விருதுக்கான விளக்கங்கள்/தகவல்கள் மற்றும் விருதுக்கான வடிவமைப்பை(டிசைன்) ஆகியவற்றை இதன் முந்தய அறிவிப்புகளில் பார்த்தோம்.
இப்போது இந்த விருதுக்கான முக்கிய அம்சமாக கருதப்படும் விதிமுறைகளை பார்ப்போம்.
தயவுசெய்து கவனமாக படித்து தெரிந்து கொள்ளவும். சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட்ஸ் அல்லது தகவல் பகுதியில் கேட்கலாம். உடனுக்குடன் தெளிவு படுத்தப்படும்.
விருதுகளின் பட்டியல்:
~~~~~~~~~~~~~~~~~~~~~
1 .சிறந்த கவிதை (கவிதை தொகுப்பு).
2 .சிறந்த சிறுகதை(சிறுகதை தொகுப்பு)
3 .சிறந்த நாவல்/குறு நாவல்
4 .சிறந்த கட்டுரை/வாழ்வியல் தொடர்.
இனி ஒவ்வொரு வருடமும் தமிழில் சிறந்த இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த இலக்கியத்துக்கான விருது கொடுத்து கவுரவிக்க இருக்கிறது நம் படைப்பு குழுமம்.
இது முற்றிலும் நூல் வெளியிட்டவர்களுக்கான ஒரு அங்கீகார விருது. தமிழர்களுக்கு தமிழர்களாலேயே தேர்வு செய்து கொடுக்கப்படும் தன்னிகரற்ற உயரிய விருது இதுவாக இருக்க போகிறது.
விதிமுறைகள்:
~~~~~~~~~~~~~~
1. இந்த நான்கு பிரிவுகளில் படைப்பாளிகள் வெளியிட்ட நூல்களுக்கு அந்தந்த பிரிவில் உயர்ந்த/சிறந்த எழுத்தாளர்களின் குழுவு கொண்டு ஆய்வு செய்து சிறந்த நூல்களை தேர்வு செய்யப்படும்.
2. ஒவ்வொரு பிரிவிலும் சிறந்ததாக தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு அந்த ஆண்டின் படைப்பின் இலக்கிய விருது (சிறந்த நூல் என தேர்வு செய்து) வழங்கப்படும்.
3. அப்படி தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு நாம் ஆண்டுதோறும் நடத்தப்படும் விழாவில் பரிசும் விருதும் அளித்து சிறப்பிக்கப்படும்.
4. 2016 ஜனவரி முதல் தேதி தொடங்கி 2016 டிசம்பர் கடைசி தேதி வரை வெளியிடப்பட்ட நூலாக இருக்க வேண்டும்.
5. ஆண் பெண் இருவருமே போட்டியில் கலந்து கொள்ளலாம் ஆனால் தனி தனி பிரிவுகள் எல்லாம் இல்லை. ஒரே பிரிவின் கீழ் அவர்களது படைப்புகள் பரிசீலிக்கப்படும். மேலும் இக்குழுமத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் இதில் கலந்து கொள்ளலாம்.
6. புத்தகம் முதற் பதிப்பாக இருத்தல் அவசியம். கவிதை கதை நாவல் கட்டுரையென எப்படியாக வேண்டுமானாலும் இருக்கலாம்.அப்படி வெளிவந்த நூல்களின் மூன்று பிரதிகளை நாங்கள் குறிப்பிடும் விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.
7. எழுத்தாளரின் புகைப்படம், முகவரி, நூலாசிரியர் பற்றிய குறிப்புகளுடன் கொரியர் செய்ய வேண்டும்.
இது தமிழகத்திறகு மட்டும் அல்லாது உலகளாவிய போட்டியாக இதனை நடத்த இருக்கிறோம் ஆதலால் புத்தகத்தை உலக கவிஞர்கள் யார் வேண்டுமென்றாலும் அனுப்பலாம். ஒரே நிபந்தனை பதிப்பு மொழி தமிழாக இருத்தல் அவசியம்.
8. அவர் அவர் சொந்த படைப்பான புத்தகத்தை மட்டுமே அனுப்ப வேண்டும் பரிந்துரைகள் கிடையாது.
9. புத்தகத்தில் உள்ள கதை கவிதை நாவல்கள் மொழிபெயர்ப்பு செய்யபட்டவையாக இருத்தல் கூடாது.
புத்தகம் தமிழில் தான் இருக்கவேண்டும்.பிறமொழி புத்தகத்தை அனுப்ப கூடாது.
10. புத்தகம் சொந்த பதிப்பாகவோ அல்லது பதிப்பகத்தின் மூலமாகவோ வெளியிட்டு இருக்கலாம். நூல் ஆசிரியர் அனுப்ப இயலாத பட்சத்தில், அந்த நூல் பதிப்பகத்தில் பதிக்கப்பட்டதாக இருப்பின் பதிப்பகத்தாரும் நேரடியாக நூல்களை அனுப்பலாம்.
11. புத்தக வெளியீட்டாளர் அயல் நாட்டில் இருப்பின் அவர்களின் புத்தகம் அவர்களின் சார்பாக அவர்களின் உறவுகள் யாராவது முன்வந்து அனுப்பலாம்.
12. பாரபட்சமின்றி புத்தகத்தை தேர்வு செய்து போட்டியின் முடிவு வெளியிடப்படும். அதில் எந்த சிபாரிசும் அல்லது இடையூறும் இல்லாத வண்ணம் மிக நேராமையானதொரு தேர்வாக இது இருக்கும் என உறுதியளிக்கிறோம். படைப்புகுழுவின் தேர்வு குழுமத்தின் முடிவே இறுதியானது.
13. பதிப்பகம் மூலமாக வெளியிடப்பட்ட நூல்கள் தேர்வு பெற்றால் பதிப்பகத்தாருக்கும் தனியாக சிறப்பு பரிசு உண்டு.
14. இன்றிலிருந்து தொடங்கி வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை உங்கள் நூல்களை குறிப்பிட்ட விலாசத்திற்கு வந்து சேர வேண்டும். அதற்கு மேற்பட்டு வரும் நூல்களை பரிசீலிக்க இயலாது.
15. அனுப்பப்படும் நூல்களை எக்காரணம் கொண்டும் மீண்டும் திருப்ப அனுப்ப இயலாது. நூல்கள் வந்து சேர்ந்ததும் இங்கே உடனுக்குடன் வந்து சேர்ந்த நூல்களின் பட்டியல் தயார்செய்து உடனுக்குடன் வெளியிடப்படும்.
இம்மாதிரியான இலக்கிய விருதுகள் தமிழ் இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளுக்கு ஒரு தமிழ் அகாடமி விருதின் தரத்துக்கு உயர்த்தப்படும்.
அவ்வளவு நுட்பத்துடன் ஆய்வு செய்து இவ்விருதினை தேர்வு செய்ய இதற்காகவே ஒரு மிக பெரிய கவிஞர்களின் தலைமையில் ஒரு தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியாக அறிவிக்கிறோம்.
முடிந்தவரை பகிருங்கள் தோழர் தோழமைகளே... பயனடையும் படைப்பாளிகள் உங்களை நினைவு கூறும் தருணம் இதுவாக கூட இருக்கலாம் மேலும் உங்களால் ஒரு படைப்பாளி வெளிச்சத்திற்கும் வரலாம்..
படைப்புகள்/நூல்கள் வந்து சேரவேண்டிய முகவரி:
------------------------------------------------------------------------
படைப்பு குழுமம்,
#8, சுபைதா இல்லம்,
மதுரை வீரன் நகர்,
கூத்தப்பாக்கம்,
கடலூர்.
607 002.
Address in English format:
-------------------------------
PADAIPPU KUZHUMAM,
#8, SUBAITHA ILLAM,
MATHURAI VEERAN NAGAR,
KOOTHAPPAAKKAM,
CUDDALORE,
TAMIL NADU, INDIA.
607 002.
Ph: 9739 544 544
Email: padaippu2016@gmail.com
படைப்புகள்/நூல்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 30-APR-2017
நூல்களை அனுப்புவோர் தங்கள் கொரியர் தகவல்களை மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டுகிறோம். எங்களுக்கு கிடைத்தவுடன் மின்னஞ்சலிலும் இங்கே தகவல் பெட்டியிலும் தெரிவிக்கப்படும்.
வாருங்கள் வருங்காலத்தில் தமிழ் இலக்கியத்தை ஒரே குடையின் கீழ் நின்று பாதுகாப்போம்.அதற்கான அங்கீகாரத்தை அளித்து படைப்பாளிகளை ஊக்கப்படுத்துவோம்.
==============================================