செவ்வாய், பிப்ரவரி 28, 2017

தோளுக்கு ரோஜா - தோழனுக்கும் ரோஜா

பதிவு எண் 14/2017
தோளுக்கு ரோஜா - தோழனுக்கும் ரோஜா 
-இராய செல்லப்பா

ஜெயப்பிரகாஷ், அமைதியான சுபாவம் உடையவன். அதிர்ந்து பேச மாட்டான். மிக அருகில் வந்துதான்  பேசுவான். அடுத்தவருக்குக் கேட்காதபடி பேசுவான். அன்றும் அப்படித்தான்.

நண்பா, இந்த இரண்டு மாலைகளில் ஒன்றை நான் எடுத்துக் கொள்ளட்டுமா? என்று மெல்லிய குரலில் கேட்டான்.
கட்டுரை இவரைப் பற்றியதல்ல!

இரண்டும் ரோஜா மாலைகள்.

மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் முத்தமிழ் விழா நடந்துகொண்டிருந்தது. கல்லூரி ஆரம்பித்த இரண்டாம் ஆண்டு. புகுமுக வகுப்பும் சரித்திரப் பாடத்தில் இளங்கலை வகுப்பும்தான் அப்போது தொடங்கப்பட்டிருந்தன. நான் புகுமுக வகுப்பு மாணவன். கணிதப் பிரிவில் இருந்தேன். ஜெயப்பிரகாஷ் சரித்திரப் பிரிவில் இருந்தான்.

முத்தமிழ் விழாவில் இயலும் இசையும் நடந்து முடிந்துவிட்டிருந்தது. கட்டுரைப் போட்டியில் எனக்கு முதல்பரிசு கிடைத்திருந்தது. ஒரு சான்றிதழும் ரோஜா மாலையும் கிடைத்தன. அடுத்து, கவியரங்கம். (அமரர்) கவிஞர் சுரதா தலைமையில் நடந்தது. அதில் ஏழு பேரில் ஒருவனாக எனது முதல் கவிதைப் பயணம். ஒரு சான்றிதழும் மீண்டும் ஒரு ரோஜா மாலையும். இரவு எட்டு மணிக்கு நாடக விழா. கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் வருகிறார்கள். அதிலும் எனக்கு பரிசு இருந்தது.  இன்னும் ஒரு மாலை  விழும்.

அப்போதெல்லாம்  விழாக்களில் பூமாலை அணிவிப்பதுதான் மரியாதையாகக் கருதப்பட்டது. மாலைக்குப் பதில் பணமாகக் கொடுங்கள் என்று அறிஞர் அண்ணாவே கேட்டுக்கொண்டாலும், மணக்க மணக்க ரோஜா மாலையைக் கொண்டுவந்து அணிவித்து அவர் கோபத்தைப் பெற்றுக்கொள்ள ஆட்கள் இருந்தார்கள் மாலைக்குப் பதில் துண்டு போடுவதும், அத்துண்டுகளை மீண்டும் வாங்கிய கடையிலேயே திருப்பிக் கொடுத்துப் பணமாக்கிக் கொள்வதும் இன்னும் வழக்கத்துக்கு வந்திராத நேரம்.
படம்: நன்றி: இணையம்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் இலக்கிய, அரசியல் கூட்டங்களில் நான் கலந்துகொள்வதுண்டு. முக்கியப் பேச்சாளருக்கு மாலை அணிவிக்கும் பொறுப்பு எனக்கு வருவதுண்டு. விழாத் தொடங்கும் முன்பாகவே என்னிடம் ரோஜா மாலை கொடுக்கப்படும். அரசியல் கூட்டமானால், ‘இத்தனையாவது வட்டத்தின் சார்பாக இந்த மலர்மாலையை எங்கள் இதயமாலையாக அணிவிக்கிறோம்’ என்பது போன்ற வார்த்தைகளைச் சொல்லி மாலையை அணிவிக்குமாறு அறிவுறுத்தப்படும். மாற்றிச் சொல்லிவிட்டால் அடுத்த கூட்டத்தில் மாலை அணிவிக்கும் பாக்கியம் தரப்படாது. (இதயமாலை என்றால் என்ன என்று கேட்கும் வாய்ப்பு கிட்டியதில்லை.) இருப்பதிலேயே குறைந்த விலையுள்ள மாலையாக வாங்கியிருப்பார்கள்.  அணிவிக்கப்படும் முன்பே பாதிக்குமேல் உதிர்ந்துபோய், பேருக்குத்தான்  ரோஜாமாலையாய்க் காட்சி தரும். மேடையில் ஏறி, உரியவருக்கு அணிவிக்கும்வரை மீதமிருக்கும் இதழ்கள் உதிர்ந்துவிடக் கூடாதே என்ற பரபரப்புடன் இருப்பேன்.

எங்கள் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் பேராசிரியர் எஸ். ஹமீது அவர்கள். சிறிது காலம் மலேசியாவில் பணியாற்றிவிட்டு வந்தவர். அவர் அழகா, அவர் உடை அழகா, அவர் நாவில் கொஞ்சி விளையாடும் தமிழ் அழகா என்று பல நாட்கள் யோசித்திருக்கிறேன். (பின்னாளில் சென்னை புதுக்கல்லூரியிலும், கடைசியாக தமிழ்நாடு சர்வீஸ் கமிஷனிலும் பணியாற்றி மறைந்தவர் அவர்.)

தான் நடத்தும் முதல் விழா என்பதால் உச்சகட்ட ஒழுங்குமுறையும் தாராளமான செலவுமாக விழாவை நடத்தினார் அவர். முக்கியமாக, ரோஜா மாலைகள், குறைந்தது மூன்று மணிநேரமாவது உதிராமல் இருக்கும்படி அழுத்தமாகக் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். மாலையைப் பார்த்த மாத்திரத்திலேயே பேச்சாளர்கள் அசந்துபோய்விட வேண்டும் என்பார். ரோஜாவின் மணம் மேடையைத்தாண்டி முதல் ஐந்து வரிசைகளுக்காவது எட்டவேண்டும் என்பார். தலைமை தாங்குபவருக்கு மட்டும் ரோஜா மாலையும், மாணவர்களுக்கு சம்பங்கி மாலையும் போட்டால் என்ன என்ற கேள்வி வந்தபோது, முத்தமிழுக்கு முன் அனைவரும் சமம் என்றார். எல்லாருக்குமே ஒரே அளவுள்ள ஒரே விலையுள்ள ரோஜா மாலைதான் போடவேண்டும் என்றார்.

ஜெயப்பிரகாஷுக்கு மாலை விழும் வாய்ப்பு இருக்கவில்லை. எந்தப் போட்டியிலும் அவன் கலந்துகொள்ளவில்லை. எனவே ஆசையாக வந்து அவன் கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. அத்துடன், எல்லா ரோஜா மாலைகளையும் எடுத்துக்கொண்டு சைக்கிளில் நான் ஆறுமைல் பயணிக்கவேண்டும்.(மேல்விஷாரம்  to இராணிப்பேட்டை.) எப்படியும் மாலை உதிர்ந்துவிடும். நாடகவிழா தொடங்கவே எட்டுமணி என்றால், முடிந்து, விழாக்குழுவினர் கலைந்துசெல்வதற்கு எப்படியும் பத்துமணியாகிவிடும். வீடு சேரும்போது பதினோரு மணி. அதன்பிறகு அந்த ரோஜா மாலைகளால் என்ன லாபம்?

ஒன்று என்ன, இரண்டையுமே எடுத்துக்கொள் என்று கூறினேன். 

ஜெயப்பிரகாஷுக்கு முகத்தில் மின்சார வெளிச்சம். தினத்தந்தி பேப்பரை விரித்து அதில் இரண்டு மாலைகளையும் சுருட்டிக்கொண்டான். நாடக விழாவில் எனக்கு என்ன வேலை? நான் கிளம்பிவிடுகிறேன் என்று புறப்பட்டான்.
*****
கொத்தமங்கலம் சுப்பு அவர்களை அன்றுதான் நேரடியாகப் பார்க்கிறேன். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே விகடன் வாசகன் நான். அவருடைய ‘தில்லானா மோகனாம்பாள்’ தொடரை, பைண்டு செய்த நாவலாகப் படித்து பிரமித்திருக்கிறேன். அப்போது ‘ராவ்பகதூர் சிங்காரம்’ என்று தொடரை எழுதியிருந்தார். (அதுவே ‘விளையாட்டுப் பிள்ளை’ என்ற திரைப்படமாக வந்தது.) ஜெமினி ஸ்டூடியோ தயாரிக்கும் எல்லாப் படங்களுக்கும் திரைப்படக் குழுவின் தலைவர் அவர்தான். ஓளவையார் படத்தின் இயக்குனர். வஞ்சிக்கோட்டை வாலிபனில் வரும் போட்டி நடனப்பாடலை இயற்றியவர் அவர்தான். ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதியிருந்தார். நாடக அரங்கத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர்.

சுமார் ஆறடி உயரம். ஜிப்பா-வேஷ்டி அணிந்திருந்தார். கையில் வெள்ளியாலான வெற்றிலை-சீவல் பெட்டி. அடிக்கடி அதைத் திறந்து மூடினார். மாணவர்களைப் பார்த்து செல்லமாகச் சிரித்தார். நாடக விழா என்பதால் தனது நாடக அனுபவங்களை அழகாக நடித்துக் காட்டினார். பெண்கள் மேடைக்கு வராத காலமாதலால், ஆண்களே ‘ஸ்திரீ பார்ட்’ எனப்படும் பெண் வேடம் தாங்கி நடித்ததை அபிநயித்துக் காட்டினார். எம்ஜியாரும் சிவாஜியும் எப்படிப் பெண் வேடத்தில் அசத்துவார்கள் என்பதை அவ்வளவு அழகாகச் செய்துகாட்டினார். ஹமீது அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தனது பாடலில் இருந்து

அடியேக் கண்ணு, அஞ்சலே, - நீ
அடிக்கடி ஏன் வந்து கொஞ்சலே?

என்பதை ஆடிக்காட்டினார். கண்கொள்ளாக் காட்சி அது.

விழா முடிந்து என் சைக்கிளை நகர்த்தும்போது சரியாகப் பத்துமணி ஆகிவிட்டது. எனக்கு விழுந்த மூன்றாவது ரோஜா மாலையை ஆசிரியர்கள் அறையில் தொங்கவிட்டது நினைவுக்குவர, திரும்பி ஓடினேன். அதற்குள் கதவைப் பூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள். சரி, அதனால் என்ன நஷ்டம், எப்படியும் உதிர்ந்துவிடப் போவதுதானே என்று வீடு நோக்கித் திரும்பினேன்.

****
அம்மா கதவைத் திறந்தார். என்னடா இவ்வளவு நேரம் என்றார். முத்தமிழ் விழா இல்லையா, அதுதான் நேரமாகிவிட்டது என்றேன். என் கழுத்தையும் கைகளையும் பார்த்தார். உனக்கு மாலை கீலை எதுவும் போடவில்லையா? என்றார்.

ன் கேட்கிறாய்? என்றேன். போட்டார்கள். ஒன்றல்ல, மூன்று மாலை! எல்லாம் ரோஜா மாலை, தெரியுமா? உதிர்ந்துவிடும் என்பதால் கொண்டுவரவில்லை. கல்லூரியிலேயே விட்டுவிட்டேன் என்றேன். அம்மாவின் கண்களில்  என்மீது நம்பகத்தன்மை குறைவதைப் பார்த்தேன்.

ஜெயப்பிரகாஷ் வந்திருந்தான். கழுத்தில் இரண்டு ரோஜாமாலை போட்டுக் கொண்டிருந்தான். விழாவில் அவனுக்கு இரண்டு முதல் பரிசு கிடைத்ததாமே! ரொம்ப மரியாதையாமே! மாலையைக் கழற்றாமலேயே நண்பர்களோடு காலனி முழுதும் சைக்கிளில் போனான்! எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அப்படி அவன் என்ன தான் செய்தான்? என்றார்.

இராணிப்பேட்டையில் என் வீட்டைத் தாண்டிக்கொண்டுதான் அவன் வீட்டிற்குப் போயாகவேண்டும். அது தான் விளையாடி இருக்கிறான்.
'கல்யாணப்பரிசி'ல் தங்கவேலு செய்த வேலை!

அப்படியா சங்கதி? அதெல்லாம் நாளை பேசலாம், முதலில் சாப்பாடு போடு. பசிக்கிறது என்று பேச்சை மாற்றினேன்.
****
புகுமுக வகுப்பிற்குப் பிறகு நான் அதே கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் சேர்ந்தேன். ஜெயப்பிரகாஷ் சென்னைக்குப் போனான். எந்தக் கல்லூரியில் சேர்ந்தான் என்று நினைவில்லை. படிப்பில் அவனுக்குக் கவனமே இல்லை, அரசியல் கூட்டங்களுக்குத்தான் அதிகம் போகிறான், எப்படி உருப்படப் போகிறானோ என்று அவன் தாயார் அடிக்கடி சொல்லிக் கவலைப்படுவாராம். அம்மா சொல்வதுண்டு. அவனைப் பார்க்கவே முடியவில்லை. தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டான்.

பத்து வருடங்கள் ஆகியிருக்கும். சென்னை  தி.நகரில்  இருந்த ஒரு அலுவலகத்திற்கு வங்கிப்பணி காரணமாக நான் போக நேர்ந்தது. மத்திய அரசு நிறுவனம். அவர்கள் விதிப்படி, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்திற்கு ஒரு அறிவிப்பு பலகை வரவேற்பறையில் மாட்டப்படவேண்டும். இருந்தது.

தலைவர்: ஜெயப்பிரகாஷ் என்று இருந்தது. இனிஷியல் அவனுடைய இனிஷியல்தான். ஒருவேளை அவனே  தானோ?

அருகில் இருந்த மேசையில் தொழிற்சங்கத்தின் மாத இதழ் கிடந்தது. புரட்டினேன். அதே ஜெயப்பிரகாஷ் தான்.  சில மாதங்களுக்கு முன்புதான் அத்தொழிற்சங்கத்தின் தலைவனாகப் பொறுப்புக்கு வந்திருக்கிறான். பதவியேற்பு புகைப்படம் முழுப்பக்க அளவில் வந்திருந்தது. அதே சிரித்த முகம். அதே சுருட்டையான கூந்தல். 

கழுத்தில் ? மிகமிக அடர்த்தியானதொரு ரோஜா மாலை!
**** 

17 கருத்துகள்:

  1. சந்தித்தீர்களா இல்லையா அந்த ரோஜா பிரியரை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லவே இல்லை. என்னையெல்லாம் நினைத்துப் பார்க்கிற அளவில் அவர் இல்லை என்று தெரிகிறது. எங்கிருந்தால் என்ன, நல்லவிதமாக இருக்கிறார். பணி ஓய்வு பெற்றுவிட்டார்.

      நீக்கு
  2. இப்படி எவ்வாறு எழுதவதென்று சொல்லி கொடுங்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கிண்டல்தானே வேண்டாம் என்பது! எனக்கு விரல் தான் எழுதும். உங்களுக்கு விரல் நகமே இசை பாடுமே!

      நீக்கு
  3. ஐயா,

    சுவாரசியம் ததும்பும் "மலரும்" நினைவுகள்.

    இன்று அதே கல்லூரியின் முதல்வராக என்னோடு ஒன்றிணைந்து முதுகலை பயின்ற நண்பர்.

    கோ.

    பதிலளிநீக்கு
  4. உங்களின் எதிர்பார்ப்பு எங்களையும் எதிர்பார்க்க வைத்துவிட்டது. அழகான நடையில் அசத்தியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. அருமை ஐயா அருமை
    ரசனையோடு எழுதிச் சென்ற விதம் அருமை
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  6. மெல்லப் பேசும் ஜெயப்பிரகாஷ் ஒரு தொழிற்சங்கத்தலைவன் காலம் செய்யும் கோலத்தைஒ அழகாக எழுதி இருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தத் தொழிற்சங்கம் உங்களுக்குத் தெரிந்ததுதான்.(அவன் பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது.)

      நீக்கு

  7. //'கல்யாணப்பரிசி'ல் தங்கவேலு செய்த வேலை!//
    இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்.



    அழகான மலரும் நினைவுகள்.

    பதிலளிநீக்கு
  8. அட! கல்யாணப்பரிசு தங்கவேலுதான்!!! அவர் இருக்கும் இடம் வரை சென்றும் அந்த நண்பரைப் பார்க்க முடியவில்லையா!!? ரோஜாவும் ரோஜா மாலைகளும் அழகுதான்!! ரோஜா பூவைத்தான் சொன்னோம்...நல்ல சுவாரஸ்யமான அனுபவம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூவைச் சொன்னாலும் பூவையைச் சொன்னாலும், இரண்டுமே அழகுதான் என்பது என் பணிவான கருத்து....!

      நீக்கு
  9. சுவாரஸ்யமான அனுபவம் என்பதையும் விடஅந்த அனுபவத்தை சுவைபட சுவாரஸ்யமாக சொல்லுகின்றீர்கள் சார்!!!

    கீதா

    பதிலளிநீக்கு