புதன், பிப்ரவரி 22, 2017

மனைவி அமைவதெல்லாம்....

பதிவு எண் 13/2017
மனைவி அமைவதெல்லாம்....  
-இராய செல்லப்பா, நியூஜெர்சியில் இருந்து

காஸ் தீர்ந்துவிட்டது; மின்சாரம் இல்லை. ஓட்டலில் இருந்து உணவு தருவித்துக்கொள்ளலாம் என்றால் உடனே ஒப்புக்கொள்ளவேண்டாமா? அரைமணி நேரம் விவாதம் நடத்தவேண்டுமா? போகட்டும், சாப்பிட்டபிறகு அந்த  பிளாஸ்டிக் டப்பாக்களைக் குப்பைக்கூடையில் போடாமல் அடுக்களையிலேயே சேகரித்துவைக்கவேண்டுமா? ஏற்கெனவே பல வருடங்களாய் சேர்த்துவைத்ததை என்ன செய்வதாக உத்தேசம்?

சில பாடல்கள் மனைவிகளுக்குப் பிடிக்கலாம். சில பாடல்கள் கணவர்களுக்குப் பிடிக்கலாம். ‘சரவணபவ என்னும் திருமந்திரம்- தனை- சதா ஜெபி என் நாவே’ என்ற பாடலை அடிக்கடி பாடவேண்டும் என்று  கணவன்  எதிர்பார்க்கலாம்.  அதே சமயம் ‘வெங்கடாசல  நிலயம் – வைகுண்ட்ட புர வாசம்’ என்று அவன் எப்போதாவது முணுமுணுக்கும்போது   கண்களை உருட்டி மிரட்டலாமா? புரந்தரதாசர் கோபித்துக்கொள்ள மாட்டாரா?

தகப்பனார் கொடுத்த பொருட்களை ஆசையோடு பராமரிப்பது நல்லதுதான். அதற்காக அவர் கொடுத்த டயாபெட்டீசையும் விடாமல் பிடித்துக்கொள்ள வேண்டுமா?  மூன்று வேளை உணவை ஐந்து வேளையாகச் சாப்பிடுங்கள் என்று டாக்டர் சொன்னதைக் கடைப்பிடிக்க வேண்டாமா? காலை உணவை எட்டு மணிக்குள் சாப்பிடவேண்டாமா? அட ராமா, இதை யாரிடம்போய்ச் சொல்வது?    
 
வீட்டுத் தொட்டியில் விளைந்த ரோஜா - மனைவியின் உழைப்பு
சில மனைவிகள்,  சன் டிவியின் அழுகை சீரியல்களைப் பார்ப்பதில்லை. ஆனால், பிள்ளைகளும் பெண்களும் வாங்கிக்கொடுத்துவிட்டார்கள் என்பதற்காக எப்போதும் மொபைலில்  விளையாடிக் கொண்டிருக்கலாமா? மூளை விளையாட்டு நல்லதுதான், அல்செய்மர் போன்ற மறதிவியாதிகளை கொஞ்சகாலத்திற்குத்  தள்ளிவைக்கும்தான், என்றாலும், விரல்களுக்கும் கண்களுக்கும் வேறு வேலை கொடுக்கலாமே!

சில கணவர்கள் இதை (வெளிப்படையாக) ஒப்புக்கொள்ள மறுக்கலாம், என்றாலும், ஓட்டல் சாப்பாட்டை விட, மனைவி கையால் சாப்பிடுவது சுகமானதே என்று  ஒரு சில கணவர்கள் கருதுவதுண்டு அல்லவா? அதை உணர்ந்து செயல்படும் மனைவிமார்கள் எத்தனை பேர்? இன்று என்ன சமைக்கவேண்டும் என்பதை உங்கள் வீட்டில் நிர்ணயம் செய்பவர் யார்?   பழனிச்சாமி முதல்வராக இருக்கலாம், ஆனால், பரப்பன அக்ரஹாரா அல்லவா முடிவுகளை எடுக்கிறதாம்? மாதம் ஒருமுறைதான் பொங்கல்-வடை செய்வது, திடீர் திடீரென்றுதான்  அப்பளம் போட்ட வத்தல் குழம்பு வைப்பது, எப்போதாவதுதான் சேனைக்கிழங்கு வறுவல் செய்வது - போன்ற முடிவுகளை எடுப்பது யார்?

அவ்வப்பொழுது கணவனை முதுகு தேய்க்கும் கருவியாகப் பயன்படுத்துகிறார்களாம் சில மனைவிகள். தொலையட்டும், கணவனுக்கும் முதுகு உண்டு என்பதை அவர்கள் உணர்வதுண்டா?

கூவத்தூரில்  எம் எல் ஏக்கள்  அடைபட்டுக்கிடக்கும் செய்தியை அதிர்ச்சியோடு டிவி-யில் பார்த்துக்கொண்டிருக்கும்போது  ‘அவளுக்குப் பேரன் பிறந்திருக்கிறானாம்’ என்று மனைவி சொன்னால்  ‘அவள்’ என்பது யாரைக் குறிக்கும் என்று இவனுக்குப் புரியுமா? திருதிருவென்று முழித்தால் அதற்காக அவனை வெருட்டுவது சரியா? இவளைத்தவிர வேறொரு பெண்ணை மனத்தாலும் நினைக்கமாட்டேன் என்று மணமான முதல் நாளே சபதம் செய்தவனாயிற்றே! அதை கடைப்பிடிப்பது தவறா?

நல்ல பழக்கங்கள் உடைய கணவர்கள் நாட்டில் அபூர்வம் என்பார்கள் பெரியவர்கள். நானும் ஓர் அபூர்வப் பிறவி என்று உங்களுக்குத் தெரியும்தானே! உதாரணமாக, இன்று என் மனைவிக்குப் பிறந்தநாள். (பிப்ரவரி 22). ஆனால், எத்தனையாவது பிறந்தநாள் என்று சொன்னேனா? பெண்களின் வயதை வெளியில் சொல்லக்கூடாது என்ற நல்ல பழக்கம் என்னிடம் இருக்கிறதல்லவா?

ஹாப்பி பர்த்டே டு யூ, விஜயலட்சுமி!

நியூயார்க்  மெட்ரோ மியூசியம் - 2௦௦5

**** 

23 கருத்துகள்:

  1. பெரியோர்களுக்கு அன்பு வணக்கங்கள்..

    பதிலளிநீக்கு
  2. உங்கள் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்களை அவரே படித்து தெரிந்துகொண்டார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்களை அவரே படித்து தெரிந்துகொண்டார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

      நீக்கு
  4. பிறந்தநாள் வாழ்த்துகள்...

    துணைவியார் மிகவும் கொடுத்து வைத்தவர்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "ஆம், என்னுடைய பென்ஷனை உங்களிடம் தானே கொடுத்து வைத்திருக்கிறேன்" என்று பதில் வருகிறது நண்பரே!

      நீக்கு
  5. வீட்டுச் சாப்பாட்டுக்கும் ஓட்டல் சாப்பாடுக்கும் உள்ள வித்தியாசம் வீட்டில் எது சமைத்தாலும் கூடவே அன்பும் பரிமாறப்படுகிறது. இது தவிர மனைவிமார்கள் ஓட்டல் சாப்பாடே சுவை என்பார்கள். ஒரு வேளையாவது சமைக்காமல் இருக்கலாமே

    பதிலளிநீக்கு
  6. திருமதி ஜயலக்ஷ்மிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்களை அவரே படித்து தெரிந்துகொண்டார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். தாங்களும் தங்கள் துணைவியாரும் நலமா என்று விசாரித்தார்கள்.

      நீக்கு
  7. தங்கள் வயதைச் சொல்லுங்கள் ,திருமதியாரின் வயதை கண்டுபிடிப்பதா சிரமம் ?ஏழு வயது வித்தியாசம் சரியா சார் :)
    இவ்வளவு சமர்த்தாய் உங்களை சிந்திக்க வைக்கும் அவருக்கு வாழ்த்துகள்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா, குடும்பத்திற்குள் குழப்பம் விளைவிக்கப் பார்க்கிறீர்களே நண்பரே! சரியாகச் சொல்லுங்கள், என்னை விட அவர் ஏழு வயது இளையவராகத் தோன்றுகிறாரா, அல்லது அவரை விட நான் ஏழு வயது மூத்தவனாகத் தெரிகிறேனா? (போகட்டும், உண்மையைச் சொல்லி விடுகிறேன். என்னை விட அவர் இரண்டு வயதுதான் இளையவர்.). தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  8. பாதி நமக்கும் பொருத்துவது தான் கசக்கிறது! வாழ்த்துகள் சகோதரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் ஒன்றும் கவலைப்படாதீர்கள் நண்பரே! இன்னும் வாழக்கையில் பார்க்கவேண்டியது ஏராளம் இருக்கிறது. தைரியமாக இருங்கள்.

      நீக்கு
  9. //உதாரணமாக, இன்று என் மனைவிக்குப் பிறந்தநாள். (பிப்ரவரி 22). ஆனால், எத்தனையாவது பிறந்தநாள் என்று சொன்னேனா?// மறந்துட்டீங்களோ?

    அவருக்கு வாழ்த்துகள்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கு நன்றி நண்பரே! அது சரி, ஏன் அடிக்கடி எழுத மாட்டேன் என்கிறீர்கள்? (வலைப்பதிவு)

      இளைஞர்கள் எழுத மறுத்தால் தமிழில் வரும் ்எழுத்தெல்லாம் வயதான எழுத்தாகத்தானே இருக்கும்?

      நீக்கு
  10. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்களும் தங்கள் "முதலாளிக்கு" (சரிதானே?)இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும்.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா! முதலாளியிடம் தெரிவித்தாகிவிட்டது. போதுமா? அடிக்கடி என் வலைபதிவிற்கு வாருங்கள்.

      நீக்கு
  11. ஸாரி ஸார்! மிகவும் தாமதமான வாழ்த்துகள் தங்கள் மனைவிக்கு..இன்றுதான் பார்த்தோம் எல்லா பழைய பதிவுகளையும். தலைமையகத்தில் நெட் பிரச்சனையாக இருந்ததால்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பதிவுகளுக்குக் கதவுகள் இல்லை. எப்போதும் வரலாம். தாமதமானால் என்ன, எப்போது வாழ்த்தினாலும் வாழ்த்து, வாழ்த்து தானே? மிக்க நன்றி.

      நீக்கு
  12. வாழ்த்துக்கள். நேர சொல்லாம பதிவுல போட்டுட்டீங்க.. எப்படியும் படித்துத் தெரிந்துகொள்ளட்டும் என்று.

    "இவளைத்தவிர வேறொரு பெண்ணை மனத்தாலும் நினைக்கமாட்டேன் என்று மணமான முதல் நாளே சபதம் செய்தவனாயிற்றே" - இதெல்லாம் சரிதான். ஆனால், பதிவுகள்ல, ஐஸ்வர்யா ரை, ரோஜா போன்றோருடைய படமெல்லாம் பார்க்கிறேனே... அவர்கள் மட்டும் பார்க்காமலிருந்துவிடுவார்களா?

    பதிலளிநீக்கு
  13. நண்பரே, ஐஸ்வர்யா ரை, ரோஜா போன்றவர்கள், அழகிகள் என்பது உண்மையே. ஆனால், அவர்கள் திருமணமாகி, ஒன்றோ அல்லது இரண்டோ குழந்தைகளுக்குத் தாயாகி இருப்பது நீங்கள் அறியாததா? அவர்கள் படத்தை வெளியிடுவதன் மூலம் 'தாய்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்' என்ற செய்தியை நான் சொல்லாமல் சொல்வதை நீங்கள் பாராட்ட வேண்டுமா இல்லையா?

    பதிலளிநீக்கு