சனி, ஜனவரி 28, 2017

சுபாவதாரம் (1) (சற்றே நீண்ட சிறுகதை)

பதிவு 05/2017
சுபாவதாரம் -1
(சற்றே நீண்ட சிறுகதை)
- இராய. செல்லப்பா
(1)

வேளச்சேரி  நூறடி சாலையில் பெருத்த விளம்பரத்துடன் ஆரம்பிக்கப்படிருந்த அமெரிக்க காப்பிக்கடையில் கூட்டம் இல்லாத மேசையாகப் பார்த்து உட்கார்ந்த  ஜெயராமன், தன் தலைமை அலுவலகத்திலிருந்து வந்த கடிதத்தை மூன்றாவது முறையாகப் படித்தான்.

“எங்கள் பதிவேட்டின்படி, வரும் ஜூலை 31 அன்று தங்களுக்கு அறுபது வயது நிறைவடைவதால், அன்று மாலையுடன்  தாங்கள் பணி ஓய்வு பெறுவீர்கள் என்பதை இதன்மூலம் தெரியப்படுத்துகிறோம்.......- எம் கே மல்ஹோத்ரா, பொது மேலாளர்”.

அன்றுதான் ஜூலை 31.

அவனோடு ஒரேநாளில் வங்கியில் சேர்ந்த அதிகாரிகள் நாற்பதுபேர். அதில் மூன்றுபேர் இப்போது பொதுமேலாளர்கள்- மல்ஹோத்ரா உள்பட. எவ்விதமான பதவி உயர்வுமின்றி வெறும் “ஸ்கேல்-ஒன்” அதிகாரியாக ஓய்வு பெறப்போவது அவன் மட்டுமே.

மல்ஹோத்ரா எவ்வளவோ சொன்னார். “இன்டர்வியூவிற்கு சும்மா வந்து நின்றுவிட்டுப் போ. புரமோஷன் வந்தால் டிரான்ஸ்பர் வருமென்று பயப்படாதே. உன்னைச் சென்னையிலேயே போஸ்ட் செய்கிறேன்” என்றார். “விரும்பியிருந்தால் என்னைப்போல நீயும் ஜி.எம். ஆகியிருக்கமுடியும். வாழ்க்கையை வீணாக்கிவிட்டாய்” என்றார். ஜெயராமனின்  பதில் “சரிதான் போடா” என்பதாகவே இருக்கும். அண்ணா சாலையில் எல்ஐசி சந்தில் அவருடன் எவ்வளவோ நாட்கள் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்ட நட்பாயிற்றே!      

யூனிபாரம் அணிந்த பணியாள், ஒரு பூங்கொத்தை நீட்டும் பாவனையில் மெனுகார்டை நீட்டினார். காப்பி – சிறிய கோப்பை: ரூ.75, பெரிய கோப்பை ரூ.120.  சிறிய கோப்பையே போதும்தான். ஆனால் இன்று அவன் ஓய்வு பெறப்போகும் நாளல்லவா? “காப்பி - ஒரு பெரிய கோப்பை” என்றான்.   

பத்துமணிக்குத்தான் வங்கி ஆரம்பம். ஆனால் ஒன்பதேகாலுக்கே சென்று திறந்துவிடுவான் ஜெயராமன். அதற்கு வசதியாக அருகிலேயே வீடு பார்த்திருந்தான். இன்றோ உடம்பெல்லாம் பரபரப்பு. ஒன்பதுக்கே வந்துவிட்டான். இதுதானே கடைசி கதவுதிறப்பு! காப்பிக்குச் செலவிடக் கால்மணிநேரம் ஒதுக்குவதில் தவறில்லை.

“என்ன ஜெயராமன் சார்! இனிமே பேங்க்கில் உங்களைப் பார்க்க முடியாதாமே?” என்றபடியே வந்தார் ராமநாதன். அந்த வர்த்தக வளாகத்தின் உரிமையாளர்.

“என்ன செய்வது? அறுபது வயதாகிவிட்டது, வீட்டுக்குப் போன்னு துரத்துறாங்களே!” என்று சிரித்தான் ஜெயராமன். “சாருக்கும் ஒரு பெரிய கோப்பை” என்று உள்பக்கம் திரும்பிக் கையசைத்தான்.

காப்பி வந்தது.  “நீங்க அதிர்ஷ்டசாலி ஜெயராமன்! இனிமே ஆபீஸ் போகாம பென்ஷன் வாங்கிட்டு நிம்மதியா இருக்கலாம். என்னெப் பாருங்க. சாகற வரைக்கும்  ஓய்வு கிடையாது. எப்பவும் பிசினஸ், பிசினஸ்னு அலையறேன்” என்றார் ராமநாதன்.

அப்போதுதான் தன்னைக் கவனித்தான் ஜெயராமன். தனக்கு இன்னும் தலை முழுதாக நரைக்கவில்லை.  இன்றும் வேளச்சேரியிலிருந்து நந்தனம் வரை எளிதாக நடக்கமுடிகிறது. எல்.ஐ.சி.-யின் எட்டாவது மாடிக்கும் படியேறிச் செல்லமுடிகிறது.... பென்ஷனைக் கொண்டு வாழ்க்கையைத் தள்ளி விடலாம்தான். சொந்த வீடு என்ற பெயரில் ஒரு பழைய வீடு நெய்வேலியில் இருந்தது. அப்பாவின் உழைப்பு.

“அது சரி, ரிடையர் ஆனப்புறம் எங்க செட்டில் ஆகப் போறீங்க? பிள்ளைங்க படிச்சு முடிச்சிட்டாங்களா?”

“பிள்ளைகளா?” கடகடவென்று சிரித்தான் அப்போதுதான் அங்கு வந்த எஸ்.கே. கிருஷ்ணன். ஜெயராமனின் உடன்பணியாளர். “சாருக்குக் கல்யாணமே ஆகலை சார்! பெண்கள்னாலே அரைமைல் தூரம் ஓடிடுவார்!” என்றான். ஜெயராமன் முகத்தில் கூச்சம் நெளிந்தது. ஆம்,  தன்னை “சாமியார்” என்றுதானே சக ஊழியர்கள் அழைப்பார்கள்!

அதற்குள் அவரது அலைபேசி ஒலிக்கவே, “சாயங்காலம் வந்து பாக்கறேன்” என்று கிளம்பினார் ராமநாதன்.
*****
காலையிலிருந்து வாடிக்கையாளர்கள் ஒருவர் விடாமல் அவனைச் சந்தித்து கைகொடுக்க வந்தார்கள். “ஹாப்பி ரிடயர்மெண்ட்” என்றார்கள்.

ஏஜிஸ் ஆபீசிலிருந்து இருபதுவருடம் முன்பு ஓய்வு பெற்ற முதியவர் ஒருவர், “உங்களுக்காகத் தான் இந்த வங்கிக்கு வந்தேன். நீங்கள் போய்விட்டால் ஒருபயல் என்னை ஏனென்று கேட்க மாட்டான். நோ கஸ்டமர் சர்வீஸ் வில் பி அவைலபிள்” என்று வருந்தினார். “வயதான காலத்தில்தான் பேச்சுத்துணை அவசியம். பேசாமல் கோயம்புத்தூர் போய் ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்ந்து விடுங்கள்” என்று ஆலோசனை சொன்னார்.

ஜிப்பாவும் சந்தனப் பொட்டுமாக வந்தார் ஏ.கே.பி.சத்யன். டிவி புகழ் ஜோதிடர். ‘சனிப் பெயர்ச்சி’க்கும், ‘குருப் பெயர்ச்சி’க்கும் புத்தகம் போடுபவர். “ஜெயராமன், உங்க விருச்சிக ராசிக்கு இப்போ ஜென்ம சனி. கொஞ்சம் படுத்தும். ஆனாலும் வசதி கொறையாது. இன்னைக்கு ரிட்டையர் ஆறீங்களாமே! ஜாதகம் குடுங்க. விரிவான பலன் தபால்ல அனுப்பி வெக்கிறேன்” என்றார். “ஹேப்பி ரிட்டையர்மெண்ட்” சொன்னவர், “என் அக்கவுண்ட்ல இருநூத்தம்பது ரூபா கிரெடிட் பண்ணிடுங்க. ஒங்களுக்கு ஃபிஃபடி பர்செண்ட் டிஸ்கவுண்ட்” என்று நினைவுபடுத்த மறக்கவில்லை.       

இளமுதுமையை மறைக்கும் அதீத ஒப்பனைகளுடன் ஒரு பெண்மணி நேராகக் கிளைமேலாளர்  அறைக்குள் நுழைந்தாள். கவுண்ட்டரில் நிற்பதைக் கௌரவக் குறைவாகக் கருதும் “கேபின் கஸ்டமர்” ரகம். கிளைமேலாளர்  இன்னும் வராததால், அங்கிருந்தபடியே ஜெயராமனின் இருக்கையை உற்று நோக்கினாள். அதற்குள் ஜெயராமனே அவரைப் பார்த்து மென்னகைத்தபடி உள்ளே நுழைந்தான். “வணக்கம் நந்தினி மேடம்”.

“வணக்கம் ஜெயராமன்! உண்மையில் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். இன்றுடன் ஓய்வு பெறுகிறீர்களாமே!” என்றார் நந்தினி. தலையாட்டினான்.

“முன்பே தெரிந்திருந்தால் காஸ்மாபாலிட்டன் கிளப்பில் பார்ட்டி ஏற்பாடு செய்திருப்பேன். உங்களை மாதிரி பொறுப்புணர்ச்சியோடு பணியாற்றுபவர்களுக்கு வாடிக்கையாளர்கள் நன்றி தெரிவிக்க வேண்டாமா?”

ந்தினியை முதன்முதலில் சந்தித்த நிகழ்ச்சி அவனுக்கு நினைவுக்கு வந்தது.

பிஸியானதொரு சனிக்கிழமை பகல் பதினொன்றரை மணிக்கு கேஷ் கவுண்ட்டரில் இருந்த கியூவை முந்திக்கொண்டு, ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்டிச் சில்லறை கேட்டாள் நந்தினி. அன்று கேஷியராக இருந்த மாதவன், மற்ற வாடிக்கையாளர்களின் எரிச்சலைப் பொருட்படுத்தாமல் எழுந்து நின்று, புன்னகையுடன் பத்து நூறுகள் கொடுத்தான். பதில் புன்னகையை எதிர்பார்த்தான். அவளோ, அதில் இரண்டைத் திருப்பிக் கொடுத்து, பத்து ரூபாய்களாகக் கேட்டாள். திடீரென்று இன்னொரு ஆயிரம் கொடுத்து ஐந்து ரூபாய் புதிய நோட்டுகள் வேண்டுமென்றாள். அன்று அந்த நோட்டுக்கள் ஸ்டாக் இல்லை. உடனே கோபத்துடன் “வாட் எ பேங்க் இஸ் திஸ்?” என்று குரலை உயர்த்தியபடி வெளியேறினாள். தன் புன்னகை வீணாகிவிட்ட ஏமாற்றம் மாதவனின் முகத்தில் தெரிந்தது. இதைக் கண்ணாடி அறைக்குள்ளிருந்து பார்த்துகொண்டிருந்த கிளைமேலாளர், ஜெயராமனை நோக்கி அவளைச் சமாதானப்படுத்து என்று சைகை செய்தார். முக்கியமான டிபாஸிசிட்டர்.   

நந்தினியை நோக்கி வேகமாக நடந்தான் ஜெயராமன். அவள் இன்னும் காரில் ஏறவில்லை. “மேடம், சமீபத்தில் நீங்கள் நேப்பாள் போயிருந்தீர்களா?” என்றான்.

“வொய்?” அற்பப் புழுவைப் பார்ப்பதுபோல் இருந்தது அவள் பார்வை.

“இல்லை மேடம், இதே மாதிரி ஸாரியை நேப்பாளில் வாங்கியதாக ஐஸ்வர்யா ராய் பேட்டி கொடுத்திருந்தார். அதான்...” என்று வார்த்தையை முடிக்காமல் இழுத்தான்.

அடுத்தநொடியே அவள் முகம் வெளிச்சமானது. “தாங்க்ஸ் ஃபார் த காம்ப்ளிமெண்ட். ஆனால், இதை மைசூர்ல வாங்கினேன். ரெண்டு வருஷம் ஆச்சு”.

“ரெண்டு வருஷப் பழசா? நம்ப முடியலயே!” என்ற ஜெயராமன்  அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு  அவளை மேலிருந்து கீழ்வரை ஆழமாகப் பார்த்து முடித்தான். கழுத்தில் வைர நெக்லஸ், விரலில் வைர மோதிரம். “மேடம், நாளைக்கு வருவீங்களா? நீங்க கேட்ட புதுநோட்டுக்கள் எடுத்து வெக்கிறேன். இன்னிக்கு தரமுடியாம போனதுக்கு மன்னிக்கணும்” என்றான்.

அவளுக்கு உச்சி குளிர்ந்திருக்க வேண்டும். “நோ நீட்! ஜஸ்ட் லைக் தட் கேட்டேன்” என்று காரில் ஏறிகொண்டாள். பிறகு அவனை நோக்கி ஆவலோடு “அந்த ஐஸ்வர்யா ராய் பேட்டி எந்தப் பத்திரிகையில் வந்தது?” என்றாள்.

“ஹிந்துவா எக்ஸ்பிரஸ்சா என்று ஞாபகமில்லை. பார்த்துவிட்டுப் போன் செய்யட்டுமா?”

சரி என்றது அவள் புன்னகை.

“ஆனால் ஒரு விஷயம்..” என்று அவள் முகத்துக்கருகில் சென்றான் ஜெயராமன். “ஒரு வாடிக்கையாளர் உங்களைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?”

“என்ன சொன்னார்?”  

“கோபத்தை மட்டும் கொஞ்சம் குறைத்துகொண்டால் இவர்கள் இன்னும் அழகாக இருப்பார்கள் என்று!” உணர்ச்சியை வெளிக்காட்டாமல் சொன்னான் ஜெயராமன்.

முகத்தில் நூற்றுப்பதினேழு ரோஜாக்கள் மலர்ந்ததை மறைக்கமுடியாமல், “அப்படியா? ரொம்பச் சரி. எதற்கும் உங்களைப் பற்றி மேலிடத்திற்குப் புகார் செய்யவேண்டியதுதான்” என்று சிரித்துக்கொண்டே காரை நகர்த்தினாள் நந்தினி.   

அப்படித்தான் ஆரம்பித்தது. பிறகு... ஹூம், அதையெல்லாம் நினைக்க இது நேரமில்லை. இன்றுதான் கடைசி நாள். இனிமேல் அவள் யாரோ நான் யாரோ.

“சம்பளம் கொடுக்கிறார்கள். வேலை செய்கிறோம். இதற்கெல்லாம் பார்ட்டி எதற்கு மேடம்?” என்று பணிவோடு கேட்டான் ஜெயராமன்.

“அப்படியில்லை. என்னப் பொறுத்தவரை நீங்க ஒரு ஸ்பெஷல் நண்பர். நான் பார்ட்டி  கொடுத்தே ஆகவேண்டும். சனிக்கிழமை வெச்சுக்கலாமா?”

அலுவலகத்தில் அவளோடு விவாதம் நடத்த விரும்பவில்லை ஜெயராமன். “நோ இஷ்யூ. தேங்க்ஸ்” என்றான்.

புன்னகையுடன் எழுந்த நந்தினி, “உங்களுக்குத் தெரிந்த ஒரு பெண்மணியும் பார்ட்டிக்கு வருவாங்க” என்றாள் குறும்பாகப் பார்த்தபடி.

நெற்றியைச் சுருக்கினான். “யாரைச் சொல்கிறீர்கள்?”

“சுபா” என்று சிரித்தபடியே அவனது  எதிர்வினைக்குக் காத்திராமல் வெளியேறினாள் நந்தினி.

சுபாவா? சனிப்பெயர்ச்சி நிச்சயம் படுத்தும் என்று புரிந்துவிட்டது.  
***

“ஜெயராமன் சார்! ஒங்கள மறக்கவே மாட்டேன். நீங்கதான் எனக்கு இந்த கூரியர் வேலையை வாங்கிக்குடுத்து என் வாழ்க்கைல  வெளக்கேத்தினீங்க....” என்று உணர்ச்சி வசப்பட்டான் அஸ்லாம். கிளியரிங்கிற்குப் போகும் அவசரத்தில் இருந்தான். அவன் கைகளைப் பற்றிகொண்டு  அமைதிப்படுத்தினான் ஜெயராமன். “எல்லாம் நல்லபடியாக நடக்கும். உனக்கு ஒரு குறைவும் வராது” என்றான்.

அப்போது இன்ட்டர்காம் ஒலித்தது. “ஜி.எம்.  மல்ஹோத்ரா திடீரென்று சென்னை வந்திருக்கிறார். உங்கள் ஃபேர்வெல் பார்ட்டியில் கலந்துகொள்ளப் போகிறார். மூன்று மணிக்கு வருவார். வெளியில் போய்விடாதீர்கள்” என்றது  கிளைமேலாளர்  குரல்.

வங்கியைத் துப்புரவு செய்யும்  பகுதிநேர ஊழியரான சுப்பம்மா வந்து நின்றாள். “இனிமே ஒங்களப் பாக்க முடியாதுன்னு நெனக்கிறப்ப ரொம்ப வருத்தமா இருக்குங்க. நீங்க ரொம்ப நல்லவருங்க” என்று கண்களைத் துடைத்துக்கொண்டாள். பிறகு இன்னும் சற்றே நெருங்கிவந்து, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “ஒங்களத்தான் மலைபோல நம்பிட்டிருக்கா சுமதி. கைவிட்டுற மாட்டீங்களே?” என்றாள் உறுதியான குரலில்.

7 கருத்துகள்:

  1. அலுவலகத்தில் கடைசி நாள் பற்றி அமர்க்களமாக ஆரம்பித்திருக்கிறீர்கள். தொடர்கிறேன். அதற்குள் சுமதி, சுபா என்று இரண்டு சஸ்பென்ஸ்.... ஜெ ப்ரமோஷன் வேண்டாம் என்று இருந்ததற்கு வேறு ஸ்பெஷல் காரணம் உண்டா என்றும் தெரிய ஆவல். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ஆகா சஸ்பென்ஸோடு அசத்திவிட்டீர்கள் ஐயா
    காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. பல மர்மம் இருக்கும் போல...

    ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. அமர்க்களம்!! இரு பெண்கள்..முதலில்ஜெம் (நாயகனைப் பற்றி இது வரை சொல்லியதிலிருந்து அப்படித்தான் தெரிகிறார் ஜெயராம்/ஜெயராம்) குடும்பம் இல்லாதவர் என்பதால் ப்ரொமோஷன் பற்றிய சிந்தனை இல்லாமல் இருந்திருப்பார் என்றால் இப்போது பெண்கள் என்றும் வருவதால் யூகங்கள்...அந்த சஸ்பென்சை அறிய தொடர்கிறோம்..

    பதிலளிநீக்கு
  5. நல்ல தொடக்கம். சுபா, சுமதி..... சஸ்பென்ஸ்..... தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு