ஞாயிறு, ஜனவரி 08, 2017

1650 பக்கமுள்ள தமிழ் அகராதி இலவசம்!

பதிவு எண் ௦3/2௦17
1650 பக்கமுள்ள தமிழ் அகராதி இலவசம்!

உயர் மதிப்பு நோட்டுக்கள் மதிப்பிழந்த செய்தியும், 75 நாள் மர்ம மரணமும் நாட்டை ஆக்கரமித்துக்கொண்டுள்ள வேளையில், நம் கண்ணுக்குத் தெரியாமல் எவ்வளவோ நல்ல காரியங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்?

மத்திய அரசின் உதவியோடு, பழைய நூல்களைக் கணினிவழி ஆவணப்படுத்தும் பெரியதொரு முயற்சியில் பெங்களூரிலுள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் இறங்கியுள்ளது. தமிழில் வெளிவந்த, தற்போது அச்சில் வரமுடியாத மிகப்பழைய நூல்கள் பல அவ்வாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 35,௦௦௦ க்கும் அதிகமான நூல்களும் வார, மாதப் பத்திரிகைகளும் அவ்வாறு காகிதத்திலிருந்து கணினிக்கு மாறியுள்ளன. எவ்வளவு பெரிய முயற்சி!
அவற்றுள் ஒன்றுதான், பூவிருந்தவல்லி ராமநாதன் (முதலியார்) அவர்களின் முயற்சியால் 19௦9 -இல் வெளிவந்த 1650 பக்கமுள்ள “இருபதாம் நூற்றாண்டு தமிழ் அகராதி” ஆகும்.

சிறந்த தமிழறிஞராகவும் அப்போதைய ‘மெட்ராஸ் லா டைம்ஸ்’ இதழின் சிறப்பு ஆசிரியராகவும், லண்டனில் இருந்த பல்வேறு அமைப்புகளின் கௌரவ  உறுப்பினராகவும் விளங்கியவர், ராமநாதன். தனியொருவரின் உழைப்பினால் உருவான அகராதி இது! காஞ்சீவரம் வித்வான் ராமஸ்வாமி நாயுடு மிகவும் ஒத்துழைப்பு நல்கியதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
கோபால் நாயக்கரை உரிமையாளராகக் கொண்ட T. GOPAUL & Co, சென்னை அவர்களால் வெறும் பத்து ரூபாய் விலையில் வெளியிடப்பட்ட நூல் இது. அதற்கே  ‘இவ்வளவு விலையா?’ என்று கோபப்பட்டிருக்கிறார் ஒரு விமர்சகர். ‘உயர்ந்த நூல் அல்லவா, சரி இருந்துவிட்டுப் போகட்டும்’ என்று அவரே பிறகு சமாதானமும் படுகிறார்.

ஆங்கில மொழிக்கு முதல் அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சனின் முயற்சிக்கு ஒப்பானது, ராமனாதனின் இந்தத் தமிழ் அகராதி முயற்சி என்று மதிப்புரை வழங்கிய ஹென்றி ஒயிட்ஹெட் (அப்போதைய சென்னை மாநில பிஷப்) பாராட்டியிருக்கிறார். தமிழ் பேசும் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கவேண்டிய பொக்கிஷம் என்று மேலும் பல தமிழ்-ஆங்கிலப் பண்டிதர்கள் தம் வாழ்த்துரையில் கூறியிருக்கிறார்கள்.
‘தமிழ்த் தாத்தா’ என்று இப்போது மரியாதையோடு அழைக்கப்படும் உ..வே.சாமிநாதய்யர் இந்நூலுக்குக்  கவிதையால் வாழ்த்து கூறியிருக்கிறார்:
=======================================================================
சென்னை பிரிசிடென்சி காலேஜ்
தமிழ்ப்பண்டிதரும் மகா மகோபாத்தியாயர் பட்டமும் பெற்ற
பிரம்மஸ்ரீ – வே. சாமிநாத அய்யர் அவர்கள்
விருத்தம்
முன்னுபசுந் தமிழ்மொழியி னுளவாய நூல்களிற்சேர் மொழிகள் பல்ல
துன்னுபல புலவர்களைக் கொடுபலனாண் மிகமுயன்று தொகுப்பித் தியாரும்
உன்னுதமிழ்க் கருவூல மிதெனப்பே ரகராதி யொன்றி யற்றி
மின்னுமெழு தாவெழுத்தி லமைந்துவழங் கினனவன்யார் விளம்பென் பீரேல்,

நாவிருந்த வல்லியொடு பூவிருந்த வல்லிமரீஇ நலமார்ந் தோங்கும்
பூவிருந்த வல்லிவரு சுப்பராயக்குரிசில் புதல்வன் முக்கட்
டேவிருந்த வுளத்தினனா கியராச ரத்தினப்பேர்ச் சீமான் பின்னோன்
பாவிருந்த நயசுகுணன் ராமனாதப் பெயர்கொள் பயன்மிக்கோனே.
============================================================================

பதிப்பாளர் கோபால நாயக்கர் தம் பதிப்புரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். (அந்த நாளில் தமிழ் உரைநடை எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா?)
“ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த சொரூபியும், அநாதிமல முத்தபதியுமான பரமேசுவரனது கருணா வீட்சண்யத்தினால் வெளியாகி அகத்திய மகாமுனிவர் மூலமாகப் பொதிய மலையினிடத்திற் றோன்றி, பாண்டிய மகாராஜனாற் புகழப்பட்டு, சங்கப் பலகையிற் கிடந்து செந்நாப் புலவர்கள் என்னும் செவிலித் தாய்மார்களாற் போற்றப்பட்டு, வைகை யேட்டிலே தவழ்ந்து சமணர்களிட்ட நெருப்பினிடத்து யாதொரு பின்னமு முண்டாகாதபடி நின்று,  பூவுலகின் கண் பொலிவுற நடந்து, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐம்பெரு விலக்கணங்கள் பொருந்த விருந்து, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் அரிய நாற் பொருட் பயனைப் பயந்து, நிலவாநிற்பது அமிழ்தினுஞ் சிறந்த தமிண்மொழி யென்பதை மறுக்க வல்லார் யார்?”
************ **********  ***********
“இதன்கண், பழைய அகராதிகளிற் காணப்படும் பதங்களுக்குமேல் பதினாயிரத்து முன்னூற்று நாற்பத்தொரு புதிய பதங்கள் சேர்க்கப்பட்டிருப்பதோடு பெரும்பாலும் பெருக்கியும் புதுக்கியும் விளக்கியும் இருநூற்றுப்பதினைந்து றாயல்பாரங்கள் கொண்டதும், ஆயிரத்து எழுநூற்று இருபது பக்கங்களடங்கியதுமான புத்தகமாய் உயர்ந்த கிளேஸ் காயிதத்தில் அச்சிடப்பட்டு அதி உசிதமான அரைத்தோற் கட்டடத்திற் சிறந்த புத்தகமாய் இயற்றப்பட்டிருப்பதால், இஃது எவ்வாற்றானும் மற்றைய அகராதிகளிலும் பன்மடங்கு சிறந்ததென்பது வெளிப்படை. இவ்வரிய அகராதி ஒவ்வொரு கலாசாலைப் புத்தகசாலையிலும் அவசியமிருக்கவேண்டியது. இதை 
வித்தியாதலைவர், ஆசிரியர், பிரபுக்கள், துரைமக்கள், பாதிரிமார் தமிழ்ப்பாஷாபிமானிகள், ஆகிய எத்திறத்தவரும் நன்கு மதித்துப் பரிபாலித்தல் வேண்டுமென்பதே எம்கோரிக்கை.”

இந்த அகராதி இப்போது அச்சில் இல்லை. அச்சிட்டாலும் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது விலை வைக்கவேண்டியிருக்கும். உங்களுக்கு இந்த நூலை ஒரு பைசா செலவில்லாமல் கிடைக்கும் வழியைச் சொல்லட்டுமா? கீழ்க்கண்ட இணைப்பில் சொடுக்குங்கள்:
‘டவுன்லோட்’ பொத்தானை அழுத்தினால் உங்கள் மேசைக் கணினியில் அல்லது தொடைக்கணினியில் இறக்கிக்கொள்ளலாம். (மடிக்கணினி என்று சொல்லி ‘போர்’ அடித்துவிட்டது!) (அலைபேசியில் வேண்டாம்.) 400 mb அளவுள்ள பெரிய கோப்பு என்பதால் இறங்குவதற்கு முப்பதிலிருந்து ஐம்பது நிமிடங்கள் ஆகலாம். அதற்கேற்ப நேரத்தைத் தேர்வுசெய்யவும்.
*********** *********
மேற்படி இணைப்பின் ‘HOME’ பக்கத்தில் சென்று பாருங்கள்.
‘search’ பெட்டியில் tamil என்று எழுதிச் சொடுக்குங்கள். எல்லாத் தமிழ்ப் புத்தகங்களும் அடங்கிய பக்கம் வரும்.
வேறு என்னென்ன புத்தகங்களை இறக்கிக்கொள்ள முடியும் என்று பாருங்கள். எல்லாமே இலவசம்தான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒன்றிரண்டு நூல்களை இறக்கிக்கொண்டால் எப்போதாவது பயன்படும்- நமக்கில்லாவிடினும், மற்ற ஆராய்ச்சி மாணவர்களுக்காவது!
நான் இறக்கிக்கொண்ட இன்னொரு நூல், சென்னை பல்கலையில் சரித்திரம் மற்றும் தொல்பொருளாராய்ச்சித் துறையில் பேராசிரியராக இருந்த வி.ஆர். ராமச்சந்திர தீட்சிதரின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு. 1949இல் வெளியானது. அடையாறு தியசாபிகல் சொசைட்டியின் வசந்தா பிரஸ் வெளியிட்டது. ஆங்கில மொழி வித்தகரும், அப்போதைய மைசூர் அரசின் திவானாக இருந்தவருமான  ஏ.ராமசாமி முதலியார் (ஆம், ஆற்காடு இரட்டையர்கள் என்று அறியப்பட்டவர்களில் ஒருவர்; சென்னை பல்கலையின் நீண்டநாள் துணைவேந்தரான ஏ.லட்சுமணசாமி முதலியாரின் அண்ணன்) இந்த மொழிபெயர்ப்பைப் பெரிதும் பாராட்டி இருக்கிறார் என்றால் வேறு அத்தாட்சியே தேவையில்லை.
இந்த மொழிபெயர்ப்பைச் சரிபார்த்துக்கொடுத்தவர்களில் ஒருவர், டாக்டர் மு.வரதராசன் அவர்கள். அப்போது சென்னைப் பல்கலையில் உதவி விரிவுரையாளராக இருந்தவர். பின்னாளில் அதன் துணைவேந்தராகவும் ஆனவர்.
பல அதிகாரங்களை நானும் படித்துப் பார்த்தேன். இவ்வளவு சரளமான, எளிமையான ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்க்க முடியுமா என்று வியப்பு தான் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் இந்த நூலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாகப் பிறமொழி மாணவர்களுக்குத் திருக்குறளை அறிமுகப்படுத்த இந்த நூல் பெரிதும் பயன்படும்.
இதற்கான இணைப்பு: http://www.new.dli.ernet.in/handle/2015/506984

-இராய செல்லப்பா  நியுஜெர்சியில் இருந்து.

15 கருத்துகள்:

  1. மிகவும் பயனுள்ள தகவல் ஐயா
    இதோ இணைப்பிற்குச் செல்கின்றேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  2. நல்ல தகவல். த.ம 1. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. சொடுக்கி விட்டேன்! இறங்கி கொண்டிருக்கிறது. எவ்வளவு நேரம் ஆகுமோ?!! அறியத் தந்தமைக்கு நன்றி.

    தம +1

    பதிலளிநீக்கு
  4. பயனுள்ள தகவல். நானும் தரவிறக்கம் செய்து கொள்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. பயனுள்ள தகவல். தரவிறக்கம் செய்தாகிவிட்டது, சுட்டியும் குறித்துக் கொண்டுவிட்டோம் சார்.

    பதிலளிநீக்கு
  6. மிக அரிய செய்தியை மிகவும் எளிதாக எங்களுக்குப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நன்றி அய்யா. தமிழ் அகராதியை தரவிறக்கம் செய்து கொண்டேன். மற்ற நூல்களையும் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. மிக்க நன்றி... bookmark-ம் செய்து விட்டேன்...

    பதிலளிநீக்கு
  9. மிகவும் பயனுள்ள தகவல். பயன் படுத்தி கொள்கிறேன். நன்றி!

    பதிலளிநீக்கு
  10. மிகப் பயனுள்ள பகிர்வு. நன்றி சார்

    பதிலளிநீக்கு