ஞாயிறு, ஜூலை 27, 2014

(பதிவு 104) மீண்டும் பூத்தது கொன்றை மரம்-3 (இறுதி)

(பதிவு 104) மீண்டும் பூத்தது கொன்றை மரம்-3 (இறுதி)

அன்று மாலை பெரிய ஏரிக்கரையின் நான்காவது படிக்கட்டில் அமர்ந்துகொண்டோம். நேற்றை விட இன்று அதிக மென்மையாகவும் இனிமையாகவும் வீசியது காற்று. வறுத்த நிலக்கடலையைக் கொறித்துக்கொண்டே  பேசினோம். ஒரே மாதத்தில் ஐம்பது ரூபாய் சேர்ந்துவிடும் என்று தோன்றியது. அப்படியானால் அதற்கடுத்த மாதத்தில் முதல் புத்தகம் வெளிவந்துவிடும்! கூப்பிடும் தூரத்தில் அல்லவா வெற்றி காத்திருக்கிறது! இப்படிப்பட்ட செயல்திறனுள்ள ஒருவன் எனக்கு நண்பனாகக் கிடைக்க நான் எவ்வளவு கொடுத்துவைத்திருக்க வேண்டும்!

வெள்ளி, ஜூலை 25, 2014

(பதிவு 103) மீண்டும் பூத்தது கொன்றை மரம்-2

(பதிவு 103) மீண்டும் பூத்தது கொன்றை மரம்-2
முதல் பதிவைப் படிக்க: (பதிவு 102) மீண்டும் பூத்தது கொன்றை மரம்-1

அடுத்த ஒரு மாதத்திற்குள் ராஜனின் கற்பனைக் கப்பல் விரைந்து பயணம் செய்யத்தொடங்கியது. மணிக்கணக்காக என்னிடம் கதை சொல்ல ஆரம்பித்தான். எனக்கோ பிரமிப்புக்கு மேல் பிரமிப்பு. இவ்வளவு கற்பனைகளை அவன் எப்படித்தான்  இத்தனைநாள் தனக்குள் சுமந்துகொண்டிருந்தானோ!  நிச்சயம் இவன் கல்கியை விட, நாஞ்சில் பி.டி.சாமியைவிடப் பெரிய எழுத்தாளன் ஆகப்போகிறான் என்பதில் எனக்குச் சந்தேகம் எழவில்லை.

புதன், ஜூலை 23, 2014

(பதிவு 102) மீண்டும் பூத்தது கொன்றை மரம்-1

(பதிவு 102) மீண்டும் பூத்தது கொன்றை மரம்-1

பொன்னார் மேனியனே!  புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே!
மன்னே, மாமணியே!  மழபாடியுள் மாணிக்கமே!
அன்னே நின்னையல்லால்,  இனி, யாரை நினைக்கேனே?

(சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரப் பாடல். ஏழாம் திருமுறையில் 24வது திருப்பதிகமாக அமைந்துள்ளது. சோழநாட்டில், காவிரியின் வடகரையில் உள்ள திருமழபாடி, 54வது பாடல் பெற்ற தலமாகும்.)
***
பொன்னியின் செல்வனுக்குப் போட்டியாக ஒரு நீளமான சரித்திர நாவல் எழுதி, அதைத் தானே புத்தகமாக வெளியிடவேண்டும் என்ற ஆர்வம் தேன்கனிக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ராஜனுக்கு இருந்தது. ஆனால் அவனது  ஆர்வத்தைப் புரிந்துகொள்ளும் மனப்பக்குவமுடைய உயிரினங்கள் யாரும்  அவனுடைய ஆசிரிய வர்க்கத்திலோ, மாணவச் செல்வங்களிலோ, உற்றார் உறவினர்களிலோ  இல்லை.

செவ்வாய், ஜூலை 15, 2014

(பதிவு 101) பெண் ஜோதிடரும் ஆண் ஜோதிடரும் ..( தொடர்ச்சி)


அடுத்த நாள்.

தமிழர்களாகிய நமக்குக் காலையில் எழுந்ததும் இரண்டு விஷயங்கள்தானே நிரந்தரம்? ஒன்று, காப்பி குடித்தல். இன்னொன்று ‘ஹிந்து’ படித்தல்.

நான் ஹைதராபாத், பெங்களூர், டில்லி போன்ற பெருநகரங்களில் இருந்திருக்கிறேன். அங்கெல்லாமும் ‘ஹிந்து’ வரும். ஆனால் படிக்கச் சகிக்காது. முதல் நான்கு பக்கங்கள் பெரும்பாலும் அந்தந்த ஊரிலுள்ள  ஆசிரியர்களால் நிர்வகிக்கப்பட்டதால், உள்ளூர் செய்திகளே அதிகம் வரும். ஆனால், ஒரு சில பத்திகளைத்தவிர, மற்றவை படிக்க சுவாரசியமாக இராது. காரணம், சென்னை ‘ஹிந்து’வின் எழுத்துப்பாணி அங்கே இருக்காது! அதனால், சென்னை வரும்போதெல்லாம், காலையில் ‘ஹிந்து’வை எழுத்துவிடாமல் படித்து ஆசையைத் தீர்த்துக்கொள்வேன்.

ஞாயிறு, ஜூலை 13, 2014

100-வது பதிவு: என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார் அந்தப் பெண்!


எனது நூறாவது பதிவு:

அஸ்தினாபுரத்தில் பாண்டவர் அரண்மனைக்குச் சென்று திரும்பிய துரியோதனன், நீரில்லா இடத்தை  நீரென்று கருதித் தாவுகையில் கால் இடறி விழுந்தான்.  தோழியர் புடைசூழ அங்கிருந்த பாஞ்சாலி நகைக்கிறாள். விழுந்த அவமானத்தை விடவும், தன்னால் விரும்பப்பட்ட பெண்ணொருத்தியின் நகைப்பே துரியோதனனுக்கு ஆத்திரமூட்டுகிறது. ஊர் திரும்பிவந்ததும் தனது அரசவையில் அனைத்துப் பெரியோர்களிடமும் அதைச் சொல்லி ஆறுதல் தேடுகிறான். தந்தை திருதராட்டிரனோ, இதையெல்லாம் பெரிதுபடுத்தாதே என்கிறான்.

“தவறி விழுபவர் தம்மையே – பெற்ற
தாயும் சிரித்தல் மரபன்றோ? ..”

வெள்ளி, ஜூலை 11, 2014

என்னதான் நடக்கிறது அமெரிக்காவில்? (2)

முகநூல் நண்பரின் அடுத்த கேள்விகள்:

கேள்வி (3) அமெரிக்காவில் வீசும்காற்றை உங்களால் பயமில்லாமல் சுவாசிக்க முடிந்ததா?  (6) காற்றின் மணம் எப்படி இருந்து என்று உணர்ந்தீர்கள் ?

இந்தக் கேள்விகளின் உள்ளுறை அர்த்தம் என்னவென்று எனக்கு விளங்கவில்லை. உலகெங்கும் ஆயுதப் போட்டியை உருவாக்கி, அதன்மூலம், நாடுகளிடையே போர்மூளும் சூழலை உண்டாக்கி, போருக்கு ஆயத்தமாகவேண்டிய நிலையில் உள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை சப்ளை செய்வதன்மூலம் தனது பொருளாதாரத்தை நிலைப்படுத்திக் கொள்வதே அமெரிக்காவின் அரசியல் வரலாறு என்பதை வைத்துக்கொண்டு, அமெரிக்காவில்  வெடிமருந்துகளின் கந்தக வாசம் காற்றை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் என்று நண்பர் கருதுகிறாரோ?  

புதன், ஜூலை 09, 2014

என்னதான் நடக்கிறது அமெரிக்காவில்? (1)

நண்பர்களே, சில மாதங்களாக எனது வலைப்பதிவுகள் குறித்த நேரத்தில் வருவதில்லை என்பதை அறிவீர்கள். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன: ஒன்று, இந்தியப் பொதுத்தேர்தல். ஒரு வலுவான மத்திய அரசு அமைந்தால் தான் நாட்டிற்கு நல்லது என்ற சிந்தனையை என்னோடு எவ்வளவு பேர் சேர்ந்து செயல்படுத்துவார்களோ என்ற கவலை ஒரு பக்கம் (!) திட்டமிட்டிருந்த அமெரிக்கப் பயணம் நல்லவிதம் அமையவேண்டுமே என்ற கவலை  இன்னொரு பக்கம்.   இரண்டுமே இப்போது இனிதாக நிறைவேறி விட்டதால், இனித் தொடர்ந்து எழுதுவேன். வழக்கம் போல ஆதரவு தாருங்கள். (படித்தோ, அல்லது பின்னூட்டம் இட்டோ, அல்லது இரண்டு வகையிலுமேயோ.)

இடையில் சில நாட்கள் முகநூல் (Facebook) பக்கம் சென்றுவந்தேன். முகநூல் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக மட்டுமே. ‘முக’ நூல் என்பதாலோ என்னவோ, பலர், தினமும் தங்கள் முகங்களைப் பல்வேறு கோணங்களில் அழகுபடுத்திக்கொண்டு, அந்தப் படங்களைச் சூரியன் இந்தியாவில் உதிப்பதற்குச் சற்று முன்பாக ஒருமுறையும்,  சூரியன் ஆஸ்திரேலியாவில் உதிப்பதற்குச் சற்று முன்பாக இன்னொரு முறையும் வெளியிட்டுவருவதைப் பார்க்க முடிந்தது. சிலரோ, வெறும் ‘காலை வணக்கம்’ ‘இரவு வணக்கம்’ மற்றும், ‘மதிய வணக்கம்’ மட்டுமே போட்டு, அதற்கும் பல நண்பர்களிடமிருந்து ‘லைக்’ பெறுவதையும் பார்த்தேன். சிலர், திருக்குறள்,   சிலப்பதிகாரம், பாரதியார் பாடல்கள் இவற்றிலிருந்து மேற்கோள் காட்டுவதன்மூலம் மெல்லத் தமிழ் இனிச் சாகாதிருக்க முயற்சி செய்வதையும் கண்டேன். மார்க் ஜக்கர்பர்க் என்னும் இளைஞனின் சிறுமுயற்சி எப்படி இந்த உலகிலுள்ள அனைத்துத் தமிழர்களையும் மிக எளிதாக ஒன்றிணைத்துவருகிறது என்பதை வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் முகநூலின் மிகப்பெரிய ஆபத்து ஒன்றையும் என்னால் உணர முடிந்தது.