செவ்வாய், ஜூன் 24, 2014

பத்து கேள்விகள் - பத்துக்கும் பதில்கள்

பத்து கேள்விகள்  - பத்துக்கும் பதில்கள்

முகநூல்பக்கம் போனால் ஒன்று, ஜெயமோகன் Vs பெண் கவிஞர்கள்  என்ற விஷயத்தில் மாட்டிக்கொள்ளவேண்டும். அல்லது, தம் பிள்ளைகள் பேரன்கள் எல்லாரையும் ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிட்டு அதன் பிறகு சாவகாசமாகத் தமிழ்வழிக் கல்விதான் வேண்டும் என்று காத்திரமான போராட்டத்தில் இறங்கியிருப்பவர்களுடன் கைகுலுக்கவேண்டும்.

சரி, நம்ம பதிவுலகம் பக்கம் வந்தாலோ, யாரோ ஒரு அம்மையார் பத்து கேள்விகளைக் கேட்டுவிடுகிறார்; ஆளாளுக்குப் பதில் சொல்லி நம்மையும் மாட்டிவிடுகிறார்கள். போதாக்குறைக்கு, சுப்புத்தாத்தா வேறு அவருடைய தளத்தில் என்னுடைய பதிலை எதிர்பார்ப்பதாக எழுதியிருக்கிறார். நட்சத்திர எழுத்தாளரான திண்டுக்கல் தனபாலன் திரைப்படப் பாடல்களைக்கொண்டு  தன்னுடைய பதில்களை ஏற்கெனவே எழுதிவிட்டார். துளசிதரன் போன்ற வாத்தியார்களும் தங்கள் பள்ளிக்கூட வேலைகளைவிட்டுவிட்டுப் பதில் எழுத வந்து விட்டார்கள். நான் மட்டும் வெளிநாட்டில் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஒதுங்கினால் விடவா போகிறார்கள்?

ஆகவே இதோ எனது பதில்கள்:.

1. உங்களுடைய நூறாவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?..

மண்ணாங்கட்டி! ஏதோ, பணி ஒய்வு பெற்றபிறகு ஒன்றிரண்டுமுறை பாயசம் வைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள். 42 சைசில் ஒரு சட்டை கிடைப்பதுண்டு.  இதெல்லாம் நூறு வயதுவரை தொடரும் சாத்தியம் குறைவு என்றுதான் தோன்றுகிறது. நான் ஒருத்தி, இனிப்பைக் கண்ணால் பார்க்கவும் முடியாமல் படுத்துக்கொண்டிருக்கிறேன், உமக்குப் பிறந்தநாள் கேக் கேட்கிறதா என்று அடுத்த அறையிலிருந்து அன்று முனகல் சப்தம் கேட்குமே!  

2. என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?..
ரஷ்ய மொழியை நானாகவே கற்றுக்கொண்டேன். பெரிய எழுத்தில் வரும்  சிறுவர் புத்தகங்களை எழுத்துக்கூட்டிப் படிக்கவரும் அளவோடு நின்றுவிட்டது. மீண்டும் அதைத் தொடரமுடியுமானால் டால்ஸ்டாயின் நூல்களைப் படிக்க விரும்புகிறேன்.

3. கடைசியாக  நீங்கள் சிரித்தது எப்போது - எதற்காக ?..

அமெரிக்கா வரும்போது திருக்குறளின் பரிமேலழகர் உரையையும், வ.வே.சு. அய்யரின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் என்னுடன் கொண்டுவந்தேன். (காரணத்தைக்  கசியவிடுவேன் என்று பார்க்கிறீர்களா? ஹுஹூம், நடக்காது!) ஒரு திருக்குறளைப் படித்துக்கொண்டிருந்தபோது எனக்குள் சிரிப்பு வந்தது. அதே நேரம், ‘என்ன பைத்தியம் மாதிரி உங்களுக்கு நீங்களே சிரிக்கிறீர்கள்?’ என்று முறைத்துக்கொண்டு வந்தார் துணைவியார். (அவரும் அமெரிக்கா  வந்திருக்கிறார்).  அவரைப் பார்த்ததும் சிரிப்பு இன்னும் அதிகமாயிற்று. அப்போதுதான் அந்தக் குறளின் பெருமை எனக்குப் புரிந்தது. அது என்ன குறள் என்று சொல்லிவிட்டால் இந்தக் கேள்விக்கும் விடை கிடைத்துவிடுமே!

வீட்டில் தினந்தோறும் காலையில் மனைவி முகத்தில்தானே முழிப்போம்! உடனே புன்முறுவலாவது பூக்கிறோம் அல்லவா? (‘ஆம்’ என்ற ஒரே பதிலைத்தான் நீங்கள் சொல்லவேண்டும், புரிந்ததா?)

மனைவியைப் பார்த்ததும் ஏன் சிரிக்கிறீர்கள்? ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று வள்ளுவன் சொன்னதால்தானே!

(கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதல்லவா?)

4. 24 மணி நேரம் பவர் கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?..

கருணாநிதியைத் திட்டலாம். ஜெயலலிதாவைத் திட்டலாம். மனைவியைத் திட்ட முடியாது. இன்வெர்ட்டரில் சார்ஜ் இல்லை என்று அவர் என்னைத் திட்டிக்கொண்டிருப்பாரே!

மற்றபடி எனக்கு எந்த இழப்பும் இல்லை. படுக்கும்போதும் எனக்கு மின்விசிறி தேவையில்லை. ஏசி பிடிக்கவே பிடிக்காது. கொசுவோ மூட்டைப்பூச்சியோ கடித்தாலும் எனக்கு உறைக்காது. பனியனை (மட்டும்!)  கழற்றிவிட்டு, வெறும் தரையில் படுத்துக்கொண்டு, மேலே பார்ப்பேன். ஒட்டடை இருந்தால் குறித்துக் கொள்வேன். எழுந்திருக்கும்போது அவற்றை அகற்றுவேன். அதற்குப் புதுத் துடைப்பத்தை பயன்படுத்துவேன். உடனே துணைவியார் ஓடிவந்து நூறு ரூபாய் துடைப்பம் உமக்கு ஒட்டடைக்கு வேண்டுமா என்று பிடுங்கி எறிவார். ரொம்ப நல்லது  என்று மீண்டும் படுத்துக்கொண்டு விடுவேன். ஒட்டடை எங்கே போய்விடும், நாளைக்கு அகற்றினால் போகிறது!

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாள் அன்று அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன ?..

நன்றாக இருங்கள் என்று வாழ்த்துவோம். சென்னையானால் நவசக்தி விநாயகர், வெள்ளீஸ்வரர் கோயில்களுக்குப் போகச் சொல்லுவோம்.  அமெரிக்காவானால் ப்ரிஜ்வாட்டர், பொமோனா, அல்லது ஃப்ளஷிங் கோவிலுக்குப் போகுமாறு சொல்லுவோம். (‘..வோம்’ என்பது எதனால் என்றால், குழந்தைகளுடன் பேசும்போது துணைவியாரும் அருகிலேயே இருப்பார் என்பதால்!)

அது சரி, உங்கள் குழந்தைகள் நீங்கள் சொல்வதைக் கேட்பார்களா?

6. உலகத்தில் நடக்கும் பிரச்னைகளை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்னையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள் ?..

அமெரிக்காவில் இன்று 75 சதம் பேருக்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் கிடையாது! நோய் வந்தால் நடுங்கிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். எந்த டாக்டரும் உங்களை  ஏற்றுக்கொள்ள முன்வரமாட்டார். பிள்ளையும் பெண்ணும் அங்கிருப்பதால், அடிக்கடி நாங்கள் வரநேரும். இன்ஷூரன்ஸ் எடுக்கவிரும்பினாலும் ‘pre-existing disease not covered’  என்று இருக்கிறதல்லவா? ஊருக்குத் திரும்பும்வரை எந்த நோயும் வந்துவிடக்கூடாதே என்று பிரார்த்தித்துக்கொண்டே இருப்போம். எனவே, ஒபாமா  அரசு உடனடியாகத் தனது இன்ஷூரன்ஸ் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தவேண்டும். அதில், H-1–B இல் இருப்பவர்களின் பெற்றோர்களுக்கு இலவச மருத்துவ வசதியோ அல்லது இலவச மெடிக்கல் இன்ஷூரன்ஸ் வசதியோ அளிக்கவேண்டும். இதற்கான கட்டணத்தை இன்போசிஸ், டி.சி.எஸ்., சி.டி.எஸ். போன்ற நிறுவனங்களிடமிருந்து பெறலாம். மேற்கொண்டு விவரங்களுக்கு என்னை அழைத்துப் பேசுமாறு  நீங்கள் ஆலோசனை கூறலாமே!

7. உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அதைத் தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க விரும்புவீர்கள் ?..

முதலில் மனைவியிடம் கேட்டுவிடுவதே மேல் என்று நினைப்பவன் நான். (உங்களைப் போல் தானே, நானும்!)

8. உங்களைப் பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார். அதைக் கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?..

நேரில் கண்டால்- உடனே விளக்கம் சொல்லித் தடுத்து நிறுத்துவேன். நான் இல்லாதபோது அப்படி நடந்தால், அது எனக்குத் தெரியவரும்வரை பொறுத்திருந்துதானே ஆக வேண்டும்?

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்து விட்டால் அவரிடம் என்ன சொல்வீர்கள் ?..

அதை என் மனைவியிடம் விட்டுவிடுவேன். பெண்களுக்குப் பெண்களாயிற்று என்று!

மரணம் நடந்த அன்றே அவர்கள் வீட்டுக்குப் போகமுடிந்தால், எரிகாடுவரை சென்று வருவேன். நாள்கழிந்து துக்கம் கேட்கப்போனால், என் மனைவி முதலில் பேசுவார். அதையே  வேறு மாதிரியான வார்த்தைகளில் நான் பேசி நேரத்தைக் கடத்துவேன். ஏனெனில் பேச்சா முக்கியம்? துக்கத்தில் பங்கெடுத்துக்கொள்ள சிலர் வந்திருக்கிறார்கள் என்ற எண்ணமே அவர்களுக்கு ஓரளவு ஆறுதலைத்   தருமல்லவா?

10. உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?.

சொல்லலாம், வெட்கமாக இருக்குமே பரவாயில்லையா?

-சமையலறைக்குள் போய், சிப்ஸ், முறுக்கு, மிக்சர் போன்றவை எந்த பாட்டிலிலாவது பாக்கி இருக்கிறதா என்று பார்ப்பேன்.  படித்தால் மட்டும் போதுமா-வில் வரும் ‘தண்ணிலவு  தேனிறைக்க’ பாட்டு கேட்பேன். யூடியூபில் ‘ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸநேஸ்வரி.’ யாராவது இளம்பெண்கள் பாடியது இருந்தால் கேட்பேன். (என் மனைவியைப் பெண்பார்க்கப் போனபோது அவள் பாடிய பாடல்). விசாகா ஹரியின் பிரசங்கம் கேட்பேன். கஸ்தூரியின் வினா-விடை-வேட்டை பார்ப்பேன். டிவி ரிமோட்டைக் கையில் எடுத்துக்கொண்டு எல்லாச் சேனல்களையும் உருட்டிக்கொண்டே போவேன்....

*****
ஒரு வேண்டுகோள்: கொஞ்ச நாளைக்கு வேறு எந்தப் பதிவரும் இம்மாதிரிப் பத்து கேள்வி, பதினைந்து கேள்வி என்று கிளம்பிவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
© Y.Chellappa

49 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா

    கேள்விக்கான பதில்கள் அனைத்தும் அருமையாக உள்ளது அதிலும் 4வது கோள்விக்கான பதிலை இரசித்துப்படித்தேன் ஐயா. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. பத்திற்கும் முத்தான பதில்கள்
    ரசித்தேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  4. பதில்கள் சூப்பர் அதைவிட சூப்பர் கடைசி இரண்டு வரிகள் !
    த ம 4

    பதிலளிநீக்கு
  5. மூன்றாவது கேள்விற்கான விடை புரிகிறது ஹிஹி...

    யதார்த்தமான ரசிக்க வைக்கும் பதில்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கம் போல உங்கள் வாழ்த்துக்கள் மீண்டும் கிடைப்பது வரமே!

      நீக்கு
  6. சுவாரஸ்யமான பதில்கள்
    உண்மையான பதில்களும் கூட என்பதால்
    மிகவும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  7. ///யாரோ ஒரு அம்மையார் பத்து கேள்விகளைக் கேட்டுவிடுகிறார்;///
    யாரோ ஒரு அம்மையார் இல்லைங்க நாந்தான் ஆரம்பித்து வைத்தேன்...நீங்களும் வந்து மாட்டிக் கொள்வீர்கள் என நினைக்கவில்லை.பதில்களில் நகைச்சுவை உணர்வு வெளிப்பட்டு இருக்கிறது...வாழ்த்துக்கள்

    //
    ஒரு வேண்டுகோள்: கொஞ்ச நாளைக்கு வேறு எந்தப் பதிவரும் இம்மாதிரிப் பத்து கேள்வி, பதினைந்து கேள்வி என்று கிளம்பிவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ///

    பத்து கேள்வி, பதினைந்து கேள்வி வேண்டாம் என்றால் ஒரு 100 கேள்வி கேட்கட்டுமா?

    வாழ்க வளமுடன் ப்ரிஜ் வாட்டர் பெருமாள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்

    பதிலளிநீக்கு
  8. சொல்லலாம், வெட்கமாக இருக்குமே பரவாயில்லையா?
    >>
    எதுக்கு இந்த பில்ட் அப்!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியெல்லாம் பில்ட் அப் கொடுத்தால் தான் படிக்கிறார்கள். என்ன செய்வது ?

      நீக்கு
  9. என்னைக்கேட்டால் கேட்ட கேள்விகளுக்கு நீங்க தான் ரசித்து படிக்கும்படியாக பதில் சொன்னதாக எனக்கு தோன்றுகிறது. ஆதலால் உறவுகளே இனி எந்த தொடர்பதிவென்றாலும் இவரை அழைத்தால் சிறப்பாக எழுதுவார் என்று நான் .....?

    பதிலளிநீக்கு
  10. சொல்லுங்கள், கலந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. நான் பதில் சொல்வதற்கு முன்பாக உங்களுடைய பதில்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் எனக்கு மிகுந்தது. நான் நினைத்தபடியே மிகவும் நியாயமான மறுமொழிகளை தங்கள் பாணியில் தந்துள்ளீர்கள். உங்களுடைய தாக்கம் இல்லாமல் நான் மறுமொழி சொல்ல முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. அன்புள்ள ஐயா

    வணக்கம். சுவையான பதில்கள் மட்டுமல்ல அதில் துளிகூட மிகைப்பண்பு இல்லாத எதார்த்தமான பதில்கள். கடகடவென்று காத்திருந்ததுபோல் பொழிந்திருக்கிறீர்கள். வலிய பேசாத சொற்களைக் கொண்ட பதில்கள். உண்மை பொங்கி வழிகிறது. அதேசமயம் ரசிக்க முடிகிறது. ரசனையான பதில்கள். ரம்மியமான பதில்கள். ராகம் காதில் விழுவதைப் போன்ற பதில்கள்.ஜமாயுங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! சில நேரங்களில் உண்மை பேசவும் முடிகிறதே!

      நீக்கு
  13. ஆஹா! அனைத்தும் வாசித்து சிரித்து ரசித்தோம்! நல்ல நகைச்சுவையான பதில்கள் சார்! மைதிலி கஸ்தூரி ரங்கன் அழைத்த போது எங்களை - அப்போது இது மதுரைத் தமிழன் என்று தெரியாது - அதுவும் மைதிலி அவர்கள் "personality - சுய முன்னேற்றம் " என்றெல்லாம் லேபிள் கொடுத்திருக்கவே நாங்கள் மிகவும் சீரியஸாக கலந்து எழுதினோம்! இப்போதுதான் தெரிகின்றது...இப்படியும் எழுதலாம் என்று! அட.....

    மதுரைத் தமிழனக்கு அடுத்து ஒரு சீட் காலியாக இருக்கின்றதாம்.....அதற்கு பயங்கர போட்டி போன்று தெரிகின்றது! பின்னே பூரிக்கட்டையால் அடி வாங்கும் மதுரைத் தமிழன்...தன்னைப் போல் எத்தனை பேர் அடிவாங்குகின்றார்கள், எத்தனை பேர் பூரிக்கட்டையைத் தூக்குகின்றார்கள் (பெண் பதிவர்கள்) என்று அறிய வேண்டித்தான் இதை ஆரம்பித்திருக்கின்றார் போல.....கண்டிப்பாக அவருடைய வீட்டில் பூரிக்கட்டை பறக்கப் போகின்றது......தாங்கள் அங்குதானே இருக்கின்றீர்கள் முடிந்தால் அவரைக் காப்பாற்றுங்கள்!!!....சார்!!!

    யாதார்த்தமான ரசனையான பதில்கள்....ஓ அதனால்தான் எங்களுக்கு பின்னூட்டம் அப்படி எழுதி இருந்தீர்களா...சார்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரைத் தமிழனைக் காப்பாற்ற நான் தயார்! அதற்கு முன் அவர்கள் வீட்டில் மொத்தம் எத்தனை பூரிக்கட்டைகள் உள்ளன என்பது தெரிந்தாகவேண்டுமே! தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  14. ஒ! தமிழன் சகாவும், துளசி அண்ணாவும் ஒரு வழியா புளி போட்டு விளக்கிட்டாங்க:)
    பதில்கள் கடமைக்கு இல்லாமல், நிதானமாய் ரசித்து பதில் தந்திருகிறீர்கள்! அமெரிக்க வாழ்க்கையை படம் பிடிக்கும் விடைகள் சுவாரஸ்யம். நான்காம் பதில் வித்தியாசமா இருக்கு சார். கூட கொறச்சு பேசிருந்தா மன்னிச்சுகோங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது? உங்கள் கருத்துரைக்கு நன்றி!

      நீக்கு
  15. வணக்கம் ஐயா!

    நிதர்சனம் என்பதற்கு அர்த்தம் உங்கள் பதில்கள் தான் ஐயா!
    மிக மிக அருமை!

    ரொம்பவும் ரசித்துப் படித்தேன். வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  16. ஐயா,

    மிகவும் அருமையான பதிகள் !

    " இடுக்கண் வருங்கால் நகுக " ... விடை கிடைத்துவிட்டது ஆனால் நான் சத்தியமாய் சிரிக்கவில்லை ஐயா ! நம்புங்கள் !!

    " கருணாநிதியைத் திட்டலாம். ஜெயலலிதாவைத் திட்டலாம். மனைவியைத் திட்ட முடியாது. இன்வெர்ட்டரில் சார்ஜ் இல்லை என்று அவர் என்னைத் திட்டிக்கொண்டிருப்பாரே! "

    ‍‍ஒவ்வொரு சமூகத்துக்கும், அது சார்ந்த மொழிக்கும் என்று, அந்த சமூகம் சார்ந்த நகைச்சுவை உண்டு ! அதனை மற்ற மொழி பேசுபவர்களுக்கு புரிய வைப்பது கடினம் ( உதாரணம் : வடிவேலுவின் " வந்துட்டான்யா... வந்துட்டான்யா " இதை கேட்டாலே நமக்கு சிரிப்பு பொங்கிவரும் ஆனால் அதையே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால்... ) அப்படியான யதார்த்த நகைச்சுவை வரிகள் !

    " உங்கள் குழந்தைகள் நீங்கள் சொல்வதைக் கேட்பார்களா? "

    யதார்த்தம் !

    ( ஒரு வேண்டுகோள்: கொஞ்ச நாளைக்கு வேறு எந்தப் பதிவரும் இம்மாதிரிப் பத்து கேள்வி, பதினைந்து கேள்வி என்று கிளம்பிவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். )

    நானும் இதில் பங்கு பெற்றேன், பத்துபேரை இழுத்தும்விட்டேன்... ஆனால் சில காரணங்களுக்காக இது போன்று கிளம்புவது தவ‌றோ என தோன்றுகிறது !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ( தங்களுக்கு நேரம் ஒத்துழைத்தால் என் வலைப்பூ பக்கம் வாருங்களேன் ! நன்றி )

    பதிலளிநீக்கு
  17. ஐயா,

    வயது,அனுபவம், அறிவு அனைத்திலும் மூத்தவரான நீங்கள் என் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து எனது வலைப்பூவில் உடனடியாக கருத்திட்டதற்கு நன்றி.

    என் சொந்த வாழ்க்கையின் சம்பவங்கள் வெளியே தெரிய தேவையில்லை என்பதாலேயே " சாமானியன் " முகமூடி அணிந்தேன் ! ஆனால் அந்த கேள்விக்கு முன்னால் முகம் காட்ட வேண்டிய நிலை !

    துன்பியல் சம்பவங்கள் நேரும் போது வேண்டுமானால் சாத்தியப்படாது போகலாம், ஆனாலும் அவற்றிலிருந்து மீள நகைச்சுவை உணர்வு அவசியம் தான் ஐயா !

    " இடுக்கண் வருங்கால் நகுக "... வள்ளுவனின் வாக்கு சத்தியம் ! அதனால்தான் இந்த சாமானியனாலும் வாழ்க்கையை தொடர முடிகிறது !!

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றி இளம் நண்பரே!

      நீக்கு
  18. பதில்கள் அனைத்தும் அருமை ஐயா. மிகவும் இரசித்துப் படித்தேன்.
    வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  19. அப்படி என்ன தான் சொல்லப் போகிறீர்கள் என்று மேலே வசித்துக் கொண்டிருந்தேன் இடுக்கண் வருங்கால் நகுக என்றவுடன் என்னை அறியாமலேயே வாய் விட்டு சிரித்தேன்.வித்தியாசமாகவும் நகைசுவையாகவும் பதிலளித்து அசத்தி விட்டீர்கள். வாழ்த்துக்கள் சகோதரரே...!

    பதிலளிநீக்கு
  20. //ஓட்டடை எங்கே போகும் //

    ரொம்ப அருமையான ரசனையான பதில்கள்..
    நன்றி..
    www.malartharu.org

    பதிலளிநீக்கு
  21. அனைத்துக் கேள்விகளுக்கும் சிரிப்பாய் பதில் சொல்லியிருந்தாலும் சிந்திக்க வைக்கும் பதில்கள்... இடுக்கண் வருங்காலில் மனைவியை வாரிவிட்டு குழந்தைகளுக்கு எது சொன்னாலும் மனைவி பக்கத்தில் இருப்பார் என்று சொன்னது கிரேட்..

    அருமை.. அருமை ஐயா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இந்த விஷயத்தில் சுதந்திரம் கொடுத்திருக்கிறார் என் துணைவியார்!

      நீக்கு
  22. எங்கள் செல்ல அப்பா.
    உங்கள் பதில் எல்லாம் படித்தோம் அப்பா
    ராயப்பா பல விடைகள் ரைட்டப்பா.
    ராங்கப்பா ஒன்னு மட்டும்
    சொல்லப்பா என்று நீங்க கேட்கரீக.
    கேளப்பா .

    இடுக்கண் என
    இல்லாளை இனியவளை
    கரம் பிடித்தாளை நம்மை அனுதினமும்
    கரை சேர்ப்பாளை
    சொன்னதும் நீதானா ?
    சொல். சொல். சொல். என் உயிரே

    எனது தர்ம பத்னி
    கூவி கரைகிறாள்.

    அந்த தன்னிப்பாலத்தாண்டே பிரிஜ் வாடர் பக்கத்துலே
    நின்னுகிட்டு இருக்கேன்.

    வூட்டுக்கு தனியா போய் எப்படி அய்யா அவளை
    எதிர்கொள்வேன்.

    துணைக்கு வாங்க ஐயா..

    சுப்பு தாத்தா.
    please share this with everyone.
    an Aam Aadhmi answers All the Ten Questions.
    https://www.youtube.com/watch?v=Y9lxhH7oIfM

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கவித்துவமான கருத்துரைக்கு நன்றி ஐயா! தாங்கள் விரும்பியபடியே ஏன் முகநூலிள் உங்கள் விடியோவைப் பகிர்ந்துவிட்டேன்!

      நீக்கு
  23. தங்கள் தகவல் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி!

    பதிலளிநீக்கு
  24. வணக்கம்
    ஐயா

    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  25. யதார்த்தமான நடைமுறையை பயன்படுத்தி பதில் சொல்லியிருப்பது அருமை ஐயா. நானும்கூட எனது சிற்றறிவுக்கு எட்டியதை கொட்டியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  27. சுவாரஸ்யமான பதில்கள். மிகவும் இரசித்துப் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  28. ரொம்பவே ரசித்தேன். எதார்த்தமாக சுவராசியமாக இருந்தது. குறிப்பாக நான்கு.

    ஓபாமா நிச்சயம் அவர் விருப்பப்படி நீங்க சொல்லி மருத்துவ வசதிகளை கொண்டு வந்து விடுவார் என்றே எதிர்பார்த்தேன். செனட்டர் பயபுள்ளைங்க என்ன ஒரு ஒற்றுமையாய் நின்று ஜெயித்து விட்டார்கள்? பாவம் அமெரிக்க வாழ் ஏழைகள்.

    பதிலளிநீக்கு
  29. சிந்திக்க வைக்கும் சிறந்த பதில்கள்

    பதிலளிநீக்கு
  30. இயல்பான எழுத்து நடை, நகைச்சுவையோடு. ரொம்ப நல்லா இருக்கு.

    ஒவ்வொரு பதிலிலும், கடைசியில், இதைப் போல "அது சரி, உங்கள் குழந்தைகள் நீங்கள் சொல்வதைக் கேட்பார்களா?" ஒரு கேள்வி அல்லது நகைச்சுவை வாக்கியத்தோடு சொல்லியிருப்பது நல்லா இருந்தது. நிறைய எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு