சனி, மே 31, 2014

5 பிரதமர்களின் நம்பிக்கையைப் பெற்ற தமிழர்! (நியூஜெர்சி மடல் – 2)


(நியூஜெர்சி மடல் – 2)

மே 30 , 2014  வெள்ளிக்கிழமை, நியூஜெர்சி

இன்று குளிர் குறைந்து, வெயில் வந்திருக்கிறது. என்றாலும் வெந்நீர்தான் குடித்தேன். சளி பிடித்துவிடுமோ என்ற தயக்கமே காரணம். நாளை கலிபோர்னியா செல்லவேண்டும். விமானத்தில் அமர்ந்து மூக்கை உறிஞ்சிக்கொண்டிருந்தால் எப்படி?


டிவியில் ஏதோ ஒரு சானலில் SITUATION ROOM   என்ற ஆவணப்படம் வந்துகொண்டிருக்கிறது. அமெரிக்காவின்  மயாமி (MIAMI) நகரத்தின் சிறைச்சாலையில்,  'உள்ளிருப்போர்' –அதாவது கைதிகள் – எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதுதான் கருப்பொருள். சிறை அதிகாரிகள் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்று பேட்டி காணப்படுகிறது. உயர்ந்தபட்சத் தண்டனை பெற்ற கைதிகளுக்கு விசேஷமான பாதுகாப்பு வழங்கப்படுவது பற்றிய விவரங்கள் இடையிடையே வருகின்றன. ஓர் ஆயுள்தண்டனை கைதிக்கு இடுப்பில் ஒட்டியாணம்போல்  சங்கிலியால் பிணைத்து அதன் இன்னொருமுனை வலதுபாதத்தில் சென்று முடிகிறது. தொளதொளப்பான காவிநிற பைஜாமாவில் அவரைப் பார்க்கும்போது உள்ளே அணிவிக்கப்பட்டுள்ள சங்கிலிகள் தெரியவில்லை.


சிறைச்சாலை, சுத்தமென்றால் அவ்வளவு சுத்தம். சென்னையிலுள்ள  அப்போலோ அல்லது மியாட் மருத்துவமனைகளின் ஆப்பரேஷன் தியேட்டர்களை விடச் சுத்தம்  என்றாலும் மிகையில்லை. ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்ட படுக்கைகள், நம்மூரின் சில அதிகப் பணம் வாங்கும் உறைவிடப்பள்ளிகளின் படுக்கை அமைப்பை நினைவூட்டியது. வழங்கப்படும் உணவும், உணவருந்துகூடமும் மிகத் தூய்மையான சூழ்நிலையைக் காட்டுகின்றன. கைதிகளின் ஆரோக்கியம் மலைப்பூட்டுகிறது.


இப்படியெல்லாம் வசதிசெய்து கொடுத்தால் எந்தக் கைதிக்குத்தான் சிறைச்சாலையை விட்டுச்செல்ல மனம் வரும்? 
****
கிழக்கிலிருந்து மேற்குநோக்கிப் பயணித்து வந்ததால் நேரம் மிச்சப்படுகிறது. அதாவது, சென்னையில் இப்போது சனிக்கிழமை மாலை ஐந்து மணி ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். நியூஜெர்சியில் இப்போதுதான் சனிக்கிழமை காலை ஏழரை மணி ஆகிறது. அதாவது, சென்னையில் இருப்பவர்களைவிட, இங்கிருப்பவர்களுக்கு உழைப்பதற்கும் அனுபவிப்பதற்கும் ஒன்பதரை மணிநேரம் கூடுதலாகக் கிடைக்கிறது. இந்த வித்தியாசத்தால்தான் அமெரிக்கர்கள் சில விஷயங்களில் நம்மைவிட முன்னேறி இருக்கிறார்களோ?
****
‘இன்டர்நேஷனல் ரோமிங்’ எனது அலைபேசியில் இருப்பதால், இங்கே வந்திறங்கியவுடனே ஓர் அழைப்பு வந்தது, இந்தியாவிலிருந்து. மூன்று நிமிடம் பேசினேன்.  240 ரூபாய்   ஆயிற்று! உடனே ஏர்டெல்லிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி: ‘ட்டி-மொபைலுடன் தொடர்புகொள்ளுங்கள். இனிமேல் இந்தியாவிலிருந்து வரும் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு  30 ரூபாயும், நீங்கள் இந்தியாவிற்குச் செய்யும் அழைப்புகளுக்கு   40 ரூபாயும்தான் வசூலிக்கப்படும்’.  ஆனால் அதற்கு அவசியமில்லை என்றார்கள் குழந்தைகள். அவர்களுடைய அலைபேசியிலிருந்து இன்னும் குறைந்த கட்டணத்தில் பேசிவிடமுடியுமாம். மால்தூசியன் கொள்கையைப் பொய்யாக்கிவிடுகிறார்கள் குழந்தைகள்!
****
மே 31 , 2014  சனிக்கிழமை, நியூஜெர்சிஇன்று மாலை கலிபோர்னிய பயணம். நியூஜெர்சி / நியூயார்க்கிலிருந்து ஐந்துமணிக்கும் அதிகமான விமானப் பயணம். மொத்தம் ஆறுநாள் பயணம். சென்னையிலிருந்து வந்த துணிமணிகள் இஸ்திரி கலையாமல் இருப்பதால் அதிக வேலையில்லை. இன்று குளிர் குறைவுதான். கனமான மேலங்கிகள் தேவையில்லை.
****
சென்னையில் விமான நிலையத்தில் ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையில்  AT THE HELM  என்ற புத்தகம் வாங்கினேன். இந்த வாரம்தான் வந்ததாம்.  BHEL, MARUT UDYOG, STEEL AUTHORITY OF INDIA  என்னும் மூன்று மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களை அற்புதமாக நிர்வகித்து, ஐந்து பிரதமர்களின் பெருமதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றவரும், மத்திய அரசில் தொழில்துறை செயலாளராகப் பணிபுரிந்தவருமான டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சுயசரிதைதான் அது.


‘வி.கே.’ என்று பரவலாக அழைக்கப்படும் அவருக்கு வயது  90.(பழைய தஞ்சை மாவட்டத்தின் கருவேலி கிராமத்தில் இவர் பிறந்த தேதி  1925ஜனவரி  14. பொங்கல் தினமோ?)  இப்போதும் பதவியில் இருக்கிறார்:  Chairman of the National Manufacturing Competitiveness Council. ஒரு கேபினெட் மந்திரியின் அந்தஸ்துள்ளது. இதற்குமுன் அவர் திட்டக் கமிஷனில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.


சாதாரணமாக அரசு ஊழியர்கள் முப்பத்தைந்திலிருந்து நாற்பது ஆண்டுகள்தான் பதவியில் இருக்க முடியும். வி.கே. அவர்கள் அறுபது ஆண்டுகள் இருந்திருக்கிறார்/ இருக்கிறார். பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் முதலிய மூன்று விருதுகளைப் பெற்றவர்.  IIM –Ahmedabad, IIM-Bangalore, IIT-Delhi  இவற்றின் தலைவராகப் பணியாற்றி இருக்கிறார்.


(இவருடைய மூத்த சகோதர் திரு வைத்தியநாதனும், ‘கல்கி’ சதாசிவமும் தான் பங்குதாரர்களாக இருந்து ‘கல்கி’ வார இதழை நடத்தியவர்கள். இப்போது வைத்தியநாதன் அவர்கள் சென்னையில் ஓய்வில் இருக்கிறார்.)


நம் காலத்தின் வெற்றிகரமான தமிழர்களில் வி.கே. அவர்கள் முதன்மையானவர் என்றால் மிகையாகாது. இந்த நூலில் இருப்பது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டத்தின் அறுபதாண்டு காலத் தொழில் வளர்ச்சியின் சரித்திரம். கூடவே சில அரசியல் உண்மைகளும் உண்டு.


ஜூன் இறுதியில், அமெரிக்காவிலிருந்து வருவதற்குள் இந்த நூலைப் படித்து முடித்துவிடுவேன். பிறிதொருநாளில் முழுதான விமர்சனம் வரும்.


 2002 ஆம் ஆண்டு அப்துல் கலாம் வி.கே. யிடம் கேட்டாராம்: உங்கள் நிர்வாகத்துறை சாதனைகளைப் பற்றி ஏன் இன்னும் ஒரு நூல் எழுதவில்லை என்று. (அப்போது கலாம் அரசியலுக்கு வந்திராத நேரம்.) அதே போன்ற கேள்வியைக் கேட்ட இன்னொருவர், கடலூரைச் சேர்ந்த கல்வியாளர் திரு ஆர். சீத்தாராமன் அவர்கள். வி.கே. யின் ஒன்றுவிட்ட சகோதரர். இப்போது நூல் வந்திருக்கிறது. அப்துல் கலாம் படிக்கலாம். ஆனால் சீத்தாராமன்? அவர்  அமரராகி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. (சீத்தாராமன், எனது மாமனார்.)

(வெளியீடு: ஹார்ப்பர் காலின்ஸ், விலை 599 ரூபாய்.)

 © Y Chellappa

வெள்ளி, மே 30, 2014

ஏழைக்குப் பெயர் எதற்கு? (நியூஜெர்சி மடல் – 1)

ஏழைக்குப் பெயர் எதற்கு? (நியூஜெர்சி மடல் – 1)
மே 28 , 2014 புதன்கிழமை   சென்னை

இரவு  8.45 க்குக் கிளம்ப வேண்டிய ஏர்-இந்தியா விமானத்திற்கு மூன்றுமணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்தில் ஆஜராகவேண்டும் என்பதால் அதற்கும் அரைமணி முன்னதாக- அதாவது மாலை  5.15 க்கே நுழைந்துவிட்டோம். சென்னை விமான நிலையம் விரிவுபடுத்தப்பட்ட பின் நாங்கள் செய்யும் முதல் வெளிநாட்டுப் பயணம்.

அமெரிக்கா செல்லும் பயணிகள் ஒவ்வொருவரும் தலா இரண்டு சுமைபெட்டிகள் (‘லக்கேஜ்’) கொண்டு செல்லலாம். ஆனால் ஒவ்வொன்றிலும்  23  கிலோ எடைக்குமேல் இருக்கக்கூடாது. இதைத்தவிர, எட்டு கிலோவுக்கு மிகாமல் எடையுள்ள ஒரு கைபெட்டியும் ( hand baggage) கொண்டுவரலாம். தவிர, ஒரு மடிக்கணினியும் , மேலங்கியாக ஒரு ‘கோட்டு’ம் கொண்டுவர அனுமதி உண்டு.

விமான நிலையத்தின் வெளியில் இருந்து இரண்டு சுமைநடத்தி( ‘டிராலி’) களைத் தள்ளிக்கொண்டு  வந்தார்கள் என் பேரனும் பேத்தியும். நாங்கள் மாலை நேரத்திலேயே வந்துவிட்டதால் இவை எளிதில் கிடைத்தன. இரவு ஆக ஆகக் கூட்டம் சேர்ந்துவிடுமாதலால் சுமைநடத்திகளைப்  பிடிப்பதே பெரும்பாடாகிவிடும்.  

நிலையத்தினுள் பயணிகளைத் தவிர மற்றவர்கள் நுழைய அனுமதியில்லை என்பதால், மகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் விடை கொடுத்துவிட்டு, நானும் (என்) மனைவியும் ஆளுக்கொரு சுமைகடைத்தியில் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு விமான ஏற்றச்சீட்டு (‘போர்டிங் பாஸ்’) வழங்கும் இடத்திற்குச் சென்றோம்.

சுமைபெட்டிகளை  எடைபார்த்தபோது, ஒரு பெட்டி  23.6 கிலோவும் இன்னொன்று  21.5 கிலோவும் இருந்தன. அதாவது ஒன்று  0.6  அதிகமாகவும், இன்னொன்று 1.5 கிலோ குறைவாகவும் இருந்தது. வீட்டிலிருந்த எடையளவியில் ( weighing scale) சரிபார்த்துத்தான் கொண்டுவந்தோம். இத்தகைய சிறுபிழைகள் சஜகமே. மொத்தத்தில் இரண்டு பெட்டிகளையும் கூட்டினால் அனுமதிக்கப்பட்ட  46 கிலோவுக்குள்தான் இருந்தது. பிற விமானங்களில் இதைப் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் இது ஏர்-இந்தியா அல்லவா?   ‘எடை அதிகமான பெட்டியிலிருந்து கொஞ்சம் பொருளை அடுத்த பெட்டிக்கு மாற்றிக்கொண்டு வாருங்கள்’ என்று சொல்லிவிட்டு  அந்த ஊழியர் சென்றுவிட்டார்.

அப்போது உதவிக்கரமாக இரண்டு பேர் அங்கே வந்தார்கள். ‘கஸ்டமர் சர்வீஸ்’ என்று கையில் முத்திரை அட்டை அணிந்திருந்தார்கள். சுமைநடத்தியை ஒரு ஓரமாகக் கொண்டுபோய் பெட்டிகளை இறக்கித் திறந்து சில பொருட்களை இடம் மாற்றி மீண்டும் மூடி, அந்த ஊழியரின் இருக்கையருகே கொண்டுசெல்ல அவர்கள் மிகவும் உதவினார்கள். பிறகு யாருக்கும் தெரியாமல் கைநீட்டினார்கள். என் மனைவி மிகவும் மகிழ்ந்தவராக அவர்களுக்குத் தலா நூறுரூபாய் கொடுத்தார். (எங்களிடம் வேறு நோட்டுக்கள் இல்லை என்பதும் காரணம். இருந்தால் ஐம்பது, ஐம்பது கொடுத்திருக்களாம்.)

உடனே ஏற்றச்சீட்டு வழங்கப்பட்டு காரியம் முடிந்தது.

ஏன் கேள்வி என்னவென்றால், விமான நிலையத்தினுள் இம்மாதிரி கையில் முத்திரை தரித்த நபர்கள் நடமாடுகிறார்களே, அவர்கள் யார்? அவர்கள், விமான நிலைய ஊழியர்கள் அல்லவென்று தெளிவாகத்தெரிந்தது. பயணிகளுக்கு உதவி செய்யத்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பதும், பயனுள்ள உதவியைத்தான் அவர்கள் புரிகிறார்கள் என்பதும் தெரிந்தது. அப்படியானால் அவர்களுக்குச் சம்பளம் தருவது யார்? சம்பளம் பெறுபவர்கள் என்றால், அவர்கள், பயணிகளிடம் காசு கேட்பது ஏன்? ‘டிப்ஸ்’ எனப்படும் இனாம் வழங்குதல் உலகில் எல்லா ஊர்களிலுமே இருப்பதுதானே, அதை அவர்கள் கம்பீரமாகக் கேட்டுப் பெறலாமே! (சரவணபவன் ஓட்டலில் சப்ளையர்கள் மாதிரி.) ஏன் அச்சத்துடன் கேட்கவேண்டும்?  அல்லது, அவர்கள் பயணிகளிடம் எதுவும் பெறக்கூடாது என்பது விமான நிலையத்தின் கொள்கையானால், அதை எங்கேயாவது எழுத்துமூலமாகத் தெரிவிக்க வேண்டாமா?

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வந்திறங்கும் போது இவர்கள் கையாளும் இன்னொரு தந்திரம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். பயணிகள் வெளியேறும்போது கொண்டுசெல்லும் சுமைநடத்திகள், வெளியிலேயே விடப்படுமல்லவா? அவற்றை ஒன்றன்மேல் ஒன்றாகச் சாய்த்து நீண்ட ரயில் மாதிரி அடுக்கி, அவ்வப்பொழுது  உள்ளே கொண்டுவைக்கும் பணி இவர்களுடையது. ஆனால் செய்ய மாட்டார்கள். இரண்டு அல்லது மூன்று விமானங்கள் வந்து இறங்கிய பிறகுதான், நிறைய கூட்டம் சேர்ந்த பிறகுதான், ‘எனக்கு இருபது ரூபாய் கொடுங்கள், சுமைநடத்தி கொண்டு வருகிறேன்’ என்ற அவர்களின் பேரத்தை ஒப்புக்கொண்டபிறகுதான், சுமைநடத்திகள் கிடைக்கும். அதுவும் முனகியபடியே, நமக்கு எதோ ஒரு பெரிய சலுகையைச் செய்துவிட்டமாதிரியான தோரணையில் கொண்டுவருவார்கள். யாரிடமும் புகார் சொல்ல முடியாது. இருக்கைகளில் யாராவது இருந்தால்தானே!  நடு இரவிலும், புலர்காலைக்கு முன்பாகவும் வெளிநாட்டிலிருந்து வந்திறங்கும் பயணிகள், குறிப்பாகத் தனியே வரும் வயதானவர்களும் இந்தியாவிற்கு முதல்பயணமாக வருபவர்களும் படும் வேதனை சொல்லிமாளாது.      
***
மே  29,  2014- நுவார்க்

காலை மணி 7.55 க்குத் தரையிறங்கியது எங்கள் விமானம். நுவார்க் விமான நிலையம். (நியூஜெர்சிக்கு அருகில் இருப்பதால் இந்தியர்கள் இவ்விமான நிலையத்தை விரும்புவார்கள். பயணநேரம் மிச்சப்படும்.) வெளியில் வெப்பநிலை வெறும் நாற்பது டிகிரி பாரன்ஹைட்தான். (முதல்நாள் சென்னையில் அதுவே நூற்றுப்பத்து டிகிரி!) இறங்குதளத்தின் குளிர்சாதனங்களால் கூட எங்கள் முகத்தில் வந்து அறையும் குளிரைத் தடுக்க முடியவில்லை.

குடியேற்றப் பதிவுகளை முடித்துக்கொண்டு, சுமைபெட்டிகளைத் தேடி, மூன்றாம் எண் கொணரிபட்டை ( conveyor belt)  அருகில் சென்றோம். பெட்டிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் வந்துகொண்டிருந்தன. எனவே அதற்குள் சுமைநடத்திகளை எடுத்துவரலாம் என்று போனேன்.
இங்கு சுமைநடத்திகள் ஒன்றோடொன்று சங்கிலித்தொடர் மாதிரி இணைக்கப்பட்டிருக்கும். ஐந்து டாலர் நோட்டை அதற்குரிய துளையில் செலுத்தினால் மட்டுமே ஒரு சுமைநடத்தி விடுவிக்கப்பட்டு நம் கையில் வரும். எங்கள் இருவருக்கும் தலா ஒன்று தேவை என்பதால் பத்து டாலர் நோட்டுடன் சென்றேன். அப்போதுதான் அவரைக் கண்டேன்.

சற்று ஏழ்மையான தோற்றம். சுமார் நாற்பது வயதிருக்கும். நிறம் வெள்ளைவெளேர் என்று இருந்தாலும் அவர் அமெரிக்கராக இருப்பதற்கில்லை என்று தெளிவாகக் காட்டியது, தன் அருகில் அவரைப் போலவே இருந்த இன்னொருவருடன் நடத்திய  பேச்சு. அவர் அருகில், நீளமான சுமைநடத்தி ஒன்று இருந்தது. நம் ஊரில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்குமே, ஒரே நேரத்தில் இருபது பெட்டிகளைக்கூட ஏற்றலாமே, அம்மாதிரியானது. கடந்த நான்கு அமெரிக்கப் பயணங்களில் அதைப் பார்த்ததில்லை. அருகில் சென்று ‘இந்த சுமைநடத்தி கிடைக்குமா? எவ்வளவு தர வேண்டும்?’ என்றேன்.

அவர் முகத்தில் சற்றே மலர்ச்சி தெரிந்தது. ‘இதற்குப் பத்து டாலர்’ என்றார். சரியான தொகைதான். வழக்கமான இரண்டு சுமைநடத்திகளுக்குப் பதில் இது ஒன்று போதுமே எனக்கு. ‘சரி, நகருங்கள், எடுத்துக் கொள்கிறேன்’ என்றேன். அவர் சற்றே தயங்கி, ‘இல்லை, நானே எடுத்துக்கொண்டு வருகிறேன்’ என்றார். ‘இதற்குப் பத்து டாலர்; எனக்கு நீங்கள் எது கொடுத்தாலும் சரி’ என்று பணிவாகச் சொன்னார்.

நமது இந்திய வழக்கங்களில் ஒன்று ‘யாத்ராதானம்’ என்பது. அதாவது, வெளியூருக்குப் புறப்படும் முன்பு யாராவது ஏழைகளுக்கு ஒரு தொகையோ, பண்டமோ, துணியோ தானமாக வழங்குவது. அப்படி வாங்கிக்கொள்பவர் நம்மை வாழ்த்துவாரல்லவா, அந்த வாழ்த்துதல் நம்மைப் பயணத்தின்போது காக்கும் என்பது நம்பிக்கை.
சென்னையில் இப்போதெல்லாம் கொடுப்பதற்கு ஆளிருக்கிறார்கள். வாங்கிக்கொள்ளத்தான் ஆளில்லை. உதாரணமாக,  பழைய துணிகள் இப்போதெல்லாம் கிழிவதே இல்லை. சாயம் போவதும் இல்லை. ஆனால் பார்ப்பதற்கு மட்டும் பழையதாகிவிடுகின்றன. முன்பெல்லாம் அவற்றைக் கேட்டு வாங்கிக்கொள்ள ஆளிருந்தார்கள். இப்போது புரட்சித் தலைவி அம்மா அவர்களின்  இலவசங்களாலும், (முன்னாள்  அன்னை) சோனியாவின் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தாலும் ஏழ்மை பெரிதும் மறைந்துவிட்ட நிலையில், அதற்கு ஆளில்லை. ‘உதவும் கரங்கள்’ மாதிரியான நிறுவனங்கள் கூட இப்போது பழைய துணிகளை ஏற்பதில்லையாம்.

எனவே, சென்னையில் கொடுக்க முடியாததை, இந்த நபருக்கு எனது யாத்ராதானமாகக் கொடுப்பது என்று முடிவெடுத்தேன். ‘சரி, வாருங்கள்’ என்றேன். வந்தார். சும்மா பார்த்துக்கொண்டு நிற்காமல், ஓடிக்கொண்டே இருக்கும் கொணரிபட்டையின் அருகில் வந்து எமது பெட்டிகளைத் தாவிப்பிடித்து, சுமைநடத்தியில் ஏற்றிக்கொண்டு, வெளிவரை வந்து, தரையில் இறக்கிவைத்தார். இருபதுடாலர் நான் கொடுத்தபோது அவர் முகத்தில் தெரிந்த நன்றிதான் என்னே!

இதற்கிடையில் அவரோடு பேச நேரம் இருந்தது. ‘நீங்கள் எந்த நாட்டுக்காரர்?’ என்றேன். ஒரு தென்கிழக்காசிய நாட்டின் பெயரைச் சொன்னார்.

அடிக்கடி புரட்சிகளும் ஊழல்களும் நடக்கும் நாடு என்பதால் ஏழைகளுக்கு வாழ வழியில்லாத நிலையில், அமெரிக்கக் கனவுகளுடன் கப்பலேறியவர்களில்  அவரும் ஒருவர். விசா இல்லாமல் வந்ததால் உரிய வேலை கிடைக்கவில்லை. ஒரு சிற்றுண்டிச்சாலையில் சில வருடங்கள், ஒரு பெட்ரோல் நிலையத்தில் சில மாதங்கள், காய்கறித்தோட்டத்தில் சில வருடங்கள் என்று காலம் கழிந்ததாம். இடையில் சில மாதங்கள் பட்டினி கிடந்தாராம். அப்போது தன் ‘பாஸ்போர்ட்’டை விற்றுத்தான் சாப்பிடமுடிந்ததாம்.  எனக்குப் பகீரென்றது. எனது பாஸ்போர்ட்டை ஆறு பிரதிகள் எடுத்து ஒவ்வொரு பெட்டியின் உள்ளும் திணித்துவைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதை நினைத்துக்கொண்டேன்.

‘அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்வீர்கள்?’ என்றேன்.

அவர் சிரித்துக்கொண்டே ‘விட்டு விடுவார்கள். அந்த ஊர் எல்லையை விட்டு ஓடிப்போகச் சொல்வார்கள். அவ்வளவே. இங்கெல்லாம் சின்னஞ்சிறு  வேலைகளைச் செய்வதற்கு ஆள் கிடைப்பதில்லையே’ என்றார். ‘நானே இன்னும் சில நாட்கள்தான் இங்கிருப்பேன். வேறு ஊருக்குப் போய்விடுவேன். இங்கு வருமானம் சரியில்லை. ஒரு நாளைக்கு ஐம்பது டாலர் கிடைப்பதே கடினம். போட்டி அதிகம்’ என்றார்.

‘உங்கள் குடும்பம் எங்கே இருக்கிறது?’

‘மனைவி துபாயில் வேலைசெய்கிறாள். குழந்தைகள் இல்லை’

இவரால் அமெரிக்காவை விட்டுப் போகவே முடியாது. பாஸ்போர்ட்டும் இல்லை, விசாவும் இல்லை என்றால் எப்படி வெளியே போவது? மீறி முயற்சித்தால்  எஞ்சிய வாழ்நாளைச் சிறையில் கழிக்கவேண்டியதுதான்!
‘அப்படியென்றால் உங்கள் எதிர்காலம்தான் என்ன?’ என்றேன் கவலையுடன்.

கலகலவென்று சிரித்தார். ‘ஒன்றும் பயமில்லை ஐயா! எங்களைப் போன்ற முறையாகக் குடியேறாத மக்களுக்கும் குடியுரிமை வழங்க ஒபாமா முயற்சித்து வருகிறார். இன்றில்லாவிட்டாலும் சில ஆண்டுகள் கழித்தாவது கிடைத்துவிடும். நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்’ என்றார்.

‘ஒபாமாவுக்குப் பிறகு? ஒருவேளை உங்களை நாட்டைவிட்டு வெளியேறச் சொல்லிவிட்டால்?’

மீண்டும் சிரித்தார் அவர். ‘உங்களுக்கு அமெரிக்காவைப் பற்றித் தெரியாது. ஐயா! உழைக்கத் தயாராய் இருப்பவர்களை அமெரிக்காவிலிருந்து யாரும் எப்போதும் வெளியேற்றமாட்டார்கள்!’ என்றார்.

அண்ணாசாலையில் ஜெமினி பாலம் அருகே அனலாய்க் கொதிக்கும் வெயிலில் ஆயிரக்கணக்கானவர்கள் அமெரிக்க விசாவுக்காகத் தவமிருப்பதன் ரகசியம் இதுதானோ?

நன்றி சொல்லி விடைபெற்றுக்கொண்டேன். ‘உங்கள் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?’ என்றேன். 

கையசைத்தபடி நகரும் முன் அவர் சொன்ன வார்த்தை சிந்திக்கவைத்தது:
‘ஏழைக்குப் பெயர் எதற்கு?’
*****
 © Y Chellappa

சனி, மே 24, 2014

விநாயகனும் வெற்றித்திருமகளும் (‘அபுசி-தொபசி’-42)

(கடந்த ஒருமாத காலமாக “அபுசி-தொபசி” வெளிவராமல் போனதற்கு இந்தியப் பொதுத்தேர்தலும் நரேந்திரமோடியும் கத்திரி வெயிலும் தமிழ்நாட்டின் அறிவிக்கப்படாத மின்வெட்டும்  மட்டுமே காரணங்களாக இருக்கமுடியாது. பள்ளி விடுமுறை என்பதால் எனது மேசைக்கணினியை பெரும்பாலான நேரம் ஆக்கிரமித்துக்கொண்டு எனக்கு இடமளிக்க மறுத்த எனது பேரனும் ஒரு முக்கியக் காரணம். ஆனால் இதை அவனிடம் சொல்லிக் கோள்மூட்டிவிட வேண்டாம், பிளீஸ்! இனிமேல் வாரம் தவறாமல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும் என்று உறுதியளிக்கிறேன். ஜூலைமுதல், மீண்டும் வாரம் இருமுறையாகத் தொடரும்.)

விநாயகனும் வெற்றித்திருமகளும்

1975இல் கடலூரில் வங்கி மேலாளராக வந்து சேர்ந்தேன். நகரின் ஒரு மூலையில், பெண்ணையாற்றங்கரைக்குச் சிறிது முன்னால் பாண்டிச்சேரி செல்லும் நெடுஞ்சாலையில் வங்கி இயங்கத் தொடங்கியது. பெரும்பாலும் குடியிருப்புகளும் ஒருசில மளிகைக்கடைகளும் மட்டுமே இருந்த மஞ்சக்குப்பம் என்ற பகுதி அது. ஒரு வங்கி துவக்கப்படுவதற்கான பொருளாதார அம்சங்கள் எதுவும் இல்லாத பகுதி.

புதிதாக வங்கி துவங்கினால் மேலாளருக்கு உள்ள ஒரே பணி ‘டெபாசிட்’ சேகரிப்பதுதானே! அதிலும் வணிகர்கள், தொழிலதிபர்கள் முதலிடம் பெறவேண்டியவர்கள் அல்லவா? அவர்களைத் தேடிக்கொண்டு நான் போகவேண்டியிருந்த பகுதி, திருப்பாப்புலியூர் என்று அழைக்கப்பட்ட ‘கடலூர்-புதுநகர்’. அங்குதான் பேருந்து நிலையமும் ரயில் நிலையமும் இருந்தன.

‘கற்றுணை பூட்டியோர்
கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது
நமச்சி வாயமே’

என்று பாடப்பெற்ற பாடலீசுவரன் திருக்கோயிலும் அங்குதான் இருந்தது.
 பாடலீஸ்வரர் திருக்கோயில் (நன்றி- தினமலர்.காம்)

திருமணம் ஆகாத ‘பேச்சிலர்’களில் நானும் ஒருவனாக இருந்த காலம் அது.  உண்மையில் பேச்சுத்துணைக்கும் ஆளில்லாத நிலைமைதான். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி எங்கள் வங்கியில் கணக்கு துவங்குங்கள் என்று கேட்பதில் எனது மாலைகளும் இரவுகளும் செலவழிந்துகொண்டிருந்தன.

அப்போதுதான் ஒருநாள் லாரன்ஸ் ரோட்டில் ‘பூம்புகார்’ என்ற கடையைப் பார்த்தேன். தமிழக அரசின் நிறுவனம். கைவினைப் பொருட்களின் வணிகத்திற்காக மிகுந்த முனைப்புடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. பீங்கானில் செய்யப்பட்ட ஒரு விநாயகர் பொம்மை என்னைக் கவர்ந்தது. வெள்ளை வெளேர் என்று நின்ற கோலத்தில் இளமைத்துடிப்புடன் இருந்தார் பிள்ளையார். அந்த நாளில் நின்ற கோலத்துப் பிள்ளையார் எங்கும் விற்கப்படுவதில்லை. பெரும்தொப்பையுடன், சுண்டெலியைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கும் இடம்புரி விநாயகர்களே அதிகம். வலம்புரி விநாயகர் சில கடைகளில் கிடைக்கலாம். விலை அதிகம்.   அது மட்டுமன்றி, ‘கல்கி’யின் சின்னமான ‘நடனமாடும் பிள்ளையாரை’ப் பார்த்துப்பார்த்து எனக்கு அவர்மேல் ஒரு காதல். அந்த மாதிரி ஒரு பிள்ளையார் கிடைத்தால் வாங்கிவிட வேண்டுமென்று மிகுந்த ஆசை. ஆனால் அதற்குச் சந்தர்ப்பம் கூடவேயில்லை.   

கடையில் விசாரித்தேன். விலை சற்றே அதிகம் சொன்னார்கள். பரவாயில்லை என்று பொம்மையை எடுத்தேன். நாலைந்து இருந்தன. ஆனால் எதிலும் ஃபினிஷிங் சரியில்லை என்பதால் வருத்தத்துடன் விலகினேன்.

1976 மே மாதம் 23ஆம் தேதி காலை மீண்டும் பூம்புகாருக்குச் செல்ல நேரிட்டது. என்ன ஆச்சரியம்! எனக்கு எந்த மாதிரி இழைப்பில் வேண்டுமென்று விரும்பினேனோ, அதே மாதிரி அழகிய அமைப்பில், பிசிறில்லாமல், வெள்ளைப் பீங்கானில் (ஒரே  ஒரு)  விநாயகப் பெருமான் அங்கே வீற்றிருந்தார்! ஓடிச் சென்று வாங்கினேன்.  ஆனால், என்னுடன் வந்திருந்த நண்பருக்கும் அதே விநாயகர்தான் வேண்டியிருந்தது. அடுத்தநாள், அதாவது, 1976 மே மாதம் 24ஆம் தேதி,   கடலூர் வாசவி கல்யாண மண்டபத்தில் நடக்கவிருந்த ஒரு திருமணத்திற்கு மாப்பிள்ளைத் தோழராக வந்திருந்தார் அவர். மணமகளின் பெயரில் வெற்றித்திருமகள் இருந்தாளாம்.  ‘இந்த விநாயகரை நான் திருமணப்பரிசாக அவர்களுக்கு அளிக்கப்போகிறேன்’ என்றார். ‘நீண்ட நாட்களாக நான் தேடிக்கொண்டிருந்த விநாயகரை நீ எப்படி வாங்கலாம்’ என்று அவருடன் சண்டை போட முடியாத இக்கட்டான நிலையில் நான். அவர்தான் வென்றார்.

அந்தப் பெண்மணிக்கும் இந்த விநாயகர் மிகவும் பிடித்துப் போய்விட்டாராம். தன் பூசையறையில் வைத்துவிட்டார். அந்த விநாயகரைத்தான் இதோ இங்கே பார்க்கிறீர்கள்:


என்ன பொருத்தம் பாருங்கள், இன்றும் மே மாதம் 24ஆம் தேதிதான்! அன்று கடிமணம் புரிந்து, அந்த விநாயகரின் பேரருளால் கருத்தொருமித்து, மக்கள்-சுற்றம் பெருகி, இனிய வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கும் அந்தத் தம்பதியரின் திருமணப் புகைப்படம் இதோ:
  

மணமகள் பெயர்: விஜயலட்சுமி.
மணமகன் பெயர்: செல்லப்பா.  

(இவர்தான், பின்னாளில் ‘இராய.செல்லப்பா’, ‘செல்லப்பா யக்யஸ்வாமி’,  ‘இமயத்தலைவன்’ என்ற பெயர்களில் தனக்குத் தோன்றுவதை அவ்வப்போது எழுதி உங்களுக்குத் தொல்லை தந்துகொண்டிருப்பவர்!)    

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.
 © Y Chellappa
Email: chellappay@yahoo.com