வியாழன், ஏப்ரல் 10, 2014

பாவம் பாத்திமா! (‘அபுசி-தொபசி’-41)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

(அபுசி-தொபசி – யில் ‘பு’ மட்டும் இன்று).

பு: புத்தகம்

சோவியத் ரஷியாவில் அங்கம் வகித்துவந்த சின்னச்சின்ன நாடுகளுள் ஒன்று, ஒசேட்டியா. அந்த ஒசேட்டிய நாட்டின் சிறந்த ஓவியராகவும் கவிஞராகவும் போற்றப்படுபவர், கொஸ்தா கெதாகுரோவ் (KOSTA KHETAGUROV) ஆவார். ‘ ஒசெத்தியாவின் இசைக்காவியம்’  (THE OSSETIAN LYRE) என்ற அவரது நூல் தேசிய நூலாகவே திகழ்கிறது. சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து ரஷ்யப் புரட்சி மூள்வதற்குக் காரணகர்த்தர்களாக விளங்கிய அறிவுஜீவிகளில் இவரும் ஒருவர். பலமுறை நாடு கடத்தப்பட்டார். எனினும் தம் கவிதைகளில் புரட்சித்தீயை அணையாமல் காத்தவர். துரதிர்ஷ்டவசமாக, ரஷியப் புரட்சி ஏற்பட்டு லெனின் ஆட்சிக்கு வரும் முன்னரே இவர் மரணம் அடைந்தார். (1906).

எனது நூலகத்தின் புழுதியைத் துடைத்துக்கொண்டிருக்கையில் கிடைத்தது, என்சிபிஎச் 1989 இல் வெளியிட்ட “கொஸ்தா கெதாகுரோவ் கவிதைகள்” என்ற நூறு பக்க நூல். இதில் கொஸ்தாவின் 25 சிறு கவிதைகளும், ‘பாத்திமா’ என்ற நீண்ட கவிதையும் இடம்பெற்றுள்ளன. சிறு கவிதைகளை  நா.முகம்மது ஷெரிப் என்பவரும், ‘பாத்திமா’வை டாக்டர் கா.செல்லப்பனும் மொழிபெயர்த்துள்ளனர்.  

சோவியத் ரஷியாவின் இன்னொரு பெரும் கவிஞரான தாரா ஷெவ்சென்கோ தமிழ்நாட்டிலும் நன்கு அறியப்பட்டவர். அவருடைய கவிதைகளைப் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மொழிபெயர்ப்பில் படித்திருக்கிறேன். (இன்னொருவரும் மொழிபெயர்த்திருக்கிறார். பெயர் மறந்துவிட்டது.) ஆனால் கொஸ்தா கெதாகுரோவ் கவிதைகளை இப்போதுதான் படிக்கிறேன். (கடந்த 24 வருடங்களாகப் பத்திரமாக வைத்திருந்தேன் என்பதே பெரிய விஷயம் அல்லவா?)

கொஸ்தாவின் சிறு கவிதைகளாக இடம் பெற்றவற்றில் பெரும்பாலானவை கதைக்கவிதைகள். அவற்றைவிடவும் சுவையான  ‘பாத்திமா’வோ ஒரு குறுங்காவியம். காக்கசிய நாட்டின் பழம்பாடல் ஒன்றின் விரிவுபடுத்திய வடிவம். அதிலிருந்துதான் சில பகுதிகளை எடுத்துக்காட்டப்போகிறேன்:

மனைவியை இழந்தவன் நயீப். அவனுடைய மைந்தன் டியாம்புலத். அக்காலத்தில் காக்கசியர்களுக்கும் பிற இனத்தவர்களுக்கும் உள்நாட்டுப் போர்கள் அடிக்கடி நடப்பதுண்டு. அப்படிப்பட்டதொரு போரில் பங்கெடுத்துக்கொண்டு ஐந்தாண்டுகளுக்கு முன் போனவன்தான், டியாம்புலத். என்ன ஆனான் என்றே தகவல் தெரியவில்லை.
 
கவிஞர் கொஸ்தா - படம்: நன்றி: விக்கிபீடியா
நயீபின் வளர்ப்பு மகள்தான் பாத்திமா. இளம் அழகி. அவளுக்குக் கணவனைத் தேடுகிறான் நயீப். வருகின்ற வரன்களையெல்லாம் இவள் மறுதலிக்கிறாள். நயீப் அவளைக் கெஞ்சுகிறான். நீ மணம்புரிந்துகொண்டுவிட்டால் என் கடமை முடிந்துவிடுமே என்கிறான். அவளோ ஏதோ ஒரு காரணத்தால் திருமணத்தில் விருப்பம் இல்லாதிருக்கிறாள். அப்போது நடக்கும் உரையாடல் இது, கவிதை வடிவில்:

அன்பு மகளே, இதோ பார்.
என் தலை வெள்ளியாய் மாறிவிட்டது.
விரைவில் ஒரு கல்லறைமேடு
என் எலும்புகளை மூடிவிடும்.

உன் அன்னை இறந்த நாளில்
ஒண்ட இடமின்றி அனாதையாய்
நம் ஊரில் நீ நின்றபோது
உன்னை நான் ஏற்றேன்
என் சொந்த மகளாய்.

உன்னைப் போற்றுவேன் என
பெரியவர்களிடம் புனித வாக்குக் கொடுத்தேன்.

நம் மண்ணின் சட்டப்படி
நல்லதொரு இளவரசனுக்கு
உன்னை உறவாகுவேன் என்றேன்.

இளவேனிற் காலத்தில் மொட்டவிழும்
தென்னக ரோஜா போல்
இந்த மலைகளின் அணிகலன் போல்
என் கைகளில் செழித்து வளர்ந்தாய்.

உன் பேரழகு பற்றிய ஊரவர் பேச்சு
பலதடவை வீரமிக்க இளவரசர்களையும்
   உயர்குடிமக்களையும்
நம் வாசலுக்கு ஈர்த்து வந்தது.
அவர்களில் ஒருவர்கூட
உன் கவனத்தை ஈர்க்கவில்லையா?...


பாத்திமா இவ்வளவு நாளாகத் தன மனதிற்குள்ளேயே காதலனாக வரித்து வைத்திருந்தது, டியாம்புலாத்தைத்தான்.  போர்க்களம் செல்லும் வயது வராதபோதும், தந்தையிடம் விரும்பி யாசித்துப் போனான். தந்தை நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியுமே! ஐந்து வருடங்களாகியும் தகவல் இல்லையே! இனியும் காத்திருப்பதில் அர்த்தம் என்ன? அவளை மிகவும் விரும்புவதாகச் சொல்லிக்கொண்டு அவளையே சுற்றிவரும் இப்ராஹீம் என்ற அடிமையைத் திருமணம் செய்துகொள்ளவேண்டியதுதான்! பாத்திமா பேசுகிறாள்:

“ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன.
சுவடே இன்றிச் சென்றுவிட்டன.
கனவுகள் இல்லாத இரவுகள் போல
ஒரு சின்ன நம்பிக்கைக் கீற்றுகூட இல்லாது-

ஆனால் என்னை நம்புங்கள்,
சிலநேரம் நான் சந்தேகப்படுகிறேன்...
ஆனால் இன்னும் காத்துக் கிடக்கிறேன்...
ஆனால் வெறுக்கத்தக்க பெண்ணின்
கனவிற்கும் சபதங்களுக்கும் விலையேது?

எல்லாத் துன்பங்களும் பயனற்றுப் போயின-

மூதாதையரின் புனிதச் சட்டங்களை நீங்கள்
புறக்கணிக்கக் கூடாது.

நெடுநாள் முன்பு பிரிந்தோம் நாங்கள்,
நிரந்தரமாகப் பிரிந்தோம்
என்பது எங்கள் விதியோ என்னவோ.

எல்லாம் வல்ல அல்லாவிற்குப் புகழ்சேர்க!

நான் பணிகிறேன் தந்தையே!
என் சோக விதிக்கு விட்டுத் தருகிறேன்.

இனியும் ஒரு சுமையாய்
இருக்கத் துணியேன்...

பழஞ்சட்டங்களுக்குப் பணிகின்றேன்.
என் இளமையின் உறுதிமொழியை
     உடைத்தெறிகிறேன்.
டியாம்புலத் பெயரை மறந்துவிடுகிறேன்.
உங்கள் விருப்பம் எப்படியோ
நான் மணம் செய்துகொள்கிறேன்-
இப்ராஹிமை!”

இதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறான், நயீப். “அவன் கடையன். ஏழை” என்று நினைவுபடுத்துகிறான். “நிதானத்தோடு பேசு, தந்தையே!.. அவன் இதயம் அன்பால் நிறைந்துள்ளது; உணர்வால் ஒளிர்கிறது. அவனுடைய

உழைப்பில், வியர்வை வெள்ளத்தில்,
     கண்ணீர்ப்பெருக்கில்
என் கனவுகளைப் புதைத்துக்கொள்ள
ஆற்றல் கிட்டினால் மன அமைதியும்
    நிறைவும் பெறுவேன்...”

என்கிறாள் பாத்திமா.

அந்தக் கிழவன் தன் கைகளால்
தன் கண்களை மறைத்துக் கொண்டான்,
கம்பளத்தில் சிந்திய கண்ணீரையே
மறுமொழியாகத் தந்தான்.

இப்ராஹிமோடு இவளுக்குத் திருமணம் ஆகிறது. ஒரு குழந்தையும் பிறக்கிறது.

சிறிது காலத்திற்குப் பிறகு ஒருநாள். ஏதோ ஒரு கிராமம். அனைவரும் இரவு உணவுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது  குதிரை வீரன் ஒருவன் வருகிறான். ‘வாருங்கள், எங்களோடு அமர்ந்து ரொட்டியைச் சாப்பிடுங்கள். உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்’ என்று அழைக்கிறார்கள். அவன் தன்னைப் பற்றிச் சொல்கிறான்:

“நானொரு பாடகன். தேச சஞ்சாரி.
ஒரு இடையனும்தான்.
எண்ணத்தில் வறுமையும் சொற்களில்
    செல்வமும் பெற்றவன்.
இளம்பெண்களுக்கு விருப்பம் என்மீது.
முது பெண்டிர்க்கோ எதிரி நான்.

நான் செல்வது தொலைதூரம் அல்ல.
ஆற்றருகில் கிராமம் ஒன்றுள்ளது.
அங்கு திருவிழாக் கோலாகலத்தில்
முதிய நயீபிற்கு மகிழ்வூட்டச் செல்கிறேன்...”.

ஆம், அவன்தான் டியாம்புலத்! போர் முடிந்து எங்கெங்கெல்லாமோ சென்றுவந்து, கடைசியாகத் தன் தந்தையைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறான்.

தந்தை இறந்து போனது அவனுக்கு எப்படித் தெரியும்? தன் காதலி பாத்திமா இன்னொருவனுக்கு மனைவியானதும், அவள் இப்போது ஒரு குழந்தைக்குத் தாய் என்பதும் அவனுக்கு எப்படித் தெரியும்?

பாத்திமாவும் இவனும் சந்திக்கும் காட்சிகளும், இவன் அவளைத் தன்னோடு வரச் சொல்வதும், அவள்’ என்னை மறந்துவிடு, நான் இன்னொருவனுக்கு மனைவி’ என்று சொல்வதும்....உருக்கமான கவிதை. தன் குழந்தை நிலாவொளியில் படுத்துறங்கும்போது அதைப் பார்த்து அவள் ரசிப்பதும், இரவின் நிசப்தத்தில் அவளுக்கு இப்ராஹீம் பட்டுக் கைக்குட்டை அன்பளிப்பு தருவதும் இக்கவிதையின் இன்னும் சில அழகான காட்சிகள். நல்ல மொழிபெயர்ப்பு. நீங்களாகவே படிக்கவேண்டும்.

ஆனால் என்ன நடக்கிறது தெரியுமா? ஆற்றோரம் ஓர் இரவில் இவளைச் சந்திக்கவரும்போதே, இவளுடைய கணவன் இப்ராஹிமைக் கொன்றுபோட்டுவிட்டுத்தான் வந்திருந்தான் டியாம்புலத். எப்படியும் இவள்  வசப்படுவாள் என்று நினைத்திருந்தான். ஆனால் அது நடக்கவில்லை. அவனிடமிருந்து தப்பி ஓடுகிறாள்.

“ஓ கொலைகாரா ! போய்த் தொலை!”

அம்புபட்ட விலங்குபோல்
அவள் விருட்டென ஓடினாள்.
அந்த இருண்ட இரவில்
மீண்டும் ஒருமுறை அவள்
காட்டுத்தனமாய் உறுமினாள்.

“கொலைகாரா!” – மீண்டும் சிரித்தாள்.

அதாவது டியாம்புலத்தை அவள் கல்லெறிந்து கொன்றுவிடுகிறாள் என்று தெரிகிறது. பிறகு அவள் பித்துப் பிடித்தவளாகிறாள்.

“நிறைவு மொழி” என்ற முடிவுரையில் கவிஞர் இப்படிச் சொல்கிறார்:

கிராமம் இப்போது மாறிவிட்டது.
குடில்கள் இருந்த இடத்தில்
இப்போது வீடுகள்...
ஒரே ஒரு குடிசை மட்டும் மாறவேயில்லை.

அதுதான் பாத்திமாவின் குடிசை.

...பெண்ணொருத்தி கடந்து சென்றாள்,
ஆடைகள் கிழிந்திருக்க வெறுங்கால்களுடன்.

பையன்கள் அவளை விரட்டிச் சென்றனர்,
மண்கட்டியை, கற்களை அவள்மீது வீசிக்கொண்டு ...

எப்போதாவது சிலவேளை அவள்
    சிரிப்புடன் கூறினாள்
“பொறு கொஞ்சம், பொல்லாப் பையா!
வீட்டிருக்கு வருவாய், அப்போது
நான் தண்டனை தருவேன்.”

கவிஞர் கேட்கிறார்: “யாரவள்? ஏன் அவள் சமூகத்தினின்றும் தள்ளியிருக்கிறாள்?”

“அவள் ஒரு பைத்தியம்......பாத்திமா! அவளுக்கொரு பையன் இருந்தான். அவனைக் கழுத்தை நெரிக்கப் போனாள் பாத்திமா. அப்போது ஒரு ஆசிரியர் தடுத்து, அவனை ஒரு விடுதியில் கொண்டு சேர்த்தார்.  இப்போது தனித்திருக்கிறாள். நாள் முழுதும் இப்படித்தான் ஓய்வின்றி பரபரப்பாய் இருப்பாள்.” என்று பதில் கிடைக்கிறது.


இரவு வந்ததும் ஒரு நிழல்போல் நடந்து
ஆற்றங்கரைக்குப் போவாள்.
ஒரு பேதைப் பாடல் பாடுவாள்.

“கதிரவன் மறைந்து விட்டான்.
வையம் துயில் கொண்டுள்ளது.
இரவின் கனவுகள் சிறகடித்து
  மேலே செல்கின்றன.
என் நெஞ்சம் அன்பால் வலி
   அனுபவிக்கிறது.
உனக்காக, என் அன்பே, நான்
    காத்துக்கொண்டிருக்கிறேன்.
என் கண்ணீரைத் துடைக்க
   கடிதே வா!”

என்று கவிதையை முடிக்கிறார் கொஸ்தா.

கவிதையை மொழிபெயர்ப்பது மிகவும் கடினமான பணி. எனினும், அதை, இனிமையான ஒன்றாகச் செய்து காட்டியிருக்கிறார்கள் முகம்மது ஷெரிப்பும்  டாக்டர் கா.செல்லப்பனும். நமது பாராட்டுக்குரியவர்கள்.  

என்சிபிஎச் நிறுவனம், வலது கம்யூனிஸ்ட்டு கட்சிக்குச் சொந்தமானதாக இருந்ததாள், ரஷிய நூல்களைத் தமிழில் வெளியிடும் முதல் உரிமையை இப்பதிப்பகத்திற்கு ரஷியா தந்திருந்தது. அதனால் தான் எண்ணற்ற ரஷிய இலக்கியங்களை இதுவரை என்சிபிஎச் பதிப்பித்துள்ளது. கொஸ்தாவின் கவிதை மாதிரி இன்னும் பல ரஷிய நாட்டுக் கவிதைகளை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றின் மீள்பதிப்பு இன்று கிடைப்பதில்லை. ஒரே ஒரு முயற்சியாக, அத்தகைய கவிதைகளை மட்டுமாவது ஒரு பெரிய தொகுப்பாக, 500 முதல் 800 பக்க அளவில் ‘ரஷியக் கவிதைத்தொகுப்பு’ என்று ஒரே புத்தகமாகக் கொண்டுவந்தால், அடுத்த புத்தகக் கண்காட்சியில் நிச்சயம் வரவேற்பைப் பெறும் என்பது நமது நம்பிக்கை.  ஆய்வு மாணவர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் மிகவும் பயன்படும்.
***
குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.
 © Y Chellappa

14 கருத்துகள்:

  1. பாத்திமாவின் கதை பல உருவங்களில் தமிழ் படங்களாக வந்துள்ளதைப் பார்த்தால் ,நம்ம ஆளுங்க உல்டா தீவிரவாதிங்கன்னு தெரியுது !
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம்! ரஷியாவுக்கும் நம்முடைய சினிமாக்காரர்களுக்கும் நல்ல உறவு இருந்துள்ளதே காரணம்.

      நீக்கு
  2. மிகவும் உருக்கமான கவிதை! வாசித்ததும் மனது கனத்தது!

    நல்ல ஒரு பகிர்வு!

    பதிலளிநீக்கு
  3. ரஷ்யககதைகள் எல்லாவற்றில்லுமே ஒரு சோகம் இழையூடும். பாத்திமாவின் கதையும் அபபடித்தான். பல பெணகளின் காதல்கதை சோகக்கதை ஆகத்தான் முடிவடைகிறது. பாத்திமாவும் அதே விதியையே சந்திக்கிறாள். பாத்திமா பாவம்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நாளில் பெண்களுக்கு இருந்த உரிமைகள் மிகவும் குறைவுதானே! தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. முழு நூலையும் படித்த திருப்தி. நிறைவில் எதையோ ஒன்றை நாம் இழந்ததுபோல் உணர்வு.

    பதிலளிநீக்கு
  5. //உழைப்பில், வியர்வை வெள்ளத்தில்,
    கண்ணீர்ப்பெருக்கில்
    என் கனவுகளைப் புதைத்துக்கொள்ள
    ஆற்றல் கிட்டினால் மன அமைதியும்
    நிறைவும் பெறுவேன்...”///
    மனம் கனக்கிறது ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே! மூல மொழியில் படித்தால் இன்னும் எவ்வளவு உருக்கமாக இருக்குமோ?

      நீக்கு
  6. நயீபின் மகன் டியாம்புலத். வளர்ப்பு மகள் பாத்திமா. இவர்களுக்குள் காதல் இதைரசிக்க அந்நாட்டுப் பழக்க வழக்கங்களை தெரிந்திருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் நண்பர்களே

    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    பதிலளிநீக்கு
  8. தேர்ந்தெடுத்து அளித்த வரிகள் அருமை...

    பதிலளிநீக்கு