புதன், மே 22, 2013

அன்னையும் அரவிந்தரும் ஆனந்தபாலாவும்


சென்னை நந்தனம் ஹௌசிங் போர்டு கட்டிடத்தின் எதிரிலுள்ள மாடல் ஹட்மெண்ட் தெருவில் சென்று ‘அன்னை தியான மையம்’ என்று கேட்டால் தெரியாதவர்களே இருக்கமுடியாது. 1986 முதல் இன்றுவரை 27 வருடங்களாக ஸ்ரீ அன்னையும் அரவிந்தரும் இந்த மையத்தில் மலர்களோடு மலர்களாக எழுந்தருளி, தம்மைக் காணவரும் அன்பர்களுக்கு அன்பும் அமைதியும் சாந்தியும் சமாதானமும் வழங்கி வருவதை பல்லாயிரக்கணக்கான சென்னைவாசிகள் உணர்வுபூர்வமாக அறிந்துள்ளார்கள்.
இந்த மையம் எழுந்த வரலாறே ஒரு தனிக்கதை.

சனி, மே 18, 2013

நாக. வேணுகோபாலன் கவிதைகள்

தொண்ணூறுகளில் நான் புதுடில்லி கரோல்பாகில் பணியாற்றியபோது தில்லித் தமிழ்ச்சங்கத்தில் மிகுந்த தொடர்புடையவனாக இருந்தேன். அப்போது அறிமுகமானவர் நாக. வேணுகோபாலன்.

எங்கள் இரண்டாம் தலைமுறைகள் அமெரிக்கா வந்துவிட்ட நிலையில், நியூஜெர்சியில் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.

தமிழ்ப் புத்தாண்டு தினமான 2013 - ஏப்ரல் 14ம் தேதி விருந்துக்கு வந்தார், மனைவி, மகன், மருமகள், பேத்தியுடன். இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. (முன்னதாக ஒரு நாள் நாங்களும் அவருடைய மகன் இல்லத்தில் அதே இரண்டுமணி நேரம் செலவிட்டோம்).

நாக. வேணுகோபாலன் சென்னை லயோலாக் கல்லூரியில் படித்தவர். (பச்சையப்பா என்று முன்பொருமுறை நான் எழுதியது சரியில்லை). ‘லயோலா மண்ணில் தமிழ் விளையாது’ என்று எல்லாரும் சொல்லிக்கொண்டிருந்த வசைமொழி இவரால் பொய்த்தது. சட்டக் கல்லூரியில் நடந்த அனைத்துக் கல்லூரி பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வென்று அதனால், கல்லூரிகளுக்கான சுழற்கோப்பையை லயோலாவுக்குப் பெற்றுத் தந்தார், வேணு. (அதே ஆண்டு கட்டுரைப்போட்டியில் இதே சாதனையை இவரது அறை நண்பர் பெரி.சாத்தப்பன் நிகழ்த்தினாராம்).

செவ்வாய், மே 14, 2013

சந்தையில் விற்கும் தார்மிகம்
WHAT MONEY CAN’T BUY
by Michael J Sandel

ஓர் அறிமுகம்


சீனாவில் மா-சே-துங் ஆட்சிக்காலத்தில் இருந்து (1979 முதல்) அமுலில் உள்ள ஒரு சட்டம், நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் இரண்டாவது குழந்தை பெற அனுமதி மறுக்கிறது. கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு மட்டும், முதல் குழந்தை பெண்ணாக இருந்தால்,  இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளத் தடையில்லை. இதன் விளைவு என்ன? இரண்டாவது முறையாக கருவுற்ற நகரத்துப் பெண்டிர், கிராமங்களுக்குச் செல்லலாயினர். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் கிராமத்தில் பிழைப்பதற்கு வழி வேண்டுமே! மேலும், பிள்ளை பெறும் பொருட்டே இவர்கள் இடம் மாறினார்கள் என்பது நிரூபிக்கப்பட்டால் தண்டனையும் கிடைக்கலாம்.

எந்த விதிக்கும் ஒரு விலக்கு உண்டல்லவா? அது தான் அபராதம். நகரத்துப் பெண்டிர் இரண்டாவது முறையாகக் கரு தரிக்க நேரிட்டால், அபராதமாக இரண்டு லட்சம் யுவான் செலுத்த வேண்டும். அதாவது 31,000 டாலர்கள்.

பணம் படைத்தவர்களுக்கு இது சாதகமாக அமைந்து விட்டது. இரண்டாவது முறை கரு தரித்தல் பற்றி சிறு சந்தேகம் இருந்தாலும் இவர்கள் முன்கூட்டியே இந்த அபராதத்தைச் செலுத்திவிடுவார்களாம். (குழந்தை பிறக்கவில்லையென்றால் திரும்பக் கிடைக்குமா என்பது பற்றி தகவல் இல்லை).   

வெள்ளி, மே 10, 2013

மாலன் எழுதிய 55 சிறுகதைகள் -‍ ‍
ஓர் அறிமுகம்

 

இருநூறு ரூபாய்க்குச் சிறுகதைப் புத்தகம் வெளியிடுகிற ஆசிரியர் என்றால் உலகம் அறிந்தவராகத் தானே இருக்கவேண்டும்! அவருக்கு அறிமுகம் எதற்கு என்ற கேள்வி எழலாம். என்ன செய்வது, என்னைப் போன்ற பிறவிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள், புத்தகம் வாங்கி ஓராண்டு ஆகியும் படிக்க எடுக்காமல் இருக்கும்  அதி‍சுறுசுறுப்பானவர்கள் (அல்லது சோம்பேறிகள் ?)- அவர்களுக்கு அறிமுகம் வேண்டியது தானே!

தமிழ்ச் சிறுகதை உலகின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான தி. ஜானகிராமன், மாலனின் 'வித்வான்' என்ற கதையைப் படித்துவிட்டு, "சிறுகதையின் அடிவானத்தை எவ்வளவு தொலைவிற்கு ஒரு தேர்ந்த கலைஞன் தள்ள முடியும்" என்று வியந்திருக்கிறார். பிரபஞ்சனோ, ஒரு படி மேலே போய், "எழுத்துக்கு ஒரு விளைவு உண்டு; அது சக்தி பொருந்திய பட்ச‌த்தில், இந்தக் கதைகள், தமிழ் இலக்கிய உலகில் சாஸ்வதம் பெறும்" என்று நம்பிக்கை கொள்கிறார்.

வியாழன், மே 09, 2013

அமெரிக்காவின் புதிய மதம்:
“ஸயண்ட்டாலஜி சர்ச்”
SCIENTOLOGY CHURCH


“பூமியில் எப்பொழுதெல்லாம் தர்மம் குலைந்து நல்லவர்கள் துன்பமடைகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்களைக் காக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் நான் அவதாரம் எடுக்கிறேன்” என்று கீதையில் கண்ணன் அர்ச்சுனனுக்குக் கூறுகிறான்.

அதன்படி, கலியுகத்தில் ‘கல்கி’  அவதாரம் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த மக்களிடம், “நானே கல்கி” என்று பெருத்த விளம்பரத்துடனும் அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவுடனும் ஒரு பெரியவர் தம்பதி சமேதராய் அழகான ஆங்கிலத்தில் பேசி, ஞாயிறுதோறும் தொலைக்காட்சிகளில் அதிக  டி.ஆர்.பி. ரேட்டிங் பெற்றதை மறந்திருக்க மாட்டீர்கள்.

கிறித்தவ மதத்திலும் இந்த நம்பிக்கை உண்டு. ‘ஏசு வருகிறார்’ என்று பல சுவர்களில் எழுதியிருப்பதைச் சென்னை மின்சார ரயிலில் பயணிப்பவர்கள் அடிக்கடி பார்க்கமுடியும்.

வெள்ளி, மே 03, 2013

தலாய் லாமா - புதிய நூல்கள் 2

இன்று ஜான்ஸன் நூலகத்திற்கு (ஹேக்கன்ஸாக், நியுஜெர்சி) சென்ற பொழுது திபெத்தின் முன்னாள் அதிபரும், புத்தமதத் தலைவருமான மதிப்பிற்குரிய தலாய் லாமா அவர்களைப் பற்றிய இரண்டு புதிய நூல்கள் படிக்கக் கிடைத்தன.

முதலாவது நூல் - “கருணையென்னும் ஞானம்”
The Wisdom of Compassionby  Victor Chan - 2012 River Head Books
இந்த நூல், தலாய் லாமாவின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவதாகும். அறிஞர்களுடனும், மாணவர்களுடனும் அமெரிக்க, இந்தியா, கனடா, அயர்லாந்து முதலிய நாடுகளில் அவர் பங்குபெற்ற உரையாடல்களின் சிறப்பு அம்சங்கள் தரப்பட்டுள்ளன.

மதம் என்ற ஒன்றை அவர் தனது உரைகளில் எங்குமே தொடவில்லை. ஞானத்தின் குறிக்கோள், கருணையே என்கிறார். எவனொருவன் தன்னிலும் கீழானவனுக்கு இரக்கம் காட்டுகிறானோ அவனே மனிதன். அவனே இறைமையைப் புரிந்துகொண்டவன் என்கிறார். இதயத்தைத் திறந்து வைத்தால் இன்பமும் திருப்தியும் கொண்ட வாழ்க்கையைப் பெறுவது அனைவருக்கும் இயலும் என்கிறார்.