திங்கள், டிசம்பர் 30, 2013

தெய்வத்தோடு பேசுவது எப்படி? ரஜினிகாந்த் கூறும் வழி ( ‘அபுசி-தொபசி’- 17)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
இந்த ஆண்டின் மிகப்பெரிய அரசியல் நிகழ்வு, அரவிந்த கேஜ்ரிவாலின் வெற்றிதான். ஒரு சாமானியன், தில்லியின் முதல் அமைச்சராக முடிகிற ஜனநாயக நிகழ்வு, பணபலத்திற்கும், ஊழலுக்கும் எதிராகவும் மக்கள் தயங்காமல் நிற்கத் தாயராக இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.   இந்தப்  போக்கு ஏனைய மாநிலங்களிலும் தொடரவேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது..
புத்தகம்
தெய்வத்தோடு பேசுவது எப்படி? ரஜினிகாந்த் கூறும் வழி:

உங்களுக்கு இஷ்டமான ஒரு தெய்வத்தின் படத்தை வைத்துக்கொள்ளுங்கள். காலையில் அதற்கு பூஜை செய்யுங்கள். அந்த தெய்வத்தோடு ஒன்றி, அந்த தெய்வத்தின் மந்திரங்களைச் சொல்லுங்கள். பாடல்களைப் பாடுங்கள்.

உங்கள் இரண்டு புருவத்திற்கு மத்தியிலும், நெஞ்சிலும் எப்பொழுதும் அந்த தெய்வம் நிறைந்திருக்கவேண்டும். அந்த தெய்வத்தைப்பற்றிய சிந்தனை எப்பொழுதும் இருக்கும்பொழுது தேவையற்ற வேறு சிந்தனைகள் உங்களை திசை திருப்பாது.

பக்தி மீரா, எதைப் பார்த்தாலும் கிருஷ்ணனாகவே பார்த்தார். சதா சர்வ காலமும் அந்தச் சிந்தனையிலேயே இருந்தார். பக்த ராமதாஸ் எல்லோரையும் இராமராய்ப் பார்த்தார். ‘யார் என்ன செய்யச் சொன்னாலும் சின்னக் குழந்தையைப்போல் செய்வார். ‘இராமர் சொன்னார் செய்கிறேன்’ என்பார்.

லௌகிகக் கடமைகளைச் சரிவரச் செய்துகொண்டே இஷ்ட தெய்வ பக்தி செய்யவேண்டும்.

மாலையிலோ, இரவிலோ பூஜை செய்யும்பொழுது அன்று ஏதாவது தவறு செய்திருந்தால் அதற்கு இஷ்ட தெய்வத்திடம் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும்.



இஷ்ட தெய்வ பூஜையைத் தீவிரமாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், அந்த தெய்வத்தைச் சிறு விக்ரக வடிவில் செய்து வைத்து பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்தவுடன் அந்த விக்ரகத்தை ஒரு சிறிய பெட்டிக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த தெய்வத்தை நீங்கள் மட்டுமே பார்க்க வேண்டும்.

காலம் கனியும்பொழுது அந்த தெய்வம் குருவை அடையாளம் காண்பிக்கும். குருவின் துணையோடு அந்த தெய்வத்தோடு நீங்களும் பேசுவீர்கள்!

(நடிகர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறும் இக்கருத்து, திரு கே.எஸ்.நாகராஜன் ராஜா எழதிய “மௌனம்-பாபாஜியின் சரிதை” என்ற நூலில் பக்கம் 118-119இல் இடம்பெற்றுள்ளது. ரஜினிகாந்த்தின் குருவாகக் கருதப்படும் இமயமலை மானசரோவர் ஏரியின் அருகில் சித்தாஸ்ரமத்தில் அருவமாகக் குடிகொண்டிருக்கும் அவதார புருஷர் பாபாவின் சரித்திரம் இதில் கூறப்படுகிறது. நூலாசிரியரே ஓர் அருள்பெற்ற மானுடர் என்று தெரிகிறது. 128 பக்கம் 90 ரூபாய். கிரி டிரேடிங் கம்பெனி, கபாலீஸ்வரர் சன்னதி தெரு, மயிலாப்பூர், சென்னை 600004. தொலைபேசி: 044-24640376.)

சினிமா
எங்கள் குடியிருப்பில் கிறிஸ்துமஸ் தினத்தன்று மாலை இலவசமாகத் திரைப்படம் ஒன்று காட்டினார்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம். சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்த படம். இலவசமாகக் காட்டினால் கூட்டம் வருவதற்குக் கேட்பானேன்? ஆனால் என்னால் முக்கால் மணிக்கு மேல் பார்க்க முடியவில்லை. “ஊதாக் கலரு ரிப்பன் ...உனக்கு யாரு அப்பன்..” என்ற பாடல் வரும்வரை இருந்தேன். இந்தப் பாடல் எப்படியோ  பிரபலமாகிவிட்டது, அந்தக் காலத்து ‘எலந்தப்பயம்’ பாடல் மாதிரி. நல்லவேளை ரிப்பன்.....அப்பன்......என்பதைத் தொடர்ந்து ‘குப்பன்.....சுப்பன்..’ என்றெல்லாம் வரவில்லை.

அடுத்த நாள் விசாரித்ததில் படம் பரவாயில்லை என்று பொதுவான விமர்சனம் கிடைத்தது. பெரும்பாலான இளைஞர்களுக்குப் படம் பிடித்திருந்தது என்றார்கள். தமிழ்சினிமாவை உலகத்தரத்துக்குக் கொண்டுபோக மணிரத்னமும் கமல்ஹாசனும் நம்பிக்கொண்டிருப்பது இவர்களைத்தான்.
   
தொலைக்காட்சி
விஜய் டிவியில் இரவு ஒன்பது மணியிலிருந்து பத்துமணி வரை வெளியாகும் சூப்பர் ஸிங்கர் நிகழ்ச்சியை சிலநாள் பார்ப்பதுண்டு. வியாழக்கிழமை (26-12-2013) அன்று இரட்டை ஆஸ்கார் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 

சமுதாயத்தில் மிகவும் கீழ்மட்டத்தில் இருக்கும் குடும்பங்களிலிருந்து, இசை என்றால் என்னவென்றே அறிந்திராத சிறுவர் சிறுமியரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இசைக்கருவிகளில் கடந்த நான்கு வருடங்களாக இலவசமாகப் பயிற்சி அளித்து சன்ஷைன் ஆர்க்கெஸ்ட்ரா என்ற பெயரில் ஓர் இசைக்குழுவை அமைத்துள்ள தகவலைப் பகிர்ந்துகொண்டார். 

இக்குழுவில் இருந்த ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் சர்வதேச அளவில் ஒருநாள் புகழ் பெறப்போகிறோம் என்ற தன்னம்பிக்கையோடு உற்சாகமாக வாசித்துக் காட்டியதைப் பார்த்தபோது இசைத்துறைக்கு ரஹ்மான் வழங்கிய காணிக்கை இது என்றே சொல்லத்தோன்றுகிறது.  இன்னும் வாழ்வில் மிகப்பல உச்சங்களை எட்டப்போகின்ற ரஹ்மானுக்கு நமது வாழ்த்துக்கள்!

பத்திரிகை
ஈ.வெ.ரா. பெரியாரைப் பற்றியும் ராஜாஜியைப் பற்றியும் டிசம்பர் மாதத்தில் பேசியே தீரவேண்டியிருக்கிறது பத்திரிகைகளுக்கு. இருவருமே சிறந்த பேச்சாளர்கள். சிறந்த எழுத்தாளர்கள். இருவருமே தாங்கள் கொண்ட கொள்கைகளுக்காகவே வாழ்ந்தவர்கள். இருவரும் ஒருவருடன் மற்றொருவர் தீவிரமான கருத்துவேறுபாடு கொண்டிருந்தபோதும் தமக்குள்ளே இழிசொல்லையோ கீழ்த்தரமான வார்த்தைகளையோ பரிமாறிக் கொண்டதில்லை.
"ராஜாஜி சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்போம்!" படம் நன்றி: ஹிந்து

தனது முதல் மனைவி  நாகம்மாள் மறைந்தவுடன் அவருக்குத் தான் இழைத்துவிட்ட கொடுமைகளைத் தன்னிலை விளக்கமாகப் பெரியார் “எல்லாம் போயிற்று என்று  சொல்லட்டுமா?” என்ற தலைப்பில் இப்படி எழுதுகிறார்:

“எப்படியிருந்தாலும் நாகம்மாளை மணந்து வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு 35 வருட காலம் வாழ்ந்துவிட்டேன். நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல், நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணைவனாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை.  நான் சுயநல வாழ்வில் மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும், பொதுநல வாழ்விலும் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தார் என்பது மறக்க முடியாத காரியம். பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ-போதிக்கிறேனோ அதில் நூறில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்துகொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை....”

பெரியாரின் ஆளுமையின் நேர்மைக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

ராஜாஜியின் தீர்க்கதரிசனம் உலகப் பிரசித்தம். ராஜாஜி எழுதுகிறார்:

“சுயராஜ்யம் வந்த உடனே, இப்போது உள்ளதைவிட நல்ல அரசோ அல்லது மக்களுக்கு அதிக மகிழ்ச்சியோ ஏற்பட்டுவிடாது என்பதை நாம் எல்லாரும் அறிந்துகொள்ள வேண்டும். சுதந்திரம் கிடைத்து நீண்ட காலத்துக்குப் பிறகும் இவை ஏற்பட்டுவிடாது. தேர்தல்களும் அவற்றில் லஞ்ச ஊழல்களும் அநீதிகளும் பணத்தின் பலமும் கொடுமையும் நிர்வாகத்தில் திறமையின்மையும் எல்லாம் சேர்ந்து சுதந்திரத்தை நாம் அடைந்த உடனேயே வாழ்க்கையை நரகமாக்கிவிடும். மக்கள் வருத்தத்தோடு பின்னோக்கிப் பார்ப்பார்கள். ஒப்புநோக்குகையில் பழைய ஆட்சியில் நீதியும் திறமையும் அமைதியும் ஏறத்தாழ நேர்மையான நிர்வாகமும் நிலவியதை எண்ணிப் பார்ப்பார்கள். நமக்குக் கிடைக்கக்கூடிய ஒரே லாபம் ஓர் இனத்தவர் என்ற முறையில் நாம் அவமானத்திலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுபடுவதே”.
வெறும் கும்பிடு தான்! 

93 வயதான முதுபெரும்கிழவர் ராஜாஜி, கொட்டும் மழையில் தன் பெருமை பாராது (அப்போதைய முதல்வர்) கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக் கதவைத் தட்டினார். அவருடைய கரங்களைப் பற்றியபடி “தமிழகத்தில் மதுவிலக்கு தொடரவேண்டும்” என்று கெஞ்சினார். அன்று அது நடந்திருந்தால் இன்று தமிழ்நாடும் மற்றொரு குஜராத்தாக வளர்ந்து செழித்திருக்காதா? ராஜாஜியின் தீர்க்கதரிசனத்தை ஏற்காமல் போனோமே என்று கருணாநிதி இப்போதாவது குற்ற உணர்வு கொள்வாரா?

பெரியாரும் ராஜாஜியும் போன்ற சான்றோர்கள் நம்மிடையில் ஒருகாலத்தில் வாழ்ந்தார்கள் என்பதே இனிவரும் தலைமுறைகளுக்கு வியப்பாகத்தான் இருக்கும்.

சிரிப்பு
டிசம்பர் மங்கையர் மலரிலிருந்து:
குழந்தைகளின் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

“ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு க்ளவுஸ் போட்டு விடலாம். சற்று வளர்ந்த குழந்தையாக இருந்தால் விரலில் சுத்தமான வேப்பெண்ணெய் தடவலாம்.” (நடக்கிற காரியமா இது!)

சொன்னார்கள்...

இந்தியாவிலிருந்து புராதனச் சிலைகளைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்படும் சுபாஷ் கபூர் பற்றிய ஆவேசமான கட்டுரையில் இப்படி எழுதுகிறார் மதிப்பிற்குரிய ஜோதிட அறிஞர் திரு ஏ.எம்.இராஜகோபாலன்:

அளவில் பெரியவையும், மதிப்பில் உயர்ந்தவையுமான இத்தகைய சிலா விக்கிரகங்களைக் கடத்திச் செல்ல நமது காவல்துறை, சுங்கத்துறை, விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் எவ்விதம் இவ்வளவு எளிதாக அனுமதித்து வருகின்றனர் என்பதே என் கேள்வி!

நம் நாடு சுதந்திரம் பெற்றபிறகு பெரும்பாலும் முக்கியப் பதவிகளில் உள்ள அதிகாரிகள் அனைவருமே அரசியல் செல்வாக்கு பெற்றவர்களாக இருப்பதால்தான், இன்றைய இந்தியாவில் உயரதிகாரிகளைக்  'கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால்' எதை வேண்டுமானாலும் சாதித்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பணத்திற்காக, எத்தகைய பாவத்தையும் செய்யத் துணிந்துவிட்டனர் - நேர்மை என்றால் என்ன என்றே தெரியாத நம் அரசும், அதன் அதிகாரிகளும்!

விஜயநகர் சாம்ராஜ்ஜியத்தில் திருக்கோயில்களின் சொத்துக்களைக் களவாடினால் மரண தண்டனை கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், ஊழல்கள் மலிந்த இன்றைய இந்தியாவில் சுபாஷ் கபூர் போன்ற கயவர்களுக்குத்தான் மாலையும், மரியாதையும்! ஒழுக்கமும், தேசப்பற்றும் இல்லாதவர்களால் நடத்தப்படும் அரசாங்கத்திடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

இனியும் நம்மிடம் என்ன இருக்கிறது, இழப்பதற்கு?

(நன்றி: குமுதம் ஜோதிடம் வார இதழ் 03-01-2014  பக்கம் 2)

குறிப்பு : இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com
 முக்கிய அறிவிப்பு: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு  ௦1-௦1-2௦14 புதன் அன்று  சிறப்பு அபுசிதொபசி -18 வெளியாகும். 

திங்கள், டிசம்பர் 23, 2013

நடிகை ரேவதி, தோழர் ஆர்.நல்லகண்ணு, ஜெயமோகன் ... ( ‘அபுசி-தொபசி’- 16)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
கடைசியில் நான் சொன்னதுதான் நடக்கும்போல் தெரிகிறது. ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால் தில்லியில் ஆட்சி அமைக்கப் போவதாக இன்று அறிவிக்கவிருக்கிறார். காங்கிரஸ் கட்சி அவருக்குத் துணைபோகும் என்று தெரிகிறது. பா.ஜ.க. எப்படியும் 2014 பொதுத்தேர்தல் சமயத்தில் தில்லியில் ஆட்சியில் இல்லாமல் போனால் தங்களுக்கு நல்லது என்று காங்கிரஸ் நினைக்கிறது. அதே சமயம், திடீரென்று முளைத்த ஆம் ஆத்மியைச் சமயம் பார்த்து காலைவாரிவிடவும் அது தயங்காது என்பதில் சந்தேகமில்லை. அனுபவமில்லாத ஆம் ஆத்மி கட்சி, தில்லி என்ற ஒரு சிறிய மாநிலத்தையே ஆளமுடியாமல் போகுமானால் அது, மேற்கொண்டு எந்த மாநிலத்திலும் கால்கொள்ளமுடியாமல் போகும். பா.ஜ.க.வுக்கும் இது மகிழ்ச்சி தரும் விஷயமே.பொது எதிரி ஒழிந்தால் நிம்மதி தானே!

ஜெயந்தி நடராஜன், மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஆந்திராவில் ஜகன் ஜாமீனில் வெளிவிடப்பட்டதுமாதிரி இதுவும் ஒரு திட்டமிட்ட நிகழ்வு என்று கூறுகிறார்கள்.

காங்கிரசுக்கு எதிராகப் போட்டியிட்டு பாராளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றவேண்டியது, பிறகு, காங்கிரசுக்கே ஆதரவு தெரிவிக்க வேண்டியது – என்ற இரு அம்சக் கொள்கையை ஜகன் ஒப்புக்கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் (நான் அல்ல!) தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டிலும், ஜி.கே.வாசன் விரைவில் காங்கிரசிலிருந்து விலகி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் உயிர்பெறச்செய்து, தி.மு.க. துணையுடன் சில பாராளுமன்ற இடங்களை வென்று, அதன் பிறகு ஒரு சுபயோக சுபதினத்தில் காங்கிரசுடன் ஐக்கியமாக வேண்டுமென்று திட்டமிடப்பட்டுள்ளதாக அதே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அந்தக் கட்சியில் சேருவதற்கு ஜெயந்தி நடராஜனுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  

ஆக, மூன்றாவது அணி, தேசீய அளவில் எழுச்சிபெறுவது இயலாத காரியம் போல் தோன்றுகிறது. பார்க்கலாம்!

புத்தகம்
சனிக்கிழமை (21-12-2013) மாலை அகநாழிகை புத்தகக் கடையில் நடந்த இலக்கிய சந்திப்புக்குச் சென்றிருந்தேன். (சென்னையைவிட்டுச் சற்று தூரமுள்ள குடியிருப்பில் வசிப்பதால் இம்மாதிரி மாலைநேர விழாக்களில் பங்குபெறுவது கடினமாகிக்கொண்டுவருகிறது. விரைவில் இதற்கொரு தீர்வு காணவேண்டும்.) சைதாப்பேட்டையில் மிக முக்கியமான, அனைத்துப் பேருந்துகளும் நிற்கும் அண்ணாசாலையில், வாசன் ஐ  கேருக்கும் ஆந்திரா வங்கிக்கும் இடையில், ஒரு பெரிய மரநிழலின் பின்னணியில் முதல்மாடியில் அகநாழிக புத்தகக் கடை அமைந்துள்ளது. சில மாதங்களிலேயே சென்னையின் இலக்கிய வாழ்வில் மிக முக்கிய இடத்தை அடைந்துவிட்டது.

மேற்படி சந்திப்பு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஏற்பாடுசெய்திருந்த விழா ஆகும். 88 வயதான தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களால் எழுதப்பட்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டிருக்கும் “டாலர் தேசத்து அனுபவங்கள்” என்ற நூலின் விமரிசனக் கூட்டம் அது.

தோழர் நல்லகண்ணு அவர்கள் சென்ற ஆண்டு இருபது நாட்கள் அமெரிக்காவின் முக்கியப் பகுதிகளுக்குச் சென்றுவந்த பயணத்தின் விளைவாக எழுதப்பட்டிருக்கும் நூல். அழகான தமிழில், இதுவரை அமெரிக்கா போகாதவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையிலும், பொதுவுடைமைக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருந்தாலும், அமெரிக்க முன்னேற்றங்களைக் காழ்ப்புணர்ச்சியின்றிப் பதிவிடுவதாகவும் உள்ளது.

சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட வாசகர்கள்/ரசிகர்கள் வந்திருந்தனர். ஓர் இலக்கியக் கூட்டத்திற்கு முப்பது என்பதே வெற்றிகரமான எண்ணிக்கை.

சில மாதங்களுக்கு முன்புதான் வெளியாகியுள்ள நூல். (நூறு பக்கம். நூறு ரூபாய்.) விலை கொடுத்து வாங்கினேன். தோழர் நல்லகண்ணு அவர்களின் கையொப்பமும் பெற்றேன்.

சினிமா & தொலைக்காட்சி
நேற்று (22-12-2013) ஞாயிற்றுக்கிழமை இரவு சன் டிவியில் மாற்றுத்திறனாளிகளுக்கான (நடனப்)போட்டி ஒன்று வெளியாகிக் கொண்டிருந்ததைப் பாதியில் பார்த்தேன். பழம்பெரும் நடிகை, ‘பொத்திவச்ச மல்லிக மொட்டு’ பாடல் மூலம் திரைக்கு வந்த ரேவதி, பட்டிமன்றங்களில் அசடுவழிந்தபடியே கைதட்டல் வாங்கிவிடும் ராஜா, மற்றும் நடிகர் அப்பாஸ் ஆகியோர் நடுவர்கள்.

போலியோ நோயினால் கை கால்கள் இரண்டும்  முழுவளர்ச்சி பெறாத ஒருவர், பீஷ்மர் மாதிரி ஒரு முள்படுக்கையில் சிரசாசனம் உள்படப் பல யோகா ஆசனங்களைச் செய்து காட்டியது வியப்பூட்டியது. பாண்டிச்சேரியில் அவர் யோகாமாஸ்டராம். முயன்றால் முடியாததில்லை என்று நிரூபித்தார். சன் டிவியில் இம்மாதிரி ஆளுமைகளுக்கும் இடமளிப்பது, அவர்களின் அழுகை சீரியல்களுக்குப் பிராயச்சித்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

பத்திரிகை
நம் காலத்து சிறந்த எழுத்தாளரும் சிந்தனையாளரும் ஆவார், ஜெயமோகன். தமிழிலும் மலையாளத்திலும் புகழ்பெற்றிருக்கும் இவர், தமது சுதந்திரமான கருத்துக்களால் அனைவரின் சிந்தனையையும் தொடுபவர். (இவரையும் சாரு நிவேதிதாவையும் எதிர்ப்பதற்கென்றே வலைப்பூக்களையும் முகநூல் பக்கங்களையும் நடத்துகிறார்கள் சிலர் என்பதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.)

அண்மைக்காலமாகத் தமிழ் இந்துவில் ஜெயமோகன் கட்டுரைகள் அடிக்கடி வருகின்றன. டிசம்பர் 16 தேதியிட்ட இதழில் எட்டாம் பக்கத்தில் ‘காந்தியம்’ என்ற தலைப்பில் இவரது கட்டுரை வெளியாகியுள்ளது. இளைஞர்களைக் கவரும் விதமாக, அதே சமயம், காந்தியத்தில் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியதாக இக்கட்டுரை உள்ளது. மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டிக்கும், விவாத மேடைக்கும் இது மிகவும் பயன்படும். தமிழ் இந்துவின் இணையதளத்திலிருந்து இறக்கிக்கொள்ளலாம்.

இக்கட்டுரையில் ஜெயமோகன் குறிப்பிடும் முக்கியமான கருத்து: காந்தியம் என்றால் காந்தி சொன்ன கருத்துகள் என்று பொருள்கொள்ளவேண்டாம். ஏற்கெனவே இருந்த இந்தியச் சிந்தனைகளை முதன்முதலாகத் தொகுத்துச் செயல்பாட்டுக்குறிய வழியாக அறிவித்தவர் தான் காந்தி. எனவே, “காந்தியத்தின் தொடக்கம் தான் காந்தி” என்கிறார். “இன்றைய உலகில் நிர்வாகவியல் முதல் எண்ணற்ற நவீன துறைகளில் செல்வாக்கு செலுத்திவரும் அதிநவீன சிந்தனை. நாளைய உலகுக்கான வாசலும் கூட” என்று ஜெயமோகன் கூறுவதை மறுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.

சிரிப்பு
வட இந்தியப் பத்திரிகைகளில் சர்தார்ஜி ஜோக்குகள் பிரபலம். அதேபோல், தமிழ்ப் பத்திரிகைகளில் புறமுதுகுகாட்டி ஓடும் மகாராஜாக்களின் ஜோக்குகள் பிரபலமாகிவிட்டன. தமிழ் இந்துவிலும் இப்போது வர ஆரம்பித்துவிட்டார், மகாராஜா.16-12-2013 அன்று பக்கம் 12இல் பர்வீன் யூனுஸ் எழுதிய ஜோக் இது:

“மன்னர் என் கடுப்பாக இருக்கிறார்?”
“பதுங்குகுழி ரெடி ஆகவில்லை என்று அவரை பாதாள சாக்கடையில் ஒளிந்துகொள்ளச் சொன்னார்களாம்”

ஒரு முக்கிய அறிவிப்பு:
என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு “தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்” என்ற பெயரில் தயாராகிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் வந்துவிடும். பதிப்பாளர் அகநாழிகை பொன். வாசுதேவன் அதன் அட்டைப் படத்தை அவரது முகநூலில் வெளியிட்டிருக்கிறார். 

(நூல் வெளிவந்த பிறகு  அட்டைப்படத்தைப் பற்றிய முக்கியத் தகவலைச் சொல்லுவேன்.) 144 பக்கம். 12 சிறுகதைகள். பிரபல பதிவரும், தஞ்சைத் தமிழரும், சிறந்த எழுத்தாளரும், அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ‘ஹரணி’ என்கிற முனைவர் க. அன்பழகன் அவர்கள் ஆழமான மதிப்பீடு வழங்கியிருக்கிறார். (விலை நூற்றி இருபதுக்குக் குறையாது என்று தெரிகிறது.)

குறிப்பு : இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.

© Y.Chellappa

திங்கள், டிசம்பர் 16, 2013

“என் கணவர் பெரிய இலக்கியவாதி. அவரைப்பற்றி நான் எழுதக்கூடாதா?” (‘அபுசி-தொபசி’- 15)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
கடைசியில் குரங்கு கையில் கொடுத்த பூமாலையாகிவிடுமோ, அரவிந்த கேஜ்ரிவாலிடம் கொடுத்த வெற்றி?
 
பா.ஜ.க. ஆட்சியமைக்க மறுத்துவிட்ட நிலையில், அடுத்த பெரிய கட்சியான ஆம் ஆத்மி கட்சியை கவர்னர் அழைக்கிறார்.  ஆனால் கேஜ்ரிவால் முதலில் மறுத்துவிட்டார். காங்கிரசோ, எப்பாடுபட்டாவது பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதைத் தடுத்து நிறுத்தியாகவேண்டும் என்ற ஒரே நோக்கோடு, தாங்கள் கேஜ்ரிவாலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரத் தயார் என்று அறிவித்துள்ளது. கெஞ்சினால் மிஞ்சுவது அரசியல்வாதிகளின் பண்பு. அதை இவ்வளவு விரைவில் கேஜ்ரிவால் கற்றுக்கொண்டிருப்பது ஆச்சரியமே! முதலில் தான் ஆட்சி அமைக்கப்போவதில்லை என்றார். இப்போதோ, ஒரு பெரிய பட்டியலைக் கொடுத்து, இதையெல்லாம் நிறைவேற்றினால் தான் உங்கள் ஆதரவை ஏற்றுக்கொண்டு ஆட்சி அமைப்பேன் என்று அடம் பிடிக்கிறார்.
 
அந்தப் பதினெட்டு நிபந்தனைகளையும் நிறைவேற்ற இன்னும் நூறு வருடங்களாவது பிடிக்கும் என்பது சுதந்திர இந்தியாவின்  கடந்த அறுபத்தாறு வருட சாதனைகளைக் கூர்ந்து கவனித்தால் புரியும்.  பாவம் காங்கிரஸ்! ஆம் ஆத்மி கட்சியின் வாசலில் நின்றுகொண்டு குழம்புகிறது- நாம் ஆதரவு கொடுக்க வந்தோமா, இல்லை கேட்க வந்தோமா என்று! டெக்கன் கிரானிக்கிள் (15-12-1013) பெங்களூர் பதிப்பில் வந்த கருத்துப்படம்.
 
புத்தகம்
வங்கி அதிகாரிகளில் சிறந்த எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் திரு சேது மாதவனும் ஒருவர். ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூரில் அவர் டிஜிஎம் ஆக இருந்தபோது (நான் பணியாற்றிக்கொண்டிருந்த) கார்ப்பொரேஷன் வங்கிக்கு ஜிஎம் ஆக டெபுடேஷனில் வந்தார். மூன்றாண்டுகள் இருந்தார் என்று நினைக்கிறேன். மலையாள இலக்கிய உலகில் இவரை ‘சேது’ என்கிற பிரபல நாவலாசிரியராக அறிவர். ‘அடையாளங்கள்’ என்ற மலையாள நாவலுக்காக 2007  இல் சாகித்ய அகாடெமி பரிசுபெற்றவர்.

இவரை எனது வங்கியின் தலைமை அலுவலகத்தில், ஒரு குளிரூட்டப்பட்ட தனியறையில்  நான் சந்திக்கவிருந்த வாரத்தில் இவரது சிறுகதையொன்று மலையாள மனோரமாவில் வந்திருந்தது. மூங்கிலாலான ஏணிகளுக்கு ஐந்தாம்படிக்கும் ஏழாம்படிக்கும் இடையில் ஆறாவதுபடி எப்போதும் இருப்பதில்லை யல்லவா, அது பற்றிய புனைகதை அது. அப்போதுதான் நான் மலையாளம் கற்றுக்கொண்டிருந்தேன். எனவே எளிமையாக எழுதப்பட்டிருந்த இக்கதையைப் படிப்பது சிரமமாயிருக்கவில்லை. கதையைப் படித்துவிட்டு அவருடன் விவாதித்தேன். தன் எழுத்தைப் படித்து ஆர்வத்துடன் விவாதிக்கும் வாசகனை எந்த எழுத்தாளருக்குத்தான் பிடிக்காது? அடுத்துப் பலமுறை அவருடன் அலுவலக நிகழ்வுகள்பற்றிப் பேச வாய்ப்பிருந்தும் இலக்கியம் பற்றிப் பேசும் வாய்ப்பு அதிகம் கிட்டவில்லை. (பிறகு அவர் தன் பணிக்காலம் முடிந்து ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூருக்கே சென்றுவிட்டார்.)
 
‘இனிய உதயம்’ மாத நாவலில் மொழிபெயர்ப்பாக வந்த  சேதுவின் ‘கையெழுத்து’, ‘ஒற்றையடிப்பாதைகள்’  என்ற இரண்டு கதைகளை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளது நக்கீரன்.(2009இல்). அதை அண்மையில் மறுவாசிப்பு செய்தேன்.
 


 கையெழுத்து’ ஒரு தொழிற்சங்கத் தலைவரைப் பற்றிய கதை. கம்பெனியின் முதலாளியைவிட அதில் பணிபுரிந்து தொழிற்சங்கத்தலைவனாகிய கே.ஆர்.கே அதிக ஈடுபாட்டோடு உழைத்தவர். கம்பெனியும் தன் சக தொழிலாளர்களும் தவிர வேறு சிந்தனையே இல்லாதவர். ஒரு கட்டத்தில் கம்பெனியின் பொருளாதாரம் சோர்ந்துபோகிறது. இவர்களின் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் குறையத் தொடங்குகிறார்கள். எனவே முதலாளிகள் தொழிலைக் கொஞ்சகாலத்துக்கு மூடிவிடக்கூடும் என்ற அச்சம் கே.ஆர்.கே.விற்கு உண்டாகிறது.  அதைச் செயல்படுத்தும் விதமாக முதலாளிகளின் துணையுடன் (முன்பு கே.ஆர்.கே. தலைமையில் துவங்கப்பட்ட)   சங்கத்தைப் பிளக்க முற்படுகிறார்கள். வயதாகி, தலைமைப் பதவியில் இருந்து விலகி நிற்கும் அவருக்கு இது பெருத்த வேதனையைக் கொடுக்கிறது. தற்போதைய தன் தோழர் ஒருவருடன் மனம் திறந்து பேசுகிறார்.

“உனக்குத் தெரியுமா எனக்கு இது ஒரு தொழில் அல்ல. இவ்வளவு காலப் பொதுத் தொண்டுக்குப் பிறகும், நான் இப்போதும் ஒரு வாடகைக் கட்டிடத்தில்தான் இருக்கிறேன். பலரின் விஷயங்களும் அப்படி இல்லையே! பலருக்கும் பல லாபங்கள் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக இடையில் அவ்வப்போது சர்வதேச மாநாடுகளில் பிரதிநிதியாகக் கலந்துகொள்வது...ஜெனிவாவிலோ, வியன்னாவிலோ, டோக்கியோவிலோ அது நடக்கலாம். அத்துடன் நீண்ட ஒரு கிழக்கு ஐரோப்பிய பயணம். பிள்ளைகளுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் நுழைய வாய்ப்பு உண்டாக்குதல்...குறைந்த பட்சம் ஒரு ஐந்தெட்டு முறைகளாவது உலகத்தைச் சுற்றிப்பார்க்காத ஏதாவதொரு பெரிய தொழிலாளர்களின் தலைவரை உன்னால் சுட்டிக் காட்ட முடியுமா? இந்த விஷயத்தில் எல்லா கட்சிகளும் ஒரே மாதிரிதான்  இருக்கின்றன. நான் பார்த்த மிகப்பெரிய வெளியூர் நகரம் எது என்று உனக்குத் தெரியுமா?  கல்கத்தா. அதுகூட கட்சியின் மாநாட்டிற்காகப் போனபோது நான் பார்த்ததுதான். அங்கிருந்து நான் வாங்கிக் கொண்டு வந்த பொருட்கள் – இரண்டு கதர் குர்தாக்கள், ஒரு ஜோடி செருப்பு ...பிறகு..என் தாய்க்கு ஒரு கம்பளிப் போர்வை”.

ஒரு வங்கியின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு தொழிற்சங்கவாதிகளை விமர்சிக்கும்படியான ஒரு எழுத்தை மேற்கொள்ளுவது அரிதான காரியம் அல்லவா? சேதுவுக்கு அது இயல்பாகவே கைவருகிறது.
 
‘ஒற்றையடிப்பாதைகள்’ என்பது சுமார் எண்பது பக்கமுள்ள கதை. வெகு நுட்பமான பாலியல் உணர்வுகளை நாசூக்காகக் கையாண்டிருக்கிறார் சேது. தி. ஜானகிராமன் தனது ‘அம்மா வந்தாள்’-இல் கையாண்டிருந்த எழுத்துத் தொழில்நுட்பத்தில் ஐம்பது சதம் இதில் தெரிகிறது. படித்துப் பார்க்கவேண்டிய கதை.

மொழிபெயர்ப்பாளர் சுரா நமது பாராட்டுக்குரியவர். (ஆனால் ஒரு பணிவான வேண்டுகோள்: அரசாங்கத் துறைகளில் புழங்கும் சில  சொற்றொடர்கள்  விளங்காதபோது அத்துறைகளில் பணிபுரிபவர்களிடம் சரியான அர்த்தத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு மொழிபெயர்ப்பது அவசியம்.)     

 நா.பார்த்தசாரதியின் 'பொன்விலங்கு'
இந்த வாரம் நான் மறுவாசிப்பு செய்த இன்னொரு காவியம், நா.பார்த்தசாரதியின் பொன்விலங்கு. ஒரு  காலத்தில் கல்கியில் தொடராக வந்தபோது கட்டம்கட்டி அருகில் ஒரு பொன்மொழியைப் போடுவார்களே, அதைத் தவறாமல் நோட்டுப்புத்தகத்தில் எழுதிவந்து (பள்ளியில்) அசெம்பிளியில் படிப்பதுண்டு. ஒவ்வொரு எழுத்தும் அட்சரலட்சம் பெரும் என்பார்களே அப்படிப்பட்ட எழுத்து.
 
அப்படியும் இப்படியுமா இரண்டு கோட்டை இழுத்து பொம்மை போடறவனுக்கு இவ்வளவு சம்பளமான்னு கேட்டாராம் பத்திரிக்கை முதலாளி. அதுதான் சமயமென்று பக்கத்திலிருந்து ஒருவன் ‘இத்தனை சம்பளம் போதாதுன்னு திமிர் பிடிச்ச ஆளாகவும் வேறு வந்து சேர்ந்திருக்கிறான்’ என்று சொன்னானாம். அதனால் கோபித்துக்கொண்டு வெளியேறிவிடுகிறான் ஓவியன்  குமரப்பன்.

“ஒரு தொழிலை நாம் செய்கிறபோது அந்தத் தொழிலைப் பற்றி முதலில் நமக்கு ஒரு சுயமரியாதை வேணும். இல்லாவிட்டால் அதை நாம் நாணயத்தோடு செய்யமுடியாது. அந்தச் சுயகௌரவத்தைகூடப் புரிந்து கொள்ளாத இடத்திலிருந்து குப்பை கொட்டுவதைவிட நடந்துகாட்டிவிடுவது மேல் என்று நடையைக் கட்டிவிட்டேன்...” என்கிறான் குமரப்பன்.

“நம்முடைய உணர்ச்சிகளின் நியாயத்தையும் மானத்தையும் புறக்கணித்துவிட்டு நம்மை அடக்கி ஓடுக்கி ஆளவிரும்புகிறவர்களுடைய உணர்ச்சிகளின் அநியாயத்துக்கும் அவமானத்துக்கும் பண்டமாகிறபோதெல்லாம் நாம் நிச்சயமாகத் தளைப்படுகிறோம் என்பதில் சந்தேகமே இல்லை. தளையிலிருந்து விடுபட்டு வந்துவிட்டதாகத்தான் உணர்கிறேன்...” என்று மேலும் விளக்குகிறான்.
 
எடுத்தால் முடிக்காமல் விட முடியாத நூல்களுள் ஒன்று, பொன்விலங்கு.

சினிமா & தொலைக்காட்சி
நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்த வாரம்தான்  மங்களூருக்குப் போகவேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த நாலு வருடங்களில் ஊர் நன்கு முன்னேறியிருந்தது – விலைவாசியில்! (ஆனால் கொட்டையுள்ள கருப்பு திராட்சை கிலோ முப்பதே ரூபாய்க்குக் கிடைத்தது.)

சனிக்கிழமை மாலையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பகல் வரை  ஓட்டல் அறையில் தனியாக அமர்ந்து (படுத்துக்கொண்டு?) தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்க முடிந்தது. மலையாள ஒளிபரப்பான ‘கைரளி’ தொலைக்காட்சியில் ஓர் அழகிய முகம் தெரிந்தது. பத்மப்ரியா என்ற நடிகையின் பேட்டியாம். ‘பொக்கிஷம்’ என்ற தமிழ்ப் படத்தில்கூட  நடித்திருக்கிறாராம். தாய்மொழி மலையாளம். ஆனால் பிறந்தது பஞ்சாபில். அருமையான மலையாளத்தில் கிளிகொஞ்சும் வார்த்தைகள்.
 
நிறைய மலையாளப்படங்களில் நடித்திருந்தும் பத்மப்ரியாவுக்கு ஒரு பெரிய மனக்குறை இருக்கிறதாம். தன்னை ரொமான்ட்டிக் பாத்திரங்களில் நடிக்க வைப்பதில்லையாம். ரொமான்ட்டிக் படங்களில் நடிக்கக் கூப்பிடுவதில்லையாம். இப்படிப்பட்ட அழகான, அறிவுள்ள, இளமை ததும்பும் கதாநாயகியை இப்படிக் கொடுமைப்படுத்தாலாமா, மலையாள இயக்குனர்களே? 

 பாருங்கள், பத்மப்ரியாவின் சில முகபாவங்களை! சீக்கிரம் ஆவன செய்யுங்கள். (இல்லையேல் தமிழ்நாட்டில் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை மறக்கவேண்டாம்! இங்கு மலையாளப் பெண்குட்டிகளுக்கு ராஜபோகமான வரவேற்பு தரப்படுவதை யார் மறுக்க முடியும்?)
பத்திரிகை
மங்களூரில் இருந்தபோது மாறுதலுக்காக ஒரு கன்னட மாத இதழ் வாங்கினேன். 2013 டிசம்பர்  மாதத்திய ‘மயூரா’ என்ற இலக்கிய இதழ். தரத்தில் ‘கலைமகளு’க்கு ஒப்பிடலாம். 160 பக்கங்கள், விலை பன்னிரண்டே ரூபாய்!



பிரபல மலையாள நாவலாசிரியரான வைக்கம் முகமது பஷீரின் வாழ்க்கை வரலாற்றை அவரது மனைவி ஒரு கதை மாதிரி எழுதியிருக்கிறார். பஷீருடைய ‘இவளே’ என்ற தலைப்பில், மலையாளத்தில். என்.எ.எம். இஸ்மாயில் என்பவரால் அந்நூலின் சில பகுதிகள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அதன் முதல் பகுதி இம்மாதம் வெளியாகியுள்ளது. ஜனரஞ்சகமான மொழிபெயர்ப்பு. கன்னடத்தில் படிக்கும்போதே சுவை நெஞ்சைத்தொட்டது. ஒரிஜினல் மலையாளத்தில் படித்தால் எப்படியிருக்குமோ? ('காலச்சுவடு'க்காரர்கள் தமிழில் கொண்டுவராமலா போவார்கள்?)  
பஷீரின் மனைவி எழுதுகிறார்: (கன்னடத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு என்னுடையது).
 
பெண்வாசனை என்றால் பஷீருக்கு மிகவும் பிடிக்கும். பெண்ணாகப் பிறந்த எல்லோர்மீதும்  அவர் அளவின்றிப் பிரியம்கொண்டிருந்தார். ஆனால் அதற்கு  வேறெந்த நோக்கமும்  இருக்கவில்லை. பெண்ணிடம்தான் நல்லகுணங்கள் அதிகம் உண்டு என்று அவர் ஏனோ கருதினார். ஒருதடவை நான் அவரிடம் சொன்னேன்: “நான் எதோ ஒன்று எழுதப்போகிறேன்”.
“என்னது? உனக்கு எழுத வருமா?”

அவர் அப்படிக் கேட்டதில் அர்த்தம் உண்டு. எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் எல்லாருக்குமே இலக்கியம் படைப்பது சாத்தியமாகிவிடுவதில்லை. இதுபற்றி அவரே பலமுறை கூறியிருக்கிறார்.
“என் கணவர் பெரிய இலக்கியவாதி. அவரைப்பற்றி நான் எழுதப்போகிறேன்.  ஏன், நான் எழுதக்கூடாதா?”
“இவளே” என்று சத்தமிட்டுச் சிரித்தபடி சொன்னார் பஷீர்: “நீ எழுதப்போவது இலக்கியமல்ல, அது ஒரு சுலைமானி! (‘சுலைமானி’ என்றால் பால் கலக்காத தேநீர்.) ஃபிளாஸ்க் நிறைய உன்னுடைய சுலைமானி இலக்கியத்தை நிரப்பிக்கொண்டுவந்து  தா! அவ்வப்பொழுது நான் குடித்து இளைப்பாறுகிறேன்”.
***
பஷீருடன் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன். இது சாதாரணமான வாழ்க்கையில்லை. மலையாளத்தின் மாபெரும் எழுத்தாளரின் வாழ்க்கைத்துணைவி நான் என்று உள்ளுக்குள் கர்வம்  கொண்டதும் உண்டு. ஆனால் இத்தகைய கர்வங்களுக்கு அவரது வாழ்க்கையில் வாய்ப்பே  இருக்கவில்லை. ‘நான், நம்மவர்கள்’ என்று அவர் ஒருபோதும் எண்ணியவரே அல்லர். புகழ்பெறவேண்டும் என்ற ஆசையில் அவர் எதுவும் செய்ததில்லை. யாரையும் அழைக்கவுமில்லை. ஆனால் அவர் செய்யும் எல்லாக் காரியங்களும் புகழ்பெறவே செய்தன. அவருடைய எழுத்துக்களை வாசித்த ஒவ்வொருவரும் அவ்வெழுத்தாளரைப் பேட்டி காணவேண்டுமென்று விரும்பினர். இவ்வாறு வாசகர்கள் கூட்டம் கூட்டமாகப் பேட்டி காணவருவது வேறெந்த எழுத்தாளருக்காவது நடந்திருக்கக்கூடுமா? வைலோலி கிராமத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் தங்கள் பிரியமான படைப்பாளியை வாசகர்கள் சந்திக்க முடிந்ததே! பஷீர் யாரையும் எப்போதும் காக்கவைத்தவர் இல்லை.
 
மங்குஸ்தான் மரநிழலில் அமர்ந்துகொண்டு தம்மைப் பார்க்கவந்து போவோரின் வயதையோ பின்னணியையோ கவனிக்காது  தன்பாட்டுக்குப் பேசிக்கொண்டிருப்பார் பஷீர். அவரோடு பேசிக் கொண்டிருந்தவற்றை யெல்லாம் தொகுத்திருந்தால் அதுவே ஒரு பெரிய புத்தகமாகியிருக்குமோ என்னவோ! அவர் என்னவெல்லாம் பேசிக்கொண்டிருப்பார் – கடவுள், மரம், மனிதர்கள், காதல், அரசியல், கலை, அறம், சின்னச்சின்ன ஆற்றாமைகள் என்றபடி உலகின் எல்லா விஷயங்களைப் பற்றியும் தன்னைச் சந்திக்க வந்தவர்களுடன்  பேசிக்கொண்டிருப்பார். அவர் அப்படி மங்குஸ்தான் மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில்  அங்குதானே நடமாடிக்கொண்டிருப்பேன் நான்! அப்போதெல்லாம் என் மனதில் மூண்டெழுந்த கேள்வி ஒன்றே தான்: இவ்வுலகில்  இதற்கு முன் இப்படிப்பட்ட ஒருவர்  இருந்திருக்கக்கூடுமா? ஒரு மரத்தின் வேரில் அமர்ந்துகொண்டு, வந்தவர்களுக்கெல்லாம் ‘சுலைமானி’யை ஊற்றிக்கொடுத்தபடி, கதைகளை எழுதிக்கொண்டிருந்ததும், பல வருடங்களாக அதே மரத்தடியில் அமர்ந்து கதை சொல்லிக்கொண்டிருந்ததும் அந்த ஒருவரே! இடையிடையே என்னை அழைப்பார் “இவளே!’ என்று.
ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம். போதுமல்லவா?

சிரிப்பு
‘பஜனைக்கு பக்தர்கள் முக்கியம். அதைவிட சுண்டல் முக்கியம்’ என்ற ஒரு கருத்து பரவலாக பழங்காலத்தில் இருந்து வந்தது. ஆனால், தற்சமயம் பெரிய பெரிய மண்டபங்களில், ஹால்களில், அரங்குகளில், பஜனை நடப்பதால் யாரும் சுண்டலுக்கு முக்கியத்துவம் தருவதில்லை..
 
நமது முன்னோர் பழக்கவழக்கம் என்னவென்றால் எந்த ஒரு பகவத் ஆராதனை என்றாலும் முடிவில் பிரசாதம் என்று சிறிதளவாவது வழங்கவேண்டும். தற்காலத்தில் அவரவர் வசதிக்கும் ருசிக்கும் தக்கபடி பஜனை அரங்கத்தில் இருக்கும் கேண்டீனில் புகுந்து புறப்பட்டுக்கொள்கிறார்கள்.

பஜனைப் பாடகர்கள் பக்தி சிரத்தையாகப் பாடினாலும், கேட்டு ரசிக்கும் பக்தர்களுக்கு அவர்களது பக்தியைக் குறைப்பது போல தொண்டையில் வெண்பொங்கல் நெய்ருசியும் ஓம்காரத்துக்குப் பதில் மிளகுக்காரமுமே சஞ்சரித்துக் கொண்டிருக்கும்....

“சீதாப்பாட்டி-அப்புசாமி புகழ் பாக்கியம் ராமசாமியின் சிரிப்பும் சிந்தனையும்” என்ற நூலிலிருந்து. (பக்கம் 22) வானதி பதிப்பகம் வெளியீடு. நவம்பர் 2012.    88 பக்கம் ஐம்பது ரூபாய்.

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com

குறிப்பு : இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.

திங்கள், டிசம்பர் 09, 2013

இளையராஜாவின் மூன்று அறிவுரைகளும் அரவிந்த் கேஜ்ரிவாலின் வெற்றியும் ( ‘அபுசி-தொபசி’- 14)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
இதை எழுதிக்கொண்டிருக்கும்போது இந்தியாவில் நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் வந்தவண்ணம் இருக்கின்றன. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் சத்திஸ்கார் மூன்றிலும் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றியைக் கண்டிருக்கிறது. டில்லியில் காங்கிரஸ் அடியோடு அழிக்கப்பட்டுவிட்டது. எழுபதில் எட்டே எட்டுதான்! அங்கு பா.ஜ.க.ஆட்சி அமைக்கப்போகிறது என்றாலும் அதுவல்ல செய்தி.  31 இடங்களைப் பெற்ற பா.ஜ.க.வை இடித்து நெருக்கிக்கொண்டு 29 இடங்களைப் பெற்று அதன் அடுத்த பெரும் கட்சியாக எழும்பியிருக்கும் ‘பொதுமக்கள் கட்சி’ யின் (ஆம் ஆத்மி பார்ட்டி) மகத்தான வெற்றிதான் தலைப்புச் செய்தியாகும்.
 
இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று அரசியல்வாதிகள் பெருமையாகச் சொல்லிக்கொள்வர், தேர்தல் நேரம் தவிர! ஏனெனில் தேர்தலின் போது பண நாயகத்தின் ஆட்சிதானே நடைபெறும்! நாட்டுநலனில் அக்கறைகொண்டு தியாக உணர்வுடன் ஒரு புதிய தலைமுறை வீறுகொண்டு எழுந்து புதிதாகக் கட்சி துவங்கித் தேர்தலில் போட்டியிடுகிறது என்றவுடன் எத்தனை பேர் அதை ஏளனமாகப் பார்த்தார்கள்! தலையில் காந்தி குல்லாயுடன் அரவிந்த கேஜ்ரிவால் (தமது சின்னமான) துடைப்பக்கட்டை ஏந்தி தில்லிநகரில் வலம்வந்தபோது ஊடகங்களைத்தவிர வேறு எந்த அரசியல் நோக்கர்களும் அவரைச் சட்டை செய்யவில்லையே!

பிற கட்சிகளோ ஆரம்பத்தில் அவரைப் புழுமாதிரி எண்ணினாலும் தேர்தல்நாள் நெருங்க நெருங்க அச்சம்கொள்ள ஆரம்பித்தன. அவருக்கு வெளிநாட்டுப் பணம் வருகிறது என்று பிதற்ற ஆரம்பித்தன. முதுபெரும் தாத்தா அன்னா ஹஜாரேயும் கேஜ்ரிவாலிடமிருந்து தன்னைத் தூரப்படுத்திக்கொண்டார். காங்கிரசின் சக்திவாய்ந்த  ஏஜெண்ட்டான சி.பி.ஐ.யும், தில்லியில் எப்போதுமே சக்திமிக்கதான  பா.ஜ.க.வின் காவிப்படையும் கண்ணில் விளக்கெண்ணெய்   ஊற்றிக்கொண்டு 'பொதுமக்கள் கட்சி'யைக் கண்காணித்தபடி இருந்தன. எல்லாத்  தடங்கல்களையும் மீறி அக்கட்சி மூன்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வென்றிருக்கிறது. இந்திய ஜனநாயகத்தில் இது இரண்டாவது மாபெரும் சாதனை. வாக்களித்தவர்களுக்கு நமது பாராட்டுக்கள்.

முதலாவது அத்தகைய சாதனை, தமிழ்நாட்டில் விஜயகாந்த் புதுக்கட்சி ஆரம்பித்து, ‘ஒரே குட்டையில் ஊறிய’ அந்த  இரண்டு ‘மட்டைகளையும்’  ஒதுக்கிவிட்டு, தன்னந்தனியாகத் தேர்தலில்  நின்று, மக்கள் மூன்றாவது சக்தியை ஆதரிக்க முன்வருவார்கள் என்ற நம்பிக்கையை நிரூபித்துக்காட்டியது. ஆனால் உள்நோக்கம் கொண்ட ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்ட அவரது  தனிப்பட்ட பலவீனங்களும், மெருகேற்றப்படாத தலைமைப்பண்புகளும் முன்னெழுந்து, மிகப்பெரும் அளவில் சட்டமன்றத் தொகுதிகளில் வென்றிருந்தும், அவ்வுறுப்பினர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியாத நிலை உருவாகி, விஜயகாந்த் இன்று அரசியல் நோக்கர்களின் ஏளனத்திற்கும், வாக்களித்த மக்களின் அவநம்பிக்கைக்கும்  உரியவராகி இருக்கிறார்.
 
இந்த அபாயம் அரவிந்த கேஜ்ரிவாலுக்கு நிச்சயம் இல்லை. அது மட்டுமன்றி, அவரது ஆதரவாளர்களும் வாக்களித்தவர்களும் சினிமா ரசிகர்கள் இல்லை, தேர்ந்த உலகியல் ஞானம் கொண்ட நடுத்தர மக்களாவர். எனவே இந்த வலிமையை முன்னெடுத்துச் சென்று இந்திய அரசியலில் புதியதொரு அத்தியாயம் படைக்க அவர் முன்வரவேண்டும். பகுத்தறிவுள்ள அனைவரும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும்.
கடைசியாக வந்த செய்தி: தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு காங்கிரஸ் உறுப்பினர்களில் சிலர் ‘பொதுமக்கள் கட்சி’க்கு ஆதரவளித்து அதை ஆளும்கட்சியாகக் கொண்டுவர உதவுவார்கள் என்று தெரிகிறது. இது நடந்தால் பா.ஜ.க.வின் ஆட்சிக்கனவும் தகர்ந்து போகும். பாவம் ஷீலா தீட்சித் அம்மையார்! பாவம் மோடி!
 
Moral of the Story:  இன்று காங்கிரசுக்கு மாற்று, பா.ஜ.க. தான் என்று மக்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். அதே சமயம், காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுக்கும் மாற்றாக மூன்றாவது ஒரு சக்தி, நேர்மையும் தூய்மையும் கொண்டவர்களால் முன்னிறுத்தப்ப்படுமானால், அதை ஆதரிக்கத்  தயார் நிலையில் இருக்கிறார்கள் மக்கள் என்பது கேஜ்ரிவாலின் வெற்றியிலிருந்து உறுதியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் அந்த மூன்றாவது சக்தியாக நிற்கப்போவது யார்?
 
புத்தகம்
ஏற்கெனவே குமுதத்தில் தொடராக வந்தது தான், நீங்கள் படித்திருக்கவும் கூடும், சென்ற வருடமே புத்தகமாக வந்துவிட்டது,  இளையராஜாவின் ‘பால்நிலாப் பாதை’. ( 208  பக்கம், ரூபாய்  125, குமுதம் வெளியீடு).
 
குமுதம் நிருபர் யாரோதான்  ghost-writing செய்திருக்கவேண்டும். இளையராஜா சொல்லச்சொல்ல மனிதர் அட்டகாசமாக எழுதியிருக்கிறார் போலும். (வாழ்க!). படிக்கும்போதே இளையராஜா அனுபவித்த இன்னல்கள், துயரங்கள் இவற்றைமீறி அவருடைய ஒவ்வொரு இதயத்துடிப்பையும் நீங்கள் உணரமுடியும்படியான எழுத்து.

அதிகம்பேர் படித்துவிட்டிருப்பீர்கள் என்பதால் இதில் இடம்பெற்றுள்ள இளையராஜாவின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் எதையும் நான் எடுத்துக்காட்டப்போவதில்லை. இளைஞர்களுக்கு மிகவும் பயன்படத்தக்க அவரின் மூன்று அறிவுரைகளை மட்டுமே இங்கு பார்க்கலாம். இவ்வறிவுரைகளைத் தருவதற்கு இளையாராஜவுக்குத் தார்மீகத் தகுதி உண்டு என்பதை எவரும் ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்!

(1)    உங்களைச் சுற்றி இருக்கும் எதுவும் உங்களால் உருவாக்கப்படவில்லை. தன்னால் அமைந்தது. அது உங்களுக்கு விதிக்கப்பட்டது. அதனால், இருக்கும் சூழ்நிலையை மாற்றிக்கொள்ள முயல்வதைவிட, மனத்தின் எதிர்பார்ப்புகளைத் தொடர்ந்து சென்று, அழியாது, மனதை நல்ல நிலையில் அலைக்காது வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது! அது வாழ்க்கையில் நாம் எந்த இடத்தில், எந்த நிலையில் இருந்தாலும், சிறு அளவும் நம்மைப் பாதிக்காது.
(2)    சோர்வு – மனிதனுக்கு முதல் எதிரி. அது வெளியில் இல்லை! நமக்குள்ளே இருக்குமதை நாமே அழிக்கவேண்டும்.
(3)    கிடைத்ததை வைத்துத் திருப்திப்படும் சமமான மனநிலை வேண்டும்! அது எப்போதும் நமக்கு மகிழ்வைத் தரும். ஏன்? அந்த மனநிலையை உடையவர்கள் சந்தோஷக் கர்வம் கொண்டு மார்பு தட்டிகொள்ளலாம்! ஏனெனில், கிடைத்தது போதும் என்ற திருப்தி வந்துவிட்டால், அவர்கள் இறைவனைக்கூட வேண்டிபெறுவது ஒன்றுமில்லையல்லவா? (பக்கம்  98-99).
 
 இளைராஜாவை இசைஞானி என்று சொன்னதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அவரிடம் இசை இருக்கிறது. ஞானமும் இருக்கிறது.
 
சினிமா & தொலைக்காட்சி

முரசு’ தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சூப்பர் சிங்கரில் இக்கால மாணவர்கள் பாடுவதற்கேற்ற பழைய பாடல்களாகத் தேர்ந்தெடுத்து  ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். ஒரு சுவையான பாடல் வந்தது.
 
எம் எஸ் விஸ்வநாதன் உற்சாகமான நடுத்தர வயதினராக கோட் சூட் அணிந்து இரண்டு கைகளையும் நொடிக்கொருமுறை அசைத்தபடி தன் குழுவினரோடு பாடல் இசைக்கும் காட்சியை அப்படியே படமாக்கியிருக்கும் “அவளுக்கென்ன அழகிய முகம்” பாடல் (படம்: ‘சர்வர் சுந்தரம்’). இசைக்கருவிகளை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு ஆனந்தம்! தங்கள் முகங்களையும் திரையில் காண்பிக்கப்போகிறார்கள் என்ற அளப்பரிய ஆனந்தம்! ஆனால் அவர்களின் பெயர்களை அடையாளம் சொல்ல இன்று யாரும் இல்லையே! (பெரியவர் பிலிம்நியூஸ் ஆனந்தன்?)

பத்திரிகை
கீழே உள்ள படத்தைப் பாருங்கள்! சுதந்திரம் அடைந்து அறுபத்தாறு ஆண்டுகள் ஆகியும் நமது வீட்டுப் பெண்கள் எதற்காகவேனும் கியூவில் நிற்பதை நம்மால் தவிர்க்க முடியவில்லையே! காஞ்சிபுரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
இவர்கள் எல்லாம் நிற்பது அரிசி வாங்கவோ, பருப்பு வாங்கவோ, மண்ணெண்ணெய் வாங்கவோ அல்ல நண்பர்களே, மணல் வாங்கத்தானாம்! வீடுகட்ட ஆற்றுமணல் வாங்குவதற்காக ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு நிற்கிறார்கள். தினமலர் 03-12-2013 தேதியிட்ட காஞ்சிபுரம் இணைப்பில் இடம்பெற்ற படம். (அது சரி, நீங்கள் வீடு கட்டிவிட்டீர்களா?)

சிரிப்பு
மனைவி: நேத்திக்கு மவுனவிரதம் இருந்தீங்களே, எதுக்கு?
கணவன்: மறந்துட்டியா, நேத்திக்கு தானே நம்ம கல்யாண நாள்!
          (நன்றி- தினமலர்- வாரமலர்  08-12-2013  பக்கம் 22)

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com

குறிப்பு : இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.