திங்கள், நவம்பர் 04, 2013

விசிறி சாமியாரும் நானும் (அல்லது) தமிழ் ‘இந்து’வின் தலை தீபாவளி ( ‘அபுசி-தொபசி’- 9)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொள்ளக் கூடாது என்று காங்கிரசல்லாத கட்சிகள் (அதாவது தமிழ்நாட்டில் கலைஞர்) முழக்கமிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், வேறு யாராவது அமைச்சரை அனுப்பிவிடக்கூடும் என்று தெரிகிறது. உள்ளூர் அரசியல் வேறு, சர்வதேசிய அரசியல் கடமைப்படுகள் வேறு என்பது கலைஞருக்குத் தெரியாதா என்ன?  வயதான காலத்தில் 2-ஜி யும் அழகிரியும் கொடுக்கும் தொந்தரவுகளைத் திசைதிருப்ப அவருக்கு வேறு என்னதான் வழி, சொல்லுங்கள்?  தமிழர்களை இனியாவது இனப்படுகொலைகளிலிருந்து காப்பாற்றவேண்டிய தார்மிகக் கடமை ஒருபுறமும், அதே சமயம், இந்துமாக்கடலில் பெருகிவரும் சீன ஆதிக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும்வகையில் இலங்கையை வெகுவாக அனுசரித்துப் போகவேண்டிய கட்டாயமுமாக இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் மன்மோகன் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.  

புத்தகம்

தீபாவளி மலர் என்றாலே விகடன், கல்கி, கலைமகள், அமுதசுரபி, தினமணி, தினகரன் ஆகிய ஆறு தான் நினைவுக்கு வரும். இப்போது தமிழ் ‘இந்து’வும் சேர்ந்துகொண்டிருக்கிறது. விகடனை வீழ்த்திவிடத் திட்டம்போட்டுக் காய் நகர்த்தியிருக்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள் எனலாம். இந்துவுக்கு இது தலை தீபாவளி வேறு. உற்சாகத்திற்குக் கேட்கவா வேண்டும்? ஏழு கதைகள், 10 கவிதைகள், 33 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

கட்டுரைகள் ஆன்மிகம், பெண்கள், சினிமா, வாழ்வு இனிது, உயிர்மூச்சு என்ற தலைப்புகளில் அமைந்துள்ளன. இஃதன்றியும் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு சிறப்பான தலம்/பொருள் என்று 29 ஒருபக்கக் கட்டுரைகளும், 'புத்தாயிரத்தின் நட்சத்திரங்கள்' என்ற தலைப்பில் வளர்ந்து வரும் சினிமா நடிகர்-நடிகைகள் இருபது பேர் பற்றிய அரைப்பக்கப் புகைப்படத்தகவல்களும், 'புத்தாயிரத்தின் படைப்பாளிகள்' என்ற தலைப்பில் வளர்ந்துவரும் சாதனை படைத்த சினிமா இயக்குனர்கள் 9 பேர் பற்றிய ஒருபக்கக் கட்டுரைகளும் இம்மலரின் சிறப்பு அம்சங்களாகும்.

(எனது ஒரே வருத்தம், எனது ஊரான இராணிப்பேட்டைக்கு அருகில் ஆற்காட்டில் அமைந்துள்ள ‘டில்லி கேட்(Gate) என்னும் ஆற்காட்டு நவாபின் கோட்டை பற்றிய செய்தியில் அதன் படத்தை வெளியிடாமல்போனார்களே என்பது தான்.)  

‘விசிறி சாமியார்’ என்று அழைக்கப்பட்ட திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் அவர்களைப்பற்றி பாலகுமாரன் எழுதியுள்ள கட்டுரையைக் குறிப்பிட்டாகவேண்டும்.

பாலகுமாரன், விசிறி சாமியாரின் அணுக்கத்தொண்டர் என்பது நாம் அறிந்ததே. குருவைப்பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் நெஞ்சம் நிரம்பிய உணர்ச்சி வெள்ளத்தில் நம்மை மூழ்கடித்துவிடுகிறார். ஒருமுறை அவரைச் சந்திக்கப் பாலகுமாரன் சென்றிருந்தபோது, அவர் கூறினாராம்: “பால்குமார்! இந்தப் பிச்சைக்காரன் குளிப்பதில்லை. மாற்று உடைகள் உடுத்துவதில்லை. நகங்களை வெட்டுவதில்லை. தலையைச் சீர்செய்துகொள்வதில்லை. ஆனாலும் இந்தப் பிச்சைக்காரனை நோக்கி மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். இந்தப் பிச்சைக்காரன் சிகரெட் குடிக்கிறான். ஆனால் நாற்றமே எடுப்பதில்லை என்று இங்கே வருகிற ஜனங்கள் சொல்கிறார்கள். பாலகுமார், இது பற்றி இந்தப் பிச்சைக்காரனுக்கு ஒன்றும் தெரியாது. எல்லாம் என் அப்பாவின் அருள். எனவே, நாம் இருவரும் பேசவேண்டாம். சிகரெட் குடிப்போம்” என்று உட்காரவைத்தாராம்.

இதை படித்துக்கொண்டிருக்கும்பொழுது, முதன்முதலில் விசிறி சாமியாரை நான் சந்திக்க நேர்ந்த சந்தர்ப்பம் ஓடிவந்து ‘என்னைப் பற்றி எழுது’ என்றது.  

அது 1986-87இல் ஏதோ ஒரு நாள். திருவண்ணாமலை நகர எல்லைக்குச் சற்றே அப்பால் ஒரு கிராமத்தில் அப்போதுதான் துவக்கப்பட்டிருந்த எங்கள் வங்கிக் கிளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு ஆவனசெய்யும்பொருட்டு  மண்டல மேலாளர் கிளம்பியபோது, சென்னையிலிருந்து என்னையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார். காலையில் ஏழுமணி சுமாருக்குத் திருவண்ணாமலை  போய்ச் சேர்ந்தோம். 

உள்ளூர் வங்கியின் மேலாளர் எங்களை முதலில் இரமணாசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். காலை உணவாக ஒரு இட்டிலியும் ஒரு வாழைப்பழமும் (‘சாத்விக உணவு’) தந்து உபசரித்து, ஆசிரமத்தைச் சுற்றிக்காட்டினார்கள். பிறகு அவர்களின் வங்கித் தேவைகளைப் பற்றி ஒருமணிநேரம் உரையாடினார்கள். வெளியே வந்தபோது பசியெடுத்தது. உள்ளூர் மேலாளரோ சாப்பிட நேரமில்லை என்றார். மண்டல மேலாளர் சற்றுக் கோபத்துடன் அவரை ஏறிட்டுப் பார்த்தார். “விசிறி சாமியார் என்று ஒருவர் இந்த ஊருக்கு வந்திருக்கிறார். நேற்றுத்தான் இளையாராஜா வந்து பார்த்துவிட்டுப்போனாராம். அவரைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். அதை முதலில் கவனிக்கலாமா?” என்றார்.

அப்போது விசிறி சாமியார் அவ்வளவு பிரபலமாகாத நேரம். சன்னதித் தெருவில் ஒரு பழைய வீட்டில் அவர் குடியிருந்தார். “வாசல் கதவு எப்போதும் மூடியே இருக்கும். மணிக்கொரு முறை கதவைத் திறந்து பார்ப்பார். அப்போது யார் கண்ணில் படுகிறார்களோ அவர்களை உள்ளே வரச் சொல்வார்” என்றார் உள்ளூர் மேலாளர். ஆன்மிகவாதிகள் என்றாலே சாமான்யர்களுக்கு பக்தி கலந்த எதிர்பார்ப்பு உண்டல்லவா? சரியென்று போனோம்.

பதினைந்து நிமிடங்கள் காத்திருந்தபிறகு கதவு திறந்தது. கையில் விசிறியுடன், நீண்ட தாடி, தலைப்பாகை, அழுக்கான பஞ்சகச்ச உடையின் மேல் சிவப்பு சால்வை போர்த்தியவண்ணம் ஒருவர் வந்தார். தெருவில் இருந்த எல்லாரும் சாமி, நமஸ்காரம் என்றார்கள். அவர் யாரையும் குறிப்பாகக் கவனிக்காமல் புன்னகைத்தார். பின் விரல்களை மடித்து சிகரெட்டை ஓர் இழு இழுத்தார். பின் உள்ளூர் மேலாளரைப் பார்த்து, “So, you have brought your Regional Manager to meet this Beggar?” என்று பெருத்த குரலில் சிரித்தார். விசிறி சாமியார் தன்னை எப்பொழுதும் ‘பிச்சைக்காரன்’ என்றும், கடவுளை ‘மை ஃபாதர்’ என்றும் குறிப்பிடுவார் என்று அப்போதுதான் தெரிந்தது. உள்ளே வரச்சொல்லி சைகை காட்டினார். நாங்கள் மூவரும் நுழைந்தவுடன் கதவைச் சாத்திவிட்டார்.

“Please sit down” என்றார். எப்படி உட்காருவது என்று புரியாமல் திகைத்தோம். ஏனெனில் அந்த வீட்டில் ஒரு நீண்ட தாழ்வாரம் மட்டுமே தெரிந்தது. அதில் அவர் உட்கார்ந்தார். தரை முழுதும் சற்றும் இடைவெளியின்றி, அணைந்த சிகரெட் துண்டுகள் எங்கு பார்த்தாலும் இரைந்து  கிடந்தன. ஏராளமான வாழைப்பழத்தோல்கள் பல நாட்களாக அகற்றப்படாமல் கிடந்ததால்  தரை பிசிபிசுக்குப்பட்டிருந்தது. கொட்டங்கச்சிகள் (‘சிரட்டை’) நிறைய சிதறிக்கிடந்தன. அவற்றில் பால் வழிந்துகொண்டிருந்தது. எறும்புகள் மேய்ந்துகொண்டிருந்தன. ஒரு பூனையா நாயோ ஒரு மூலையில் அமைதியாகப் படுத்திருந்ததாக நினைவு. தரையில் பாயோ வேறு அமர்வதற்கான ஆசனங்களோ இருக்கவில்லை. சூழ்நிலை ஒருமாதிரியாக இருந்ததால் மூவரும் அதிர்ச்சியும் வியப்புமாக அடுத்து என்ன நிகழப்போகிறதோ என்று நின்றுகொண்டே இருந்தோம்.

பேச்சு ஆங்கிலத்திலேயே தொடர்ந்தது. (விசிறி சாமியாருக்குத் தமிழ் தெரியாது). வங்கியைப் பற்றிக் கேட்டார். சொன்னோம். “இந்தப் பிச்சைக்காரனுக்கு வங்கிக் கணக்குகள் கிடையாது” என்று சிரித்தார். ‘உங்கள் உள்ளூர் மேலாளருக்கு ஏதோ தொந்தரவு இருக்கும்போலிருக்கிறதே, கொஞ்சம் கவனிக்கக் கூடாதா?’ என்றார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத மண்டலமேலாளர் கண்ணில் சினத்தோடு என் பக்கம் திரும்பினார். ‘இவன் என்ன, தனது பெர்சனல் விஷயத்திற்காக இவரிடம் சிபாரிசுக்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டானா?’ என்று கண்ணாலேயே கேட்டார். நானும் ‘பொறுங்கள்’ என்று கண்ணாலேயே பதில் கூறினேன். சாமியார் ஆளுக்கொரு வாழைப்பழம் பிரசாதமாக வழங்கினார். அதை அங்கேயே உரித்துச் சாப்பிடச் சொன்னார். தோலைத் தானே வாங்கி அங்கேயே வீசி எறிந்தார்.  ஒரு கொட்டங்கச்சியில் பாலை ஊற்றி ஓசையுடன் குடித்தார். பிறகு நாங்கள் இருப்பதையே மறந்தவராக அங்கிருந்த அணைந்து போன சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டார். உள்ளூர் மேலாளர் அதன் உட்குறிப்பைப் புரிந்துகொண்டவராக, ‘நாம் போகலாம்’ என்றார். வெளியே வந்தோம்.

நான் ‘சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்ற கோட்பாட்டைப் பின்பற்றுபவன். ஆன்மிகவாதிகளைப் புரிந்துகொள்வது சாமானியர்களின் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட விஷயம் என்பதில் எனக்கு மரியாதை உண்டு. எனவே விசிறி சாமியாரை மனத்தால் வணங்கிவிட்டு வெளியே வந்தேன். வாசலில் ஒருவர் சாமியார் படம்போட்ட கேலண்டர் கொடுத்தார். வாங்கிக்கொண்டோம். மண்டல மேலாளர் மட்டும் கோபத்துடனே இருந்தது புரிந்தது. உள்ளூர் மேலாளரிடம் முகம்கொடுத்தே பேசவில்லை. விசிறி சாமியாரைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அவர் உண்மையில் ஆன்மிகவாதியாக இருப்பின், ஒரு தனி நபரின் விஷயத்திற்குச் சிபாரிசு செய்தது சரியா என்ற கேள்வியும் அவர் மனதில் எழுந்திருக்க வேண்டும். இப்போது பசி இன்னும் அதிகரித்துவிட்டபடியால் அருகிலிருந்த ஓட்டலுக்குப் போனோம்.

உள்ளூர் மேலாளர் அப்போது அலுவலக விஷயமாக ஒரு சிக்கலில் மாட்டியிருந்தார். பொதுவாக வங்கி மேலாளர்களுக்கு வரும் சிக்கல் தான். Technical Issue எனலாம். ஆனால் உடனடியாக அதிலிருந்து அவரை விடுவிக்க இயலாத சிக்கல் அது. மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அவர், விசிறி சாமியாரிடம் ஆறுதலுக்காகச் சென்றிருக்கலாம். சாமியாரும் அக்காலத்தில் பலருடன் பேசிப் பழகிக்கொண்டிருந்த நேரம் அது என்பதால் இவரிடமும் பிரச்சினை பற்றிய விளக்கத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கலாம். அதன் விளைவாகவே மண்டலமேலாளரிடம் சிபாரிசு செய்திருக்கலாம்.

ஆனால் விசிறி சாமியாரைச் சந்தித்துவிட்டு வந்ததன் பின்விளைவு உள்ளூர் மேலாளருக்குப் பெரிதும் பாதகமாகவே அமைந்தது. அந்தப் பாதக விளைவுகளிலிருந்து வெளிவர மேலும் பத்து ஆண்டுகள் ஆயின.

இப்போதும் விசிறி சாமியார் என்றால் அவர் கொடுத்த வாழைப்பழம் தான் நினைவுக்குவருகிறது. அவரிடம் எனக்குத் தனிப்பட்ட பிரார்த்தனைகள் எதுவும் இல்லை என்பதாலும், நான் ஏற்கெனவே அரவிந்த அன்னையின் சக்தியால் ஈர்க்கப்பட்டு மன அமைதி பெற்றிருந்ததால் இன்னொரு குருவை நாடவேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை  என்பதாலும், விசிறி சாமியாரின் தரிசனம் எனக்குப் புதிதாக எதையும் தரவில்லை. உணர்த்தவுமில்லை.  ஆனால் எந்தவொரு ஆன்மிகப் பெரியவரையும் இறையருள் இருந்தாலன்றிச் சந்திக்க இயலாது என்பதை நம்புகிறவன் நான். அவ்வகையில் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் திடீர் தரிசனம் எனக்குக் கிடைக்கக் காரணமாயிருந்த இருவரையும் நான் நன்றியோடு பார்க்கிறேன்.

பாலகுமாரனின் கட்டுரை புனிதத்துவம் வாய்ந்தது. படிக்க மறவாதீர்.

சினிமா
பள்ளிப்பருவத்தில் என் மகள் தன் வகுப்புத்தோழியரை எங்கள் வீட்டிற்கு அழைத்துவருவதுண்டு. அவர்களில் ஒருத்தியின் தகப்பனார் திரைப்படத்துறையில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருந்தார். ஆனால் தனக்குத் திரைப்படத்துறையில் நாட்டமில்லை என்றாள் அந்தப் பெண். பின்னாளில் அவள் பல் மருத்துவரானாள். அவளுடைய சகோதரரோ திடீரென்று திரைத்துறையில் நடிகராக நுழையவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுப் பிறகு நாடறிந்த நடிகரானார். நாடறிந்த நடிகரின் மருமகனும் ஆனார். அந்த நடிகர் தான் தனுஷ்.

நடிகர் என்பதற்கான வழமையான கட்டுடலோ முகலட்சணங்களோ பிற ஆளுமை அம்சங்களோ ஏதும் இல்லாததொரு வீதிச்சிறுவன் தோற்றம் கொண்ட தனுஷ், சிவாஜியும் எம்ஜியாரும் ரஜினியும் கமலும் செங்கோலோச்சிய திரை சாம்ராஜ்ஜியத்தில் மகுடம் சூட்டப்பட்டிருப்பது அவரைப்போன்ற ஆயிரமாயிரம் இளைஞர்களுக்கு நம்பிக்கை யூட்டுகிறது. தமிழிலும் இந்தியிலும் வெற்றிப்பட நாயகராகத் திகழும் தனுஷைப் பார்த்து கேட்கவேண்டிய கேள்வி ஒன்றுண்டு: “இப்படி ஆவேசமாக வெற்றி தேவதையைத் தழுவுகின்றீர்களே, ஒய் திஸ் கொலவெறி?”

தொலைக்காட்சி
ஏர்டெல் டிஜிட்டல் டிவி என்னும் மூதேவி

ஏர்டெல் டிஜிட்டல் டிவி இணைப்பு வைத்திருக்கிறேன். சென்ற மாதம் netbanking வழியாக ரீசார்ஜ் செய்யும்போது ‘refresh’ என்ற பட்டனைத் தெரியாத்தனமாக அழுத்திவிட்டேன். அவ்வளவு தான் ஸ்டார் விஜய் சேனல் வராமல் போய்விட்டது. (அது தான் என் இல்லத்தரசி ஆழ்ந்து பார்க்கும் ஒரே சேனல்). என்னுடையது ala karte  என்னும் ‘இஷ்டம்போல் சேனல்களைத் தேர்ந்தெடுக்கும்’ பேக்கேஜ் ஆகும். வெளிநாட்டு சேனல்கள் பல அடங்கிய பேக்கேஜ் அது. அவ்வளவும் மாறி, இது நாள் வரை பார்க்காத சேனல்கள் இப்போது வந்தன. தமிழ் சேனல்கள் மொத்தமே ஏழெட்டு தான் இப்போது கிடைத்தன.

ஏர்டெல் கால்சென்ட்டருக்குப் புகார் செய்தேன். எனது பழைய பேக்கேஜை மீண்டும் அமுல்படுத்துங்கள் என்று கேட்டேன். இது சின்ன விஷயம், உடனே செய்கிறோம் என்றார்கள். என்னுடைய நேரத்தைச் செலவுசெய்து அவர்களுடன் உரையாடியதற்கு நன்றி தெரிவித்தார்கள். பேச்சை முடிக்கும்போது கேட்டேன்: “எப்போது என் புகார் தீர்க்கப்படும்?” என்று. “இட் வில் டேக் சம் டைம்“ என்றார்கள்.

அந்த ‘சம் டைம்’ வருவதற்குள்  நாள்தோறும் காலையிலும் மாலையிலும் புகாரைப் புதுப்பிக்கவேண்டியிருந்தது. மொத்தம் பதினைந்து நபர்களிடம் நான் பேசியிருப்பேன். ஒவ்வொருவரிடமும் ஆதியோடந்தமாக எடுத்துச் சொல்ல வேண்டியிருந்தது. இது toll-free அல்ல என்பதால் ஒவ்வொருமுறையும் எனக்குப் பதினைந்து ரூபாய்க்குக் குறையாமல் போன் பில் வந்தது. அதைவிடவும் முக்கியமான நிகழ்வு என்னவென்றால்,   இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக ஸ்டார் விஜய் சேனலை வரவழைத்துக் கொடுக்காமல்,  சூப்பர் சிங்கர் பார்க்கவிடாமல் செய்துவிட்ட என் இயலாமை உலகளவில் பிரபலமாக்கப்பட்டு, அனைவராலும் அனுதாபத்திற்கு உரியவனானேன் என்பதை அறிக..

சரியாக இருபத்தைந்து நாட்கள் கழிந்தபிறகு, திடீரென்று ஒருநாள் ஸ்டார் விஜய் வந்தே விட்டது! சரி தான், பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று பார்த்தால், நான் கேட்காத சேனல்கள் வருகின்றன. கலைஞர் டிவியும் ஜெயா பிளஸ்சும் இன்னமும் வர மறுக்கின்றன. தொலையட்டும் விடுங்கள் என்கிறது சமையலறை. உங்கள் அனுபவம் எப்படி?

பத்திரிகை
ஆங்கிலத்தில் வெளியாகி நாற்பது வருடங்கள் ஆன பிறகு தமிழ் டப்பிங்கில் வந்திருக்கிறது, இஸ்லாம் மதத்தின் வரலாற்றைச் சொல்லும் ‘தி மெசேஜ்’ என்னும் டிவிடி. (ஜூனியர் விகடன் 23.10.2013-பக்கம் 10.)  புகழ்பெற்ற ‘உமர் முக்தார்’ படத்தை இயக்கிய முஸ்தபா அக்காட் தான் இதன் தயாரிப்பாளராம்.  கவிஞர் அப்துல் ரகுமானால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ள இந்த டிவிடியைப் பார்க்கவேண்டுமென்று இருக்கிறேன்.

முக்கியமாக இளைஞர்கள் பார்க்கவேண்டும். இஸ்லாம் மதம், வன்முறையின் மூலம் மட்டுமே பரவிய மதம் என்று தான் இன்னமும் நம்பப்படுகிறது. இது சரியான கருத்தா என்பதை மறுஆய்வுக்கு உட்படுத்த இதுபோன்ற டிவிடிக்கள் நிச்சயம் உதவும். தெளிந்த அறிவினைப் பரப்புவதன் மூலம் மதம் சார்ந்த வன்முறைகளைத் தவிர்த்திட இம்மாதிரியான கலைமுயற்சிகள் அதிகம் தேவை.  

சிரிப்பு
 
தீயா வேலை செய்யணும் குமாரு!”
ஏங்க ...பார்த்துப் பேசுங்க. இது பட்டாசுக்கடை!”
      (எழுதியவர்: அ.ரியாஸ். விகடன் தீபாவளி மலர் பக்கம் 291)

© Y.Chellappa

13 கருத்துகள்:

  1. சூப்பர் சிங்கர் பார்க்கவிடாமல் செய்துவிட்ட என் இயலாமை உலகளவில் பிரபலமாக்கப்பட்டு, அனைவராலும் அனுதாபத்திற்கு உரியவனானேன்///
    ம்...அப்புறம் என்ன நடந்தது எப்படி அந்த அதிசயம் நிகழ்ந்தது?

    எல்லாத் தகவல்களும் நன்று.தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. தமிழ் ‘இந்து’ தான் இங்கு கிடைக்கவில்லை... ...ம்...

    விரைவில் வீட்டிலும் ‘refresh’ ஆக வாழ்த்துக்கள் ஐயா...

    ஹா ஹா... நல்ல ஜோக்ஸ்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் கிடைக்கலாம். ஆனால் நூறு பேராவது வாங்க வேண்டுமே! வருகைக்கு நன்றி ஐயா!

      நீக்கு
  3. அனைத்து செய்திகளும் சுவையாயிருக்கின்றன. எ.ரியாஸ் எழுதிய அந்த பட்டாசுக் கடை ஜோக், சூப்பர்

    பதிலளிநீக்கு
  4. அறுசுவையாய் மணக்கிறது உங்கள் பதிவு.
    தகவல்கள் மிகுந்து பயனுறும் வகையில்..
    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா..

    பதிலளிநீக்கு
  5. விசிறி சாமியார் அனுபவம் யாரும் மறக்கமுடியாது. பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. விசிறி சாமியாரை நானும் ஒருமுறை சந்தித்து இருக்கிறேன். கார்த்திகை தீப திரு நாள் சிறப்பு மலர் போடும் போது அவரைப் பார்த்து ஒரு கட்டுரையும் புகைப்படமும் வாங்கி வந்தோம். மக்கள் கியூவில் நின்றுக் கொண்டு இருக்க, நாங்கள் பத்திரிகையாளர் கோட்டாவில் உள்ளே சென்றொம். எப்போதும் போல் சிகரெட் புகைந்துக் கொண்டு இருந்தது.

    உடல் சுத்தம் இன்மையே அவரை பிற்பாடு பெரும் துன்பத்தில் ஆழ்த்தி அவரது உயிரை பறித்தது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்

    பதிலளிநீக்கு