புதன், ஜூலை 03, 2013

பன்னாட்டு நிறுவனங்களின் மனித உரிமை மீறல்கள் (1) – நைக்கீ (‘Nike’)

பன்னாட்டு நிறுவனங்கள், ‘வெளிவேலை’ (outsourcing) என்ற பெயரில் தங்கள் தொழிலைப் பிறநாடுகளுக்கு அனுப்பிவிட்டு நிம்மதியோடு லாபம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எத்தகைய மோசமான பணிச்சூழலில் இருக்கிறார்கள் என்று இவர்கள் கவலை கொள்வதில்லை. மனித உரிமை மீறல்கள் அன்றாட நிகழ்ச்சியாகின்றது. இது பற்றி ஐ.நா.சபை பெரியதொரு ஆராய்ச்சி நடத்தி சில முக்கிய முடிவுகளை எடுத்து, எல்லா உறுப்பு நாடுகளும் பின்பற்றுவதற்காக அறிவித்துள்ளது. அது பற்றிய விரிவான கட்டுரை இது. (மூன்று அல்லது நான்கு பகுதிகளாக வெளிவரும்).

 (1)‘நைக்கீ’ (‘Nike’)
‘நைக்கீ’ என்பவள், கிரேக்கப் புராணங்களில் வரும் வெற்றியின் தேவதை. (நமது தைரியலட்சுமி போல). நரகத்தில் ஓடும் நதியின் ஆன்மாவான ‘ஸ்டிக்ஸ்’ என்ற தேவதைக்கும், ‘பள்ளாஸ்’ என்ற அரக்கனுக்கும் மகளாகப் பிறந்தவள். ரோமானியர்கள் இவளை ‘விக்டோரியா’ என்று அழைப்பர். இறகை விரித்து தேரில் அமர்ந்து பறந்து செல்பவள். அதே சமயம் மிக வேகமாக ஓடக்கூடியவள். அதிவிரைவாகத் தேரூட்டுபவள்.


இதனால் தான், நைக்கீ (‘Nike’) என்ற பெயரை விளையாட்டு வீரர்களுக்கான விலை உயர்ந்த ஷூக்கள், பந்துகள், சட்டைகள், பேண்ட்டுகள் தயாரிக்கும் ஒரு நிறுவனம் தன்னுடைய ‘பிராண்டு’க்குப் பெயராக வைத்திருக்கிறது.
நிறுவனத்தின் பெயரே அதுவாகிவிட்டது. மிகக் குறுகிய காலத்தில் பன்னாட்டு நிறுவனமாக உயர்ந்தது, நைக்கீ. சரியான விடை என்பதைக் குறிக்க ஆசிரியர்கள் போடும் ‘டிக்’ அடையாளத்துடன், ‘ஜஸ்ட் டூ இட்’ (Just Do It) என்ற வாசகத்தையும் சேர்த்தால் அது தான் இன்றைய நைக்கியின் அடையாள பிம்பம்.

அமெரிக்காவில் பொருள்களைத் தயாரித்தால் வாடகை, மின்சாரம், ஊழியர் சம்பளம் இவை கட்டுப்படியாகாது என்பதால் தனது எல்லா தயாரிப்புகளையும் ‘வெளிவேலை’ யாக (outsourcing) மாற்றிக் கொண்ட முதல் தயாரிப்பு நிறுவனம், நைக்கீ. ஆம், இப்பெயரில் விற்பனையாகும் எந்த ஒரு பொருளும் அமெரிக்காவில் தயாராவதில்லை!


1970ல் தனது பொருள்களை ஜப்பானில் தயாரித்து வாங்கியது. அங்கு விலைவாசி ஏறிப்போனதால் 1980 வாக்கில் தென் கொரியாவுக்கும் தைவானுக்கும் மாற்றியது. ஆனால் அங்கும் விலைவாசிகள் ஏறிப்போனதால், தன் தயாரிப்பாளர்களைச் சீனாவுக்கும் இந்தோனேசியாவிற்கும்  தொழிற்சாலைகளை இடம் பெயர்க்குமாறு கட்டாயப்படுத்தியது. இவ்வாறு 1990 வாக்கிலேயே நைக்கீயின் வெளிவேலையாட்கள் 24,000 க்கும் அதிகம் பேர் இருந்தனர். இவர்கள் தயாரித்த ஷூக்கள் மட்டும் ஆண்டுக்கு 60 லட்சம் ஜோடிகள். (இப்போது  ஒரு கோடியே இருபது லட்சம்).

அமெரிக்கர்களைப் பொறுத்தவரை, ஏன், எந்த நாட்டு  உபயோகிப்போராகட்டும், குறைந்த விலைக்குப் பொருள் கிடைத்தால் வேண்டாம் என்றா சொல்வார்கள்? நைக்கீயின் வியாபாரம் அமோகமாக நடந்தது. ஆனால், 1990 வாக்கில் அமெரிக்காவிலிருந்து சில மனித உரிமையாளர்கள், இந்தோனேசியாவில் இருந்த  நைக்கீயின் வெளிவேலையாட்களின் பணிநிலைமை குறித்து ஆராயத் தொடங்கினார்கள்.

வெளிவேலையாட்களுக்கு மணிக்கு 19 செண்ட்டு தான் சம்பளம். (இதே அமெரிக்காவாக இருந்தால் 4 டாலர் தர வேண்டும். அதாவது 21 மடங்கு). அதே சமயம், நைக்கீயின் டி.வி.விளம்பரங்களில் சில நொடிகள் மட்டுமே தோன்றுவதற்கு மைக்கேல் ஜார்டன் என்ற பேஸ்கட்பால் வீர்ருக்கு ஆண்டுக்கு 2 கோடி டாலர் சம்பளம் தரப்பட்டது.

சம்பளம் மட்டுமில்லை, மிக மோசமான, சுகாதாரமற்ற பணிச் சூழ்நிலைமைகளும் விசாரிக்கப்பட்டன. இவ்வேலையாட்கள், தங்கள் தொழிற்சாலைகளை விட்டு வெளியே போக வேண்டுமானால் ஞாயிற்றுக்கிழமை தான் போகலாம். அதுவும் உரிய கடிதம் கொடுத்து முறையாக அனுமதிச்சீட்டு பெற்றுக்கொண்ட பிறகு தான். மற்ற நாட்களில் 24 மணி நேரமும் உள்ளே தான் இருப்பு. அதில் 18 மணிநேரம் உழைத்தாக வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தவும் தவறவில்லை இவர்கள். 12 வயது சிறுவன் ஒருவன் நைக்கீ பந்து ஒன்றைத் தைத்துக்கொண்டிருக்கும் படம் ‘லைஃப்’ பத்திரிகையில் வெளிவந்தது இவ்விசாரணைக்கு மேலும் வலு சேர்த்தது.

வியட்நாமில் நைக்கீயின் தொழிற்சாலையொன்றில் ஷூக்களையும் பந்துகளையும் ஒட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கோந்து, சுவாசத்தைத் திணறவைக்கும் ரசாயனத்தால் ஆனது என்று அந்நாட்டரசே அறிவித்திருந்தது.

இத்தகைய செய்திகள் வெளியானதில் நைக்கீயின் பிம்பம் தவறான விளம்பரங்களால் சூழப்பட்டது. இந்தோனேசியாவில் உள்ளூர் இயக்கங்களும் இதனைக் கையில் எடுத்ததால் அந்நாட்டில் பல இடங்களில் நைக்கீயை எதிர்த்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. நைக்கீயின் தயாரிப்புகள் பெரும்பாலும் இளம்வயதினரையே குறிவைத்திருந்ததால், அமெரிக்காவில் கல்லூரி மாணவர்கள் இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்து பிரச்சாரம் மேற்கொண்டனர். எவ்வாறு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டுமென்று தொழிலாளர் சங்கங்கள் அவர்களுக்குக் கோடை வகுப்புகள் நடத்தின. கல்லூரிக் கடைகளில் இந்நிறுவனப் பொருட்களை விற்பதற்கும், விளையாட்டு வீரர்கள் இக்கம்பெனிகளுக்கு விளம்பரத்தில் தோன்றி ஆதரவு தருவதற்கும் மாணவர் சங்கங்கள் நாடு தழுவிய எதிர்ப்பலையை உருவாக்கின. 12 நாடுகளிலும், 28 அமெரிக்க மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் ‘நைக்கீ எதிர்ப்பு நாள்’ அனுசரிக்கப்பட்டது.
அமெரிக்காவில் சமூகப்பிரச்சினைகளுக்காக டாக்குமெண்ட்டரி தயாரிப்பதில் புகழ்பெற்றவரான மைக்கேல் மூர், நைக்கீயின் மனித உரிமை மீறல்கள் பற்றி தயாரித்தளித்த டாக்குமெண்ட்டரி பரவலாக வரவேற்பு பெற்று நைக்கீ பொருள்கள் மீது மக்கள் மத்தியில் எதிர்ப்பு உருவாகக் காரணமானது. மைக்கேல் மூர் டாகுமென்டரி பார்க்க கீழுள்ள இணைப்பைத் தொடவும்:
http://www.youtube.com/watch?v=ymjvQZ6nSd8

அமெரிக்காவின் பிரபலமான சி.பி.எஸ். தொலைக்காட்சியும் இது பற்றி செய்தி வெளியிட்டது. அமெரிக்க மக்களின் மனசாட்சியை உறுத்திய இன்னும் சில விடியோக்களையும் பாருங்கள்: 
‘The otherside of Nike’ https://www.youtube.com/watch?v=gAghsCjpqMg
இத்தகைய எதிர்வினையான விளம்பரங்களால் நைக்கீயின் விற்பனை குறையலாயிற்று. அதன் பங்குவிலையும் சரியலாயிற்று. “நைக்கீ என்றாலே மக்களுக்கு  நினைவுக்கு வருவது, தொழிலாளர்களின் அடிமாட்டு சம்பளம், கட்டாய ஓவர்டைம், நினைத்தபடி நட்த்தப்படுதல் இவையே. இத்தகைய நிறுவனத்தின் பொருட்களை அமெரிக்கர்கள் வாங்க விரும்பவில்லை என்ற உண்மையை நம்புகிறேன்” என்றார், பத்திரிகையாளர்களிடம் பேசிய நைக்கீயின் நிறுவனரும் தலைமை செயல் அலுவலருமான  ஃபில் நைட் (Phil Knight).(1998ல்).
உடனடியாக தனது பிம்பத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் இறங்கியது நைக்கீ. விளைவு, தான் ஒரு யோக்கியமான கம்பெனி என்றும் தனது தொழிலாளர்கள் நன்கு கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் பல விளம்பரச் செய்திகளைப் பத்திரிகைகளில் வெளியிடலாயிற்று. (ஞாபகம் இருக்கிறதா? திருபாய் அம்பானி உயிரோடிருந்த காலத்தில்,  ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊழல்களைப் பற்றி அருண் ஷோரி இந்தியன் எக்ஸ்பிரஸ்சில்  தொடர்ந்து  எழுதி வந்த போது, எதிர் நடவடிக்கையாக ரிலையன்ஸ், அதே இந்தியன் எக்ஸ்பிரஸ்சில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுத்ததே, அது போல!) ஆனால் இதை எதிர்த்து கலிஃபோர்னியா வாசகர் ஒருவர் வழக்கு தொடுத்தார். நைக்கீயின் விளம்பரங்கள் பொய் சொல்கின்றன என்றார். விளைவு, நைக்கீ தன் விளம்பரங்களுக்காக அரசுக்கு அபராதம் செலுத்த நேரிட்டது. (ஆனால் எவ்வளவு செலுத்தினார் என்று சட்டம் வெளியே சொல்லாது. இது அமெரிக்க விசித்திரங்களுள் ஒன்று).
வேறு வழியில்லாமல் நைக்கீ இவ்வாறு அறிக்கை விட்டது: “ஊழியர்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு நைக்கீ காரணமல்ல. இது, அந்தந்த நாட்டிலுள்ள எங்கள் தயாரிப்பாளர்களின் தொழிற்சாலைகளில் நடந்ததாகும். இதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. அத்தொழிற்சாலைகளில் எங்களுக்கு மூலதனப் பங்கு ஏதும் இல்லை. அவர்கள் தயாரிக்கிறார்கள். நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். அவ்வளவே”.
ஆனால் மக்கள் மன்றத்தில் இவ்வாதம் எடுபடவில்லை. எனவே, நைக்கீ உண்மையாகவே பல சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு தனது பிறநாட்டு தயாரிப்பாளர்களை ஒரு ஒழுங்கு நெறிக்குக் கொண்டுவர வேண்டியதாயிற்று. அதன் பிறகே மீண்டும் விற்பனையில் ஏறுமுகத்தை அடைய முடிந்தது. ஏனைய பன்னாட்டுக் கம்பெனிகளைப் பார்க்கிலும் நைக்கீ எடுத்த நடவடிக்கைகள் முன்னோடியானவை, பாராட்டுக்குரியவை என்கிறார்,  இத்துறையில் சம்பந்தப்பட்ட ஒரு ஐ.நா.வல்லுனர்.


(நாளை: நைஜீரியாவில் ‘ஷெல்’ நிறுவனத்தின் மனித உரிமை மீறல்கள்)

(c) Y.Chellappa
email: chellappay@yahoo.com

1 கருத்து:

  1. ரிலையன்ஸ் எதிர் நடவடிக்கை உட்பட தகவலுக்கு நன்றி ஐயா... இணைப்பில் பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு